Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   17  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 28ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பைச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 18-25

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள். ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும்.

அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன்.

ஆனால் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவை உள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவு உணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்து விட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா  1: 1-2. 3. 4, 6 (பல்லவி: யோவா 8: 12a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பரிசேயரே உங்களுக்குக் கேடு! ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 42-46

அக்காலத்தில் இயேசு கூறியது: "ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள்.

ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றையும் விட்டுவிடலாகாது. ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே.

ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள் போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்."

திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, "போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவு படுத்துகிறீர்" என்றார். அதற்கு அவர், "ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

இறை மகனின் துணிச்சலான பேச்சு.

இத்தகைய பேச்சு இறைவாக்கினருக்குரித்தானது.

இதனுடைய பின் விளைவுகள் விபரிதமானது தான்.

பச்சை மரத்திற்கே அந்த நிலை என்றால், அவமானத்தின் சிலுவைச் சாவு என்றால், பட்ட மரத்திற்கு என்ன நேருமோ?

இன்றும் இத்தகையோர் உண்டு.

சமூகத்தை கழுவ குரல் கொடுப்போரின் குரல் வளையை நெறிப்போர் உண்டு.

அறிந்து கொள்ளலாம் என்கிற சட்டத்தை பயன்படுத்தி அவலங்களை வெளிக் கொணர்வோர் இன்றைக்கு ஆதிக்க வர்க்கத்தினரால், அரசியல்வாதிகளால் அழிக்கப்படுவதை அரசே ஒத்துக் கொள்கின்றது.

நாம் எந்த இனம். இறைவாக்கினருக்குரிய பணி செய்து இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறும் வர்க்கமா? அவர்களை அழிக்கும் வர்க்கமா? இல்லை யார் ஆண்டால் எனக்கென்ன, எது எப்படி போனால் எனக்கென்ன என்ற பிடிப்பில்லாத மக்கள் கூட்டமா?

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 முன்னுக்குப் பின் முரணான மனிதர்கள் வெளிவேடக்காரர்கள்

அந்நகரில் இருந்த பிரபலமான கல்லூரி ஒன்றில் பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவர் மெத்தப் படித்த மேதாவி. நிறைய நூல்களைக் கரைத்துக் குடித்தவர். எந்தத் தலைப்பைக் குடுத்தாலும் அதைப் பற்றி மணிக்கணக்கில் பேசக்கூடியவர். ஆனால் அவர் தன்னோடு பணிபுரியும் சக பேராசிரியர்களையும் ஏன் மாணவர்களையும் கூட சரியாக மதிப்பதில்லை. எப்போதும் அகங்காரத்தோடும் ஆணவத்தோடும் அவர் நடந்துகொண்டார். இச்செய்தி கல்லூரியின் முதல்வருடைய காதுகளுக்கு எட்டியது. முதல்வர் அந்தப் பேராசிரியருக்கு சரியான பாடம் கற்றுத் தர நினைத்தார்.

ஒருநாள் குறிப்பிட்ட அந்த பேராசியருக்கு பாராட்டுக் கூட்டம் நடந்தது. அந்த பாராட்டுக் கூட்டத்திற்கு முதல்வர் அழைக்கப்பட்டிருந்தார். ஏனைய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

முதல்வர் பேசவேண்டிய நேரம் வந்ததும், அவர் எழுந்து பேசத் தொடங்கினார், "பேராசிரியரைப் பற்றி நிறையச் சொல்லலாம். பேராசிரியர் ஒரு மெத்தப் படித்த மேதாவி, நடமாடும் நூலகம்" என்றார். இவ்வார்த்தைகள் அந்த பேராசிரியரின் உள்ளத்தில் ஆணவத்தை ஏற்படுத்தியது. தன்னைபோன்ற அறிவாளி, எல்லாம் தெரிந்தவர் இந்த உலகத்தில் யாரேனும் உண்டா? என்று அவர் பெருமிதம் கொண்டார்.

முதல்வர் தொடர்ந்து பேசினார், "பேராசிரியர் நடமாடும் நூலகம் என்று சொன்னேனே ஒழியே, அவர் தான் கற்ற நூல்கள் அனைத்தின்படி வாழ்கிறவர் என்று சொல்லவில்லை. ஒரு நல்ல மனிதருக்கு/ பேராசிரியருக்கு அழகு, தான் கற்ற நூல்களின்படி வாழ்வது" என்றார். இதைக் கேட்டதும் அந்தப் பேராசிரியருக்கு தன்னுடைய தவறு புரிந்ததது. தான்தான் அப்படி கற்ற நூல்களின்படி வாழ்வதில்லை என்பதை அப்போது அவர் உணர்ந்துகொண்டார்.

நூல்கள் நிறையக் கற்பதைவிடவும், கற்றுக்கொண்டதன்படி வாழ்வதே ஒருவருக்கு அழகு என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பரிசேயர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார். காரணம் அவர்கள் மக்களுக்கு நிறைய செய்திகளைப் போதித்தார்கள். பத்திலொரு பகுதியை கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்வோ முன்னுக்குப் பின் முரணானதாக இருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் அவர்கள் வெளிவேடத்தனமான வாழ்வு வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.

இயேசுவின் சீடர்களாக இருக்கக்கூடிய நாம் வெறுமனே பக்திமான்களாக இருக்கின்றோமா? அல்லது நம்பிக்கையை நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் அறிக்கையிடுகின்றவர்களாக இருக்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்திலே பக்திமான்களுக்கும் செயல்வீரர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி குறிப்பிடுவார். பக்திமான்கள் என்பவர்கள் ஒரு சகோதரன் அல்லது சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் "நலமே சென்றுவாருங்கள்; குளிர்காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வார்கள் என்றால் அவர்கள்தான் பக்திமான்கள். அவர்களால் இந்த சமூகமும், கடவுளும் எந்த விதத்திலும் மகிழ்ச்சியடையப் போவதில்லை.

இதற்கு மாறாக செயல்வீரர் என்பவர் தன்னை நாடி வரும் பசித்தவர்களுக்கு உண்ணக் கொடுப்பார்; தங்க இடமில்லாதவருக்கு இடம் கொடுப்பார்; ஆடையில்லாதவருக்கு ஆடை கொடுப்பார். இப்படிப்பட்டவரால் மக்களும் கடவுளும் மகிழ்வார்கள்.

ஆகையால் நாம் பெயரளவுக்கு பக்திமான்கள் /கிறிஸ்தவர்கள் என்று வாழாமல் செயல்வீரர்களாக வாழ முன்வர வேண்டும். ஏனென்றால் நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாகும் என்பது யாக்கோபுவின் ஆழமான சிந்தனை ( 2:17).

பரிசேயர்கள் இயேசுவின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாவதற்கு இன்னொரு காரணம் அவர்கள் மக்களிடமிருந்து மதிப்பையும் மரியாதையையும் பெற நினைத்தார்கள். ஆனால் அவர்கள் அந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் தகுந்தவர்களாக இல்லை; வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாகவே இருந்தார்கள். இயேசுவின் சீடர்களாகிய நாம், மக்கள் நமக்குத் தரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் தகுந்தவர்கள்தானா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நமது சொல்லும் செயலும் இணைந்துபோகவேண்டும். வழிபாடு நமது வாழ்வோடு ஒத்துப்போகவேண்டும்.

மத்தேயு நற்செய்தி 7:21 ஆம் வசனத்தில் இயேசு கூறுவார், "என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகில் உள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" என்று.

ஆகவே, நாம் பரிசேயர்களைப் போன்று சொல்வீரர்களாக அல்லாமல் செயல்வீரர்களாகவும், வழிபாடும் நமது வாழ்வும் ஒத்துப் போகும்படி வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
எனக்குள் நான் யார்?

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் - நினைவு

கலா 5: 18-25
லூக் 11: 43-46

என்னை மீட்கப்போவது எது? எனது நம்பிக்கையா, எனது செயல்களா? இது என்றுமே இருந்துவந்துள்ள ஒரு விவாதம். இன்றும் உள்ள விவாதம்; என்றும் இருக்க போகின்ற விவாதம். பழைய ஏற்பாட்டு காலத்திலே பழமைவாதம் பேசிய யூதர்களுக்கும் மறுமலர்ச்சி வேண்டிய யூதர்களுக்கும் இடையே; கிறிஸ்துவின் காலத்திலே அவருக்கும் பரிசேயர் சதுசேயர்களுக்கும் இடையே, தொடக்க திருச்சபையில் பவுலடிகளாரின் இறையியலை பின் தொடர்ந்தவர்களுக்கும், யாக்கோபின் இறையியலை பின் தொடர்ந்தவர்களுக்கும் இடையே, இன்று கத்தோலிக்கர்களுக்கும் பிரிவினை சபையினருக்கும் இடையே, என்று இந்த விவாதம் இல்லாத ஒரு காலகட்டத்தை நம்மால் காண முடியாது.

இதில் பெரிய குழப்பம் ஏதும் இல்லை: நமது ஒரே உரைக்கல் கிறிஸ்துவே. உங்களது அதிகாரத்தையும் உங்களது முக்கியத்துவத்தையும் முன்னிறுத்துவது எது என்று தேடி அதை ஆதரிக்கும் ஆதிக்க சிந்தனையை கைவிடுங்கள்... மாறாக குழந்தைகளாக, குழந்தை மனம் படைத்தவர்களாக மாறுங்கள், என்று அழைப்பு விடுக்கிறார் கிறிஸ்து. இதுவே நம்பிக்கையின் ஆதாரம். இந்த சின்னஞ்சிறியோருள் ஒருவருக்கு நீங்கள் செய்தவை எல்லாம் எனக்கே செய்திர்கள் என்று கிறிஸ்து கூறுவதில்லையா!

கிறிஸ்துவின் மனம் இதுவே: வெறும் சட்டம், வெற்று சம்பிரதாயம், ஆழமற்ற ஆனமீகம், மனிதமற்ற மதக்கோட்பாடுகள் இவையெதுவும் உங்களை கடவுளின் பிள்ளைகளாக்க முடியாது! கடவுளின் பிள்ளைகளாகாமல் இறைவனின் மீட்பை நீங்கள் பெற முடியாது.இன்று நாம் நினைவு கூறும் அந்தியோக்கு நகர் இஞ்ஞாசியார் இதை மிக எளிமையாக கூறுவார்: "நான் வெறுமனே கிறிஸ்தவன் என்று அழைக்கப்பட விரும்பவில்லை, அப்படி வாழ நினைக்கிறேன். ஆம், நான் வாழும் வாழ்க்கையை பார்த்து மக்கள் என்னை கிறிஸ்தவன் என்று கூறுவதே முறையாகும்" என்கிறார்.

எப்படி நான் இதை வாழ்ந்து காட்ட முடியும்? தூய ஆவியாரின் கொடைகள் இதனாலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் இவை வெறும் சட்ட திட்டங்களோ, செய்ய வேண்டியது செய்ய கூடாதது என்னும் பட்டியலோ, பாவம் புண்ணியம் என்ற வரையறையோ அல்ல... இவை, கிறிஸ்துவிலும் ஆவியிலும் நான் வாழும் வாழ்க்கையின் வெளிப்பாடு, என் உள்ளத்தின் ஆழத்தில் உள்ள சிந்தனைகள் என்ன, அடுத்தவரையும் இந்த உலகத்தையும் நான் நோக்கும் கண்ணோட்டம் எப்படியுள்ளது, சுருங்க கூறின் எனக்குள் உண்மையில் நான் யார் என்பதன் வெளிப்பாடுகளேயாகும்!

(Rev. Father: Antony Christy SDB)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!