Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     16  செப்டம்பர் 2018  
                                         பொதுக்காலம் 27ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இருவரும் ஒரே உடலாய் இருப்பர்._

தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-24

அனைத்தையும் படைத்து முடித்த பின் ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்" என்றார்.

ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.

ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.

ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார்.

அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்" என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

================================================================================
பதிலுரைப் பாடல் ( திபா 128: 1-2. 3. 4-5. 6 (பல்லவி: 5 காண்க)
================================================================================
 
பல்லவி: உம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!


1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி

6 நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக! பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 9-11

சகோதரர் சகோதரிகளே, நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம்.

இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்படவேண்டியிருந்தது. கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பிய போது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழிநடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே.

தூய்மை யாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
( 1 யோவா 4: 12 )

அல்லேலூயா, அல்லேலூயா! நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவுபெறும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-16

அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?" என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.

அவர் அவர்களிடம் மறுமொழியாக, "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?" என்று கேட்டார்.

அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்" என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.

படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், "ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.

பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.

இயேசு அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்" என்றார்.

சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று, அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.

இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.

இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼
அல்லது
👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-12

அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?" என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.

அவர் அவர்களிடம் மறுமொழியாக, "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?" என்று கேட்டார்.

அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்" என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.

படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், "ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.

பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.

தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்" என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
திருமணம் என்னும் திருவருட்சாதனம்


ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான், அவள்மீது அளவுகடந்த பாசத்தையும் காட்டினான். இவ்வாறிருக்க ஒரு நாள் அவள் ஒரு தோல்நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான். அவன் திரும்பி வரும்போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்திருந்தான். ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.

நாற்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிடையே இருந்த அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர். அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறுதான் இருந்தாள்.

அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள். அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது. தன் அன்பு மனைவியின் இறுதிச் சடங்கை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான். அவன் திரும்பி வரும்போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து "எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்?" இது வரைக்கும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்?" எனக் கேட்டான். அதற்கு அவன், "நான் குருடன் இல்லை. எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக்கூடும் என்பதால்தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன். அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன். அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்" எனப் பதிலளித்தான்.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் அடுத்தவரிடம் இருக்கும் குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை என்பதற்கு இந்த நிகழ்வு சான்று.
பொதுக்காலத்தின் இருபத்து ஏழாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் திருமணத்தின் புனிதத் தன்மையையும் அதன் பிரிவுபடாத தன்மையையும் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. நாம் அதைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் பரிசேயர்கள் சிலர் இயேசுவிடம் வந்து, "கணவன் தன்னுடைய மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்றொரு கேள்வியைக் கேட்கின்றார்கள். அதற்கு இயேசு அளித்த பதில் நம்முடைய ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. கணவன் தன் மனைவியையோ அல்லது மனைவி தன்னுடைய கணவனையோ விலக்கிவிடுவது விபச்சாரம் எனச் சொல்லும் இயேசு, கணவனும் மனைவியும் எப்படி இருக்க வேண்டும், அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு எத்துணைத் தூய்மையானது என்பதை இறைவார்த்தையின் துணைகொண்டு மிகத் தெளிவாக விளக்குகின்றார். இயேசு பரிசேயருக்கு பதில் நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகின்றது. அவை என்ன என்று இப்போது பார்ப்போம்.

கணவன் மனைவி இவர்கள் இருவரும் வேறு வேறு அல்ல, ஒரே உடல். இதுதான் இன்றைய இறைவார்த்தையின் வழியாக இயேசு நமக்குச் சொல்லும் முதன்மையான செய்தி. அது எப்படி இரண்டு உயிர்கள் ஓருடலாக முடியும் என்னும் கேள்வி எழுகின்றது. அதற்கான பதிலை இன்றைய முதல் வாசகம் தாங்கி வருகின்றது. முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் பெண்ணை ஆணுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச் செய்துவிட்டு, அவனுடைய விலா எலும்பை எடுத்துப் படைக்கின்றார். அவன் அவளைப் பார்க்கும்போது, "இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையுமாக இருக்கின்றாள்" என்கின்றான். அதாவது ஆதாம் ஏவாளை தன்னுடைய உடலாகவே பார்க்கின்றார். திருமண உறவில் இணைந்திருக்கின்ற கணவனும் மனைவியும் மக்கள் பார்வைக்கு வேறு வேறாக இருந்தாலும் அவர்கள் ஓருடலாக இருக்கவேண்டும் என்பதுதான் இறைவார்த்தை சொல்லும் செய்தியாக இருக்கின்றது.

இன்றைக்கு கணவனும் மனைவியும் தனித்தனி தீவாகப் பிரிந்து கிடப்பது மிகவும் வேதனையளிப்பதாக இருக்கின்றது. மாறிவரும் சமூகச் சூழலும் தொலைதொடர்புச் சாதனங்களும் இந்த இடைவெளியை இன்னும் பெரிதாக்குகின்றன. இத்தகைய சூழலில் கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவர் மீது உண்மையான அன்பினைக் காட்டி, ஒரே உடலாக இணைந்திருப்பதுதான் சிறப்பான ஒன்றாகும்.

கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்குப் பிரமாணிக்கமாக இருக்கவேண்டும். இதுதான் இறைவார்த்தை எடுத்துச் சொல்லும் இரண்டாவது செய்தியாக இருக்கின்றது. திருமணத்தில் இணைகின்ற மணமக்கள் எல்லாம் வல்ல இறைவனை சாட்சியாகக் கொண்டு, "இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாய் இருந்து, என் வாழ்நாள் எல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கின்றேன்" என்று வாக்குறுதி தருகின்றார்கள். அந்த வாக்குறுதிக்கு அவர்கள் பிரமாணிக்கமாக இருக்கவேண்டும், இல்லையென்றால் குடும்பங்கள பாழ்பட்டுப் போய்விடும். இன்றைக்கு நிறைய குடும்பங்கள் பிரிந்து கிடப்பதற்குக் காரணம் கணவன் மனைவியிடம் பிரமாணிக்கமற்ற தன்மை நிலவுவதுதான். இப்படி பிரமாணிக்கமற்ற தன்மையினால் உண்டாகும் விவாகரத்து எல்லாம் விபச்சாரத்திற்கு ஒப்பானது என்கின்றார் இயேசு.

ஆகவே, கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் பிரமாணிக்கமாக இருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

மணவாழ்க்கை சிறக்க ஏனையோர் உதவிபுரிய வேண்டுமே ஒழிய, அவர்கள் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினைக்குக் காரணமாக இருக்கக்கூடாது. இது இன்றைய இறைவார்த்தை தரும் மூன்றாவது செய்தியாக இருக்கின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டு, "கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்பார். அப்படியானால் திருமண உறவில் இணைந்திருக்கும் கணவன் மனைவியைப் பிரிப்பதற்கு யாருக்கும் எந்த உரிமை இல்லை என்பதுதான் இறைமகன் இயேசுவின் கட்டளையாக இருக்கின்றது.

நிறையக் குடும்பங்களில் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருந்தாலும் கூட இருக்கின்ற உற்றார் உறவினர், மாமியார், மாமனார் போன்றோர் அவர்களைப் பிரித்துவிட்டு வேடிக்கை பார்ப்பது வேதனையாக இருக்கின்றது. கடவுள் இணைத்து வைத்த ஆணையும் பெண்ணையும் பிரித்துவிட்டு கடவுளின் திருவுளத்திற்கு எதிராக செயல்படுவோர் கடவுளின் சாபத்திற்கு ஆளாவது உறுதி.

ஒரு ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, "பழைய ஏற்பாட்டில் மகிழ்ச்சியாக வாழந்த ஒரு குடும்பத்தையும், புதிய ஏற்பாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்த ஒரு குடும்பத்தையும் சொல்லுங்கள்" என்றார். உடனே முன்வரிசையில் இருந்த மாணவன் ஒருவன், "பழைய ஏற்பாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்த குடும்பம் என்றால் அது ஆதாம் ஏவாள் குடும்பம், புதிய ஏற்பாட்டில் மகிழ்ச்சியான குடும்பம் என்றால் அது சூசை மரியாள்" என்றான். "எதை வைத்து அப்படிச் சொல்கின்றாய்?" என்று ஆசிரியர் அவனிடம் கேட்க, "இரண்டு குடுமபங்களிலும் மாமியார் தொல்லை இல்லை அதான் அப்படிச் சொன்னேன்" என்றான். ஆசிரியரால் எதுவும் பேசமுடியவில்லை.

வேடிக்கையாக சொல்லப்பட்டதாக இருந்தாலும் குடும்பத்தில் பிரிவினைக்குக் காரணமாக இவர்கள் எல்லாம் இருக்கின்றார்கள் என்பது வேதனையாக இருக்கின்றது. ஆதலால், நம்மால் "நாலு குடும்பங்கள்" நன்றாக இருக்க முயற்சிக்க வேண்டுமே ஒழிய, அழிந்துபோகக் காரணமாக இருக்கக் கூடாது.

குடும்பம் கணவன் மனைவியால் மட்டும் முழுமை அடைந்து விடுமா? என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். குடும்பத்திற்கு அழகே குழந்தைகள்தான். கணவன் மனைவிக்கு இடையே மலரும் தூய அன்பினால் உருவாகும் குழந்தைகள் கடவுள் கொடுத்த கொடை, அக்குழந்தைகளைப் பேணிக்காப்பதுகூட ஒரு குடும்பத்தின் கடமையாகும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கு உரியது" என்கின்றார். ஆகவே, குடும்பத்தார் குழந்தைகளை முழுமையாக அறிந்து, அவர்களைப் பேணுவதும், குழந்தைகளின் உள்ளம் கொண்டு வாழ்வது கூட காலத்தின் தேவையாக இருக்கின்றது.

குடும்பங்களில் குழந்தைகளின் நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதற்கு வேடிக்கையாகச் சொல்லப்படும் நிகழ்வு.

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார். "ஒருநாள் ஆபீஸ்போய் வேலை செய்துபார். சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும்" என்று அடிக்கடி சவால் விடுவார். அவருடைய மனைவி ஒருநாள் பொறுமை இழந்து, "ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க. காலையில் குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து, சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க. அதோடு சமைப்பது, துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்" என எதிர் சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக்கொண்டான்.

அவன் வீட்டில் இருக்க, இவள் ஆபீஸ் போனாள். ஒரே குப்பை கூலமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள். பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே! இலையில் வைத்த ஜாங்கிரியை மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள். முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும், இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளை பார்த்ததும், "பிள்ளையா பெத்து வச்சிருக்க? எல்லாம் கியா, முய என்று கத்தி தொலையுதுங்க அத்தனையும் குரங்குகள்! சொல்றதை கேட்க மாட்டேங்குது, படின்னா படிக்க மாட்டேங்குது, சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே" என்று பாய, அவளோ அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா, என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்.

உள்ளே ஒரே அழுகையும், பொருமலுமாய் பிள்ளைகள்! விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், "ஏங்க இவனை ஏன் அடிச்சு படுக்கவச்சீங்க? இவன் எதிர்வீட்டு பையனாச்சே" என்று அலற "ஓஹோ, அதான் ஓடப் பார்த்தானா!" என கணவன் திகைத்து நின்றான்.

நமது நாட்டில் இப்படி ஒருநிலை இன்னும் உருவாகவில்லை என்றாலும், இன்றைக்கு நிறைய குடும்பங்களில் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை முழுமையாய் அறியாதவர்களாய், அவர்களை சரியாகப் பேணிக்காக்காதவர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய சூழலில் அவர்கள் குழந்தைகள் கடவுளின் கொடை என உணர்வதும், அவர்களைப் பேணிகாப்பதும், குழந்தைகளின் உள்ளம் கொண்டு, இறையாட்சியை உரித்தாக்குவதும் மிகவும் தேவையாக இருக்கின்றது.

எனவே, கணவன் மனைவி இருவரும் தாங்கள் இருவரும் ஒரே உடல் என்பதை உணர்ந்து, ஒருவருக்கு ஒருவர் பிரமாணிக்கமாய் இருந்து, நல்ல மக்கள் செல்வங்களைப் பெற்று, நாடு போற்றும் வாழ்க்கை வாழ முயற்சிக்க நாம் இறைவனைப் பிரார்த்தனை செய்வோம். அதன்வழியாய் இறையருள் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
தூய ஜெபமாலை அன்னை (அக்டோபர் 07)

நிகழ்வு

1571 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே லாபந்தோ என்னும் இடத்தில் கடுமையாகப் போர் நடந்தது. இந்தப் போரில் கிறிஸ்தவர்களே வெற்றி பெற்றார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் உரோமை நகரில் இருக்கக்கூடிய தூய பேதுரு சதுக்கத்தில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய கைகளில் ஜெபமாலை ஏந்தி அன்னை மரியாவிடம் ஜெபித்ததே ஆகும். அன்னை மரியாவே எதிரிகளிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்ததால் அப்போது திருத்தந்தையாய் இருந்த ஐந்தாம் பவுல் இதனை அன்னை மரியின் வெற்றியின் விழா என்று கொண்டாடப் பணித்தார்.

வரலாற்றுப் பின்னணி

ஜெபமாலை சொல்லும் வழக்கம் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்திருக்கிறது என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வார்கள். பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கும் அல்பிஜீயன்ஸ் என்ற தப்பறைக் கொள்கை திருச்சபைக்கு அதிகமாக ஊறுவிளைவித்து வந்தது. இதை எதிர்த்து டொமினிக் எனப்படும் சாமிநாதர் அதிகமாகப் போராடி வந்தார். ஆனாலும் அவரால் வெற்றிகொள்ள முடியவில்லை. எனவே அவர் காட்டிற்குச் சென்று கடுமையான தவ முயற்சிகளை மேற்கொண்டார். அவர் தவ முயற்சிகளை மேற்கொண்ட மூன்றாம் நாளில் மரியா அவருக்குக் காட்சி கொடுத்து, "இந்த ஜெபமாலையை வைத்து நம்பிக்கையோடு ஜெபி, நிச்சயம் வெற்றி கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு மறைந்தார். மரியா சொன்னதற்கு ஏற்ப சாமிநாதர் தன்னுடைய இடத்திற்குச் சென்று ஜெபமாலை சொல்லி ஜெபித்தார். இதனால் அல்பிஜீனியன்ஸ் என்ற தப்பறைக் கொள்கையை பின்பற்றி வந்த மக்கள் மனம்மாறி இயேசுவை இறைமகனாக ஏற்றுக்கொண்டார்கள். அதன்பிறகு ஜெபமாலை சொல்லும் வழக்கம் மக்களிடத்தில் அதிகமாகப் பரவி வந்தது.

ஆலன் ரோச் என்ற புனிதர் ஜெபமாலை சொல்லும் வழக்கத்தை மக்களிடத்தில் அதிகமாகக் கொண்டு போய் சேர்த்தார். ஜெபமாலை சொல்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றியும் தெளிவாக மக்களிடத்தில் எடுத்துச் சொன்னார். 1571 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்கள் இஸ்லாமியப் படையை செபமாலையின் துணைகொண்டு வெற்றிகொண்டதால் செபமாலையின் மீது மக்கள் இன்னும் அதிகமாக நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். 1715 ஆம் ஆண்டு இவ்விழா உரோமைத் திருச்சபையின் விழா அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

இதற்கிடையில் ஜெபமாலை சொல்வது பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தன. ஜெபமாலை சிறியவர்களும் வயதானவர்களும் சொல்லவேண்டியது அது எல்லாருக்கும் உரித்தானது அல்ல என்பது போன்ற விமர்சனங்களும் வந்தன. இந்த நேரத்தில்தான் 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 16 தேதி வரை லூர்து நகரில் மரியா பெர்னதெத் என்ற சிறுமிக்குக் காட்சி கொடுத்ததில் ஜெபமாலை சொல்லி ஜெபித்தார். இதனால் ஜெபமாலை என்பது ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டும் சொல்லவேண்டியது அல்ல, அது எல்லாரும் சொல்லவேண்டியது என்ற வழக்கம் உருவாகியது. 1917 ஆம் ஆண்டு பாத்திமா நகரில் அன்னை மரியா ஜெசிந்தா, லூசியா, பிரான்சிஸ்கா என்ற மூன்று சிறுமிகளுக்குக் காட்சிகொடுத்தபோது தன்னை ஜெபமாலை அன்னை என்றே வெளிப்படுத்தினார். அப்போது அவர் அவர்களிடம் ஜெபமாலை சொல்வதனால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது பற்றியும் எடுத்துச் சொன்னார். இவ்வாறு ஜெபமாலை பக்தி திருச்சபையில் படிப்படியாக வளர்ந்தது. 1969 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் இவ்விழாவை திருச்செபமாலையின் அன்னை விழா என அறிவித்து, அதனை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார்.

ஜெபமாலை சொல்வது என்பது, ஏதோ சொன்ன ஜெபத்தை திரும்பத் திரும்பச் சொல்வது கிடையாது. நாம் ஜெபமாலை சொல்கிறது இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு, அவருடைய உயிர்ப்பு ஆகியவற்றை மரியாவின் வாழ்வோடு இணைத்து தியானிக்கின்றோம். அது மட்டுமல்லாமல் ஜெபமாலையை நாம் சொல்லி ஜெபிக்கின்றபோது நம்முடைய ஐம்புலன்களும் ஒன்றாகச் சேர்ந்து இயங்குகின்றன. அதலால் இதனை ஒரு மிகச் சிறந்த பக்தி முயற்சி என நாம் உணர்ந்துகொள்ளலாம்.

தூய லூயிஸ் தே மான்போர்ட் என்பவர் செபமாலையைக் குறித்து இவ்வாறு கூறுவார், "ஜெபமாலை சொல்கிறபோது நமக்கு வரும் தீவினைகள் முற்றிலுமாக நீங்கும். இறையருள் நமக்கு மேலும் மேலும் பெருகும்" என்று. திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதரோ, "ஜெபமாலை என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனைச் சொல்லி ஜெபிக்கின்றபோது மீட்பின் வரலாற்றை நினைவுகூறுகின்றோம்; ஆண்டவர் இயேசு நமக்குச் சொல்லிக் கொடுத்த ஜெபத்தினை நினைவுகூறுகின்றோம்; வானதூதர் கபிரியேல் மரியாவிற்குச் சொன்ன மங்கள வார்த்தையை நினைவுகூறுகின்றோம்" என்பார்.

ஆகவே, நாம் அனுதினமும் சொல்லக்கூடிய செபமாலையின் உட்பொருளையும் வல்லமையையும் உணர்ந்தவர்களாய் நம்பிக்கையோடு ஜெபமாலை சொல்லி ஜெபிப்போம்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜெபமாலை அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஜெபமாலை சொல்வோம் ஜெயம் பெறுவோம்

"மானிடர்களை மீட்க வானவர் விடுகின்ற வடம்" என்று ஜெபமாலையைக் குறித்து வீரமாமுனிவர் கூறுவார். ஆம், ஜெபமாலையை நாம் இடைவிடாது, நம்பிக்கையோடு ஜெபிக்கின்றபோது அதனால் மீட்புப் பெறுகின்றோம் என்பது உறுதி. ஆகவே, நம்முடைய தனிப்பட்ட ஜெபங்களில், குடும்ப ஜெபங்களில் ஜெபமாலையை நம்பிக்கையோடு ஜெபிக்கின்றோமா? என சிந்தித்துப் பார்ப்போம்.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் அருட்தந்தை பாட்ரீக் பேயீடன் என்பவர். இவர் 1938 ஆம் ஆண்டு காசநோயினால் பாதிக்கப்பட்டார். அதனால் அவருடைய நுரையீரல் முழுவதும் பாதிக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான் இவருடைய சகோதரியின் தூண்டுதலின் பேரில் இவர் அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு ஜெபமாலை செபிக்கத் தொடங்கினார். அதற்கான பலனை அவர் விரைவிலே கண்டுகொண்டார். ஆம், அவருடைய உடலில் இருந்த நோய் முற்றிலுமாக நீங்கியது. அவரது உடல் நலனை பார்த்த மருத்துவர்கள் வியந்துபோய் நின்றார்கள்.

நாம் அனுதினமும் சொல்லக்கூடிய ஜெபமாலைக்கு எவ்வளவு வல்லமை இருக்கின்றது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

அன்னை மரியா தூய ஆலன் ரோச் என்பவருக்குக் கொடுத்த காட்சியில் ஜெபமாலையை அனுதினமும் ஜெபித்து வருவோர் பெற்றுக்கொள்ளும் நன்மைகளைக் குறித்து எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த நன்மைகள் பின்வருபவை ஆகும்:


ஜெபமாலை செபிப்பவர்கள் எனது மக்கள். எனது ஒரே மகன் இயேசுவின் சகோதர சகோதரிகளாயிருப்பர்.

ஜெபமாலை செபித்து அதன் வழியாக நீங்கள் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்.

ஜெபமாலையின் மீது பக்தியுள்ள ஆன்மாக்களை உத்தரிக்கிற நிலையில் வேதனையினின்று மீட்பேன்.

ஜெபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலக வாழ்விலும், இறக்கின்ற
வேளையிலும் இறைவனின் ஒளியையும், அவரது திருவருளின் பெருக்கினையும்
அடைவர். இறக்கும் வேளையில் விண்ணகத்தில் தூயோர் துய்க்கும் பேரின்பத்திலும் பங்கு பெறுவர்.

மறை உண்மைகளை சிந்தித்துப் பக்திப் பற்றுடன் ஜெபமாலை செபிப்பவன் அகால
மரணத்திற்கு ஆளாக மாட்டான். இறைவன் அவனைத் தண்டிக்க மாட்டார். அருள் நிலையில் வாழ்ந்து விண்ணக வாழ்விற்குத் தகுதி பெறுவான்.

ஜெபமாலை செபிப்பவர் தூய வாழ்விலும், நற்செயல்களிலும் வளர்வர். ஜெபமாலை உலகப் பற்றுதல்களிலிருந்தும், அதன் நிலையற்ற பொருள்களிலிருந்தும் ஆன்மாவை விடுவித்து விண்ணகத்தை நோக்கி அதனை உயர்த்துகிறது.

ஜெபமாலை செபிப்போர்க்குச் சிறப்பான பாதுகாப்பையும், மாபெரும் அருள் வரங்களையும் வாக்களிங்கிறேன்.

ஜெபமாலை நரகத்திற்கு எதிரான கவசம் இது தீமைகளை அழிக்கிறது.

ஜெபமாலையின் மீது உண்மையான பக்தி கொண்டிருப்பவன் திருச்சபையின் திருவருட்சாதனங்களை பெறாமல் சாகான்.

ஜெபமாலை பக்தியைப் பரப்புகிறவர்கள் என்னிடமிருந்து தங்கள் தேவைகளில் உதவி பெறுவர்.

ஜெபமாலை பரப்புகிறவர்களுக்கு அவர்கள் வாழ்நாளிலும், இறக்கும் வேளையிலும் விண்ணக நீதிமன்றம் முழுவதும் அவர்களுக்காக பரிந்து பேச எனது இறைமகனிடமிருந்து அனுமதி பெற்றுள்ளேன்.

ஜெபமாலையை விடாமல் தொடர்ந்து செபிப்பவர்கள் சில சிறப்பான வரங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.

ஜெபமாலையின் வழியாக தங்களை என்னிடம் ஒப்படைக்கிறவர்கள் அழிவுறமாட்டார்கள்.

என் ஜெபமாலையின் உண்மை புதல்வர்களாய் இருப்பவர்கள் பரலோகத்தில் மிகுந்த மகிமை அடைவார்கள்.

என் ஜெபமாலை மேல் பக்தி கொண்டிருப்பது மோட்சம் செல்வதற்கு ஒரு பெரிய உறுதிப்பாடாகும். (Courtesy: "செபமாலையின் ரகசியம்" - தூய லூயிஸ் மரிய மான்போர்ட்).

ஆகவே, இத்தகைய வல்லமை நிறைந்த ஜெபமாலையை நாம் அனுதினமும் நம்பிக்கையோடு ஜெபிப்போம், அன்னையின் அன்புப் பிள்ளைகள் ஆவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


தூய செபமாலை அன்னை

 சிறப்பு மிக்க செபமாலை அன்னையின் திருவிழாவை திருத்தந்தை ஐந்தாம் பக்திநாதர் 1571 ஆம் ஆண்டில் ஒரு வெற்றி விழாவாக உருவாக்கி னார் என்பது வரலாறு தெரிவிக்கும் உண்மை.

அன்னையாம் திரு அவையோடிணைந்து அக்டோபர் மாதத்தின் 7ம் நாளில் கத்தோலிக்கரான நாம் செபமாலை அன்னையை நினைவு கூர்ந்து விழா எடுக்கின்றோம்.

செபமாலை தொடர்பான வரலாற்றுப் பதிவுகள் பல்வேறு எமக்குத் தரப்பட்டிருந்தாலும் - கி.பி. 1214ம் ஆண்டில் அன்னை மரியா வழியாக புனித டோமினிக் என்ற துறவிக்கு இச்செபமாலை வழங்கப்பட்டதாக திரு அவையின் பாரம்பரிய வரலாறு தெரிவிக்கிறது.

கடந்த 1917ல் 12 வயது நிரம்பாத சிறுவன் 'பிரான்சிஸ் பரலோக வீடு சேரவேண்டுமாயின் அவன் அதிகமாக செபமாலை செபிக்கவேண்டும்' என்பது அறிவுரையாகக் கொடுக்கப்பட்டதாக பாத்திமா அன்னையின் வரலாறு கூறுகின்றது.

அன்னை மரியா பாத்திமாவில் "நானே செபமாலை மாதா" என்று திருவாய் மலர்ந்துள்ளதோடு - செபமாலை செபிக்கும் முறையையும் கற்றுத்தந்து லூர்துபதியில் சிறுமி பேனடேற்றுடன் சேர்ந்து செபமாலையை செபித்தும் இருக்கின்றார்.

முதன் முதலில் பரிசுத்த திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ் அவர்கள் செபமாலை செபித்தலை பக்தி முயற்சியாக அதிகாரப் பூர்வமானதாக அறிவித்தார் - செபமாலையில் மகிழ்ச்சி - துயரம் - மகிமை மறைபொருள்களின் 15 மறையுண்மைகள் தொடர்ச்சியாகத் தியானிக்கப்பட்டது.

பின்னர், 2002ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் ஒளியின் மறைபொருள்கள் என்னும் பெயரில் நமதாண்டவர் இயேசுவின் பணிவாழ்வை சிந்திக்கும் 4வது புதிய மறையுண்மையை சேர்த்து உள்ளார் - கத்தோலிக்கரின் பக்தி முயற்சிகளுள் ஒன்றாக செபமாலை கருதப்படுகின்றது.

"நானே அமல உற்பவம்" என்றுரைத்த அன்னை மரியா - சிலுவை மரத்தின் அடியில் எமது மீட்பர் இயேசுவால் எமது மீட்பின் அன்னையாக எமக்குத் தரப்பட் டிருக்கிறாள் - தனியாக - குடும்பமாக - குழுவாக -"ஐம்பத்து மூன்று மணி அனுதினமும் ஓதிடுவோம்".

பாமர மக்களை கல்நெஞ்சர்களை காமுகர்களை - முரடர்களை - இச்செபமாலை புனிதர்களாக மாற்றியமைத்துள்ளது - எமது குடும்பங்களில் அமைதி - மகிழ்ச்சி உருவாகி எமது பிள்ளைகள் இறைவழியில் நடாத்தப்பட - எமது தாயகத்தில் நிரந்தர சமாதானம் பிறந்திட எமது பங்குகளில் அன்புறவும் - ஒற்றுமையும் சமூக உறவும் வளம் பெற அனுதினமும் செபமாலை செபிப்போம்.

உலகில் யுத்தங்கள் நிறுத்தப்பட இயற்கையின் அழிவிலிருந்து அனைவரும் பாதுகாக்கப்பட உத்தரிப்பு நிலையிலுள்ள ஆன்மாக்கள் இளைப் பாறுதல் பெற்றிட - நாம் மரண பயத்திலிருந்து விண்ணக வாழ்வை நோக்கி நடைபயில - மரணத்தின் பின்னர் எமது ஆன்மாக்கள் அமைதியில் இளைப்பாறிட அன்னையின் ஆயுதமான செபமாலையை அனுதினமும் எமது கரம்களில் ஏந்தி உருக்கத்தோடு செபிப்போம்.

எமக்காக தமது திருமகனிடம் அனுதினமும் பரிந்து பேசும் எமது சதாசகாயத் தாயான அந்த அன்புத் தாய் - பாவக்கட்டுக்களிலிருந்து எம்மை விடுவிக்க எம்மிடம் வேண்டுவது பூ மாலையோ அல்லது பொன்மாலையோ அல்லது பாமாலையோ அல்ல மாறாக செபமாலையைக் கேட்கின்றார்.

அன்னை மரியாளின் மகிமையைப் பரப்பும் செபமாலையின் மாதமான அக்டோபர் மாதத்தில் விண்ணக மண்ணகத் தாயின் ஒரே ஆயுதமான செபமாலையின் மகிமையைப் போற்றுவோம் செபிக்கும் சேனையாக மாற்றமடைவோம் - ஆண்டவர் இயேசுவின் ஆசீரை அன்னை மரியாளின் வழியாக நாடி நிற்போம்.

"அம்மா நீ தந்த செபமாலை செபிக்கும் நாள் எல்லாம் சுபவேளை"
இயேசுவுக்கே புகழ்!! மரியே வாழ்க!!!

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
மதிப்பிற்குரிய மறுபாதி


தொடக்கநூல் 2:18-24
எபிரேயர் 2:9-11
மாற்கு 10:2-16

'தெ சிம்போசியம்' (The Symposium) என்ற தனது உரையாடலில், அரிஸ்டோஃபேனஸ் என்ற கதைமாந்தர் வழியாக, பிளேட்டோ 'உயிர்த்துணை' (soulmate) பற்றிய ஒரு கதையைப் பதிவுசெய்கின்றார். தொடக்கத்தில் மனிதர்களுக்கு நான்கு கைகள், நான்கு கால்கள், இருபக்கம் பார்க்கின்ற ஒரே தலை, மற்றும் ஆண், பெண், ஆண்-பெண் என்ற மூன்று பாலினம் இருந்ததாம். 'ஆண்,' சூரியனிடமிருந்தும், 'பெண்,' பூமியிடமிருந்தும், 'ஆண்-பெண்' நிலவிலிருந்தும் வந்தவர்களாம். மனிதர்கள் நிறைய ஆற்றலைக் கொண்டிருந்ததால் கடவுளர்கள் அவர்களைத் தங்களின் எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கினர். இவர்களை அழிக்க விரும்பிய கடவுளர்களுக்கு 'சேயுசு' ஒரு அறிவுரை கூறுகின்றார்: 'மனிதர்களை அழிக்க வேண்டாம். அவர்கள் ஒவ்வொருவரையும் இரண்டாக வெட்டி விடுவோம். தங்களின் மறுபாதியைத் தேடிக்கொண்டிருப்பதிலேயே அவர்கள் வாழ்க்கை கழிந்துவிடும். அவர்கள் அதிலேயே தங்கள் ஆற்றலை இழந்துவிடுவார்கள். நமக்கு எதிராக கிளர்ச்சி செய்ய மாட்டார்கள்.' கடவுளர்களுக்கு இந்த சேயுசின் இந்த அறிவுரை பிடித்திருக்க, மனிதர்களை இரண்டாக வெட்டிவிடுகின்றனர். அன்றுமுதல் இன்றுவரை ஒவ்வொருவரும் தன் உயிர்த்துணையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

நிற்க.
மனிதர்கள் ஒவ்வொருவரும் தேடிக்கொண்டே இருக்கும் மறுபாதியே உயிர்த்துணை. இந்த உயிர்த்துணையின் மதிப்பையும், அதன் இன்றியமையாத நிலையையும் நமக்கு முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. ஒவ்வொருவரையும் அவரவர் மறுபாதியை மதிப்பிற்குரியதாக நடத்த உதவுவது நிரப்புதன்மை.

உயிர்த்துணை (soulmate), மறுபாதி (the other half), நிரப்புதன்மை (complementarity) என்ற மூன்று சொல்லாடல்களை முதலில் வரையறை செய்துகொள்வோம்.

1. உயிர்த்துணை:
நம் தமிழ்மொழியில், திருமணத்தால் இணைக்கப்பெற்ற மனைவியை கணவரும், கணவரை மனைவியும், 'வாழ்க்கைத்துணை' என அழைக்கிறோம். 'உயிர்' மற்றும் 'வாழ்க்கை' என்னும் இரண்டு சொற்களுமே ஓரளவு மாற்றி பயன்படுத்தப்படக்கூடியவையே. 'துணை' ('help' or 'helper') எப்போது நமக்குத் தேவைப்படுகிறது? நம்மால் ஒன்றை நாமே செய்ய முடியாதபோது, அல்லது பயணம் செய்ய முடியாதபோது துணைக்கு ஒருவரை அழைக்கிறோம். ஆக, வாழ்வில் சேர்ந்து சுமக்கவும், சோர்ந்து விழாமல் பயணம் செய்யவும் உடன் வருபவர் வாழ்க்கைத் துணை. இவரை நாம், 'நுகத்தடித்துணை' என்றும் அழைக்கலாம். அதாவது, ஒரு கலப்பையை அல்லது வண்டிய இழுக்க இரண்டு மாடுகள் நுகத்தில் பூட்டப்பட வேண்டும். நுகத்தில் பூட்டப்படும் இரண்டு மாடுகளுமே ஒரே அளவு, வலிமை, நகர்வு கொண்டிருக்க வேண்டும். ஆக, வாழ்க்கை என்ற வண்டியை இழுக்க, நுகத்தோடு இணையும் துணையே உயிர்த்துணை.

2. மறுபாதி:
'பகுதி' என்பதுதான் 'பாதி' என மருவி வந்திருக்கிறது என்கிறது தமிழ் இலக்கணம். 'மறுபாதி' அல்லது 'மறு பகுதி' என்று சொல்லும்போது, அதில் 'ஒருபாதி' அல்லது 'ஒரு பகுதி' மறைந்திருக்கிறது. 'ஒரு பகுதியின்' மீதியே 'மறு பகுதி.' ஆக, கணவர் 'ஒருபாதி' என்றால், மனைவி 'மறுபாதி.'

3. நிரப்புதன்மை:
பகல்-இரவு, ஒளி-இருள் என்ற இருதுருவங்களை எடுத்துக்கொள்வோம். இத்துருவங்கள் ஒன்றோடொன்று எதிர்த்து நிற்பவை அல்ல. மாறாக, ஒன்றோடொன்று பொருந்தக்கூடியவை. அல்லது ஒன்றையொன்று நிரப்பக்கூடியவை. பகல் இரவையும், ஒளி இருளையும் நிரப்புவதுபோல, ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் நிரப்புகின்றனர்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு, மேற்காணும் மூன்று சொல்லாடல்களைக்கொண்ட ஒரு முக்கோணமாக நகர்கிறது.

முதல் வாசகத்திலிருந்து (காண். தொநூ 2:18-24) நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

இன்றைய முதல் வாசகத்தை நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1. ஆதாமை வாட்டும் தனிமை
2. இந்த தனிமைக்கு இறைவனே தன் படைப்புப் பொருளில் ஆள் தேடுகின்றார்
3. தனிமை போக்க பெண்ணைப் படைக்கின்றார்
4. ஆண்-பெண் இணைந்திருத்தலின் நோக்கம் கற்பிக்கப்படுகின்றது

கடவுள் தான் படைத்த அனைத்தையும் பெயரிடுமாறு ஆதாமிடம் கொண்டு வருகின்றார். பெயரிடுதல் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு: ஒன்று, பெயரிடுதல் ஒருவர் மற்றவர்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தைக் குறிக்கின்றது. இரண்டு, பெயரிடுதல் ஒருவர் மற்றவருக்கு மேல் உள்ள உரிமையை அல்லது உறவைக் குறிக்கின்றது. இதில் என்ன விந்தை என்றால், எல்லாவற்றிற்கும் பெயரிடும் ஆதாமால் தான் உறவுகொள்ள தனக்கேற்ற துணை எதுவும் இல்லை என்பதுதான். ஆதாமுக்கு ஆழ்ந்த தூக்கம் வரச்செய்த இறைவன் அவனது உடலிலுள்ள விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணாகப் படைக்கின்றார். பெண்ணைக் கண்டவுடன், 'இவளே என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். 'ஈஷ்'இடமிருந்து எடுக்கப்பட்டதால் 'ஈஷா' என்றழைக்கப்படுவாள் என்று பெண்ணுக்கு பெயர் கொடுக்கின்றான் ஆதாம். இறுதியாக, ஆண்-பெண் இணைந்திருப்பதின் நோக்கம் என்ன என்பது கற்பிக்கப்படுகின்றது.

தனிமை என்பது 'துணையின்மை' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தனிமை என்பது ஒரு உணர்வு. தனித்திருப்பது என்பது ஒரு எதார்த்தம். உதாரணத்திற்கு, நான் வேலையினிமித்தம் சென்னை செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். மதுரையில் என் வீட்டோடு தங்கியிருக்கும் நான் சென்னைக்குச் சென்று ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்குகிறேன். ஆக, சென்னையில் நான் தனித்திருக்கிறேன். ஆனால், நான் தனிமையாய் உணரத் தேவையில்லை. என் வீட்டில் இருப்பவர்களோடு ஃபோனில் பேசலாம். டிவி பார்க்கலாம். தூங்கலாம். புத்தகம் வாசிக்கலாம். புதிய மனிதர்களோடு அறிமுகம் செய்து கொள்ளலாம். தனிமையில்லாமலும் தனித்திருக்கலாம். தனித்திருக்காமலும் தனிமை இருக்கலாம். சில நேரங்களில் என் வீட்டில் எல்லாரும் சூழ்ந்திருந்தாலும் தனிமை என்ற உணர்வு என்னை வாட்டி எடுக்கலாம். இதுவரை தான் படைத்த அனைத்தும் 'நன்று', 'நன்று' என்ற கடவுள், முதன் முறையாக 'மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று!' என்று வருத்தப்படுகின்றார். ஆக, தனிமை என்ற உணர்விற்கு மருந்தாக முன்வைக்கப்படுபவர் பெண்.

அடுத்ததாக, 'தனக்கு தகுந்த துணையை மனிதன் காணவில்லை' என்கிறது பாடம். ஆக, ஆதாம் இதுவரை பெயரிட்ட மரங்கள், விலங்குகள் அனைத்தும் அவனுக்கு கீழே இருப்பவை. அவனுக்கு நிகராக இருக்கும் 'துணை' அங்கு இல்லை. இந்தத் துணையை ஆணின் விலா எலும்பிலிருந்து உருவாக்குகிறார் கடவுள். மேலும், எடுத்த இடத்தை சதையால் அடைக்கிறார். என்ன ஒரு விந்தை? 'எலும்பு சதையால் அடைக்கப்படுகிறது. எலும்பு ஒரு சதையாக உருப்பெறுகிறது.' அதாவது, 'கடினம்' என்னும் இயல்பு, 'மென்மை' என்ற இயல்பாக மாறுகிறது. மேலும், 'கடினம்' என்ற இயல்பை, 'மென்மை' என்ற இயல்பு நிரப்புகிறது. ஆணின் தலையிலிருந்து பெண் எடுக்கப்படவில்லை. ஆகவே, அவள் ஆணை ஆட்சி செலுத்த முடியாது. ஆணின் காலிலிருந்து அவள் எடுக்கப்படவில்லை. ஆகவே, அவள் ஆணுக்கு அடங்கி இருக்க முடியாது. மாறாக, அவள் விலா எலும்பிலிருந்து, இதயத்திற்கு அருகில் இருந்து எடுக்கப்படுகிறாள். ஆகவே, அவள் ஆணுக்குச் சமமாக இருக்கிறாள். ஆண் அவளை இதயத்திற்கு அருகில் வைக்க வேண்டும். பெண் அந்த இதயத்தைக் காப்பாற்ற வேண்டும்.

இறுதியாக, திருமணத்தின் நோக்கம். 'கணவன் தன் தாய் தந்தையை விட்டு' (தொநூ 2:24) என்ற இந்த வசனம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இங்கே ஆதாம்-ஏவாள்தான் முதற்பெற்றோர். இவர்களுக்குத் தாய் தந்தையர் யாருமில்லை. திருமணத்தில் ஆண் தன் பெற்றோரை விட்டு பெண்ணோடு சேரும் பழக்கம் நம் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. நம் கலாச்சாரத்தில் பெண்தான் தாய் தந்தையைவிட்டு தன் கணவனோடு கூடி வருகின்றார். திருமண உறவில் நிகழும் பெரிய மாற்றம் என்னவென்றால் ஆணும், பெண்ணும் புதிதாய்ப் பிறக்கின்றனர். இனி பழைய உறவுகளை அவர்கள் பிடித்துக் கொண்டிருத்தல் கூடாது. ஆக, ஒருவர் மற்றவரை அன்பு செய்யத் தங்களையே அவர்கள் முழுவதுமாக ஒருவர் மற்றவருக்குக் கையளித்தல் வேண்டும்.

முதல் வாசகத்தின் பின்புலத்தில் பார்க்கும்போது, 'ஆணுக்கு' ஏற்ற உயிர்த்துணையாக 'பெண்' இருக்கிறாள். ஒரே உடலிலிருந்து எடுக்கப்பட்டதால், 'ஆண்' என்ற ஒருபாதியின் மறுபாதியாக இருக்கிறார் 'பெண்.' மேலும், இங்கே ஒருவர் மற்றவரின் தனிமையை நிரப்புவதால், ஆண்மையும், பெண்மையும் நிரப்புதன்மை கொண்டிருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபி 2:9-11) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களுக்கு இத்திருமடலிலிருந்துதான் வாசகங்கள் தொடரும். 'வானதூதர்கள்,' 'மனிதர்கள்' என்ற இரண்டு பரந்த வகையினத்தைப் பற்றிப் பேசுகின்ற திருமடலின் ஆசிரியர், 'வானதூதர்களுக்கு மேலாக' இருந்த இயேசு, தான் மனித உரு ஏற்றபோது, அந்த நிலையிலிருந்து 'தாழ்ந்தவராக' இருக்கிறார் என்று முன்வைக்கின்றார். இவரின் இந்த இறங்கிவருதலே, அவர் மனிதர்களை, 'சகோதரர், சகோதரிகள்' என்று அவர் அழைக்கக் காரணமாக இருக்கிறது. அதாவது, 'இயேசு இவர்களைச் சகோதரர், சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை' என பதிவு செய்கிறார் ஆசிரியர். 'கடவுளாக' இருந்த இயேசு, 'மனித' உரு ஏற்றதால், மனிதர்களை அவர் தம் 'உயிர்த்துணையாக' ஏற்றுக்கொள்கின்றார். மனிதராக அவர் மாறியது எதற்காக? மனிதர்களைத் தூய்மையாக்கவதற்காக. அதாவது, மனிதத்தின் மறுபாதியான தூய்மையை அவர்கள் கண்டுகொள்வதற்காக. இறுதியாக, இயேசுவின் மனித உரு ஏற்ற நிலை அவரை - கடவுளை - மனிதர்களோடு நிரப்புகிறது. இவ்வாறாக, கடவுளும் மனிதர்களும் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்பவர்களாக அல்லாமல், நிரப்புபவர்களாக மாறுகின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தை (காண். மாற் 10:2-16) இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

1. மணவிலக்கு பற்றிய இயேசுவின் போதனை (10:2-12)
2. இயேசு சிறுபிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல் (10:13-16)

1. மணவிலக்கு அல்லது மணமுறிவு:
இயேசுவின் காலத்தில் புழக்கத்தில் இருந்த மணமுறிவு பற்றி கட்டளை அல்லது விதிமுறை ஆணைக் காப்பாற்றும் முகமாகவும், பெண்ணை இழிவுபடுத்தக்கூடியதாகவும் இருந்தது. இயேசு அந்த விதிமுறை கொண்டிருந்த அவலத்தை தோலுரிக்கின்றார். மணவிலக்கு என்பது பற்றிய இயேசுவின் போதனை படைப்புத் திட்டத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. படைப்புத் திட்டத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிய இடம் இருக்கிறது என்றும், இதில் தடுமாற்றம் நிகழும்போது மனிதர்கள் கடவுளின் படைப்புத் திட்டத்தோடே விளையாடுகிறார்கள் என்று மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றார் இயேசு. மேலும், மணமுறிவு விபச்சாரத்திற்கு வழிவகுக்கிறது என்பதும் இயேசுவின் போதனை. விபச்சாரத்தில் பெண் விலை பேசப்படுகின்றார். விபச்சாரத்தில் பெண் வெறும் மோகப்பொருளாகப் பயன்படுத்துகின்றார். அன்பு செய்யப்படுவதற்காக படைக்கப்பட்ட ஒன்றை பொருள் போல பயன்படுத்தத் துவங்குவது படைத்தவரையே இழிவு செய்வதாகும்.

ஆண் மற்றும் பெண் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் உயிர்த்துணையாக இருப்பதற்குத்தானே தவிர, ஒருவர் மற்றவரின் 'உடல்துணையாக' இருப்பதற்கு அல்ல. வெறும் உடல்துணையாக தன் மறுபாதியை கருதும்போதுதான், மணமுறிவு, விபச்சாரம், திருமணத்திற்குப் புறம்பே உறவு போன்றவை தோன்றுகின்றன. மேலும், இப்படிப்பட்ட பிறழ்வுகளில் மனிதர்கள் தங்களுக்கான மறுபாதியை பல மறுபாதிகளில் தேடி அங்கலாய்க்கின்றனர். இறுதியில், ஒருவருக்கொருவர் உள்ள நிரப்புதன்மை மறைந்து, எதிர்தன்மை வளர ஆரம்பிக்கிறது.

2. குழந்தைகள் ஆசீர் பெறுதல்:
இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வையும் மாற்கு நற்செய்தியாளர் தொடர்ந்து பதிவு செய்வது, திருமணத்தின் நிறைவு குழந்தைப்பேறு என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

'குழந்தைகள்' திருமண உறவின் நீட்சிகள். 'பெற்றோர்' என்பவர்களின் 'வாழ்க்கைத்துணை' 'குழந்தைகள்.' 'பெற்றோர் நிலையின்' மறுபாதிதான் 'பிள்ளைநிலை'. மேலும், பெற்றோர் பிள்ளைகளை, பிள்ளைகள் பெற்றோரை நிரப்புகின்றனர்.

இவ்வாறாக, இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும், ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும், இரண்டாம் வாசகம், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும், நற்செய்தி வாசகம், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இன்றைய நம் வாழ்க்கைச் சூழலில், இம் மறுபாதி நிலையும், நிரப்புதன்மையும் முன்வைக்கும் சவால்கள் எவை?

ஒரே பாலின திருமணம், திருமணம் தவிர்த்த குழந்தைப்பேறு, தனக்குத்தானே திருமணம், தனிப்பெற்றோர், இணைந்து வாழ்தல், ஒப்பந்த திருமணம் என இன்று திருமணம் பல பரிமாணங்களை எடுத்துவிட்டது. மேலும், திருமணத்திற்கு புறம்பான உறவு 'பிரமாணிக்கமின்மையாக' பார்க்கப்பட்ட நிலை மாறி, 'விருப்பநிலை' என்று ஏற்றுக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. காலப்போக்கில், அறிவியில் மற்றும் விஞ்ஞான மாற்றத்தால் ஒருவேளை மனிதர்கள் இறவாநிலையை அடைந்தார்கள் என்றால் - அதாவது, இயற்கை மரணத்தை தள்ளிப்போடுவது - முதலில் உடையும் நிறுவனம் திருமணமாகத்தான் இருக்கும். ஏனெனில், 200 அல்லது 300 ஆண்டுகள் வரை வாழும் மனிதர் ஒரே வாழ்க்கைத் துணையோடு வாழும் நிலை எப்படி இருக்கும்? மேலும், இன்று ஆண்-பெண், கணவன்-மனைவி உறவு நிலையில் சகிப்புத்தன்மை குறைந்துகொண்டே வருவதும் கண்கூடு.

நாம் இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் பேசும் 'உயிர்த்துணை,' 'மறுபாதி,' 'நிரப்புதன்மை' ஆகியவை சாத்தியமா?

முதலில், இந்த மூன்று சொற்களுக்கும் மையமாக இருக்க வேண்டிய வார்த்தை மதிப்பு. அது என்ன மதிப்பு?

ஆண்-பெண் திருமண உறவில், நீதி மற்றும் அன்பைவிட முக்கியமானதாக இருக்க வேண்டிய ஒரு பண்பு என்னவென்றால் மதிப்பு. அதாவது, ஒருவர் மற்றவரை மதித்தல். மதித்தால்தான் நீதிக்கும் அன்புக்கும் அடித்தளமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, நான் சாலையில் நடந்து செல்கிறேன். வழியில் ஒருவர் கேட்பாரின்றி படுத்திருக்கிறார். அவரை நான் மதித்தால்தான் அவருக்கு அருகில் சென்று அவரை நான் அன்பு செய்யவும், அவருக்கான நீதியை நான் பெறவும் முடியும். 'அவர் யாரே' என நான் வெறும் பிளாஸ்டிக் பேப்பர் போல அவரை நினைத்துக்கொண்டு கடந்து சென்றால், அவரை நான் மதிப்பதில்லைதானே.

ஆக, 'மதிப்பு' இருக்கும் இடத்தில் பிரமாணிக்கமின்மை மறையும். 'மதிப்பு' இருக்கும் இடத்தில் புரிதல் இருக்கும். இன்று, திருமண உறவோ, அல்லது துறவற உறவோ, அல்லது நட்பு உறவோ, அங்கே நம்மோடு உறவில் இருப்பவர் நம் மறுபாதியாக, நம் உயிர்த்துணையாக, நம்மை நிரப்புபவராக இருக்கிறார். அவருக்கு நான் கொடுக்க வேண்டியதெல்லாம் மதிப்பு மட்டுமே. அவர் 'என் மதிப்பிற்குரிய மறுபாதி' என்ற நிலை வந்தால் பாதி பிரச்சினை முடிந்துவிடும்.

இரண்டாவதாக, கண்ணுக்குப் புலப்படாத இறைத்தன்மை. நம் சக பாதியை, சக உயிர்த்துணையை நாம் வெறும் புறக்கண்களால் பார்த்தால் அவருடைய மனிதத்தன்மையும், குறைவும்தான் நம் கண்களில் படும். மாறாக, மற்றவரில் இருக்கும் இறைத்தன்மையை, அல்லது இறைவனின் கண் கொண்டு மற்றவரைப் பார்க்கும்போது, நாமும் ஆதாம்போல, 'இதோ, இவர் என் எலும்பின் எலும்பு, சதையின் சதை' என்று நாமும் சொல்ல முடியும்.

மூன்றாவதாக, ஒருவர் மற்றவரின் கைப்பாவை என்ற நிலை மாற வேண்டும். எப்படி?

கண்ணாடிப் பொருள்களை நாம் இடமாற்றம் செய்யும்போது, அவற்றை நாம் பொதியம் செய்து, அதன் மேல், 'உடையும் பொருள் - கவனம்' என எழுதுகிறோம். ஆனால், இப்படி எழுதப்படாத ஒட்டி ஒன்றை ஒவ்வொரு மனிதரும் தன்மேல் ஒட்டிக்கொண்டிருக்கிறார். மனிதர்கள் தங்களுக்குள்ளே உணர்ந்த முதல் எதிர்மறை உணர்வு 'தனிமை.' இந்தத் தனிமையே மனிதரின் 'வடுப்படும்நிலை' ('vulnerability') அல்லது 'நொறுங்குநிலை' (fragility) இந்த நொறுங்குநிலையில் இருக்கும் ஒரு ஆண், இதே நொறுங்குநிலையில் இருக்கும் பெண்ணின் துணையை நாடுகிறான். படைப்பின் தொடக்கத்தில் அனைத்தையும் நல்லதெனக் கண்ட கடவுள், 'மனித தனிமையை மட்டும் நல்லதன்று' (முதல் வாசகம்) என அறிகிறார். இத்தனிமையைப் போக்க தக்க துணை ஒன்றை படைக்கின்றார். பெண் ஆணிடமிருந்து எடுக்கப்பட்ட விலா எலும்பில் உருவாக்கப்பட்டவள் என்று உருவகப்படுத்துவதன் வழியாக, உடைத்து எடுக்கப்பட்ட விலாவிலிருந்து எடுக்கப்பட்ட பெண் தானும் உடைந்திருப்பதால், உடைந்திருக்கும் ஆணை உறுதிப்படுத்துவது தொடர் போராட்டமாகவே இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. 'இதோ, இவளே என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள்' என ஆண் அவனை அரவணைத்துக்கொண்டாலும், 'இருவரும் ஒரே உடலாய் இருந்தாலும்,' 'எப்போது நாம் பிரிந்துவிடுவோமோ?' என்ற பயம் இருவரிடமும் இருந்துகொண்டே இருக்கும். மோசேயின் சட்டம் 'மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம்' (நற்செய்தி வாசகம்) என்று ஆணுக்கு அதிகாரம் கொடுத்திருந்ததால், பெண் ஆணின் இரக்கத்திலேயே இருக்க வேண்டிய பொம்மை ஆனாள். பாவை (பெண்) ஆணின் கைப்பாவை ஆனாள். தன் மனைவியை விலக்கிவிடும் ஆண் மீண்டும் தனிமை ஆகிறான். அந்தத் தனிமை என்னும் உடைந்த நிலைக்கு முட்டுக்கொடுக்க வேறொரு பெண்ணை நாடுகிறான். அங்கே வேறொரு பெண்ணும் பொருளாக பயன்படுத்தப்படுகிறாள். ஆண்-பெண் உறவு தனிமை போக்கும் இனிமையாக மாறுவது எப்படி? இருவர் உறவில் இருக்கும் பயன்பாட்டுநிலை மறைந்து அன்பு உருவாவது எப்படி? இரண்டு வழிகள்: (அ) ஒருவர் மற்றவரின் 'நொறுங்குநிலையை' புரிந்துகொள்வது. இறைமகன் இயேசுவே மனித 'நொறுங்குநிலையை' புரிந்துகொள்ள மனிதராக வருகின்றார். மனிதர்களை தன் 'சகோதர, சகோதரிகள் என அழைக்க அவர் வெட்கப்படவில்லை' (இரண்டாம் வாசகம்). (ஆ) கணவன் மனைவியை, மனைவி கணவனை தன் குழந்தைபோல ஏற்றுக்கொள்வது. குழந்தைகளின் நொறுங்குநிலையை நாம் எப்படி மதிக்கிறோமோ, அப்படி ஒருவர் மற்றவரின் நொறுங்குநிலையை மதிப்பது. இம்மேலான புரிதலில் இருப்பவர்களுக்கு ஆண்டவர் வாழ்நாளெல்லாம் ஆசி வழங்குவார் (திபா 128).

இறுதியாக, பாதியாக இருக்கும் நம்மை வாட்டுவது தனிமையும், சோர்வும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் மறுபாதிகள். இவர்களை மதிப்புற்குரியவர்கள் என நாம் எண்ணி செயலாற்றும்போதும், நாம் ஒருவர் மற்றவரை நிரப்ப முடியும். 'என் சுண்டுவிரலை நகர்த்தும்போது எங்கோ தெரியும் நட்சத்திரத்தை நகர்த்துகிறேன்' என்ற நிலையில் நான் மற்றவரோடு இணைந்திருக்கிறேன். இந்த இணைந்திருத்தலில் மதிப்பு இருந்தால் அங்கே நிரப்புதன்மை நிரம்பி வழியும்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Teaching Faculty
Saint Paul's Seminary
Tiruchirappalli - 620 001

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!