|
24
ஆகஸ்டு 2018 |
|
பொதுக்காலம்
20ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். என் மக்களே!
உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 1-14
அந்நாள்களில் ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத்
தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில்
நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன. அவர்
அவற்றைச் சுற்றி என்னை நடத்திச் சென்றார். அங்கே பள்ளத்தாக்கின்
அடியில் மிகப் பல எலும்புகள் கிடந்தன. அவை மிகவும் உலர்ந்தவையாய்
இருந்தன. அவர் என்னிடம், "மானிடா! இந்த எலும்புகள் உயிர் பெறமுடியுமா?"
என்று கேட்டார். நான், "தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே"
என்று மறுமொழி அளித்தேன்.
அவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்கு உரை.
"உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்" என்று
சொல். தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு
கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன்.
நீங்களும் உயிர் பெறுவீர்கள். நான் உங்களை நரம்புகளால்
தொடுப்பேன்; உங்கள்மேல் சதையைப் பரப்புவேன். உங்களைத் தோலால்
மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும்
உயிர் பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்துகொள்வீர்கள்.
எனவே, எனக்குக் கட்டளையிடப்பட்டபடி இறைவாக்கு உரைத்தேன். நான்
இறைவாக்கு உரைக்கையில், உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும்
தனக்குரிய எலும்புடன் சேர்ந்துகொண்டது. நான் பார்க்கையிலேயே
அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல்
மூடியது. ஆனால் அவற்றில் உயிர் இன்னும் வரவில்லை.
பின்னர் அவர் என்னிடம், உயிர்மூச்சுக்கு இறைவாக்கு உரை:
மானிடா! இறைவாக்கு உரைத்து, உயிர்மூச்சிடம் சொல்.
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான்கு காற்றுகளிலிருந்தும்
"உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது
இவர்கள் உயிர் பெறுவர்." எனவே அவர் எனக்குக் கட்டளையிட்டவாறு
இறைவாக்கு உரைத்தேன். உடனே அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது.
அவர்கள் உயிர்பெற்று, காலூன்றி, மாபெரும் படைத்திரள் போல் நின்றனர்.
அவர் மேலும் என்னிடம் கூறியது: மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல்
வீட்டார் அனைவரையும் குறிக்கும். அவர்களோ "எங்கள் எலும்புகள்
உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள்
துண்டிக்கப்பட்டு விட்டோம்" எனச் சொல்கிறார்கள்.
எனவே, இறைவாக்கு உரைத்து அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர்
கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப்
போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன்.
உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன்.
அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை
அவற்றிலிருந்து வெளிக் கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து
கொள்வீர்கள்.
என் ஆவியை உங்கள் மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். "ஆண்டவராகிய
நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்" என அப்போது அறிந்து
கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 107: 2-3. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2 ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று அவரால் மீட்கப்பட்டோர்,
3 கிழக்கினின்றும், மேற்கினின்றும் வடக்கினின்றும்
தெற்கினின்றும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டோர்
சொல்வார்களாக. பல்லவி
4 பாலைநிலத்தில் பாழ்வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்;
குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை;
5 பசியுற்றனர்; தாகமுற்றனர்; மனச்சோர்வுற்றுக் களைத்துப் போயினர்.
பல்லவி
6 தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற
துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார். 7 நேரிய
பாதையில் அவர்களை வழி நடத்தினார்; குடியிருக்கும் நகரை அவர்கள்
அடையச் செய்தார். பல்லவி
8 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த
வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி
செலுத்துவார்களாக! 9 ஏனெனில், தாகமுற்றோர்க்கு அவர் நிறைவளித்தார்;
பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திபா 25: 4c,5a
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்;
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உன் கடவுள் மீது அன்பு செலுத்து. உன்மீது
நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
22: 34-40
அக்காலத்தில் இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக்
கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.
அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச்
சோதிக்கும் நோக்கத்துடன், "போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த
கட்டளை எது?"" என்று கேட்டார்.
அவர், "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும்
உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து." இதுவே தலைசிறந்த முதன்மையான
கட்டளை.
"உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும்
அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.
திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு
கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன" என்று பதிலளித்தார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
10 கட்டளைகளை இரண்டாக்கி கொடுத்தார்.
இந்த 02யையும் சுருக்கினால் ஒரே வார்த்தை அன்பு என்பது தான்.
அந்த அன்பு அவராகவும் தெய்வமாகவும் இருக்கிறார் என்பதை யோவானின்
திருமுகத்தில் பார்க்கின்றோம். 04: 16
எனவே நாம் அன்பு செய்ய முன் வருகின்ற போது நாமும் தெய்வமாகின்றோம்
என்பதுவே உண்மையாகின்றது.
எனவே தான் அன்பானவர்கள் நம்மை விட்டு பிரியும் போது, தெய்வமாக
வாழ்ந்து விட்டு போய் விட்டார்கள் என்றும், என் தெய்வமே போய்
விட்டது என்றும், தெய்வத்திற்கு மரணமில்லை என்றும் மண்ணுலக
மாந்தர்கள் சொல்லுவதுண்டு.
அன்பையே ஆடையாக்கி மாண்போடும், மரியாதையோடும் வாழ்வோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
(சகோதர) அன்பே பிரதானம்!
இங்கிலாந்து நாட்டில் இரண்டு கால்களும் முடமான நிலையில் ஒரு
பெண்மணி இருந்தார். அவர் பெயர் சாரா டக்கர். ஒரு சாதாரண
வீல்சேரில் கோவிலுக்குச் செல்வார். அதை மட்டும்தான் அவரால்
செய்ய முடிந்தது.
சாரா டக்கருக்கு சகோதர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஜான் டக்கர்.
அவர் தென்னிந்தியாவில் மறைபோதகராக
- மிஷனரியாக - பணியாற்றி வந்தார்.
ஒருநாள் அவர் இங்கிலாந்துக்கு வந்து, சாரா டக்கர் வழக்கமாகப்
போகும் ஆலயத்தில் போதித்தார். போதனையின் முடிவில்,
தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த திருநெல்வேலி
ஜில்லாவில் பெண்பிள்ளைகள் படிக்க முடியாத சூழல் நிலவுவதையும்
அவர்களுக்கு ஏற்படும் சமூக சீர்கேடுகளையும் சிறுவயதிலே அவர்கள்
பொட்டுக்கட்டப்பட்டு கோவில்களில் தாசிகளாக இருக்கக்கூடிய
நிலையையும் எடுத்துச் சொல்லி, இப்படிப்பட்டவர்களுக்கு உதவ
விருப்பமுள்ளவர்கள் தாராளமாகப் பணம் தந்து உதவலாம் என்றார்.
இதைக் கேட்ட சாரா டக்கருக்கு ஏதோ போல் இருந்தது. திருநெல்வேலி
பகுதியில் இருக்கின்ற பெண்பிள்ளைகளுக்கு ஏதாவது செய்யவேண்டும்
என்று அவருடைய மனம் ஏங்கியது. உடனே அவர் இறைவனிடத்தில் கண்ணீர்
விட்டு ஜெபித்தார். "இறைவா என்னால் திருநெல்வேலி பகுதிக்குச்
சென்று, அங்கிருக்கும் பெண் பிள்ளைகளிடத்தில் பணி செய்ய
முடியாது. ஆனால் அங்கிருக்கும் பெண் பிள்ளைகளுக்கு ஏதாவது உதவி
செய்யவேண்டும் என்று மனம் ஏங்குகின்றது. அதற்காக உமது அருளைத்
தாரும்" என்றார்.
இவ்வாறு ஜெபித்துவிட்டு தன்னிடத்தில் எவ்வளவு தங்கம் இருக்கின்றது
என்று பார்த்தார் இருநூறு பவுன் தங்கம் இருந்தது. அவற்றை ஒன்றாகச்
செய்தார். பின்னர் தன்னுடைய நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவுக்காரர்கள்
யாவரிடத்திலும் சொல்லி மேலும் 100 பவுன் தங்கம் சேகரித்தார்.
அதன்பின்னர் தன்னுடைய பிறந்த நாளுக்கு பரிசு கொண்டுவந்தவர்களிடம்
பணமாக மாற்றித் தருமாறு கேட்டார். அவர்களும் அவ்வாறு செய்ய அவரிடத்தில்
முன்னூறு பவுனுக்கு மேல் தங்கமும் ஓரளவு பணமும் சேர்ந்தது. அவற்றையெல்லாம்
எடுத்து தன்னுடைய சகோதரர் ஜான் டக்கரிடம் கொடுத்தார். அவர்
திருநெல்வேலிப் பகுதிக்கு வந்து, சாரா டக்கரின் நினைவாக அவருடைய
பெயரில் கல்விக்கூடங்களை நிறுவினார்
இப்படி பெண் பிள்ளைகள் கல்வியறிவு பெறவேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டவைதான்
சாரா டக்கர் கல்வி நிறுவனங்கள் ஆகும். சாரா டக்கர் கல்லூரி,
சாரா டக்கர் மேனிலைப் பள்ளி, சாரா டக்கர் பயிற்சிப் பள்ளி என்று
தொடங்கப்பட்டு இன்றைக்கு ஐயாயிரத்தும் மேற்பட்ட பெண் பிள்ளைகள்
படிப்பதற்குக் காரணமாக இருக்கும் சாரா டக்கரின் பேரன்பை, அவர்
மானிட சமுதாயத்தின் மீது கொண்ட அன்பை வார்த்தைகளால் விவரித்துச்
சொல்ல முடியாது.
நற்செய்தி வாசகத்தில், திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடத்தில்
வந்து, "போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?" என்று
கேட்கின்றார். இயேசு அவரிடம், "உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும்
முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே
தலைசிறந்த முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்பு கூர்வது போல
உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்பது இதற்கு
இணையான இரண்டாவது கட்டளை" என்கின்றார். இவ்வாறு இறையன்பும் பிறரன்பும்தான்
முதன்மையான கட்டளை என்று இயேசு அந்த திருச்சட்ட அறிஞருக்குப்
பதில் அளிக்கின்றார்.
இஸ்ரயேல் மக்கள் கடவுளை அன்பு செய்வதுதான் பெரிய முதன்மையான கட்டளை
என்று நினைத்தார்கள். அதற்காக அவருக்கு பலிகளையும் காணிக்கைகளையும்
செலுத்தினார்கள். இயேசு திருச்சட்ட அறிஞருக்குக் கூறிய பதிலும்
கடவுளை முழுமையாக அன்பு செய்யவேண்டும் என்பதாகத்தான் இருந்தது.
ஆனால், இயேசு ஒருபடி மேலே சென்று இறைவனை எந்தளவுக்கு முழுமையாக
அன்பு செய்கின்றோமோ அந்தளவுக்கு மனிதர்களை அன்பு செய்யவேண்டும்
என்று சொல்கின்றார். மேலும் கடவுளை அன்பு செய்வதற்கு இணையானது
மனிதனை அன்பு செய்வது எனச் சொல்கின்றார்.
நாம் கடவுளை அன்பு செய்துவிடுவோம். அதில் எந்தவிதச் சிக்கலும்
இல்லை. கடவுளை அன்பு செய்வதற்கு இணையாக மனிதர்களை அன்பு
செய்கின்றோமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது.
ஒருவேளை நாம் நம்மோடு வாழக்கூடிய மனிதர்களை முழுமையாக அன்பு
செய்யாவிட்டால் அது கடவுளை அன்பு செயயாததாகவே இருக்கும்.
ஆகவே, நம்மோடு வாழும் சக மனிதர்களை அன்பு செய்வோம். அந்த அன்பின்
வெளிப்பாடாக மேலே பார்த்த சாரா டக்கரைப் போன்று அவர்களுடையை
தேவைகளை நிவர்த்தி செய்வோம். அதன்வழியாக இறைவனின் அன்புக்கு
உகந்தவர்களாகி இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
இறையன்பும், பிறரன்பும்
முன்பொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு தன்னுடைய
மூதாதையர்கள் வழியாகக் வந்த ஓர் அழகான மோதிரம் கையில் கிடைத்தது.
அதனுடைய சிறப்பே அதனைக் கையில் அணிவோரின் வாழ்வை அன்பு மயமானதாக
மாற்றிவிடும். அவர் எல்லாரையும் அதிகமாக அன்பு செய்வார்.
அந்த அரசர் வழிவந்த இன்னொரு அரசனுக்கு மூன்று இளவரசர்கள் இருந்தார்கள்.
எனவே அந்த மூன்று இளவரசர்களுக்கும் ஒரே ஒரு அதிசய மோதிரத்தை எப்படிப்
பிரித்துக்கொடுப்பது என்று தீவிரமாக யோசித்துப் பார்த்தார். அப்போது
சிந்தனை வயப்பட்டவராய் அந்த அதிசய மோதிரம் போன்று மேலும் இரண்டு
மோதிரங்களைச் செய்து, அதனை தன்னுடைய பிள்ளைகளிடம் கொடுத்தார்.
இப்போது இளவரசர்கள் மூவரும் குழம்பிப்போனார்கள்? யாரிடம் அந்த
அதிசய மோதிரம் இருக்கிறது என்று. ஆதலால் அவர்கள் மூவரும் நகரில்
இருந்த ஒரு நீதிபதியைச் சந்தித்து தங்களுடைய வழக்கைத்
தீர்த்துவைக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அப்போது நீதிபதி அவர்களிடம்,
"எனக்கு எது அதிசய மோதிரம் என்று தெரியாது. ஆனால் அந்த மோதிரத்தை
கொடையாகப் பெற்றிருப்போரின் வாழ்வு எப்படிப்பட்டதாக இருக்கும்
என்பது மட்டும் தெரியும்" என்றார்.
பின்னர் அவர் அவர்கிடம், உங்களுடைய வாழ்வை அன்புமயமானதாக
மாற்றியமைத்துக் கொண்டால், நீங்கள்தான் அந்த அதிசய மோதிரத்தைப்
பெற்றிருக்கிறீர்கள் என்ற உண்மை எல்லாருக்கும் வெளிப்படும்.
ஆதலால் எல்லாரும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யக் கற்றுக்கொண்டு
வாழுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாகும். இறைவனிடமிருந்து
எல்லா ஆசிரையும் பெற்ற மக்களாவீர்கள்.
நற்செய்தி வாசகத்தில் திருச்சட்ட அறிஞர்கள் இயேசுவிடம்,
"திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது? என்று
கேட்கிறார்கள். அதற்கு ஆண்டவர் இயேசு, "உன் முழு இதயத்தோடும்,
முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம்
அன்புசெலுத்து. இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. உன்மீது நீ
அன்புகூர்வதுபோல, உனக்கு அடுத்திருப்பவர்மீதும்
அன்புகூர்வாயாக் என்பது இதற்கு இணையான கட்டளை. திருச்சட்ட நூல்
முழுமைக்கும் இறைவாக்கு நூல்களும், இவ்விரு கட்டளைகளே
அடிப்படையாக அமைகின்றன" என்று பதிலளிக்கிறார்.
வாசிக்கக் கேட்ட நற்செய்திப் பகுதி நமக்குப் பல உண்மைகளை
எடுத்துக்கூறுகிறது. அதில் முதலாவது, கடவுளை அன்பு செய்வதுதான்
முதன்மையான கட்டளை என்பதாகும்.
இன்றைக்கு மக்கள் பொருள் தேடி, புகழ் தேடி, மகிழ்ச்சியைத் தேடி
எங்கெல்லாமோ, யார்யாருக்குப் பின்னால் எல்லாமோ செல்கிறார்கள்.
வேடிக்கை என்னவென்றால் உண்மையான மகிழ்ச்சியைக் கடவுள்தான்
தருவார். ஆனால் மக்கள் கடவுளை வசதியாக மறந்துவிட்டு, உலகக்
காரியங்களில் மூழ்கிக்கிடக்கிறார்கள். இந்த நிலைமாறவேண்டும்.
கடவுளைத் தேடி அவரை முழுமையாக அன்பு செய்யவேண்டும்.
அடுத்ததாக கடவுளை அன்பு செய்வது எந்தளவுக்கு முக்கியமோ
அந்தளவுக்கு முக்கியம் நம்மோடு வாழ்வும் சக மனிதர்களை
அன்புசெய்வது. நிறைய நேரங்களில் கடவுளை அன்புசெய்கிறேன்
பேர்வழி என்று சொல்லிக்கொண்டு தங்களோடு வாழும் மக்களை
அன்புசெய்ய மறந்துபோய்விடுகிறார்கள். இது ஒருவகையில் வெளிவேடத்தனம். ஏமாற்றுத்தனமும் கூட.
தூய யோவான் எழுதிய முதல் திருமுகம் 4:8 ல் வாசிக்கின்றோம்,
"அன்பில்லாதவர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை. ஏனெனில் கடவுள்
அன்பாய் இருக்கிறார். ஆகவே இறைவன்மீது நமக்கிருக்கும் அன்பை
வெளிப்படுத்த நாம் அன்புமயமானவர்களாக மாறுவோம். இறையன்பும்,
பிறரன்பும் தனித்தனி துருவங்கள் கிடையாது. மாறாக அவை ஒரு
நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை உணர்ந்து அதற்கேற்ப நமது
வாழ்வை அமைத்துகொள்வோம்.
தூய யாக்கோபு எழுதிய திருமுகம் 2 ஆம் அதிகாரம் 14-17 வரை உள்ள
வசனங்களில் படிக்கின்றோம், "என் சகோதர சகோதரிகளே, தம்மிடம்
நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே
காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க
முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட
உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை
எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து "நலமே
சென்று வாருங்கள்: குளிர் காய்ந்து கொள்ளுங்கள்: பசியாற்றிக்
கொள்ளுங்கள் என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே,
நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே
உயிரற்றதாயிருக்கும்" அதனால் கடவுள் மீது நாம் கொண்டிருக்கும்
நம்பிக்கை சக மனிதரிடத்த்தில் வெளிப்படவேண்டும். இல்லையென்றால்
உயிரற்ற விசுவாசமாகும்.
எனவே, கடவுளை முழுமையாக அன்புசெய்வோம். நம்மோடு வாழும் சக
மனிதர்களை அன்புசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
-------------------------------------------------------- |
|