Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        24  ஆகஸ்டு 2018  
                                                           பொதுக்காலம் 20ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்     புனித பர்த்தலமேயு - திருத்தூதர் விழா
=================================================================================
பன்னிரண்டு அடிக்கற்களின் மீதும் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 9b-14

சகோதரர் சகோதரிகளே, ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, "வா, ஆட்டுக்குட்டி மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன்"என்று என்னிடம் கூறினார்.

தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வருவதை எனக்குக் காட்டினார். அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள்.

இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 145: 10-11. 12-13ab. 17-18 (பல்லவி: 12 )
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் அன்பர்கள் உமதரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13ab உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 1: 49b

அல்லேலூயா, அல்லேலூயா! ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51

அக்காலத்தில் பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, "இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்" என்றார்.

அதற்கு நத்தனியேல், "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?"என்று கேட்டார்.

பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்"என்று கூறினார்.

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்"என்று அவரைக் குறித்துக் கூறினார்.

நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?"என்று அவரிடம் கேட்டார்.

இயேசு, "பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்"என்று பதிலளித்தார்.

நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்"என்றார். அதற்கு இயேசு, "உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்"என்றார்.

மேலும், "வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"என்று அவரிடம் கூறினார்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இன்று திருச்சபையானது திருத்தூதரான தூய பார்த்தலமேயுவினுடைய விழாவைப் பெருமகிழ்வுடன் கொண்டாடி மகிழ்கின்றது. விவிலியத்தில் இவரைப் பற்றிய செய்தி மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்தி நூல்களில் திருத்தூதர்களுடைய அட்டவணைப் பகுதியிலும், யோவான் நற்செய்தி முதல் அதிகாரத்திலும் (யோவா 1:43-51) திருத்தூதர் பணிகள் நூல் முதல் அதிகாரத்தில் ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைகிறபோதும் வாசிக்கின்றோம்.

'உழுதநிலத்தின் மகன்', 'நத்தனியேல்' என்று அழைக்கப்படக்கூடிய இவரைக் குறித்துத்தான் ஆண்டவர் இயேசு, "இவரே உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர் (யோவா 1:47) என்று குறிப்பிடுகிறார். கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த தூய ஜெரோம் குறிப்பிடும்போது, "ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு இவர் இந்தியாவிலுள்ள கொங்கணம் கடற்கரைப் பகுதியிலும், மும்பை கடற்கரைப் பகுதியிலும் நற்செய்தி அறிவித்துவிட்டு, அங்கிருந்து அர்மேனியா சென்று, அங்கே நற்செய்தி அறிவிக்கும்போது மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்" என்று கூறுவார். மைக்கேல் ஆஞ்சலோ ரோம் நகரில் இருக்கக்கூடிய சிஸ்டைன் பேராலயத்தில் வரைந்த ஓவியத்தில் தூய பார்த்தலமேயு உடலிலிருந்து உரிக்கப்பட்ட தன்னுடைய சதையைத் தாங்கி நிற்பது போன்ற படம் வரையப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

இவருடைய விழாவைக் கொண்டாடுகிற வேளையில் இவர் நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத் தருகிறார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக தூய பார்த்தலமேயு இயேசுவின் மீது கொண்ட அளவுகடந்த அன்பால், நற்செய்தி அறிவிப்பிற்காக தன்னுடைய உயிரையும் கொடுக்க முன்வருகிறார். "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்" என்ற ஆண்டவர் இயேசுவின் அழைப்பை ஏற்று அர்மேனியாவில் நற்செய்தி அறிவித்தார். அப்படி நற்செய்தி அறிவிக்கும்போது அர்மேனியா நாட்டு மன்னன் பொலிமியுஸ் நற்செய்தியால் தொடப்பட்டு, தூய பார்த்தலமேயுவிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார். ஆனால் இது பிடிக்காத மன்னனின் சகோதரன் அஸ்தியாஜெஸ் என்பவர் இவரை உயிரோடு தோலுரித்து, சிலுவையில் தலைகீழாக அறைந்து கொன்று போட்டான்.

நற்செய்தி அறிவிக்கின்றபோது புனிதர் அனுபவித்த துன்பத்தைப் போன்று நாமும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கலாம். ஆனால் கிறிஸ்துவின் அன்பு நம்மை எந்நாளும் காத்துக்கொள்ளும் என்பதில் நாம் நம்பிக்கை வைத்து வாழ வேண்டும்.

பவுலடியார் உரோமையருக்கு எழுதிய மடல் 8:35 ல் கூறுவார், "கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்ககூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்கமுடியும் என்பார். ஆம் கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம் காத்து வழிநடத்துகிறது என்பதை உணர்ந்தால் எவ்வகை சவாலையும் நாம் துணிவோடு எதிர்கொள்ளலாம்.

தூய பார்த்தலமேயுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளகூடிய இரண்டாவது பாடம் கள்ளம், கபடற்றவர்களாய் வாழ்வதுதான். ஆண்டவர் இயேசு இவரைக் குறித்து கள்ளம் கபடற்றவர் என்று சொன்னார் என்றால் நிச்சயம் இவர் குழந்தையைப் போன்று தூயவராக, தூய மனத்தினராக வாழ்ந்திருக்கவேண்டும். மத் 5:8 ல் வாசிக்கின்றோம், "தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்" என்று. ஆம் தூய மனத்தோரால்தான் கடவுளை முழுமையாகக் காண முடியும்.

மேலும் இங்கே கள்ளம் கபடற்ற உள்ளம் அல்லது தூய உள்ளம் என்பதை, பிறர் துன்பத்தைக் கண்டு இரங்கிடும் உள்ளம் என்பதாகவும் புரிந்துகொள்ளலாம். நற்செய்தியிலே ஆண்டவர் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்யும்போது ஒரு சிறுவன்தான் முதலில் மனமிரங்கி தன்னிடம் இருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொடுக்க முன்வருகிறான். அவன் மக்கள்மீது மனமிரங்கி இருக்கலாம். இதைபோன்று தூய பார்த்தலமேயுவும் புன்புறும் மக்களைக் கண்டு மனமிரங்கி உதவி இருக்கவேண்டும்.

ஒரு கற்பனைக் கதை. கணவன், மனைவி ஒரே ஒரு குழந்தை என்றிருந்த அழகான வீட்டிற்கு தந்தைவழி தாத்தா வந்தார். பேரனுடன் தங்கி இருந்து, தன் கடைசி நாட்களைக் கழிக்க ஆசைகொண்ட அவருக்கு கண்கள் சரியாகத் தெரியவில்லை. கைகளும் பொருட்களை எடுக்கையில் நடுக்கம் கொண்டன. அந்த அளவுக்கு முதுமையின் தாக்கத்துடன் அவர் இருந்தார்.

ஒருநாள் இரவுஉணவின்போது வீட்டில் எல்லாரும் ஒன்றாக, மேசையில் அமர்ந்து உணவு உட்கொள்ளும்போது தாத்தா கரண்டியை கையில் எடுக்கையில் கைதவறி கரண்டி கீழே விழுகிறது. பால் குடிக்க கோப்பையைப் பிடிக்கையில் கை நடுக்கத்தில், பால் மேசை விரிப்பில் சிந்தி விடுகிறது. அவர் உணவு உண்ணும் போதும் உணவும் கீழே சிந்துகிறது. இதனால் கணவனும், மனைவியும் எரிச்சல் அடைந்தனர். தொடர்ந்து தாத்தாவை பொறுத்துக் கொள்ள முடியாத அவர்கள், தங்களுடைய மேசையில் அவரை அமர வைக்காமல் ஓரமாய் அவருக்கென்று ஒரு தனி மேசையில் சாப்பிட வைத்தனர். அவர் சாப்பிடும் பாத்திரம் கீழே விழுந்து உடையாமல் இருக்க மரத்தால் ஆன பாத்திரங்களில் உணவு கொடுத்தனர்.

இப்படியாக நாட்கள் நகர்ந்தன. நடக்கும் அத்தனை விஷயங்களையும் பேரன் அமைதியாய் பார்த்துக்கொண்டே இருந்தான். எல்லாரும் ஒன்றாக அமர்ந்துச் சாப்பிட, தாத்தா மட்டும் தனி மேசையில் சாப்பிட்டு வந்தார். தான் ஒதுக்கப்பட்டு விட்டோம் என்ற ஏக்கம் அவர் கண்களில் தெரிந்தது.

ஒரு நாள் அந்த வீட்டுக்குழந்தை (தாத்தாவின் பேரன்) மரத்துண்டுகளை வைத்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த அவனுடைய தந்தை மகனிடம், "தம்பி என்ன விளையாடுறிங்க?" என்று அன்பாய் கேட்டார். அதற்கு குழந்தை, "நான் இந்த மரத்துண்டுகளை வைத்து 2 பாத்திரங்கள் செய்கிறேன்பா. நான் பெரியவன் ஆனதும் உங்களுக்கும், அம்மாவுக்கும் சாப்பிட கொடுக்க வேண்டுமல்லவா. அதற்குத் தான் இது" என்று ஒருபோடு போட்டது. தந்தையால் பேச முடியவில்லை. கண்கள் கண்ணீரில் ததும்பியது. தான் என்ன தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. குற்ற உணர்ச்சி மேலிட்டவராய் மறுநாளிலிருந்து தாத்தாவுக்கும் அவர்கள் அமரும் மேசையிலே உணவு பரிமாறப்பட்டது. பக்கத்திலேயே நின்று தாத்தா சாப்பிடும் வரை அவர்கள் கவனித்துக் கொண்டார்கள்.

குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள் நம்மைக் கூர்ந்து கவனிக்கிறார்கள்; கள்ளம் கபடற்ற தங்களது உள்ளத்தில் பிறரது துன்பத்தைக் கண்டு இரங்கும் மனத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆகையால் தூய குழந்தைகளைப் போன்று; புனித பார்த்தலமேயுவைப் போன்று கள்ளம் கபடரற்ற மனத்தினராய், பிறருக்கு இரங்கும் உள்ளத்தினராய் வாழ்ந்து, இயேசுவின் நற்செய்தியை அறிவிப்போம். இறையருள் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
திருத்தூதரான தூய பர்த்தலமேயு

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு தூய பர்த்தலமேயு அர்மேனியா நாட்டிற்கு வேதம் போதிக்கச் சென்றார். அங்கே இவருடைய போதனையைக் கேட்ட மன்னர் போலிம்நியுசும், அரசியும் கிறிஸ்தவர்களாக மதம்மாறினார்கள். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அரசருடைய சகோதரன் அச்டிஎசஸ் (Astyages) புனிதரை உயிரோடு தோலுரித்துக் கொலைசெய்தான். தூய பர்த்தலமேயு ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

இன்று திருச்சபையானது தூய பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடுகின்றது. விவிலியத்தில் இவரைக் குறித்த செய்திகள் 'திருதூதர்களின் அட்டவணை'யைத் தவிர்த்து வேறு எங்கும் இல்லை. யோவான் நற்செய்தி முதலாம் அதிகாரத்தில் வரும் நத்தனியில் இவர்தான் என்று பெரும்பாலனவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இவர் கானா ஊரைச் சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.

இவர் தூய பிலிப்போடு அதிகமாக தொடர்புபடுத்திப் பேசப்படுகிறார். ஒருவேளை பிலிப்பும், இவரும் நண்பர்களாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

திருதூதரான தூய பர்த்தலமேயு ஆண்டவரின் திருச்சட்டத்தை முழுமையாக கற்றுத் தெரிந்தவராக இருக்கிறார். எப்படி என்றால் அத்திமரத்தின் கீழ் உம்மைக் கண்டேன் என்று ஆண்டவர் இயேசு இவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அத்திமரத்தின் கீழ் இருப்பது என்பது இறைவனுடைய வார்த்தையை, அவருடைய திருச்சட்டத்தைக் குறித்து தியானிப்பதற்குச் சமமாகும். தூய பர்த்தலமேயு ஆண்டவரின் திருச்சட்டத்தைக் குறித்து தியானித்தார், அவருடைய வருகைக்காக ஆவலோடு காத்திருந்தார்.

மேலும் தூய பர்த்தலமேயு விவிலியத்தில் கள்ளம் கபடற்றவராக அறியப்படுகின்றார். பிலிப்பு தூய பர்த்தலமேயுவை இயேசுவிடம் அழைத்துக்கொண்டு செல்லும்போது, இவரைப் பார்த்த இயேசு, "இவர் உண்மையான இஸ்ரேயலர், கபடற்றவர்" என்கிறார். நம்முடைய உள்ளுணர்வுகளையும், எண்ணங்களையும் அறியும் ஆண்டவர் நாம் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து வைத்திருப்பார். அந்த வகையில் இயேசுவே தூய பர்த்தலமேயுவை கள்ளம் கபடற்றவர் என்று அழைக்கிறார் என்றால், அவர் எப்படிப்பட்டவராக இருந்திருப்பவர் நாம் இங்கே புரிந்துகொள்ளவேண்டும்.

அடுத்ததாக தூய பர்த்தலமேயு உண்மையை திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்ளகூடியவராக இருக்கிறார். பிலிப்பு இவரிடம் "இறைவாக்குகளும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்" என்று சொல்கிறபோது, இவர், "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? என்று கேட்கிறார். உடனே பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று சொல்கிறபோது அவரும் அவரோடு சென்று இயேசுவைக் கண்டார், "ரபி, நீரே இறைமகன்; நீரே இஸ்ரேயல் மக்களின் அரசர்" என்று தன்னுடைய விசுவாச அறிக்கையை வெளிப்படுத்துகிறார்.

'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று சொன்னவர், இயேசுவைக் கண்டதும், "நீரே இறைமகன், இஸ்ரேயல் மக்களின் அரசர்" என்று சொல்கிறார் என்றால், அவர் உண்மையை திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்கிறார் என்றே பொருள்படுகிறது.

பல நேரங்களில் நாம் யாரையும், எதையும் திறந்த மனநிலையோடு பார்ப்பதில்லை. இங்குள்ளவர்கள் இப்படித்தான், அவர் அப்படித்தான் என்று முன்சார்பு எண்ணத்தோடு வாழ்ந்து வருகின்றோம். இது நிறைய நேரங்களில் பொய்யாகவும் இருக்கின்றது. தூய பர்த்தலமேயு /நத்தனியேல் நாசறேத்தைப் பற்றிய தவறான பார்வையைக் கொண்டிருந்தாலும், பின்னர் தன்னுடைய பார்வையை மாற்றிக்கொண்டார். நாமும் நம்முடைய முன்சார்பு எண்ணத்தை மாற்றிக்கொண்டு, உண்மையை திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெறவேண்டும்.

கண்ணதாசன் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "இந்த உலகத்தை குழந்தையின் கண்கொண்டு பார்க்கவேண்டும்" என்று. ஆம், குழந்தைகள் இருப்பதை அப்படியே பார்க்கும். அதற்கு யாரைப்பற்றியும் எந்தவிதமான முன்சார்பு எண்ணமும் இருக்காது. அது உண்மையைத் திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படி ஏற்றுக்கொண்டு வாழும்போது அது நமக்கு மிகப்பெரியாய் ஆசிர்வாதமாக இருக்கும்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்வு. அமெரிக்காவில் உள்ள கடற்கரை நகரான அட்லாண்டிக் அடிக்கடி இயற்கைச் சீற்றத்திற்கும், புயலுக்கும் உள்ளாவதுண்டு. புயல் எந்த நேரத்தில் வரும், எப்படித் தாக்கும் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.

இந்த நேரத்தில் அந்த நகரில் இருந்த ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதர் 'இயற்கைச் சீற்றத்தை காட்டும் பாராமீட்டர் கருவியை பெரும் பணம் கொடுத்து, அந்நகருக்கு இலவசமாக வாங்கி வைத்தார். அவர் அந்த கருவியை முதல் முதலாகத் திறந்து பார்த்தபோது, அந்தக் கருவியில் இருந்த முள்ளானது இயற்கைச் சீற்றம் வருவதற்கான எச்சரிக்கையை விடுக்கும் பகுதியில் இருந்தது. உடனே அவர் அது எப்படி ஒரு கருவி தொடக்கத்திலே எச்சரிக்கையை காட்டும். இந்த கருவியில் ஏதோ கோளாறு இருக்கும் என நினைத்து, அந்த கருவியை உறபத்தி செய்துதந்த நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதி, அதை அஞ்சல் நிலையத்தில் போட்டுவிட்டு வந்தார்.

வந்தவருக்கு ஆச்சரியம். ஏனென்றால் அங்கே கருவியும் இல்லை. ஒன்றும் இல்லை. புயலானது கரையைக் கடந்து வந்து, எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய்விட்டது. அவர் உண்மையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால் அவர் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்தார்.

தூய பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடும் நாம் உண்மையை திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்வோம். கபடற்றவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.



Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
திருத்தூதரான தூய பர்த்தலமேயு

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு தூய பர்த்தலமேயு அர்மேனியா நாட்டிற்கு வேதம் போதிக்கச் சென்றார். அங்கே இவருடைய போதனையைக் கேட்ட மன்னர் போலிம்நியுசும், அரசியும் கிறிஸ்தவர்களாக மதம்மாறினார்கள். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அரசருடைய சகோதரன் அச்டிஎசஸ் (Astyages) புனிதரை உயிரோடு தோலுரித்துக் கொலைசெய்தான். தூய பர்த்தலமேயு ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

இன்று திருச்சபையானது தூய பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடுகின்றது. விவிலியத்தில் இவரைக் குறித்த செய்திகள் 'திருதூதர்களின் அட்டவணை'யைத் தவிர்த்து வேறு எங்கும் இல்லை. யோவான் நற்செய்தி முதலாம் அதிகாரத்தில் வரும் நத்தனியில் இவர்தான் என்று பெரும்பாலனவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இவர் கானா ஊரைச் சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.

இவர் தூய பிலிப்போடு அதிகமாக தொடர்புபடுத்திப் பேசப்படுகிறார். ஒருவேளை பிலிப்பும், இவரும் நண்பர்களாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

திருதூதரான தூய பர்த்தலமேயு ஆண்டவரின் திருச்சட்டத்தை முழுமையாக கற்றுத் தெரிந்தவராக இருக்கிறார். எப்படி என்றால் அத்திமரத்தின் கீழ் உம்மைக் கண்டேன் என்று ஆண்டவர் இயேசு இவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அத்திமரத்தின் கீழ் இருப்பது என்பது இறைவனுடைய வார்த்தையை, அவருடைய திருச்சட்டத்தைக் குறித்து தியானிப்பதற்குச் சமமாகும். தூய பர்த்தலமேயு ஆண்டவரின் திருச்சட்டத்தைக் குறித்து தியானித்தார், அவருடைய வருகைக்காக ஆவலோடு காத்திருந்தார்.

மேலும் தூய பர்த்தலமேயு விவிலியத்தில் கள்ளம் கபடற்றவராக அறியப்படுகின்றார். பிலிப்பு தூய பர்த்தலமேயுவை இயேசுவிடம் அழைத்துக்கொண்டு செல்லும்போது, இவரைப் பார்த்த இயேசு, "இவர் உண்மையான இஸ்ரேயலர், கபடற்றவர்" என்கிறார். நம்முடைய உள்ளுணர்வுகளையும், எண்ணங்களையும் அறியும் ஆண்டவர் நாம் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து வைத்திருப்பார். அந்த வகையில் இயேசுவே தூய பர்த்தலமேயுவை கள்ளம் கபடற்றவர் என்று அழைக்கிறார் என்றால், அவர் எப்படிப்பட்டவராக இருந்திருப்பவர் நாம் இங்கே புரிந்துகொள்ளவேண்டும்.

அடுத்ததாக தூய பர்த்தலமேயு உண்மையை திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்ளகூடியவராக இருக்கிறார். பிலிப்பு இவரிடம் "இறைவாக்குகளும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்" என்று சொல்கிறபோது, இவர், "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? என்று கேட்கிறார். உடனே பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று சொல்கிறபோது அவரும் அவரோடு சென்று இயேசுவைக் கண்டார், "ரபி, நீரே இறைமகன்; நீரே இஸ்ரேயல் மக்களின் அரசர்" என்று தன்னுடைய விசுவாச அறிக்கையை வெளிப்படுத்துகிறார்.

'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று சொன்னவர், இயேசுவைக் கண்டதும், "நீரே இறைமகன், இஸ்ரேயல் மக்களின் அரசர்" என்று சொல்கிறார் என்றால், அவர் உண்மையை திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்கிறார் என்றே பொருள்படுகிறது.

பல நேரங்களில் நாம் யாரையும், எதையும் திறந்த மனநிலையோடு பார்ப்பதில்லை. இங்குள்ளவர்கள் இப்படித்தான், அவர் அப்படித்தான் என்று முன்சார்பு எண்ணத்தோடு வாழ்ந்து வருகின்றோம். இது நிறைய நேரங்களில் பொய்யாகவும் இருக்கின்றது. தூய பர்த்தலமேயு /நத்தனியேல் நாசறேத்தைப் பற்றிய தவறான பார்வையைக் கொண்டிருந்தாலும், பின்னர் தன்னுடைய பார்வையை மாற்றிக்கொண்டார். நாமும் நம்முடைய முன்சார்பு எண்ணத்தை மாற்றிக்கொண்டு, உண்மையை திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெறவேண்டும்.

கண்ணதாசன் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "இந்த உலகத்தை குழந்தையின் கண்கொண்டு பார்க்கவேண்டும்" என்று. ஆம், குழந்தைகள் இருப்பதை அப்படியே பார்க்கும். அதற்கு யாரைப்பற்றியும் எந்தவிதமான முன்சார்பு எண்ணமும் இருக்காது. அது உண்மையைத் திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படி ஏற்றுக்கொண்டு வாழும்போது அது நமக்கு மிகப்பெரியாய் ஆசிர்வாதமாக இருக்கும்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்வு. அமெரிக்காவில் உள்ள கடற்கரை நகரான அட்லாண்டிக் அடிக்கடி இயற்கைச் சீற்றத்திற்கும், புயலுக்கும் உள்ளாவதுண்டு. புயல் எந்த நேரத்தில் வரும், எப்படித் தாக்கும் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.

இந்த நேரத்தில் அந்த நகரில் இருந்த ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதர் 'இயற்கைச் சீற்றத்தை காட்டும் பாராமீட்டர் கருவியை பெரும் பணம் கொடுத்து, அந்நகருக்கு இலவசமாக வாங்கி வைத்தார். அவர் அந்த கருவியை முதல் முதலாகத் திறந்து பார்த்தபோது, அந்தக் கருவியில் இருந்த முள்ளானது இயற்கைச் சீற்றம் வருவதற்கான எச்சரிக்கையை விடுக்கும் பகுதியில் இருந்தது. உடனே அவர் அது எப்படி ஒரு கருவி தொடக்கத்திலே எச்சரிக்கையை காட்டும். இந்த கருவியில் ஏதோ கோளாறு இருக்கும் என நினைத்து, அந்த கருவியை உறபத்தி செய்துதந்த நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதி, அதை அஞ்சல் நிலையத்தில் போட்டுவிட்டு வந்தார்.

வந்தவருக்கு ஆச்சரியம். ஏனென்றால் அங்கே கருவியும் இல்லை. ஒன்றும் இல்லை. புயலானது கரையைக் கடந்து வந்து, எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய்விட்டது. அவர் உண்மையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால் அவர் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்தார்.

தூய பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடும் நாம் உண்மையை திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்வோம். கபடற்றவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
திருத்தூதர் பிலிப்புவின் நண்பரான இவரை நத்தனியேல் என அழைக்கிறார் நற்செய்தியாளர் யோவான். பர்த்தலமேயு என்ற அரமேய வார்த்தைக்கு 'தலமேய் என்பவரின் மகன்' என்பது பொருள். இது இவருடைய அடைமொழி அல்லது குடும்பப்பெயராக இருந்திருக்கும். நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவான் 1:45-51) இவரை நாம் நத்தனியேல் என்றே அறியப்பெறுகிறோம். 'நத்தனியேல்' என்ற எபிரேய வார்த்தைக்கு 'கடவுள் கொடுக்கிறார்' அல்லது 'கடவுளின் கொடை' அல்லது 'கடவுள் நமக்குக் கொடை' என்று பொருள் கொள்ளலாம்.

நாளைய நற்செய்தி வாசகம் பிலிப்புவுக்கும் நத்தனியேலுக்கும், நத்தனியேலுக்கும் இயேசுவுக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல்.

காட்சி 1: பிலிப்பு, நத்தனியேல். இடம். அத்திமரத்திற்கு அடியில். நேரம். நண்பகல்.

'நாங்கள் கண்டோம்!' என்று நாசரேத்தூர் இயேசுவைப் பற்றி தன் நண்பருக்கு பிலிப்பு அறிவிக்கின்றார். 'நாசரேத்தூர்ல இருந்து எப்புடிப்பா நல்லது வரும்?' என கிண்டல் செய்கிறார் நத்தனியேல். 'வா! பார்!' - என தன் நண்பரை இயேசுவிடம் அழைத்து வருகின்றார்.

காட்சி 2: நத்தனியேல், (பிலிப்பு), இயேசு. இடம். பாதசாரிகளின் நிழல்குடை. நேரம். மாலை.

ஏற்கனவே ஒருசிலரோடு பயணியர் நிழற்குடையின்கீழ் அமர்ந்திருக்கும் இயேசு, நத்தனியேலின் வருகையைப் பார்த்து, 'இதோ! கபடற்ற இஸ்ரயேலர் வருகிறார்!' என்கிறார். இயேசு சொல்வதைக் கேட்டுவிட்டு நத்தனியேல், 'என்னை எப்படி உமக்குத் தெரியும்?' என, இயேசுவோ, 'நீ அத்திமரத்தின்கீழ் இருக்கும்போதே நான் உன்னைக் கண்டேன்!'. 'அப்படியா! ரபி! நீரே இறைமகன்! நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்!' 'என்னப்பா! இதுக்கே இப்படி ஆச்சர்யப்படுற! இன்னும் பெரியவற்றை நீ காண்பாய்!'

இந்த உரையாடலில் 'காணுதல்', 'அத்திமரம்', 'இஸ்ரயேலர்', 'இறைமகன்', 'ரபி' என நிறைய உருவகங்கள் இருக்கின்றன. அவற்றை ஆராய்வதை விடுத்து, இந்த உரையாடலைப் படித்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணங்களை மட்டும் நான் பதிவு செய்ய விழைகிறேன்.

நான் என் நண்பரிடம் என்ன பேசுகிறேன்?

பிலிப்பு மற்றும் நத்தனியேல் என்ற நண்பர்களுக்கு இடையேயான உரையாடல் இயேசுவைப் பற்றி அல்லது 'மக்கள் எதிர்பார்த்த மெசியா' பற்றி இருக்கின்றது. இரண்டு விடயம் இங்கு: ஒன்று, இயேசுவைச் சந்தித்த ஒருவரால் இயேசுவைப் பற்றி மட்டும்தான் பேச முடியும். அந்த அளவுக்கு இயேசுவின் பிரசன்னம் அடுத்தவரை நிரப்பிவிடுகிறது. ஆக, இன்று நான் இயேசுவை நற்கருணையில் அல்லது இறைவார்த்தையில் அல்லது என் அயலாரில் பார்க்கிறேன் என்றால், நான் எந்த அளவுக்கு இயேசுவால் நிரப்பப்படுகிறேன். இரண்டு, நான் இயேசுவைப் பற்றி தயக்கம் இல்லாமல் என் நண்பர்களிடம் பேசுகிறேனா? அல்லது என் பேசுபொருள் என்னவாக இருக்கின்றது?

நான் அகத்தைக் காண்கிறேனா, அல்லது புறத்தைக் காண்கிறேனா?

இயேசுவோட வார்த்தையில் உள்ள நேர்முக ஆற்றலைப் (positive energy) பார்த்தீர்களா! நத்தனியேலைக் கண்டவுடன், 'இவரே கபடற்ற இஸ்ரயேலர்!' என்கிறார். இயேசுவும் கபடற்றவர்தான், இஸ்ரயேலர்தான். ஆனால், இவ்வளவு பெரிய வார்த்தைகளை தன்னைப் பற்றிச் சொல்வதற்குப் பயன்படுத்தாமல் தன்னைத் தேடிவரும் ஒருவரைப் பற்றிச் சொல்லப் பயன்படுத்துகின்றார். அது எப்படி இயேசுவால சொல்ல முடிஞ்சது? 'அத்திமரத்தின் கீழ் உன்னைக் கண்டேன்' என்று நத்தனியேலைத் தெரிந்த இயேசுவுக்கு, 'நாசரேத்தூரிலிருந்து நல்லது வரக்கூடுமா?' என்ற நத்தனியேலின் கிண்டல் அல்லது முற்சார்பு எண்ணம் (prejudice) தெரிந்திருக்கும்தானே! அப்படியிருந்தும் எப்படி மனதார பாரட்டுகின்றார். மெய்யியலில் essence மற்றும் accident என்று பொருளுக்கு இரண்டு கூறுகள் இருப்பதாகச் சொல்வார்கள். Accident மாறலாம். ஆனால் essence மாறுவதில்லை. இயேசு அப்படித்தான் நத்தனியேல் பேசிய வார்த்தைகளைப் (accident) பொருட்படுத்தவில்லை. அவரின் அகத்தின் இருக்கும் நபரை (essence) மட்டுமே பார்க்கின்றார். இன்று நான் மற்றவரிடத்தில் பார்ப்பது என்ன? Essence அல்லது accident?

இயேசு எனக்கு யார்?

'யோசேப்பின் மகன் இயேசு' என்று பிலிப்பு சொன்னாலும், நத்தனியேல் இயேசுவிடம், 'நீரே இறைமகன்! நீரே இஸ்ரயேலின் அரசர்' என அறிக்கையிடுகின்றார். நாசரேத்தூர்க்காரர்தான! என்று நையாண்டி செய்தவர் எப்படி இவ்வளவு பெரிய அறிக்கை செய்கின்றார். விவிலிய ஆராய்ச்சியில் சொல்வார்கள். இனி வரும் யோவான் நற்செய்திப் பகுதி அனைத்தும் இந்த நத்தனியேலின் அறிக்கையின் விளக்கவுரைதான் என்று. இயேசு எனக்கு யார்? ஒரு பெயரா? அல்லது ஒரு கருத்தியலா? அல்லது ஒரு வரலாற்று நபரா? அல்லது என்மேல்கொண்ட அன்பிற்காக தன்னையே சிலுவையில் கையளித்து, உயிர்த்து, இன்றும் என்னுடன் உடன்வருபவரா? உள்ளத்தின் மௌனத்தில் ஒவ்வொருவரும் இதற்கு விடைகாணுதல் வேண்டும்.
--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!