Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        17  ஆகஸ்டு 2018  
                                                           பொதுக்காலம் 19ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
என் மாட்சி உன்மேல் பட, உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, நீயோ வேசித்தனம் செய்தாய்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 16: 1-15,60,63

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! எருசலேமுக்கு அதன் அருவருப்புகளைச் சுட்டிக் காட்டு. நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் எருசலேமுக்குக் கூறுவது இதுவே: நீ தோன்றியதும் பிறந்ததும் கானான் நாட்டிலே, உன் தந்தை ஓர் எமோரியன். உன் தாய் ஓர் இத்தியள்.

நீ பிறந்த வரலாறு இதுவே: நீ பிறந்த அன்று உன் கொப்பூழ்க் கொடி அறுக்கப்படவில்லை. நீ நீராட்டப்பட்டுத் தூய்மை ஆக்கப்படவில்லை; உப்பு நீரால் கழுவப்படவில்லை; துணிகளால் சுற்றப்படவும் இல்லை; உன்னை இரக்கத்துடன் கண்ணோக்கி உனக்காக வருந்தி, இவற்றுள் ஒன்றையேனும் உனக்குச் செய்வாரில்லை. ஆனால் நீ திறந்த வெளியில் எறியப்பட்டாய். ஏனெனில் நீ பிறந்த நாளிலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டாய். அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னருகில் வந்து உன் இரத்தத்தில் நீ புரள்வதைக் கண்டு, இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, "வாழ்ந்திடு" என்றேன்.

ஆம், இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, "வாழ்ந்திடு" என்றேன். உன்னை வயல்வெளியில் வளரும் பயிர் போல் உருவாக்கினேன். நீ வளர்ந்து பருவம் எய்தி அழகிய மங்கையானாய். உன் கொங்கைகள் உருப்பெற்றன; உன் கூந்தலும் நீண்டு வளர்ந்தது. ஆயினும் நீ ஆடையின்றித் திறந்த மேனியளாய் நின்றாய். அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னை நோக்கினேன். அப்போது நீ காதற் பருவத்தில் இருந்தாய். நான் என் ஆடையை உன்மேல் விரித்து உன் திறந்த மேனியை மூடினேன். உனக்கு உறுதிமொழி தந்து, உன்னோடு உடன்படிக்கை செய்தேன். நீயும் என்னுடையவள் ஆனாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் உன்னை நீராட்டி, உன் மேலிருந்த இரத்தத்தைக் கழுவித் துடைத்து, உனக்கு எண்ணெய் பூசினேன். பூப் பின்னல் உடையால் உன்னை உடுத்தி, தோல் காலணிகளை உனக்கு மாட்டி, மெல்லிய துகிலை உனக்கு அணிவித்து, நார்ப் பட்டால் உன்னைப் போர்த்தினேன். அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன்; கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன். மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன். பொன்னாலும், வெள்ளியாலும், நீ அணி செய்யப்பட்டாய். நார்ப் பட்டும் மெல்லிய துகிலும், பூப் பின்னல் ஆடையும் உன் உடைகள் ஆயின. மாவும், தேனும், எண்ணெயும் உன் உணவாயின. நீ மிக மிக அழகு வாய்ந்தவளாகி, அரச தகுதி பெற்றாய்.

உன் அழகின் காரணமாக உன் புகழ் வேற்றினத்தாரிடையே பரவிற்று. என் மாட்சி உன்மேல்பட உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நீயோ உன் அழகில் நம்பிக்கை வைத்து, உன் புகழைப் பணயமாக வைத்து, விலைமகளாகி, வருவோர் போவோரிடம் எல்லாம் வேசித்தனம் செய்தாய்.

ஆயினும் உன் இளமையின் நாள்களில் உன்னோடு செய்த உடன் படிக்கையை நினைவுகூர்ந்து, என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்.

நீ செய்ததை எல்லாம் நான் மறைத்திடும்போது, நீ அவற்றை எல்லாம் நினைத்து வெட்கி, இழிவு மிகுதியினால் உன் வாயை ஒருபோதும் திறக்க மாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

அல்லது

குறுகிய வாசகம்

நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்துகொள்வாய்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 16: 59-63

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: கொடுத்த வாக்கை நீ மீறி, உடன்படிக்கையை முறித்துவிட்டாய். நீ செய்தது போலவே நானும் உனக்குச் செய்வேன்.

ஆயினும் உன் இளமையின் நாள்களில் உன்னோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன். உன் தமக்கைகளையும் தங்கைகளையும் நான் உனக்குப் புதல்வியராகத் தருவேன்; நான் உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை முன்னிட்டு அல்லாமலே தந்திடுவேன். அவர்களை நீ பெற்றுக் கொள்ளும்பொழுது உன் நடத்தையை நினைத்து வெட்கமுறுவாய். உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன்.

அப்போது நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்துகொள்வாய். நீ செய்ததை எல்லாம் நான் மறைத்திடும்போது, நீ அவற்றை எல்லாம் நினைத்து வெட்கி, இழிவு மிகுதியினால் உன் வாயை ஒருபோதும் திறக்க மாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - எசா 12: 2-3. 4bcd. 5-6 (பல்லவி: 1c)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் சினம் தணிந்து எனக்கு ஆறுதல் அளித்துள்ளீர்.

2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். பல்லவி

4bஉன ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. 6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
1 தெச 2: 13

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிட மோசே அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12

அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், "ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?" என்று கேட்டனர்.

அவர் மறுமொழியாக, "படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் "ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்" என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?" என்று கேட்டார்.

மேலும் அவர், "இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து, "அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?" என்றார்கள். அதற்கு அவர், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை. பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, "கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது" என்றார்கள்.

அதற்கு அவர், "அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர்"

இருபதாம் நூற்றாண்டில், பஞ்சாப் மாநிலத்தில் தோன்றிய நற்செய்திப் பணியாளர்தான் சாது சுந்தர் சிங் என்பவர். இவர் பிறப்பால் சீக்கிய சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் ஆண்டவர் இயேசுவின் போதனையால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவராக மதம்மாறியவர்.

இவர் கிறிஸ்தவராக மதம்மாறியதும் இவருடைய குடும்பத்திலிருந்து அதிலும் குறிப்பாக இவருடைய தந்தையிடமிருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. உடனே அவர் சுந்தர் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்"மகனே! நீ கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிவிட்டாய் என்று கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். உண்மையிலே நீ உன் தாய் தந்தையிடம் அன்புகொண்டிருக்கின்றாய் என்றால், சீக்கிய மதத்திற்குத் திரும்பி, நான் காட்டும் பெண்ணை மணந்துகொள். அப்படியில்லை என்றால் மாதாமாதம் உனக்கு நான் அனுப்பக்கூடிய பணத்தையும் அனுப்ப மாட்டேன், சொத்தில் உனக்குப் பங்கும் கிடையாது" என்று எழுதினார்.

இக்கடிதம் கிடைத்ததும் சாது சுந்தர் சிங்,"தந்தையே! நீங்கள் எழுதிய கடிதம் எனக்குக் கிடைத்தது. நான் உங்களை அன்பு செய்யவில்லை என்றோ, மதிக்கவில்லை என்றோ நீங்கள் நினைக்கவேண்டாம். நான் உங்களை அன்பு செய்கின்றேன், மதிக்கின்றேன். மேலும் நீங்கள் சொன்னது போன்று, நீங்கள் சுட்டிக்காட்டும் பெண்ணை என்னால் மணக்க முடியாது. ஏனென்றால் நான் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கப் போகின்றேன். அப்பணியைச் செய்ய திருமணம் பெரும் தடையாக இருக்கும். அதற்காக நீங்கள் எனக்கு மாதாமாதம் அனுப்பக்கூடிய பணத்தை அனுப்பாவிட்டாலும் சொத்தில் பங்கு தராது போனாலும் பரவாவில்லை" என்று எழுதினார்.

கிறிஸ்துவுக்காக, விண்ணரசுக்காக திருமணம் செய்துகொள்ளாமல் அண்ணகராக இருந்த சாது சுந்தர் சிங் நமது கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவுக்கும் பரிசேயருக்கும் இடையே திருமணம் தொடர்ந்து விவாதம் நடைபெறுகின்றது. அந்த விவாதத்தின் இறுதியில் இயேசுவோடு இருந்த சீடர்கள் அவரிடம்,"கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது" என்கிறார்கள். அதற்கு இயேசு அவர்களிடம்,"அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து, "சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதர்களால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்கு தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர்" என்கின்றார்.

இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளில் "சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர் என்பதை மட்டும் நமது சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

நாம் வாழும் இப்பூவுலகில் பலர் தான் உண்டு, தன் சந்தோசம் உண்டு, தன்னுடைய குடும்பம் என்று வாழ்வதைப் பார்க்கின்றோம். இவர்களைப் பற்றி நாம் நம்முடைய கருத்தில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக எல்லாரும் இன்புற்றிருக்கவேண்டும் என்பதற்காக தங்களுடைய கஷ்ட நஷ்டங்களை எல்லாம் பாராது, தங்களது உடல் பொருள் ஆவி அத்தனையும் இந்த சமூகத்திற்காகவும் இறைவனின் மக்களுக்காகவும் அர்ப்பணித்து வாழ்கின்ற அந்த "மாமனிதர்களை நாம் கட்டாயம் கருத்தில் கொள்ளவேண்டும். இவர்கள் மக்களுக்காக, இறைவனுக்காக தங்களை "அண்ணகர்களாக்கிக் கொண்டவர்கள், திருமணம் செய்துகொள்ளாமலே இருப்பவர்கள். இப்படிப்பட்டவர்களைத் தான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு குறிப்பிடுகின்றார்.

ஒருசிலர் உடல் குறைபாடுகளால் மண உறவில் ஈடுபட முடியாவிட்டாலும், இறைப்பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட, அண்ணகர்களாக்கிக் கொண்ட குருக்கள், கன்னியர்கள் யாவரும் மண உறவுக்குத் தகுதியானவர்கள் என்றாலும், அவர்கள் விண்ணரசின் பொருட்டு தங்களை அண்ணகர்காளாக்கிக் கொண்டவர்கள். அத்தகையவர்களுக்கு நாம் தகுந்த மதிப்பளிப்பதும் அவர்கள் தங்களுடைய பணியைச் செய்வதற்கு நம்மாலான உதவிகளைச் செய்வதும் கூட சிறப்பான ஒரு சேவையாகும்.

இன்றைக்கு விண்ணரசின் பொருட்டு தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட அருட்பணியாளர்களும் அருட்கன்னியர்களும் சந்திக்கக்கூடிய சவால்கள் ஏராளம். ஒருபக்கம் மதவாத அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல்களைச் சந்திக்கின்றார்கள் என்றால், இன்னொரு பக்கம் சொந்த மக்களிடமிருந்தே பல்வேறு விதமான எதிர்ப்புகளையும் இன்னல்களையும் சந்திக்கின்றார்கள். இத்தகைய சூழலில் நாம் அவர்களுக்குக் ஆறுதலாக இருப்பதே நல்லது.

ஆகவே, விண்ணரசின் பொருட்டு தங்களையே அண்ணகர்களாக்கிக் கொண்ட, இறையடியார்களுக்கு நாம் உறுதுணையாக இருப்போம். அவர்கள் தங்கள் பணியைச் செய்ய நம்மால் இயன்றதைச் செய்வோம். எப்போதும் இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இறைவன் புரியும் அற்புதம்

பத்துக் கட்டளைகள் (Ten Commendments), அரசருக்கெல்லாம் அரசர் (The King of Kings) என்ற இரண்டு ஆங்கிலப் படங்களைத் தயாரித்தவர் Cecil B. De Mille என்பவர். அவர் மரணப் படுக்கையில் கிடந்தபோது தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததாக நாட்குறிப்பில் எழுதிய ஒரு நிகழ்ச்சி.

ஒருநாள் அவர் ஓர் ஆற்றங்கரையோரம் இருந்த ஒரு மரத்திற்குக் கீழே படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது கருநிறத்தில் இருந்த ஒரு வண்டானது அங்கும், இங்கும் அலைந்துகொண்டிருப்பதைக் கண்டார். அது ஆற்றின் நீர்பரப்பில் மூழ்குவதும், எழுவதும் பின்னர் அவ்விடத்திலிருந்து மேலே பறப்பதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த வண்டானது மேலே பறந்தபோது வெப்ப மிகுதியால் அப்படியே கருகிக் கீழே விழுந்தது. அது கோடைகாலம்.

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த செசில் இந்த வண்டின் வாழ்வு அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் சிறுது நேரத்தில் அங்கே ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. ஆம், கருகிக் கீழே விழுந்த வண்டிலிருந்து ஒரு சிறிய வண்ணத்துப் பூச்சி உடலெல்லாம் வண்ணம் பூசியது போல் மேலே எழுந்து வந்தது. இதைப் பார்த்த அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியில்லை. ஒரு சாதாரண வண்டிலேயே கடவுள் இவ்வளவு அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்றால் மனிதர்களில் எவ்வளவு அற்புதங்களை நிகழ்த்தியிருப்பார் என்று அவர் சிந்திக்கத் தொடங்கினார்.

கடவுளின் கைவண்ணமும், அற்புதமும் எங்கும் நிறைந்து இருக்கிறது. அது படைப்புப் பொருட்களில் மட்டுமல்ல, படைப்பில் மணிமகுடமாக இருக்கும் மனிதரிடத்திலும் அதிகமாக விளங்குகின்றது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு ஆற்றும் அற்புதம்/ புதுமை/ அரும் அடையாளம் ஒன்றைத்தான் வாசிக்கின்றோம். இயேசு செய்யும் இந்த அரும் அடையாளம் நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தியில் இயேசு ஓய்வுநாளின் போது தொழுகைக்கூடத்திற்குச் சென்று, அங்கே கற்பித்துக் கொண்டிருக்கிறார். அப்போது பேய்பிடித்த ஒருவர் இயேசுவிடம், "ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்?" என்று கத்தத் தொடங்குகிறது. உடனே இயேசு அந்த பேயைப் பார்த்து, "வாயை மூடு, இவரைவிட்டு வெளியே போ" என்று அதட்டுகிறார். உடனே பேய் அவரைவிட்டு வெளியே போகிறது.

மனிதரிடத்தில் இருந்த தீய ஆவியை இயேசு விரட்டி அடிக்கிறார் என்றால் அவர் எத்தகைய வல்லமைக் கொண்டிருந்திருப்பார் என்பதை நாம் இங்கே புரிந்துகொள்ளவேண்டும். மத்தேயு நற்செய்தி 28:18 ல் வாசிக்கின்றோம், "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு (இயேசுவுக்கு) அருளப்பட்டிருக்கிறது" என்று. ஆம், இயேசு தனக்குக் கொடுப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு வாழ்வளித்தார். பாவத்தின் பிடியிலும், சாவின் பிடியிலும் இருந்த மக்களுக்கு விடுதலை அளித்தார்.

அடுத்ததாக இயேசு புரியும் இந்த அற்புதச் செயல் மெசியா இந்த உலகிற்கு வந்துவிட்டார் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது. எசாயாப் புத்தகம் 35:5 ல் வாசிக்கின்றோம், "அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்; குள்ளநரி தங்கும் வளைகள் எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும்" என்று. ஆம், மெசியா இந்த உலகிற்கு வருகின்றபோது இதுவும் இதுபோன்ற செயல்களும் நடைபெறும்.

இயேசு பேய்பிடித்த மனிதனைக் குணப்படுத்தியதன் வழியாக இந்த உலகில் மெசியாவின் வருகை நிகழ்ந்துவிட்டது என்பதை அறிவிக்கின்றார்.

இயேசுவின் சீடர்களாகிய நாமும் அவர்விட்டுச் சென்ற பணியைத் தொடங்குவதுதான் சிறப்பான ஒரு காரியமாக இருக்கும். மாற்கு நற்செய்தி 3:14 ல் வாசிக்கின்றோம், "தம்மோடு இருக்கவும், நற்செய்தியை அறிவிக்கவும், பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும்" அவர் சீடர்களைத் தேர்ந்தெடுத்தார் என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும் சமுகத்தில் இருக்கும் பல்வேறுவகைப்பட்ட பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கிறோம். அதனைப் பயன்படுத்தி நாம் பேய்களை ஒட்டவேண்டும்.

எனவே, இயேசுவின் சீடர்களாகிய நாம் இயேசுவுக்கு இருக்கும் வல்லமையை உணர்ந்து கொண்டு, நாமும் அவரிடமிருந்து பெற்ற வல்லமையின் வழியாக சமூகத்தில் இருக்கும் பல்வேறுபட்ட பேய்களை ஓட்டுவோம். இறைவனுக்கு உகந்த நல்ல வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.



Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்

அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டினும், அவருடைய மனைவியும் திருமண வாழ்வின் பொன்விழாவைக் கொண்டாடினார்கள். அந்த விழாவிற்கு அவருடைய நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என எல்லாரும் வந்திருந்தார்கள்.

அப்போது அவரிடத்தில் ஒரு பத்திரிக்கையாளர், "திருமண வாழ்வில் ஐம்பது ஆண்டுகள் நிறைவு விழாவைக் கொண்டாடுகிறீர்கள். உங்களது திருமண வாழ்வின் வெற்றியின் இரகசியம் என்ன?" என்று கேட்டார்கள்.

அதற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டின், "எங்களுடைய திருமண வாழ்வின் புதிதில் எங்களுக்கு இடையே ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டோம். அந்த ஒப்பந்தம் இதுதான்: குடும்பத்தில் பெரிய பெரிய முடிவுகளை எடுக்கவேண்டும் என்றால், அதை நான் எடுக்கவேண்டும் என்றும், சிறிய சிறிய முடிவுகளை எடுக்கவேண்டும் என்றால் அதனை மனைவி எடுப்பதாகவும் ஒப்பந்தம் செய்துகொண்டோம். ஆனால் வேடிக்கை என்னவென்றால், இந்த ஐம்பது ஆண்டுகால திருமண வாழ்வில் பெரிய முடிவு என்று எதையுமே நான் எடுத்ததில்லை. எல்லா முடிவுகளையும் என்னுடைய மனைவிதான் எடுத்தாள். அதாவது, நான் ஒரு முடிவு எடுக்கும் நிலையே ஏற்படாமல், எல்லாவற்றையும் என்னுடைய மனைவியே பார்க்கும்படி விட்டுவிட்டேன்" என்று சொன்னார்.

இதைக் கேட்டு அந்த பத்திரிக்கையாளர் வியந்து நின்றார். ஒருவருக்குக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு இணக்கமாக வாழ்வதுதான் திருமண வாழ்வின் வெற்றிக்குக் காரணம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் பரிசேயர் ஒருவர் இயேசுவிடம்," ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?" என்று கேட்கிறார். அதற்கு இயேசு, "கணவன் தன்னுடைய தாய், தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல. ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்று சொல்லி, "பரத்தமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரனத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான்" என்கிறார்.

திருமண உறவில் ஆணும், பெண்ணுமாக இணைந்திருப்பதுதான் இறைவனின் திட்டம் என்று சொல்லி, திருமணத்தின் மாண்பினை மிகவும் உயர்த்திப் பேசுகிறார்.

திருமண அருட்சாதனத்தின்போது கொடுக்கப்படும், "இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும், நான் உனக்குப் பிரமாணிக்கமாய் இருந்து உன்னை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கின்றேன்" என்ற வாக்குறுதியானது திருமண வாழ்வில் ஈடுபடும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாகவும், வாழ்க்கையில் எத்தனைத் துன்பங்கள் வந்தாலும் நிலைத்திருக்கவேண்டும் என்ற உயர்ந்த நெறியை உலகிற்கு எடுத்துரைக்கிறது.

ஆனால் இன்றைக்கு திருமண வாழ்வில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாகவும், உண்மையாகவும் இருக்கிறார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. பெருகி வரும் மனமுறிவுகளைப் பார்க்கும்போது திருமண வாழ்வு மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று புலப்படுகிறது.

இந்த நேரத்தில்தான் விவிலியம் நமக்குச் சொல்லும் "இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்" என்ற உண்மையை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப தங்களுடைய வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். கணவனும், மனைவியும் ஒரே உடல் என்ற உண்மையை உணர்ந்துகொண்டு வாழும்போது அவர்களிடத்தில் பிரிவுகள் இருக்காது, பிரச்னைகள் ஏற்படாது. மாறாக, ஒருவர் துன்புறும்போது மற்றவர் அவருக்காகத் துடிக்கும் நிலை ஏற்படும், ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது மற்றவர் அவரைத் தேற்றும் நிலை ஏற்படும். அதற்கு இறைவார்த்தை எடுத்துச் சொல்லும் உண்மைகளை தங்களுடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டும்.

தூய பவுல் கொலோசேயருக்கு எழுதிய திருமுகம் 3 ஆம் அதிகாரம் 12 லிருந்து 14வரையுள்ள இறைவார்த்தையில் படிக்கின்றோம், "நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே, அதற்குரிய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல, நீங்களும் மன்னிக்க வேண்டும். இவையனைத்திற்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுறச் செய்யும்" என்று.

ஆகவே திருமணம் என்பது ஒரு மேலான கொடை என்பதை நன்கு புரிந்தவர்களாய் அதனை அன்பினால் கட்டி எழுப்போம். தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
திருமணம் செய்துகொள்ளாதிருப்பது


திருமணம், மணமுறிவு, மணத்துறவு என்ற மூன்று வார்த்தைகளில் சுழல்கிறது நாளைய நற்செய்தி.

இந்த மூன்று சொற்களையும் இணைக்கும் வார்த்தை 'தனிமை.' எப்படி?

'தாய் தந்தையை விட்டு' பிரியும் கணவன் 'தனிமையாக' இருக்கிறான்.

இந்தத் தனிமையை போக்க அவன் 'மனைவியோடு' இணைகிறான்.

மனைவியை விலக்கிவிடும் கணவன் மீண்டும் 'தனிமை' ஆகிறான். மனைவியும் 'தனிமை' ஆகிறாள். இந்தத் தனிமையைத் தீர்த்துக்கொள்ள சிறிது நேரம் உடல் அளவில் இணைந்து களைந்துபோவது விபச்சாரம் என்றும், அது தவிர்க்கப்படவேண்டும் எனவும் சொல்கிறார் இயேசு.

மேலும், 'திருமணம் செய்துகொள்ளாதிருப்பதன் தனிமையே நலம்' என்று சொல்வதை அருள்கொடை பெற்றவரே அன்றி வேறு எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் இயேசு. அருள்கொடை பெற்றவர் தானே தனிமையை ஏற்கப் பழகிக்கொள்கின்றார்.

நமக்கு ஏன் தனிமை உணர்வு வருகிறது என்று தெரியுமா?

இயல்பாகவே நமக்குத் தனிமை உணர்வு என்பது கிடையாது. ஏனெனில் தொடக்கநூலின்படி 'ஆண் முதன் முதலாக படைக்கப்பட்டபோது அங்கே பெண் இல்லை. பெண் இடையில் வந்தவள். ஆணுடன் முதன்முதலாக உறவு கொண்டு தனிமை போக்கியவர் ஆண்டவராகிய கடவுள். அதே போல பெண் விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டபோது முதன்முதலாக பெண்ணோடு உறவு கொண்டவர் ஆண்டவராகிய கடவுள். ஏனெனில் ஆதாம் அங்கே 'தூக்கத்தில்' ('பாதி இறப்பு') இருந்தார்.'

இவ்வாறாக, ஆணுக்கும், பெண்ணுக்கும் தனிமை போக்கியவர் கடவுள்.

காலப்போக்கில் இந்தக் கடவுள் ஓரங்கட்டப்பட்டுவிட்டு ஆண், பெண்ணையும், பெண் ஆணையும் தனிமை போக்கத் தேடியதால்தான் தனிமையே வருகிறது. ஏனெனில் பாதியில் வரும் எதுவும் நிறைவைத் தராது. என்னதான் ஒட்டி, உறவாடி, கொஞ்சி, அக மகிழ்ந்தாலும், 'உவப்பன வெறுக்கும், வெறுத்தன உவக்கும்,' 'இணைந்தன பிரியும், பிரிவன இணையும்' என்று வாழ்வு சட்டென்று மாறிவிடுகிறது. ஆனால், இறைவனோடுள்ள இணைதல் அப்படி அல்ல. நானும், நீங்களும் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் அவரோடு இணைந்துகொள்ள முடியும். இதுவும் அவருடைய அருள்கொடையே.

ஆனால், இது எழுதுவதற்கு மிக எளிது. இதை உள்வாங்கி வாழ்வது மிகக் கடினம். ஏனெனில் கடவுளும் காணாமல் போகும் நேரங்கள் நம் வாழ்வில் வரும். அந்த உச்சகட்ட தனிமையை வெல்வது மிகவும் கடினம். நிறைய எண்ணங்கள் எழுந்து மறையும். நம்மையே வெறுமையாக்கி அழித்துக்கொள்ளும் எண்ணங்களும் சில நேரங்களில் எழும். ஆனால், அது எல்லாமே மூளையின் செயல். மூளை நம்மை ஏமாற்ற வல்லது. மூளையின் ஏமாற்று வேலைக்கு நாம் அடிமையாகிவிடக்கூடாது.

நிற்க.

தொடர்ந்து இயேசு மணவுறவு என்பதை உடல் அளவில் உள்ள செயல்பாடாக முன்வைக்கின்றார்.

சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர்.

சிலர் மனிதரால் (மருத்துவரால் அல்லது வேறு ஒரு காரணத்திற்காக) அப்படி ஆக்கப்படுகின்றனர்.

சிலர் அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர்.

இந்த மூன்றாம் நிலை முழுக்க முழுக்க ஒருவரின் தன்னுரிமை மற்றும் கட்டின்மையைப் பொறுத்தது. கத்தோலிக்க அருள்பணி நிலையில் இந்த முன்வருதல் திருத்தொண்டர் நிலைக்கு வரும்போது நடைபெறுகிறது. மணத்துறவு அங்கே வாக்குறுதியாக பெற்றுக்கொள்ளப்படுகிறது. 'நான் விரும்புகிறேன்' என்று திருத்தொண்டர் நிலைக்குள் நுழையும்போது குருமாணவர் ஏற்கின்றார்.


'நான் விரும்புகிறேன் தனிமையை' - என்பதுகூட அதன் பொருளாக இருக்கலாம்.


Rev. Fr . Yesu Karunanidhi


--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!