|
|
25 மே 2020 |
|
பாஸ்கா
7ஆம் வாரம் - செவ்வாய்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் நம்பிக்கை கொண்டபோது, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 19: 1-8
அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல் மலைப்பாங்கான பகுதி
வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு, அவர்களை
நோக்கி, "நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?"
என்று கேட்டார். அதற்கு அவர்கள், "தூய ஆவி என்னும் ஒன்று உண்டு
என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே" என்றார்கள்.
"அவ்வாறெனில் நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்?" எனப்
பவுல் கேட்க, அவர்கள், "நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப்
பெற்றோம்" என்றார்கள். அப்பொழுது பவுல், "யோவான் மனம் மாறிய மக்களுக்குத்
திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப்பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை
கொள்ளுமாறு கூறினார்" என்றார்.
இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில்
திருமுழுக்குப் பெற்றனர். பவுல் அவர்கள்மீது கைகளை வைத்ததும்,
தூய ஆவி அவர்கள்மேல் இறங்கியது. அப்பொழுது அவர்கள் பரவசப்
பேச்சுப் பேசினர்; இறைவாக்கும் உரைத்தனர். அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு
பேர் இருந்தனர்.
பின்பு பவுல் தொழுகைக்கூடம் சென்றார். அங்கு அவர் மூன்று மாதங்கள்
இறையாட்சி பற்றித் துணிவுடன் மக்களோடு பேசி அவர்களோடு
விவாதித்து அவர்களை நம்பச் செய்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 68: 1-2. 3-4ac. 5-6ab . (பல்லவி: 32a)
Mp3
=================================================================================
பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள். அல்லது:
அல்லேலூயா.
1
கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்;
அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்;
2
புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்;
நெருப்புமுன் மெழுகு உருகுவது போல கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர்.
- பல்லவி
3
நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்;
மகிழ்ந்து கொண்டாடுவர்.
4ac
கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; "ஆண்டவர்"
என்பது அவர்தம் பெயராம். - பல்லவி
5
திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின்
காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்!
6ab
தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்;
சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். -
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
கொலோ 3: 1
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால்
மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின்
வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 29-33
அக்காலத்தில்
சீடர்கள் இயேசுவிடம், "இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி வெளிப்படையாகப்
பேசுகிறீர். உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம்
கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது.
இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்"
என்றார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, "இப்போது நம்புகிறீர்களா! இதோ! காலம்
வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு
ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே
விட்டுவிடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை
என்னோடு இருக்கிறார்.
என் வழியாய் நீங்கள் அமைதி காணும்பொருட்டே நான் இவற்றை உங்களிடம்
சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன்
இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 19: 1-8
இறையாட்சியைப் பற்றித் துணிவுடன் பேசி
வந்த பவுல்
நிகழ்வு
சபைப் போதகர் ஒருவர் இருந்தார். இவருக்கு ஐந்து வயதில் ஒரு மகள்
இருந்தாள். ஒருநாள் அவள் தன்னுடைய அப்பாவிடம் (போதகரிடம்),
"அப்பா! நீங்கள் ஒவ்வொரு முறையும் பீடத்திற்கு முன்பாக
நின்றுகொண்டு போதிக்கத் தொடங்கும் முன், எதற்காகத் தலை வணங்குகின்றீர்கள்"
என்றாள்.
"நான் கடவுளின் வார்த்தையை நல்ல முறையில் போதிக்கவேண்டும் அல்லவா!
அதற்கான அருளை வேண்டித்தான் நான் கடவுளை நோக்கித் தலைதாழ்த்தி
வணங்குகின்றேன்" என்றார் அந்தச் சபைப் போதகர். "அப்படியானால்
ஏன் அப்பா உங்களுடைய வேண்டுதலைக் கடவுளைக் கேட்பதே இல்லை! என்று
பாவமாய்க் கேட்டாள் அந்தப் போதகரின் மகள். இதற்கு போதகரால் எதுவும்
பேச முடியவில்லை.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், இன்றைக்கு ஒருசிலரால்
கடவுளின் வார்த்தையைத் துணிவோடும் ஆற்றலோடும் எடுத்துரைக்க
முடியவில்லை என்பதுதான் வேதனை கலந்த உண்மை. இதற்கு முற்றிலும்
மாறாக, இன்றைய முதல் வாசகத்தில் பிற இனத்து மக்கள் நடுவில் கடவுளின்
வார்த்தையை அறிவித்து வந்த பவுல், இறையாட்சியைப் பற்றித்
துணிவுடன் பேசுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எபேசுக்கு வந்து கடவுளின் வார்த்தையை அறிவித்த பவுல்
ஒருகாலத்தில் கிறிஸ்துவர்களைக் கண்டாலே, அவர்களைப் பிடித்துச்
சிறையில் அடைக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்த
பவுல், தமஸ்கு நகர் நோக்கிக் குதிரையில்
சென்றுகொண்டிருக்கையில், ஆண்டவர் இயேசுவால் தொடப்படுகின்றார்
(திப 9). அதன்பின்பு ஆண்டவருடைய நற்செய்தியை எல்லா மக்களுக்கும்
அறிவிக்க, அதிலும் குறிப்பாகப் பிற இனத்து மக்களுக்கு அறிவிக்க
இரண்டு திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டார். இரண்டு பயணங்களை
முடித்துவிட்டுச் சிலகாலம் அந்தியோக்கில் இருந்துவிட்டு,
மூன்றாவது திருத்தூதுப் பயணமாக எபேசு நகர் நோக்கி வருகின்றார்.
பவுல் எபேசு நகர் நோக்கி வந்ததும் அங்கிருந்தவர்களிடம் கடவுளின்
வார்த்தையை எடுத்துரைத்ததும், அவர் கடவுளின் வார்த்தையை அறிவிப்பதில்
மிகுந்த தாகம் கொண்டிருந்தார் என்பதை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றன.
எபேசில் இருந்தவர்கள்மீது தூய ஆவியாரை இறங்கி வரச் செய்த பவுல்
மூன்றாவது திருத்தூதுப் பயணமாக, எபேசுக்கு வருகின்ற பவுல், அங்கிருந்தவரிடம்,
தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டீர்களா என்று கேட்கின்றபொழுது,
நாங்கள் தூய ஆவியாரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை! யோவான்
கொடுத்த திருமுழுக்கைத்தான் பெற்றோம்! என்கிறார்கள். பின்னர்
அவர்கள் இயேசுவின் பெயரில் நம்பிக்கை வைத்துத் திருமுழுக்குப்
பெற்றதும், பவுல் அவர்கள்மீது தம் கைகளை வைக்க, தூய ஆவியார்
அவர்கள்மீது இறங்கி வருகின்றார்.
இங்கு நாம், திருமுழுக்கு யோவான் கொடுத்த திருமுழுக்கு, இயேசுவின்
பெயரில் திருமுழுக்கு இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப்
புரிந்துகொள்ளவேண்டும். யோவான் கொடுத்த திருமுழுக்கு மக்கள் தங்களுடைய
பாவத்திலிருந்து மனம்மாறவேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டது
(மத் 3: 2,6,8); ஆனால், இயேசுவின் பெயரில் திருமுழுக்கு என்பது
வாழ்வின் ஊற்றாக இருக்கும் தூய ஆவியாரைப் பெற்றுக்கொள்வது
(யோவா 3:5; உரோ 8:9, 16). எபேசு நகரில் இருந்தவர்கள் இயேசுவில்
பெயரால் திருமுழுக்குப் பெறுகின்றவரைக்கும் தூய ஆவியார் அவர்கள்மீது
இறங்கி வரவில்லை. எப்பொழுது அவர்கள் இயேசுவின் பெயரில்
திருமுழுக்குப் பெற்றார்களோ, அப்பொழுது அவர்கள் தூய ஆவியாரால்
நிரப்பப்படுகின்றார்கள்.
இறையாட்சியைப் பற்றித் துணிவுடன் பேசிய பவுல்
பவுல், எபேசு நகரில் இருந்த பன்னிரண்டு பேரைத் தூய ஆவியரால் அருள்பொழிவு
செய்தபின்பு, தொழுகைக் கூடத்திற்குச் சென்று இறையாட்சிப் பற்றித்
துணிவுடன் பேசி, பலரையும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை
கொள்ளச் செய்கின்றார்கள்.
பவுல் தனக்கு வாய்க்குக் கிடைத்தபொழுதெல்லாம் கடவுளின்
வார்த்தையை எடுத்துரைத்து வந்தார். இவ்வாறு அவர் கடவுளின்
வார்த்தையை எடுத்துரைக்கும்பொழுது, அவருக்கு எதிர்ப்புகள் இல்லாமல்
இல்லை. அந்த எதிர்ப்புகளையும் மீறி, அவர் துணிவுடன் கடவுளின்
வார்த்தையை எடுத்துரைத்து வந்தார் என்பதைத்தான் இன்றைய முதல்
வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது. அவ்வாறெனில், நாமும் கடவுளின்
வார்த்தையை நமக்கு வாய்ப்புக் கிடைக்கின்றபொழுதெல்லாம் எடுத்துரைத்து,
பலரையும் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யவேண்டும்.
சிந்தனை
"இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும்
கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாய் இரு" (2 திமொ
4: 2) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கடவுளின்
வார்த்தையை, இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை நமக்கு வாய்ப்பு
கிடைக்கின்றபொழுதெல்லாம் அறிவித்து, பலரையும் ஆண்டவர் இயேசுவில்
நம்பிக்கை கொள்ளச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 16: 29-33
"உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும்
துணிவோடு இருங்கள்"
நிகழ்வு
உலகில் எதற்குத் துன்பம் இருக்கின்றது என்பதற்குப் பிரபல இரஷ்ய
எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் சொல்லக்கூடிய கதை இது.
ஒரு காட்டில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் சற்று
வித்தியாசமானவர். பறவைகள், விலங்குகள் பேசக்கூடிய மொழிகள்கூட
இவருக்கு நன்றாக விளங்கும். ஒருநாள் இவர் ஒரு பெரிய மரத்தடியில்
படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக
ஒரு கழுகும் புறாவும் பாம்பும் மானும் வந்தன. அவை நான்கும் துறவி
படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மரத்தடியில் வந்து
நின்றுகொண்டு, "இந்த உலகில் எதற்கு இவ்வளவு துன்பங்கள். இந்தத்
துன்பங்களுக்குக் காரணமென்ன?" என்பது தொடர்பாகப் பேசத் தொடங்கின.
முதலில் கழுகு பேசத் தொடங்கியது. "இந்த உலகில் இருக்கின்ற
எல்லாத் துன்பங்களுக்குக் காரணம் பசிதான். தேவையான அளவுக்கு
எல்லாருக்கும் உணவு கிடைத்துவிட்டால் துன்பம் இல்லை. அந்த உணவு
கிடைக்காதபொழுதுதான், அதைத் தேடி நாம் போகிறோம்; கடைசியில்
பிரச்சனையில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றோம்." கழுகைத்
தொடர்ந்து புறா பேசத் தொடங்கியது: "இந்த உலகில் உள்ள
துன்பங்களுக்கெல்லாம் காரணம், அன்புதான். ஒருவரிடம் நாம் அன்பு
செலுத்துகின்றோம். அந்த அன்புக்குப் பதில் அன்பு அவர்
செலுத்தவில்லை என்றாலோ அல்லது நாம் அன்பு செய்பவருக்கு யாராவது
ஒருவர் கெடுதல் செய்தாலோ நாம் அவரைப் பழிதீர்க்க
நினைக்கின்றோம். இப்படித்தான் நமக்குத் துன்பம் வருகின்றது."
புறாவைத் தொடர்ந்து பாம்பு தன்னுடைய கருத்தைச் சொல்லத்
தொடங்கியது: "இந்த உலகில் உள்ள துன்பங்களுக்குக் காரணம்
சினம்தான். யாரும் நம்மைச் சீண்டாத வரையில் நாம் சினம்
கொள்வதில்லை. எப்பொழுது ஒருவர் நம்மைச் சீண்டுகின்றாரோ
அப்பொழுது நாம் உணர்ச்சிவசப் பட்டு சினம் கொள்கின்றோம்.
அதனாலேயே துன்பங்கள் வருகின்றன." எல்லாரும் தங்களுடைய
கருத்தைச் சொல்லி முடித்தபின்பு மான் தன்னுடைய கருத்தைப் பதிவு
செய்தது: "இந்த உலகத்தில் இருக்கின்ற துன்பத்திற்குக் காரணம்
பயம்தான். எங்கே நம்முடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடுவோ என்று
பயந்து பயந்து வாழ்கின்றோம். அந்தப் பயத்தில் நாம் செய்யும்
செயல்களே, நம்மைத் துன்பத்தில் விழத்தாட்டி விடுகின்றன."
இப்படி எல்லாரும் பேசி முடித்தபின்பு, அவற்றைக்
கேட்டுக்கொண்டிருந்த துறவி அவைகளிடம், "இந்த உலகில் நமக்கு
வரும் துன்பங்களுக்குப் பசியோ, அன்போ, சினமோ, பயமோ காரணமல்ல,
நாம் வெவ்வேறு இயல்புகளுடன் இருக்கின்றோம். அதுதான் காரணம்.
ஒருவேளை நாம் ஒரே இயல்புடன் இருந்தால் எந்தத் துன்பமும் வராது"
என்று சொல்லி முடித்தார்.
நாம் ஒரே இயல்புடையவர்களாக இருப்பதற்கு சாத்தியமில்லை
என்றாலும், நமக்கு எப்படியெல்லாம் துன்பங்கள் வருகின்ற என்ற
உண்மையை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நமது சிந்தனைக்குரியது.
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "உலகில்
உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள்"
என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள்
என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
துன்பம் இருக்கத்தான் செய்யும்; ஆனாலும் துணிவோடு
இருக்கவேண்டும்
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான துன்பம்
இருக்கலாம். யோபு சொல்வது போன்று, "மண்ணில் வாழ்வது
மனிதருக்குப் போராட்டம்தானே! (யோபு 7:1). இத்தகைய போராட்டம்,
துன்பம் எல்லாருக்கும் உண்டு, அது இயேசுவின் சீடர்களுக்கும்
உண்டு. இத்தகைய துன்பங்களைக் கண்டு நாம் சோர்ந்து
போய்விடக்கூடாது. மாறாகத் துணிவோடு இருக்கவேண்டும். இதைத்தான்
இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகின்றார். நாம் துன்பங்களைக்
துணிவோடு எதிர்கொள்ளவேண்டும் என்பதற்கான ஒரு காரணத்தையும்
இயேசு சொல்கின்றார். அது குறித்துத் தொடர்ந்து நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
உலகை வெற்றிகொண்ட இயேசு
உலகத்தில் எல்லாருக்கும், அதிலும் குறிப்பாக தன்னுடைய
சீடர்களுக்குத் துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும்,
துணிவோடு இருக்கவேண்டும் என்று சொன்ன இயேசு, அதற்கான காரணத்தை,
"நான் உலகின் மீது வெற்றிகொண்டுவிட்டேன்" என்று சொல்கின்றார்.
இந்த உலகின்மீது இயேசு வெற்றிகொண்டு விட்டார் எனில்,
இவ்வுலகின் தலைவனாகிய சாத்தான் தண்டனை பெற்றுவிட்டான் (யோவான்
16: 31); அவன் வெளியே துரத்தப்பட்டுவிட்டான் (யோவா 12: 31).
அதனால் துணிவோடு இருங்கள் என்கின்றார் இயேசு.
ஆகையால், நாம் இயேசு இந்த உலகை வெற்றிகொண்டுவிட்டார் என்ற
நம்பிக்கையில், நமக்கு வருகின்ற துன்பங்களைத் துணிவோடு
எதிர்கொள்வோம்.
சிந்தனை
"வலிமை பெறு; துணிவு கொள்; அஞ்சாதே; அவர்கள் முன் நடுங்காதே"
(இச 31: 6) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் இயேசு இவ்வுலகை
வெற்றி கொண்டுவிட்டார் என்ற நம்பிக்கையில், துணிவோடு
வாழ்க்கையை எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|