Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       08  மே 2020  

பாஸ்கா 4ஆம் வாரம் - வெள்ளிக்கிழமை

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து தமது வாக்குறுதியை நிறைவேற்றினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 26-33

அந்நாள்களில்

பவுல் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவுக்கு வந்தபோது, அவர் தொழுகைக்கூடத்தில் கூறியது: "சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது. எருசலேமில் குடியிருக்கும் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறியவில்லை; ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைப் புரிந்துகொள்ளவில்லை; ஆயினும் அவருக்கு அவர்கள் தீர்ப்பளித்தபோது அவ்வார்த்தைகள் நிறைவேறின. சாவுக்குரிய காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும், அவரைக் கொல்ல அவர்கள் பிலாத்திடம் கேட்டார்கள். மறைநூலில் அவரைப்பற்றி எழுதியுள்ள அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தார்கள். பின்பு அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிக் கல்லறையில் வைத்தார்கள்.

ஆனால் இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார். அவர் கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வந்தவர்களுக்குப் பல நாள்கள் தோன்றினார். அவர்கள் இப்போது அவர்தம் சாட்சிகளாக மக்கள் முன் விளங்குகின்றார்கள். இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளை களாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி. இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில்,

"நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்" என்று எழுதப்பட்டுள்ளது."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 2: 6-7. 8-9. 10-11 (பல்லவி: 7) Mp3
=================================================================================
பல்லவி: நீரே என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். அல்லது: அல்லேலூயா.
6
என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன்.
7
ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; "நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். - பல்லவி

8
நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.
9
இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்". - பல்லவி

10
மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.
11
அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அகமகிழுங்கள்! - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 14: 6)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
வழியும் உண்மையும் வாழ்வும் நானே.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், "உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்" என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்."

தோமா அவரிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?" என்றார். இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 13: 26-33

இயேசுவை அறியாமலும் அவரை நம்பாமலும் இருந்த யூதர்கள்

நிகழ்வு

மிகச் சிறந்த எழுத்தாளரான வில்லி ஹோப்சும்மர் (Willi Hoffsuemmer) சொல்லக்கூடிய நிகழ்வு.

இளைஞன் ஒருவன் இருந்தான். இவனுக்குக் கடவுள் நம்பிக்கையே கிடையாது. இப்படிப்பட்டவன் ஒருநாள் ஓர் அருள்பணியாளரைச் சந்தித்து, "கண்ணால் காணாத எதையும் நான் நம்புவதில்லை. கடவுளை என்னால் கண்ணால் காண முடியவில்லை. அதனால் கடவுள் என்ற ஒருவர் இல்லவே இல்லை. இல்லாத ஒருவரை நம்பவே மாட்டேன்" என்று சாதித்தான்.

இந்த இளைஞன் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அருள்பணியாளர், "தம்பி! உன்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டுமா?" என்றார். "தாராளமாகக் கேளுங்கள்" என்று இளைஞன் சொன்னதும், அருள்பணியாளர் இவனிடம், "உன்னால் உன்னுடைய மூளையைக் காண முடிகின்றதா..?" என்றார். இவன், "இல்லை" என்று சொன்னதும், அருள்பணியாளர், "உன்னுடைய மூளையை உன்னால் காணமுடியவில்லை என்று சொல்கின்றாய். அப்படியானால் உனக்கு மூளை இல்லை என்று நான் சொல்லிவிட முடியுமா...?" என்றார். அவனால் எதுவும் பேசமுடியவில்லை.

இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞனைப் போன்றுதான் பலர், கடவுளைக் கண்ணால் கண்டால்தான் அவரை நம்புவேன் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள் .இவர்களுடைய நிலை பரிதாபமானது என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்! இன்றைய முதல் வாசகத்தில், மீட்பராம் இயேசுவை அறியாமலும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலும் இருந்த யூதர்களின் தவற்றை புனித பவுல் சுட்டிக்காட்டுகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

இயேசுவை நம்பாத யூதர்கள்

தனிப்பட்ட பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பவுலும் பர்னபாவும் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கை வந்தடைகின்றார்கள். பின்னர் ஓய்வுநாளன்று தொழுகைக் கூடத்தில் பவுல் பேசத் தொடங்குகின்றார். நேற்றைய முதல் வாசகம், பவுல் தொழுகைக்கூடத்தில் பேசியதன் முதல் பகுதியாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகமோ, அதனுடைய தொடர்ச்சியாக இருக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் தொழுகைக்கூடத்தில் இருந்த மக்களிடம் பேசும்பொழுது, "ஆபிரகாமின் வழிவந்தவர்களே!" என்று பேசத் தொடங்கி, கடவுளின் மீட்புச் செய்தி நமக்குத்தான் முதலில் அருளப்பட்டது; ஆனால், எருசலேமில் இருந்த மக்களும் தலைவர்களும் அந்த மீட்பரை அறிந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் ஒவ்வொருநாளும் இறைவார்த்தையைக் கேட்டும் அதைப் புரிந்துகொள்ளவில்லை. மாறாக, சாவுக்குரிய காரணம் எதுவும் இல்லாத பொழுதும், பிலாத்துவிடம் கேட்டு வாங்கி அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டீர்கள் என்கின்றார்.

பவுல் தொழுகைக் கூடத்தில் இருந்த மக்களிடம் பேசிய வார்த்தைகள் நமக்கு இரண்டு செய்திகளை எடுத்துச் சொல்கின்றன. ஒன்று, யூதர்கள் மீட்பராம் இயேசுவைப் புறக்கணித்து விட்டார்கள் (திபா 118: 22; எசா 53:3) என்பது. இரண்டு, இயேசுதான் வாக்களிக்கப்பட்ட மெசியா அல்லது மீட்பர் ( லூக் 24: 46; திப 3:18) என்பது. ஒருவேளை அவர்கள் இயேசுதான் வாக்களிக்கப்பட்ட மெசியா என்றும் மீட்பர் என்றும் அறிந்து, அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தால், அவர்கள் கடவுள் அளித்த மீட்பினைப் பெற்றுக்கொண்டிருப்பார்கள். மாறாக, அவர்கள் மெசியாவும் மீட்பருமான இயேசுவை அறிந்துகொள்ளவும் இல்லை. அவர்மீது நம்பிக்கை கொள்ளவும் இல்லை. அதனால் கடவுள் அளித்த மீட்பை அவர்கள் இழந்துபோனார்கள்.

வாக்குறுதி மாறாத கடவுள்

பவுல் தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களிடம், இயேசு யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக, தந்தைக் கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார் என்றும் இதற்கு நாங்கள் சாட்சிகள் என்றும் சொல்லிமுடிகின்றார். உயிர்த்த ஆண்டவர் இயேசு பவுலுக்கு, மற்ற திருத்தூதர்களுக்குத் தோன்றியதைப் போன்று தோன்றாவிட்டாலும், அவர் தமஸ்கு நகர் நோக்கிச் செல்லும் வழியில் தோன்றிப் பேசுகின்றார் (திப 9: 1-6)

தந்தைக் கடவுள் இயேசுவைச் சாவிலிருந்து உயிர்த்தெழச் செய்ததன்மூலம், அவர், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவராகின்றார் என்கின்றார் புனித பவுல். தொடர்ந்து பவுல் மேற்கோள் காட்டிப் பேசுகின்ற வார்த்தைகள், திருப்பாடல் 2:7 இல் "நீர் என் மைந்தன்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்" என்று இருக்கின்றது. நற்செய்தியிலும் இது உறுதி செய்யப்படுகின்றது (லூக் 3: 22, 9: 35). இவ்வாறு கடவுள், தன் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பி, தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவரானார். மக்கள்தான் அவரை அறிந்துகொள்ளாமலும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலும், அவர் கொடுத்த வாழ்வினையும் இழந்து போனார்கள்.

நாம் கடவுளின் ஒரே திருமகனாம் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு, அவர் அளிக்கும் நிலைவாழ்வைப் பெறத் தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்; அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" (யோவா 1: 11) என்பார் புனித யோவான். ஆகையால், நம்மைத் தேடிவந்த இயேசுவின்மீது நாம் நம்பிக்கைகொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 14: 1-6

கலங்காதே! கடவுளிடம் நம்பிக்கை கொள்!

நிகழ்வு

மலையடிவாரத்தில் இருந்த ஆசிரமத்தில் துறவி ஒருவர் இருந்தார். இவருக்குப் பெயரே "மகிழ்ச்சியான துறவி". இவர் எப்பொழுதும் சிறு குழந்தையைப் போன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இவரைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் இவரிடம் இருந்த மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும். அந்தளவுக்கு இவர் மகிழ்ச்சியாக இருந்தார். இதனால் இவரைப் பார்த்து, ஆலோசனை கேட்பதற்குப் பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் வந்து போனார்கள்.

இது ஒருபக்கம் இருக்கையில், இவருக்கு வயது ஏறிக்கொண்டே சென்றது. இதனால் இவருடைய சீடர்கள், "இன்னும் கொஞ்ச நாள்தான் துறவி நம்மோடு இருப்பார்; அதன்பிறகு துறவி நம்மைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவார்" என்று வருத்தம் கொள்ளத் தொடங்கினார்கள். இப்படி இருக்கையில் துறவிக்குத் தொண்ணூற்று ஒன்பதாவது பிறந்தநாள் வந்தது. இதைத் தொடர்ந்து துறவியின் சீடர்கள், "அடுத்த பிறந்த நாளுக்குத் துறவி நம்மோடு இருப்பாரோ, இருக்கமாட்டாரோ தெரியவில்லை; அதனால் துறவியின் இந்தப் பிறந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடுவோம்" என்று முடிவுசெய்து, எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.

துறவியின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கியது. சீடர்களில் ஒரு பிரிவினர், துறவியின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்ற மனநிலையோடு மிகவும் உற்சாகமாக இருந்தார்கள். இன்னொரு பிரிவினர், "நம்முடைய துறவி நம்மை விட்டு வெகு விரைவில் பிரிந்துவிடுவார்" என்று கலக்கத்தோடு இருந்தார்கள். இவ்வளவுக்கு நடுவிலும் துறவி சிரித்த முகத்தோடு இருந்தார்.

அப்பொழுது மிகவும் கலக்கத்தோடு இருந்த சீடர் ஒருவர் எழுந்து, "குருவே! நீங்கள் உங்களுடைய அடுத்த பிறந்த நாளுக்கு உயிரோடு இருப்பீர்களோ இருக்கமாட்டீர்களோ என்ற கவலையோடு நாங்கள் இருக்கின்றோம்; ஆனாலும் உங்களால் மட்டும் எப்படி, இந்த நேரத்திலும் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றது" என்று கேட்டார். அதற்குத் துறவி அவர்களிடம், "என்னுடைய இளம்வயதில் நான் எல்லாரையும் போன்று எதற்கெடுத்தாலும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான், "மகிழ்ச்சியாக இருப்பதும் வருத்தத்தோடு இருப்பதும் நம்மைப் பொருத்துதானே அன்றி, அடுத்ததைப் பொருத்து அல்ல" என்று எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. இதற்குப் பின்பு நான் ஒவ்வொரு நாள் காலையிலும், "இன்று நீ மகிழ்ச்சியாக இருக்கப்போகிறாயா? வருத்தத்தோடு இருக்கப் போகிறாரா?" என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். வருத்தத்தோடு இருப்பதை விடவும் மகிழ்ச்சியாக இருப்பதே உடலுக்கு நல்லது என்று முடிவுசெய்து, இத்தனை நாள்களும் நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்" என்று தான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதன் மறைபொருளைச் சொன்னார்.

ஆம், நாம் மகிழ்ச்சியாக இருப்பதும் வருத்தத்தோடு இருப்பதும் நம்மைப் பொருத்ததே! இந்த வாழ்வின் மறைபொருளை உணர்ந்துகொண்டால், நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கலாம். நற்செய்தியில் இயேசு தன்னுடைய தன்னுடைய சீடர்களிடம், "நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்" என்கிறார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின் பொருள் என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளின் நம்பிக்கை கொண்டிருப்போர் கலங்கத் தேவையில்லை

"இன்னும் சிறிது காலமே நான் உங்களோடு இருப்பேன்" (யோவா 13: 33) என்று இயேசு தன்னுடைய சீடர்களிடம் சொல்ல, அவர்கள் கலக்கமுறுகின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்; கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்" என்கின்றார்.

உண்மையில் சீடர்கள்தான் இயேசுவிடம், கலங்கவேண்டாம் என்று சொல்லி அவரைத் தேற்றியிருக்கவேண்டும். ஏனெனில், அவர்தான் பாடுகள் பட்டு, சிலுவைச் சாவை அடைய இருந்தார். இப்படி இருக்கையில், இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு தன் சீடர்களிடம், நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம் என்று சொல்கின்றார். இயேசு தன்னுடைய சீடர்கள், கடவுளிடம் என்னிடம் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று சொல்வது, "நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்" (எசா 28: 16) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன.

தந்தையிடம் செல்வதற்கான வழி நமக்குத் தெரிவதால் கலங்கத் தேவையில்லை

இயேசு தன்னுடைய சீடர்களிடம், உள்ளம் கலங்கவேண்டாம் என்று சொல்வதற்கு இன்னொரு காரணம், சீடர்களுக்கு, அவர் போகும் வழி தெரியும் என்பதால் ஆகும். இயேசுவே வழியாக இருக்கின்றார் என்பது, அவர் தோமாவிற்குக் கூறுகின்ற பதிலிலிருந்து நமக்கு தெரிந்தாலும், இயேசு தந்தைக் கடவுளிடம் செல்வதற்கான வழியைத் தன்னுடைய வாழ்வாலும் வார்த்தையாலும் காட்டிவிட்டார்.

இன்றைக்கு எத்தனையோ மனிதர்கள் நல்ல "வழி"காட்டி இல்லாததால் அவர்கள் வாழ்க்கையில் இடறி விழுந்து கிடக்கின்றார்கள்; ஆனால், இயேசு உண்மையான வழியாக இருந்து, தந்தையிடம் செல்வதற்கான வழியை நமக்குக் காட்டி இருக்கின்றார். ஆகையால், நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டவர்களாய்க் கலக்கமில்லாமல் வாழ்வோம்.

சிந்தனை

"என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே; இஸ்ரயலே, கலங்காதே" (எரே 30: 10) என்கிறார் ஆண்டவர். ஆகையால், நமக்கு அருகில் இருந்து, ஆறுதல் அளிக்கும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு உள்ளம் கலங்காதிருப்போம்; இறைவனுக்குகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!