Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     30 ஜூலை 2020  

பொதுக்காலம் 17ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 1-6


எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு: "நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்."

எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல் வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாதபோதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு: "இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வது போல் நானும் உனக்குச் செய்ய முடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்."

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் -
=================================================================================
திபா 146: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 5a)  Mp3

பல்லவி: இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர். அல்லது: அல்லேலூயா.
1
என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு;
2
நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். - பல்லவி

3
ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம்.
4
அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்; அந்நாளில்அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம். - பல்லவி

5
யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.
6
அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! - பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
திப 16: 14b

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53

அக்காலத்தில்

இயேசு மக்களை நோக்கிக் கூறியது: "விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்."

"இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?" என்று இயேசு கேட்க, அவர்கள், "ஆம்" என்றார்கள். பின்பு அவர், "ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்" என்று அவர்களிடம் கூறினார்.

இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எரேமியா 18: 1-6

"கடவுள் என்னும் குயவன் கையில், களிமண்ணாகிய நாம்"


நிகழ்வு

அது ஓர் அழகிய மாடம். அந்த அழகிய மாடத்தின் நடுவில் சிற்பம் ஒன்று இருந்தது. தற்செயலாக அந்த அழகிய மாடத்திற்கு வந்த ஓர் இளைஞன், அந்தச் சிற்பத்தைக் கண்டு பிரமித்துப் போனான். சிறிதுநேரம் அந்தச் சிற்பத்தையே உற்றுநோக்கிக் கொண்டிருந்த அந்த இளைஞன், அதோடு பேசத் தொடங்கினான். "ஏய்! சிற்பமே நீ ஏன் இங்கிருக்கின்றாய்?". "என்னை உருவாக்கியவர் இங்கு வைத்தார், அதனால்தான் நான் இங்கிருக்கின்றேன்" என்றது சிற்பம். "சிற்பமே! நீ ஏன் அசைவதில்லை?" என்று இளைஞன் அடுத்த கேள்வியைக் கேட்டான். "நான் அசையாமல் இருக்கவேண்டும் என்பதுதான் என்னை உருவாக்கியவரின் விரும்பம். அதனால்தான் நான் அசையாமல் இருக்கின்றேன்" என்றது சிற்பம்.

இளைஞன் விடவில்லை. "சிற்பமே! நீ அசையாமல் இருக்கவேண்டும் என்பது உன்னை உருவாக்கியவரின் விரும்பம் என்று சொல்கின்றாயே...! இதனால் உனக்கென்ன இலாபம்?" என்று மற்றுமொரு கேள்வியைக் கேட்டான் இளைஞன். "நான் அசையாமல் இருப்பதால் எனக்குத் தனிப்பட்ட விதத்தில் எந்தவோர் இலாபம் இல்லையென்றாலும், என்னை உருவாக்கியவரின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றேன். அந்தவொரு மனநிறைவு எனக்குக் கிடைக்கின்றது" என்றது சிற்பம். இளைஞன் தொடர்ந்தான். "சிற்பமே! நீ இப்படியே அசைவுறாமல் இருந்தால், உன்னால் உன்னை உருவாக்கியவரைப் பார்க்கமுடியாதே!". இதற்குச் சிற்பம், "நான் என்னை உருவாக்கியவரைப் பார்க்கமுடியாவிட்டாலும், என்னை உருவாக்கியவர் என்னை எப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்" என்றது சிற்பம்.

"சிற்பமே! நான் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் நீ மிக அற்புதமாகப் பதில் சொல்லிக்கொண்டு வருகின்றாய். இதுதான் உன்னிடம் நான் கேட்கின்ற கடைசிக் கேள்வி; இந்தக் கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்லிவிட்டால் உன்னை விட்டுவிடுகிறேன்" என்று சொல்லி, இளைஞன் அந்தச் சிற்பத்திடம், "உன்னை உருவாக்கியவரிடம் செல்ல உனக்குக் ஆசையே இல்லையா...? நீ அசைந்தால்தானே உன்னால் உன்னை உருவாக்கியவரிடம் செல்ல முடியும்?" என்றான். "என்னை உருவாக்கியவரிடம் செல்ல எனக்கு ஆசைதான். ஆனாலும், என்னை உருவாக்கியவர், எந்த நோக்கத்திற்காக என்னை இங்கு வைத்திருக்கின்றாரோ, அந்த நோக்கத்தை இங்கிருந்து நான் நிறைவேற்றுவதுதான், அவருக்கு மகிழ்ச்சியளிக்கும். அதனால் நான் இங்கேயே இருப்பேன்" என்றது.

இளைஞன், தான் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் சிற்பம் மிக அழகாகப் பதில் சொன்னதால், அவன் அதை நல்லமுறையில் வாழ்த்திவிட்டு, அதனிடமிருந்து விடைபெற்றான்.

மனிதர்களாகிய நாம் கடவுளின் திருவுளத்தை எப்படி நிறைவேற்றவேண்டும் என்பதற்காக சலேசு நகர்ப் புனித பிரான்சிஸ் சொல்லக்கூடிய இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம், நாம் கடவுளின் கையில் களிமண்ணாக இருக்கின்றோம்; ஆகையால், நாம் அவருடைய திருவுளத்தின்படி நடக்கவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுள் என்ற குயவர்

ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எரேமியாவைக் குயவன் வீட்டிற்குப் போகச் சொல்லி, அங்கு நடைபெறுவதைக் கொண்டு ஓர் உண்மையைப் புகட்டுகின்றார். இறைவாக்கினர் எரேமியா, குயவன் வீட்டிற்குப் போகும்பொழுது, குயவன் தன் கையால் செய்த மண்கலம் சரியாக வராததால், அதைத் தன்னுடைய விருப்பப்படி வேறொரு கலமாகச் செய்கிறார் இதை எரேமியா இறைவாக்கினரிடம் சுட்டிக்காட்டிப் பேசும் கடவுள், "இந்தக் குயவன் செய்வது போல், நானும் உனக்குச் (இஸ்ரயேலுக்குச்) செய்ய முடியாதா?" என்று கேட்கின்றார்.

குயவன் எப்படி மண்கலம் சரியாக வராதபொழுது, அதைத் தன் விரும்பப்படி வேறொரு கலமாகச் செய்கிறாரோ, அப்படிக் கடவுளும் இஸ்ரயேல் மக்களைத் தன்னுடைய விருப்பத்தின் படி நடக்குமாறு மாற்றி அமைத்துக் கொண்டிருக்கலாம்; ஆனால், அவர் அவர்களை அப்படிச் செய்யவில்லை. காரணம் கடவுள் ஒவ்வொருவருடைய சுதந்திரத்தை மதிக்கின்றார்.

கடவுளின் திருவுளத்தின்படி செயல்படுவதே அவருக்கு ஏற்புடைய செயல்

கடவுள் ஒரு குயவனைப் போன்று, தான் உருவாக்கியவர்களைத் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றப்படி நடக்குமாறு செய்ய அவருக்கு முடியும் என்றாலும், அவர் தான் உருவாக்கியவர்களின் சுதந்திரத்தை மதிக்கின்றார் என்றால், அவருடைய விருப்பத்தின்படி நாம் நடப்பதே சாலச் சிறந்தே செயலாகும்.

இன்றைய முதல் வாசகம் கி.மு. 605 ஆம் ஆண்டு, அதாவது யூதாவின்மீது பாபிலோனியர்களின் படையெடுக்குக்கு முன்னாலேயே நடந்ததாகச் சொல்லப்படுகின்றது. யூதாவில் இருந்தவர்கள் தனக்குக் கீழ்ப்படிந்து, தன்னுடைய விரும்பத்தின்படி நடக்கவேண்டும் என்று கடவுள் விரும்பினார்; ஆனால், அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை. இதனால் அவர்கள் மிகப்பெரிய அழிவினைச் சந்தித்தார்கள். ஆகையால், கடவுள் நம்மை உருவாக்கியவர் என்றாலும், நம்முடைய சுதந்திரத்தை மதிக்கின்றார் எனில், அவருடைய திருவுளத்திற்கேற்ப நடப்பதே சாலச்சிறந்த செயலாகும்.

எனவே, நம்மை உண்டாக்கிய ஆண்டவரின் திருவுளத்தின்படி நாம் நடந்து, அவருக்கு உகந்த மக்களாக வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

"உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ நான் வருகிறேன்" (எபி 10:9) என்று சொல்லி இயேசு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார். நாம் நம்முடைய விரும்பத்தின்படி அல்ல, தந்தையின் திருவுளத்தின் படி நடந்து, அவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 13: 47-53

"அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்"


நிகழ்வு

அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் பங்குப் பணியாளருடைய இல்லத்திற்குப் பின்னால், ஐந்தாறு கொய்யா மரங்கள் இருந்தன. அந்த மரங்களிலிருந்து அவ்வப்பொழுது காய் காய்த்துப் பழம் பழுக்கும். அப்பங்கில் பங்குப்பணியாளராகப் பணியாற்றி வந்த அருள்பணியாளர் அப்பழங்களை அங்கிருந்த பள்ளிக்கூட விடுதியில் தங்கிப் படித்துவந்த ஏழை மாணவர்களுக்குக் கொடுப்பது வழக்கம்.

ஒருமுறை அவர் மரங்களிலிருந்து பழங்களை யாரோ தொடர்ந்து பறிப்பதை அறிந்தார். இதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்த அவர், ஒரு பலகையைத் தயார்செய்து, அதில், "கடவுள் ஒவ்வொருவரையும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்" என்று எழுதி, அதைக் கொய்யா மரங்கள் இருந்த பகுதியில் வைத்துவிட்டு, மறுநாள் போய்ப் பார்த்தார். அப்படியிருந்தும் பழங்கள் திருடுபோயிருந்தன. மட்டுமல்லாமல், "கடவுள் ஒவ்வொருவரையும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்" என்று எழுதப்பட்டிருந்த பலகைக்குக் கீழ், "கடவுள் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாரைப்பற்றியும் யாரிடமும் சொல்லமாட்டார்" என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்.

இதைப் படித்துப் பார்த்துவிட்டு மிகவும் அதிர்ச்சியடைந்த அவர், அந்தப் பலகையில், "கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கைம்மாறு செய்வார்" (உரோ 2:6) என்று எழுதி வைத்தார். அன்று இரவு அவர் தூங்கிய பிறகு, பழங்களைப் பறிக்கும் இருவர் அங்கு வந்தனர். அவர்கள் அருள்பணியாளர் எழுதி வைத்திருந்த இறைவார்த்தையைப் படித்துப் பார்த்துவிட்டு, "என்ன! கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுகேற்பக் கைம்மாறு செய்வாரா..? அதையும் பார்த்துவிடுவோம்!" என்று சொல்லிச் சிரித்துக்கொண்டு பழங்களைப் பறித்துக்கொண்டு வேகமாக ஓடினர்.

அந்த நேரம் வேலையை முடித்துக்கொண்டு, வீட்டிற்குத் திரும்பி வந்த ஊர் நாட்டாண்மை, அவர்கள் இருவரும் பங்குப் பணியாளரின் இல்லத்திற்குப் பின்னாலிருந்து ஓடிவதைப் பார்த்துவிட்டு, என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தவராய், அவர்கள் இருவரையும் நையப்புடைத்தார். எந்தளவுக்கு என்றால், அதன்பிறகு அவர்கள் இருவரும் பங்குப் பணியாளரது இல்லத்தின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை (The Storyteller"s Minute Frank Mihalic, SVD)

வேடிக்கையாகச் சொல்லபட்ட நிகழ்வாக இருந்தாலும், தவறான வழியில் செல்லக்கூடியவர்கள், அதற்கான தண்டனையைப் பெறுவார்கள் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் நல்லவர் விண்ணகமும், தீயவர் பாதாளமும் செல்வர் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

நல்லவற்றைக் கூடைகளிலும் கெட்டவற்றை வெளியேயும் எறிவர்

நற்செய்தியில் இயேசு, விண்ணரசைக் கடலில் வீசப்பட்டு, எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டு வரும் வலைக்கு ஒப்பிடுகின்றார். வலை நிறைந்ததும் எப்படி நல்லவற்றைக் கூடையிலும், கெட்டவற்றை வெளியேயும் எறிவார்களோ, அப்படி உலக முடிவிலும் நேர்மையாளர்களிடமிருந்து தீயவர்கள் பிரிக்கப்பட்டுத் தீச்சூளையில் தள்ளப்படுவார்கள் என்கின்றார். அப்படியெனில், நேர்மையாளர்கள் நேர்மைக்கான கைம்மாறினையும், தீயவர்கள் தாங்கள் செய்த தீமைக்குக் கைம்மாறினையும் பெறுவார்கள் என்பது உறுதியாகின்றது.

ஆண்டவராகிய இயேசு, ஒவ்வொருவரிடமும், அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடச் சொன்னார் (மத் 6: 33). இயேசுவின் இவ்வார்த்தைகளுக்குப் பணிந்து, யாரெல்லாம் அவரது ஆட்சியை நாடுகின்றார்களோ அவர்கள் நேர்மையாளர்களைப் போன்று விண்ணகத்தில் இடம் பெறுகின்றார்கள். அதேநேரத்தில் இயேசுவின் வார்த்தைகளைக் கேளாமல் தீய வழியில் செல்கின்றவர்கள் தீச்சூளையில் தள்ளப்படுகின்றார்கள்.

நாம் விண்ணகம் செல்வதும் பாதாளம் செல்வதும் நம் கையில் உள்ளது என்பதை உணர்வது நல்லது

களைகள் உவமைக்கும், வலை உவமைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

இங்கு நமக்கு ஒரு கேள்வி எழலாம். இயேசு சொல்லும் களைகள் உவமையும், வலை உவமையைப் போன்று, உலக முடிவின்போது நல்லவர்கள் விண்ணகம் செல்வார்கள்... தீயவர்கள் பாதாளம் செல்வார்கள் என்ற செய்தியைத்தானே சொல்கின்றது! அப்படியிருக்கையில் வலை உவமையில் என்ன சிறப்பு இருக்கின்றது என்பதே அந்தக் கேள்வி. களைகள் உவமை பாவிகள் மனம்மாறக் கடவுள் பொறுமையோடு இருக்கின்றார் என்பதைச் சொல்வதாக இருக்கின்றது; ஆனால், வலை உவமையோ இறுதித் தீர்ப்பைப் பற்றிச் சொல்கின்றது. அது மனம்மாறுவதற்குக் கொடுக்கப்பட்ட காலத்தையும் ஒருவர் சரியாகப் பயன்படுத்தாதபோது, அவர் அதற்கேற்ற தண்டனையைப் பெறுவார் என்பதை எடுத்துச் சொல்கின்றது.

ஆகையால், நாம் கடவுளிடமிருந்து அருளைப் பெற தீய வழியில் அல்ல, நல்லவழியில் நடக்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

"மானிடமகன் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்" (மத் 16: 27) என்பார் இயேசு. ஆகையால், கடவுள் நம்முடைய குற்றங்களை மன்னிப்பவராக இருந்தாலும், இறுதித் தீர்ப்பின்பொழுது, அவர் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், இறைவனுக்கு உகந்தவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!