Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     26 ஜூலை 2020  
                                            பொதுக்காலம் 17 ஆம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 5, 7-12

அந்நாள்களில்

கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். "உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!" என்று கடவுள் கேட்டார்.

என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்துகொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்களினத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?" என்று கேட்டார்.

சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், "நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதும் இல்லை."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 119: 57,72. 76-77. 127-128. 129-30 . (பல்லவி: 97a) Mp3
=================================================================================
பல்லவி: உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
57
ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன்.
72
நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. - பல்லவி

76
எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ!
77
நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். - பல்லவி

127
பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன்.
128
உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். - பல்லவி

129
உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
130
உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்கவேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 28-30

சகோதரர் சகோதரிகளே,

கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தம்மால் முன்பே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார்.

தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோர் ஆனோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-52

அக்காலத்தில்

இயேசு மக்களை நோக்கிக் கூறியது: "ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.

விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.

இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?" என்று இயேசு கேட்க, அவர்கள் "ஆம்" என்றார்கள். பின்பு அவர், "ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்" என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அல்லது குறுகிய வாசகம்

தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-48

அக்காலத்தில்

இயேசு மக்களை நோக்கிக் கூறியது: "ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு

I 1 அரசர்கள் 3: 5, 7-12
II உரோமையர் 8: 28-30
III மத்தேயு 13: 44-52

விண்ணரசும் புதையலும்

நிகழ்வு

ஆற்றங்கரையோரமாய்த் துறவி ஒருவர் இருந்தார். அவரிடத்தில் இரண்டு சீடர்கள் இருந்தார்கள். துறவிக்கு வயதாகிக்கொண்டு போனதால், அவர் இந்த மண்ணுலகில் வாழப் போவது இன்னும் சிறிதுகாலம்தான் என்பதை உணர்ந்த அவருடைய இரண்டு சீடர்களும் அவரிடம், "சுவாமி! நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பாக, எங்களுக்கு ஓர் அறிவுரை சொல்லிவிட்டுப் போங்கள்" என்றார்கள். உடனே துறவி அவர்களிடம், "இந்த இடத்தில் புதையல் ஒன்று இருக்கின்றது. தேடி எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் ஓரிரு நாள்களில் இறந்துபோனார்.

துறவி இறந்தபின்பு, அவருடைய இரண்டு சீடர்களும் அவர் சொன்னதுபோன்று புதையலைத் தேடத் தொடங்கினார்கள். ஒரு சீடர் கையில் கடப்பாரை, மண்வெட்டியை எடுத்துக்கொண்டு, துறவி இருந்த இடத்தில் ஆழமாகக் குழிதோண்டிப் புதையலைத் தேடத் தொடங்கினார். அவர் தோண்டிய குழி ஆழமாகவும் அகலமானதும் ஆனதே ஒழிய, புதையல் கிடைத்தபாடில்லை. இன்னொரு சீடரோ, துறவி இருந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளி, ஒரு துண்டை விரித்து, அதில் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார்.

இப்படியிருக்கையில் அந்த வழியாக வானதூதர் ஒருவர் வந்தார். அவர் இரண்டு சீடர்களும் செய்துவந்த செயலைப் பார்த்துவிட்டு, "புதையலை ஒருவர் மண்ணுக்குள் தேடுகின்றார்; இன்னொருவரோ தனக்குள் தேடுகின்றார். இறுதியில், தனக்குள் தேடுபவருக்கே புதையல் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டுப் போனார். ஆம், புதையலைத் தனக்குள் தேடிய இரண்டாவது சீடருக்கே கிடைத்தது.

இறையாட்சி - விண்ணரசு - உங்கள் நடுவே, உங்குக்குகுள்ளே செயல்படுகின்றது என்று இயேசு சொல்வாரே! (லூக் 17: 21). அது போன்று விண்ணரசு நம் நடுவே, நமக்குள்ளே இருக்கின்றது. இந்த உண்மையை உணர்ந்து, எவர் ஒருவர் தூய ஆவியார் தங்கும் கோயிலான தனக்குள் (1 கொரி 6: 19) தேடுதலைத் தொடங்குகின்றாரோ, அவர் புதையலைக் கண்டுகொள்வார். இத்தகைய செய்தியைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறான இன்று, நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை விண்ணரசு விலைமதிக்கப்பெறாத புதையலுக்கு ஒப்பானது என்ற செய்தியைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

விண்ணரசு, புதையலைப் போன்று விலைமதிப்பற்றது

வீட்டை விட்டுக் கடற்கரையோரமாய் வரும் இயேசு (மத் 13: 1), மக்களிடம் விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பல்வேறு உவமைகள் வழியாகப் விளக்கத் தொடங்குகின்றார். விண்ணரசைக் கடுகுவிதைக்கும் புளிப்பு மாவுக்கும்... ஒப்பிட்டுப் பேசிய இயேசு, இன்றைய நற்செய்தியில் விண்ணரசைப் புதையலுக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார். இயேசு எதற்கு விண்ணரசைப் புதையலுக்கு ஒப்பிடுகின்றார் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

பழங்காலத்தில் இன்றைக்கு இருப்பது போன்று பணத்தையும் நகைகளையும் பொருள்களையும் சேர்த்துவைக்க வங்கிகள் கிடையாது. அதனால் நிலம்தான் மக்கள் தங்களுடைய பொருள்களைச் சேமித்து வைப்பதற்கான வங்கியாக இருந்தது. இதற்கு நடுவில் எதிரி நாட்டினர் தங்களுடைய நாட்டின்மீது போர்தொடுக்கும்பொழுது, அவர்களிடமிருந்து தாங்கள் சேர்த்து வைத்த விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாக்கும் வண்ணம், ஒரு பெரிய பானையில் பொருள்களைப் போட்டு, அதை மண்ணைத் தோண்டிப் புதைத்து வைத்தார்கள். எதிரிகள் படையெடுப்பின்பொழுது ஒருவேளை அவர்கள் கொல்லப்படலாம் அல்லது நாடுகடத்தப்படலாம். இதனால் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட புதையல் அப்படியே இருக்கும். பின்னாளில் மண்ணைத் தோண்டிப் பார்க்கின்றவருக்கே அந்த விலைமதிக்கப்பெறாத புதையல் கிடைக்கும்.

இத்தகைய விலைமதிக்கப்பெறாத, யாருக்கும் அவ்வளவு எளிதாகக் கிடைக்காத, இன்னும் சொன்னால் சிரமப்பட்டுத் தோண்டுகின்றவருக்கே கிடைக்கக்கூடிய புதையலை இயேசு விண்ணரசிற்கு ஒப்பிடுவதன் வழியாக, விண்ணரசு விலைமதிக்கப்பெறாதது, அகலமான வாயில் வழியாக அல்ல, இடுக்கமான வாயில் வழியாக நுழைவோருக்கு அது கிடைக்கக்கூடியது என்பதைச் சொல்லாமல் சொல்கின்றார்.

இழப்பதின் மூலமே விண்ணரசைப் பெற முடியும்

இயேசு, விண்ணரசைப் புதையலை ஒப்பிடுவதன் வழியாக ஒரு முக்கியமான செய்தியை நமக்குச் சொல்கின்றார். அது என்னவெனில், நற்செய்தியில் வரும் புதையலைக் கண்டுபிடித்த நபர், தமக்குள்ள யாவற்றையும் விற்று அல்லது தமக்குள்ள எல்லாவற்றையும் இழந்து புதையல் இருந்த நிலத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டதுபோல, நாமும் நம்மிடம் இருப்பதை; ஏன் நம்மையே இழக்கத் தயாராய் இருந்தோமெனில் விண்ணரசை உரித்தாக்கிக் கொள்ளலாம். இது இயேசு சொல்லும் செய்தியாகும்.

இயேசு தன்னைப் பின்பற்றுகிறவர், எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும்பொழுதுகூட, "தன்னலம் துறந்து, தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்" (மாற் 8: 34) என்றே சொல்கின்றார். ஆகையால், இயேசுவின் சீடராக இருப்பதற்கு எப்படித் தன்னலத்தை துறப்பது அல்லது இழப்பது அவசியமானதாக இருக்கின்றதோ, அப்படி விண்ணரசை நம் உரித்தாக்கிக் கொள்வதற்கு நம்மிடம் இருப்பதை இழக்கத் தயாராக இருக்கவேண்டும்.

விண்ணரசை அடையும்பொழுது எல்லாவிதமான ஆசியும் கிடைக்கும்

நாம் நம்மை இழந்து, விலை மதிக்கப்பற்ற புதையலாகிய விண்ணரசை அடைகின்றபொழுது, எல்லா விதமான ஆசிகளையும் பெற்றுக்கொள்கின்றோம் என்கின்ற இன்னோர் உண்மையையும் இன்றைய இறைவார்த்தை எடுத்துக்கூறுகின்றது. இந்த உண்மையை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இன்றைய முதல் வாசகத்தை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் சாலமோன் மன்னனிடம், "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்கின்றபொழுது, அவர், "ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருளும்" என்பார். இதனால் உவமை அடையும் கடவுள், அவருக்கு அவர் கேட்ட ஞானத்தை மட்டுமல்லாது, அவர் கேளாத செல்வத்தையும் புகழையும் தருவதாக வாக்களிப்பார் (1அர 3: 13). ஆம், நாம் நம்மை இழந்து விண்ணரசை அடைகின்றபொழுது விண்ணரசில் இறைவன் நமக்கு எல்லாவிதமான ஆசிகளையும் தருவார். இயேசுகூட, "ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுகள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்" (மத் 6: 33) என்றுதான் கூறுவார். ஆகையால், நாம் நம்மிடம் இருப்பதையும் நம்மையும் இழந்து, விண்ணரசை உரித்தாக்கிகொண்டு, அதன்மூலம் எல்லா ஆசிகளையும் பெற்றுக்கொள்ள முயல்வோம்.

பல நேரங்களில் நாம் நம்மிடம் இருப்பதை இழக்கத் தயாராக இல்லை என்பது வேதனை கலந்த உண்மை. எப்பொழுது நாம் நம்மை இழக்கத் துணிகின்றோமோ, அப்பொழுது நாம் நம்மைக் கண்டுகொள்கின்றோம். ஆகையால், நாம் விண்ணரசுக்காக நம்மையே இழக்கத் தயாராவோம்.

சிந்தனை

"உன்னைக் கண்டுகொள்வதற்கான மிகச்சிறந்த வழி, மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் உன்னை இழப்பதே" என்பார் காந்தியடிகள். ஆகையால், நாம் விண்ணரசை அடைய மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் வழியாகவும், இயேசுவின் வழியில் நடப்பதன் வழியாகவும் நம்மை இழப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!