|
|
24 ஜூலை 2020 |
|
பொதுக்காலம்
16ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17
மக்களே! என்னிடம் திரும்பி வாருங்கள்; ஏனெனில், நானே உங்கள் தலைவன்;
நகருக்கு ஒருவனையும் குடும்பத்திற்கு இருவரையுமாகத்
தெரிந்தெடுத்து உங்களைச் சீயோனுக்குக் கூட்டி வருவேன். என்
இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள்
உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்.
நீங்கள் நாட்டில் பல்கிப் பெருகும் அக்காலத்தில் யாரும் ஆண்டவரின்
உடன்படிக்கைப் பேழை பற்றியே பேசமாட்டார்கள். அது அவர்கள் எண்ணத்திலோ
நினைவிலோ இராது. அது இல்லை என்று வருந்தி இனி ஒன்றும் செய்யமாட்டார்கள்,
என்கிறார் ஆண்டவர்.
அக்காலத்தில் எருசலேமை "ஆண்டவரின் அரியணை" என அழைப்பார்கள். ஆண்டவரின்
பெயரை முன்னிட்டு எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர்.
தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி இனி நடக்க மாட்டார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
எரே 31: 10. 11-12ab. 13 . (பல்லவி: 10d) Mp3
=================================================================================
பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பது போல் ஆண்டவர் நம்மைக்
காத்திடுவார்.
10
மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப்
பகுதிகளில் அதை அறிவியுங்கள்; "இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக்
கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக்
காப்பார்" என்று சொல்லுங்கள். - பல்லவி
11
யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை
விடுவித்தார்.
12
அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; தானியம்,
திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுகாலிகள், ஆகிய
ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள்; அவர்களது
வாழ்க்கை நீர்வளம் மிக்க தோட்டம் போல் இருக்கும். - பல்லவி
13
அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே
இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை
நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்;
துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 8: 15
அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக்
கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்
பேறுபெற்றோர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்பவர்கள் பயன் அளிப்பர்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-23
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குக் கூறியது: "விதைப்பவர் உவமையைப் பற்றிக்
கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக்
குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள்.
அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச்
செல்வான்.
பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக்
கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள்
வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்;
இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம்
அடைவார்கள்.
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறை
வார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை
நெருக்கிவிடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக்
கேட்டுப் புரிந்துகொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும்,
சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எரேமியா 3: 14-17
"என்னிடம் திரும்பி வாருங்கள்; நானே உங்கள்
தலைவன்"
நிகழ்வு
புனித காசியானுசின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது. உலகில் மக்களுடைய
பாவம் நாளுக்கு நாள் மிகுதியாகிக்கொண்டே போவதை நினைத்துப்
பெரிதும் வருந்திய காசியானுஸ், மக்கள் தங்களுடைய பாவத்திலிருந்து
மனம்மாறவேண்டும் என்பதற்காகக் காட்டிற்குச் சென்று, நோன்பு இருக்கத்
தொடங்கினார்.
ஒருநாள் இவர் நோன்பு இருந்துகொண்டிருக்கும்பொழுது மெய்ம்மறந்த
நிலையில் ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் இவர் ஒரு
கோயிலில் முழந்தாள்படியிட்டு வேண்டிக் கொண்டிருந்தார். இவருக்கு
முன்பாக இருந்த இயேசுவின் பாடுபட்ட சுரூபத்திலிருந்து, தண்ணீர்
பெருக்கெடுத்து ஓடியது. அந்தத் தண்ணீரை நேர்மையாளர்களால்
குடிக்க முடிந்தது; பாவிகளால் குடிக்க முடியவில்லை.
இந்தக் காட்சியிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய
காசியானுஸ், இயேசுவின் பாடுபட்ட சிரூபத்திலிருந்து வழிந்தோடிய
தண்ணீரை நேர்மையாளர்களால் குடுக்க முடிந்தபொழுது, பாவிகளால்
குடிக்க முடியாமல் போனதற்கு, அவர்களுடைய பாவம்தான் காரணம்; ஒருவேளை
பாவிகள் தங்களுடைய பாவத்தை விட்டு விலகு, ஆண்டவரிடம் திரும்பி
வந்து, நேர்மையாளர்களாய் வாழ்ந்தால், அவர்களும் இயேசு அளிக்கும்
வாழ்வுதரும் தண்ணீரைக் குடிக்க முடியும் என்ற உண்மையை உணர்ந்து,
பாவிகள் மனம்மாறவேண்டும் என்பதற்காகத் தன்னுடைய வாழ்நாள்
முழுக்க அவர்களுக்காக வேண்டி வந்தார்.
ஆம், பாவம் செய்து, கடவுளை விட்டு வெகுதொலைவில் சென்றவர்கள்
அவரிடம் திரும்பி வருகின்றபொழுது, அவர் அளிக்கும் ஆசிகளைப்
பெற்றுக்கொள்ள முடியும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த
நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இறைவாக்கினர் எரேமியா
நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், மக்கள் தலைவராகிய
ஆண்டவரிடம் திரும்பி வரவேண்டும் என்ற செய்தியை எடுத்துச்
சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
இஸ்ரயேல் என்னும் நம்பிக்கையற்ற மனைவி
சீனாய் மலையில் ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை
செய்துகொண்டார் (விப 19-20). இந்த உடன்படிக்கையின் படி, ஆண்டவராக,
தலைவராக, கணவராக இருக்கும் கடவுளுக்கு இஸ்ரயேல் மக்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்
இருந்திருக்க வேண்டும்; ஆனால், அவர்கள் வாக்களிக்கப்பட்ட
கானான் நாட்டில் நுழைந்த சில ஆண்டுகளிலியே, கடவுளோடு
செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி, பிற தெய்வங்களை வழித் தொடங்கினார்கள்
(நீத 1-3) இதற்குப் பின்பு வந்த ஆண்டுகளில் இஸ்ரயேல் கடவுள்,
தங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்த உண்மைக் கடவுளை
முற்றிலுமாக மறந்து, பாகால் தெய்வத்திற்குப் பலிபீடங்களை எழுப்பி,
அவற்றில் பலிகளை ஒப்புக்கொடுக்கத் தொடங்கினார்கள். இதனாலேயே
வடநாடான இஸ்ரயேல்மீது கி.மு.722 ஆம் ஆண்டு, அசீரியர்களின் படையெடுத்து
நிகழ்ந்து. இதையெல்லாம் அறிந்த பின்பும் கூட, தென்னாடாம்
யூதாவில் இருந்தவர்கள் கடவுளுக்கு உண்மையாக இல்லாமல், பிற தெய்வத்தை
வழிபாட்டு வந்தார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எரேமியா இறைவாக்கினர் யூதாவில்
இருந்தவர்களிடம் தலைவராகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள் என்றோர்
அழைப்பினைத் தருகின்றார்.
மக்கள் ஆண்டவரிடம் திரும்பி வர எரேமியா விடுக்கும் அழைப்பு
கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத எவரும், தனது
எதிர்காலத்தை நல்லமுறையில் உருவாக்க முடியாது. யூதாவில் இருந்தவர்கள்,
ஆண்டவருக்கு உண்மையாக இல்லாமல் போனதால் இஸ்ரயேலுக்கு நேர்ந்த
துன்பத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறந்தார்கள். இதனாலேயே
பின்னாளில் அவர்கள் பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்டார்கள்.
இதுதான் வரலாறு. இது ஒருபுறம் இருக்க, இறைவாக்கினர் எரேமியா,
யூதாவில் இருந்தவர்களிடம் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள் என்று
அழைப்பு விடுக்கின்றார்.
யூதாவில் இருந்தவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வருவதற்கு இரண்டு
முதன்மையான காரணங்கள் இருந்தன. ஒன்று, இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர்,
தலைவர் மற்றும் கணவர். எனவே, மனைவி கணவரிடம் திரும்பி வருவதுதான்
முறை. இரண்டு, மக்கள் ஆண்டவரும் தலைவரும் கணவருமானவரிடம்
திரும்பி வருகின்றபொழுது, அவர்களுக்கு அவர் நல்ல மேய்ப்பர்களைத்
தருவார் என்பதாகும்.
யூதர்கள் ஆண்டவருக்கு உண்மையாக இல்லாமல் போனதால் என்னவோ, அவர்களை
ஆண்ட தலைவர்களான மன்னர்களும் மேய்ப்பர்களும் தன்னலத்தை நாடுபவர்களானார்கள்.
ஆனால், அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வருகின்றபோது, நல்ல மேய்ப்பர்களைத்
ஆண்டவர் தருவார் என்று கூறுகின்றார். இறைவாக்கினர் எரேமியா உரைக்கின்ற
இந்த வார்த்தைகள் நல்ல ஆயனாம் இயேசுவை நமக்கு நினைவுபடுத்துகின்றன
(யோவான் 10). ஆம், நாம் ஆண்டவரிடம் திரும்பி வரும்பொழுது, நல்ல
ஆயாராம் இயேசுவின் வழியாக ஆண்டவர் நம்மை முறையில் வழிநடத்துவார்
என்பது உறுதி. ஆகையால், நாம் நம்முடைய தீச்செயல்களை
விட்டுவிட்டு, ஆண்டவராகிய கடவுளிடம் திரும்பி வந்து, அவர் தரும்
ஆசியைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
"நன்மையை நாடுகள்; தீமையைத் தேடாதீர்கள். அப்பொழுது... படைகளின்
கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்" (ஆமோ 5: 14) என்பார் ஆமோஸ்
இறைவாக்கினர். ஆகையால், நாம் தீமையை விட்டுவிட்டு, நன்மையின்
ஊற்றாம் ஆண்டவரை நாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 13: 18-23
யார் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட
விதைகளுக்கு ஒப்பானோர்?
நிகழ்வு
கிராமப்புறப் பங்கில் பங்குத்தந்தையாக இருந்த அருள்பணியாளர்
ஒருவர், ஒருநாள் இரவு, கிளைப்பங்கில் திருப்பலி
நிறைவேற்றிவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அது
காட்டுப் பகுதி என்பதால், திடீரென்று அவரை வழிமறித்த திருடன்
ஒருவன், தன்னுடைய கையில் இருந்த பெரிய கத்தியை எடுத்துக்காட்டி
அவரிடம், "உங்கள் கையில் இருக்கின்ற பணத்தை எல்லாம்
கொடுத்துவிடும்; இல்லையென்றால் உம்மை இந்த இடத்திலேயே குத்திக்
கொன்றுவிடுவேன்" என்று மிரட்டினான். அருள்பணியாளரும் எதற்கு
வீண் வம்பு என நினைத்துக்கொண்டு, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம்
அவனிடம் எடுத்துக் கொடுத்தார்.
அவ்வாறு கொடுக்கும்பொழுது அவர் அந்தத் திருடனிடம்,
"என்னிடமுள்ள பணத்தையெல்லாம் உன்னிடம் கொடுத்துவிடுகிறேன்;
ஆனால், ஒன்றை உன் மனத்தில் வைத்துக்கொள்" என்று சொல்லிவிட்டு,
"ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்" என்ற புனித பவுல்
கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் உள்ள இறைவார்த்தையை (கலா
6:7) எடுத்துச் சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
திருடன், அருள்பணியாளர் சொன்ன வார்த்தைகளைப் பெரிதாக
எடுத்துக்கொள்ளாவிட்டாலும், அவர் சொன்ன வார்த்தைகள் திருடனின்
உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தன.
இது நடந்து பத்துப் பதினைந்து ஆண்டுகள் இருக்கும். கிராமப்புற
பங்கில் பங்குப் பணியாளராக இருந்த அந்த அருள்பணியாளர் ஒரு
திருத்தலத்தின் அதிபராக உயர்ந்தார். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று
அவர் திருப்பலி நிறைவேற்றிவிட்டு வெளியே வந்தார். அப்பொழுது
அவரை எதிர்கொண்டு வந்த ஒருவர், "சுவாமி! என்னை
நினைவிருக்கின்றதா?" என்றார். "சரியாக நினைவில்லையே...!
நீங்கள் யார்?" என்று அருள்பணியாளர் அவரிடம் கேட்க, அவர்,
பத்து ஆண்டுகளுக்கு நடந்த அந்த நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டுத்
தொடர்ந்து பேசினார்:
"சுவாமி! உங்களிடமிருந்து நான் பணத்தைக் கவர்ந்த பின்பு
என்னுடைய குடும்பத்தில் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனை வந்தன.
என்னுடைய மனைவி என்னைவிட்டுப் பிரிந்தார். என்னுடைய
பிள்ளைகள்கூட ஒருவர் பின் ஒருவராக இறந்தார்கள். இதனால் நான்
தனித்து விடப்பட்டேன். அப்பொழுதான் நான், நீங்கள் சொன்ன
"ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்" என்ற வார்த்தைளை
நினைவு கூர்ந்தேன். நான் உங்களிடமிருந்தும், உங்களைப் போன்ற
பலரிடமிருந்தும் பணத்தைக் கவர்ந்தால்தான் எனக்கு
இப்படியெல்லாம் நடக்கின்றன என்று நினைத்துக்கொண்டு, அன்றோடு
திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு, என்னுடைய வாழ்வில்
மாற்றத்தைக் கொண்டுவந்த நீங்கள் நம்பும் இயேசுவின்மீது
நம்பிக்கைகொண்டு, திருமுழுக்குப் பெற்று, ஓர் உண்மையான
கிறிஸ்தவனாக வாழத் தொடங்கினேன். இப்பொழுது என்னுடைய வாழ்க்கை
மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கின்றது."
அவர் இவ்வாறு சொல்லி முடித்ததும், அருள்பணியாளர் அவரிடம்,
"மிகவும் நல்லது. தொடர்ந்து கடவுளின் வார்த்தைக்கேற்ப
வாழுங்கள். உங்களுக்கு எல்லா நலமும் பெருகும்" என்றார்.
ஒரு காலத்தில் பெரிய திருடனாக இருந்தவர், இறைவார்த்தை தன்னுடைய
உள்ளத்தை ஊடுருவ அனுமதித்ததால், நல்ல பலன் கொடுக்கும்
மனிதரானார். நாமும் இறைவார்த்தையை நம்முடைய உள்ளத்தை ஊடுருவ
அனுமதித்தால் அல்லது இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொண்டு
நடந்தால், மிகுந்த கனிதருவோம். இத்தகைய செய்தியை எடுத்துச்
சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
கெட்ட நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் யார்?
இன்றைய நற்செய்தி வாசகம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட
விதைகளுக்கு ஒப்போனோர் யார்? கெட்ட நிலத்தில் விதைக்கப்பட்ட
விதைகளுக்கு ஒப்போனோர் யார்? என்ற கேள்விகளுக்கு விடை
தருகின்றது. முதலில் கெட்ட நிலத்தில் விதைக்கப்பட்ட
விதைகளுக்கு ஒப்பானோர் யார் எனப் பார்ப்போம்.
ஒருசிலர் இறைவார்த்தையைப் புரிந்துகொள்வதே கிடையாது மற்றும்
சிலர் இறைவார்த்தையை முதலில் ஆர்வமாய்க் கேட்டுவிட்டு, பின்னர்
அதை அப்படியே மறந்து விடுவர். வேறு சிலர் இறைவார்த்தையைக்
கேட்டு நடப்பர், அதே நேரத்தில் உலகப் பற்றும் அவர்களை
இறுக்கிப்பிடிப்பதால் அவர்கள் பலன்கொடுக்காமலேயே இருந்து,
கெட்ட நிலத்தில் விழுந்த விதைகளுக்குக் ஒப்பானவர்களாய்
இருப்பார்கள். ஆம், வழியோர நிலம், பாறை நிலம், முட்செடி நிலம்
இவையெல்லாம் பலன் கொடுக்காமல் இருப்பதால் ஒருவகையில் கெட்ட
நிலம்தான்.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் யார்?
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர்,
இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வர் என்கின்றார்
ஆண்டவர் இயேசு. ஆம், எவர் ஒருவர் இறைவார்த்தையைக் கேட்டு,
அதனுடைய ஆற்றலையும் வல்லமையையும் புரிந்துகொள்கின்றாரோ, அவர்
அதற்குப் பணிந்து நடப்பார். அதன்மூலம் அவர் மிகுந்த பலன்
கொடுப்பார். இவ்வாறு அவர் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட
விதைகளுக்கு ஒப்பானோர் ஆவார்.
நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதைப் புரிந்துகொண்டு, அதன்படி
வாழ்ந்து, நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு
ஒப்போனாராக இருக்கின்றோமா? அல்லது இறைவார்த்தையைக் கேளாமலும்,
கேட்டாலும் அதைப் புரிந்துகொள்ளாமலும், அதன்படி வாழாமலும்
இருந்து கெட்டநிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோராக
இருக்கப் போகிறோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை
ஏமாற்றிக் கொள்ளவேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாகவும்
இருங்கள்" (யாக் 1: 22) என்பார் புனித யாக்கோபு. ஆகவே, நாம்
இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கிறவர்களாக இருப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|