Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     12 ஜூலை 2020  
                                            பொதுக்காலம் 15 ஆம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மழை நிலத்தை நனைத்து, விளையச் செய்கிறது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11

ஆண்டவர் கூறுவது:

மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3a)
=================================================================================
 திபா 65: 9abc. 9d-10. 11-12. 13 . (பல்லவி: லூக் 8: 8) Mp3

பல்லவி: நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன.
9abc
மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. - பல்லவி

9d
நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர்.
10
அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். - பல்லவி

11
ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.
12
பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. - பல்லவி

13
புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! - பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-23

சகோதரர் சகோதரிகளே,

இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது.

இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதை, அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாரும் என்றென்றும் நிலைத்திருப்பார். அல்லேலூயா.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
விதைப்பவர் விதைக்கச் சென்றார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-23


அக்காலத்தில்

இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்:

"விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்றார்.

சீடர்கள் அவர் அருகே வந்து, "ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?" என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: "விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:

"நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.

உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான்.

பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.

முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்."

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்


விதைப்பவர் விதைக்கச் சென்றார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில்

இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்:

"விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

I எசாயா 55: 10-11
II உரோமையர் 8: 18-23
III மத்தேயு 13: 1-23

"வாழ்வளிக்கும் (இறை)வார்த்தை"

நிகழ்வு

அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் இருந்த பங்குத்தந்தையைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். அவன் ஒருகாலத்தில் ஊதாரியாக வாழ்ந்தவன்; பங்குத்தந்தைதான் அவனைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவந்திருந்தார். அதனால் அவனுக்குப் பங்குத்தந்தையின்மீது தனிப்பட்ட பாசமும் மதிப்பும் இருந்தன.

பங்குத்தந்தை அவனைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின் அவனிடம் அவர் நலம் விசாரித்துவிட்டு, அவன் வந்த நோக்கத்தைக் கேட்டார். அவனோ, "சுவாமி! நான் இயேசுவின் மலைப்பொழிவை பாராமல் சொல்வேன்" என்று உற்சாகமாகச் சொன்னான். "சொல், பார்க்கலாம்" என்று அவர் சொன்னதும், அவன் கொஞ்சம்கூட பிசிறு இல்லாமல், திருவிவிலியத்தில் இருப்பதுபோன்று அப்படியே சொல்லி முடித்தான். பங்குத்தந்தைக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. "தம்பி! அருமையாகச் சொன்னாய்! வாழ்த்துகள்" என்று அவர் அவனைப் பாராட்டிவிட்டு, "ஆனால், இறைவார்த்தையை மனப்பாடம் செய்வதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது; அதை உன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டும்" என்றார்.

பங்குத்தந்தை இவ்வாறு சொன்னதற்கு அந்த இளைஞன், "சுவாமி! நான் இறைவார்த்தையை மனப்பாடம் செய்வதோடு மட்டுமல்லாமல், அதைக் கடைப்பிடித்து வாழ்கிறேன்" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தான்: "வழக்கமாக நான் திருவிவிலியத்திலிருந்து ஓர் இறைவார்த்தைப் பகுதியை வாசித்தேன் என்றால், அதை நான் பணிசெய்யும் இடத்தில் இருக்கின்ற என்னுடைய நண்பனிடம் சொல்லிக்காட்டுவேன். அவன் பிற சமயத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், இறைவார்த்தையைக் கேட்பதில் அவனுக்கு அவ்வளவு ஈடுபாடு! இப்படி நான் அன்றாடம் வாசிக்கக்கூடிய இறைவார்த்தையை அவனிடம் சொல்வதால் அந்த இறைவார்த்தை எனக்கு மனப்பாடம் ஆகிவிடுகின்றது. அத்தோடு, அந்த இறைவார்த்தை எனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இந்த மாற்றத்தைக் காணும் என்னுடைய நண்பனும் இப்பொழுது நல்லதொரு வாழ்க்கை வாழத் தொடங்கிவிட்டான்."

அந்த இளைஞன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பங்குத்தந்தை, "தம்பி! நீ இறைவார்த்தையை வாசிப்பதோடு மட்டுமல்லமல், அதை வாழ்ந்து காட்டி, மற்றவருக்கும் ஒளியாக இருக்கின்றாயே! அதை நினைக்கும்பொழுது மிகவும் பெருமையாக இருக்கின்றது. வாழ்த்துகள்" என்று சொல்லி, அவனை அனுப்பி வைத்தார்.

நாம் வாசிக்கின்ற, கேட்கின்ற இறைவார்த்தை முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலனளிக்கவேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளின் வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருவிவிலித்தைப் பற்றி அறிஞர் பெருமக்கள்

"கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்த பெரிய கொடை திருவிவிலியம்" முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்.
"இங்கிலாந்து நாட்டிற்கு இரண்டு நூல்கள் மிகவும் முக்கியமானவை. ஒன்று திருவிவிலியம். மற்றொன்று, ஷேக்ஸ்பியரின் நூல்கள். இதில் வியப்புக்குரிய உண்மை என்னவெனில், ஷேக்ஸ்பியரை இங்கிலாந்து உருவாக்கியது. அந்த இங்கிலாந்தைத் திருவிவிலியம் உருவாக்கியது" விக்டர் ஹுகோ.
"இறைவேண்டல் செய்யும்பொழுது, இறைவனிடம் நாம் பேசுகின்றோம்; திருவிவிலியத்தை வாசிக்கும்பொழுது, இறைவன் நம்மோடு பேசுகின்றார்" மறைப்பணியாளர் டி.எல்.மூடி.
"திருவிவிலியத்தில் சொல்லப்பட்ட உயர்ந்த நெறிகளின்படி வாழ்ந்தால், மேலும் மேலும் நாம் வளர்ச்சியடைவோம். அதன்படி நாம் வாழவில்லை என்றால், நம்முடைய அழிவு எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது" டானியல் வெப்ஸ்டர்.

திருவிவிலியத்தைக் குறித்து அறிஞர் பெருமக்கள் மேலே கூறியுள்ள வார்த்தைகள், திருவிவிலியம் எவ்வளவு வல்லமையானது என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இத்தகைய வல்லமை நிறைந்த திருவிவிலியத்திற்கு அதில் உள்ள இறைவார்த்தைக்கு எப்படிப் பதில் தருகின்றோம் என்பதைப் பொருத்தே நம்முடைய வாழ்வும் தாழ்வும் இருக்கின்றது. அதை விளக்குவதாக இருப்பதுதான் இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய விதைப்பவர் உவமை.

இறைவார்த்தையைக் கேட்டும் பலன்கொடுக்காதவர்கள்

இயேசு சொல்லக்கூடிய விதைப்பவர் உவமையில் "வழியோர நிலம், பாறைநிலம், முட்செடி நிலம், நல்லநிலம் என்று நான்கு வகையான நிலங்கள் இடம்பெறுகின்றன. இந்நான்கு வகையான நிலங்களையும், ஒருவர் இறைவார்த்தைக்குப் பதிலளிப்பதன் அடிப்படையில் அவருடைய உள்ளத்தோடு ஒப்பிடலாம். மேலும், இந்த நான்குவகையான நிலங்களைக்கூட, இறைவார்த்தைக் கேட்டும் பலன்கொடுக்காதவர்கள்; இறைவார்த்தைக் கேட்டுப் பலன்கொடுப்பவர்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.

வழியோர நிலம் போன்ற மனதுடையவர்கள், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போன்றவர்கள். இவர்கள் இறைவார்த்தை தங்களுடைய செவிகளில் விழாதவண்ணம், காதுகளை அடைத்துக்கொள்ளக்கூடியவர்கள். இப்படிப்பட்டவர்கள் பலன் கொடுக்கமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். பாறைநிலம் போன்ற மனதுடையவர்கள், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போன்றவர்கள். இப்படிப்பட்டவர்கள் இறைவார்த்தையை முதலில் ஆர்வமாகக் கேட்பார்கள்; ஆனால், இவர்கள் இறைவார்த்தை தங்களை ஊடுருவ அனுமதிப்பதில்லை. ஆன்மாவையும் ஆவியையும் பிறக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவும் இறைவார்த்தை தங்களுடைய உள்ளத்தை ஊடுருவ அனுமதித்தல்தானே, அது பலன்கொடுக்கும். பாறை நிலம் போன்றவர்களோ இறைவார்த்தை தங்களுடைய உள்ளத்தை ஊடுருவ அனுமதிக்காததால் பலன்கொடுக்காதவர்களாகப் போய்விடுவார்கள்.

முட்செடி நிலம் போன்றவர்கள், இயேசுவின் பன்னிரு சீடர்களின் ஒருவனும், அவரைக் காட்டிக் கொடுத்தவனுமாகிய யூதாசு இஸ்காரியோத்து போன்றவர்கள். இவர்களுக்கு இறைவார்த்தையும் முக்கியம்; உலக இன்பமும் முக்கியம். வேடிக்கை என்னவெனில், உலக இன்பமும் உலகக்கவலையும் தங்களுடைய உள்ளத்தில் விழுந்த இறைவார்த்தையை நெருக்கிவிடுவதால், இவர்கள் கடைசியில் பலன் கொடுக்காமல் போய்விடுவார்கள். இவ்வாறு வழியோர நிலம் போன்ற மனம்கொண்டவர்களும், பாறைநிலம் போன்ற மனம்கொண்டவர்களும், முட்செடி நிலம் போன்ற மனம் கொண்டவர்களும் பலன் கொடுக்காமலே போய்விடுவார்கள்.

இறைவார்த்தையைக் கேட்டுப் பலன்கொடுப்பவர்கள்

ஜே.ஹச். ஸ்மித் என்ற எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: "கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள திருவிவிலியத்தை ஒரே நேரத்தில் தட்டினால், அதிலிருந்து எழும் தூசு, உலகில் மிகப்பெரிய சூறாவளியை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை." எவ்வளவு வேதனை கலந்த உண்மையாக இருக்கின்றது. நாம் இறைவார்த்தையை வாசிப்பது இல்லை. வாசித்தாலும் அதன்படி வாழ்வதில்லை என்பதையே மேலே உள்ள வார்த்தைகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக இருப்பவர்கள் நல்லநிலம் போன்ற மனதுடையவர்கள். இவர்கள் புனித கன்னி மரியாவைப் போன்றவர்கள். காரணம், புனித கன்னி மரியா, இறைவார்த்தையைக் கேட்டார். கேட்டதோடு மட்டுமின்றி, அதைத் தன்னுடைய உள்ளத்தில் பதித்து வைத்து (லூக் 2: 51), அதன்படி வாழ்ந்தார். அதனால் மிகுந்த கனிதந்தார். நாமும் மரியாவைப் போன்று இறைவார்த்தையைக் கேட்டு, அதை வாழ்வாக்கினால் முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலன்தருவோம். உறுதி. ஏனென்றால், இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போன்று, இறைவார்த்தை மழையைப் போன்று, பனியைப் போன்று எதற்காக அனுப்பப்பட்டதோ, அந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும. ஆகையால், நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து மிகுந்த பலன் தருபவர்கள் ஆவோம்.

சிந்தனை

"இவ்வுலகில் இதுவரை அச்சடிக்கப்பட்ட நூல்களில் மிகவும் போற்றுதற்குரியதும் பயனுள்ளதுமான ஒரு நூல் உண்டெனில், அது திருவிவிலியம்தான் என்பார் பேட்ரிக் ஹென்றி (1736-1799) என்ற அறிஞர். ஆகையால், மிகவும் போற்றுதற்குரியதும் பயனுள்ளதும் வாழ்வளிப்பதுமான திருவிவிலியத்தில் உள்ள இறைவார்த்தை வாசித்து, வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
பொதுக்காலம் 15ம் ஞாயிறு

ஞாயிறு வாசகங்கள்

I இறைவாக்கினர் எசாயா 55: 10-11
II உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8: 18-23
மத்தேயு நற்செய்தி 13: 1-23 அல்லது, 13: 1-9 (குறுகிய பாடம்)



இளையவர் ஒருவர், ஒரு நாள், இறைவனிடம் நிபந்தனைகளை அடுக்கிவைத்தார்: "இறைவா, மோசேக்காக முட்புதரை நீர் எரித்ததுபோல், எனக்கும் எரித்துக்காட்டும், நான் உம்மைப் பின்தொடர்வேன். யோசுவாவுக்காக மதில் சுவரை நீர் இடித்ததுபோல், எனக்கும் இடித்துக்காட்டும், நான் உமக்காகப் போராடுவேன். கலிலேயக் கடலில் அலைகளை நீர் அடக்கியதுபோல், எனக்கும் அடக்கிக்காட்டும். உமக்கு நான் செவிசாய்ப்பேன்..." என்று தன் நிபந்தனைகளை அடுக்கிய இளையவர், ஒரு சுவரும், புதரும் அருகருகே அமைந்திருந்த கடற்கரையொன்றில் அமர்ந்து, கடவுள் என்னதான் செய்வார் என்பதைக் காணக் காத்திருந்தார்.
இளையவர் சொன்னதைக் கேட்ட இறைவன், அவருக்கு உடனடியாகப் பதிலளித்தார்.

அவர், நெருப்பை அனுப்பினார், புதரை எரிக்க அல்ல, மனித உள்ளங்களை...
அவர், சுவரை இடித்தார், கற்களால் ஆன சுவரை அல்ல, பாவங்களால் கட்டப்பட்ட சுவரை...

அவர், புயலை அடக்கினார், கடலில் அல்ல, ஆன்மாவில்...
இவற்றையெல்லாம் செய்துமுடித்த கடவுள், அந்த இளையவர் என்ன பதில் சொல்வார் என்று காத்திருந்தார், காத்திருந்தார், தொடர்ந்து காத்திருந்தார்.
அந்த இளையவரோ, புதரில், சுவரில், கடலில் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்ததால், இறைவன் ஒன்றும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
இறுதியில், அந்த இளையவர், இறைவனிடம், "என்ன, உமது ஆற்றலையெல்லாம் இழந்துவிட்டீரா?" என்று சிறிது ஏளனமாகக் கேட்டார்.

இறைவன் மறுமொழியாக, "நீர் உமது கேட்கும் திறனை இழந்துவிட்டீரா?" என்று கேட்டார்.

"ஒரு மென்மையான இடிமுழக்கம்: புயல் நடுவே இறைவனுக்குச் செவிமடுத்தல்" (A Gentle Thunder: Hearing God Through the Storm) என்ற நூலில், மேக்ஸ் லுக்காடோ (Max Lucado) என்பவர் எழுதியுள்ள உவமை இது.

இயேசுவும், இன்றைய நற்செய்தியில், ஓர் உவமையை நமக்குக் கூறுகிறார். பின்னர், "உங்கள் கேட்கும் திறனை இழந்துவிட்டீர்களா?" என்ற கேள்வியை, நம் அனைவரிடமும் கேட்கிறார். இதை ஒரு கேள்வியாகக் கேட்பதற்குப் பதில், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" (மத். 13:9) என்ற சொற்கள் வழியே, ஒரு சவாலாக, ஓர் அழைப்பாக நம்முன் வைத்துள்ளார். இந்தச் சவாலை, அழைப்பை, இந்த ஞாயிறு வழிபாட்டில், சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம்.

'செவி' என்பது மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் உறுப்பு. இந்த உறுப்பைப் பெற்றிருக்கும் மனிதர்கள் அனைவருமே கேட்கும் திறனைப் பெற்றிருப்பதில்லை. 'கண்' என்ற உறுப்பிருந்தும், பார்வைத் திறனின்றி, 'செவி' என்ற உறுப்பிருந்தும், கேட்கும் திறனின்றி, 'வாய்' என்ற உறுப்பிருந்தும் பேசும் திறனின்றி வாழ்வோரை நாம் அறிவோம். இயேசு இங்கு குறிப்பிடுவது அவர்களைப் பற்றியல்ல. இவ்விதம் வாழ்ந்தோரின் குறைகளை, தன் புதுமைகள் வழியே இயேசு குணமாக்கினார் என்பதை, நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம்.

கேட்கும் திறனிருந்தும், கேட்க விருப்பமின்றி வாழ்வோருக்கு, இயேசு, இந்த சவாலை, அழைப்பை விடுக்கிறார். 'கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையாய்' வாழும் நமக்கு விடுக்கும் ஓர் எச்சரிக்கையாக, இயேசுவின் அழைப்பு, சவால், ஒலிக்கிறது.
செவியிருந்து, கேட்கும் திறனும் இருந்து, கேட்காமல் இருக்க முடியுமா? முடியும். நம்மைச்சுற்றி, நாலாப்பக்கமும், அளவுக்கு மீறிய இரைச்சல்கள் நிறைந்து வழியும்போது, எதையும் கேட்கமுடியாமல் போகும். அல்லது, அவற்றைக் கேட்க விரும்பாமல், நாம், செவிகளையும், மனதையும், மூடிவைக்க முடியும். நம் செவிப்பறைகளைத் தாக்கும் அர்த்தமற்ற ஒலி அலைகள், நம் செவிகளைத் தாண்டி, அறிவில், மனதில் பதிந்து, மாற்றங்களை உருவாக்காமல் கடந்துவிடும். நம்மைச் சுற்றி நாம் பெருக்கிக்கொண்ட தொடர்புக்கருவிகள் உருவாக்கும் 'இரைச்சல்கள்', நமக்குள், எவ்வித பாதிப்புக்களை, மாற்றங்களை உருவாக்குகின்றன என்பதை ஆய்வு செய்வது பயன்தரும் ஒரு முயற்சி.

தொலைக்காட்சி, நாளிதழ்கள், வானொலி, செல்லிடப் பேசி, போன்ற கருவிகள் வழியே, நம்மை ஒரு நாளில் வந்தடையும், ஒலி, ஒளி வடிவச் செய்திகளும், தகவல்களும், குறைந்தது, 100 இருக்கும். நம்மை, ஒவ்வொரு நாளும், இப்படி ஒரு தகவல் கடலில் மூழ்கச்செய்யும் இச்செய்திகள், எவ்வளவு தூரம் நம்மைச் செயல்பட வைக்கின்றன என்பதே, நாம் இன்று மேற்கொள்ள வேண்டிய ஆய்வு.

வாழ்வில் மாற்றங்களை உருவாக்காமல், நம்மைச் செயலுக்கு இட்டுச்செல்லாமல், வெறும் பார்வையாளர்களாக நம்மைச் சிறைப்படுத்தி வைக்கும் இந்த 'இரைச்சல்கள்', எவ்வித பலனையும் அளிக்காது என்பதே, இன்றைய நற்செய்தி தரும் எச்சரிக்கை. இத்தகைய 'இரைச்சல்களுக்கு' பழகிப்போய்விடும் நாம், இறைவனின் வார்த்தைகளையும் 'இரைச்சலாக'க் கருதி, அவற்றையும் ஒதுக்கி வைத்துவிடும் ஆபத்துக்கு உள்ளாகிறோம். இந்த ஆபத்தை நமக்கு உணர்த்தவே, இயேசு, "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்ற எச்சரிக்கையை விடுக்கிறார். இந்த எச்சரிக்கை, இறைவாக்கினர் எசாயா வழியே, ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது என்பதையும், இயேசு, இன்றைய நற்செய்தியில், தன் சீடர்களுக்கு நினைவுறுத்துகிறார்:

மத்தேயு 13:11,15

இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: "இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள்."

இறைவனின் குரலை, திறந்த மனதுடன் கேட்டால், மனம் மாறவேண்டியிருக்கும், செயலாற்றவேண்டியிருக்கும். அவரது செயல்களை, விசுவாசக் கண்களோடு பார்த்தால், அவரைப் பின்செல்லவேண்டியிருக்கும். இதை பிரச்சனையாக எண்ணி அஞ்சுபவர்கள், எதுவும் கேட்காததுபோல், பார்க்காததுபோல், வாழ விரும்புகின்றனர். செயலாற்ற விருப்பமின்றி, உள்ளம் கொழுத்துப்போய் மந்தமாகிவிடுவதால், இறைவன் இவ்வுலகில் இன்னும் தொடர்ந்து செயலாற்றுகிறார் என்ற நம்பிக்கைச் செய்தியைக் கேட்க விருப்பமின்றி, இவ்வுலகம், நம் மேல் திணிக்கும், நம்பிக்கையைக் குலைக்கும் செய்திகளுக்குள் சிறைப்பட்டு விடுகிறோம். அதே நம்பிக்கையின்மையை, மற்றவர் உள்ளங்களிலும் விதைக்கிறோம்.

இன்றைய நற்செய்தியில், 'விதைப்பவர் உவமை'யைப் பகிர்நதுகொள்ளும் இயேசு, அதே மூச்சில், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்ற அழைப்பையும் விடுத்துள்ளார். இயேசு கூறும் இவ்வுவமையில், விதைப்பவர், விதை, விளைநிலம் என்ற மூன்று கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உவமையைச் சிந்திக்கும்போதெல்லாம், நமது சிந்தனைகள், பொதுவாக, விதை, விளைநிலம் என்பனவற்றையேச் சுற்றிவந்துள்ளன. இன்று, ஒரு மாற்றமாக, நாம் விதைப்பவர் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.

விதைப்பவர் எடுத்துச்சென்ற விதைகள், விளைநிலத்தில் மட்டுமல்ல, சுற்றியிருந்த பாதை, பாறைகள், முட்புதர்கள் என்று பல இடங்களிலும் விழுந்தன என்று இயேசு கூறினார். இது விதைப்பவரின் கவனக்குறைவால் நிகழ்ந்ததா? அல்லது, விதைப்பவர், தாராள மனதுடன், விதைகளை, அள்ளித்தெளித்தாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இயேசுவின் இவ்வுவமை, இறை வார்த்தையை மையப்படுத்தியது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, விதைப்பவர், இவ்வாறு செயல்பட்டது, அவரது தாராள மனதைக் காட்டுகிறது என்ற பொருளே, பொருத்தமாக உள்ளது.

தயக்கம் ஏதுமின்றி, நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தும் இறைவனிடம், "ஆற்றில் கொட்டினாலும், அளந்து கொட்டவேண்டும்", "பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும்" என்பன போன்ற பழமொழிகள் அர்த்தமற்று போகும். அத்தகைய இறைவனின் வார்த்தைகளை உலகில் விதைக்கச்செல்லும் நாம், தரம் மிகுந்த, நன்கு உழுது உரமிடப்பட்ட நிலத்தில் மட்டுமே விதைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றால், அது, இறைவார்த்தையை, விலங்கிட்டு, சிறைப்படுத்தும் முயற்சியாக அமையும்.

நாம் என்னதான் தடைகள் விதித்தாலும், விலங்கிட்டு சிறையில் அடைத்தாலும், இறைவார்த்தை, தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை, இறைவாக்கினர் எசாயா, இன்றைய முதல் வாசகத்தில் திட்டவட்டமாகக் கூறுகிறார். அதுவும், இவ்வார்த்தைகளை, இறைவனே நேரடியாகச் சொல்வதுபோல், இன்றைய முதல் வாசகத்தில் ஒலிக்கின்றன:

இறைவாக்கினர் எசாயா 55: 10-11

மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

நிபந்தனைகள் ஏதுமின்றி, தங்கு தடையின்றி, தாராளமாக, இறைவார்த்தையை அள்ளித் தெளிக்கவேண்டும் என்பதை, இயேசு, இவ்வுவமையில் மட்டும் கூறாமல், தன் வாழ்விலும் கடைபிடித்தார். மதத் தலைவர்கள் என்ற பாறைகளில், அவர் விதைத்த வார்த்தைகள், வெறுப்பாக வெடித்தாலும், அவர் சளைக்காமல் விதைத்தார். பாவம் என்ற முட்புதர்களில் சிக்கியிருந்தோரிடம், அவர் விதைத்த வார்த்தைகள் சென்றடைந்தன என்பதையும், முட்புதர்களும், இயேசுவின் வார்த்தையால், மலர்ச்செடிகளாயின என்பதையும், நற்செய்தியில் நாம் அடிக்கடி காண்கிறோம். வெறும் ஆர்வக் கோளாறால் அவரைக் காண வந்தவர்கள், பாதையோர நிலங்கள் என்பதை அறிந்தும், இயேசு, அந்தப் பாதைகளில் விதைப்பதை நிறுத்தவில்லை.

இறைவார்த்தையை விதைப்பது என்றதும், கோவில்களிலும், வேறுபல மத மேடைகளிலும் இறைவார்த்தையைப் பறைசாற்றுவதை மட்டும் எண்ணிப்பார்க்க வேண்டாம். இறைவார்த்தையை விதைப்பது என்பது, ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக, சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் விளைச்சல்! பாகுபாடுகள் பார்க்காமல், ஐயங்களால் அவதிப்படாமல், விதைகளைத் தெளிப்பதைப்பற்றி சிந்திக்கும்போது, பொருள் நிறைந்த கதையொன்று நினைவுக்கு வருகிறது...

நாட்டிலேயே தலைசிறந்த சோளத்தை வளர்ப்பவர் என்ற விருதை, திருவாளர் மைக்கிள் அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் பெற்றுவந்தார். அவரது தொடர் வெற்றியின் இரகசியத்தை அறிய, ஒரு நாளிதழின் நிருபர், அவரைப் பேட்டி கண்டார். பேட்டியின்போது மைக்கிள் அவர்கள் பகிர்ந்துகொண்ட ஒரு விவரம், நிருபருக்கு வியப்பாக இருந்தது. மைக்கிள் அவர்கள், தன் நிலத்தைச் சுற்றியிருந்த மற்ற நில உரிமையாளர்களுக்கு, தன்னிடம் இருந்த சிறந்த விதைகளைக் கொடுத்தார் என்பதே, அந்த வியப்பான விவரம்.

"உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுடன் போட்டி போடுகிறவர்கள் என்பதை அறிந்தும், நீங்கள் ஏன் அவர்களுக்கு சிறந்த விதைகளைத் தந்தீர்கள்?" என்று நிருபர் கேட்டபோது, மைக்கிள் அவர்கள் கூறிய விளக்கம் இதுதான்: "இதைப்பற்றி ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? நன்கு வளர்ந்துள்ள சோளக் கதிரின் மகரந்தத் தூள் காற்றில் கலந்து அடுத்த நிலங்களில் உள்ள சோளக் கதிர்களில் மகரந்த சேர்க்கை செய்கின்றன, இல்லையா? அப்படியிருக்க, என் நிலத்தைச் சுற்றியுள்ளவர்களின் நிலங்களில் தரக் குறைவான சோளக் கதிர்கள் வளர்ந்தால், அது என் கதிர்களின் தரத்தையும் குறைத்துவிடுமே! அதனால், நான் தலை சிறந்த சோளத்தை உருவாக்க வேண்டுமென்றால், என்னைச் சுற்றியிருப்போரும், நல்ல சோளத்தை உருவாக்கவேண்டும். எனவேதான், நல்ல விதைகளை சுற்றியுள்ள நில உரிமையாளர்களுக்கும் தருகிறேன்" என்று, அவர் சொன்ன பதில், வியப்பைத் தந்தாலும், ஆழ்ந்ததோர் உண்மையையும் சொல்லித் தருகின்றது.

நம்மைச் சுற்றிவாழும் அனைவரும் நலமாக இருந்தால் மட்டுமே, நாமும் நலமாக இருக்கமுடியும் என்ற உண்மையை, இந்தக் கொள்ளைநோய் காலம், ஆணித்தரமாக நம் உள்ளங்களில் பதித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக, ஆலயங்களையும், ஞாயிறு வழிபாடுகளையும், அங்கு ஒலிக்கும் இறைவார்த்தையையும் இழந்து வாழும் நம் மத்தியில், இறைவார்த்தையை விதைக்க இறைவன், நம் இல்லம் தேடி வந்துள்ளார்.
விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம், முதலில், திறந்த மனதுடன் இறைவார்த்தையைக் கேட்கும் செவியுடையோராய் இருக்கும் வரத்தை இறைவன் தர வேண்டுவோம். தாராள மனதோடு, நாம் கேட்கும் இறைவார்த்தையை, பிறர் உள்ளங்களில் விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம். இறைவார்த்தையை வாய்மொழியாக விதைப்பதைவிட, வாழ்வின் வழியே விதைப்பதில், ஆற்றலோடு செயலாற்றுவோம். நாம் உன்னத வாழ்வு வாழ்வதற்கு உதவியாக, நம்மைச் சுற்றியிருப்போரும் உன்னத வாழ்வு பெறவேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இறைவன் இந்த நற்பணியில் நமக்குத் துணை புரிவாராக!

Rev. Fr. L. X.Jerome S.J.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!