|
|
02 ஜூலை 2020 |
|
பொதுக்காலம்
13ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு.
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 7: 10-17
அந்நாள்களில்
பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு
இவ்வாறு சொல்லி அனுப்பினான்: "இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு
எதிராகச் சதி செய்கிறான். அவன் சொல்வதை எல்லாம் இந்த நாட்டால்
தாங்கமுடியவில்லை. ஏனெனில், "எரொபவாம் வாளால் மடிவான்; அவனது
நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும்" என்று
ஆமோஸ் சொல்லுகிறான்."
பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, "காட்சி காண்பவனே, இங்கிருந்து
போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு
உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும்
இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம். அரசுக்குரிய
இல்லம்" என்று சொன்னான்.
ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்:
"நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும்
இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன்.
ஆடுகள் ஓட்டிக்கொண்டுபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, "என்
மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு" என்று அனுப்பினார்.
எனவே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்: "இஸ்ரயேலுக்கு எதிராக
இறைவாக்கு உரைக்காதே; ஈசாக்கின் வீட்டார்க்கு எதிராகப் பேசாதே"
என்று நீ சொல்கிறாய்! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "உன் மனைவி
நகரில் விலைமகளாய் இருப்பாள்; உன் புதல்வர் புதல்வியர் வாளால்
மடிவர்; உன் நிலபுலம் பங்குபோட்டுக் கொள்ளப்படும், நீயோ புனிதமற்ற
நாட்டிலே மாண்டு போவாய்; இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே அடிமையாகக்
கொண்டு போகப்படும்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 19: 7. 8. 9. 10 . (பல்லவி: 9b)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையும் நீதியுமானவை.
7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
- பல்லவி
8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
- பல்லவி
9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும்
நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை
முற்றிலும் நீதியானவை. - பல்லவி
10
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை;
தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. -
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
2 கொரி 5: 19
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத்
தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை
எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மக்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-8
அக்காலத்தில்
இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார்.
அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி
அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு
முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள்
மன்னிக்கப்பட்டன" என்றார்.
அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், "இவன் கடவுளைப்
பழிக்கிறான்" என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர். அவர்களுடைய
சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில்
நீங்கள் தீயன சிந்திப்பதேன்? "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"
என்பதா, "எழுந்து நட" என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை
மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள்
அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை
நோக்கி, "நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு
வீட்டுக்குப் போ" என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப்
போனார்.
இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய
அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை (ஜூலை 02)
இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு...
கரடு முரடான மலைப்பாதை. அதில் இளைஞன் ஒருவனுக்கு, இரவில் பயணம்
செய்யவேண்டிய நிர்பந்தம். அப்படி அந்த இளைஞன் செல்லும்போது,
திருப்பத்தில் ஏற்பட்ட லேசான தடுமாற்றம், அவனை பெரிய
பாதிப்புக்குள்ளாகியது.
அம்மா" என்று அலறியவனாய் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டவன்,
மலைப்பாதையில் உருண்டான். உருண்டவன் பாதையின் ஓர தடுப்பைக்
கடந்து சருகினான். அத்தனை வேகமாய் சருகும்போதும் வேட்டையாடும்
புலி நகங்களை பதிப்பதுப்போல் கல்லின் மீதும், மண்ணின் மீதும்
விரல்களை வைத்து பதித்துக்கொண்டே உருண்டான். வாழ்க்கையில் அவன்
செய்த அத்தனைப் புண்ணியங்களுக்கும் பலனாக கடைசியாக அவனுக்கு
கிடைத்தது ஒரு சிறிய மரக்கிளை. போன உயிர் வானம் வரை சென்று
திரும்பியது போல் ஒரு படபடப்பு மனதில். .எங்கிருக்கிறோம்,
என்னவாகப் போகிறோம் என்று யோசித்துப்பார்க்கவே முடியாத
அளவுக்கு மனதிற்கும் கண்ணிற்கும் திரையாய் கும்மிருட்டு.
திக்...திக்...திக்... இதயத்தின் துடிப்பு தெளிவாக உணர்ந்தான்.
மூன்று ஆடுகளில், பலிகொடுக்கப்பட்ட இரண்டு ஆடுகளின்
துடிப்பைக்கண்ட மூன்றாவது ஆட்டின் நிலைமையிலிருந்தான் அவன்.
மரண பீதி, இதுவரை கேள்விப்பட்டிருந்த வார்த்தை இப்போது நேரில்.
காப்பாற்றுவார் யாருமில்லையா? காப்பாத்துங்க...
காப்பாத்துங்க... அழுகுரலுடன் ஒரு அபயக்குரல்.
திடீரென்று எங்கிருந்தோ ஒரு அசரீரி, "மனிதா பயப்படாதே...நான்
உன்னை காப்பாற்றுகிறேன். நீ பற்றியிருக்கும் மரக்கிளையை
விட்டுவிடு". கடுமையான தாகத்திற்கு தண்ணீரை விஷம் கலந்து
கொடுத்ததைப்போல் ஒரு உணர்வு. என்ன ஆனாலும் சரி மரக்கிளையை விட
மாட்டேன் என்பதாய் மனதிற்குள் ஒரு சபதம். மரண பயம். அதிகப்
பசி. மயக்கத்தின் உச்ச நிலை.. கீழே விழாமல் தடுத்திருந்தது மரண
பயத்தோடு கூடிய பிடிகள். வியர்வையில் குளியல்.... இப்படியும்
அப்படியுமாக இரவை விரட்டிக்கொண்டு மெல்ல கதிரவன் தன் காலை
பூமியில் பதிக்க தொடங்கியதும்... முக்கால் மயக்கத்தில் கண்
திறந்து பார்த்தான் எங்கிருக்கிறோம் என, கீழே பார்த்தவனுக்கு
பெருமகிழ்ச்சியுடன் கூடிய பேரதிர்ச்சி. ஆம் அவன் தொங்கிக்
கொண்டிருந்த இடத்திற்கும் பாறையாலான ஒரு தளத்திற்கும் ஒரு
முழமே இடைவெளி.
விடிந்தது பொழுது மட்டுமல்ல. அவனின் உள்ளத்தின்
நம்பிக்கையும்தான். அசரீரியின் வார்த்தைகளின் உண்மையையும்,
தன்னுடைய அவநம்பிக்கையினால் ஏற்பட்ட பேரிழப்புகளையும் எண்ணி
மனம் நொந்து தன்மீது தானே சினம் கொண்டான்.
எதன்மீதும் யார்மீதும் நம்பிக்கையில்லாமல் அவநம்பிக்கையோடு
நிலை எத்துணை பரிதாபமானது என்பதை விளக்கிச் சொல்லும் இந்தக்
கதை நமது சிந்தனைக்குரியது.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, நம்பிக்கையினால் நலம் பெற்ற
ஒருவரைக் குறித்து இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துச்
சொல்கின்றது. நம்பிக்கை ஒருவருக்கு எத்தகைய ஆசிர்வாதத்தைப்
பெற்றுத் தருகின்றது என்று இப்போது பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சொந்த ஊருக்கு
வருகின்றார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நான்கு பேர்
கட்டிலில் கிடத்தி, இயேசுவுக்கு முன்பாகக் கொண்டுவருகிறார்கள்.
இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, அந்த
முடக்குவாதமுற்றவருக்கு நலமளிக்கின்றார். மத்தேயு
நற்செய்தியில் முடக்குவாதமுற்றவரை கட்டிலில் கிடத்தி எப்படிக்
கொண்டுவந்தார்கள் என்று சொல்லப்படாவிட்டாலும் ஒத்தமை நற்செய்தி
நூல்களில் ஒன்றான மாற்கு நற்செய்தியில் இது குறித்து மிகத்
தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
இயேசு தன் சொந்த ஊருக்கு வந்து வீட்டில் போதித்துக்
கொண்டிருக்கின்றார். அவருடைய போதனையைக் கேட்க ஏராளமான பேர்
திரண்டு வருகிறார்கள். இதனால் முடக்கமுற்றவரைச் சுமந்துகொண்டு
வரக்கூடியவர்கள், இயேசு இருந்த வீட்டின்மீது திறப்பு
உண்டாக்கி, அதன்வழியாக முடக்குவாதமுற்றவரைக் கீழே
இறக்குகிறார்கள். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு
அவருக்கு நலமளிக்கின்றார். நற்செய்தியின் ஒருசில இடங்களில்
இயேசு மக்களுடைய அவ நம்பிக்கையைக் கண்டு ஆச்சரியப்பட்டாலும்,
இன்னும் ஒருசில இடங்களில் ஒருசில மனிதர்களிடமிருந்த
நம்பிக்கையைக் கண்டு ஆச்சரியப்படத்தான் செய்கிறார். நூற்றுவத்
தலைவர் இதற்கு நல்ல உதாரணம். அந்த வரிசையில் முடக்குவாத
முற்றவரைச் சுமந்துகொண்டு வந்தவர்களின் நம்பிக்கையும் இயேசுவை
வியப்பில் ஆழ்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.
முடக்குவாதமுற்றவரைச் சுமந்து கொண்டு வந்தவர்களிடம் இருந்த
நம்பிக்கை நமக்கு இருக்கின்றதா? என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும். பல நேரங்கில் நாம் இறைவனிடத்திலும் நம்மோடு
வாழ்பவர்களிடத்திலும் ஏன் நம்மிடத்திலும் கூட நம்பிக்கை
இல்லாமல் இருக்கின்றோம். இத்தகைய நிலையை மாற்றி நாம்
நம்பிக்கையோடு வாழ்வது சிறப்பானது.
ஆகவே, இயேசுவிடத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|