|
|
25 ஜூன் 2020 |
|
பொதுக்காலம்
12ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
யோயாக்கினையும் வலிமை வாய்ந்த அனைவரையும் சிறைப்படுத்திப்
பாபிலோனுக்குக் கொண்டு சென்றான்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 8-17
யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. எருசலேமில்
மூன்று மாதமே அவன் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த எல்நாத்தானின்
மகள் நெகுஸ்தா என்பவளே அவனுடைய தாய். யோயாக்கின் தன் தந்தை
செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச்
செய்தான்.
அக்காலத்தில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் படைவீரர் எருசலேமின்
மீது படையெடுத்து வந்து நகரை முற்றுகையிட்டனர். அப்பொழுது
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும் வந்து நகரை
முற்றுகையிட்டிருந்த வீரர்களோடு சேர்ந்து கொண்டான். எனவே
யூதாவின் அரசன் யோயாக்கினும் அவன் தாயும் அவன் அலுவலர்களும் தலைவர்களும்
அதிகாரிகளும் பாபிலோன் மன்னனிடம் சரணடைந்தனர். அவனைப் பாபிலோன்
மன்னன் தான் ஆட்சியேற்ற எட்டாம் ஆண்டில் சிறைப்படுத்தினான்.
பின்பு அவன் ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களை
எல்லாம் எடுத்துச் சென்றான். ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, ஆண்டவரின்
இல்லத்தில் இஸ்ரயேலின் அரசர் சாலமோன் செய்து வைத்திருந்த எல்லாப்
பொன்கலன்களையும் துண்டு துண்டாக்கினான். மேலும் அவன் எருசலேம்
முழுவதையும், தலைவர்கள் அனைவரையும், ஆற்றல் வாய்ந்த பதினாயிரம்
படை வீரர்களையும் சிற்பக் கலைஞர்களையும், கொல்லர்களையும் நாடு
கடத்தினான். நாட்டில் ஏழை மக்களைத் தவிர எவரையும்
விட்டுவைக்கவில்லை. மேலும் அவன் யோயாக்கினையும், அரசனின்
தாயையும், மனைவியரையும், அவனுடைய அதிகாரிகளையும், நாட்டின்
தலைவர்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தினான்.
மேலும் வலிமை வாய்ந்த ஏழாயிரம் பேர்களைக் கொண்ட
முழுப்படையையும், போர்த் திறனும் உடல் ஆற்றலும் கொண்ட ஆயிரம்
தச்சர்களையும், கொத்தர்களையும் அவன் சிறைப்படுத்திப்
பாபிலோனுக்குக் கொண்டு சென்றான்.
யோயாக்கினுக்குப் பதிலாக அவனுடைய சிறிய தந்தை மத்தனியாவை
அரசனாக்கி, அவனது பெயரைச் "செதேக்கியா" என்று மாற்றினான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 79: 1-2. 3-5. 8. 9 . (பல்லவி: 9bc)
Mp3
=================================================================================
பல்லவி: உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களை விடுவியும்
ஆண்டவரே.
1
கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள்
புகுந்துள்ளனர்; உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர்;
எருசலேமைப் பாழடையச் செய்தனர்.
2
உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு
அடியாரின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள்
அளித்துள்ளார்கள். - பல்லவி
3
அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி
இறைத்தார்கள்; அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை.
4
எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்; எங்களைச்
சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம்.
5
ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா?
உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ? - பல்லவி
8
எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம்
எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம்.
9
எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு
எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை
விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக்
கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள்
அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கற்பாறை மீதும், மணல் மீதும் கட்டப்பட்ட வீடுகள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என்னை நோக்கி, "ஆண்டவரே,
ஆண்டவரே" எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை.
மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே
செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே, உம்
பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை
ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?"
என்பர். அதற்கு நான் அவர்களிடம், "உங்களை எனக்குத் தெரியவே
தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று
போங்கள்" என வெளிப்படையாக அறிவிப்பேன்.
ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற
எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.
மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது;
அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில்
பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத
எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.
மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது;
அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது."
இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள்
கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல்
அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2 அரசர்கள் 24: 8-17
ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச்
செய்த யோயாக்கின்
நிகழ்வு
ஒருநாள் மாலை வேளையில், முல்லா தன்னுடைய வேலையை
முடித்துக்கொண்டு மிகவும் சோகத்தோடு வீட்டிற்குத் திரும்பி
வந்துகொண்டார். அப்பொழுது முல்லாவுக்கு எதிரே வந்த; அவருக்கு
நன்கு அறிமுகமான ஒருவர் அவரிடம், "முல்லா! நீங்கள் ஏன் இவ்வளவு
சோகமாக இருக்கின்றீர்கள்! உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?"
என்றார்.
"ஆமாம். நான் அணிந்திருக்கும் செருப்பு என் கால் அளவைவிட
கொஞ்சம் சிறிதாக இருப்பதால், அது என்னுடைய கால்களை
அறுத்துக்கொண்டே இருக்கின்றது. அதனால்தான் நான் மிகவும்
வருத்தத்தோடு இருக்கின்றேன்" என்றார் முல்லா. "நீங்கள்
அணிந்திருக்கும் செருப்பு, உங்களுடைய கால் அளவை விடச் சிறிதாக
இருக்கின்றது என்றால், செருப்பை மாற்றிவிடலாம்தானே!" என்றார்
அந்த மனிதர். பதிலுக்கு முல்லா அவரிடம், "என்னுடைய பிரச்சனை
அதுவல்ல!" என்றதும், அந்த மனிதர், "அப்படியானால், செருப்பு
வாங்குகின்ற அளவுக்குக் கையில் பணமில்லையா?" என்றார்.
"செருப்பு வாங்கப் பணமெல்லாம் இருக்கின்றது" என்று
அப்பாவியாகச் சொன்னார் முல்லா.
"கையில் பணமிருக்கின்றது என்று சொல்கின்றீர்கள். அப்படியானால்,
உங்களுடைய கால் அளவைவிடக் குறைவான அளவில் ஏன் நீங்கள் செருப்பு
அணிந்திருக்கின்றீர்கள்?" என்று சற்றுக் கோபத்தோடு கேட்ட அந்த
மனிதரிடம், முல்லா இவ்வாறு சொன்னார்: "நான் என்னுடைய காலின்
அளவைவிட குறைந்த அளவில் செருப்பு அணிந்திருப்பதற்குக் காரணம்,
நாள்முழுதும் இந்தக் குறைந்த குறைந்தச் செருப்பை, வேதனையோடு
அணிந்துவிட்டு, இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பாக, இதைக்
கழற்றி, ஓர் ஓரமாக வைக்கும்பொழுது ஒரு சுகம் கிடைக்குமே!
அந்தச் சுகத்திற்காகத்தான் இந்த அளவுகுறைந்த செருப்பை நான்
நாள் முழுவதும் அணிந்திருக்கின்றேன்." முல்லா இவ்வாறு
சொன்னதைக் கேட்ட அந்த மனிதருக்குத் தலையே சுற்றிவிட்டது.
இந்த முல்லாவைப் போன்றுதான், பலரும், வாழ்க்கையில் கிடைக்கின்ற
கணநேர சுகத்திற்காக, தங்களுடைய பாவத்தால் ஒட்டுமொத்த வாழ்வையே
இழக்கின்றார்கள். இன்றைய முதல்வாசகம், சிற்றின்பத்தைத் தந்த
பாகாலுக்காக, பேரின்பத்தைத் தரும் ஆண்டவராகிய கடவுளை மறந்து,
அவருடைய பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து அழிந்துபோன
யூதாவின் மன்னன், யோயாக்கினைக் குறித்து எடுத்துச்
சொல்கின்றது. யோயாக்கின் செய்த தவறு என்ன, அதற்காக அவன்
கொடுத்த விலையென்ன என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
தன் தந்தையைப் போன்று தவறு செய்த யோயாக்கின்
யூதாவின் மன்னனாக இருந்தவன் யோயாக்கின். இவன் தன்னுடைய
பதினெட்டாவது வயதிலேயே யூதாவின் மன்னனானான். இவன் தன்
தந்தையைப் போன்று ஆண்டவருடைய பார்வையில் தீயதெனப்பட்டதைச்
செய்தான். யோயாக்கினின் தந்தையான யோயாக்கிம், ஆண்டவராகிய
கடவுளை வழிபடாமல், பாகால் தெய்வத்தை வழிபட்டு வந்தான்.
அதையேதான் யோயாக்கினும் செய்தான். ஆண்டவராகிய கடவுள் மோசேயின்
வழியாக, "நான் உன் கடவுளாகிய ஆண்டவர்... என்னைத் தவிர வேறு
தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது" (விப 20: 1-3) என்று
சொன்னார். அக்கட்டளையை அப்படியே மீறி, பாகால் தெய்வத்தை
வழிபட்டான் யோயாக்கின். இவ்வாறு அவர் கடவுளின் பார்வையில்
தீயதெனப் பட்டதைச் செய்தான்.
ஆண்டவரைப் புறக்கணித்த யோயாக்கினுக்குக் கிடைத்த தண்டனை
தன்னுடைய பதினெட்டாவது வயதில் யூதாவின் மன்னனாக அரியணையில்
ஏறிய யோயாக்கின், வெறும் மூன்று மாதங்களே அரியணையில்
இருந்தான். அந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, பாபிலோனிய
மன்னன் நெபுகத்னேசரின் படையெடுப்பு யூதாவின் மீது நடக்கின்றது.
இதனால் நகரில் இருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர்
நாடுகடத்தப்பட்டார்கள். அவர்களோடு சேர்த்து பல்வேறு விதமான
கலைஞர்களும் நாடுகடத்தப்பட்டார்கள். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட
மக்கள் அடிமைகளாகப் போன்று வாழத் தொடங்கினார்கள். குறிப்பாக
யூதாவின் மன்னனாக இருந்த யோயாக்கின், முப்பத்தேழு ஆண்டுகள்
சிறையில் இருந்தான். அவனுடைய புதல்களில் யாரும் அதன்பிறகு
அரியணையில் ஏறியதே இல்லை (எரே 22: 28: 20)
யூதாவின்மீது வந்த அழிவுக்கு மிக முக்கியமான காரணம், மக்கள்
உண்மை இறைவனை மறந்துவிட்டு, பிற தெய்வங்களை வழிபட்டதால்தான்.
ஒருவேளை அவர்கள் உண்மை இறைவனுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக
இருந்திருந்தால், அவர்களுக்கு இப்படியோர் அழிவு
ஏற்பட்டிருக்காது.
ஆகையால், நாம் ஆண்டவருக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க
முயற்சி செய்து, அவர் தருகின்ற அருளைப் பெற்ற மக்களாக
இருப்போம்.
சிந்தனை
"உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி
செய்"வாயாக" (லூக் 4: 8) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம்
கடவுளுக்கு உகந்தவர்களாக நடந்து, அவருக்கு மட்டுமே
பணிசெய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 7: 21-29
சொல்பவரல்ல, செயல்படுபவரே
விண்ணரசுக்குள் செல்வர்
நிகழ்வு
1952 ஆம் ஆண்டு அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர் ஜெர்மனியை
சார்ந்த ஆல்பர்ட் சுவைட்சர் (Albert Schweitzer 1875- 1965).
மெய்யியலாளராக, இறையியலாளராக, மறைப்பணியாளராக, மருத்துவராக
அறியப்படும் இவர், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லாம்பரேன்
(Lambarene) என்ற இடத்தில் இருந்த தொழுநோயாளர்கள் நடுவில்
ஆற்றிய பணிகளை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
இவர் விடுமுறைக்காக ஆப்பிரிக்காவிலிருந்து தன்னுடைய சொந்த
ஊருக்கு வந்திருந்தபொழுது, ஒருசில தாய்மார்கள் இவரிடம் வந்து,
"எங்களுடைய பிள்ளைகளை நாங்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்பது
பற்றி ஒருசில அறிவுரை கூறுங்கள்" என்றார்கள். "ஆல்பர்ட்
சுவைட்சர் கற்றறிந்தவர், அதனால் அவர் பிள்ளைகளை எப்படி
வளர்க்கவேண்டும் என்பது பற்றி நீண்டநேரம் பேசுவார்" என்று
அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு
மாறாக அவர், "வாழ்ந்து காட்டுகள், வாழ்ந்து காட்டுங்கள்,
வாழ்ந்து காட்டுங்கள்" என்று மூன்றுமுறை சொல்லித் தன்னுடைய
அறிவுரையை முடித்துக்கொண்டார்.
ஆம், பிள்ளைகள் இப்படி இருக்க வேண்டும்... அப்படி
இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவதற்குப் பதில்,
இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வாழ்ந்து காட்டுவதுதான்
மிகச் சிறந்த அறிவுரையாக இருக்கும் என்பதை
உணர்ந்திருந்ததால்தான், ஆல்பர்ட் சுவைட்சர் தன்னிடம் வந்த
தாய்மார்களுக்கு அப்படியோர் அறிவுரை சொன்னார். அவருடைய போதனையை
நாம் வேறுவிதமாகச் சொல்வதென்றால், "சொல்லை விடவும் செயலே
சிறந்த போதனை" என்று சொல்லலாம்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு விண்ணரசுக்குள் யார் செல்வார்
என்பதற்கான பதிலைத் தருவார். அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவர் விண்ணரசுக்குள் செல்வதில்லை
இன்றைய நற்செய்தி வாசகம் மலைப்பொழிவின் நிறைவுப் பகுதியாக
இருக்கின்றது. இப்பகுதியில் ஆண்டவர் இயேசு, தன்னுடைய போதனையைக்
கேட்டுக்கொண்டிருந்த மக்களிடம், சீடர்களிடம் தீர்க்கமான ஒரு
முடிவினை எடுக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றார். ஒருவர்
இறைவார்த்தைக் கேட்ட பின்பு இரண்டு முடிவுகளில் ஏதாவது ஒரு
முடிவினை எடுக்கலாம். ஒரு முடிவு, இறைவார்த்தையைக் கேட்பதோடு
நிறைவடைவது. இரண்டாவது முடிவு, இறைவார்த்தையைக் கேட்பதோடு
நின்றுவிடாமல், அதன்படி நடப்பது. இது குறித்து நாம் தொடர்ந்து
சிந்தித்துப் பார்ப்போம்.
நேற்றைய நற்செய்தியில் போலி இறைவாக்கினர்களைக் குறித்து
வாசித்தோம் அல்லவா! இவர்கள் அல்லது இவர்களைப் போன்றவர்கள்
இறைவனுடைய வார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடுவார்கள் இன்னும்
சொல்லப்போனால் இவர்கள் இறைவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து
நடப்பது கிடையாது; மாறாக, அவற்றைத் தங்களுடைய பெயரையும்
புகழையும் பெருக்கிக்கொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்வார்கள்.
அதனால் அவர்கள் பெரிய அளவில் இலாபம் அடைவார்கள்.
இப்படிப்பட்டவர்களைக் குறித்துத்தான் இயேசு, என்னை நோக்கி
ஆண்டவர் ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்ல
முடியாது என்று கூறுகின்றார்.
ஆம், இறைவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், அந்த
வார்த்தையைப் பயன்படுத்தியே இலாபம் அடைகின்றவர்கள்...
பலநேரங்களில், மக்களைத் தவறான வழிக்கு இட்டுச்
செல்லக்கூடியவர்கள் எப்படி விண்ணரசுக்குள் செல்ல முடியும்?
நிச்சயமாகச் செல்ல முடியாது.
தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்
இறைவார்த்தையைக் கேட்பதோடு நிறைவடைவது ஒரு முடிவு என்றால்,
இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல், அதன்படி வாழ முயற்சி
செய்வது இன்னொரு முடிவு இன்னொரு முடிவு. இறைவார்த்தையின் படி
வாழ்வதற்கு நாம் இயேசுவுக்கு முதலில் கீழ்ப்படிந்து
நடக்கவேண்டும். அப்படி நாம் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து
நடக்கும்பொழுது மழை, பெருங்காற்று போன்று ஏராளமான துன்பங்கள்
வரும். அப்படிப்பட்ட துன்பங்களுக்கு நடுவில் நாம் மனம்
உடைந்துபோகாமல், உறுதியாக இருந்தோம் எனில், நிச்சயமாக நம்மால்
விண்ணரசுக்குள் செல்ல முடியும்.
இன்றைக்குப் பலர், இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால்
வரும் துன்பங்களுக்கு அஞ்சியே எல்லாரையும் போல் வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்கள். இயேசு சொல்வது போல், "உலகில்
துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். எனினும் துணிவோடு
இருக்கவேண்டும்" (யோவா 16: 33). அப்படி நாம் துணிவோடு இருந்து,
இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து நடந்தோமெனில் அல்லது தந்தையின்
திருவுளத்தின் படி நடந்தோமெனில், நாம் விண்ணரசுக்குள்
செல்லலாம்.
ஆகையால், நாம் விண்ணரசுக்குள் செல்ல, சொல்பவர்களாக அல்லாமல்,
செயல்படுபவர்களாக இருப்போம்.
சிந்தனை
"சாதனையாளர்களின் வழி, பேசுவதை நிறுத்திவிட்டுச் செயலில்
இறங்குவது" என்பார் வால்ட் டிஸ்னி. ஆகையால், நாம் ஆண்டவரே
ஆண்டவரே என்று சொல்லிக்கொண்டிருக்காமல், விண்ணுலகில் உள்ள
தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்வோம். அதன்வழியாக
விண்ணரசுக்குள் செல்வோம். இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை (ஜூன் 25)
இறைவார்த்தையை வாழ்வாக்குவோம்.
ஆங்கில இலக்கியத்தில் மிகப் பிரபலமான ஒரு கதை Mutiny On The
Bounty என்பதாகும். இதில் மியூடினி என்ற நகரைச் சேர்ந்த
ஒருசில இளையோரும், பெண்களும் திருட்டுத்தனமானக மதுபானம்
விற்றதால் பிட்கைர்ன் (Pitcairn) என்ற தீவில் கைதிகளாக
அடைக்கப்படுகிறார்கள்.
அங்கே சென்றவர்கள் சும்மா இருக்கவில்லை. வழக்கம்போல தங்களுடைய
சேட்டையைச் செய்யத் தொடங்கினார்கள். ஒருமுறை அவர்களாகவே
மதுபானம் தயாரித்துக் குடித்ததில், அந்தக் குழுவில் இருந்த
எல்லாருமே இறந்துபோனார்கள். அலெக்ஸ்சாண்டர் ஸ்மித் என்ற ஒரே
ஒரு இளைஞன் மட்டுமே உயிர்பிழைத்தான்.
ஒருநாள் அவன் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது விவிலியம்
ஒன்றைக் கண்டெடுத்தான். அதை முழுமையாக வாசிக்கத் தொடங்கினான்.
விவிலியம் தந்த உத்வேகத்தில் பிட்கைர்ன் என்ற தீவில் இருந்த
மக்கள் யாவரையும் இறைவார்த்தைக்கு ஏற்ப கட்டியெழுப்பத்
தொடங்கினான்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அமெரிக்கக் கப்பல் அங்கு
வந்தது. அந்தக் கப்பலிலிருந்து இறங்கியவர்கள் அங்கு சிறைச்சாலை
இருந்த அடையாளமே இல்லாதது கண்டு, திகைத்து நின்றார்கள். மேலும்
அங்கே நோயாளிகள் என்றோ, படிக்காதவர் என்றோ யாரும் இல்லை.
ஏனென்றால் அங்கே இருந்த யாவரும் கிறிஸ்துவை பற்றிய அறிவைப்
பெற்றிருந்தார்கள். அந்த அறிவைப் பயன்படுத்தி தன்னுடைய
வாழ்வையே மாற்றியமைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்தத்
தீவே ஒரு சொர்க்கம் போன்று காட்சியளித்தது.
இறைவார்த்தையின்படி வாழும்போது ஒரு சமூகம் எப்படிப்பட்ட
மாற்றம் அடைகிறது என்பதை இந்தக் கதை நமக்கு
எடுத்துக்கூறுகிறது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, யார் விண்ணரசுக்குள்
செல்வார்? என்பதைக் குறித்துப் பேசுகிறார். "என்னை நோக்கி
(இயேசுவை நோக்கி) ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம்
விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக விண்ணுலகில் இருக்கும் என்
தந்தையின் திருவுளத்தின்படி நடப்பவரே செல்வார்" என்று ஆண்டவர்
இயேசு மிகத் தெளிவாகக் கூறுகின்றார். ஜெபங்களும், வழிபாட்டுக்
கொண்டாட்டங்களும் மட்டும் ஒரு மனிதனை இறைவன் தரும்
விண்ணரசுக்குள் கூட்டிச் சேர்பதில்லை, மாறாக
இறைவார்த்தையின்படி/ தந்தைக் கடவுளின் திருவுளப்படி
யாராரெல்லாம் நடக்கிறார்களே அவர்களே விண்ணரசுக்குள்
செல்வார்கள் என்பது இயேசுவின் மிகத் தெளிவான போதனையாக
இருக்கின்றது.
பல நேரங்கில் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருசில ஜெபங்களைச்
சொல்வதிலும், பக்தி முயற்சிகளில் ஈடுபடுவதிலும் மட்டுமே
திருப்திப்பட்டுக் கொள்கிறோம். அதைக் கடந்து, வழிபாடு நம்முடைய
வாழ்க்கையோடு ஒத்துப் போவதில்லை. அதனால்தான் தூய யாக்கோபு
தன்னுடைய திருமுகத்தில் கூறுவார், "நம்பிக்கை செயல்வடிவம்
பெறாவிட்டால், தன்னிலே உயிரற்றதாகும்" என்று (யாக் 2:17). நாம்
நம்பியதை வாழ்வாக்கவில்லை என்றால், நமது நம்பிக்கை யாவும்
வீணே. ஆதலால் இறைவார்த்தை நம்முடைய அன்றாட வாழ்வோடு
ஒத்துப்போகும்படி வாழ்வோம்.
தொடர்ந்து ஆண்டவர் இயேசு கூறுவார், "நான் சொல்லும்
இவ்வார்த்தையைக் கேட்டு, இவற்றின்படி செயல்படும் எவரும்,
பாறையின்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.
அதேவேளையில் நான் சொல்லும் இவ்வார்த்தையைக் கேட்டு,
இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய
அறிவிலிக்கு ஒப்பாவர்" என்று.
பாறையின் மீது கட்டப்பட்ட வீடு எப்போதும் உறுதியாக இருக்கும்.
மழையோ, புயலோ எதுவும் அதைத் தீண்டாது. ஆனால் மணல்மீது
கட்டப்பட்ட வீடோ உறுதியற்று இருக்கும். அதற்கு எப்போது
வேண்டுமானால் அழிவு ஏற்படும். இறைவார்த்தையைக் கேட்டு நடக்கும்
யாவரும் பாறையின்மீது தன்னுடைய வீட்டைக் கட்டிய அளிவாளிக்கு
ஒப்பானவர்களே. அவர்களை எந்த தீங்கும், துன்பமும் தீண்டாது.
ஆகையால் நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நமது அமைத்துக்
கொள்வோம். அப்படி நடக்கும்போது நமது வாழ்வு பாறையின்மீது
கட்டப்பட்ட வீட்டிற்கு ஒப்பாகும்; நாம் இறைவன் அளிக்கும்
விண்ணரசை எளிதாகப் பெற முடியும்.
எனவே, இறைவார்த்தையின்படி நடப்போம். இறைவன் அளிக்கும்
முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம். - Fr. Maria
Antonyraj |
|