|
|
23 ஜூன் 2020 |
|
பொதுக்காலம்
12ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என்பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் எருசலேமைப்
பாதுகாத்து விடுவிப்பேன்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 19: 9-11, 14-21,
31-35, 36
அந்நாள்களில்
அசீரிய மன்னன், எத்தியோப்பிய மன்னனான திராக்கா தனக்கு எதிராய்ப்
படை திரட்டிக்கொண்டு வருவதாகக் கேள்வியுற்று, எசேக்கி யாவிடம்
மீண்டும் தூதரை அனுப்பி, "யூதா அரசன் எசேக்கியாவிடம் நீங்கள்
இவ்வாறு கூறுங்கள்: "எருசலேம் அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்பட
மாட்டாது" என்று கூறும் உன் கடவுளை நம்பி ஏமாந்து விடாதே. இதோ!
அசீரிய மன்னர்கள் எல்லா நாடுகளுக்கும் செய்திருப்பதையும், அவற்றை
முற்றிலும் அழித்ததையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க
நீ மட்டும் தப்பிவிட முடியுமா?"
எசேக்கியா தூதரின் கையிலிருந்த மடலை வாங்கி வாசித்தபின்
கோவிலினுள் சென்று ஆண்டவர் திருமுன் மடலை விரித்து வைத்தார்.
மேலும் எசேக்கியா ஆண்டவரை மன்றாடிக் கூறியது: " கெருபுகள் மேல்
வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசுகளுக்கெல்லாம்
நீர் ஒருவரே கடவுள்! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! ஆண்டவரே!
நீர் செவிசாய்த்துக் கேட்டருளும். ஆண்டவரே! உம் விழிகளைத் திறந்து
என்னை நோக்கியருளும். தூதனுப்பி என்றுமுள கடவுளைப் பழித்துரைக்கும்
சனகெரிபின் சொற்களைக் கேட்பீராக! ஆண்டவரே! அசீரிய மன்னர்கள்
வேற்றினத்தாரையும், அவர்கள் நாடுகளையும் அழித்தது உண்மைதான்!
அவர்கள் வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளை நெருப்பிலிட்டு எரித்தனர்.
ஏனெனில் அவை உண்மைக் கடவுளல்ல; மரத்தாலும் கல்லாலும் மனிதன்
செய்தவையே; எனவே அவற்றை அழிக்க முடிந்தது. எங்கள் கடவுளாகிய ஆண்டவரே!
இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம்,
நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும்
அறிந்துகொள்ளும்."
அப்பொழுது ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவிடம் ஆளனுப்பிச்
சொன்னது: "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய
மன்னன் சனகெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டேன். அவனுக்கு
எதிராக ஆண்டவர் கூறிய வார்த்தை இதுவே: கன்னிமகள் சீயோன் உன்னை
இகழ்கிறாள்; உன்னைப் பார்த்து நகைக்கிறாள்; மகள் எருசலேம் பின்
நின்று தலையசைக்கிறாள். ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்து
வெளியேறுவர். உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று புறப்படுவர்.
படைகளின் ஆண்டவரது ஆர்வமே இதை நிறைவேற்றும்!
ஆதலால் ஆண்டவர் அசீரிய மன்னனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்:
இந்நகருக்குள் அவன் நுழைய மாட்டான்; அதில் அம்பு எய்ய
மாட்டான்; அதை எதிர்த்துக் கேடயத்துடன் வரமாட்டான். அதற்கு எதிராக
முற்றுகைத் தளம் எழுப்ப மாட்டான். அவன் வந்த வழியே திரும்பிப்
போவான்; இந்நகருக்குள் நுழையவே மாட்டான் என்கிறார் ஆண்டவர். இந்நகரை
நான் பாதுகாப்பேன்; என்பொருட்டும் என் ஊழியன் தாவீதின்
பொருட்டும் நான் அதை விடுவிப்பேன்."
அன்றிரவு ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச் சென்று அசீரியரின் பாளையத்தில்
இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். மக்கள் காலையில்
எழுந்தபோது அங்கு அனைவரும் செத்துப் பிணமாய்க் கிடந்ததைக் கண்டனர்.
எனவே அசீரிய மன்னன் சனகெரிபு திரும்பிச் சென்று நினிவேயில் தங்கியிருந்தான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 48: 1-2a. 2b-3. 9-10 . (பல்லவி: 8d)
Mp3
=================================================================================
பல்லவி: கடவுள் தம் நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார்.
1
ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில்
மிகுந்த புகழுக்கு உரியவர்.
2a
தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய்
இலங்குகின்றது. - பல்லவி
2b
மாவேந்தரின் நகரும் அதுவே.
3
அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை
எனக் காட்டியுள்ளார். - பல்லவி
9
கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம்.
10
கடவுளே! உமது பெயரைப்போலவே, உமது புகழும் பூவுலகின் கடை எல்லை
வரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது. - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 8: 12
அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர்
இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக்
கொண்டிருப்பார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ
அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6, 12-14
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "தூய்மையானது எதையும்
நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக்
கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன்
எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை
மிதித்துவிடும்.
ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை
எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும்
திருச்சட்டமும் கூறுவது இதுவே.
இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச்
செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே
செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும்
இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர்
சிலரே."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மத்தேயு 7: 6, 12-14
அன்பை விதைத்து, அன்பைப் பெறுவோம்
நிகழ்வு
பதினெட்டாம் நூற்றண்டில், அயர்லாந்து நாட்டில் தோன்றிய
மிகப்பெரிய எழுத்தாளர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் (1728-1774). இவர்
எழுதிய "The Vicar of Wakefield" என்ற நாவலும், "She Stoops to
Conquer" என்ற நாடகமும் மிகவும் பிரபலமானவை. இவர் மருத்துவம்
படித்திருந்ததால், மக்களால் அன்போடு "மருத்துவர் கோல்ட்ஸ்மித்"
என்றே அழைக்கப்பட்டு வந்தார். மக்கள்மீது, அதிலும் குறிப்பாக
ஏழைகள்மீது தனிப்பட்ட அன்புகொண்டிருந்த இவரை அவர்களும் மிகவும்
அன்பு செய்தார்கள்.
ஒருநாள் இவர் தன்னுடைய வீட்டில் இருந்தபொழுது, பெண்மணி ஒருவர்
இவரைப் பார்க்க வந்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக
இருந்தார். அவர் இவரிடம், "ஐயா! என்னுடைய கணவர்
நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடக்கின்றார்; எதுவும்
சாப்பிடமாட்டேன் என்கிறார். நீங்கள் வந்து பார்த்தால் எல்லாம்
சரியாகிவிடும்" என்றார். உடனே கோல்ட்ஸ்மித், தேவையான மருத்துவ
உபகரணங்களை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்மணியின் பின்னாலேயே
சென்றார்.
அந்தப் பெண்மணியின் வீடு ஒரு குடிசை போன்று இருந்தது. அதில்
அவருடைய கணவர் படுக்கையில் படுத்துக்கிடந்தார். கோல்ட்ஸ்மித்
அவரைப் பார்த்தபொழுது, அவர் உடல் நோயினால் பாதிக்கப்பட்டவர்
போன்று தெரியவில்லை; வீட்டில் நிலவிய வறுமையின் காரணமாகவே
அப்படியிருந்தார் என்பது தெரிந்தது. உடனே கோல்ட்ஸ்மித்
அவரிடம், "அம்மா! உங்களுடைய கணவருக்கு என்ன நோய் என்பது
எனக்குத் தெரிந்துவிட்டது. அதற்கான மருந்தினை, மாலையில்
என்னிடம் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு
அங்கிருந்து கிளம்பினார்.
மாலையில் கோல்ட்ஸ்மித் சொன்னதுபோன்றே, அந்தப் பெண்மணி அவரைப்
பார்க்க வந்தார். வந்தவரிடம் கோல்ட்ஸ்மித் ஒரு சிறிய அட்டைப்
பெட்டியை எடுத்துக் கொடுத்து, "அம்மா! இந்த அட்டைப் பெட்டியில்
உங்களுடைய கணவருக்கு வேண்டிய மருந்து மாத்திரைகள் இருக்கின்றன.
இவற்றைப் பத்திரமாக உங்களுடைய வீட்டிற்கு எடுத்துச்
செல்லுங்கள்" என்றார். அதற்கு அந்த பெண்மணி, "எந்த மாத்திரையை
எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பது பற்றி ஒன்றும்
சொல்லவில்லையே" என்றதும், கோல்ட்ஸ்மித் அவரிடம், "அதையெல்லாம்
விவரமாக ஒரு தாளில் எழுதி, உள்ளே வைத்திருக்கின்றேன். நீங்கள்
உங்களுடைய வீட்டிற்குப் போய்த் திறந்து பார்த்துக்
கொள்ளுங்கள்" என்றார்.
பின்னர் அந்தப் பெண்மணி கோல்ட்ஸ்மித் தன்னிடம் கொடுத்த அட்டைப்
பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு போய்த் திறந்து
பார்த்தார். அவர் அட்டையைப் பெட்டியைத் திறந்து பார்த்த
மறுவினாடி, அதிர்ந்துபோனார். காரணம் அதற்குள் அவருடைய
வீட்டிற்குத் தேவையான உணவுப் பொருள்களும், நிறையப் பணமும்
இருந்தன. கூடவே, ஒரு தாள் இருந்தது. அதில் "இந்தப் பெட்டியில்
உள்ள மருந்தை (பணத்தைத்) தேவைப்படும்பொழுது பயன்படுத்திக்
கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. இதைப்
படித்துப்பார்த்த அந்தப் பெண்மணி கோல்ட்ஸ்மித்தை நினைத்து
உள்ளம் பூரித்துப்போனார். உண்மையில், கோல்ட்ஸ்மித் தன்னிடம்
இருந்த எல்லாப் பணத்தையும் அந்த ஏழைக் குடும்பத்தின்
நல்வாழ்விற்காகக் கொடுத்திருந்தார்.
மருத்துவர் கோல்ட்ஸ்மித் இதுபோன்ற அன்புச் செயல்களைச்
செய்ததாலோ என்னவோ, மக்கள் அவரை மிகவும் அன்பு செய்தார்கள்.
ஆம், நாம் மற்றவரிடமிருந்து அன்பைப் பெறுவதற்கு முதலில் நாம்
அன்பை விதைக்கவேண்டும். அதைத்தான் கோல்ட்ஸ்மித்தின் வாழ்க்கை
நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும்
நமக்கு இதே செய்தியைத்தான் தருகின்றது. நாம் அதைக் குறித்து
இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
அன்பைப் பெற, அன்பைத் தருவோம்
நற்செய்தியில் இயேசு, "பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என
விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச்
செய்யுங்கள்" என்ற பொன்விதியைத் தருகின்றார். இது ஏன் பொதிவிதி
என அழைக்கப்படுகின்றது எனில், இறைவாக்கு மற்றும்
திருச்சட்டத்தின் சாரம் இதுதான். அதனாலேயே இது பொன்விதி என
அழைக்கப்படுகின்றது.
இயேசுவின் காலத்திற்கு முன்பு வரை, இக்கட்டளை அல்லது இவ்விதி,
"பிறர் உங்களுக்கு எதைச் செய்யக்கூடாது என்று
விரும்புகிறீர்களோ, அதைப் பிறருக்குச் செய்யாதீர்கள்" என்று
எதிர்மறையாக இருந்தது. இயேசுவோ அதை நேர்மறையாக மாற்றி, மற்றவர்
உங்களை அன்பு செய்யவேண்டும் என்று விரும்பினால், நீங்கள்
அவர்களை அன்பு செய்யுங்கள் என்று கூறுகின்றார்.
இயேசு சொல்வது போல், மற்றவருடைய அன்பையும் இரக்கத்தையும்
மன்னிப்பையும் பெற, நாம் முதலில் அன்பையும் இரக்கத்தையும்
மன்னிப்பையும் தரத் தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"வாழ்க்கையில் தலைசிறந்த இன்பம், அன்பு" என்பார் சர்.
வில்லியம் டெம்பிள் என்ற அறிஞர். ஆகையால், நாம் நமக்கு
இன்பத்தையும், எல்லாவிதமான நலன்களையும் தரும் அன்பை ஒருவர்
மற்றவரிடம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|