|
9 அக்டோபர்
2017 |
|
|
முதல் வாசகம்
யோனாவோ ஆண்டவரிடமிருந்து தப்பியோட எண்ணித் தர்சீசுக்குப் புறப்பட்டார்.
இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 1: 1-17
அமித்தாயின் மகன் யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
அவர், "நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு
வரப்போகிறது என்று அங்குள்ளோருக்கு அறிவி. அவர்கள் செய்யும்
தீமைகள் என்முன்னே வந்து குவிகின்றன" என்றார்.
யோனாவோ ஆண்டவரிடமிருந்து தப்பியோட எண்ணித் தர்சீசுக்குப் புறப்பட்டார்.
அவர் யோப்பாவுக்குப் போய், அங்கே தர்சீசுக்குப் புறப்பட இருந்த
ஒரு கப்பலைக் கண்டார்; உடனே கட்டணத்தைக் கொடுத்துவிட்டு, ஆண்டவர்
திருமுன்னின்று தப்பியோட அந்தக் கப்பலில் ஏறி, அதில் இருந்தவர்களோடு
தர்சீசுக்குப் பயணப்பட்டார்.
ஆனால் ஆண்டவர் கடலில் கடுங்காற்று வீசும்படி செய்தார். கடலில்
பெரும் கொந்தளிப்பு உண்டாயிற்று; கப்பல் உடைந்துபோகும்
நிலையில் இருந்தது. கப்பலில் இருந்தவர்கள் திகிலடைந்தார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் தம் தம் தெய்வத்தை நோக்கி மன்றாடலானார்கள்.
கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அவர்கள் அதிலிருந்த சரக்குகளைக்
கடலில் தூக்கியெறிந்தார்கள். யோனாவோ ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப்
போய்ப் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
கப்பல் தலைவன் அவரிடம் வந்து, "என்ன இது? இப்படித் தூங்கிக்
கொண்டிருக்கிறாயே! எழுந்திரு. நீயும் உன் தெய்வத்தை நோக்கி
வேண்டிக் கொள். ஒருவேளை அந்தத் தெய்வமாவது நம்மைக் காப்பாற்றலாம்.
நாம் அழிந்து போகாதிருப்போம்" என்றான்.
பிறகு கப்பலில் இருந்தவர்கள், "நமக்கு இந்தப் பெரும் தீங்கு
யாரால் வந்தது என்று கண்டறியச் சீட்டுக் குலுக்குவோம்" என்று
ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
அவ்வாறே அவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். சீட்டு
யோனாவின் பெயருக்கு விழுந்தது.
எனவே, அவர்கள் அவரை நோக்கி, "இப்பொழுது சொல். இந்தப்
பெருந்தீங்கு யாரால் வந்தது? உன் வேலை என்ன? எங்கிருந்து வருகிறாய்?
உன் நாடு எது? உன் இனம் எது?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "நான் ஓர் எபிரேயன். நீரையும் நிலத்தையும் படைத்த
விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரை வழிபடுபவன்" என்று சொன்னார்.
மேலும், தாம் அந்த ஆண்டவரிடமிருந்து தப்பியோடி வந்ததாகவும்
கூறினார்.
எனவே அவர்கள் மிகவும் அஞ்சி, "நீ ஏன் இப்படிச் செய்தாய்?" என்று
கேட்டார்கள். கடலில் கொந்தளிப்பு மேலும் கடுமையாகிக்
கொண்டிருந்ததால் அவர்கள் யோனாவிடம், "கடல் கொந்தளிப்பு அடங்கும்படி
நாங்கள் உன்னை என்ன செய்ய வேண்டும்? " என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "நீங்கள் என்னைத் தூக்கிக் கடலில் எறிந்து
விடுங்கள். அப்பொழுது கொந்தளிப்பு அடங்கிவிடும்; நீங்கள்
பிழைத்துக் கொள்வீர்கள். உங்களைத் தாக்கும் இந்தக் கடும்புயல்
என்னால்தான் உண்டாயிற்று என்பது எனக்குத் தெரியும்" என்றார்.
ஆயினும் அவர்கள் கரைபோய்ச் சேர மிகுந்த வலிமையுடன் தண்டு வலித்தனர்;
ஆனால் அவர்களால் இயலவில்லை. ஏனெனில் கடலின் கொந்தளிப்பு மேலும்
மிகுதியாகிக் கொண்டேயிருந்தது.
அவர்கள் அதைக் கண்டு ஆண்டவரை நோக்கிக் கதறி, "ஆண்டவரே, இந்த
மனிதனுடைய உயிரின் பொருட்டு எங்களை அழியவிட வேண்டாம்; குற்றமில்லாத
ஒருவனைச் சாகடித்ததாக எங்கள்மீது பழி சுமத்த வேண்டாம். ஏனெனில்,
ஆண்டவராகிய நீரே உமது திருவுளத்திற்கேற்ப இவ்வாறு செய்கிறீர்"
என்று சொல்லி மன்றாடினார்கள்.
பிறகு அவர்கள் யோனாவைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்; கடல்
கொந்தளிப்பும் தணிந்தது.
அதைக் கண்டு அந்த மனிதர்கள் ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினார்கள்.
அவர்கள் ஆண்டவருக்குப் பலி செலுத்தினார்கள்; பொருத்தனைகளும்
செய்து கொண்டார்கள். ஆண்டவர் ஏற்பாடு செய்திருந்தபடியே ஒரு
பெரிய மீன் வந்து
===================================================================
பதிலுரைப் பாடல்
யோனா 2: 2. 3. 4. 7 (பல்லவி: 6c)
பல்லவி: பாதாளக் குழியிலிருந்து ஆண்டவரே நீர் என்னை மீட்டீர்.
2 ஆண்டவரே! எனக்கு இக்கட்டு வந்த வேளைகளில் நான் உம்மை நோக்கி
மன்றாடினேன். நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர். பாதாளத்தின்
நடுவிலிருந்து உம்மை நோக்கிக் கதறினேன்; என் கூக்குரலுக்கு
நீர் செவிகொடுத்தீர். பல்லவி
3 நடுக் கடலின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்; தண்ணீர்ப்
பெருக்கு என்னைச் சூழ்ந்து கொண்டது. நீர் அனுப்பிய அலை திரை எல்லாம்
என்மீது புரண்டு கடந்து சென்றன. பல்லவி
4 அப்பொழுது நான், `உமது முன்னிலையிலிருந்து புறம்பே தள்ளப்பட்டேன்;
இனி எவ்வாறு உமது கோவிலைப் பார்க்கப் போகிறேன்' என்று சொல்லிக்
கொண்டேன். பல்லவி
7 என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது, ஆண்டவரே! உம்மை
நினைத்து வேண்டுதல் செய்தேன். உம்மை நோக்கி நான் எழுப்பிய மன்றாட்டு
உமது கோவிலை வந்தடைந்தது. பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக்
கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும்
ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
==================================================================
நற்செய்தி வாசகம்
எனக்கு அடுத்திருப்பவர் யார்?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37
அக்காலத்தில் திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச்
சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள
நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு இயேசு,
"திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன
வாசிக்கிறீர்?" என்று அவரிடம் கேட்டார்.
அவர் மறுமொழியாக, "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும்,
முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக.
உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு
கூர்வாயாக' என்று எழுதியுள்ளது" என்றார்.
இயேசு, "சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது
வாழ்வீர்" என்றார். அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட
விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம்
கேட்டார்.
அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: "ஒருவர் எருசலேமிலிருந்து
எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய
ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக
விட்டுப் போனார்கள்.
குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும்
மறுபக்கமாக விலகிச் சென்றார்.
அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும்
மறுபக்கமாய் விலகிச் சென்றார்.
ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில்
வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி,
காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி,
தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு
போய் அவரைக் கவனித்துக்கொண்டார்.
மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம்
கொடுத்து, "இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்கு மேல் செலவானால்
நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.
"கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர்
என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார்.
அதற்குத் திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே"
என்றார்.
இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
----------------------------------------------------------
மறையுரைச்
சிந்தனை
நீரும் போய் அவ்வாறே செய்யும்
புதிதாக வாங்கியிருந்த விலையுயர்ந்த காரை தந்தை ரசித்து, ரசித்து
துடைத்துக்கொண்டிருந்தார். அவருக்கு எதிர்புறம் அவருடைய ஐந்து
வயது மகன் கையில் கல்லை வைத்து, கார் கதவில் எதையோ
கிறுக்கிக்கொண்டிருந்தான். இதை பார்த்துக் கடுப்பான தந்தை, அருகே
கிடந்த கம்பியை எடுத்து, அவனது கையில் ஓங்கி ஓர் அடி அடித்தார்.
வலிதாங்காமல் கையில் இரத்தம் வழிய, அப்படியே சுருண்டு கீழே
விழுந்தான்.
கோபம் எல்லாம் வழிந்து கொஞ்சம் நிதானமானபோதுதான் அவருக்குத்
தெரிந்தது தன்னுடைய மகன் சுடுண்டு கீழே கிடக்கிறான் என்று. எனவே
அவசர அவசரமாக அவனைத் தூக்கிக்கொண்டு, மருத்துவமனைக்கு ஓடினார்.
அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவனைச் சேர்த்து, சிகிச்சை அளித்தார்.
சிறுவனின் கைவிரல் மோசமாகத் தாக்கப்பட்டிருப்பதைப் பார்த்த மருத்துவர்கள்
குழந்தையை இப்படியா அடிப்பது என்று அந்த தந்தையை கடுமையாகத்
திட்டி தீர்த்தார்கள்.
அடுத்த நாள் காலையில் மெதுவாகக் கண்விழித்துப் பார்த்த மகன் தன்
தந்தையிடம், "அப்பா! முறிந்துபோன எனது கைவிரல், மீண்டும் வளருமா?"
என்றான். இதைக் கேட்டு அவன் தந்தை உள்ளம் குத்துண்டு போனார்.
மகனை இப்படியா அடிப்பது என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டார்.
சிகிச்சை முடிந்து, ஒரு சில நாட்கள் கழிந்து, தந்தையும், மகனும்
வீட்டிற்கு வந்தார்கள். அப்போது தந்தை, தன்னுடைய காரில் மகன்
என்னதான் எழுதியிருக்கிறான் என்று போய் பார்த்தார். பார்த்தவர்
மிகவும் அதிர்ந்துபோய் நின்றார். காரணம் அந்தக் காரின் கதவிலே
"ஐ லவ் யு டாட" என்று எழுதப்பட்டிருந்தது. தன்னுடைய மகன் தன்
மீது இவ்வளவு அன்பு கொண்டிருக்க, தான் இப்படி மடத்தனமாக நடந்துகொண்டுவிட்டோமே
என்று மனம் வருந்தி அழுதான்.
மனிதர்களை அன்பு செய்பவர்களைவிட, பொருட்களை அன்பு செய்பவர்கள்தான்
அதிகமாக இருக்கிறார் என்பதை இக்கதையானது சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகம் முழு உள்ளத்தோடு மனிதர்களை, இறைவனை அன்பு
செய்துவாழ அழைக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம்,
"நிலைவாழ்வைப் பெற என்ன செய்யவேண்டும்? என்று கேட்கின்றபோது,
இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதி இருக்கிறது?" என்று
கேட்கிறார். அவர் மறுமொழியாக, "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும்,
முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு
கூர்வார்யாக. உன் மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவரிடமும்
அன்புகூர்வாயாக என்று எழுதியிருக்கிறது" என்றார். அதற்கு இயேசு,
"நீரும் போய், அவ்வாறே செய்யும், வாழ்வீர்" என்கிறார். அவர் தொடர்ந்து
கேள்வி கேட்டதன் பெயரில் இயேசு அவருக்கு நல்ல சமாரியன் உவமையைச்
சொல்கிறார்.
நாம் ஒவ்வொருவரும் இறைவனை மட்டுமல்லாது, நம்மோடு வாழக்கூடிய மனிதர்களையும்
முழுஇதயத்தோடு அன்புசெய்யவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளமாக
இருக்கின்றது. ஆனால் உண்மையான அன்போடு நாம் இருக்கின்றோமா என்பதுதான்
கேள்விக்குறியாக இருக்கின்றது. ஆஸ்கார் ஒயில்டு என்ற அறிஞர்
சொல்வார், "உண்மையான அன்போடு நாம் காத்திருந்தால், அன்பும் நமக்காகக்
காத்திருக்கும்". நமது உள்ளத்தில் உண்மையான அன்பு இருக்கின்றதா?
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் மனிதர்கள்
பொருட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மனிதர்களுக்கு
கொடுக்க மறந்துவிடுகிறார்கள். மனிதர்களை பொருட்களைப் பயன்படுத்துவது
போன்று பயன்படுத்துகிறார்கள். நல்ல சமாரியன் உவமையில் வரும் சமாரியன்
கள்வர் கையில் அகப்பட்டு, அடிபட்டுக் கிடந்தவனை தனது உயிரைப்
போன்று பார்த்து, அவனுக்கு உதவிசெய்கிறார். நாம் உணமையான அன்போடும்,
பரிவோடும் இருக்கின்றோம் என்றால் நம்மோடு வாழும் மனிதர்களின்
தேவையை அறிந்து, தக்க காலத்தில் உதவிடுவோம்.
ஆகவே, உணமையான அன்போடு வாழ்வோம், தேவையில் இருப்போருக்கு உதவிடுவோம்,
இறையருள் பெறுவோம்.
|
|