|
அக்டோபர்
7 |
|
|
நற்செய்தி
வாசகம்
உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன
என்பது பற்றியே மகிழுங்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
10: 17-24
அக்காலத்தில் அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன்
திரும்பி வந்து, "ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட
எங்களுக்கு அடிபணிகின்றன'' என்றனர்.
அதற்கு அவர், "வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக்
கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை
அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம்
கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது.
ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ
வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப் பட்டிருக்கின்றன
என்பது பற்றியே மகிழுங்கள்'' என்றார்.
அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகை அடைந்து, "தந்தையே,
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில்
ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்'' என்றார்.
"என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.
தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத்
தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும்
தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார்.
பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக,
"நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர்
பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள்
காண்பவற்றைக் காண விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் காணவில்லை.
நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள்
கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று
கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-----------------------------------------------------------
மறையுரைச் சிந்தனை
"உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன
என்பது பற்றியே மகிழுங்கள்"
ஏ.ஜே. க்ரோனின் என்கிற பிரபல எழுத்தாளர் தன்னுடைய குறிப்புகளில்
(notes) தனது பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு பெண் மருத்துவரைப்
பற்றிப் பேசுகின்றார்.
குறிப்பிட்ட அந்த பெண் மருத்துவர் தனி ஒரு மனுசியாய் ஒவ்வொரு
நாளும் பத்து கிலோமீட்டர்களும் மேல் பயணம் செய்து, அங்கிருக்கும்
நோயாளிகளுக்கு மருத்துவ உதவியைச் செய்து வந்தார். அதற்காக அவர்
நோயாளிகளிடமிருந்து மிக சொற்பமான தொகையினையே வாங்கி வந்தார்.
சில நேரங்களில் அவர் நடு இரவிலும் யாராவது தன்னை உதவிக்கு அழைத்தால்,
முகம் கோணாமல் அவர்களுக்கு அவர் மருத்துவ சேவைகளைச் செய்துவந்தார்.
இப்படி ஒருநாள் இரவு வேளையில் அந்த பெண் மருத்துவர் தன்னுடைய
பணிகளை முடித்துக்கொண்டு வீட்டுக்குத்
திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை எதிர்கொண்டு வந்தார்
ஏ.ஜே.க்ரோனின். அவர் அந்த மருத்துவரிடம், "இப்படி தியாக உணர்வோடும்,
உங்களையே வருத்திக் கொண்டும் மக்களுக்கு மருத்துவச் சேவை
செய்கின்ற நீங்கள், எதற்காக அவர்களிடமிருந்தும் மிகவும் சொற்பமான
தொகையையே கட்டணமாக வசூலிக்கிறீர்கள்?, இன்னும் அதிகமாகக் கேட்கலாம்
அல்லவா?, கடவுளுக்குத் தெரியும் நீங்கள் எவ்வளவு சிறப்பான
சேவையை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்ற"
சொன்னார்.
அதற்கு அந்த பெண் மருத்துவர் ஏ.ஜே. க்ரோனிடம், நான் சிறப்பான
சேவையை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறேன் என்று கடவுளுக்குத்
தெரியுமல்லவா, அது போதும். மனிதர்களுடைய வெகுமதியோ அவர்களுடைய
பாராட்டோ எனக்குத் தேவையில்லை என்றார். அதைக் கேட்டு ஏ.ஜே.
க்ரோனின் மிகவும் ஆச்சரியப்பட்டுப் பட்டுப் போனார் பேர், புகழ்,
பணம் எதுவும் விரும்பாமல், இப்படியும் ஒரு மருத்துவர் இந்த
உலகத்தில் இருக்கிறாரா என்று.
தன்னுடைய பெயர் விளங்க வேண்டும், நிறைய சம்பாதிக்கவேண்டும் என்று
இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் இந்த பெண் மருத்துவர் சற்று
வித்தியாசமானவராக விளங்குகின்றார்.
நற்செய்தி வாசகத்தில் பணித்தளத்திற்கு அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு
பேரும் ஆண்டவர் யேசுவிடம் திரும்பி வந்து, தாங்கள் செய்தது அனைத்தையும்
அவரிடத்தில் எடுத்துச் சொல்கிறார்கள், "ஆண்டவரே, உமது பெயரைச்
சொன்னால் பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன" என்று பெருமையாகப்
பேசுகின்றார்கள். இயேசு அவர்களிடம், "வானத்திலிருந்து சாத்தான்
மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும்
மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு
அதிகாரம் கொடுத்திருக்கின்றேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு
விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது
பற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன
என்பது பற்றியே மகிழுங்கள்" என்கிறார்.
இயேசு சீடர்களிடம் சொல்வதிலிருந்து இரண்டு உண்மைகளை நாம் அறிந்துகொள்ளலாம்.
ஒன்று இயேசுவின் பணியைச் செய்யக்கூடிய சீடர்கள் வழியாக இருளின்
ஆட்சியானது முடிவுக்கு வரப்போகிறது என்பதாகும். ஆண்டவர் இயேசு
இந்த மண்ணுலகத்தில் பிறந்து வல்ல செயல்கள் ஆற்றிய போதே
சாத்தானுக்கு எதிரான சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது, இப்போது
சீடர்கள் இயேசு செய்த அதே பணியை செய்ததனால், செய்து வருவதனால்
இருளின் ஆட்சி முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டு என்றே சொல்லலாம்.
"வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்" என்ற
இயேசுவின் வார்த்தைகள் வழியாக இதனை அறிந்துகொள்ளலாம்.
ஆனால் இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகளில் இன்னும் ஓர் உண்மையும்
அடங்கி இருக்கின்றது. அது என்ன வென்றால், சீடர்கள் தாங்கள்
செய்த செயல்களைக் குறித்தும், ஆற்றிய பணிகளைக் குறித்தும்
பெருமை பட்டுக்கொள்ள வேண்டாம் என்பதாகும். "தீய ஆவிகள் உங்களுக்கு
அடிபணிகின்றன என்பது பற்றி மகிழவேண்டாம், உங்கள் பெயர்கள் விண்ணகத்தில்
எழுதப்பட்டிருக்கின்றன என்றே மகிழுங்கள்" என்ற இயேசுவின்
வார்த்தைகள் இதனை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. நிறைய நேரங்களில்
கடவுளின் பணியை அவர் சார்பாக செய்யக்கூடிய நாம், நமக்கு
பேரும், புகழும் சேரவேண்டும் என்று நினைக்கின்றோம். உண்மையில்
கடவுளுக்குத்தான் எல்லாப் பேரும், புகழும் சேரவேண்டும். மனிதர்களாக
நாமெல்லாம் சிறு கருவிகள்தான். யார் ஒருவர் தன்னை கடவுளின்
கையில் ஒரு கருவி என்று நினைக்கிறாரோ அவர் ஒருபோதும் தான்
செய்யும் பணியைக் குறித்து பெருமைபட்டுக்கொள்ள மாட்டார், கடவுளுக்குத்தான்
பெருமை சேரவேண்டும் என்று நினைப்பார்.
ஆகவே, இறைப்பணியைச் செய்யும் நாம், அதில் பெருமை கொள்ளாமல், இறைவனுக்கே
பெருமை சேரவேண்டும் நினைத்து, அவருடைய அதிமிக மகிமைக்காக உழைப்போம்,
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
|
|