|
|
04 அக்டோபர் 2020 |
|
|
பொதுக்காலம்
27 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல்
குடும்பத்தாரே.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்
5: 1-7
என் நண்பரைக் குறித்துக் கவி பாடுவேன்; என் அன்பரின்
திராட்சைத் தோட்டத்தைப் பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன்.
செழுமைமிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத்
தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக் கொத்திக் கிளறிக் கற்களைக்
களைந்தெடுத்தார்; நல்ல இனத் திராட்சைக் கொடிகளை அதில் நட்டுவைத்தார்;
அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்;
திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்; நல்ல திராட்சைக்
குலைகள் கிட்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்; மாறாக,
காட்டுப் பழங்களையே அது தந்தது.
இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்; எருசலேமில் குடியிருப்போரே,
யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும்
இடையே நீதி வழங்குங்கள். என் திராட்சைத் தோட்டத்திற்குச்
செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும்
உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப்
பழங்களை அது தந்ததென்ன?
என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான்
அறிவிக்கிறேன், கேளுங்கள்: "நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்;
அது தீக்கிரையாகும்; அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்; அது
மிதியுண்டு போகும். நான் அதைப் பாழாக்கி விடுவேன்; அதன் கிளைகள்
நறுக்கப்படுவதில்லை; களையை அகற்ற மண் கொத்தப் படுவதுமில்லை;
நெருஞ்சியும், முட்புதர்களுமே அதில் முளைக்கும்; அதன்மீது மழை
பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்."
படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே;
அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே; நீதி விளையுமென்று
எதிர்நோக்கியிருந்தார்; ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி; நேர்மை தழைக்கும்
என்று காத்திருந்தார்; ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3a)
=================================================================================
திபா 80: 8,11. 12-13. 14-15. 18-19 . (பல்லவி: எசா 5: 7a) Mp3
பல்லவி: ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே.
8
எகிப்தினின்று திராட்சைக் கொடி ஒன்றைக் கொண்டு வந்தீர்; வேற்றினத்தாரை
விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர்.
11
அதன் கொடிகள் கடல் வரையும் அதன் தளிர்கள் பேராறு வரையும் பரவின.
- பல்லவி
12
பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச்
செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!
13
காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள் அதனை
மேய்கின்றன. - பல்லவி
14
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப்
பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15
உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்ந்த மகவைக்
காத்தருளும்! - பல்லவி
18
இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்;
நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.
19
படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!
நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! -
பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய
திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-9
சகோதரர் சகோதரிகளே,
எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல்,
மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத்
தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி
கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும்
பாதுகாக்கும்.
இறுதியாக, சகோதரர் சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை
எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை
எவையோ, பாராட்டுதற்கு உரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ,
போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். நீங்கள்
என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம்
கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும்
கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி
நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத்
தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 21: 33-43
அக்காலத்தில்
இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக்
கூறியது: "மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர்
ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து, அதில்
பிழிவுக் குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு
தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு
நெடும் பயணம் மேற்கொண்டார். பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது
அவர் தமக்குச் சேரவேண்டிய பழங்கiளைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை
அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்களோ
அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்;
ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.
மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களை விட மிகுதியான வேறு சில
பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள்
செய்தார்கள்.
தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக
அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள்,
"இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக்
கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்" என்று
தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப்
பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று
போட்டார்கள்.
எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை
என்ன செய்வார்?" என இயேசு கேட்டார்.
அவர்கள் அவரிடம், "அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்;
உரிய காலத்தில் தமக்குச் சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும்
வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு
விடுவார்" என்றார்கள்.
இயேசு அவர்களிடம், "கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு
மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு
இது வியப்பாயிற்று!" என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது
இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு
ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர்
என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
I எசாயா 5: 1-7
II பிலிப்பியர் 4: 6-9
III மத்தேயு 21: 33-43
பலன்தரும் பணியாளர்களாவோம்
நிகழ்வு
வயதானவர் ஒருவர் ஒரு பெரிய வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார்.
இவர் தன்னுடைய வீட்டிற்கு முன்பாக இருந்த பெரிய கதவில்
"வேலைக்கு ஆள் தேவை" என்றோர் அறிவிப்புப் பலகையை மாட்டி
வைத்திருந்தார். இதைப் படித்துப் பார்த்த ஜான் என்ற இளைஞன்,
"வீட்டில் வெட்டியாக இருப்பதற்குப் பதில், இந்த வயதானவருடைய
வீட்டில் வேலை செய்தால்கூட செலவுக்கு ஏதாவது பணம் கிடைக்கும்"
என நினைத்துக்கொண்டு, மறுநாள் வயதானவரைப் பார்க்கச் சென்றான்.
வயதானவர் ஜானிடம், அவன் யார்? அவனுடைய வீடு எங்கிருக்கின்றது
என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்ட பின்பு, அவனிடம்
"தம்பி! மாடியில் உள்ள அறையை நீண்டநாள்களாகப் பயன்படுத்தாமல்
போட்டுவிட்டதால், அதில் ஒரே தூசும் நூலாம்படையும் மண்டிக் கிடக்கின்றன.
இதனால் அங்கு எலித் தொல்லைகூட மிகுதியாக இருக்கின்றது. இன்று
நீ செய்யவேண்டியதெல்லாம் அந்த அறையைச் சுத்தம் செய்து, அறையில்
உள்ள தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை அந்த அறையில்
உள்ள பெரிய பெட்டியில் போட்டு, வெளியே கொண்டுவந்து, தீயில்
போட்டு எரித்துவிடு" என்றார். ஜானும் அதற்குச் சரியென்று
சொல்லிவிட்டு மாடியிலிருந்த அறைக்குச் சென்றான்.
ஜான் அடிப்படையில் ஒரு சோம்பேறி. அதனால் அவன் மாடியில் இருந்த
அறையைப் பார்த்ததும் மயக்கமுறத் தொடங்கினான். "இப்படித் தூசும்
நூலாம்படையும் மண்டிக்கிடக்கும் இந்த அறையை எப்படிச் சுத்தம்
செய்து, இதிலுள்ள தேவையான பொருள்களை எடுத்து வைப்பது? இது மிகவும்
கடினமான செயலாற்றே!" என்று குழம்பியவாறு நின்றான். இதற்குள் நண்பகல்
வேலை வந்துவிட்டது. சாப்பிடுவதற்கு அவன் கீழே சென்றபொழுது, வயதானவர்
அவனிடம், "வேலையெல்லாம் எப்படிப் போய்க்கொண்டிருக்கின்றது?" என்று
கேட்க, அவன், "என்னால் அந்த அறைக்குள் போகவே முடியவேவில்லை. அந்தளவுக்கு
அதில் தூசும் நூலாம்படையும் மண்டிக்கிடக்கின்றன" என்றான். இதைக்
கேட்ட வயதானவர், "இந்தா! இன்றைய நாளுக்குரிய சம்பளம்...! நாளைய
நாளிலிருந்து நீ வேலைக்கு வரவேண்டாம்" என்று சொல்லி அனுப்பி
வைத்தார்.
மறுநாள் வயதானவரின் வீட்டிற்கு முன்னால் இருந்த அறிவிப்புப்
பலகைப் படித்துப் பார்த்த கிறிஸ்டோபர் என்ற இளைஞன் வயதானவரின்
வீட்டிற்குள்ளே வந்தான். அவனைப் பார்த்துவிட்டு வயதானவர் அவனிடம்,
முந்தைய நாளில் வந்த ஜானிடம் சொன்னதையே சொல்லி அனுப்பிவைத்தார்;
ஆனால், கிறிஸ்டோபர் ஜானைப் போன்று இல்லாமல், அந்த மாடி அறையை
நன்றாகச் சுத்தம் செய்து, அந்த அறையில் இருந்த தேவையான பொருள்களையெல்லாம்
எடுத்துவைத்துவிட்டு, தேவையற்ற பொருள்களையெல்லாம் பெரிய
பெட்டியில் போட்டு தீயிட்டு எரித்தான். பகல் உணவை உண்பதற்காக
கிறிஸ்டோபர் கீழே வந்தபொழுது, வயதானவர் அவனிடம், "வேலையெல்லாம்
எப்படிப் போய்க்கொண்டிருக்கின்றது?" என்று கேட்க, அவன், மாடியறையிலிருந்து
பத்திரமாக எடுத்து வைத்த, ஒருசில இரசீதுகளையும் ஆவணங்களையும்
இவரிடம் கொடுத்தான். அவற்றைப் பார்த்துப் பெரிதும் மகிழ்ச்சியடைந்த
வயதானவர், "இத்தனை நாள்களும் நான் இந்த ஆவணங்களைத்தான்
தேடிக்கொண்டிருந்தேன். இப்பொழுது இவை உன் வழியாகக் கிடைத்ததில்
மகிழ்ச்சி" என்று சொல்லி, அவனை நிரந்தரமாக வேலையில் அமர்த்தினார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற கிறிஸ்டோபர் தனக்குக் கொடுக்கப்பட்ட
வேலையைப் பொறுப்புடன் செய்ததால், அந்த வேலையில் அவன் நிரந்தரமாக
அமர்த்தப்பட்டு, பின்னாளில் பெரியவனானான். பொதுக்காலம் இருபத்து
ஏழாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுள்
நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்புகளைச் நல்லமுறையில் செய்து
"பலன்தரும் பணியாளர்களாக" வாழ அழைப்புத் தருகின்றது. அது
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பொறுப்புகளை நம்மிடம் ஒப்படைக்கும் இறைவன்
இன்றைய நற்செய்தியில் இயேசு, கொடிய குத்தகைக்காரர் உவமையைப் பற்றிப்
பேசுகின்றார். இந்த உவமையில் வருகின்ற நிலக்கிழார் எப்படித்
திராட்சைத் தோட்டத்தை நல்லமுறையில் பராமரித்து, அதைக் குத்தகைக்காரர்களிடம்
ஒப்படைக்கின்றாரோ, அப்படி நம் ஆண்டவராகிய கடவுளும் நமக்கு நல்ல
பெற்றோர், நல்ல இயற்கைச் சூழல், நல்ல உடல்நலம் இப்படிப் பல்வேறு
ஆசிகளை வழங்குகின்றார்.
இயேசு சொல்லும் இந்த உவமையில் வருகின்ற திராட்சைத் தோட்டம்,
கடவுளால் பல்வேறு ஆசிகளால் நிரப்பட்ட இஸ்ரயேல் மக்களாக இருந்தாலும்
(எசா 5: 7), நாமும் கடவுளால் பல்வேறு ஆசிகளால் நிரப்பப்பட்டிருக்கின்றோம்
என்பதால், அந்த இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்ப்பது இன்னும்
சிறப்பாக இருக்கும்.
உரிய காலத்தில் பலனை எதிர்பார்க்கும் இறைவன்
யூதச் சமூகத்தில் நிலக்கிழார் தன் நிலத்தை ஒருவருக்குக் குத்தகைக்கு
விடுகின்றார் எனில், அறுவடை நேரத்தில், அவர் தன் பணியாளர்களைக்
குத்தகைக்காரரிடம் அனுப்பித் தனக்குரிய பங்கைப் பெறுவது வழக்கம்.
இதுதான் இயேசு சொல்லும் உவமையிலும் நடக்கின்றது. இதை அடிப்படையாக
வைத்துப் பார்க்கும்பொழுது கடவுளும் நம் ஒவ்வொருவரிடமிருந்தும்,
நாம் பெற்றுக்கொண்ட ஆசிகளுக்கு ஏற்ப, உரிய காலத்தில் பலன் தரவேண்டும்
என்று எதிர்பார்க்கின்றார் என்பது உறுதியாகின்றது. இதைத்தான்
ஆண்டவர் இயேசு, "நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே
என் தந்தைக்கு மாட்சியளிக்கின்றது" (யோவா 6:8) என்கின்றார்.
ஆதலால், நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆசிகளுக்கு ஏற்ப
உரிய காலத்தில் பலன் கொடுக்கவேண்டும். இதை நாம் மறந்துவிடக்கூடாது.
பலன்தராதோருக்குத் தண்டனையும், பலன்தருவோருக்கு ஆசியும் தரும்
இறைவன்
இறைவன் நம்மைப் பல்வேறு ஆசிகளால் நிரப்பியிருக்கின்றார் எனில்,
நம்மிடமிருந்து உரிய பலனை, உரிய காலத்தில் எதிர்பார்ப்பது
முறை; நாமும் உரிய பலனை உரிய காலத்தில் தருவது நம்முடைய கடமை.
அதைவிடுத்துப் பலனைத் தராமல், தம்முடைய
விருப்பத்திற்கேற்றாற்போல் நடந்தால், முடிவில் நமக்குக் கொடிய
குத்தகைக்காரர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும். ஆகவே, நாம்
ஒவ்வொருவரும் உரிய காலத்தில் பலன்தரக்கூடியவர்களாக
மாறவேண்டும்.
எப்படி நாம் பலன்தரக்கூடியவர்களாக மாறுவது என்பதற்கு இன்றைய
இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், "உண்மையானவை எவையோ,
கண்ணியமானவை எவையோ....அவற்றைக் கடைப்பிடியுங்கள். அப்பொழுது
அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்" என்கின்றார். ஆம்,
கடவுளிடமிருந்து பல்வேறு ஆசிகளைப் பெற்றுக்கொண்ட நாம்,
கடவுளுக்கு உகந்த வழியில் நடந்து பலன் கொடுக்கவேண்டும்.
அப்படிச் செய்தால், கடவுளின் ஆசி நம்மில் நிறைவாகத் தங்கும்.
நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆசிகளைக் கொண்டு,
பலன்தரும் வாழ்க்கை வாழ்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"நாம் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கவேண்டும் என்று அல்ல,
பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றே கடவுள்
விரும்புகின்றார்" என்கிறது ஒரு பொன்மொழி. எனவே, நாம் கடவுள்
நமக்குக் கொடுத்திருக்கும் பல்வேறு ஆசிகளைப் பயனுள்ள விதமாய்ப்
பயன்படுத்திப் பயனுள்ளவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மீது இறையாட்சியும் ஆசியும்
பொழியப்படும் என்பதை உணர்ந்திட இன்றைய பொதுக்காலம் 27ஆம்
ஞாயிறு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.
திராட்சைத் தோட்டத்தை உரிமையாக்கிக் கொள்ள உரிமையாளர்க்கு
உண்மையாய் இருக்க வேண்டும். மாறாக, உரிமையாளரைக்
கொன்றுவிட்டால், அனைத்தும் நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்டு
விடும். இவ்வுலக வாழ்வில் இறைவனுக்குப் பயந்து உண்மை வாழ்வை
மேற்கொள்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில், இவ்வுலக வாழ்வில் நாம் தர வேண்டிய
ஈவுகளைப் பற்றியும், தர மறுத்தால் எதிர்கொள்ள வேண்டிய
தீர்ப்பினைப் பற்றியும் எசாயா இறைவாக்கினர்
எடுத்துரைக்கின்றார். மனிதன் மகிழ்ந்திருக்கத் தேவையான அனைத்து
வளங்களையும் இறைவன் அளித்திருக்கிறார். அவற்றை பெற்று வளமான
வாழ்வை மேற்கொண்டு, நம் வாழ்வால் பிறருக்கும் அதனால்
இறைவனுக்கும் ஆனந்தத்தை ஏற்படச் செய்வோம். அவ்வாறில்லாமல்
நான், எனது என வாழ்வைச் சுருக்கிக் கொண்டால், கனிகொடா
திராட்சைத் தோட்டத்தின் பலனே நமக்கும் கிடைக்கும்.
இன்றைய நற்செய்தியில், "கட்டுவோர் புறக்கணித்த கல்லே மூலைக்கல்
ஆயிற்று" என்று மேட்டிமை எண்ணம் பெற்றிருப்பவர்களுக்கு
எச்சரிக்கின்றார் இயேசு. இவ்வுலகமே திராட்சைத் தோட்டம். நாம்
இயேசு பணித்த பணியாளர்கள்.
நற்கனிகளை விதைக்க
நல் உழைப்பை விதைப்போம்.
நல் எண்ணம் பெற்று
நாமும் வளர்ச்சியடைவோம்.
திண்ணமான எண்ணத்தோடு
தூய்மையாய் வாழ்வோம்.
இச்சிந்தனைகளை மனதில் கொண்டு, பலியில் பங்கேற்போம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்
1. நற்கனிகளை கொடுக்க அழைப்பவரே எம் இறைவா!
எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,
தங்கள் அழைப்பின் மேன்மையை உணர்ந்து, திராட்சைத் தோட்டத்தை
வளப்படுத்தி, பணியாளர்களாகிய இவ்வுலக மக்களுக்கு நடக்க வேண்டிய
வழியைக் காட்டி, முன்சென்று வழிநடத்தவும் வல்லமை அருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. நற்கனி கொடுக்க அழைப்பவரே எம் இறைவா!
எம் நாட்டினை ஆளும் ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள்,
அதிகாரப் போக்கில் நாட்டை ஆளாமல், சாலமோன் போல உம் ஞானத்தைப்
பெற்றவர்களாக, மக்களை நேரிய வழிநடத்தவும், நாட்டை வளர்ச்சிப்
பாதையில் வழிநடத்த வேண்டிய ஞானம் தந்திட இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. "புறக்கணித்த கல்லே மூலைக்கல்லாயிற்று" என்றவரே எம் இறைவா!
மது, போதை மற்றும் தவறான பழக்க வழக்கங்களில் சிக்கித் தவித்து,
சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாய் வாழும் இளைஞர்களை சிறந்த
வழியில் நடத்தி, பணியில் மூலைக்கல்லாகிட வரமருள இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. ஆசியைப் பொழிபவரே எம் இறைவா!
எம் பகுதியில் முதன்மைத் தொழிலான வேளாண்மை சிறந்து பொருளாதாரம்
ஏற்றம் பெறவும், நோய்த் தொற்று குறைந்து, மக்களின் இயல்பு
வாழ்வு திரும்பவும், குடும்ப அமைதி, மகிழ்ச்சி பெருகவும்,
படிக்கும் மாணவர்களின் எதிர்கால குழப்பங்கள் சரியாகவும் ,
உள்ளத்தின் வேண்டுதல்கள் இறைவன் ஆசியால் நிறைவேறவும் வரமருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
|
|