|
30 அக்டோபர்
2017 |
|
|
முதல் வாசகம்
கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள்.
அதனால் நாம், " அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
8: 12-17
சகோதரர் சகோதரிகளே! நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை;
அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப
வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால்! தூய ஆவியின்
துணையால், உடலின் தீச் செயல்களைச் சாகடித்தால், நீங்கள்
வாழ்வீர்கள். கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின்
மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள்
பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே
பெற்றுக்கொண்டீர்கள்.
அதனால் நாம், "அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம். நாம் இவ்வாறு
அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின்
பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப்பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து
உரிமைப்பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய
துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு
மாட்சியிலும் பங்கு பெறுவோம்
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
====================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 68: 1,3. 5-6ab. 19-20 (பல்லவி: 20a)
பல்லவி: ஆண்டவராம் நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்.
1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்;
அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; 3 நேர்மையாளரோ
மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து
கொண்டாடுவர். பல்லவி
5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின்
காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! 6ab தனித்திருப்போர்க்குக்
கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை
வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். பல்லவி
19 ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக்
கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. 20 நம் இறைவனே மீட்பளிக்கும்
கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர்.
பல்லவி
===========================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
யோவா 17: 17b,a
அல்லேலூயா! அல்லேலூயா! ஆண்டவரே! உமது வார்த்தையே உண்மை. உண்மையினால்
எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
==========================================================================
நற்செய்தி
வாசகம்
ஆபிரகாமின் மகளாகிய இவரை இந்தக் கட்டிலிருந்து ஓய்வு நாளில்
விடுவிப்பது முறையில்லையா?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17
அக்காலத்தில் ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்
கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்
நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும்
நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.
இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, "அம்மா, உமது
நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்'' என்று
கூறி, தம்
கைகளை அவர்மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப்
போற்றிப் புகழ்ந்தார்.
இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர்
கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, " வேலை செய்ய ஆறு
நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்;
ஓய்வு நாளில் வேண்டாம்'' என்றார்.
ஆண்டவரோ அவரைப் பார்த்து, " வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும்
ஓய்வு நாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு
போய்த் தண்ணீர் காட்டுவது இல்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய
இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான்.
இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது
முறையில்லையா?'' என்று கேட்டார்.
அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர்.
திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள்
அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மறையுரைச் சிந்தனை
இயேசு, "பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு
ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான்.
இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வுநாளில் விடுவிப்பது
முறையில்லையா?' என்று கேட்டார்'' (லூக்கா 13:16)
பதினெட்டு ஆண்டுகள் என்பது இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின்
ஆயுள் காலத்தில் பாதி. அத்துணை நீண்டகாலமாகக் கூன் விழுந்த
நிலையில் இருந்த பெண் குணமடைந்த நிகழ்ச்சியை லூக்கா மட்டுமே பதிவுசெய்துள்ளார்.
அவரால் ''சிறிதும் நிமிர முடியவில்லை'' (லூக் 13:11). கூன்
விழுந்த மனிதர் பிற மனிதரை முகமுகமாகக் கண்டு, நேருக்கு நேர்
நின்று அவர்களோடு உரையாட இயலாது. அவர்களுடைய கண்கள் எப்பொழுதும்
தரையை நோக்கியே இருக்கும். மிகுந்த சிரமப்பட்டு ஒருவேளை பக்கவாட்டில்
மட்டுமே அவர்களால் பிற மனிதர்களைப் பார்க்க இயலும். இவ்வாறு
ஊனமுற்ற நிலையில் இருந்த பெண் சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட
ஒருவர். அவரை யாரும் மதிப்போடு பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால்
இயேசுவின் கண்கள் அப்பெண்ணைக் கண்டுகொள்கின்றன. ஊனமுற்றிருந்து
அப்பெண்ணைப் பார்த்ததும் இயேசு அவரைத் தம் அருகே
கூப்பிடுகிறார். அருகில் வந்த பெண்ணை நேருக்கு நேர் பார்க்கும்
விதத்தில் ஒருவேளை இயேசுகூட குனிந்திருப்பார். ''அம்மா, உமது
நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்'' என்று கூறி இயேசு
''தம் கைகளை அவர்மீது வைத்தார்''. உடனே அப்பெண் ''நிமிர்ந்து
கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்'' (லூக் 13:12-13). கூன்
விழுந்திருந்தவர் இப்போது ''நிமிர்ந்து'' நிற்கிறார்.
சமுதாயத்தின் ஒடுக்குமுறைகள் மக்களைக் ''கூனிக் குறுகி''
நிற்கும் நிலைக்குத் தள்ளவிட்டாலும் கடவுள் அம்மனிதர்களை
''நிமிர்ந்து'' நிற்கச் செய்யும் வல்லமை கொண்டவர் என்பதை இங்கே
காண்கிறோம். நிமிர்ந்து நிற்கும் திறனைக் கடவுளின் அருளால்
பெற்றுக்கொண்ட அப்பெண் ''கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்''
(லூக் 13:13).
இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த தொழுகைக் கூடத்
தலைவர் ''கோபம் கொண்டார்''. யாரும் குணம் பெறும் நோக்குடன்
ஓய்வுநாளில் வரக் கூடாது என்பது அவர் கருத்து (லூக் 13:14).
ஆனால் இயேசு அக்கருத்தை மறுக்கின்றார்; அது தவறு எனக்
காட்டுகின்றார். ஆடு மாடுகளைக் கட்டவிழ்த்துத் தண்ணீர்
காட்டுவது ஓய்வு நாளில் நிகழலாம் என்றால் பதினெட்டு
ஆண்டுகளாகக் கட்டுண்ட நிலையில் ஊனமுற்று, கூன் விழுந்து
வாழ்ந்த அப்பெண்ணின் கட்டை அவிழ்ப்பது ஓய்வு நாளில் நிகழ்வது
முறையில்லையா என இயேசு கேட்கிறார். இயேசு அப்பெண்ணை
ஓய்வுநாளில் விடுதலை செய்தல் முறையல்ல என்று கருதுவதே தவறு.
மாறாக, ஓய்வுநாளில் அப்பெண்ணை விடுதலை செய்ய வேண்டும் என்பதே
சரி என இயேசு காட்டுகின்றார். ஓய்வுநாள் மனிதரின் விடுதலை
நாள். கடவுளுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட நாள். கடவுள் மனிதர்
சுதந்திர உணர்வோடு தம்மை அணுகி வந்து வழிபட வேண்டும் என
விரும்புகிறார். ஆகவே, மனிதருக்கு விடுதலை வழங்க வந்த இயேசு
ஓய்வுநாளில் அந்த விடுதலையை வழங்கியது பொருத்தம் தான். இன்று
வாழ்கின்ற நமக்கும் இச்செய்தி வழங்கப்படுகிறது. சமுதாயத்தின்
அநீதியான வழக்கங்கள் மனிதரைக் கூனிக் குறுகச் செய்யும்போது
அந்த அடிமைத் தளைகளிலிருந்து அவர்களை விடுவிக்க நாம் என்ன
செய்கிறோம்? |
|