|
29 அக்டோபர்
2017 |
|
|
திருப்பலி முன்னுரை
என் கற்பாறையாம் ஆண்டவர் போற்றப் பெறுவராக! என் மீட்பராம் கடவுள்
மாட்சியுறுவராக!.
இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! நமக்கு மீட்பளிக்கும்
வல்லமையும், அரணும், கற்பாறையும், கோட்டையுமான நம் இறைத் தந்தையின்
திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன்
இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று
நாம் ஆண்டின் பெதுக்காலம் முப்பதாம் ஞாயிறு தினத் திருப்பலியைக்
கொண்டாடுகின்றோம்.
நம் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் நம்
ஆண்டவராகிய கடவுளிடம் அன்புசெலுத்துவதும். நம்மீது நாம் அன்பு
கூர்வதுபோல நமக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வதும்|
திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் அடிப்படையாக
அமைகின்றன, என்னும் வாழ்விற்கான உயர் நெறிமுறையினை மீளவும் இறை
வார்த்தைகள் வழியாக இறைவன் நமக்கு நினைவுபடுத்துகின்றார். இந்த
உயர் நெறிமுறையினைக் கருத்தோடும், பொறுப்புணர்வோடும் நாம் ஏற்றுக்கொண்டு
அதனை நம் இதயத்தில் பதித்தவர்களாய், அன்பு, இரக்கம், நற்பண்புகள்
ஆகியவற்றோடு வாழவும், வளரவும் நம்மை நேர்மையான உள்ளத்தோடு அர்ப்பணித்தவர்களாய்
இத் திருப்பலியில் பங்கேற்றுச் செபிப்போம்.
==================================================================================
முதல் வாசகம்
விதவை, அனாதை யாருக்கும் நீ
தீங்கிழைக்காதே.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 22:
21-27
ஆண்டவர் கூறியது: அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக்
கொடுமைப் படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராய்
இருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ
அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி
அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச்
செவிசாய்ப்பேன். மேலும் என் சினம் பற்றியெரியும். நான் உங்களை
என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர்.
உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர். உங்களோடிருக்கும் என் மக்களில்
ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன்
ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே. பிறருடைய மேலாடையை அடகாக நீ
வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக்
கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை
மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்?
அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன்.
ஏனெனில் நான் இரக்கமுடையவர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
========================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா. 18: 1- 3, 46-50
பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர்
என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர். பல்லவி:
என் இறைவன்: நான் புகலிடம் தேடும் மலை அவரே: என் கேடயம், எனக்கு
மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி
நான் மன்றாடினேன. என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப் பட்டேன்.
பல்லவி:
ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப்
பெறுவராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவராக! தாம் ஏற் படுத்திய
அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர், தாம் திருப்
பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும்
பேரன்பு காட்டுபவரும் அவரே. பல்லவி:
=========================================================================================
இரண்டாம் வாசகம்
நீங்கள் கடவுளிடம் திரும்பி, அவருடைய
மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய
முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5c-10
சகோதரர் சகோதரிகளே! உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு
நடந்து கொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். மிகுந்த வேதனை
நடுவிலும் நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள்.
இவ்வாறு எங்களைப் போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள்.
மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள, நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும்
முன்மாதிரியானீர்கள். எப்படியெனில், ஆண்டவருடைய வார்த்தை உங்கள்
நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை
கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல,
எல்லா இடங்களிலும் தெரிய வந்துள்ளது. எனவே இதைப் பற்றி நாங்கள்
எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. நாங்கள் உங்களிடம் வந்தபோது
எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே
கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான,
வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள்
என்றும் கூறிவருகிறார்கள். இவ்வாறு நீங்கள் வானினின்று வரும்
அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப்போகும்
சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச்
செய்தார்.
============================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
(யோவா.14:23)
அல்லேலூயா! அல்லேலூயா! "என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக்
கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்பு கொள்வார்.
நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்" என்கிறார் ஆண்டவர்.
அல்லேலூயா
================================================================================================
நற்செய்தி
வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40
அக்காலத்தில் இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக்
கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே
இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன்,
"போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்று
கேட்டார். அவர், "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும்,
முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து." இதுவே
தலைசிறந்த முதன்மையான கட்டளை. "உன்மீது நீ அன்பு கூர்வதுபோல
உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இதற்கு
இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு
நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' என்று
பதிலளித்தார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
==================================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1.உமது பேரன்பால் உலகை நிறைத்துள்ள எம்
இறைவா!
எம் திருஅவையிலுள்ள அனைவரும் இறையச்சம், அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல்
ஆகிய பண்புகளை தங்கள் பணிவாழ்வில் உள்ளடக்கி இறையன்பிலும், பிறரன்பிலும்
சிறந்து விளங்கிட தூய ஆவியாரின் கொடைகளைப் பொழிந்திடவும், இயேசுவின்
உடனிருப்பை மனதில் கொண்டு இறைபணிகளைச் செய்திட உமதருளைப் பொழிய
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் வாழ்நாளை எல்லாம் நலன்களால்
நிறைவு செய்கின்ற எம் இறைவா!
எம் குடும்பங்களில் இறையன்பும், பிறரன்பும் நிறைந்திடவும்,
அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுப்பதால் இல்லங்களிலும்,
மனங்களிலும் அன்பும் அமைதியையும் நிறைவாய் பெற்றிடவும் உமதருள்
வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
3. ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமாகிய எம்
இறைவா!
அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம்
விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. இதனை உணர்ந்து எம் இளையோர்கள்
இனிவரும் காலங்களில் தங்களின் வாழும் வாழ்க்கை முறையினைச் சிறப்புடன்
மாறி அமைத்திட தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. என் ஆற்றலாகிய தந்தையே இறைவா!
உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும், எம் முழு இதயத்தோடும்,
முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் எம் ஆண்டவராகிய உம்மையும்,
எம் அயலவரையும் அன்பு செய்யவும், அன்பு, இரக்கம், நற்பண்புகள்
ஆகியவற்றோடு வாழவும், வளரவும் வேண்டிய அருளை அளித்துக் காத்திட
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. உண்மையாகவே வாழ்கின்ற தந்தையே இறைவா!
உலகத்து மக்கள் அனைவரும், உமது உயிருள்ள பிரசன்னத்தை உமது இறைவார்த்தையிலும்,
நற்கருணையிலும், திருவருட்சாதனங்களிலும் கண்டுணர்ந்து சமத்துவ
மனநிலையோடும், பொது நலத்தோடும் வாழுவதற்கு வேண்டிய ஆற்றலை அளித்திட
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
6. அன்பின் நாயகனே! எம் இறைவா!
மன்னிப்பதால் மன்னிப்பைப் பெறுகிறோம், அன்புச் செய்வதால் அன்பு
செய்யப்படுகிறோம் என்பதனை உணர்ந்து எம் அடுத்திருபவர்களை மன்னிப்பதிலும்,
நட்புப் பாராட்டுவதிலும் அசிசியாரைப்போல் அன்பின் சாட்சிகளாய்
இவ்வுலகில் வாழ்ந்து நிலைவாழ்வைப் பெற்று கொள்ள வரமருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மறையுரைச் சிந்தனை
"திருச்சட்ட
நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' (மத்தேயு 22:36)
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் திருச்சட்டத்தை நன்கு
தெரிந்துவைத்திருந்தார்கள். சட்டத்தின் நுணுக்கங்களையும் அறிந்திருந்தார்கள்.
திருச்சட்டத்தில் அடங்கிய 613 கட்டளைகளையும், அவை பற்றி யூத
சமய அறிஞர்கள் வழங்கிய விளக்கங்களையும் பரிசேயர் கற்றிருந்தார்கள்.
தங்களைப் போன்று இயேசுவும் சமய அறிவில் சிறந்தவர்தானா என்று
சோதிக்கும் வகையில் அவர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வி: ''திருச்சட்ட
நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்பதாகும். இயேசு அவர்களுக்கு
அளித்த பதிலில் பெரிய விளக்கங்கள் இல்லை. மிகவும் எளிய
முறையில், கடவுள் தந்த கட்டளைகளின் உள் ஆழம் எதில் அடங்கியிருக்கிறது
என்பதை இயேசு எடுத்துரைக்கிறார். ''அன்பு செய்க!'' என்பதே
திருச்சட்டத்தின் சுருக்கம் என இயேசு போதிக்கிறார். இந்த அன்புக்
கட்டளைக்கு இரு பக்கங்கள் உண்டு: ஒன்று கடவுளை அன்பு செய்வது,
மற்றது பிறரை அன்பு செய்வது. பழைய ஏற்பாட்டுத் திருச்சட்டத்தில்
காணப்பட்ட அன்புக் கட்டளையின் இரு பக்கங்களையும் இணைக்கிறார்
இயேசு. இணைச்சட்ட நூலில் ''உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக!''
(6:5) என்னும் சட்டமும், லேவியர் நூலில் ''உன்மீது நீ அன்புகூர்வதுபோல்
உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!'' (19:18) என்னும்
சட்டமும் தனித்தனியாகக் காணப்பட்டாலும் இயேசுவின் போதனையில் அவை
இரண்டும் பின்னிப் பிணைந்த விதத்தில் உள்ளன.
எனவே, திருச்சட்டத்தில் மட்டுமன்று, இயேசுவின் போதனையிலும் அன்புக்
கட்டளையே மைய இடம் பெறுவதில் வியப்பில்லை. கடவுளையும் மனிதரையும்
அன்பு செய்வோர் உண்மையிலேயே தலைசிறந்த கட்டளையைக் கடைப்பிடிக்கின்றனர்.
கடவுள் முதன்முதலில் நம்மை அன்புசெய்தார். எனவே, நாமும் அவரை,
அவரால் அன்புசெய்யப்படுகின்ற மனிதரை அன்புசெய்ய அழைக்கப்படுகிறோம்.
கடவுளின் அன்பில் நாம் ஆழ வேரூன்ற வேண்டும் என்றால் முதலில்
நாம் அவரை நம்ப வேண்டும்; அவருடைய வாக்குறுதி நிறைவேறும் என ஏற்க
வேண்டும். எனவே, நம்பிக்கையும் எதிர்நோக்கும் நம்மில் வளரும்போது
அன்பும் வளரும். அன்பு நம்மில் சிறக்கும்போது கடவுள் மட்டில்
நாம் கொள்கின்ற நம்பிக்கையும் உறுதிப்படும், அவர் வாக்களிக்கின்ற
நன்மைகளை நாம் பெறுவோம் என்னும் எதிர்நோக்கும் திண்ணமாகும்.
மன்றாட்டு:
இறைவா, உம்மையே நாங்கள் நம்பியிருக்கவும், உம் அன்பில் வளர்ந்து,
எங்கள் வாழ்வு நிறைவுபெறும் என நாங்கள் எதிர்நோக்கவும் அருள்தாரும். |
|