Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                 25 அக்டோபர் 2017  
                                 

முதல் வாசகம்

இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 12-18

சகோதரர் சகோதரிகளே! உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்த விடாதீர்கள். நீங்களோ உங்கள் உறுப்புகளைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்; மாறாக, இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகளை அவரிடமே ஒப்படையுங்கள்.

பாவம் உங்கள்மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள். அதனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டவர்களாய் இல்லாமல், அருளின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதால் நாம் பாவம் செய்யலாமா? ஒருபோதும் கூடாது.

எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியும் அன்றோ? அப்படியிருக்க, நீங்கள் பாவத்திற்கு உங்களையே அடிமையாக்கினால் சாவீர்கள்; நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவீர்கள். முன்பு பாவத்திற்கு அடிமைகளாய் இருந்த நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் அடங்கிய ஒழுக்க நெறியை உளமாரக் கடைப்பிடிக்கிறீர்கள். பாவத்தினின்று விடுதலை பெற்ற நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை நெறிக்கு அடிமைகளாய் இருக்கிறீர்கள். அதற்காகக் கடவுளுக்கு நன்றி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
====================================================================

 
பதிலுரைப் பாடல் - திபா 124: 1-3. 4-6. 7-8 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!

1 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் - இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக! 2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது, 3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். பல்லவி

4 அப்பொழுதுஇ வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெரு வெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்; 5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். 6 ஆண்டவர் போற்றி! போற்றி! எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை. பல்லவி

7 வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்; கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம். 8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! பல்லவி

===========================================================================

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 24: 42a,44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். அல்லேலூயா.

==========================================================================
 
நற்செய்தி வாசகம்

மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 39-48

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.''

அப்பொழுது பேதுரு, " ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?'' என்று கேட்டார்.

அதற்கு ஆண்டவர் கூறியது: " தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல், செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை

 ''இயேசு, 'தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்?' என்று கேட்டார்'' (லூக்கா 12:42)

 இயேசு கூறிய உவமைகள் மக்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்தன. சில வேளைகளில் இயேசு தம் சீடர்களுக்கு நேரடியாகப் பொருந்தும் விதத்தில் உவமைகள் சொன்னார். லூக்கா பதிவுசெய்துள்ள ''நம்பிக்கைக்கு உரிய வீட்டுப் பொறுப்பாளர்'' பற்றிய உவமை இத்தகைய ஒன்றாகும். பன்னிரு சீடர்களுக்கும் இயேசு தனிப்பட்ட விதத்தில் பயிற்சி அளித்தார். அவர்கள் கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க அனுப்பப்பட்டவர்கள் ஆதலால் அவர்களை இயேசுவின் போதனைகளைக் கருத்தாய் உள்வாங்கி, பொறுப்போடு மக்களுக்கு அளிக்க வேண்டும் என இயேசு விரும்பினார். தம் சீடர்கள் ''நம்பிக்கைக்கு உரிய வீட்டுப் பொறுப்பாளர்'' போல நடக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். இயேசுவே தலைவர். அவர் வீட்டுப் பொறுப்பாளரிடம் ஒரு முக்கியமான பணியை ஒப்படைக்கிறார். அந்த வீடு கடவுளின் இல்லமாகிய திருச்சபை. அது கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்கின்ற மக்களை உள்ளடக்கிய ஒரு குடும்பம் போன்றது. அக்குடும்பத்தை நன்முறையில் பராமரித்துக் காக்கும் பொறுப்பு சீடர்களிடம் கொடுக்கப்பட்டது.

 சீடர்களின் பொறுப்பு என்ன? அவர்கள் கடவுளின் குடும்பத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு ''வேளாவேளை உணவளிக்க'' வேண்டும். அவர்களுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும். சுய நலப்போக்கில் செல்லாமல் பிறருக்கு நன்மை செய்வதில் ஈடுபட வேண்டும். இயேசு வழங்கிய இந்த அறிவுரை இன்றைய திருச்சபையில் தலைமைப் பொறுப்பு ஏற்றிருப்போருக்கும் மிகவே பொருந்தும். திருச்சபையில் உறுப்பினராக இருக்கும் மக்களுக்குத் தேவையான ஆன்ம உணவு வழங்கப்பட வேண்டும். தலைவர்கள் திருச்சபை உறுப்பினரைக் கொடுமைப்படுத்தலாகாது. மனம்போன போக்கில் சென்றுஇ தங்களுடைய வசதியைக் கவனிப்பதிலேயே காலத்தைச் செலவிடலாகாது (காண்க: லூக் 12:45-46). இயேசு தம் பணியைத் தொடர்ந்து ஆற்றிடத் தெரிந்துகொண்ட மனிதரிடம் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார். எனவேதான், ''மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்'' என இயேசு கூறினார் (காண்க: லூக் 12:48). நம்மிடம் கொடுக்கப்பட்டது யாது? நாம் நமதெனக் கருதுகின்ற அனைத்துமே நம்மிடம் கடவுள் ஒப்படைத்த கொடையே. ஆக, நாம் பெற்றுக்கொண்ட கொடைகளைப் பிறரோடு பகிர்ந்திட அழைக்கப்படுகிறோம். ''நம்பிக்கைக்கு உரிய வீட்டுப் பொறுப்பாளர்'' என நம்மைத் தேர்ந்துகொண்ட ஆண்டவர் நம்மிடமிருந்து உளமார்ந்த ஒத்துழைப்பையும் பதில்மொழியையும் எதிர்பார்க்கின்றார்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!