|
24 அக்டோபர்
2017 |
|
|
முதல் வாசகம்
ஒருவரின் குற்றம் அனைவருக்கும் தண்டனைத் தீர்ப்பானதுபோல, ஒருவருடைய
ஏற்புடைய செயல் விடுதலைத் தீர்ப்பானது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
5: 12, 15b, 17-19. 20b-21
சகோதரர் சகோதரிகளே, ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த
உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது.
அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும்
சாவு கவ்விக்கொண்டது. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால்
பலரும் இறந்தனர்.
ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின்
வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.
மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி
செலுத்தினதென்றால் அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும்
கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள்
வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய்
நம்பலாம் அன்றோ?
ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய்
அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும்
வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின்
கீழ்ப் படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால்
பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது. இவ்வாறு,
சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல், நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது; அந்த அருள்தான்
மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி, நிலைவாழ்வு பெற வழிவகுக்கிறது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
====================================================================
பதிலுரைப்
பாடல் -
திபா 40: 6-7a, 7b-8. 9. 16 (பல்லவி:
8a,7a)
பல்லவி: என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன்.
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரி பலியையும்
பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள்
திறக்கும்படி செய்தீர். 7a எனவே, "இதோ வருகின்றேன்". பல்லவி
7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;
உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான்.
பல்லவி
9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில்
அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே!
நீர் இதை அறிவீர். பல்லவி
16 உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்!
நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், "ஆண்டவர் எத்துணைப்
பெரியவர்!' என்று எப்போதும் சொல்லட்டும்! பல்லவி
===========================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
லூக் 21: 36
அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்காக
எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.
==========================================================================
நற்செய்தி
வாசகம்
தலைவர் வந்து பார்க்கும்போது
விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
12: 35-38
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "உங்கள் இடையை
வரிந்துகட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்.
திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது
உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு
ஒப்பாய் இருங்கள்.
தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள்
பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப்
பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல்
வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால்
அவர்கள் பேறு பெற்றவர்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மறையுரைச் சிந்தனை
உங்கள்
இடையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து
கொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர்
திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக்
காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்'' (லூக்கா
12:35-36)
தமிழகத்தில் ஆண்கள் வேட்டி அணிவதுபோல அக்காலத்தில் யூதர்கள்
நீண்ட அங்கி அணிவது வழக்கம். எனவே, ஏதாவது ஓடியாடி வேலை செய்ய
நேர்ந்தால் ஆடையை மேலே தூக்கிக் கட்டிக்கொள்வார்கள். அப்போது
காலசைவு எளிதாகும். இதையே இயேசு ''உங்கள் இடையை வரிந்துகட்டிக்
கொள்ளுங்கள்'' என்கிறார் (லூக் 12:35). மேலும், யூத மக்களுக்கு
இச்சொற்றொடர் முற்காலத்தில் நடந்த முக்கியமானதொரு நிகழ்வை
நினைவுபடுத்தியது. அதாவது, எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்து
அவதிப்பட்ட யூத மக்கள் கடவுளின் வல்லமையால் மோசேயின் தலைமையின்கீழ்
விடுதலை பெற்று, வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிச் சென்ற நிகழ்ச்சியை
ஆண்டுதோறும் கொண்டாடினார்கள். அது பாஸ்கா விழா (''கடந்து செல்லல்
விழா'') என்றழைக்கப்பட்டது. அன்று பாஸ்கா ஆட்டினை நெருப்பில்
வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரைகளோடும் உண்ண
வேண்டும் என்னும் சட்டம் இருந்தது. அதை உண்ணும் முறை: ''இடையில்
கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து
விரைவாக உண்ணுங்கள்'' (காண்க: விப 12:11). ஆபத்திலிருந்து தப்பித்துக்
கொள்வதற்கு ''விரைந்து'' செயல்படுமாறு யூதர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
அதுபோலவே, இயேசுவும் தம் சீடர்களை நோக்கி, ''விழிப்பாயிருங்கள்''
என்றும் ''தயாராயிருங்கள்'' என்றும் கூறினார். மேலும் நீதிமொழிகள்
நூலில் ''ஞானம்'' ஒரு பெண்ணாக உருவகிக்கப்பட்டு, சுறுசுறுப்பாகச்
செயல்படுவது குறிக்கப்படுகிறது: ''சுறுசுறுப்புடன் அவள் (''ஞானம்'')
வேலை செய்வார்; அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள்...
அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது''
(காண்க: நீமொ 31:17-18). இயேசுவும் சீடர்களை நோக்கி, அவர்களுடைய
''விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்'' எனக் கூறுகிறார்
(லூக் 12:35)
யூதர்கள் பாஸ்கா விழாவின்போது புளியாத அப்பத்தை உண்டனர். எனவே,
புளிப்பு மா அப்போது தவிர்க்கப்பட்டது. இயேசுவும் தம் சீடர்களிடம்
''பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள்
எச்சரிக்கையாய் இருங்கள்'' என ஏற்கெனவே கூறியிருந்தார் (காண்க:
லூக் 12:1). ஆக, சீடர்கள் ''விழிப்பாய் இருக்க வேண்டியது'' எது
குறித்து என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். முதலில் சீடர்கள்
பரிசேயரைப் போல வெளி அனுசாரங்களோடு நின்றுவிடக் கூடாது. இரண்டாவது,
சீடர்கள் ''நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்'' என்பதை எப்போதும்
கருத்தில் கொண்டு, மானிடமகன் வரும்போது அவரை வரவேற்க தயாராய்
இருக்க வேண்டும். தொடக்க காலத் திருச்சபை இந்த ''விழிப்பு
நிலை'' பற்றித் தெளிவாக உணர்ந்திருந்தது. எந்த நேரத்திலும்
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நிகழலாம் என அவர்கள் எதிர்பார்த்ததுண்டு.
ஆயினும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை உடனடியாக நிகழாது என்று
அறிந்ததும் அவர்கள் தம்மைத் தேடி ஒவ்வொரு கணமும் வருகின்ற கடவுளைத்
திறந்த உள்ளத்தோடும் தாராள இதயத்தோடும் ஏற்றிட ''விழிப்பாய்''
இருக்கக் கற்றுக் கொண்டார்கள். அதுபோலவே, கடவுளின் பதிலாளாக நம்மைத்
தேடி வந்த இயேசுவைச் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த ''ஆண்டவராக''
ஏற்ற அவர்கள் தம் தலைவரை எப்போதும் தம் இதயம் என்னும் இல்லத்தில்
ஏற்றிட ''விழிப்பாய்'' இருக்க அறிந்திருந்தனர். இன்று
வாழ்கின்ற நாமும் கடவுளின் வருகையையும் இயேசுவின் உடனிருப்பையும்
உணர்ந்தவர்களாக, ''விழித்திருந்து'' வாழ்பவர்களாகச் செயல்பட அழைக்கப்படுகிறோம்.
அப்போது நம் இதயக் கதவைத் தட்டுகின்ற நம் இறைவனை நம் அன்போடு
ஏற்று வரவேற்று உபசரிப்போம்.
|
|