|
21 அக்டோபர்
2017 |
|
|
முதல் வாசகம்
எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்;
தயங்காமல் நம்பினார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
4: 13, 16-18
சகோதரர் சகோதரிகளே! உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும்
என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ
திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை
கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி
கிடைத்தது. ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை
வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின்
வழிவந்தவர்கள் எல்லாருக்கும்
- திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு
மட்டுமல்ல, அவரைப் போலக் கடவுள்மீது நம்பிக்கை
கொண்டோருக்கும் - உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை.
ஏனெனில் "எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்''
என்று மறைநூலில் எழுதியுள்ளது.
ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால்
இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மீது நம்பிக்கை கொண்டு அவர்
முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். "உன் வழிமரபினர் எண்ணற்றவராய்
இருப்பர்'' என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று
நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல்
தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே
அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
====================================================================
பதிலுரைப்
பாடல் -
திபா 105: 6,7. 8-9. 42-43 (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில்
கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.
6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட
யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின்
நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி
8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;
ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை
நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும்
ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில்
கொண்டுள்ளார். பல்லவி
42 ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய
வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார். 43 அவர்தம் மக்களை மகிழ்ச்சியோடு
வெளிக்கொணர்ந்தார்; அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு
கூட்டிச் சென்றார். பல்லவி
===========================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
யோவா 15: 26b,27a
அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது
என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்.
அல்லேலூயா.
==========================================================================
நற்செய்தி
வாசகம்
நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார்
அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
12: 8-12
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "நான் உங்களுக்குச்
சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட
மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள்
முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர்
முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது
ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார்.
ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்.
தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக்
கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில்
அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில்
நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக்
கற்றுத் தருவார்.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மறையுரைச் சிந்தனை
தூய
ஆவிக்கு எதிரான குற்றம்!
'Theory
of Evalution' என்ற கோட்பாட்டிற்குச் சொந்தக்காரர் இங்கிலாந்து
நாட்டைச் சார்ந்த சார்லஸ் டார்வின்.
சிறுவயதில் அவர் கவிதை புனைவதில் வல்லவராகவும், இசைக்கருவிகள்
மீட்டுவதில் வல்லவராகவும் விளங்கினார். ஆனால், நாட்கள் ஆக ஆக
அவருடைய கவனம் மற்றும் சிந்தனை அனைத்தும் உயிரினங்கள் பற்றிய
ஆய்வுகள் தொடர்பாகவே சென்றது. இதனால் அவர் கவிதை புனைவதையும், இசைக் கருவிகள் மீட்டுவதை மறந்து போனார்.
அவர் இறப்பதற்கு முன்னதாக அவரைச் சந்தித்த பத்திரிக்கையாளர் ஒருவர்
ஒருவரிடம், "ஒருவேளை கடவுள் உங்களுக்கு மறுபிறப்பைத் தந்தால்,
நீங்கள் எப்படி வாழ ஆசைப்படுவீர்கள்?" என்று கேட்டார். அதற்கு
சார்லஸ் டார்வின் அவரிடம், " ஒருவேளை கடவுள் எனக்கு மறுபிறப்பைத்
தந்தார் என்றால், நான் ஒரு கவிஞனாகவும், இசைக் கலைஞனாகவும் வாழ
ஆசைப்படுவேன்" என்றார்.
கடவுள் தனக்குக் கொடுத்த கவிதை புனைகின்ற திறமையையும், இசையை
மீட்டுகின்ற திறமையையும் மறந்து விட்டு, வேறு வழியில் சென்ற
சார்லஸ் டார்வின் போன்று, நாமும் பல நேரங்களில் அவர் நமக்குக்
கொடுத்திருக்கின்ற தூய ஆவியை மறந்தும், அவருடைய பிரசன்னத்தை மறுத்தும், அவருக்கு எதிராக செயல்பட்டும் கொண்டிருக்கின்றோம். அப்படியிருக்கும்போது
இன்றைய நற்செய்தி வாசகமானது தூய ஆவியின் முக்கியத்துவத்தையும், அவருக்கு எதிராக செய்யப்படும் குற்றம் எவ்வளவு தண்டனைக்குரியது
என்பதை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதனைக் குறித்து இப்போது
சிந்தித்துப் பார்ப்போம்.
முதலில் தூய ஆவியானார் நம்முடைய
வாழ்வில், அதிலும் குறிப்பாக
நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு எந்தளவுக்கு
உறுதுணையாக இருக்கின்றார் என்பது குறித்து பார்ப்போம். இயேசு
கூறுகின்றார், " தொழுகைக் கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள்
முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படி பதிலளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்படவேண்டாம், ஏனெனில் நீங்கள் பேச வேண்டியதைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக்
கற்றுத் தருவார்" என்று. ஆம், இயேசு தூய ஆவியாரைக் குறித்துக்
கூறுகின்ற வார்த்தைகள் முற்றிலும் உண்மையாகும். திருத்தூதர்கள்
ஆட்சியாளர்களுக்கு முன்பாக இழுத்துச் செல்லப்பட்டபோது, தூய ஆவியானர்தான்
அவர்களில் செயல்பட்டு அவர்கள் திறம்படப் பேச உறுதுணை
புரிகின்றார். நம்முடைய வாழ்க்கையிலும் தூய ஆவியானவர் நம்மோடு
இருந்து நாம் பேசுவதற்கான ஞானத்தையும், முன்மதியைத் தருகின்றார்
என்பதுதான் உண்மையாக இருக்கின்றது.
தூய ஆவியானவரின் உடனிருப்பைக் குறித்து சிந்தித்துப் பார்த்த
நாம் அவருக்கு எதிராகச் செய்யப்படும் குற்றங்கள்
யாவை, அவற்றுக்கு
எத்தகைய தண்டனை கிடைக்கும் என்று இப்போது பார்ப்போம்.
தூய ஆவியாரைக் குறித்துப் பேசுகின்றபோது ஆண்டவர் இயேசு
" உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்" என்பார் (யோவா 16:13).
ஆம், தூய ஆவியார்தான் நமக்கு எது உண்மை, எது பொய் என்பதைக் கற்றுத்
தருபவராக இருக்கின்றார். அவர் மட்டும் இல்லையென்றால் நம்மால்
நன்மை தீமையை, பொய்மை, வாய்மையை பிரித்துப் பார்க்க முடியாது.
ஆகவே, அப்படிப்பட்ட தூய ஆவியானவரை யார் ஒருவர் மறுக்கின்றாரோ
அவர் உண்மையில் வழியில் நடக்க ஒருநாளும் வாய்ப்பில்லை. அவர்
பொய்மையிலே சிக்குண்டு போவார் என்பதுதான் நிசர்தனம். எனவே,
பொய்மைக்குப் பின்னால் போகும் ஒருவர் தூய ஆவியாருக்கு உகந்தவராக
எப்படி மாறமுடியும் என்பதுதான் இயேசுவின் இயேசுவின் கேள்வியாக
இருக்கின்றது.
இப்படி பொய்மைக்குப் பின்னால் போகின்ற ஒருவர் நிச்சயமாக மனந்திரும்ப
வாய்ப்பே இல்லை. அப்படிப்பவருக்கு அழிவு என்பது நிச்சயம் உண்டு.
அதனால்தான் இயேசு, " மானிடமகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை
சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர்
மன்னிப்புப் பெறமாட்டார் என்கிறார்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் தூய ஆவியானவருடைய பிரசன்னத்தை உணர்ந்து, அவர் காட்டும் உண்மையின் வழியில் நடந்திருக்கின்றோமா? என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் உண்மையின் வழியில்
நடப்பதால் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள், பிரசனைகளுக்குப் பயந்து
பொய்மைக்கும், போலித்தனத்தும் அடிமையாகி இருளில் சிக்குண்டு கிடக்கின்றோம்.
இத்தகைய வாழக்கை உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை ஆகிவிடாது. நாம்
எப்போதும் தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப, அவர் காட்டும் உண்மையின்
பாதையில் நடக்கவேண்டும். அப்போதுதான் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட
முடியும்.
ஆகவே, தூய ஆவியின் பிரசன்னத்தை நம்முடைய வாழ்க்கையில் உணர்ந்தவர்களாய், அவர் காட்டும் உண்மையின் வழியில் நடப்போம், அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம். |
|