|
20 அக்டோபர்
2017 |
|
|
முதல் வாசகம்
ஆபிரகாம் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு
நீதியாகக் கருதினார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
4: 1-8
சகோதரர் சகோதரிகளே! இதுகாறும் கூறியவை நம் இனத்தின் தந்தையாகிய
ஆபிரகாமுக்கு எப்படிப் பொருந்தும்? தாம் செய்த செயல்களினால்
அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால், பெருமை பாராட்ட அவருக்கு
இடமுண்டு; ஆனால் கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை
பாராட்ட இடமே இல்லை.
ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன? "ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை
கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.'' வேலை
செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவது இல்லை; அது
அவர்கள் உரிமை. தம் செயல்கள் மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்று
இல்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை
வைப்போரை, அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர்
எனக் கருதுகிறார்.
அவ்வாறே, கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு
ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர் என்று
தாவீது கூறியிருக்கிறார்: "எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ,
எவரது பாவம் மறைக்கப் பட்டதோ அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த
மனிதரின் தீச்செயலைக் கருத்தில் கொள்ளவில்லையோ அவர் பேறுபெற்றவர்.''
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
====================================================================
பதிலுரைப்
பாடல் -
திபா 32: 1-2. 5. 11 (பல்லவி: 7 காண்க)
பல்லவி: என் புகலிடமான ஆண்டவரே, உம் மீட்பின் ஆரவாரம் ஒலிக்கின்றது.
1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ, அவர் பேறுபெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி
5 "என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான்
மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்' என்று
சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.
பல்லவி
11 நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே,
நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். பல்லவி
===========================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
திபா 33: 22
அல்லேலூயா, அல்லேலூயா! உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது
பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! அல்லேலூயா.
==========================================================================
நற்செய்தி
வாசகம்
உங்கள் தலைமுடி எல்லாம்கூட எண்ணப்பட்டிருக்கின்றன.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
12: 1-7
அக்காலத்தில் ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான
மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத்
தொடங்கினார்.
அவர் அவர்களிடம் கூறியது: "பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு
மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். வெளிப்படாதவாறு
மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும்
ஒன்றும் இல்லை.
ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில்
காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்.
என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உடலைக் கொல்வதையன்றி
வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக்
காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே
அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச்
சொல்கிறேன். இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா?
எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி
எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்;
சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மறையுரைச் சிந்தனை
அஞ்சாதே,
நான் என்றும் உன்னோடு
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மதபோதகர் ஜான் மாக்
நெய்ல் என்பவர். அவருடைய சிறுவயதில் நடைபெற்ற நிகழ்வு.
ஜான் மாக் சிறுவனாக இருந்தபோது ஒவ்வொருநாளும் பக்கத்து ஊருக்கு
வேலைக்குப் போய்விட்டு வரவேண்டும். அப்படி வருகின்றபோது, அடர்ந்த
காடு வழியாகவும், கணவாய் வழியாகவும்தான் வரவேண்டும். ஆட்கள்
நடமாட்டம் அதிகமாக இருக்காது. கொடிய மிருகங்கள் நடமாடுகின்ற பகுதி
வேறு. அதனால் சிறுவன் ஜான் மாக் ஒவ்வொருநாளும் பயந்துகொண்டுதான்
வீட்டுக்கு வருவான்.
ஒருநாள் அவன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது
நன்றாக இருட்டி இருந்தது. இருட்டு அவனுக்கு பயங்கரமான அச்சத்தைத்
தந்தாலும், கொடிய விலங்குகள் பற்றிய பயம் இன்னும் அவனுக்கு
கூடுதல் பயத்தைத் தந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான்
வந்தான்.
அப்போது ஒரு காலடிச் சத்தம் கேட்டது. அது அவனை நெருங்கி வரத்
தொடங்கியது. இதனால் அவன் இன்னும் அச்சத்திற்கு உள்ளானான். உயிருக்கு
ஏதாவது ஆகிவிடும் என்று பயந்துகொண்டிருந்த நேரத்தில், தூரத்தில்
கேட்ட காலடிச் சத்தம் அவனை நெருங்கிவந்து, அவனுடைய தோள்மேல் கைகளைப்
போட்டது. உடனே அவன் அதிர்ச்சியில் உறைந்துபோய் கத்தத் தொடங்கினான்.
அப்போது " ஜான் மாக்! நான்தான் உன் தந்தை" என்றது. பயத்தின் உச்சத்திற்குப்
போன ஜான் மாக் அடுத்த நிமிடம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டான்.
" இரவு நீண்ட நேரம் ஆகியும் நீ வீட்டுக்கு வராததால், உன்னை
கூட்டுக்கொண்டு போகத்தான் இங்கே வந்தேன்" என்று ஜான் மாக்கின்
தந்தை அவனை தோளோடு அணைத்துக்கொண்டு வீட்டுக்கு கூட்டிக்கொண்டு
போனார்.
இந்நிகழ்வைப் பற்றி பின்னாளில் குறிப்பிடும் ஜான் மாக்,
"கடவுள் நம்முடைய தந்தையைப் போன்று, ஆபத்தான நேரங்களில் ஓடோடிவந்து
உதவக்கூடியவராக இருக்கின்றார்" என்று கூறுவார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப்
பார்த்து, "அஞ்சாதீர்கள்" என்று ஆறுதல் மொழி பேசுகின்றார்.
மேலும் யாருக்கு அஞ்சிவாழவேண்டும்? யாருக்கு அஞ்சக்கூடாது என்பதையும்
தெளிவுபடுத்துகிறார். "உடலைக் கொல்பவர்களுக்காக அஞ்சவேண்டாம்,
மாறாக உடலோடு உயிரை நரகத்தில் தள்ளக்கூடியவருக்கு மட்டும் அஞ்சுங்கள்"
என்கிறார். அதாவது கடவுளுக்கு மட்டுமே அஞ்சி நடப்பவர்களாக இருங்கள்
என்கிறார். அப்படி நடக்கும்போது அவர் நம்மை என்றும்
பாதுகாத்துப் பராமரிப்பார். அதனைத்தான் நற்செய்தியிலே இயேசு,
சாதாரண சிட்டுக்குருவிகளையே சிறந்த விதமாய் பராமரிக்கும் கடவுள், உன்னை பராமரிக்காமல் போக மாட்டார் என்கிறார்.
மனிதர்களாகிய நாம் நம்முடைய வாழ்க்கையில் பல காரியங்களுக்காகப்
பயப்படுக்கின்றோம். இருள், தண்ணீர்,
கொடிய நோய், மனிதர்கள், இயற்சி சீற்றங்கள் இவற்றைக் கண்டு ஒவ்வொருநாளும் பயந்து வாழ்கின்றோம். ஆனால் இறைவார்த்தை நமக்கு சுட்டிக்காட்டும் உண்மை, கடவுளின் அன்பை
உணர்ந்தவர்கள் எதைக் கண்டும் பயப்படத் தேவையில்லை என்பதுதான்.
உரோ 8:35 ல் வாசிக்கின்றோம், "கிறிஸ்துவின் அன்பிலிருந்து எதுதான்
நம்மைப் பிரித்துவிட முடியும். வேதனையா? பட்டினியா? இன்னலா?
இடரா? சாவா? ஆடையின்மையா? நெருக்கடியா? எதுதான் நம்மைப் பிரிக்கமுடியும்"
என்பார் தூய பவுலடியார்.
ஆக, கடவுளின் பராமரிப்பையும், அவரது பாதுகாப்பையும் உணரக்கூடிய
நாம் எதைக் குறித்தும் பயம்கொள்ளத் தேவையில்லை. எரேமியா 1:8
வாசிக்கின்றோம், " அஞ்சாதே! ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு
இருக்கிறேன் என்கிறார் ஆண்டவர்"
ஆதலால், வாழ்வின் எல்லா கட்டத்திலும், குறிப்பாக துன்ப நேரத்தில்
இறைவனது பாதுகாப்பை, அரவணைப்பை உணர்ந்து வாழ்வோம். எல்லா அச்ச
உணர்வையும் வென்று, இறையருள் பெறுவோம். |
|