Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      02 அக்டோபர் 2019  
                                    பொதுக்காலம் 26ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் தூய காவல் தூதர்கள் நினைவு
=================================================================================
என் தூதர் உனக்கு முன் செல்வார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 23: 20-23a

ஆண்டவர் கூறுவது: வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன். அவர்முன் எச்சரிக்கையாயிரு; அவர் சொற்கேட்டு நட; அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக் கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது. நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன். ஏனெனில், என் தூதர் உனக்கு முன் செல்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -திபா 91: 1-2. 3-4. 5-6. 10-11 (பல்லவி: 11) Mp3
=================================================================================
பல்லவி: உம்மைக் காத்திட, தம் தூதர்க்கு ஆண்டவர் கட்டளையிடுவார்.

1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 2 ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். பல்லவி

3 ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார். 4 அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். பல்லவி

5 இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர். 6 இருளில் உலவும் கொள்ளைநோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர். பல்லவி

10 ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. 11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 103: 21

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிறு பிள்ளைகளுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10

அக்காலத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, "விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?'' என்று கேட்டார்கள்.

அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: "நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

நமக்காக தூதரை ஏற்பாடு செய்திருக்கின்ற கடவுள், நம்மீது அக்கறை கொண்டவர் என்பதை நம்புவோம்.

நாமும் நம்மவர்களுக்கு அக்கறையோடு கொண்ட துணை தரக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

இந்த இரண்டு வேறுபட்ட சிந்தனைகளை புரிந்து கொண்டவர்க வாழ்க்கை வளம் சேர்க்கும்.
===============================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
காவல்தூதர்கள் (அக்டோபர் 02)

நிகழ்வு

ஒருமுறை சிரியா நாட்டு அரசன் ஆண்டவரின் அடியாரும் இறைவாக்கினருமாகிய எலிசாவை பிடித்துவர அவர் இருந்த இடத்திற்கு தன்னுடைய படைவீரர்களை அனுப்பி வைத்தான். படைவீரர்களும் அவர் இருந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டார்கள். அடுத்தநாள் காலையில் இறைவாக்கினர் எலிசாவின் வேலையாள் படைவீரர்கள் அவர்களைச் சூழ்ந்திருந்திருப்பதைக் கண்டு, பயந்துபோய் எல்லாவற்றையும் எலிசாவிடம் சொன்னார். அதற்கு எலிசா, " அஞ்ச வேண்டாம், அவர்களோடு இருப்பவர்களை விட நம்மோடு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்" என்றார். பின்னர் எலிசா, " ஆண்டவரே! இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்!" என்று வேண்டினார். அப்போது ஆண்டவர் வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். வேலைக்காரன் தன்னுடைய கண்களைத் திறந்து பார்த்தபோது, மலை எங்கணும் நெருப்புக் குதிரைகளும், தேர்களும் எலிசாவைச் சூழ்ந்து நிற்பதைக் கண்டான்.

இதற்கிடையில் சிரியா நாட்டினர் எலியா இறைவாக்கினரைச் சூழ்ந்து வந்த பொழுது எலிசா ஆண்டவரை நோக்கி, " இவ்வினத்தாரைக் குருடாக்கியருளும்" என்று மன்றாடினார். உடனே, ஆண்டாவர் எலிசாவின் மன்றாட்டுக்கு இணங்கி அவர்களைக் குருடாக்கினார். பின்னர் எலிசா அவர்களை நோக்கி, " இது நீங்கள் செல்ல வேண்டிய பாதையுமல்ல, நகருமல்ல. என்னைப் பின் தொடருங்கள். நீங்கள் தேடும் மனிதரிடம் நாங்கள் உங்களை அழைத்துச் செல்கிறேன்" என்று சொல்லி அவர்களைச் சமாரியாவிற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் அந்நகருக்குள் நுழைந்ததும் எலிசா, " ஆண்டவரே! இவர்கள் பார்வை பெறும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும்" என்றார். ஆண்டவர் அவர்கள் கண்களைத் திறக்கவே, சமாரிய நகரின் நடுவில் தாங்கள் இருப்பதைக் அவர்கள் கண்டார்கள். தாங்கள் முற்றிலுமாக ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த அவர்கள், அதன்பின் இஸ்ரயேல் நாட்டுக்குள் காலேடுத்துக் கூட வைக்கவில்லை.

ஆண்டவரின் தூதர்கள் காவல் தூதர்கள் எப்படி நம்மைக் காப்பாற்றுகிறார்கள் என்பதற்கு விவிலியத்தில் வரும் இந்த நிகழ்வு ஒரு சான்று.

வரலாற்றுப் பின்னணி

" நம்முடைய ஆன்மா மிகவும் முக்கியமானது என்பதால், அதனைப் பாதுகாக்க இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல்தூதரை நியமித்திருக்கிறார்" என்பார் விவிலிய அறிஞரான தூய எரோனிமுஸ். ஆம், நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல்தூதர் உண்டு என்பது ஆழமான உண்மை. காவல்தூதர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாடும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்தே இருந்திருக்கின்றது. 1582 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள வலேன்சியா என்னும் இடத்தில்தான் முதன்முறை காவல்தூதர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடும் வழக்கம் வந்தது. 1608 ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் பவுல் இதனை இன்னும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தார். திருத்தந்தை பத்தாம் கிளமேண்டோ இவ்விழாவை அக்டோபர் 02 ஆம் நாள் கொண்டாடப் பணித்தார். திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயரோ இவ்விழாவை ஒரு பெருவிழாவைக் போன்று கொண்டாடப் பணித்தார். அப்படி வந்ததுதான் காவல்தூதர்களின் விழாவாகும்.

காவல்தூதர்கள் செய்யும் பணிகள்

விவிலிய அறிஞரான ஜேம்ஸ் ஆல்பரியோனே (James Alberione) என்பவர் காவல்தூதர்கள் செய்யும் பணிகள் என்னென்ன என்று பின்வருமாறு வரிசைப்படுத்துவார். அவை என்னென்ன என்று இப்போது பார்ப்போம்.

1. காவல்தூதர்கள் நம்மைக் காக்கின்றார்கள்

காவல்தூதர்கள் செய்யும் முதன்மையான பணி நம் ஒவ்வொருவரையும் தீமைகளிலிருந்தும், பகைவர்களின் பிடியிலிருந்தும் காப்பதாகும். இதனை திருப்பாடல் 91:11 ல் மிகத் தெளிவாக நாம் வாசிக்கின்றோம். " நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி தம் தூதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்" என்று. புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்த தூய பவுலும் காவல்தூதர்களின் பாதுகாப்பை தன்னுடைய வாழ்வில் உணர்ந்தார். அதனைத்தான் " அஞ்சாதீர்! நீர் சீசர் முன்பாக விசாரிக்கப்பட வேண்டும். உம்மோடு கூடக் கப்பலிலுள்ள அனைவரையும் கடவுள் உம் பொருட்டுக் காப்பாற்றப் போகின்றார்" (திப 27:24) என்று வானதூதர் பவுலடியாருக்குச் சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம்.

2. காவல்தூதர்கள் நம்மை வழிநடத்துகிறார்கள்

காவல்தூதர்கள் நம்மைத் தீமையிலிருந்து காப்பதோடு மட்டுமல்லாமல், நல்வழியில் வழிநடத்தவும் செய்கிறார்கள். விடுதலைப் பயண நூல் 32:34 ல் வாசிக்கின்றோம், " இதோ என் தூதர் உம் முன்னே செல்வார்" என்று ஆண்டவராகிய கடவுள் மோசேயிடம் கூறுகின்றார். ஆகவே, நாம் கடவுளுடைய வழிநடத்துதலை காவல்தூதர்கள் வழியாக உணர்ந்துகொள்வோம்.

3. காவல்தூதர்கள் நமக்காக பரிந்துபேசுகிறார்கள்

காவல்தூதர்கள் நம்மைப் பாதுகாத்து வழி நடத்துவதோடு மட்டுமல்லாமல், நமக்காகப் பரிந்தும் பேசுகிறார்கள். எப்படியென்றால் வானதூதர்கள் இறைவன் திருமுன் எப்போதும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் நம்மோடும் உடன் இருக்கிறார்கள். ஆகவே நம்முடைய தேவைகளை அறிந்து, அதனை இறைவன் திருமுன் எடுத்துச் சென்று, அவரிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார்கள். யோபு புத்தகத்தில் யோபுவின் நண்பரான எளிகுவின் வார்த்தையான " குழியில் விழாமல் இவர்களைக் காப்பாற்றும்" (யோபு 33: 24-26) என்பதில் இருந்து இதனை அறிந்துகொள்கிறோம்.

ஆகவே, நம்மை வழிநடத்தும், பாதுகாக்கும், நமக்காக பரிந்து பேசும் காவல்தூதர்கள் நம்மோடு இருக்கின்றார்கள் என்ற உண்மையை உணர்வதே மிகச் சிறந்த செயலாகும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

காவல்தூதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்ற சிந்தித்துப் பார்ப்போம்.

காவல்தூதர்களைத் தந்ததற்காக இறைவனைப் போற்றுவோம்

இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் காவல்தூதரைத் தந்திருக்கிறார் என்றால் அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும். அதுவே நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான காரியமாக இருக்கின்றது. எனவே, இவ்விழா நாளில் காவல்தூதர்களை நமக்குத் தந்த இறைவனைப் போற்றுவோம். அதே நேரத்தில் காவல்தூதர்களின் கடவுளின் மனம்நோகாதவாறு இருக்க கடவுளுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
காவல்தூதர்களின் விழா



கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவர் காட்டுவழியாக பயணம் மேற்கொண்டார். அது ஓர் அடர்ந்த, கொடிய மிருகங்கள் வாழக்கூடிய காடு. அவர் தன் பயணத்தைத் தொடர்கையில் திடிரென்று இருள்சூழ்ந்து கொண்டது; மழைபெய்யும் அறிகுறிகள் வேறு தென்பட்டன. இடிமுழக்கத்துடன், காட்டுவிலங்குகளின் சத்தமும் ஒருசேர அவரை பீதிக்கு உள்ளாக்கியதால், அவருக்குள்ளே ஒருவிதமான பய உணர்வு ஏற்பட்டது. முடிவில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

அவர் மீண்டும் கண்விழித்துப் பார்த்தபோது, அவர் செல்லவேண்டிய இடத்தை அடைந்திருந்தார். அவருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. என்ன நிகழ்ந்தது என அவர் சிந்தித்த போது அவருக்கு ஒரு அசரீரி ஒலி கேட்டது.

" மகனே நீ உன் பயணத்தைத் தொடர்ந்தபோது, அதன் பாதுகாப்பை என்னிடம் ஒப்படைத்துச் செபித்தாய், அக்கணம் முதலே நான் உன்னைப் பின்தொடர்ந்து வந்தேன். நீ பயணித்த பாதையின் பாதச்சுவடுகளை உற்றுப்பார், உன்பின்னே மேலும் இரு பாதப்பதிவுகளைக் காணலாம். நான்காகத் தொடர்ந்த பாதச்சுவடுகள் நீ மயங்கிய இடத்திலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளதை காண்பாய். நீ நிலைகுலைந்து, மயங்கி, நிலத்தில் விழ நான் இடமளிக்கவில்லை. மாறாக, நான் உன்னை என் கரங்களில் தாங்கிக் கொண்டேன். அதன்பின் உன்னால் நடந்து உன் பயணத்தைத் தொடர முடியாததால், என் தோள்களில் உன்னைச் சுமந்துவந்தேன். அந்த இரண்டு பாதச்சுவடுகளும் உன்னுடையதல்ல, உன்னைச் சுமந்த என்னுடையதே. உனக்குத் தெரியாமலே நான் உன்னுடன் பயணித்தேன் என்றது" அந்த அசரீரி.

நீ செல்லும் இடமெல்லாம் உன்னைக் காக்கும்படி அவர் தம் தூதர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார் என்ற இறைவார்த்தையை (திபா 91:11) உறுதி செய்வதாக இருக்கிறது மேலே சொல்லப்பட்ட நிகழ்வு. ஆம், இறைத்தூதர்கள் நம்மை பாதுகாக்கக்கூடியவர்கள்; நமக்குத் துணையாய் இருப்பவர்கள், நம்மோடு வழிநடப்பவர்கள். அப்படிப்பட்ட சிறப்புகளுக்குச் சொந்தக்காரர்களான காவல் தூதர்களின் விழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.

திருச்சபையின் தந்தையர் என அழைக்கப்படுகின்ற அகுஸ்தினார், அக்வினாஸ், எரேனியு போன்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதர் இருக்கிறார் என்று சொல்வார்கள். ஆனால் விவிலியத்திலே அதற்கான ஆதாரம் கிடையாது. " இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம். கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" (மத்தேயு 18:10) என்னும் இயேசுவின் வார்த்தைகள்தான் காவல்தூதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான மையக் கருவாக இருக்கின்றது.

இந்த காவல்தூதர்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்தும் வாக்குறுதி 'உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை' என்பதுதான். காவல் தூதர்கள் நம்மோடு இருக்கிறார்கள், நம்மை என்றும் வழிநடத்துகிறார்கள். மேலும் இவர்கள் கடவுளின் செல்லப்பிள்ளைகளைக் காப்பாற்றுபவர்களாகவும் (2 அரசர்கள் 6:13-17), தகவல்களை வெளிப்படுத்துபவர்களாகவும் (லூக் 1:11-20), வழிகாட்டுபவர்களாகவும் (மத் 1:20-21), பராமரிப்பவர்களாகவும் (1 அர 19:5-7), பணிவிடை செய்பவர்களாகவும் (எபி 1:14) வலம் வருகின்றனர். ஆதலால் இவ்வளவு பணிகளை நமக்காக செய்துவரும் காவல் தூதர்களை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்; அவருக்கு என்றும் பிரமாணிக்கமாய் இருக்கவேண்டும்.

சிறுவன் ஒருவன் விடுமுறைக்கு தன்னுடைய பாட்டியின் வீட்டிற்குச் சென்றிருந்தான். பாட்டியின் வீட்டில், ஒரு அறையில் கடவுளின் படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அதற்கு கீழே, " கடவுள் உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று எழுதியிருந்தது.

இது சிறுவனுக்கு மிகப்பெரிய மன உளைச்சலைத் தந்தது. " கடவுள் என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றால், என்னால் சேட்டைகள் செய்ய முடியாது, நான் ஒழுக்கமுடையவனாக அல்லவா வாழவேண்டும்" என்று தன்னுடைய பாட்டியிடம் முறையிட்டான் அவன். அதற்கு அவனுடைய பாட்டி, " கடவுள் உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அது விளக்கமல்ல, மாறாக கடவுள் உன்னை சிறு நொடிப்பொழுதும் கைவிடாமல் பாதுகாத்து அன்பு செய்கிறார் என்பதே இதன் அர்த்தம்" என்று விளக்கமளித்தார்.

ஆம், காவல் தூதர்கள் நம்மோடு இருக்கிறார்கள் என்றால் கடவுள் எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார் என்று அர்த்தமல்ல, மாறாக அவர் நம்மை சிறுபொழுதும் பிரியாமல் பாதுகாத்து அன்பு செய்கிறார் என்பதே அர்த்தம்.

எனவே நம்மை காவல் தூதர்கள் வழியாக பராமரித்து வரும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். அத்தோடு காவல்தூதர்களின் உடனிருப்பை உணர்வோம்; இறைவழியில் நடந்து, இறையருள் பெறுவோம்.



சிந்தனை



அசட்டை செய்வது என்பது இன்று நடைமுறையாகி வருகின்றது.

கடவுளை இன்று மனிதர் கூட்டம் அசட்டை செய்து வருவது அதிகரித்து வருகின்றது.

எல்லாம் தங்களாலேயே ஆகின்றது. தங்களது ஆற்றலாலும், அறிவாலும் தான் நடைபெறுகின்றது என்று சொல்லி, படைத்தவரை, படைத்தவர் செய்கின்ற வல்ல செயல்களை புறக்கணித்து வரும் கூட்டம், என்ன சாதித்து விட்டது என்பதை யோசித்தால், ஒன்றுமே இல்லையென்பது தான் நிசர்தனமான உண்மை.



கடவுளை அசட்டை செய்வதைவிடுத்து, அவருடைய நல்ல வல்ல செயல்களை எண்ணி நன்றி உடையவர்களாய் வாழ்வது சிறப்பானது.



வீம்பு பேசுவோருக்கு எச்சரிக்கை. யாக் 04: 13 16; இச 08: 17; உரோ 09: 16

..............................................

வாழ்வை மாற்றுங்கள்



சீடர்கள் இயேசுவிடத்திலே யார் பெரியவர்? என்ற கேள்வி கேட்கிறார். இயேசு அவர்களிடத்தில் " நீங்கள் மனந்திரும்பிச் சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று பதில் சொல்கிறார். சீடர்கள் நிச்சயம் இந்த பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதை, இதை எல்லாம் செய்யுங்கள், நீங்கள் விண்ணரசிற்குள் நுழைய முடியும் என்ற பாணியில், இயேசுவின் பதில் அமைந்திருக்கும் என்று சீடர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், இயேசு முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலைத் தருகிறார். அவர்களை மனம் மாறுவதற்கு, மாற்றம் பெறுவதற்கு அழைப்புவிடுக்கின்றார்.

இதனுடைய அர்த்தம் என்ன? இயேசு எதற்காக மனமாற்றத்தைப் பற்றி இங்கு பேசுகிறார்? அப்படி மனமாற்றம் இல்லையென்றால், விண்ணரசிற்கான வாய்ப்பே இல்லை என்பதையும் உறுதியாகச் சொல்கிறார். ஏன்? இயேசுவோடு இருந்து, அவருக்குப் பின்னால் அவருடைய பணி செய்யக்கூடிய சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர்? என்று சாதாணமானவர்கள் கேட்கக்கூடிய கேள்வியை கேட்டு, தங்களுக்குள் சண்டையிடுவது இயேசுவுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடாகத்தெரிந்தது. அவர்களை சரியான பாதைக்கு அழைத்து வருவது, போதகராகிய அவருடைய கடமையாக இருந்தது. தங்களை எப்போதும் உயர்வாக நினைக்கக்கூடிய யாரும், விண்ணகத்திற்கு எதிராகத்தான் சென்று கொண்டிருக்க முடியும். விண்ணகத்திற்கு வழிகாட்டிகளாக இருக்கக்கூடிய சீடர்கள் அந்த மனநிலையோடு, தங்களது கடமையை சிறப்பாகச் செய்ய முடியாது என்பதால் தான், இயேசு அவர்களுக்கு சரியான பதிலைத்தருகிறார்.

நமது வாழ்வில் நமது எண்ணம், சிந்தனை, ஏக்கங்கள் விண்ணகம் நோக்கியதாக இருக்க வேண்டும். விண்ணகத்திற்கு புறம்பாக இருக்கக்கூடிய விழுமியங்களை நாம் அறவே அகற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். ஏனென்றால், விண்ணகத்திற்குச் செல்வதற்கான வழி என்பது, தன்னையே இழப்பது என்பதுதான். அங்கே ஆணவத்திற்கோ, அகங்காரத்திற்கோ நிச்சயம் இடம் கிடையாது.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்


----------------------------------------------------------

மிகப்பெரியவர் யார்?



" விண்ணரசில் மிகப்பெரியவர் யார்?" என்பது சீடர்களின் கேள்வி. இயேசுவின் பதில் " மனந்திரும்பி சிறுபிள்ளைகள் போல் ஆக வேண்டும்" . இயேசுவின் இந்தப்பதில் சீடர்கள் விண்ணரசிற்கு வெளியே இருப்பதைச்சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் தவறான வழியில் சென்று கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. வாழ்வில், மனிதர்கள் எதை எதிர்பார்த்து தங்கள் வாழ்வை நகர்த்துகிறார்கள் என்பது முக்கியம். அது பதவியையா? அதிகாரத்தையா? பணத்தையா? இன்பத்தையா? இவை அனைத்தும் விண்ணரசில் நுழைவதற்கு தடைக்கற்கள். அப்படியென்றால் வி்ண்ணரசிற்கு நுழைவது எப்படி? நாம் அனைவரும் சிறுபிள்ளைகளாக மாற வேண்டும்.



சிறுபிள்ளைகளிடத்தில் மூன்று முக்கியமான பண்புகள் காணப்படுகிறது. 1. தாழ்ச்சி. குழந்தைகள் எப்போதுமே தங்களை முன்னிறுத்திக்கொள்வதில் எள்ளளவும் பிரியப்பட மாட்டார்கள். அவர்கள் மறைவாக, பின்புலமாக இருந்து செயல்படுவதைத்தான் விரும்புவார்கள். வளர்ந்தபிறகு போட்டி உலகில் நுழைந்தபிறகு தான், தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறார்கள். 2. சார்ந்திருத்தல். மற்றவர்களைச் சார்ந்திருத்தல் என்பது குழந்தைகளில் இயல்புகளில் ஒன்று. மற்றவரை சார்ந்திருந்து வாழ்வை எதிர்கொள்கிறார்கள். அவர்களை அன்பு செய்கிறவர்கள் மட்டில், அவர்கள் மகிழ்வோடு சார்ந்திருக்கிறார்கள். 3. நம்பிக்கை. தங்களின் பெற்றோர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறார்கள். தனக்கு தேவையானது அனைத்தையும் தனது பெற்றோர் தனக்கு தருவார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கே உரியது.

ஆக, நாம் கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடு இருப்பதும், கடவுளை சார்ந்திருத்தலும், கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைப்பதும் நம்மை விண்ணரசில் பெரியவராக காட்டும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. இந்த பண்புகளை நாமும் வாழ்ந்து காட்டுவோம்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்


--------------------------------------------------------

சிறியோர் குறித்துக் கவனமாயிருங்கள் !



இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று காவல் தூதர்களின் விழாவைக் கொண்டாடுகிறோம். நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதரைக் கொடையாகத், துணையாகத் தந்திருக்கிறார். அதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். நம் காவல் தூதரிடம் நாள்தோறும் நம்மை ஒப்படைப்போம்.

சிறு பிள்ளைகள், குழந்தைகள், சிறியோர் பற்றி இன்றைய வாசகத்தில் ஆண்டவர் நமது கவனத்தை ஈர்க்கிறார். அவர்களை இழிவாகக் கருதவேண்டாம் என எச்சரிக்கிறார். காரணம், அவர்களின் காவல் தூதர்கள் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் அவர்களுக்காகப் பரிந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எனவே, குழந்தைகள், சிறியோர் மட்டில்; நாம் கவனமாயிருப்போம். குழந்தைகளை, சிறியோரைப் பாலியல் தொந்தரவு செய்வோர் மிகப் பெரிய குற்றத்திற்கு உள்ளாவார்கள். இவர்கள் இறைவனின் இரக்கத்துக்காக இறைஞ்ச வேண்டும். குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தும் பெற்றோரும், ஆசிரியர்களும் இப்பழக்கம் இறைவனுக்கே எதிரானது என்பதை உணர்ந்து அதைக் கைவிட வேண்டும். குழந்தைகளை இழிவாகப் பேசுவது, திட்டுவது, ஏளனம் செய்வது அனைத்துமே இறைவனுக்கு எதிரான குற்றங்கள்தாம். இவைகளைப் பற்றி இன்று சற்று சிந்தித்து, விழிப்புணர்வு பெறுவோம்.

மன்றாடுவோம்: குழந்தைகளை அன்பு செய்யும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் நீர் தந்திருக்கிற காவல் தூதருக்காக நன்றி செலுத்துகிறோம். உமது தூதர்கள் குழந்தைகளைக் காக்கும் பொருட்டு எப்பொழுதும் விண்ணகத் தந்தையின் திருமுன் இருப்பதற்காக உம்மைப் புகழுகின்றோம். நீர் அன்பு செய்யும் குழந்தைகளை நாங்கள் எந்த வழியிலும் இழிவுபடுத்தாமல் எங்களைக் காத்துக்கொள்ளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------



'இயேசு, 'இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்;

கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன்

எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றார்'' (மத்தேயு 18:10)



அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- உலகம் அனைத்தையும் ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்த கடவுள் ஆறறறிவு கொண்ட மனிதரை மட்டுமன்றி, பருப்பொருளால் ஆகாமல் முற்றிலும் ஆவிகளாக இருக்கின்ற படைப்புகளையும் உருவாக்கினார் என்பது கத்தோலிக்க நம்பிக்கை. இந்த ஆவிகள் ''வான தூதர்கள்'' என அழைக்கப்படுகின்றனர். கடவுள் அளிக்கின்ற பணிகளை நிறைவேற்ற ''அனுப்பப்படுவோர்'' என்னும் பொருளில் இப்படைப்புகளைத் ''தூதர்கள்'' என்கிறோம். அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் ''காவல் தூதர் விழா'' கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதரையும் பாதுகாத்து வழிநடத்தும்படி கடவுள் ஒரு காவல் தூதரை அளிக்கிறார் என்பது கத்தோலிக்க மரபு. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் வான தூதர் பற்றியும் காவல் தூதர் பற்றியும் செய்திகள் உள்ளன. மேலும் பண்டைய கிரேக்க இலக்கியங்களிலும் மத்தியதரைக் கலாச்சாரங்களிலும் வான தூதர் பற்றிய குறிப்புகள் உண்டு.

-- கடவுள் நம்மை ஒவ்வொரு நாளும் காக்கிறார் என்னும் உண்மை காவல் தூதர் நம்பிக்கை வழி வெளிப்படுகிறது. கடவுளின் பார்வையில் ஒவ்வொரு மனிதரும் மதிப்பு மிக்கவர்களே என இயேசு கற்பிக்கிறார். எனவே நாம் ''இச்சிறியோருள் ஒருவரையும் இழிவாகக் கருதலாகாது'' (காண்க: மத் 18:10). இங்கே சிறியோர் என வரும் சொல் சிறு பிள்ளைகளை மட்டும் குறிக்காமல், கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் அனைவரையும் குறிக்கலாம். அதுபோலவே, சமுதாயத்தால் தாழ்ந்தவர்கள், மதிப்பு குறைந்தவர்கள் எனக் கருதப்படுகின்ற அனைவரையும் குறிக்கலாம். இப்பின்னணியில் நாம் எந்த ஒரு மனிதரையும் இழிவாகக் கருதல் ஆகாது என இயேசு கூறுவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளின் அன்புக்கும் பராமரிப்புக்கும் உட்படுவோர் எல்லா மனிதரும் என்பதால் நாமும் கடவுளின் பார்வையை நமதாக்கி, எல்லா மனிதரையும் மாண்புடையோராக ஏற்றுப் போற்றிட அழைக்கப்படுகிறோம். இவ்வாறு நாம் செயல்படும்போது உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடுகள் மறைய நாம் உழைப்போம். சிறு குழந்தைகள் பெரியோரைச் சார்ந்து வாழ்வதுபோல நாமும் கடவுளிடத்தில் முழு நம்பிக்கை கொள்வோம். மேலும், ''சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்'' (மத் 18:4) என இயேசு கூறியதை நாம் கருத்தில் கொண்டு, செருக்கு நீக்கி, உண்மையான மனத் தாழ்ச்சியுடையோராய்க் கடவுளை அணுகிச் செல்வோம். இந்த மன நிலை நம்மில் உருவாகும்போது நம் இறைநம்பிக்கையும் ஆழப்படும்.

மன்றாட்டு

இறைவா, நீரே எங்களை ஒவ்வொரு நாளும் காத்து வருகிறீர் என உணர்ந்து நன்றியோடு வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

''நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால்

விண்ணரசில் புகமாட்டீர்கள்'' (மத்தேயு 18: 3)



அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுளாட்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் நாம் சிறுபிள்ளைகளைப் போல் ஆகவேண்டும் என்று இயேசு ஒரு நிபந்தனை விதிக்கிறார். யார் இந்த ''சிறு பிள்ளைகள்'' ? இயேசுவின் காலத்தில் சிறு பிள்ளைகளுக்கு எந்த உரிமையும் இருக்கவில்லை. பெற்றோரின் உடைமை போலவே சிறுபிள்ளைகள் கருதப்பட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே சமுதாயத்தில் ''தாழ்ந்தவர்களாக'' எண்ணப்பட்டார்கள். அதே நேரத்தில் சிறுபிள்ளைகள் தம் பெற்றோரை நம்பியே வாழ வேண்டியிருந்தது. குழந்தைகள் வாழத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் யாவுமே அவர்களுடைய பெற்றோர் அல்லது பொறுப்பான பிறரிடமிருந்துதான் அவர்களுக்குக் கிடைத்தது. பிறரை நம்பி வாழ்வது குழந்தைகளின் இயல்பு. ஆக, சமுதாயத்தால் தாழ்ந்தவர்கள் எனக் கருதப்படலும், பிறரை நம்பி வாழ்தலும் குழந்தைகளின் நிலை என்பதை ஓர் உருவகமாகக் கொண்டு, இயேசு தம் சீடருக்கு இறையாட்சியில் புகுவதற்கான நிபந்தனையை எடுத்துரைக்கிறார்.

-- கடவுள் முன்னிலையில் நம்மைத் தாழ்த்திக்கொள்வது எப்படி? நம்மைப் படைத்துப் பாதுகாத்து வழிநடத்துபவர் கடவுளே என்பதையும், அவருடைய அருளால்தான் நாம் உயிர்வாழ்கிறோம் என்பதையும் உள்ளத்தில் உணர்ந்தால் நாம் கடவுளின் முன்னிலையில் நம்மைத் தாழ்த்திக்கொள்வோம். இவ்வாறு நம்முடைய உண்மை நிலையைக் கண்டுணரும்போது, கடவுளை நம்பியே நாம் வாழ்கின்றோம் என்னும் உண்மையும் நமக்குத் தெளிவாகும். இறையாட்சியில் பங்கேற்றிட வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் கடவுளுக்கு இடம் கொடுக்க வேண்டும். அவருடைய உடனிருப்பு நம் உள்ளத்தை நிரப்பும்போது அங்கே வெற்றிடம் இராது. நம் வாழ்க்கையும் மகிழ்ச்சியால் நிறையும். கடவுளின் ஆட்சி நம்மில் மலரும்.

மன்றாட்டு

இறைவா, தாழ்ச்சியோடு உம்மை அணுகிவர எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

.....................



என்னே நம் பாதுகாப்பு



அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

காவல் தூதர்களை இன்று நினைவுகூர்கிறோம். இவ்வானதூதர்கள, இறைவனைச் சார்ந்து வாழும் ஒவ்வொரு மனிதனையும் தாங்கி பாதுகாத்து வழிநடத்தும் இறைப்பிரசன்னம். இறைவனை நம்பி வாழும் சிறியோரை இழிவாக எவரும் கருதாவண்ணம் அனைவரையும் தம் திருவருளால் காத்து வருகிறார்.



ஒவ்வொ;ருவருக்கும் ஒரு தனி காவல்தூதர் இருப்பதற்கும் வாய்ப்புண்டு. நாம் ஒவ்வொரும் தனித்தனி உடல்,உணர்வு, சிந்தனை, செயல்பாடு, வாழ்க்கைமுறை, இன்பம் துன்பம், பாவம் புண்ணியம் செய்து வாழ்வதால், இறைபிரசன்னமும் அதற்கேற்ப அமைவதும் முறையே. எனவே ஒவ்வொருவருக்கும் தனித்தனி வானதூதரும் இருப்பதும் இயல்பே.



நாம் நற்செயல்கள் செய்யும்போது இறைவன் மகிழ்கிறார். இறைபிரசன்னமாம் வானதூதர்களும் மகிழ்கிறார்கள்.இறைவனுக்கு ஏற்காத செயல்களைச் செய்யும்போது இறைவன் துன்புறுகிறார். இறை பிரசன்னமாம் வானதூதரும் வருந்துகிறார்.



என்னே நம் இறைவன் நம்மை பாதுகாக்கும் விதம். அந்த இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.

--அருட்திரு ஜோசப் லீயோன்
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!