Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       26 செப்டம்பர் 2019  
                                    பொதுக்காலம் 25ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.

இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23

படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மக்களினங்களுள் பல நகர்களில் குடியிருப்போரும் கூட வருவார்கள். ஒரு நகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, "நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்" என்று சொல்வார்கள்.

மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப் பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, `கடவுள் உங்களோடு இருக்கின்றார்' என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்."


=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 87: 1-3. 4-5. 6-7 (பல்லவி: செக் 8: 23) Mp3
=================================================================================
பல்லவி: கடவுள் நம்மோடு இருக்கின்றார்.

1 நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது. 2 யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார். 3 கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. பல்லவி

4 எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, `இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்' என்று கூறப்படும். 5 `இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!' என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். பல்லவி

6 மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, `இவர் இங்கேதான் பிறந்தார்' என ஆண்டவர் எழுதுவார். 7 ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து `எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது' என்பர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மாற் 10: 45


அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56

இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ``ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள்.

அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறு ஓர் ஊருக்குச் சென்றார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிறிய வழி இறையாட்சியின் நுழைவாயில்

சிறிய விதை மிகப் பெரிய பயன்

சிறிய குழந்தையைப் போல மாறுங்கள், இறையசிற்கான அழைப்பு.

சிறிய செயல்கள் நம்மை அடையாளம் காட்டுமா?

இன்றைக்கு அடையாளத்திற்காக பெரிது பெரிதாக செய்து விட்டு, விண்ணகத்திலே தங்களது பெயர் பொறிக்க வைக்க கூடிய சிறிய செயல்களை செய்ய மறுக்கின்றோம்.

இறதி தீர்வை நாளில் கேட்கப்படும் கேள்விகள் என்ன? சிறிய செயல்களை செய்தாயா இத்தகைய சிறியவர்களுக்கு செய்த போது எனக்கே செய்தாய். மத் 25


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
செக்கரியா 8: 20-23


எருசலேமை நோக்கி வரும் வேற்றினத்தார்


நிகழ்வு


மேரி, ரூத் என்ற இரண்டு கிறிஸ்தவப் பெண்மணிகள் பேசிக்கொண்டார்கள். இதில் முன்னவர் கத்தோலிக்க சபையைச் சார்ந்தவர்; பின்னவர் சீர்திருத்த சபையைச் சார்ந்தவர் (Protestant). இருவரும் பால்ய காலத்துத் தோழிகள் என்பதால் ஒன்றைக் குறித்து மிகவும் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.


" நேற்று இரவு எங்களுடைய கோயிலில் என்றைக்குமே இல்லாத அளவுக்குப் பெரிய கூட்டம்" என்றாள் மேரி. உடனே ரூத் அவளிடம், " நேற்று ஒன்றும் புத்தாண்டோ, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவோ, உயிர்ப்புப் பெருவிழாவோ அல்லது ஊர்த்திருவிழாகூட இல்லையே! அப்படியிருந்தும் உங்களுடைய கோயிலில் அவ்வளவு கூட்டமா...? ஒருவேளை உங்களுடைய கோயிலுக்குப் புதிய பங்குத்தந்தை வந்திருக்கின்றாரோ...?" என்றாள்


" இல்லை" என்று மேரி சொல்ல, " அப்படியானால், நேற்று உங்களுடைய கோயிலில் வேறு ஏதாவது விழா நடைபெற்றதா...?" என்று ரூத் கேட்க, அதற்கும் " இல்லை" என்றார் மேரி. இதனால் மிகவும் கடுப்பான ரூத், " நேற்று உங்களுடைய கோயிலில் என்ன நடந்தது என்று சொல்லிவிடு, இல்லையென்றால் உன்னைக் கொலைசெய்துவிடுவேன்" என்று செல்லக் கோபம் கொண்டான். " வேறொன்றுமில்லை. நேற்று இரவு எங்களுடைய கோயிலில் கோபுரத்தில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. அதனை அணைக்கத்தான் எங்களுடைய சபையைச் சிறுவர் முதல் பெரியவர் எல்லாரும் வந்துவிட்டார்கள். அதனால்தான் கோயிலில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு கூட்டம் வந்தது என்று சொன்னேன்" என்றார்.


இதைக் கேட்டுவிட்டு ரூத் மேரியிடம், " உங்களுடைய கோயிலில் மட்டுமல்ல, எங்களுடைய கோயிலில் இதுபோன்ற வித்தியாசமான நிகழ்வுகள், விழாக்கள் நடைபெற்றால்தான் மக்கள் கோயிலுக்கு வருகின்றார்கள்.. இல்லையென்றால் பலரும் கோயிலுக்கு வருவதே இல்லை" என்று வருத்தத்தோடு சொன்னாள்.


கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு பலரும் கோயிலுக்கு அல்லது ஆண்டவருடைய இல்லத்திற்கு போகலாம் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாக இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் இன்றைய முதல் வாசகத்தில், வேற்றினத்து மக்கள் ' நாம் அனைவரும் ஆண்டவரது அருளை மன்றாடவும் வழிபடவும் எருசலேமிற்கு செல்வோம் வாருங்கள்' என்று சொல்வதாக வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.


வேற்றினத்தாரை ஆண்டவரிடம் கொண்டுவரத் தவறிய யூதர்கள்


இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள், " மக்களினங்களும் பல நகர்களில் குடியிருப்போரும் கூட (என்னிடம்) வருவார்கள்" என்று வாக்குறுதி தருகின்றார். ஆண்டவராகிய கடவுள் இவ்வாறு கூறக் காரணமென்ன...? அதற்கு முன்னம் இஸ்ரயேல் மக்கட்கு அவர் கொடுத்த கட்டளை என்ன...? என்பவற்றைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.


ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமிடம், "....உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" (தொநூ 12: 3) என்பார். தொடர்ந்து மோசேயிடம் " .... என் பெயரை நாடெங்கும் அறிக்கையிடவுமே நான் உன்னை நிலைக்கச் செய்தேன்" (விப 9: 16) என்பார். இதன்மூலம் அவர்கள் வேற்றினத்து மக்களை ஆண்டவரிடம் கொண்டுவரப் பணிக்கப்பட்டார்கள். ஆண்டவர்க்கென்று திருக்கோயிலைக் கட்டிய சாலமோன் அரசர்கூட, கோயில் அர்ச்சிப்பின்போது, " அந்நியர் இந்தக் கோயிலை நோக்கி வேண்டுதல் செய்தால், அந்த அந்நியர் கேட்பதை எல்லாம் அருள்வீராக" (1 அர 8: 42-43) என்று சொல்லி கடவுள் எல்லார்க்கும் பொதுவானவர் என்பதை வெளிப்படுத்துவார். இப்படி எல்லார்க்கும் பொதுவான கடவுளை நோக்கி, இஸ்ரயேல் மக்கள் வேற்று இனத்து மக்களை இழுத்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் வேற்று தெய்வத்தை வழிபடத் தொடங்கி, வேற்றினத்து மக்களை ஆண்டவரிடம் கொண்டு வரும் பணியினை செய்யத் தவறினார்கள்.


ஆண்டவர் கொடுத்த வாக்குறுதி இயேசுவின் வழியாக அவருடைய சீடர்கள் வழியாக நிறைவேறல்


" மக்களினங்கள் பலவும் வேற்றினத்தாரும் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு - என் இல்லத்திற்கு வருவார்கள்" என்று ஆண்டவர் வாக்குறுதி தந்தார். அந்த வாக்குறுதி இயேசுவின் வழியாகவும் அவருடைய சீடர்கள் வழியாகவும் நிறைவேறியது. அது எப்படியென்றால், இயேசு ஆண்டவருடைய அன்பைப் போதித்து சமாரியப் பெண்மணி மற்றும் கானானியப் பெண்மணி உட்பட எல்லா மக்களையும் ஆண்டவரிடம் கொண்டு வந்தார். இயேசு விட்டுச் சென்ற இப்பணியை அவருடைய சீடர்கள் தொடர்ந்து செய்து, மக்களை ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள்.


இன்று நாம் இயேசுவின் சீடர்களாய் இருக்கின்றோம் என்றால், நாம் எல்லா மக்களையும் இறைவனிடம் கொண்டுவந்து சேர்ந்து, அவர்களை இறைவனிடம் அன்புக்குரிய மக்களாக மாற்றுவது நமது கடமையாகும். இதை நம்முடைய மனதில் இருத்துவது நல்லது.


சிந்தனை


' மெசியாவைக் கண்டோம்' என்று அந்திரேயா, சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார் (யோவா 1: 41-42) நாமும் இயேசுவைக் குறித்து அவரை அறியாதவர்களிடம் அறிவித்து, அவர்களை இயேசுவிடம் அழைத்து வந்து, அவருடைய உண்மையான சீடர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 9: 51-56

இது உமது விருப்பமா?


நிகழ்வு


தந்தை ஒருவர் இருந்தார். அவர்க்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவர் அவனை தன்னுடைய உயிரினும் மேலாக அன்பு செய்தார். ஒருநாள் அவர்கள் இருவர்க்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட, மகன் தந்தையிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பிப்போனான். தந்தை தன் மகனோடு ஒப்புரவாகுவதற்கு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார். எதற்கும் அவன் மசியாமல் மிகவும் வைராக்கியத்தோடு இருந்தான். இதற்கு நடுவில் தந்தைக்கு வயது ஏறிக்கொண்டே போனது. அவர் தன்னுடைய சாவு நெருங்கி வருவதை உணர்ந்தார். கடைசியாக ஒருமுறை தன்னுடைய மகனோடு ஒப்புரவாவதற்கு முயற்சி செய்துபார்த்தார். அதற்கும் மகன் இணங்கி வராமல், மிகவும் வைராக்கியத்தோடு இருந்ததால், தந்தை மிகுந்த வேதனையோடு இறந்துபோனார்.


இதற்குப் பின்னால் மகனுக்குத் அருட்சாதனம் நடைபெற்றது; ஓர் ஆண்குழந்தைகூட பிறந்தது. அவன் தன்னுடைய மகனை அவ்வளவு அன்பு செய்தான். ஆண்டுகள் வேகமாக உருண்டோடத் தொடங்கின. இப்பொழுது அவனுடைய மகன் வேகமாக வளர்ந்து பெரியவன் ஆனான். ஒருநாள் அவர்கள் இருவர்க்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட, மகன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டே வெளியேறினான். அந்த மனிதன் தன்னுடைய மகனுடன் ஒப்புரவாவதற்கு எவ்வளவு முயற்சிகளைச் செய்து பார்த்தான். எல்லாமே விழலுக்கு இறைத்த நீராய்ப் போனது. அப்பொழுதுதான் அவன் ' தன்னுடைய தந்தை தன்னை விட்டுப் பிரிந்து எவ்வளவு வேதனையடைந்திருப்பார்' என்பதை நினைத்துப் பார்த்தான். இதனால் அவன் முழந்தாள் படியிட்டு இறைவனிடம் மிகவும் உருக்கமாக மன்றாடத் தொடங்கினான்.


" இறைவா! என்னுடைய தந்தை என்னைவிட்டுப் பிரிந்து எவ்வளவு வேதனையடைந்திருப்பார் என்பதை இப்பொழுது நான் நினைத்துப் பார்க்கிறேன்... அத்தகைய தவறுக்காக நான் இப்பொழுது மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கின்றேன்... என்னுடைய மகன் என்னைவிட்டுப் பிரிந்திருப்பது எனக்குக் மிகுந்த மனவேதனையைத் தருகின்றது அவனை எப்படியாவது என்னோடு சேர்த்து வைத்தால் நாம் மிகவும் மகிழ்ச்சியடைவேன்." இப்படியொரு மன்றாட்டை அவன் இறைவனை நோக்கி எடுத்துரைத்துவிட்டு, படுக்கையில் அப்படியே படுத்துத் தூங்கிவிட்டான்.


மறுநாள் அவன் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தபொழுது, அவனுக்கு முன்னம் அவனுடைய மண் நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும், இவனால் நம்பமுடியவில்லை. உடனே அவன் தன்னுடைய மகனைக் கட்டியணைத்துக் கொண்டு முத்தமிட்டான். அப்பொழுது அவனுடைய மகன் அவனிடம் பேசத் தொடங்கினான். " அப்பா! நேற்றுவரை உங்கள்மீது கடுங்கோபத்தில் இருந்தேன்; உங்களிடம் பேசவே கூடாது என்றுதான் இருந்தேன். நேற்று இரவு நான் தூங்கிக்கொண்டிருக்கையில் கனவில் ஒரு பெரியவர் வந்து, ' தம்பி! நீ உன்னுடைய வீட்டிற்குச் சென்று, உன்னுடைய தந்தையை மனதார மன்னித்து, அவரோடு சேர்ந்து வாழ்' என்று சொல்லிவிட்டு மறந்துபோனார். அதனால்தான் நான் இங்கு ஓடிவந்தேன்" என்றார். அதற்கு அவனுடைய தந்தை, " நேற்றைய நாளில்தான் நானும் என்னுடைய தந்தையோடு பேசாமல் இருந்து, அவரை எவ்வளவு மனம்நோகச் செய்திருப்பேன் என்று நினைத்துப் பார்த்தேன்" என்றான்.


இதற்குப் பிறகு அவனுடைய மகன் அவனிடம், " அப்பா! இப்பொழுது நான் என்னுடைய தாத்தாவின் நிழல்படத்தைப் பார்க்கவேண்டும்" என்றான். உடனே அவனுடைய தந்தை, அலமாரியில் பத்திரமாக வைத்திருந்த தன்னுடைய தந்தையின் பழைய நிழல்படங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து மகனிடம் காட்டினான். அந்த நிழல்படங்களை எல்லாம் பார்த்த மகன், " அப்பா! நேற்று இரவு என்னுடைய கனவில் வந்தவர் இவர்தான். இவர்தான் என்னை உங்களை மன்னிக்கவும் உங்களோடு சேர்த்து வாழவும் சொன்னார்" என்றார். இதைக் கேட்டு அவனுடைய தந்தை கண்ணீர்விட்டு அழுதான். பின்னர் அவன் கடவுள்தான் தன் தந்தையை அனுப்பி மகனோடு பேச வைத்திருக்கின்றார்' என்று கடவுளுக்கு நன்றி செலுத்தத் தொடங்கினான்.


நம்மிடம் இருக்கும் பிணக்குகளையும் பிளவுகளையும் களைந்துவிட்டு, ஒன்றுபட்டு வாழவேண்டும் என்ற சிந்தனையை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, தங்களிடம் உள்ள பிணக்குகளையும் பிளவுகளையும் களையாமல், பகைமையுணர்வோடும் வெறுப்புணர்வோடும் இருக்கின்ற சீடர்களைக் குறித்து இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். அவர்களுக்கும் நமக்கும் இயேசு என்ன செய்தியைச் சொல்கின்றார் என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்க்கின்றோம்.


பழைய பகையுணர்வோடு இருந்தவர்களை இயேசு கடிந்துகொள்தல்


நற்செய்தியில், யோவானும் யாக்கோபும் தங்களை ஊருக்கு உள்ளே நுழையவிடாத சமாரியர்களை முன்னிட்டு இயேசுவிடம், " ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? என்று கேட்கையில், இயேசு அவர்களைக் கடிந்துகொள்வதைக் குறித்து வாசிக்கின்றோம்.


எருசலேமிற்கு சமாரியரின் ஊரின் வழியாகச் சென்றால், சீக்கிரம் சென்றுவிடலாம். அதனால்தான் யோவானும் யாக்கோபும் அந்த ஊர் வழியாகச் செல்ல முற்பட்டார்கள். ஆனால், அவ்வூரில் இருந்தவர்கள் அவர்களை தடுக்கவே, இருவரும் எலியா இறைவாக்கினரைப் போன்று (2 அர 1) வானத்திலிருந்து தீ வரச் செய்து, இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று இயேசுவிடம் கேட்கின்றார்கள். யூதர்கட்கும் சமாரியர்கட்கும் பகை இருந்துகொண்டே இருந்தது (2 அர 17: 24-21, யோவா 4: 9,20) இந்தப் பகையை சமாரியர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி, சீடர்கள் பகைமையை வளர்த்தெடுக்க நினைத்தபோது, இயேசு அவர்களைக் கடிந்துகொண்டு வேறொரு வழியாக இயேசு எருசலேமிற்குச் செல்கின்றார்.


இயேசுவுக்கு பகைமையை அல்ல, அன்பையும் ஒற்றுமையையும் வளர்த்தெடுக்கவேண்டும் என்பதுதான் ஆசை. அதற்காகத்தான் அவர் தன் சீடர்களைக் கடிந்துகொண்டு வேறொரு வழியாக எருசலேம் செல்கின்றார். நாம் சீடர்களைப் போன்று பகைமையை வளர்ப்பவர்களாக இருக்கின்றோமா? அல்லது இயேசுவைப் போன்று அன்பை வளர்ப்பவர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை
' எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக' (யோவா 17: 21) என்று இயேசு தந்தைக் கடவுளைப் பார்த்து மன்றாடுவார். அவருடைய கனவு நிறைவேற நாம் நம்மிடம் இருக்கும் பிரிவினை மற்றும் பிணக்குகளை களைந்துவிட்டு ஒற்றுமையுடன் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!