|
28 நவெம்பர் 2017 |
|
பொதுக்காலம் 34ம் ஞாயிறு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்;
அது என்றுமே அழியாது.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம்
2: 31-45
அந்நாள்களில் தானியேல் அரசனுக்குச் சொன்ன மறுமொழி: "அரசரே!
நீர் பெரிய சிலை ஒன்றைக் கண்டீர். உம் கண் எதிரே நின்ற அம்மாபெரும்
சிலை பளபளக்கும் ஒளிமிக்கதாயும் அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும்
இருந்தது. அச்சிலையின் தலை பசும்பொன்னால் ஆனது; அதன் மார்பும்
புயங்களும் வெள்ளியால் ஆனவை; வயிறும் தொடைகளும் வெண்கலத்தால்
ஆனவை.
அதன் கால்கள் இரும்பினால் ஆனவை; அதன் காலடிகள் ஒரு பகுதி இரும்பினாலும்
மறு பகுதி களிமண்ணாலும் ஆனவை. நீர் அச்சிலையைப் பார்த்துக்
கொண்டிருந்தபொழுது, மனிதக் கை படாத கல் ஒன்று பெயர்ந்து உருண்டு
வந்தது. அந்தக் கல் இரும்பினாலும் களிமண்ணாலுமான அதன் காலடிகளில்
வந்து மோதி அவற்றை நொறுக்கியது.
அப்பொழுது இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவை
யாவும் நொறுங்கி, கோடை காலத்தில் கதிரடிக்கும் களத்துப் பதரைப்
போல் ஆயின. அவற்றின் அடையாளம் இராதபடி காற்று அவற்றை அடித்துக்
கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை
ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று.
அரசரே! இதுவே நீர் கண்ட கனவு; அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது
விளக்கிக் கூறுவோம். அரசரே! நீர் அரசர்க்கரசராய் விளங்குகின்றீர்.
விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், வலிமை, மாட்சி ஆகியவற்றைத்
தந்துள்ளார். உலகெங்கும் உள்ள மனிதர்களையும், வயல்வெளி விலங்குகளையும்,
வானத்துப் பறவைகளையும் உம் பொறுப்பில் அவர் ஒப்படைத்து, அவற்றையெல்லாம்
நீர் ஒருவரே ஆளும்படி செய்துள்ளார்.
எனவே, பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கின்றது. உமக்குப்பின்
உமது அரசை விட ஆற்றல் குறைந்த வேறோர் அரசு தோன்றும்; அடுத்து
வெண்கலம் போன்ற மூன்றாம் அரசு எழும்பும்; அது உலகெல்லாம் ஆளும்.
பின்னர், அனைத்தையும் நொறுக்கும் இரும்பைப் போல் வலிமை வாய்ந்த
நான்காம் அரசு தோன்றும்; அந்த அரசும் இரும்பு நொறுக்குவது போல்
அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கும். மேலும், நீர் அச்சிலையின்
அடிகளையும் கால் விரல்களையும், ஒரு பகுதி குயவனின் களிமண்ணாகவும்,
மறு பகுதி இரும்பாகவும் கண்டதற்கிணங்க, அந்த அரசு பிளவுபட்ட
அரசாய் இருக்கும்.
ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க,
இரும்பின் உறுதியும் ஓரளவு காணப்படும். அடிகளின் விரல்கள் ஒரு
பகுதி இரும்பும் மறு பகுதி களிமண்ணுமாய் இருந்தது போல் அந்த
அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும்.
இரும்பு களிமண்ணோடு கலந்திருப்பதாக நீர் கண்டதற்கிணங்க, அவர்களும்
தங்களுக்குள் திருமணத்தின் மூலம் உறவு கொள்வார்கள்;
ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காதது போல், அவர்கள் ஒருவரோடு ஒருவர்
ஒன்றித்திருக்க மாட்டார்கள். அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக்
கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; அதன் ஆட்சியுரிமை
வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம்
நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்; அதுவோ என்றென்றும்
நிலைத்திருக்கும். மனிதக் கை படாது பெயர்ந்து மலையிலிருந்து உருண்டு
வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும்
பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே
குறிக்கிறது. இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள்
அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது; அதன் உட்பொருள்
நிறைவேறுவதும் உறுதி.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தானி(இ) 1: 34. 35-36. 37-38 (பல்லவி: 34b)
=================================================================================
பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
34 ஆண்டவரின் அனைத்துச் செயல்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை
வாழ்த்துங்கள். பல்லவி
35 வானங்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். 36 ஆண்டவரின் தூதர்களே,
ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி
37 வானத்திற்கு மேல் உள்ள நீர்த்திரளே, ஆண்டவரை வாழ்த்து; 38
ஆண்டவரின் ஆற்றல்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திவெ 2: 10
அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின்
வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
கோவிலின் கற்கள் ஒன்றின்மேல்
ஒன்று இராதபடி இடிக்கப்படும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11
அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு
கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது
என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.
இயேசு, "இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம்
வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம்
இடிக்கப்படும்'' என்றார்.
அவர்கள் இயேசுவிடம், "போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்?
இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில்
பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, `நானே அவர்' என்றும்,
`காலம் நெருங்கி வந்துவிட்டது' என்றும் கூறுவார்கள்; அவர்கள்
பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்
பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில்
நிகழத்தான் வேண்டும்.
ஆனால் உடனே முடிவு வராது'' என்றார். மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து
கூறியது: "நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.
பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்;
அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்".
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
நீங்கள் ஏமாறாதவாறு
பார்த்துக்கொள்ளுங்கள்
ஒரு பெண் ஹச்.ஆர். எக்சக்யூடிவ் இறந்து மேலுலகத்திற்கு எடுத்துச்
செல்லப்பட்டார். அங்கிருந்த வானதூதர் அவரிடம், "வாழ்த்துகள்.
நீங்கள் சொர்க்கம் அல்லது நரகம் இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு
செய்யலாம், ஆனால் அதற்கு முன்னதாக ஒரு நாள் சொர்கத்திலேயும்,
ஒருநாள் நரகத்திலேயும் தங்க வேண்டும். அதன்பின்பு சொர்க்கம்
வேண்டுமா நரகம் வேண்டுமா என்று நீங்கள் முடிவு செய்துக்கொள்ளலாம்"
என்றார்.
அதற்கு அந்தப் பெண், "நான் சொர்கத்திற்கே போகிறேன். எதற்காக
நரகத்திற்குச் சென்று அங்கு நேரத்தை விரையம் செய்யவேண்டும்? என்றார்.
"இதுதான் இங்கு ஒழுங்குமுறை. இதை நீங்கள் கட்டயாம் கடைபிடித்தே
ஆகவேண்டும்" என்றார் வானதூதர். வானதூதர் சொல்லிவிட்டார் என்பதற்காகவும்,
அதுதான் அங்கு ஒழுங்குமுறை என்பதாலும் நரகத்தில் ஒருநாள் தங்குவதற்கு
அவர் முடிவுசெய்துகொண்டு, அங்கு கிளம்பிப் போனார்.
நரகம் நரகம் மாதிரியே இல்லை, அழகான பூங்கா, அவளோடு பேசுவதற்கு
அவளுடைய தோழிகள் என்று நிறையப் பேர் இறந்தார்கள். அவர்கள் அப்பெண்ணிடம்
நாள் முழுக்க பேசிக்கொண்டே இருந்தார்கள். சிறிது நேரத்திற்குப்
பிறகு தலைமைச் சாத்தான் அங்கு வந்தான். அவரும் அப்பெண்ணிடம்
மிக அருமையாகப் பேசினார். இதனால் அவருக்கு நரகத்தை விட்டு போக
மனசே இல்லை.
நரகத்தில் ஒருநாள் இருந்த அந்தப் பெண் அடுத்த நாள் சொர்கத்திற்குச்
சென்றார். ஆனால் அங்கு யாரும் அவரிடம் பேசவே இல்லை. பூ பறிக்கிறதும்,
சாமி கும்பிடுவதுமாக எல்லாரும் இருந்தும் அவருக்குப் பயங்கரப்
போர் அடித்தது. கடைசியாக வானதூதர் அவரிடம், "நீங்கள் இப்போது
இந்த இரண்டு இடங்களில் எந்த இடத்திற்குப் போக முடிவு
செய்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அவர், "நான் நரகத்திற்குப்
போகின்றேன். ஏனென்றால், சொர்க்கத்தைவிட அதுதான் நன்றாக இருக்கின்றது"
என்றார்.
வானதூதர் மீண்டுமாக அவரிடம், "நன்றாக யோசித்துக்கொள்ளுங்கள்,
அங்கு போனால் திரும்ப வரமுடியாது" என்றார். அவரோ நரகத்திற்குப்
போக மிகவும் பிடிவாதமாய் இருந்தார். வானதூதரும் அவர் சொன்னதற்குச்
சரியென்று சொல்லிவிட்டு, அவரை நரகத்திற்கு உள்ளே விட்டுவிடத்
கதவைச் சாத்தினார். இப்போது அவர் நரகத்தைப் பார்த்தபோது முன்பு
இருந்த அழகான பூங்கா முழுவதுமாக மாறி பாலைவனமாக இருந்தது, அவருடைய
தோழிகளோ மிகவும் கடினமாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். இன்னும்
பலர் நெருப்பில் வெந்துகொண்டிருந்தார்கள்.
அவரோ ஒன்றும் புரியாமல், "என்ன இது, நேற்று பார்த்ததைவிட இன்றைக்கு
எல்லாமும் மாறிப்போய் இருக்கின்றது" என்றார். அதற்கு அங்கிருந்த
சாத்தான் சொன்னது, "நேற்றைய நாளில் உங்களுக்கு நடந்தது நேர்முகத்
தேர்வு. ஆனால் இன்றைக்கு நீங்கள் ஒரு முழுநேரப் பணியாளர்.
நேற்று நீங்கள் பார்த்தது நரகத்தின் முன்பக்கத் தோற்றம். அது
பார்ப்பதற்கு மிக அழகாகத்தான் இருக்கும். இப்போது நீ
பார்த்துக்கொண்டிருப்பதோ நரகத்தின் பின்பக்கத் தோற்றம், உண்மையான
தோற்றமும்கூட. நீங்கள் ஒரு ஹச்.ஆர். எக்சக்யூடிவ் பெண். உங்களுக்கே
இது புரியலையா?" என்றது.
எதிலும், எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் போலிகள்
நரகத்திலும் நுழைந்து மிகவும் வேடிக்கையானதாகும்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நீங்கள் ஏமாறாவாறு
பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு
வந்து, நானே அவர் என்றும், காலம் நெருங்கி வந்துவிட்டது என்றும்
கூறுவார்கள். அவர்கள் பின்னே போகாதீர்கள்" என்கிறார். இயேசு இவ்வாறு
கூறுவதற்குப் பின்னால் என்ன நடந்தது? இயேசு கூறும் இத்தகைய அழிவிலிருந்து
நம்மை எப்படி காத்துக்கொள்வது என்று சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய
கடமையாகும்.
ஒருசிலர் எருசலேம் திருக்கோவிலைப் பற்றியும் அதன் அழகைப் பற்றியும்
வியந்து பேசிக்கொண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், "ஒரு காலம்
வரும். அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம்
இடிக்கப்படும்" என்கிறார். உடனே அவர்கள் இயேசுவிடம், "போதகரே!
நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான
அறிகுறி என்ன?" என்று கேட்கின்றார்கள். அப்போதுதான் இயேசு முன்னர்
சொன்னத்தைச் சொல்கின்றார்.
யூதர்கள் காலத்தை நிகழ்காலம், எதிர் வரும் காலம் என்று இரண்டாகப்
பிரித்து, நிகழ்காலத்தை துன்பமயமானது என்றும், எதிர்வரும் காலத்தை
பொற்காலம் என்று அழைத்து வந்தனர். இந்த இரண்டு காலங்களுக்கும்
இடையில் ஆண்டவரின் நாள் என்ற ஒன்று உண்டு, அந்நாளில் தீமைகள்
அழிக்கப்பட்டு, நன்மைகள் நிலைநாட்டப்படும் என்று நம்பி வந்தார்கள்
(எசா 13:9). பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, நானே அவர்
என்று கூறுவார்கள் என்று இயேசு சொல்வது கூட ஆண்டவரின் நாள் வருவதற்கான
ஆயத்தம் என்றே நாம் புரிந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட போலிகள்
அழிப்படுவார்கள் என்பது உறுதி.
எனவே, நாம் போலிகளை இனங்கண்டு, அவற்றிலிருந்து விலகி நிற்க கற்றுக்கொள்வோம்.
ஆண்டவரின் நாளுக்காக நம்மையே தயார் படுத்திக் கொள்வோம், இறைவனுக்கு
உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
|
|