Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      25  நவெம்பர் 2017  
                                                   பொதுக்காலம் 33ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்; துயரமிகுதியால் அழிந்து கொண்டிருக்கிறேன்.

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 6: 1-13

அந்நாள்களில் அந்தியோக்கு மன்னன் மேற்கு மாநிலங்கள் வழியாகச் சென்றபோது, பாரசீக நாட்டு எலிமாய் நகர் பொன், வெள்ளி ஆகியவற்றுக்குப் புகழ் பெற்றது என்று கேள்விப்பட்டான். அதன் கோவிலில் மிகுந்த செல்வம் இருந்தது என்றும் கிரேக்க நாட்டை முதன்முதல் ஆண்ட மாசிடோனிய மன்னரான பிலிப்பின் மகன் அலெக்சாண்டர் அங்கே விட்டுச் சென்றிருந்த பொற்கேடயங்களும் மார்புக் கவசங்களும் படைக்கலன்களும் அங்கு இருந்தன என்றும் அறிய வந்தான்.

எனவே அந்தியோக்கு புறப்பட்டு நகரைக் கைப்பற்றிக் கொள்ளையடிக்க முயன்றான்; ஆனால், முடியவில்லை; ஏனெனில் அந்த நகர மக்கள் அவனது திட்டத்தை அறிந்திருந்தார்கள். அவர்கள் அவனை எதிர்த்துப் போரிட்டார்கள். ஆகவே அவன் பின்வாங்கி, பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து பாபிலோனுக்குத் தப்பிச் சென்றான்.

யூதேயா நாட்டை எதிர்த்துச் சென்றிருந்த அவனுடைய படைகள் முறியடிக்கப்பட்ட செய்தியை அவன் பாரசீகத்தில் இருந்தபோது தூதர் ஒருவர் அவனுக்கு அறிவித்தார்; "லீசியா வலிமை வாய்ந்த படையோடு முதலில் சென்று யூதர்கள் முன் புறமுதுகு காட்டி ஓடிவிட்டான்; முறியடிக்கப்பட்ட படைகளிடமிருந்து யூதர்கள் கொள்ளையடித்த படைக்கலன்கள், மிகுதியான பொருள்கள் ஆகியவற்றால் அவர்கள் வலிமைமிக்கவர்கள் ஆனார்கள்; எருசலேமில் இருந்த பலிபீடத்தின்மேல் அந்தியோக்கு செய்து வைத்திருந்த நடுங்க வைக்கும் தீட்டை அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்; திருஉறைவிடத்தைச் சுற்றிலும் முன்புபோல் உயர்ந்த மதில்கள் எழுப்பியுள்ளார்கள்; அவனுடைய நகராகிய பெத்சூரைச் சுற்றிலும் அவ்வாறே செய்திருக்கிறார்கள்" என்றும் எடுத்துரைத்தார்.

இச்செய்தியைக் கேட்ட மன்னன் அதிர்ச்சியடைந்து மிகவும் நடுங்கினான்; தான் திட்டமிட்ட வண்ணம் நடவாததால் துயரம் தாங்காது நோயுற்றுப் படுத்த படுக்கையானான். கடுந்துயரம் அவனை ஆட்கொண்டதால் அங்குப் பல நாள் கிடந்தான்; தான் விரைவில் சாகவிருந்ததை உணர்ந்தான்.

ஆகவே அவன் தன் நண்பர் எல்லாரையும் அழைத்து, "என் கண்களினின்று தூக்கம் அகன்றுவிட்டது; கவலையினால் என் உள்ளம் உடைந்து விட்டது. `எவ்வளவு துயரத்திற்கு ஆளானேன்! இப்போது எத்துணைப் பெரும் துயரக் கடலில் அமிழ்ந்துள்ளேன்! நான் ஆட்சியில் இருந்தபோது அன்பு செலுத்தி, அன்பு பெற்றேனே' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

ஆனால் எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்; அங்கு இருந்த பொன், வெள்ளிக் கலன்கள் அனைத்தையும் கவர்ந்து சென்றேன்; யூதேயாவில் குடியிருந்தவர்களைக் காரணமின்றி அழித்தொழிக்கும்படி கட்டளையிட்டேன். இதனால்தான் இந்தக் கேடுகள் எனக்கு வந்துற்றன என நான் அறிவேன். இப்போது அயல்நாட்டில் துயரமிகுதியால் அழிந்து கொண்டிருக்கிறேன்" என்று கூறினான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  திபா 9: 1-2. 3, 5. 15,18 (பல்லவி: 14b)

பல்லவி: ஆண்டவரே, நீர் அளிக்கும் விடுதலைகுறித்து அகமகிழ்வேன்.

1 ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். 2 உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன். பல்லவி

3 என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; உமது முன்னிலையில் இடறிவிழுந்து அழிவார்கள். 5 வேற்றினத்தாரைக் கண்டித்தீர்; பொல்லாரை அழித்தீர்; அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர். பல்லவி

15 வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்; அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன. 18 மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-40

அக்காலத்தில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, "போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதிவைத்துள்ளார்.

இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?" என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், "இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.

இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, `ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" என்றார்.

மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, "போதகரே, நன்றாகச் சொன்னீர்" என்றனர். அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள்

ஒருசமயம் திருத்தந்தை ஒருவரும், வழக்குரைஞர் ஒருவரும் இறந்தபின்பு விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்.

அங்கே அவர்கள் இருவரையும் விசாரித்த தூய பேதுரு, திருத்தந்தை அவர்களுக்கு போதுமான வசதிகள்கூட இல்லாத ஓர் அறையையும், வழக்குரைஞருக்கு அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு மாட மாளிகையும் கொடுத்து, அதில் அவர்களைத் தங்கச் சொன்னார். இதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான வழக்குரைஞர் பேதுருவைப் பார்த்து, "இது என்ன கொடுமை?. திருத்தந்தை அவர்கள் என்னை விட உயர்ந்தவர், நல்லவர். நானோ சாதாரண ஒரு மனிதர். அப்படியிருக்கும்போது எனக்கு எல்லா வசதிகளுடன் கூடிய மாட மாளிகையும், திருத்தந்தை அவர்களுக்கு போதுமான வசதிகள் கூட இல்லாத ஓர் அறையும் கொடுப்பது நியாயமா?" என்று கேட்டார்.

அதற்குத் தூய பேதுரு மிகவும் பொறுமையாகப பதில் சொன்னார். "இது வரைக்கும் ஏராளமான திருத்தந்தையர்கள் விண்ணகத்திற்குள் நுழைந்திருக்கின்றார்கள். ஆனால் ஒரு வழக்குரைஞர் விண்ணகத்திற்குள் நுழைவது இதுவே முதல்முறை. அதனால்தான் உங்களுக்கு மாடமாளிகையும், திருத்தந்தை அவர்களுக்கு சிறிய அறையும் கொடுத்தேன்".

இதைக் கேட்ட வழக்குரைஞருக்கு மயக்கம் வராத குறைதான்.

விண்ணகம்/ மறுவுலக வாழ்வு என்றால் என்னவென்றே தெரியாமல் கேள்வியைக் கேட்ட வழக்குரைஞரைப் போன்றுதான் நற்செய்தியில் வரும் சதுசேயர்கள்களும் விண்ணகம்/ மறுவுலக வாழ்வு என்றால் என்னவென்றே தெரியாமல் இயேசுவிடம் கேள்வியைக் கேட்டு, தக்க பதிலடி கொடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றர்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் உயிர்த்தெழுதலில் நம்பிக்கையில்லாத சதுசேயர்கள் இயேசுவைச் சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்று ஒரு கேள்வியோடு வருகின்றார்கள். அவர்கள் இயேசுவிடம் கேட்கக்கூடிய கேள்வி மிகவும் குழப்பமானது. பெண் ஒருவர் இருந்தாளாம். அவளை ஒருவர் மணந்து மகப்பேறின்றி  இறக்க, அவருடைய சகோதரர் அவரை மணந்துகொள்கின்றார். அவரும் மகப்பேறின்றி இறக்க அவருடைய சகோதரர் அப்பெண்ணை மணக்கின்றார். இப்படியாக எழுவர் அப்பெண்ணை மணந்து, எழுவரும் மகப்பேறின்றி இறக்கின்றார்கள். இறுதியில் அப்பெண்ணும் இறக்கின்றார். அந்தப் பெண் எழுவரை மணந்ததால், உயிர்த்தெழுதலின்போது அப்பெண் யாருக்கு மனைவியாக இருப்பார். இதுதான் சதுசேயர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வியாகும். இக்கேள்வியானது இணைச்சட்ட நூல் 25:5 ன் அடிப்படையில் இருக்கின்றது.

சதுசேயர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நிறைய நேரங்களில் யூத இரபிக்கள் தங்களுடைய தோல்வியை ஒத்துக்கொள்வார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ சதுசேயர்கள் கேட்ட கேள்விக்கு, அவர்கள் ஏற்றுக்கொண்ட திருமறை நூலில் இருக்கும் முதல் ஐந்து நூல்களில் ஒன்றான விடுதலைப் பயண நூலிருந்தே பதிலளிக்கின்றார்.

சதுசேயர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு அளித்த பதிலில் ஒருசில உண்மைகள் அடங்கி இருக்கின்றன. அவை என்னவென்று சிந்தித்துப் பார்ப்போம். முதல் உண்மை. விண்ணக வாழ்வு மண்ணக வாழ்வைப் போன்று இருக்காது என்பது ஆகும். மண்ணகத்தில்தான் பெண் கொள்ளவும், கொடுக்கவும் இருக்கின்றோம். ஆனால் விண்ணகத்தில் அப்படியிருக்காது. விண்ணகத்தில் உயிர்த்தெழுந்த அனைவரும் வானதூதர்களைப் போன்றும், கடவுளின் மக்களைப் போன்று இருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கின்றது. சதுசேயர்கள், விண்ணகத்தில் மக்கள் மண்ணகத்தில் இருப்பது போன்றே இருப்பார்கள் என்று நினைத்தார்கள். இப்படிப்பட்ட சமயத்தில்தான் இயேசுவின் பதில் அவர்களுக்கு நல்ல சாட்டையடியாக இருக்கின்றது.

இயேசு சதுசேயர்களுக்கு அளித்த பதிலிலிருந்து வெளிப்படும் இரண்டாவது உண்மை கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, வாழ்வோரின் கடவுள் என்பதாகும். சதுசேயர்கள் உயிர்த்தெழுதலின்மீதும், வானதூதர்களின் மீதும் நம்பிக்கை இல்லாது இருந்தார்கள். அப்படி யாராவது நினைத்தார்கள் என்றால், அவர்களை ஏளனமாகப் பார்த்தார்கள். இப்படிப்பட்ட தருணத்தில்தான் ஆண்டவர் இயேசு, சதுசேயர்கள் நம்பி ஏற்றுக்கொண்ட விடுதலைப் பயண நூலில் இடம்பெறும், ஆண்டவராகிய கடவுள் மோசேக்கு முட்புதரில் காட்சி கொடுத்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி பதிலளித்து, கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, மாறாக வாழ்வோரின் கடவுள் என்று விளக்கம் தருகின்றார்.

இயேசு தங்களுக்கு இப்படியெல்லாம் பதிலளிப்பார் என்று சிறிதும் எதிர்பார்த்திராத சதுசேயர்கள் தங்களுடைய தோல்வியை ஒத்துக்கொண்டு திரும்பிச் செல்கின்றார்கள்.

இந்த நேரத்தில் கடவுளைக் குறித்து நம்முடைய புரிதல் எப்படிப்பட்டதாக இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கடவுளை வாழ்வோரின் கடவுளாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தோம் என்றால், அவர் இன்றைக்கும் நம்மோடு வாழ்ந்து, நம்மை வழிநடத்துகின்றார் என்பதை நிச்சயமாக உணரமுடியும்.

எனவே, வாழ்வோரின் கடவுளை முழுமையாக நம்புவோம், அவருடைய பராமரிப்பில் நாளும் வளருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!