Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

     
                                  31ஆம் வாரம்  -  11  நவெம்பர் 2017 - முதல் ஆண்டு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16: 3-9, 16, 22-27

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சேர்ந்து உழைக்கின்ற பிரிஸ்காவுக்கும் அக்கிலாவுக்கும் என் வாழ்த்து. அவர்கள் என் உயிரைக் காக்கத் தலைகொடுக்கவும் முன்வந்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் மட்டும் அல்ல, பிற இனத்துத் திருச்சபைகள் அனைத்துமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன. அவர்கள் வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.

என் அன்பார்ந்த எப்பைனத்துக்கும் வாழ்த்துக் கூறுங்கள். ஆசியாவில் கிறிஸ்துவை முதன்முதல் ஏற்றுக்கொண்டவர் இவரே. உங்களுக்காக பாடுபட்டு உழைத்த மரியாவுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்.

என் உறவினர்களும் உடன் கைதிகளுமான அந்திரோனிக்கு, யூனியா ஆகியவர்களுக்கும் என் வாழ்த்துகள்; திருத்தூதர்களுள் இவர்கள் பெயர் பெற்றவர்கள்; இவர்கள் எனக்குமுன் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.

ஆண்டவருக்கு உரியவரான என் அன்பார்ந்த அம்பிலியாத்துக்கு வாழ்த்துகள். கிறிஸ்துவுக்காக உழைக்கும் என் உடன் உழைப்பாளரான உர்பானுக்கும் என் அன்பார்ந்த ஸ்தாக்கிக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் எல்லாச் சபைகளும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றன.

இந்தத் திருமுகத்தை எழுதிக் கொடுத்த தெர்த்தியுவாகிய நான் ஆண்டவருக்கு உரியவன் என்னும் முறையில் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறேன். நான் தங்குவதற்கும் சபையினர் அனைவரும் ஒன்று கூடுவதற்கும் தம் வீட்டில் இடமளிக்கிற காயு உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்.

நகரத்தின் பொருளாளரான எரஸ்தும் நம் சகோதரனாகிய குவர்த்தும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர்.

ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது.

என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர்.

ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================

 
பதிலுரைப் பாடல் -   திபா 145: 2-3. 4-5. 10-11 (பல்லவி: 1)

பல்லவி: என் கடவுளே, என் அரசே! உம் பெயரை எப்பொழுதும் போற்றுவேன்.

2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். 3 ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. பல்லவி

4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். 5 உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.

மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்.மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.

நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?

எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது."

பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர்.

அவர் அவர்களிடம் கூறியது: "நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக்கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
ஆண்டவருக்கு மட்டும் ஊழியம் செய்வோம்

நடுத்தர வயது நண்பர்கள் இருவர் காலார நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். அப்போது இருவரில் ஒருவரின் அலைபேசி ஒலித்தது. உடனே அவர் அதை எடுத்து பேச ஆரம்பித்தார். ஆனால் சத்தம் சரியாகக் கேட்கவில்லை. அதனால் வெளி ஒலிப்பானை (Speaker) அழுத்தினார். அப்போது சத்தம் மிகத் தெளிவாகக் கேட்டது.

எதிர்முனையில் இருந்தது வெளியூரில் தங்கி படித்துக்கொண்டிருக்கும் அவருடைய அன்புமகன். இரண்டு பேரும் நீண்ட நேரம் அன்பொழுகப் பேசி, ஒருவர்மீது ஒருவருக்கு இருக்கும் தங்களது பாசத்தைப் பரிமாறிக் கொண்டார்கள்.

சிறுது நேரம் கழித்து மகன், "அப்பா! அடுத்த வாரம் எங்களுடைய கல்லூரியிலிருந்து "ஆல் இந்தியா டூர்" போகிறோம். அதற்காக ஐந்தாயிரம் ருபாய் வேண்டும்" என்று பேசி முடிப்பதற்குள் அவனுடைய தந்தை, "ஹலோ மகனே! நீ பேசுவது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை. கொஞ்சம் சத்தமாகப் பேசு" என்றார். எதிர்முனையில் இருந்த மகன், "ஹெலோ அப்பா! நீங்கள் பேசுவது எனக்குத் தெளிவாகக் கேட்கின்றது. அடுத்த வாரம் எங்களுடைய கல்லூரியிலிருந்து "ஆல் இந்தியா டூர் போகிறோம்" என்று சொல்லி முடிப்பதற்குள் தந்தை இடைமறித்து, "மகனே! நீ பேசுவது எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை. சிக்னல் இருக்கும் இடத்திற்கு வந்து பேசு என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார்.

இதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அவருடைய நண்பர், "உன் மகன் பேசுவது தள்ளிவரும் எனக்கே தெளிவாகக் கேட்கிறது. அப்புறம் எதற்கு உன்னுடைய மகனிடம் பொய் சொல்கிறாய்" என்று கேட்டார். அதற்கு அவர், "உனக்குத் தெளிவாகக் கேட்கிறதல்லவா? அப்படியானால் நீயே அவன் கேட்கும் ஐயாயிரம் ரூபாயை அனுப்பி வை" என்று ஒரு போடு போட்டார்.

பணத்திற்காக பெத்த மகனையே புறக்கணிக்கும் பெற்றோர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள் என்பதை இக்கதையானது அருமையாக எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நீங்கள் செல்வத்திற்கும், கடவுளுக்கும் பணிவிடை செய்ய முடியாது" என்கிறார். காரணம் செல்வம் என்பது தன்னகத்தில் சுயநலத்தைக் கொண்டது. அதனால்தான் இயேசு தன்னைப் பின்பற்ற வந்த செல்வந்தனாகிய இளைஞனிடம், "நீ போய், உம் உடமைகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்" என்கிறார் (மத் 19: 21). செல்வம் இறைவனின் ஆட்சியை அடைவதற்கு நமக்கு மிகப் பெரிய தடையாக இருக்கிறது என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கிறது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும்கூட பலவேளைகளில் நாம் ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவை மறந்து, நிரந்தரமற்ற செல்வமாகிய பணத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றோம். அதிலே நாம் மூழ்கி விடுகின்றோம். ஆனால் உண்மை என்னவெனில் அரும்பாடு பட்டு சேர்க்கும் செல்வத்தினால், நம்மால் நிம்மதியாக வாழ்க்கை வாழ முடியாது (லூக் 12:15). மாறாக இறைவனுக்குப் பணிந்து, அவர் காட்டும் வழியில் நடக்கும்போது நமக்கு எல்லா ஆசிரும், அருளும் கிடைக்கும்.

இணைச்சட்ட நூல் 6:13 ல் வாசிக்கின்றோம் "உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்குப் பணிந்து நட" என்று. அதேபோன்று திருத்தூதர் பணிகள் நூல் 16: 31 ல் வாசிக்கின்றோம் "ஆண்டவராகிய இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும், உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்று. ஆம், இறைவனால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இறைவன் மீது மட்டும் நம்பிக்கை வைத்து, அவருக்கு பணிவிடை செய்து வாழ்ந்தோம் என்றால் இறைவனின் ஆசி நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

ஆதலால் உலக செல்வங்களுக்குப் பணிந்து நடப்பதை விடுத்து, உண்மைச் செல்வமாகிய இயேசுவுக்கு பணிவிடை செய்துவாழுவோம். இறைவன் அருளை நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

இன்று மாலை ரோசாப்பாட்டிக்கு நன்மை கொடுக்கப் போயிருந்தேன்.

ரோசாப்பாட்டி ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட துறவற சபைக்கு திருப்பலி கருத்திற்காக பணம் அனுப்புவார். ஒவ்வொரு மாதமும் திருப்பலி நிறைவேற்றியபின் அந்த சபையில் உள்ள பொறுப்பு தந்தை இவருக்கு நன்றிக் கடிதம் அனுப்புவார். கடந்தமாதம் பொறுப்பேற்றிருக்கும் அருட்தந்தை ஒருவர் இவருக்கு எழுதும் கடிதத்தில் எழுதியிருந்த "கரிஸ்ஸிமா ரோசா" ("அன்பிற்கினிய ரோசா" அல்லது "மிகுந்த அன்பிற்கினிய" அல்லது "என் இதயத்துக்கு நெருக்கமான", "என் வாஞ்சைக்குரிய ரோசா" என மொழிபெயர்க்கலாம்) என்ற வார்த்தைகளை திரும்பத் திரும்ப வாசித்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டார்.

சிரித்து முடித்துவிட்டு, "ஒவ்வொரு அருட்பணியாளரும் இப்படி ஒவ்வொருவரையும் பெயரிட்டு அழைக்கும் அளவுக்கு அன்பு செய்தால் எத்துணை நலம்!" என்றார்.

நாளைய முதல் வாசகத்துடன் தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலை வாசித்து முடிக்கின்றோம். கடிதத்தை நிறைவு செய்கின்ற பவுல் நிறையப் பேருக்கு நன்றி சொல்கின்றார். நிறையப் பேரின் சுகம் கேட்டு எழுதுகின்றார். ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி எழுதுகின்றார்.

"தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்!" - இதுதான் கடிதத்தில் இறுதி கிளாசிக்.

தூய முத்தம் என்றால் என்ன?

கடிதத்தின் நிறைவைக் கூர்ந்து கவனித்தாலே இதன் அர்த்தம் விளங்கிவிடும்.

பவுல் கடிதத்தை உரோமை திருச்சபைக்கு எழுதுகின்றார். ஏறக்குறைய 300 முதல் 500 பேர் உள்ள சபையாக, அல்லது 100 முதல் 200 பேர் உள்ள சபையாக இறைமக்கள் இருந்திருப்பார்கள். இந்தக் கடிதம் பொதுவில் வாசிக்கப்பட வேண்டியது. அதில் 11 பேரின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு எழுதுகின்றார் பவுல். இந்த 11 பேரின் பெயர்களை மட்டும் வாசிக்கும்போது மற்ற 89 பேர் என்ன நினைப்பார்கள்? "என்னடா என் பெயர் வரலையே?" அப்படின்னு நினைச்சாலோ, அல்லது தங்கள் பெயரை எழுதாததால் பவுல் மீது கோபப்பட்டாலோ, அல்லது இந்த 11 பேரின் மேல் பொறாமைப்பட்டாலோ சபையில் பிரிவினை வருந்துவிடுமே! இதை பவுல் எதிர்நோக்காதவரா?

பவுலின் நிதர்சனமான நன்னயம் அல்லது தெளிந்த நீரோடை போன்ற அன்புதான் இங்கே துலங்குகிறது. இப்படிப்பட்டவர்கள்தாம் உள்மனச்சுதந்திரத்துடன் இருக்க முடியும். இதை அனுபவித்த சபையினர், "ஏய் விடுங்கப்பா, உங்க பேரு வரலைன்னா என்ன? பவுலைப் பற்றி நமக்குத் தெரியாதா? அவர் மனசுல நம்ம எல்லாருக்கும் இடமிருக்குப்பா!" என்ற பெரிய மனதுடன் எடுத்திருப்பார்கள்.

முத்தம் கொடுப்பது நம் மரபில் கொஞ்சம் "தபு"வோடே பார்க்கிறோம்.

எனக்கு முந்தையை தலைமுறையினர் முத்தம் கொடுத்து நான் பார்த்ததேயில்லை. அந்தத் தலைமுறையில் வந்த "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து" பாடலின் முத்தக்காட்சியில் கூட, சிவாஜி வெறும் உதட்டை மட்டும் துடைத்துக்கொள்வதாகக்தான் காட்டுவார்கள். முத்தம் கொஞ்சம் தூரமாகவே வைக்கப்பட்டது. இன்றைய தலைமுறையினர் ஃபோனில் கொடுக்கும் முத்தங்களிலிருந்து, நேரில் கொடுக்கும் முத்தம் வரை கொஞ்சம் முன்னேறித்தான் இருக்கிறோம் அல்லது இருக்கிறார்கள்.

முத்தம் கொடுத்து வாழ்த்துவது இன்றுவரை உரோமையில் (இத்தாலியில்) உள்ள பண்பு. ஜெர்மனியில் விரைப்பாக நின்று கையை நீட்டுவார்கள். இத்தாலியில் சரி என்று படுவது, இந்தியாவிற்கு தவறு என்று படும்தான்.

ஒன்று மட்டும் கத்துக்கலாம் நம்ம பவுல்கிட்ட.

இயல்பா இருங்க. இயல்பா இருக்கிறது இயல்பா வெளிப்படுத்துங்க.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


"நீங்கள் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது"

வில்லி ஹோப்சும்மர் (Willi Hoffsuemmer) என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் சொல்லக் கூடிய கதை இது.

முன்பொரு காலத்தில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் பாடல்கள் பாடிக்கொண்டே செருப்புத் தைத்துக்கும் தொழிலைச் செய்து வந்தார். இதனால் அவர் பாடும் பாடல்களைக் கேட்பதற்காகவே சிறுவர் சிறுமியர் அவருடைய வீட்டுவாசல் முன்பாக வந்து நின்றார்கள்.

அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் வீட்டுக்குப் பக்கத்தில் பெரும் செல்வம் படைத்த செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் இரவு முழுவதும் தன்னிடம் இருக்கின்ற பணத்தை எண்ணிவிட்டு, அதிகாலையில்தான் தூங்கச் செல்வார். அப்படியிருந்தும் அவருக்குத் தூக்கம் வருவதே கிடையாது. அவர் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு "நம்மிடம் இவ்வளவு பணம் இருக்கின்றது, இருந்தாலும் நம்மால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை, ஆனால் இந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் பணமே இல்லை. அப்படியிருந்தும் அவன் நிம்மதியாக இருகின்றானே என்று. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டினார்.

ஒருநாள் அவர் செருப்புத் தைக்கும் தொழிலாளியை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்தார். அவரிடத்தில் ஒரு சிறிய பையைக் கொடுத்து, இதை வைத்துக்கொள் என்று சொன்னார். செருப்பு தைக்கும் தொழிலாளியும் அதை அன்போடு வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார். வீட்டிற்குச் சென்று செல்வந்தர் கொடுத்த அந்த பையைத் திறந்து பார்த்தபோது செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு பேச்சு மூச்சு வரவில்லை. ஏனென்றால், அந்தப் பை முழுவதும் தங்க நாணயங்கள் இருந்தன. தன்னுடைய வாழ்நாளில் இவ்வளவு தங்க நாணயங்களை அவர் பார்த்ததே இல்லை. அவர் அந்தப் பையில் எவ்வளவு தங்க நாணயங்கள் இருக்கின்றன என்று எண்ணத் தொடங்கினர். இதனை அவருடைய வீட்டிற்கு, அவர் பாடும் பாடல்களைக் கேட்பதற்கு வரும் சிறுவர் சிறுமியர் பார்த்துவிட்டனர். இதனால் அவர் தங்க நாணயங்கள் தன்னிடம் இருக்கின்ற செய்தியை குழந்தைகள் தெரிந்துகொண்டு விட்டார்களே என்று பயமுற்றார். எனவே, அவர் தங்க நாணயங்களை தன்னுடைய படுக்கையறையில் கொண்டுபோய் வைத்தார்.

படுக்கையறையில் தங்க நாணயங்கள் இருப்பது யாருக்கும் தெரிந்துவிடுவோ என நினைத்து அதனை மொட்டைமாடியில் கொண்டுபோய் வைக்கத் திட்டமிட்டார். மொட்டைமாடியும் சரியான இடம் கிடையாது என நினைத்த அவர் அவற்றை சமையற்கட்டில் வைக்கலாம் என்று திட்டம் தீட்டினர். அதுவும் சரிபட்டு வராது என நினைத்த அவர்,  கொல்லைப்புறத்தில் ஒரு குழிதோண்டி அதைப் புதைத்து வைத்தால் யாரும் தெரியாது என நினைத்தார். அதன்படியே அவர் செய்தார். அப்போதும் அவர் மனம் அமைதி கொள்ளவில்லை. அவர் செருப்பு தைக்கும் தொழிலை விட்டுவிட்டு, பாடல் பாடுவதையும் விட்டுவிட்டு எப்போதும் தங்க நாணயங்களைக் குறித்தே நினைத்துக்கொண்டிருந்தார். இதனால் அவர் நிம்மதியின்றித் திரிந்தார். அவருடைய வீட்டிற்கு பாடல்களைக் கேட்க வரும் குழந்தைகளும்கூட வரவே இல்லை.

ஒருநாள் அவர் தான் எதற்கு இப்படி நிம்மதியின்றி இருக்கின்றோம், இதற்குக் காரணம் என்ன? என்று ஆற அமர யோசித்துப் பார்த்தார். அப்போது அவர் தங்க நாணயங்கள்தான் தன்னுடைய நிம்மதியின்மைக்குக்  காரணம் எனப் புரிந்துகொண்டு, கொல்லைப்புரத்தில் புதைத்து வைத்திருந்த தங்க நாணயங்களை எடுத்து, அவற்றை செல்வந்தரிடம் கொடுத்து, "இவற்றை நீரே வைத்துக்கொள்ளும்" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினார். இப்போது அவரால் நிம்மதியாக பாடல்களைப் பாடிக்கொண்டு செருப்பு தைக்க முடிந்தது. முன்பு அவருடைய வீட்டிற்கு பாடல்களைக் கேட்பதற்காக வந்த சிறுவர் சிறுமியரும் வரத்தொடங்கினார்.

கதையில் வரும் செருப்பு தைக்கும் தொழிலாளி பணமில்லாதபோது நிம்மதியாக இருந்தார். பணம் வந்த பின்பு அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பணத்திற்கும் நிம்மதிக்கும் - நிம்மதியைத் தரும் கடவுளுக்கும் - வெகு தூரம் என்பதை இந்த கதை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது" என்கிறார். காரணம், பணம் எப்போதும் ஒருவனுக்குள் தன்னலத்தை மட்டுமே வருவிக்கும்; இவ்வுலகம் தொடர்பாகவே சிந்திக்கத் தூண்டும். இப்படிப்பட்டவர் கடவுளுக்குப் பணிவிடை செய்ய முடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் கடவுளுக்கு உண்மையாகப்  பணிவிடை செய்யும் ஒருவர் பணத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டார். ஆனால், அப்படி இறைப்பணி செய்யும் ஒருவருக்கு எல்லா ஆசிர்வதங்களுக்கும் நிரம்பக் கிடைக்கும் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அதனால்தான் இயேசு அப்படிச் சொல்கின்றார்.

எனவே, நமக்கு நிலையான, நிறைவான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும் கடவுள் ஒருவருக்கு மட்டுமே பணி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!