|
08
நவெம்பர் 2017 |
|
|
======================================================================================================
முதல் வாசகம்
======================================================================================================
அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய
திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள்.
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே
கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை
நிறைவேற்றுபவர் ஆவார்.
ஏனெனில், "விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே,
பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே'' என்னும் கட்டளைகளும்,
பிற கட்டளைகளும், "உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர்
மீதும் அன்புகூர்வாயாக'' என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன.
அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே
திருச்சட்டத்தின் நிறைவு.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
======================================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 112: 1-2. 4-5. 9 (பல்லவி: 5a)
பல்லவி: மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர். அல்லது:
அல்லேலூயா.
1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில்
அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய்
இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி
4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும்
இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். 5 மனமிரங்கிக் கடன்
கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில்
நீதியுடன் செயல்படுவர். பல்லவி
9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி
என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன்
மேலோங்கும். பல்லவி
======================================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
1 பேது 4: 14
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது
வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின்
மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா.
======================================================================================================
நற்செய்தி
வாசகம்
======================================================================================================
தம்
உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க
முடியாது.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
14: 25-33
அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர்.
அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: "என்னிடம் வருபவர்
தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும்,
ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க
முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச்
சீடராய் இருக்க முடியாது.
உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில்
உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான
பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்க மாட்டாரா? இல்லா
விட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல்
இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, "இம்மனிதன் கட்டத் தொடங்கினான்;
ஆனால் முடிக்க இயலவில்லை" என்பார்களே!
வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம்
பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க
முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க
மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்
போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா?
அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என்
சீடராய் இருக்க முடியாது.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
======================================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
======================================================================================================
இயேசுவின் சீடர் யார்?
பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த அந்த இரயில் பெட்டிக்குத்
திடிரென்று வந்த பயணச் சீட்டு பரிசோதிப்பாளர் ஒவ்வொரிடமிருந்தும்
பயணசீட்டை வாங்கி அதைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கீழே ஒரு மணிபர்ஸ் கிடப்பதைக் கண்டார். அதை அவர் எடுத்துப்
பார்த்தபோது அதற்குரியவரின் முகவரியோ, புகைப்படமோ எதுவும் இல்லை.
இயேசுவின் படம் மட்டும்தான் அதனுள்ளே இருந்தது. உடனே அவர் அங்கிருந்த
பயணிகளிடம், "உங்களுள் யாரோ ஒருவர் தன்னுடைய மணிபர்சைத்
தொலைத்துவிட்டார் என நினைக்கின்றேன். இதற்குச் சொந்தக்காரர் உரிய
அடையாளங்களைச் சொல்லி பெற்றுக்கொள்ளலாம்" என்றார். ஒரு வயதான
பெரியவர் எழுந்து, "அந்த மணிபர்ஸ் என்னுடையது" என்றார்.
"உம்முடையது தான் என்பதற்கு என்ன ஆதாரம்?" என்று கேட்டார் பயணசீட்டு
பரிசோதகர். "அதில் இயேசுவின் படம் இருக்கும்" என்றார் பெரியவர்.
அதற்கு பயணச் சீட்டு பரிசோதிப்பவர், "எல்லாருடைய மணிபர்சிலும்தான்
இயேசுவின் படம் இருக்கும். நீர் வைத்திருக்கும் இயேசுவின் படத்தில்
என்ன சிறப்பு இருக்கின்றது" என்றார். பெரியவரோ தான் அந்த இயேசுவின்
படத்தை எதற்காக வைத்திருகின்றேன் என்பதற்கான காரணத்தை சொல்லத்
தொடங்கினார்.
"நான் சிறுவனாக இருந்தபோது என்னுடைய தந்தைதான் இந்த மணிபர்சை
வாங்கித்தந்தார். அப்போது எனக்குத் தந்தைதான் எல்லாமுமாக இருந்தார்.
எனவே, அவருடைய படத்தை மணிபர்சில் வைத்து அழகு பார்த்தேன். நாட்கள்
சென்றன. என்னுடைய தோற்றமும் உடற்கட்டும் எனக்குப் பிடித்துப்
போயின. எனவே, மணிபர்சில் என்னுடைய படத்தை வைத்து ரசிக்கத் தொடங்கினேன்.
இப்படி இருக்கும்போது ஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்கினேன், அவளையே
திருமணமும் செய்துகொண்டேன். அவள் என்னுடைய வாழ்வின் சரிபாதியாய்
ஆனாள். எனவே என்னுடைய மனைவியின் புகைப்படத்தை மணிபர்சில்
வைத்து ரசித்தேன். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் எனக்கொரு மகன்
பிறந்தேன். அவன்தான் என்னுடைய உலகம், அனைத்தும் என்றிருந்தேன்.
ஆனால் அவன் வளர வளர என்னை மறந்துவிட்டு அவனுடைய வேலையைக் கவனிக்கத்
தொடங்கிவிட்டான். இதற்கிடையில் என்னுடைய பெற்றோரும், என்னுடைய
மனைவியும் இறந்து போனார்கள். என்னுடைய மகன்கூட என்னோடு சரியாகப்
பேசாததால் நான் தனித்துவிடப்பட்டேன். அப்போதுதான் எனக்கு இயேசு
அறிமுகமானார். அவருடைய அன்பும் அருளும் எனக்குப் போதுமானதாக இருந்தது.
அதனால் அவருடைய படத்தை என்னுடைய மணிபர்சில் வைத்தேன். ஒருவேளை
இயேசுவின் அன்பை இதற்கு முன்னமே உணர்ந்திருந்தால் என்றைக்கோ என்னுடைய
பெற்றோர், மனைவி, மகன் என எல்லாரையும் விட்டுவிட்டு இயேசுவைப்
பின்தொடர்ந்து சென்றிப்பேன்".
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பயணச் சீட்டுப் பரிசோதகருக்கு
கண்களிலிருந்து கண்ணீரே வந்துவிட்டது. பின்னர் அவர் மணிபர்சை
அந்த பெரியவரிடம் கொடுத்துவிட்டு, ஒரு நிறுத்தம் வந்தபோது அதில்
இறங்கி, அங்கிருந்த கடைகாரரிடம், "இயேசுவின் படமிருந்தால்
கொடு, மணிபர்சில் வைக்க வேண்டும்" என்றுசொல்லி, கேட்டு
வாங்கிக்கொண்டு, தன்னுடைய மணி பர்சில் வைத்துக்கொண்டார்.
யாராலும் தரமுடியாத நிம்மதியை இயேசு ஒருவரே தருகின்றார், அவரைப்
பின்தொடர்ந்து நடக்கின்றபோது அவரது உண்மையான சீடர்களாக
மாறுகின்றோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வரக்கூடியவர்கள்
எப்படி இருக்கவேண்டும், அவர்களுக்கு என்னென்ன தகுதியெல்லாம் இருக்கவேண்டும்
என்பதைப் பற்றி எடுத்துரைக்கின்றார். இயேசு எருசலேம் நகர்
நோக்கி பாடுகள் படுவதற்காகப் போய்க்கொண்டிருக்கின்றார். ஆனால்,
அவருடைய சீடர்களோ இயேசு எருசலேமில் தன்னுடைய ஆட்சியை நிறுவப்போகிறார்
என்று தவறாக நினைத்தார்கள். இப்படி தவறான நினைத்த சீடர்களுக்குப்
பாடம் கற்பிக்கும் விதமாகத்தான் இயேசு, "என்னிடம் வருபவர் தம்
தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரையும்
ஏன் தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என்னுடைய
சீடராயிருக்க முடியாது" என்கிறார்.
சீடத்துவ வாழ்க்கை என்பது அதிகாரம் பெற்று ஆட்சி செலுத்துவது
அல்ல, மாறாக எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னைப் பின்தொடர்வது,
நற்செய்திக்காக உயிரையும் துறப்பது என்பதை இயேசு மிக அழகாக எடுத்துரைக்கின்றார்.
உறவுகளையோ உடமைகளையோ விட்டுவிடாத எவரும் தன்னுடைய சீடராக இருக்க
முடியாது என்பதுதான் இயேசுவின் ஆழமான போதனையாக இருக்கின்றது.
நாம் இயேசுவுக்காக எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருக்கின்றோமா
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பலநேரங்களில் உறவுகளும்
உடமைகளும்தான் நிம்மைதியைத் தரும் என்று
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால், உண்மை வேறொன்றாக இருக்கின்றது.
எனவே, நிலையான வாழ்வைத் தரும் இயேசுவைப் பின்தொடர்வோம், அவருக்காக
எதையும் செய்யத் துணிவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
======================================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
======================================================================================================
இயேசுவின்
உண்மையான சீடர்
தந்தை ஒருவர் தன்னுடைய அன்புமகனை ஒரு துறவியாக்க விரும்பினார்.
அதனால் அவ்வூரில் இருந்த புகழ்பெற்ற துறவியிடம் அனுப்பிவைத்தார்.
ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஓடியிருக்கும். அப்போது ஒருநாள் தந்தை
தன்னுடைய மகனின் துறவுநிலையை அறிந்துவர அவனுடைய அக்காவை அனுப்பிவைத்தார்.
துறவுமடத்திற்கு அவனுடைய அக்கா வந்திருக்கும் செய்தி அவனுக்குச்
சொல்லப்பட்டது. அதைக் கேள்விபட்டதும், அவன், "என்னுடைய அக்காவைத்
துறந்தேன்" என்று பதில்சொல்லி அனுப்பிவிட்டான். இதைக்கேட்ட தந்தை,
தன்னுடைய மகன் துறவுநிலையின் மேன்மையை அடைந்துகொண்டிருக்கிறான்
என்று பெருமைப்பட்டார்.
நாட்கள் சென்றன. ஒருசில மாதங்களுக்குப் பிறகு அவர் அவனுடைய அன்புத்தாயை
அனுப்பிவைத்தார். அவனுடைய தாய் அங்கே வந்திருக்கும் சேதி அவனிடம்
சொல்லப்பட்டது. அதைக் கேட்டதும் அவன், "என்னுடைய தாயைத் துறந்தேன்"
என்று சொல்லி, அவரை அங்கிருந்து அனுப்பிவைத்தான். இச்செய்தியைக்
கேள்விப்பட்ட அவனுடைய தந்தை இன்னும் மகிழ்ச்சியடைந்தான். தன்னுடைய
அன்புமகன் துறவுநிலையின் அதிமிகு உன்னத நிலையை அடைந்து
கொண்டிருக்கிறான் என்று மிகவும் சந்தோசப்பட்டார்.
இன்னும் ஒருசில மாதங்களுக்குப் பிறகு துறவுமடத்திற்கு அவனுடைய
அத்தை மகளை அனுப்பிவைத்தார். அத்தை மகள் துறவுமடத்திற்கு வந்திருக்கும்
செய்தி அவனிடம் சொல்லப்பட்டது. அதைக்கேட்டதும் அவன், "என்னுடைய
துறவுவாழ்க்கையே துறந்தேன்" என்று துள்ளிக்குதித்து வந்து அத்தை
மகளோடு வெளியேறினான்.
உண்மையான துறவுவாழ்க்கை என்பது எல்லா உறவுகளையும் துறப்பது என்பதை
இக்கற்பனைக் கதையானது நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய
சீடர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று போதிக்கின்றார். இயேசுவின்
சீடர்கள் தந்தை, தாய், பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், உடமைகள்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை பின்தொடர்பவர்களாக இருக்கவேண்டும்.
காரணம் இயேசுவின் பணி அல்லது இறையட்சிப் பணி எனது எல்லா மக்களுக்கும்
பொதுவானது. குடும்பம், உறவுகள் என்று வாழ்வோரால் எப்படி பிறர்நலப்
பணிபுரியமுடியும் என்ற எண்ணத்தில்தான் இயேசு எல்லாரையும்
விட்டுவிட்டு
- துறந்துவிட்டு - தன்னைப் பின்பற்றி வரவேண்டும்
என்று அறிவுறுத்துகிறார்.
இயேசு கிறிஸ்துகூட இப்படிப்பட்ட ஒரு பரந்துபட்ட நோக்கத்தோடுதான்
தன்னுடைய பணிவாழ்வைச் செய்தார். அதனால்தான் தன்னுடைய தாயும்,
சகோதர, சகோதரிகளும் தன்னைப் பார்க்கவந்தபோது, "யார் என்னுடைய
தாய், யார் என்னுடைய சகோதர, சகோதரிகள்?" என்று கேட்டுவிட்டு,
"இறைவார்தையைக் கேட்டு, அதன்படி நடப்போரே என்னுடைய தாயும், சகோதர,
சகோதரிகளும்" என்கிறார். ஆக, இயேசுவைப் பொறுத்தளவில் இறையாட்சிதான்
முதன்மையான இடம் வகித்தது. குடும்பம், உறவுகள் எல்லாம் அதற்குப்
பின்னால்தான்.
விவேகானந்தர் கூறுவார், "தன்னலம் மறுத்துப் பொதுநலத்துக்காக
தொண்டு ஆற்றுபவர்கள்தான் உண்மையான துறவிகள். ஆம், யார் ஒருவர்
தன்னுடைய ஆசைகள், விருப்பங்கள் எல்லாவற்றையும் பொதுநலத்திற்காக
துறக்கிறார்களோ அவர்களே உண்மையான துறவிகள்.
இப்படி எல்லா உறவுகளையும் துறந்து, இயேசுவுக்காக, இறையாட்சிக்காக
வாழ்பவர்களுக்கு இறைவன் அளிக்கும் கைம்மாறு மிகுதியாகும். மத்தேயு
நற்செய்தி மத் 19:29 ல் வாசிக்கின்றோம் "என் பெயரின் பொருட்டு
வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ,
பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப்
பெறுவார். நிலைவாழ்வையும் உரிமைப்பேறாகப் பெறுவார்" என்று.
இயேசுவின் பணியைத் தொடர்பவற்கு அவர் அளிக்கும் கைம்மாறு
மிகுதியாகும். எனவே இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும்
நாம் எல்லாவற்றையும் - உலகு சம்பந்தப்பட்ட காரியங்களை -
விட்டுவிட்டு இறைவனை சிக்கெனப் பற்றிக்கொள்வோம். இறையருள்
நிறைவாய் பெறுவோம். |
|