Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      02  நவெம்பர்  
                                  All Souls Day  - இறந்த அனைவர் நினைவு

முதல் வாசகம்
==============================================================================

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 1-9

நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெரும் துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள். மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் கண்டித்துத் திருத்தப்பட்ட பின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்த பின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல் அவர் அவர்களைப் புடமிட்டார்; எரிபலி போல் அவர்களை ஏற்றுக்கொண்டார். கடவுள் அவர்களைச் சந்திக்க வரும்போது அவர்கள் ஒளிவீசுவார்கள்; அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர்விடுவார்கள்; நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்; மக்கள் மீது ஆட்சி செலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள் மீது என்றென்றும் அரசாள்வார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்; அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்துகொண்டோர் மீது இருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 
=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  திபா 23: 1-2. 3. 5. 6 Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;
அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். -பல்லவி

3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். -பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்;
என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;
எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்
உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்;
நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி
==================================================================================
இரண்டாம் வாசகம்
======================================================================================
உரோமையர் 5:5-11

அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது: எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்.

நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம்.

ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகிஇ அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?

நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.
 
 =================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================


=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46


அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களேஇ வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன்இ என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன்இ என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார். அதற்கு நேர்மையாளர்கள் "ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள். அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன்இ நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை' என்பார். அதற்கு அவர்கள், "ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோஇ தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர்இ ஹமிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இறந்த ஆன்மாக்களின் நினைவு நாள்

ஓர் ஊரில் தந்தையும் மகளும் வாழ்ந்து வந்தார்கள். தந்தை தன்னுடைய மகளை அதிகமாக அன்பு செய்துவந்தார். அவளை தன்னுடைய உயிராக நினைத்து வாழ்ந்து வந்தார்.

ஒருநாள் அன்பு மகள் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானாள். அப்போது அந்த தந்தை நகரில் இருந்த எல்லா மருத்துவர்களிடமும் சென்று சிகிச்சை அளித்துப் பார்த்தார். ஆனால் யாராலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. ஒருநாள் இரவில் மகள் இறந்துபோனாள். அப்போது அந்த தந்தை அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. தன்னுடைய உலகமே இருண்டுபோய்விட்டது என நினைத்தார். எல்லாரிடமிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு தனிமையான வாழ்வு வந்தார். தன்னுடைய மகளின் ஞாபகம் வரும்போதெல்லாம் கண்ணீர் விட்டு அழுதார்.

ஒருநாள் அவர் தூங்கும்போது கனவு ஒன்று கண்டார். அந்தக் கனவில் அவர் மேலுலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே வெண்ணிற ஆடை அணிந்த குழந்தைகள் தங்களுடைய கைகளில் எரியும் மெழுகுதிரியை ஏந்தி கடவுளின் திருமுன் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். ஒரே ஒரு குழந்தை மட்டும் அணைந்த மெழுகுதிரியோடு நின்றுகொண்டிருந்தது. அருகே சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அது தன்னுடைய குழந்தை என்று.

உடனே அவர் அந்தக் குழந்தையை (மகளை) அள்ளி எடுத்துக்கொண்டு, "மகளே எல்லாருடைய திரியும் எரிந்துகொண்டிருக்க, உன்னுடைய திரி மட்டும் ஏன் அணைந்துபோய் இருக்கின்றது?" என்று காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த குழந்தை, "அப்பா! என்னுடைய திரி மற்ற குழந்தைகளின் திரிகளைப் போன்று நன்றாகத்தான் எரியும். ஆனால் நீ தொடர்ந்து வடிக்கும் கண்ணீர் பட்டுதான் என்னுடைய திரி அணைந்துபோய்விடுகிறது?" என்றது.

தொடர்ந்து அந்தக் குழந்தை தன்னுடைய தந்தையைப் பார்த்துச் சொன்னது, "அப்பா எதற்காக இப்படி அழுதுகொண்டே இருக்கிறாய். நான் உன்னைவிட்டுப் பிரிந்தாலும், இங்கே உயிரோடுதானே இருக்கிறேன். அதனால் என்னைப்பற்றி நினைத்து நீ இனிமேலும் அழுதுகொண்டிருக்காத" என்று. உடனே அந்த தந்தை தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தார். தன்னுடைய மகள் விண்ணகத்தில் உயிரோடுதான் என்று ஆறுதல் அடைந்தார்.

"வாழ்வு மாறுபடுகிறதே அன்றி, அழிந்து போவதில்லை" என்பதற்கு இந்த நிகழ்வு எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.

இன்று அன்னையாம் திரு அவை இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவுநாளைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்த நல்ல நாளில் நம்முடைய குடும்பங்களில் இறந்த அன்பான உறவுகளுக்காக, இன்னும் யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.

இன்று நாம் கொண்டாடும் இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாள் தொடக்கத்தில் "குளூன" நகரில் பிறந்த ஓடிலோ என்ற துறவியால் கி.பி.906 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அதன்பின் இவ்விழா படிப்படியாக எல்லா துறவுமடங்களுக்கும் பரவி, இறந்த ஆன்மாக்களுக்காக விழா எடுத்துக் கொண்டாடும் நிலை உருவானது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து இவ்விழா நவம்பர் 2 ஆம் தேதி கொண்டாடும் நிலை உருவானது. விவிலியத்தில் கூட இறந்த ஆன்மாக்களுக்காக பலிகொடுக்கும் நிலை இருந்ததை நாம் வாசிக்கின்றோம் (2 12: 43-45).

இப்போது இவ்விழா நமக்கு உணர்த்து செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

முதலாவதாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருவதாக இருக்கின்றது. உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், "கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை" என்று. ஆகவே நம்முடைய மண்ணுலக வாழ்க்கை சாவோடு முடிந்துபோகின்ற ஒன்று அல்ல, மாறாக நாம் இறந்தபின்னும் உயிர்வாழ்வோம் என்பதே ஆகும். அத்தகைய நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை வாழ்வதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையாகும்.

இரண்டாவதாக இவ்விழா இறந்த ஆன்மாகளுக்காக, குறிப்பாக உத்தரிக்க தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைப்புத் தருகின்றது. "புனிதர்களின் சமூக உறவை விசுவாசிக்கிறோம்" என்று சொல்லும் நாம் துன்புறும் திருச்சபையில் உள்ள (உத்தரிக்க தலத்தில் உள்ளவர்கள்) ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். அவர்களுக்கான நம்முடைய ஜெபம், அவர்களுடைய தண்டனையைக் குறைத்து அவர்களை வெற்றிபெற்ற திருச்சபையில் (விண்ணகம்) சேர்த்துக்கொள்ளும். எனவே நாம் அவர்களுக்காக ஜெபிப்போம்.

மூன்றாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாம் இறைவன் தரும் மகிமையை, விண்ணகத்தைப் பெறவேண்டும் என்றால், நம்மோடு வாழக்கூடிய சின்னஞ் சிறிய சகோதரிகளுக்கு நம்மாலான உத்திகளைச் செய்யவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சின்னஞ் சிறிய சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்தவர்களுக்குத்தான் விண்ணகத்தை பரிசாகத் தருகின்றார்.

எனவே, இந்த நல்ல நாளில் இறந்த ஆன்மாக்களுக்காக சிறப்பாக ஜெபிப்போம். அதோடு நாமும் இறைவனுக்கு உகந்த நல்ல வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

"If Job" s sons were purified by their father" s sacrifice, why should we doubt that our offerings for the dead bring them some consolation? Let us not hesitate to help those who have died and to offer our prayers for them" ஜான் கிரிஸ்சோஸ்டம். -
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

" ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது, மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை"

தமிழகத்தில் தோன்றிய பிரபல நாடகாசிரியர் பம்மல் சம்பந்தம். அவர் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்தார். அவரையே மணமுடிக்கவேண்டும் என்றும் முடிவுசெய்தார்.

இதற்கிடையில் அவருக்குத் தெரிந்த சோதிடர் ஒருவர் அவரிடம், " உமக்கும் அந்தப் பெண்ணுக்கும் சாதகப் பொருத்தம் சரியில்லை. அதனால் நீர் அந்தப் பெண்ணை மணமுடிக்கவேண்டாம். அப்படி நீர் மணமுடித்தால் நீண்ட நாட்கள் நீர் உயிர்வாழமாட்டீர்" என்று எச்சரித்துவிட்டுப் போனார். சம்பந்தத்தின் வீட்டார்கூட "சோதிடர் சொல்வதுதான் சரி, அவர் சொல்வதுபோன்று நீ அந்தப் பெண்ணை மணமுடிக்காமல், வேறொரு பெண்ணை மணமுடி" என்றார்கள்.

சம்பந்தத்திற்கு அவர்கள் சொல்வதில் உடன்பாடு இல்லை. அதனால் அவர் " சாத்திரமாவது, மண்ணாங்கட்டியாவது" என்று சொல்லி, தான் உயிருக்கு உயிராகக் காதலித்த பெண்ணையே மணமுடித்தார். அது மட்டுமல்லாமல், திருமண வாழ்வில் அறுபது ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்திருந்தார். அவருக்கு என்பதாவது வயது நடக்கும்போது அவர் இவ்வாறு கூறினார், " எனது திருமணத்தின்போது ஒரு தாலி, அறுபதில் ஒரு தாலி, எண்பதில் ஒரு தாலி என்று மூன்று முறை என் மனைவிக்குத் தாலி கட்டிவிட்டேன். ஆனாலும்கூட நான் இன்பமாகத்தான் திருமண வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்... சோதிடர் சொன்னது போன்று நான் என் காதலியை மணமுடிக்காமல், வேறொரு பெண்ணை மனமுடித்திருந்தால்கூட இவ்வாறு மகிழ்ச்சியாக இருந்திருக்கமாட்டேன்" .

சோதிடம், சாத்திர சம்பிரதாயம் என்று முடங்கிப்போகாமல், அவற்றையெல்லாம் தன்னுடைய வாழ்வால் பொய்யாக்கிய பம்மல் சம்பந்தம் நமக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான் " சாத்திர சம்பிரதாயங்களைவிட மனிதர்கள் உயர்ந்தவர்கள்" என்பது.

அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில்கூட பலர் சாத்திர சம்பிரதாயங்களை. ஒருசில பழக்க வழக்கங்களை, அறிவுக்கு ஒவ்வாத சட்டதிட்டங்களை பற்றிப்பிடித்துக் கொண்டு வாழ்வது மிகவும் வியப்பாக இருக்கின்றது,. இத்தகைய பின்னணியில் சட்ட திட்டங்களை விடவும் சாத்திர சம்பிரதாயங்களை விடவும் மனிதர்கள் மேலானவர்கள் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானது.

நற்செய்தி வாசகத்தில், ஓய்வுநாள் அன்று ஆண்டவர் இயேசு பரிசேயர் தலைவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். அவர் உணவருந்தச் சென்ற இடத்தில் நீர்கோவையுள்ள ஒருவர் இருக்கின்றார். ஓய்வுநாளான அன்று இயேசு அந்த மனிதரைக் குணப்படுவாரா? என்று அவரையே கூர்ந்து நோக்குகிறார்கள் பரிசேயர்கள். இயேசுவை விருந்துக்கு அழைத்திருக்கின்றோமே, அவரை நல்லவிதமாய் உபசரிக்கவேண்டுமே என்றெல்லாம் பரிசேயர் நினைத்துப் பார்க்கவில்லை. மாறாக அவரிடத்தில் எப்படியாவது குற்றம் காணவேண்டும் என்ற நினைப்போடு செயல்படுகின்ற பரிசேயரை என்னவென்று சொல்வது?.

தன் மீது குற்றம் காண பரிசேயக் கூட்டடம் துடியாய் துடித்துக் கொண்டிருப்பதை உள்ளுணர்வால் அறிகின்ற இயேசு அவர்களைப் பார்த்து, " ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா? இல்லையா? என்று கேட்கின்றார். அவர்களோ அமைதியாக இருப்பதைக் கண்ட இயேசு, நீர்கோவை நோயாளியின் கையை நீட்டச் சொல்லி, அவரைக் குணப்படுத்துகின்றார்.

இயேசு செய்த இந்த அற்புதச் செயல் நமக்கு ஒருசில செய்தியை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. முதலாவது, நல்லது செய்வதற்கு நல்லநேரமோ காலமோ காலமோ தேவையில்லை என்பதாகும். படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் தான் படைத்த அனைத்தும் நல்லதெனக் கண்டார் எனில், அவருடைய படைப்பில் தீயது என்று ஏதாவது இருக்குமா? நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படியிருக்கும்போது ஓய்வுநாளில் இயேசு நீர்கோவை உள்ள நோயாளியைக் குணப்படுத்தியத்தை எந்தவிதத்தில் தப்பு சொல்ல முடியும்?. ஆகவே, நாம் நன்மை செய்வதற்கு நேரம் காலம் பார்த்துக்கொண்டிருக்காமல், எல்லாக் காலத்திலும் நன்மை செய்யக்கூடியவர்கள் ஆகவேண்டும்.

இரண்டாவது, எல்லாச் சூழ்நிலையும் ஒரே நியதியைக் கடைபிடிக்கவேண்டும் ஒழிய, நமக்கொரு நியதியையும் அடுத்தவருக்கு ஒரு நியதியையும் கடைபிடிக்கக் கூடாது. பரிசேயக் கூட்டம் ஓய்வுநாளில் தங்களுடைய பிள்ளையோ ஆடுமாடோ கிணற்றில் விழுந்தால் அதனை தூக்கிவிட முற்பட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் இயேசு ஓய்வுநாளில், நீர்கோவை உள்ள நோயாளியைக் குணப்படுத்தியதும் அதைப் பெரிய தவறு போன்று பார்க்கின்றார்கள். இப்படி ஒருதலைச் சார்பாகச் செயல்பட்ட பரிசேயர்களைத்தான் இயேசு கடுமையாகச் சாடுகின்றார்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், பிறரிடம் இருக்கின்ற நிறைகளை மட்டுமே பார்ப்போம். நன்மை செய்வதில் கருத்தாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இறந்த ஆன்மாக்களின் நினைவு நாள் (நவம்பர் 02)
நிகழ்வு

பெருநகர் ஒன்றில் சிறிய மருத்துவமனை ஒன்று இருந்தது. அந்த மருத்தவமனையின் அவரசச் சிகிச்சைப் பிரிவில் இறக்கும் தருவாயில் நோயாளி ஒருவர் இருந்தார். அவர், தான் இறந்த பிறகு என்ன ஆவோமோ என்று பயந்துகொண்டே இருந்தார். அப்போது அங்கு வந்த தலைமை மருத்துவரிடம் நோயாளி, "ஐயா! நான் இறப்பதைக் குறித்து பயப்படவில்லை, ஆனால் நான் இறந்தபிறகு என்ன ஆவேனோ என்பதை நினைக்கும்போதுதான் எனக்கு பயமாகக் இருக்கிறது" என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு அவர் மருத்துவரிடம், "நீங்கள்தான் கிறிஸ்தவராயிற்றே! நான் இறந்தபிறகு என்ன ஆவேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?, தெரிந்தால் சொல்லுங்களேன்" என்று கெஞ்சிக் கேட்டார். அதற்கு அந்த மருத்துவர், "எனக்கு ஒன்றும் தெரியாது" என்று பதிலளித்தார்.

அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் இருந்த அறையின் கதவை யாரோ தட்டுவது போன்று இருந்தது. உடனே மருத்துவர் சென்று கதவைத் திறந்தார். அப்போது மறுபக்கத்திலிருந்து மருத்துவரின் செல்ல நாயானது அவர்மீது வந்து அன்போடு பாய்ந்தது. அவர் அதனை அன்போடு தாங்கிக்கொண்டார். பின்னர் நோயாளியிடம் திரும்பி வந்த மருத்துவர் இவ்வாறு பேசத் தொடங்கினார், "ஐயா! உங்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய நாய் இந்த அறைக்குள் இதற்கு முன்பு வந்ததில்லை, இந்த அறை எப்படி இருக்கும் என்பதுகூட அதற்குத் தெரியாது. ஆனால் நான் இந்த அறையின் கதவைத் திறந்தபோது அது என்மீது வேகமாகப் பாய்ந்தது. அதற்குத் தெரிந்திருக்கிறது இந்த அறையில் அதன் தலைவனாகிய நான் இருக்கிறேன் என்று. இது போன்றுதான் இறப்புக்குப் பிறகு என்ன ஆவீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இறப்புக்குப் பிறகு எல்லாம் வல்லவராகிய ஆண்டவரைச் சந்திப்பீர்கள் என்பது மட்டும் உறுதி" என்றார்.

இவ்வார்த்தைகளை கேட்டபிறகு இறக்கும் தருவாயில் இருந்த அந்த நோயாளி, தான் இறந்த பிறகு ஆண்டவரைச் சந்திக்க இருக்கின்றோம் என்பதை நினைத்து ஆறுதல் அடைந்தார். இறந்த பிறகு கிறிஸ்துவோடு கடவுளோடு - இருக்கப் போகிறோம் என்ற பவுலடியாரின் வார்த்தைகளுக்கு (பிலி 1:23) இந்த நிகழ்வு எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.



வரலாற்றுப் பின்னணி

இன்று நாம் இறந்த ஆன்மாக்களின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் நம்முடைய குடும்பங்களில் மரித்த அன்பர்கள், நம்மைவிட்டுப் பிறந்த நண்பர்கள், உற்றார் உறவினார்கள், யாரும் நினையாத ஆன்மாக்களை நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.

இறந்தவர்களை நினைவுகூர்ந்து பார்த்து, அவர்களுக்குப் பலி ஒப்புக்கொடுக்கும் வழக்கம் மக்கபேயர் காலத்திலிருந்து இருப்பதை விவிலியத்திலிருந்து நாம் படித்தறிகின்றோம். யூதா மக்கபேயு போரில் இறந்தவர்களின் பாவம் போக்கும் பலியாக ஆறு கிலோ வெள்ளி சேகரித்து, அதனை எருசலேம் திருக்கோவிலுக்கு அனுப்பி வைக்கிறான். அவன் இப்படிச் செய்ததற்குக் காரணம் இறந்தவர்கள் உயிர்பெற்று எழுவார்கள் என்பதில் அவன் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தான். (2 மக் 12: 46). இறந்தவர்களுக்கு என்று தனியொரு நாளை ஒதுக்கி, அதில் அவர்களை நினைவுகூர்ந்து பார்க்கும் பழக்கம் கிபி. ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்டது. 998 ஆம் ஆண்டு குலூனியில் இருந்த ஓடிலோ என்ற துறவி, தன்னுடைய சபைத் துறவிகளிடம் அனைத்துப் புனிதர்களுக்கு அடுத்தநாளில் அதாவது நவம்பர் 2 ஆம் நாள் இறந்தவர்காக பலி ஒப்புக்கொடுக்கவேண்டும் என்ற ஆணையை விடுத்தார். அவருடைய ஆணைக்கிணங்க சபைத் துறவிகளும் அன்றைய தினத்தில் இறந்தவர்களுக்காக பலி ஒப்புக்கொடுத்தார்கள். பதினான்காம் நூற்றாண்டில் துறவிகள் மட்டுமல்லாது, எல்லா மக்களுக்கும் இதனைக் கொண்டாடும் வழக்கம் உண்டானது.

15 ஆம் நூற்றாண்டில் டொமினிக் சபையைச் சேர்ந்த துறவிகள் இறந்த ஆன்மாக்களின் நினைவு நாளில் மூன்று திருப்பலிகள் நிறைவேற்றினார்கள். ஒன்று இறந்த ஆன்மாக்களுக்காகவும் இரண்டு தங்களுடைய சொந்தக் கருத்துகளுக்காகவும் மூன்றாவது திருத்தந்தையின் கருத்துகளுக்காகவும் நிறைவேற்றினார்கள். 1915 ஆம் ஆண்டு அப்போது இருந்த திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் இப்படி மூன்று திருப்பலிகளை நிறைவுவேற்றுவோருக்கு பரிபூரணப் பலன் கிடைக்கும் என்றும் அறிவிப்பு விடுத்தார். அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2 ஆம் நாள் இறந்த ஆன்மாக்களின் நினைவு நாளைக் கொண்டாடுகின்றோம்.

இவ்விழாவைக் கொண்டாடுவதன் நோக்கம்

இவ்விழாவைக் கொண்டாடுவதன் நோக்கங்களில் ஒன்று இறந்த ஆன்மாக்களுக்காக, அதுவும் குறிப்பாக உத்தரிக்கும் தளத்தில் உள்ள யாரும் நினையாத ஆன்மாகளுக்காக ஜெபிக்கவேண்டும் என்பதுதான்.

புனிதர்கள் சமூக உறவை நம்புகின்றோம் என்று விசுவாசப் பிரமாணத்தில் சொல்கிறோம். இதன் அர்த்தம் என்ன?. மூன்று விதமான திருச்சபை இருப்பதாக மறைவல்லுநர்கள் சொல்கிறார்கள். ஒன்று விண்ணகத்தில் இருக்கும் வெற்றிபெற்ற திருச்சபை, இரண்டு மண்ணகத்தில் இருக்கும் போராடும் திருச்சபை, மூன்றாவது உத்தகரிக்க தளத்தில் உள்ள துன்புறும் திருச்சபை. விண்ணகத்தில் இருக்கும் வெற்றிபெற்ற திருச்சபையான புனிதர்கள் கூட்டத்திற்காக நாம் ஜெபிக்கவேண்டியதில்லை, மாறாக அவர்களுடைய பரிந்துபேசுதல் தான் நமக்குத் தேவையாக இருக்கின்றது. ஆனால் துன்புறும் திருச்சபை எனப்படும் உத்தரிக்க தளத்தில் இருப்போருக்கு நம்முடைய வேண்டுதல் நிச்சயம் தேவைப்படுகின்றது. நாம் அவர்களுக்காக ஜெபங்களை, வேண்டுதல்களை, பூசைப் பலிகளை ஒப்புக்கொடுக்கின்றது அவர்களுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று அவர்கள் விண்ணகத் திருக்கூட்டத்தில் சேர்வார்கள் என்பது நமக்கு நம்பிக்கையாக இருக்கின்றது. ஆகவே. நாம் உத்தரிக்க தளத்தில் இருக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிப்பது நமது தலையாக கடமையும் நோக்கமுமாக இருக்கின்றது.

இவ்விழாவைக் கொண்டாடுவதன் இன்னொரு நோக்கம் நாமும் ஒருநாள் இறந்து, உயிர்த்தெழுந்து விண்ணகத் திருக்கூட்டத்தில் சேர்வோம் என்ற நம்பிக்கையாகும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" (யோவா 11:25) என்று. நாம் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து வாழும்போது இறந்தாலும் வாழ்வோம் என்பது உறுதியாக இருக்கின்றது. "நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்துபோனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனித கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா!" என்பார் தூய பவுல் (2 கொரி 5:1. ஆகையால் நம்முடைய வாழ்வு இந்த மண்ணுலக வாழ்வோடு முடிந்துபோவதல்ல, மாறாக விண்ணக வாழ்வு என்ற ஒன்று உண்டு. என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இறந்த ஆன்மாக்களின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் இவ்விழா நமக்குக் கற்றுத் தரும் பாடம் என்ன என்பதைச் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


இறப்பைக் குறித்த அச்சத்தைத் தவிர்ப்போம்


மனிதர்கள் இன்றைக்கு இறப்பை அல்லது சாவைக் குறித்து பயந்துகொண்டிருக்கிறார்கள். இறப்பு எப்படி இருக்குமோ?, இறப்புக்குப் பின்னால் என்ன நடக்குமோ என்பதுதான் ஒவ்வொருவரின் அச்ச உணர்வாக இருக்கின்றது. ஆனால், கிறிஸ்தவர்களாக நாம் சாவைக் கண்டு பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் இறப்பு என்பது ஒரு கடத்தல்தான்; இறப்பில் நம்முடைய வாழ்வு மாறுபடுகிறதே அன்றி அழிந்துபோவதில்லை. ஆகவே, நாம் சாவைத் துணிவோடு ஏற்றுகொள்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு யூத கதை இது. யூத இராபி ஒருவர் தொழுகைக்கூடத்தில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் அவருடைய இரண்டு பிள்ளைகளைக் காணவில்லை, அவருடைய மனைவி மட்டுமே இருந்தார். அவர் அவருடைய மனைவியிடத்தில் பிள்ளைகள் எங்கே என்று கேட்க, அவர் எதுவும் பேசாது சிறிது நேரம் அமைதியாக இருந்து பின்னர் பேசத் தொடங்கினார். "நீண்ட நாட்களுக்கு முன்பாக தூரத்து உறவினர் ஒருவர் என்னிடத்தில் இரண்டு வைரக்கற்களைக் கொடுத்துவிட்டு, அதனை பத்திரமாக வைத்திருக்குமாறு சொல்லிவிட்டுப் போனார். நானும் அதனை இந்நாள் வரை பத்திரமாகப் பாதுகாத்து வந்தேன்.. இன்றைக்கு நீங்கள் தொழுகைக்கூடத்திற்குப் போனபின்பு என்னிடத்தில் இரண்டு வைரக்கற்களைக் கொடுத்த அந்த தூரத்து உறவினர், வைரக்கற்களைத் திரும்பக் கேட்டார்". இப்படிச் சொல்லிவிட்டு அவர் தன்னுடைய கணவரிடம், "நான் அதனை அவரிடம் திரும்பக் கொடுக்கணுமா? வேண்டாமா?" என்று கேட்டார். அதற்கு இராபி, "கொடுத்ததைத் திரும்பக் கொடுப்பதுதானே முறை, இதில் என்ன சந்தேகம்?" என்றார்.

இதைக் கேட்ட இராபியின் மனைவி, தன்னுடைய கணவரை வீட்டின் உள்ளறைக்கு அழைத்துச் சென்று, இறந்து போய் இருந்த இரண்டு பிள்ளைகளையும் சுட்டிக்காட்டி, "நம்மிடம் இரண்டு பிள்ளைகளை ஒப்படைத்த கடவுள், அதனைத் திரும்பக் கேட்டார், நானும் அதனை அப்படியே தந்துவிட்டேன்" என்றார். எல்லாவற்றையும் கேட்டு அந்த இராபி கண்கலங்கி நின்றார். இருந்தாலும் கடவுள் கொடுத்ததை கடவுள்தானே எடுத்திருக்கின்றார் என்ற மனத் தெளிவோடு இருந்தார்.

இறப்பு என்பது கடவுளோடு சேர்வதற்கான ஒரு கடத்தல் என்பதைத் தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. ஆகவே, நாமும் இறப்பு என்பதை அழிவாகப் பார்க்காமல், அதனை ஒரு கடத்தலாக, மாற்றமாகப் பார்க்கும்போது இறப்பைக் குறித்த தேவையற்ற அச்சம் விலகும் என்பது உறுதி.


மண்ணுலக வாழ்வை அர்த்தப்படுத்துவோம்


இறப்பு என்பது நம்முடைய கையில் இல்லை. ஆனால் இறப்புக்குப் பிறகான வாழ்வு விண்ணக மகிமை - என்பது நம்முடைய கையில் இருக்கின்றது. நாம் இந்த மண்ணக வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும்போது இறைவன் தரும் விண்ணக மகிமையைப் பெற்றுக்கொள்வது உறுதி. ஆகவே, இறந்த ஆன்மாக்களின் நினைவு நாளான இன்று, உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிப்போம்; நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்பதை உணர்ந்தவர்களாய் இறப்பைக் குறித்த அச்சத்தைத் தவிர்ப்போம், நமது மண்ணக வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம், அதன்வழியாக இறைவன் அளிக்கும் விண்ணக வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு

இறந்த நம் முன்னோர்களின் நினைவைக் கொண்டாடுகிறோம்.

 இரண்டாம் வாசகம் (உரோ 5:5-11)ஐ மையமாக வைத்து இந்த நாளின் பொருளை அறிந்துகொள்ள முயல்வோம்.

உரோமை 5:5ஐ கொஞ்சம் முன்னால் நீட்டிக்கொள்வோம்:

'... ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும்,தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என காத்திருக்கிறோம். அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது.'

துன்பம் - எல்லா வகையான வலி, கஷ்டம், எடுக்க வேண்டிய முடிவுகள், அந்த முடிவுகள் அடுத்தவர் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம்.

மன உறுதி - அதாவது, கையில் காயம் பட, காயம் பட எப்படி கை மரத்துப் போகிறதோ (உறுதி பெறுகிறதோ), அது போல அல்லதை மறுத்து, நல்லதைச் செய்வதால் நம் மனம் அடையும் உறுதியான நிலை.

தகைமை - ஆங்கிலத்தில், கேரக்டர். 'கேரக்டர் இஸ் வாட் யூ ஆர் இன் தெ டார்க்' என்பார்கள். அதாவது, யாரும் பார்க்கவில்லை என்று நினைக்கும்போது நாம் எப்படி இருக்கிறோமோ அதுதான் நம் கேரக்டர். சாப்பாட்டு அறையில் எல்லாரும் இருக்க கரண்டியால் காய்கறியை எடுக்கும் நான், சுற்றிமுற்றும் பார்த்துவிட்டு, யாரும் இல்லை என்று தெரிந்து, என் கையால் பாத்திரத்தில் இட்டு எடுக்கிறேன் என்றால், அங்கே தூய்மை என்பது குணநலன் அல்லது குணம் அல்ல. மாறாக, அது நான் அடுத்தவர்களுக்காக அணியும் முகமூடி. ஆக, இயல்பாகவே என்னுள் உள்ள குணம்.

எதிர்நோக்கு - அதாவது, எதிர்நோக்கு இருந்தால் மட்டுமே நம்மால் வாழ முடியும். எதிர்நோக்கு என்றால் காத்திருத்தல். நான் நல்லது செய்யும்போது அடுத்தவர் என்னைப் பாராட்டுவார்கள் என்ற சின்ன எதிர்நோக்கிலிருந்து, இறைவன் எனக்கு விண்ணகம் தருவார் என்ற பெரிய எதிர்நோக்கு வரை அனைத்தும் எதிர்நோக்குதான்.

நாளைய முதல் திருப்பலியில் நாம் வாசிக்கும் நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 25:31-46) ஆண்டவர் - அரசர் - வலப்பக்கமும் இடப்பக்கமும் மனிதர்களைப் பிரித்து அவர்களோடு உரையாடுவதையும், அந்த உரையின் பின்புலத்தில் அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்படுவதையும் பார்க்கிறோம்.

பசித்தோர்க்கு உணவு, தாகமுற்றோருக்கு தண்ணீர், அந்நியருக்கு வரவேற்பு, ஆடையற்றவருக்கு ஆடை, நோயுற்றோருக்கு கவனிப்பு, சிறையில் இருந்தவரைச் சந்தித்தல் என செயல்கள் செய்யப்படுவது தனக்கே செய்யப்படுவதாகச் சொல்கிறார் ஆண்டவர்.

ஆண்டவர் எதிர்பார்க்கும் செயல்கள் எதுவும் நாம் செய்யும் செயல்கள் பட்டியலில் இல்லை: சமைப்பது, உண்பது, படிப்பது, வேலைக்குச் செல்வது, திருமணம் செய்வது, அருள்பணி ஏற்பது, டிவி பார்ப்பது என நாம் செய்யும் எந்தச் செயலும் ஆண்டவரின் லிஸ்டில் இல்லை. ஏனெனில், இவை அனைத்தும் செய்பவர் மையச் செயல்கள். ஆனால், ஆண்டவர் குறித்துக்காட்டும் செயல்கள் பிறர்மையச் செயல்கள்.

எல்லாரும் பிறர்மையம் கொண்டிருக்க வேண்டும் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்? என்ற கேள்வியும் இங்கே வருகிறது.

ஆனால், ஆண்டவர் காட்டும் செயல்களைச் செய்வது செய்பவருக்குத் துன்பம் தருகிறது.

இத்துன்பம் மனவுறுதியையும், இம்மனவுறுதி தகைமையையும், இத்தகைமை எதிர்நோக்கையும் தருகிறது.

எதிர்நோக்கு நமக்கு ஏமாற்றம் தராது. ஏனெனில் அவர் நம்மை வலப்பக்கம் கூட்டிக்கொள்வார்.

இவ்வுலகில் துன்பம் அனுபவிக்காதவர்கள், உத்தரிக்கிற நிலையில் சிறிதுகாலம் துன்பம் அனுபவிக்கிறார்கள் என்பது நம் திருஅவையின் போதனை. ஆக, பாதி வழி வந்த இவர்களை மீதி வழி நகர்த்துகிறது இவர்கள் சார்பாக நாம் மேற்கொள்ளும் துன்பங்கள். துன்பங்களை நாம் பட்டு பலன்களை இவர்களுக்குக் கொடுக்கிறோம். இந்த ஒன்றே நம்மை புனிதர்கள் ஆக்கிவிடுகிறது.

ஏனெனில், பவுல் சொல்வதுபோல, 'ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால் இயேசு பாவிகளுக்காக உயிர் கொடுத்தார்.' உத்தரிக்கிற நிலையில் இருப்பவர்களுக்காக நாம் துன்பப்படும்போது நாம் அவர்களுக்கு உயிர்கொடுக்கிறோம்.

'உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!' என சில ஆலயங்களில் நான் கேட்டதுண்டு.

இந்த ஆன்மாக்கள் ஆண்டவரைப் பார்த்துவிட்டன. ஆனால் பாதி வழியில் நிற்கின்றன.

அவரைப் பார்த்துவிட்டதால் இவர்கள் பாக்கியசாலிகள்.

பாதிவழி நிற்பவர்கள் மீதி வழி நகர்த்தப்படும்போது, நாமும் கொஞ்சம் நம் துன்பம், மனவுறுதி, தகைமை, எதிர்நோக்கு பற்றி கருத்தாய் இருத்தல் நலம்.


Fr. Yesu Karunanidhi

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!