|
30 நவம்பர் 2018 |
|
பொதுக்காலம்
34ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
புனித அந்திரேயா - திருத்தூதர்
விழா
=================================================================================
அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு
கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்?
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
10: 9-18
சகோதரர் சகோதரிகளே, 'இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிட்டு,
இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர
நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு
ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர்.
ஏனெனில், "அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக
மாட்டார்" என்பது மறைநூல் கூற்று. இதில் யூதர் என்றோ கிரேக்கர்
என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி
மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். "ஆண்டவரின்
திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்"
என்று எழுதியுள்ளது அல்லவா?
ஆனால் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு
அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது
எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி
அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு
அறிவிப்பார்கள்?
இதைப் பற்றியே, "நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை
அழகாய் இருக்கின்றன" என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆயினும்
எல்லாருமே நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதைக் குறித்தே எசாயா, "ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர்
யார்?" என்று முறையிடுகிறார். ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான்
நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான்
அதைக் கேட்க வாய்ப்புண்டு. அப்படியானால், அவர்கள் கேள்விப்படவில்லை
என்று சொல்ல முடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், "அவர்களது
அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவர்கள் கூறும் செய்தி உலகின்
கடை எல்லை வரை எட்டுகின்றது."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 19:
1-2. 3-4ab (பல்லவி: 4a)
=================================================================================
பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி
அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும்
அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும்
அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி
3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல்
செவியில் படுவதுமில்லை. 4யb ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும்
சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது.
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 19
அல்லேலூயா, அல்லேலூயா! என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப்
பிடிப்பவர் ஆக்குவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 18-22
அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர்
இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர்
அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை
வீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, "என்
பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்"
என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார்.
அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும்
ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது
பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.
உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப்
பின்பற்றினார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
புனித அந்திரேயா - திருத்தூதர் விழா
இன்று திருச்சபையானது திருத்தூதரான தூய அந்திரேயாவின் விழாவை
மகிழ்வோடு கொண்டாடுகின்றது. இவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த
நல்லநாளில் இவருடைய வாழ்வும், பணியும் நமக்கு என்ன செய்தியைத்
தருகின்றன என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
அந்திரேயா பெத்சாய்தாவைக் சார்ந்தவர்; பேதுருவின் சகோதரர்.
மீன்பிடித் தொழிலை செய்துகொண்டிருந்த இவரை ஆண்டவர் இயேசு தன்னுடைய
பணிக்காக அழைகிறார். இயேசு அழைத்தவுடனே அந்திரேயா எல்லாவற்றையும்
விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கிறார்.
விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி அந்திரேயா தொடக்கத்தில்
திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தார். ஒருநாள் ஆண்டவர் இயேசு
வழியோரமாக சென்றுகொண்டிருக்கும்போது திருமுழுக்கு யோவான் தன்னுடைய
சீடர்களிடம் (அந்திரேயா அதில் உள்ளடக்கம்), "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி"
என்று இயேசுவை சுட்டிக்காட்டுகிறார். உடனே அந்திரேயா இயேசுவிடம்,
"ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்க, அவர்
"வந்து பாரும்" என்று சொல்கிறார். ஆதலால் அந்திரேயா ஆண்டவர் இயேசுவோடு
தங்கி இறையனுபவம் பெறுகிறார். அந்த அனுபவத்தை தன்னுடைய சகோதரரான
பேதுருவிடம் எடுத்துச் சொல்கிறார்; அவரை இயேசுவிடம் அழைத்து வருகின்றார்
( யோவா 1:35-42)
விவிலியம் முழுமைக்கும் அந்திரேயா மக்களை ஆண்டவர் இயேசுவிடம்
இயேசுவிடம் அழைத்து வருபவராக/ அறிமுகப்படுத்துபவராக இருக்கிறார்.
பேதுருவை இயேசுவிடம் அறிமுகப்படுத்தியது போன்று பலரையும் இயேசுவிடம்
அறிமுகப்படுத்துகிறார். ஒருமுறை ஆண்டவர் இயேசு தன்னைப் பின்பற்றி
வந்த மக்களுக்கு உணவிட நினைத்தபோது அந்திரேயா ஒரு சிறுவனைச்
சுட்டிக்காட்டி, "இங்கே சிறுவன் ஒருவனிடத்தில் ஐந்து அப்பங்களும்,
இரண்டு மீன்களும் இருக்கின்றன" என்று சொல்லி அவனை இயேசுவிடம்
அறிமுகப்படுத்துகிறார்; மிகப்பெரிய அற்புதம் நிகழக் காரணமாக இருக்கின்றார்
(யோவான் 6:9)
அதேபோன்று எருசலேம் நகரைச் சேர்ந்த கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக்
காண நினைத்தபோது அவர்கள் பிலிப்பிடம் வருகிறார்கள். பிலிப்போ
அவர்களை அந்திரேயாவிடம் அழைத்துவருகிறார். அந்திரேயா அவர்களை
இயேசுவிடம் அழைத்து வருகின்றார். இவ்வாறு அந்திரேயா மக்களை இயேசுவிடம்
அழைத்து வந்து, அறிமுகப்படுத்துவதில் சிறந்தவராக விளங்கியதால்
அவர் "Introducer அறிமுகம் செய்பவர்" என்ற சிறப்புப் பெயரால்
அழைக்கப்படுகின்றார்.
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பிறகு அந்திரேயா தன்னுடைய பெயருக்கு
ஏற்ப மிகுந்த ஆற்றலுடன் கப்பதோசியா, கலாத்தியா, பித்தினியா,
சின்ன ஆசியா, மாசிதோனியா போன்ற பல்வேறு இடங்களில் நற்செய்திப்
பணிசெய்ததாக திருச்சபை மரபு சொல்கின்றது.
ஒருமுறை பாத்ராஸ் என்னும் இடத்தில் நற்செய்திப் பணியாற்றிக்கொண்டிருக்கும்
போது அந்நகரின் ஆளுநராக இருந்த ஏஜெடிஸ் என்பவரின் மனைவி
மாக்ஸ்மில்லா நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாய் இருப்பதை அறிந்தார்.
எனவே அந்திரேயா அவருடைய இடத்திற்குச் சென்று, அவரைக் குணப்படுத்தினார்.
உடனே அவர் கிறிஸ்துவைத் தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ
மதத்திற்கு மாறினார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட ஆளுநன் சினம்கொண்டு
அந்திரேயாவிடம், "நீ கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதை
நிறுத்தவில்லை என்றால், உன்னைச் சிறையில் அடைப்பேன்" என்று பயமுறுத்தினான்.
ஆனால் புனிதரோ நற்செய்தியை அறிவிப்பதை நிறுத்தவே இல்லை. இதனால்
அவன் அவரைச் சிறையில் அடைத்து கடுமையாகச் சித்ரவதை செய்தான்.
சில நாட்களுக்குப் பிறகு அங்கு வந்த உரோமைப் படைவீரர்கள்
பெருக்கல் வடிவில் இருந்த சிலுவையில் அவரை அறைந்து
துன்புறுத்தினார்கள். அப்போதும் அவர் இரண்டு நாட்களுக்கு அங்கு
வந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவித்துக்கொண்டே இறந்தார். அந்திரேயா
மறைசாட்சியாக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்த நாள் கி.பி.70 ஆம்
ஆண்டு, நவம்பர் மாதம் 30 ஆம் நாள்.
இது நடந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்காட்லாந்து மக்கள் அந்திரேயாவை
பற்றிக் கேள்விப்பட்டு, அவருடைய உடலை கான்ஸ்டான்டி நோபிளுக்கு
கொண்டுவந்தார்கள். அன்று முதல் ஸ்காட்லாந்து மக்கள் அந்திரேயாவை
பாதுகாவலராகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இவ்வாறாக அந்திரேயா தான் பெற்றுக்கொண்ட இறையனுபவத்தை எல்லா மக்களுக்கும்
எடுத்துரைத்து, அவர்களைக் கிறிஸ்துவின்பால் கொண்டுவந்து, மிகச்
சிறந்த ஒரு மறைபணியாளராக விளங்கினார். தூய அந்திரேயாவின்
விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள
வேண்டிய பாடம் ஒன்றே ஒன்றுதான். அது ஆண்டவர் இயேசுவைப் பற்றிய
நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்பதாகும். அந்திரேயா கடல்
கடந்து, நாடு கடந்து எல்லா மக்களுக்கும் நற்செய்தியை அறிவித்தார்.
அவரைப் போன்று நாமும் நற்செய்தியை அறிவிக்க முன்வர வேண்டும்.
உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
முதல் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், "இயேசுவே ஆண்டவர் என
வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச்
செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்.
இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார
அறிக்கையிடுவோர் மீட்பு பெறுவோர்" என்று. இன்றைய விழா நாயகரான
தூய அந்திரேயா ஆண்டவர் இயேசுவை மெசியா என நம்பினார். அதனை எல்லா
மக்களுக்கு அறிவித்தார். நாமும் அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவை
நம்பி, அதனை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம்.
நமது நற்செய்தி அறிவிப்புப் பணி எப்படி இருக்கவேண்டும் என்பதற்காக
சொல்லப்படும் ஒரு நிகழ்வு.
சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள சிகாகோவில்
வாழ்ந்து வந்த யூதன் ஒருவன் தன்னுடைய மகனை இஸ்ரேயலுக்கு அனுப்பி
யூத மதத்தையும், அதன் மரபுகளையும் கற்றுவருமாறு பணித்தான். அவனும்
இஸ்ரயேலுக்குச் சென்று யூத மதத்தைப் பற்றி கற்றுக்கொள்ள புறப்பட்டான்.
இரண்டு மூன்று ஆண்டுகள் சென்றன. அதன்பின்னர் அவன் தன்னுடைய
சொந்த நாடான அமெரிக்காவிற்கு திரும்பி வந்தான். யூதனாக அல்ல,
ஒரு கிறிஸ்தவனாக.
இதைக் கண்ட அந்த இளைஞனுடைய தந்தைக்கு சரியான கோபம் வந்தது.
"நான் உன்னை யூத மத்தைப் பற்றி கற்றுக்கொள்ள அனுப்பி வைத்தால்,
நீயோ கிறிஸ்தவனாக மாறி வந்திருக்கிறாயே!. என்ன கோலம்" என்று
திட்டித்தீர்த்தார். தன்னுடைய ஆற்றாமையை தன்னுடைய யூத நண்பரிடம்
கொட்டித்தீர்த்தார். அதற்கு அவருடைய நண்பர், "நீ உன்னுடைய மகனை
இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு முன்பாக என்னிடம் ஒரு வார்த்தை
கேட்டிருக்கவேண்டும். ஏனென்றால், என்னுடைய மகனையும் சில ஆண்டுகளுக்கு
முன்பாக யூத மதத்தைக் கற்றுக்கொள்ள அங்கே அனுப்பி வைத்தேன்.
அவனும் உன்னுடைய மகனைப் போன்று இன்றைக்கு ஒரு கிறிஸ்தவனாக மாறி
நிற்கிறான்" என்று தன்னுடைய வேதனையை எடுத்துச் சொன்னார்.
இப்படி இரண்டு பேருமே ஏமாந்துபோனதை நினைத்து வருத்தப்பட்டார்.
பின்னர் அவர்கள் இருவரும் ஒரு யூத ராபியிடம் தங்களுடைய நிலையை
எடுத்துச் சொன்னார்கள. அதற்கு அவர், "அட முட்டாள்களே, நீங்கள்
உங்களுடைய மகன்களை இஸ்ரயேலுக்கு அனுப்புவதற்கு முன்பாக என்னிடம்
ஒரு வார்த்தை கேட்டிருக்கவேண்டும். ஏனென்றால் நாமும் உங்களைப்
போன்று என்னுடைய மகனை இஸ்ரயேலுக்கு யூத மதம் பற்றி கற்றுக்கொள்ள
அனுப்பி வைத்தேன். ஆனால் அவனோ உங்களுடைய மகன்களைப் போன்று இப்போது
ஒரு கிறிஸ்தவனாக மாறி நிற்கிறான்" என்று தன்னுடைய வேதனையைக்
கொட்டித் தீர்த்தார். இதனால் அவர்கள் மூவருக்கும் என்ன செய்வதென்றே
தெரியவில்லை.
அப்போது அவர்களில் ஒருவர், "நாம் இதை யாவே கடவுளிடம் சொல்லி
முறையிடுவோம். அவர் நம்முடைய கூக்குரலுக்கு பதில்தருவார்" என்று
சொல்ல, மற்ற இருவரும் அதனை ஏற்றுக்கொண்டு நிகழ்ந்த எல்லாவற்றையும்
யாவே கடவுளிடம் எடுத்துச் சொன்னார்கள். அதற்கு அவர் மிகவும் வருத்ததோடு,
உங்களுக்கு ஒரு குறை என்றால் என்னிடம் வருவீர்கள். எனக்கு ஒரு
குறைஎன்றால் நான் யாரிடம் சொல்லி முறையிடுவேன். உங்களைப்
போன்று நானும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக என்னுடைய மகன்
இயேசுவை இஸ்ரயேலுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அவனும் ஒரு
கிறிஸ்தவனாக மாறிப்போனான்" என்றார். இதைக் கேட்டு அவர்கள் எதுவும்
பேசாது நின்றார்கள்.
நற்செய்தி அறிவிப்புக்கு உள்ள ஆற்றல் எப்படி இருக்கிறது என்பதை
இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகிறது.
ஆண்டவர் இயேசு உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி
அறிவியுங்கள்" என்று சொன்னார். நாமும் தூய அந்திரேயாவைப்
போன்று இயேசுவை பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
புனித
அந்திரேயா - திருத்தூதர் விழா
இன்று திருச்சபையானது திருத்தூதரும், மறைசாட்சியுமான தூய அந்திரேயாவின்
விழாவைக் கொண்டாடுகின்றது.
இவர் திருத்தூதர் பேதுருவுக்கு அண்ணன். "வீர மனிதன்" என்று தன்னுடைய
பெயருக்கு ஏற்ப வாழ்ந்தவர். தொடக்கத்தில் இவர் திருமுழுக்கு
யோவானிடம் சீடராக இருந்தார். அப்போது இயேசு கடந்துசெல்கிறபோது
திருமுழுக்கு யோவான் அவரைப் பார்த்து, "இவரே கடவுளின் ஆட்டுக்குட்டி"
என்று சுட்டிக்காட்டுகிறார். உடனே திருமுழுக்கு யோவானின் சீடராக
இருந்த அந்திரேயாவும், இன்னொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்கின்றனர்;
அவரோடு தங்குகின்றனர்; இயேசுவே மெசியா எனக் கண்டுணர்ந்து
கொள்கின்றனர். அந்திரேயாவோ தனது சகோதரன் பேதுருவிடம் சென்று
"நாங்கள் மெசியாவைக் கண்டோம்" என்று சொல்லி, அவருக்கு இயேசுவை
அறிமுகப்படுத்துகிறார். (யோவான் 1:35 41).
அதே போன்று கலிலேயாக் கடலோரமாய் நின்று பேதுருவும், இவரும்
மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அவ்வழியாய் வரும் இயேசு,
"என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள், நான் உங்களை மனிதர்களைப்
பிடிப்பவர் ஆக்குவேன் என்று சொன்னபோது அவர்கள் எல்லாவற்றையும்
விட்டுவிட்டு இயேசுவை பின்தொடர்ந்து செல்கிறார்கள். இவ்வாறு
பேதுரு உட்பட அந்திரேயா ஆண்டவர் அழைத்தவுடன் எல்லாவற்றையும்
விட்டுவிட்டு, அவரைப் பின்தொடர்கிறார்கள் .
இயேசுவின் பணிவாழ்வின்போதும் அந்திரேயா ஒருசில இடங்களில்
முக்கியத்துவம் பெறுவதையும் நற்செய்தியிலே வாசிக்கின்றோம்.
யோவான் நற்செய்தி 6:1-15 ல் ஆண்டவர் இயேசு பாலைவனத்தில்
போதித்துக் கொண்டிருக்கும்போது மக்கள் பசியால் வாடுவதை உணர்ந்து,
அவர்களுக்கு உணவிட நினைக்கிறார். அப்போது அந்திரேயாவோ, "இங்கே
சிறுவனிடத்தில் ஐந்து அப்பங்களும், இரண்டு மீண்டுகளும் இருக்கின்றன"
என்று சொல்லி இயேசு அப்பங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு உறுதுணையாக
இருக்கின்றார்.
ஒருமுறை கிரேக்கர்கள் இயேசுவைக் காணவேண்டும் என்று பிலிப்பிடம்
வருகிறபோது, பிலிப்பு அவர்களை அந்திரேயாவிடம் அழைத்து வர, அவர்
அவர்களை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு போகிறார். இப்படியாக நற்செய்தி
முழுவதும் மக்களை இயேசுவிடம் அழைத்துச்செல்லும் பணியை சிறப்பாக
செய்கின்றார். பேதுருவையும் இவர் இயேசுவிடம் அழைத்துச்
சென்றார் என்று மேலே வாசித்ததை இங்கே நினைவுபடுத்திகொள்வோம்.
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு இவர் சித்தியாவிற்கு
(ரஷ்யா) நற்செய்தி அறிவிக்கச் சென்றார்; அங்கே பைசாந்திய
நகரின் ஆயராக இருந்தார் என்று திருச்சபையின் தந்தைகளில்
ஒருவரான ஆரிஜின் குறிப்பிடுவார். மேலும் இவரைப் பற்றிய செய்தி
அந்திரேயாவின் பணி என்ற திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத
நூலிலிருந்து அதிகமாக படித்தறிய முடிகிறது.
அந்திரேயா பார்வையற்றவருக்கு பார்வையளித்தார் என்றும்,
இறந்தவரை உயிர்ப்பித்தார் என்றும், பேய்களை ஓட்டினார் என்றும்
அந்த நூலிலே படிக்கின்றோம். சித்தியாவில் நற்செய்தி அறிவித்த
அந்திரேயா பத்தாரஸ் என்ற இடத்திற்கு நற்செய்தி அறிவிக்கச்
செல்கிறார். அங்கே ஆளுநராக இருந்தவன் ஏஜெரஸ். அவருடைய மனைவி
மாக்சிமில்லா தீராத நோயினால் படுத்தபடுக்கையாய் கிடைந்தபோது
அந்திரேயா அவரைக் குணப்படுத்துகிறார். இதனால் மனமாற்றம் அடைந்த
அவர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றத்
தொடங்கினார். இது பிடிக்காத அவருடைய கணவன் அந்திரேயாவை
சிலுவையில் அறைந்து கொலை செய்யத் தீர்மானித்தான்.
அந்திரேயாவை X வடிவில் இருந்த சிலுவையில் கொல்லத்
திட்டமிட்டான் அந்நகரின் ஆளுநன். இதை அறிந்த அந்திரேயா "ஓ
மாட்சிமை மிகுந்த சிலுவையே, உனக்காகத் தான் நான் இத்தனை
நாள்கள் ஏங்கிக்கொண்டிருந்தேன்" என்று சொல்லி சிலுவைச் சாவை
மிகத் துணிவோடு ஏற்றுக்கொண்டு கி.பி.70 ஆண்டு நவம்பர் 30 ஆம்
தேதி உயிர்துறந்தார்.
அந்திரேயாவின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இவரது வாழ்வு
நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப்
பார்ப்போம். முதலாவதாக இவர் இயேசுவை மெசியா என
அறிந்துகொள்கிறார். அறிந்ததோடு மட்டுமல்லாமல் அதனை தன்னுடைய
சகோதரனான பேதுருவுக்கும் எடுத்துரைத்து, அவரை இயேசுவிடம்
அழைத்துக் கொண்டுவருகிறார்.
நாமும்கூட இயேசுவை மெசியா என ஏற்று, அதனை பிற மக்களுக்கும்
அறிமுகம் செய்ய, அவர்களை நம்பிக்கையில் வளர்க்க
அழைக்கப்படுகின்றோம். உரோமையருக்கு எழுதப்பட்ட
திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்
"இயேசுவே ஆண்டவர் என்று வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரை
கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என்று நம்பி ஏற்றுக் கொள்வோர்
மீட்கப்படுவார்" என்கிறார் தூய பவுலடியார். ஆக, நாம்
ஒவ்வொருவரும் இயேசுவை மெசியா என ஏற்று, அவர் காட்டும் வழியில்
நடக்க முயற்சி செய்யவேண்டும்.
அடுத்ததாக அந்திரேயாவை இயேசு அழைத்தபோது அவர் எல்லாவற்றையும்
விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார். வேறு வார்த்தைகளில்
சொல்லவேண்டும் என்றால் உலக செல்வங்களைத் துறந்து, உண்மையான
செல்வதைப் பற்றிக் கொள்கிறார். நாம் உலக செல்வத்திற்குப்
பின்னாலா? அல்லது உண்மைச் செல்வமாகிய இயேசுவுக்கு பின்னாலா?
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இருபதாம் நூற்றாண்டில் திருச்சபையில் மிகப்பெரிய எழுத்தாளராக
அறியப்பட்டவர் ஹென்றி நூவன். ஒருமுறை சிலர் அவருடைய
எழுத்தாற்றலையும், திறமையையும் பார்த்துவிட்டு அவரை ஹார்வேட்
பல்கலைக்கழகத்திலே பணியாற்றக் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவரோ
எனக்கு எந்தப் பொறுப்பும் தேவையில்லை என்று சொல்லி கனடாவில்
உள்ள டொராண்டோ என்ற இடத்தில் இருக்கும் ஒரு மனவளர்ச்சி குன்றிய
குழந்தைகளுக்கு அருட்பணியாளராக பணியாற்றினார்.
தனக்கு பேரும், புகழும் வந்தாலும் ஆண்டவருக்காக, அவருடைய
மக்களுக்காக மட்டுமே பணிசெய்வேன் என்று சொன்ன ஹென்றி நூவனின்
செயல் உண்மையிலே பாராட்டுக்குரியது. அந்திரேயாவும்
இயேசுவுக்காக மட்டுமே பணிசெய்வேன் என்று எல்லாவற்றையும்
துறந்துவாழ்ந்தார்.
ஆதலால் இவருடைய விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இயேசுவை
மெசியா என ஏற்று, அவரை எல்லா மக்களுக்கும் அறிவிக்கும்
நற்செய்திப் பணியாளர் ஆவோம். இறையருள் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
அறிமுக ஆன்மீகம்
யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா
ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம்
சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்' என்றார்.
பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். (யோவான்
1:40-42அ)
அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,
'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை
அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை
எப்படிப் போதும்?' என்றார். (யோவான் 6:8-9)
கிரேக்கர் சிலர் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த
பிலிப்பிடம் வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்' என்று
கேட்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் அதுபற்றிச் சொன்னார். அந்திரேயாவும்
பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். (யோவான்
12:20-23)
இந்த மூன்று வசனங்களையும் வாசிக்கும்போது என்ன தெரிகிறது? இந்த
மூன்று நிகழ்வுகளிலும் பிரசன்னமாகி இருப்பவர் யார்?
'அந்திரேயா!'
நாளை திருத்தூதர் அந்திரேயாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.
நற்செய்தி நூல்களில் சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்களில் எனக்கு
பிடித்தமானவர்களில் ஒருவர் அந்திரேயா. யோவான் நற்செய்தியில் மட்டும்தான்
இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது. மற்ற நற்செய்தியாளர்கள் இவரின்
பெயரை வெறும் திருத்தூதர்களின் பெயர்களில் ஒன்றாக மட்டுமே
குறிப்பிடுகின்றனர் (காண்க. மத்தேயு 10:1-4, மாற்கு 3:13-19,
லூக்கா 6:12-16). யோவான் மட்டுமே இவரைப் பற்றி எழுதக் காரணம்
ஒருவேளை யோவானுக்கு நெருங்கிய நண்பராகக் கூட இவர் இருந்திருக்கலாம்.
மேற்காணும் மூன்று நிகழ்வுகளிலும் அந்திரேயா ஒரு நல்ல பி.ஆர்.ஓ
வாக இருக்கிறார். இயேசுவின் வாழ்வின் முக்கியமான கட்டங்களில்
மூன்று பேரை அவரிடம் கூட்டி வந்து அறிமுகம் செய்கின்றார். 'ரெஃபரன்ஸ்'
என்பது மேலாண்மையியலில் மிக முக்கியமான ஒன்று. நாம் டிவி,
செய்தித்தாளில் அன்றாடம் நூற்றுக்கணக்கான விளம்பரங்களைப்
பார்க்கின்றோம். அதில் வலம்வரும் பிரபலங்களும், மாடல்களும் நமக்கு
தயாரிப்புகளை 'ரெஃபர்' செய்கிறார்கள் அல்லது 'அறிமுகம்'
செய்கிறார்கள். 'அறிமுகத்தை' பொருத்தே அந்தத் தயாரிப்புகளின்
விற்பனையும் இருக்கிறது. நம்மையறியாமலேயே நாமும் தினமும் பலவற்றை
மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்: 'பட்டு எடுக்கணும்னா
நல்லி சில்க்ஸ் போங்க!' 'நகை வாங்கணும்னா ஜோய் ஆலுக்காஸ்
போங்க!', 'கறி தோசை சாப்பிடனும்னா கோனார் மெஸ் போங்க!', 'அந்தக்
கடை பனியாரம் நல்லா இருக்கும்!', 'இந்த பிராண்ட் ஃபோன் நல்லா
இருக்கும்!' என நாம் அனுபவித்ததை பிறருக்கு அறிமுகம் செய்து
வைக்கிறோம்.
ஆக, அறிமுகம் செய்து வைப்பதற்கு முதல் தேவை அனுபவம். ஒரு தயாரிப்பை
அல்லது சேவையை அல்லது ஒரு நபரின் உறவை நாம் அனுபவித்தால் தான்
அதை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய முடியும். நபர்களை நாம் மற்றவர்களுக்கு
அறிமுகம் செய்து வைக்கும் போது அனுபவம் இன்னும் அதிகத்
தேவையாகிறது. அங்கே இரண்டு வகை அனுபவம் வேண்டும். அறிமுகப்படுத்தும்
நபரையும் நாம் அறிந்திக்க வேண்டும். யாரிடம் அறிமுகப்படுத்துகிறோமோ
அந்த நபரையும் அறிந்திருக்க வேண்டும். அந்திரேயாவுக்கு இந்த அனுபவம்
நிறையவே இருந்திருக்கிறது போல. தன் சகோதரையும் அறிந்து
வைத்திருக்கிறார். கூட்டத்தில் உட்கார்ந்திருந்த சிறுவனையும்
அறிந்து வைத்திருக்கிறார். திருவிழாவிற்கு வந்த கிரேக்கர்களையும்
அறிந்து வைத்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவையும்
அறிந்து வைத்திருக்கிறார்.
இரண்டாவதாக, இன்றைக்கு இயேசுவை நான் மற்றவர்களுக்கு அறிமுகம்
செய்வதை விட, மற்றவர்களை இயேசுவிடம் அறிமுகம் செய்ய வேண்டும்.
இயேசுவை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போதுதான் இந்த
மனமாற்றம், கோயில் இடிப்பு, பலாத்காரம், கொள்ளை போன்ற பிரச்சினைகள்
எல்லாம் வருகின்றன. ஒரு சேஞ்சுக்கு, இருப்பவர்கள் இருப்பது போல
இருக்கட்டும். ஆனா இவங்க எல்லாத்தையும் பற்றி நாம் இயேசுவிடம்
பேசிப் பார்க்கலாமே! இவங்க எல்லாத்தையும் இயேசுவிடம் அறிமுகம்
செய்து வைக்கலாமே!
_ Fr. Yesu Karunanidhi, Madurai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
படிக்கட்டு
நாளை திருத்தூதர் அந்திரேயாவின் திருநாள்.
இவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அண்ணனா? தம்பியா? என்று தெரியவில்லை.
'நம்பிக்கை கொள்ளாமல் எப்படி மன்றாடுவார்கள்?
கேள்வியுறாமல் எப்படி நம்புவார்கள்?
அறிவிக்கப்படாமல் எப்படி கேள்வியுறுவார்கள்?
அனுப்பப்படாமல் எப்படி அறிவிப்பார்கள்?'
(காண் உரோ 10:9-18)
நாளை முதல் வாசகத்தில் பவுல் பயன்படுத்தும் இலக்கிய நடையின் பெயர்
'படிக்கட்டு' (Staircase Rhetoric). அதாவது, முதல் வாக்கியத்தின்
முதல் வார்த்தை அடுத்த வாக்கியத்தின் இறுதி வாக்கியமாக இருக்கும்.
இது ஒரு வகையான பேச்சு நடை. இந்த நடையில் ஒருவர் பேசும்போது,
பேசுபவரும் தான் பேச வேண்டியதை மறந்துவிடாமல் பேசுவார். கேட்பவரும்
எளிதில் நினைவில் கொள்வார்.
நாங்கள் திருத்தொண்டராகும்போது நடைபெற்ற சடங்கிலும், ஆயர் எங்கள்
கையில் விவிலியத்தைக் கொடுத்து இதே போல ஒரு படிக்கட்டு நடை
வாக்கியத்தைச் சொல்வார்:
'வாசிப்பதை நம்பு.
நம்புவதை போதி.
போதிப்பதை வாழ்ந்துகாட்டு'
இதில் நடை 'கண்ணாடியின் பிம்பம்போல' திரும்பி நிற்கிறது. ஒரு
வாக்கியத்தின் கடைசி வார்த்தை அடுத்த வாக்கியத்தின் முதல்
வார்த்தையாக இருக்கிறது.
இவ்வகை நடையில் உள்ள ஆபத்து என்னவென்றால், ஒரு வார்த்தை புரண்டாலும்
அர்த்தம் கிடைக்காமல் போய்விடும்.
திருத்தூது பணி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சீடர்களின்
பணி மட்டுமல்ல.
ஒவ்வொருவரும் படிக்கட்டு போல வரும் இந்தப் பணியில் நமக்கு உரிய
அளவில் திருத்தூது பணி செய்வது அவசியம்.
'தீமைகளை விலக்கி, நன்மைகளைக் கற்றக்கொள்வது' என தனிநபர்
வாழ்வு சார்ந்ததும் திருத்தூதுப்பணியே. |
|