Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   27  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 34ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 14-20

சகோதரர் சகோதரிகளே, யோவான் என்னும் நான் ஒரு வெண் மேகத்தைக் கண்டேன். அதன்மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் வீற்றிருந்தார். அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன.

மற்றொரு வானதூதர் கோவிலிலிருந்து வெளியே வந்து, மேகத்தின்மீது வீற்றிருந்தவரை நோக்கி, "உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது; மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது" என்று உரத்த குரலில் கத்தினார்.

உடனே மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார். மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது. நெருப்பின் மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார்.

அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், "உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது" என்று உரத்த குரலில் கூறினார்.

ஆகவே அந்த வானதூதர் மண்ணுலகின் மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக் குழியில் அவற்றைப் போட்டார். நகருக்கு வெளியே இருந்த அந்தப் பிழிவுக் குழியில் அவை மிதிக்கப்பட்டன. அந்தப் பிழிவுக் குழியிலிருந்து இரத்த வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம், முந்நூறு கிலோ மீட்டர் தொலைக்குப் பாய்ந்தோடியது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  96: 10. 11-12. 13 (பல்லவி: 13b)
=================================================================================
பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.

10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 திவெ 2: 10

அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11


அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.

இயேசு, "இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்" என்றார்.

அவர்கள் இயேசுவிடம், "போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், "நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, "நானே அவர்' என்றும், "காலம் நெருங்கி வந்துவிட்டது' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது" என்றார்.

மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: "நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நீங்கள் ஏமாறதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்"

முன்பொரு காலத்தில் ராஜா ஒருவர் இருந்தார். அந்த ராஜா இருந்த நாட்டில் ஒருசிலர் இருந்தனர். அவர்கள் தங்களை அறிவில் முதிர்ந்தவர்கள், மிகப்பெரியவர்கள், பணக்காரர்கள் என்று பீற்றிக் கொள்வது வழக்கம்.

அவர்களது முகத்திரையைக் கிழிக்க ராஜா முடிவு செய்தார். இதனால் ஒரு நாள் தண்டோரா மூலம், நாட்டில் உள்ள பணக்காரர்கள் அனைவரும் அரசுக்கு பெருமளவு பொருளுதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். உடனே ராஜாவை இந்த போலி அறிவுஜீவிகள் அணுகினர். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ராஜாவிடம் கேட்டனர். அதற்கு ராஜா, "பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பாத்திரத்தில், இன்று இரவு நீங்கள் தனித்தனியாகப் பால் ஊற்றிப் போங்கள். நீங்கள் ஊற்றும் பாலை விற்று, அரசாங்கத்திற்கு நிதி திரட்டிக்கொள்கிறேன்" என்றார். போலி அறிவுஜீவிகள் உடனே கூடி விவாதித்தனர். ராஜா சொல்வது போன்றே செய்துவிடுவோம் என்று முடிவு செய்துவிட்டுக் களைந்துபோனார்கள்.

இதற்குப் பின்னர், தாங்கள் ஊற்றுவது பால்தானா என்பது யாருக்குத் தெரியும் என்று அவர்களாகவே நினைத்துக்கொண்டு, இரவோடு இரவாக வந்து பாலுக்குப் பதில் தண்ணீரை ஊற்றிப் போனார்கள். மறுநாள் காலையில் ராஜா வந்து, பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தைப் பார்த்தபோது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். ஏனென்றால், அந்தத் பாத்திரம் முழுவதும் தண்ணீராக இருந்தது. இதனால் கடும்கோபம் கொண்ட ராஜா, அறிவு ஜீவிகள் என்று தங்களை அழைத்துக்கொண்டு போலியாக நடந்துகொண்ட போலி அறிவுஜீவிகளை மக்களுக்கு முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினார். மக்களோ அவர்கள்மீது காறித்துப்பிவிட்டுக் கடந்து போனார்கள்.

தங்களை அறிவு ஜீவிகள் என்று அழைத்துக்கொண்டு, போலியான வாழ்க்கை வாழ்ந்த போலி அறிவு ஜீவிகளைப் போன்று, தங்களை "மெசியா என்று அழைத்துகொண்டு மக்களை திசைதிருப்பும் ஒருசில போலி இறைவாக்கினர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலமாக ஆண்டவர் இயேசு நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், ஒருசிலர், எருசலேம் திருக்கோவில் எப்படி கவின்மிகு கற்களால் அழகுறக் கட்டப்பட்டிருக்கிறது என்று வியந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது இயேசு அவர்களிடம், இந்த எழில்மிகு கோவிலைப் பார்க்கிறீர்கள் அல்லவா?, ஒரு காலம் வரும், அப்போது கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி தகர்க்கப்படும் என்கின்றார். இயேசு இவ்வாறு பேசியதைக் கேட்ட அவர்கள், "போதகரே, இவை எப்போது நிகழும், இவை நிகழ்வதற்கான அறிகுறிகள் என்ன?" என்று கேட்கின்றார்கள்.

இயேசு மேலே சொன்னவற்றைக் கூறியபோது, அவரிடம் கேள்வி கேட்டவர்கள், இப்படியெல்லாம் நிகழப் போகிறதே, இதற்காக நாங்கள் என்ன செய்யவேண்டும், இந்த அழிவிலிருந்து எங்களை எப்படிக் காத்துக்கொள்ள வேண்டும், நாங்கள் எப்படியெல்லாம் எங்களைத் தயார்செய்யவேண்டும் என்று கேட்கவில்லை. மாறாக, இவையெல்லாம் நிகழ்வதற்கான அறிகுறிகள் என்ன என்றே கேட்கின்றார்கள். அதாவது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என தெரிந்துகொள்வதற்கு ஆசைப்பட்ட அவர்கள், எதிர்காலத்திற்கு எப்படி எல்லாம் தங்களைத் தயார்செய்யவேண்டும் என்று கேட்கவில்லை.

உடனேதான் இயேசு அவர்களிடம், "நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, "நானே அவர் என்றும் காலம் நெருங்கி வந்துவிட்டது என்றும் கூறுவார்கள். அவர்கள் பின்னே போகாதீர்கள்" என்கிறார். இயேசு கூறிய வார்த்தைகளில் துளியளவுகூட பொய்யில்லை. ஏனென்றால், இயேசுவின் காலத்திற்கு முன்பும் சரி, அவருடைய காலத்திற்குப் பின்பும் சரி (இன்றைக்குக் கூட) பலர் தங்களைத் தாங்களே மெசியா என்று சொல்லிக்கொண்டு மக்களை திசை திருப்பினார்கள். யூத வரலாற்று ஆசிரியரான ஜோசேப்புஸ் கூறும்போது, "டசிதேயுஸ், சைமன் மக்னஸ், தேயோடஸ் போன்றோர் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றி, தாங்கள்தான் மெசியா என்று சொல்லிக்கொண்டு மக்களை திசை திருப்பினார்கள். இவர்கள் அனைவரும் உரோமை அரசாங்கத்தால் நசுக்கப்பட்டார்கள்" என்று கூறுவார். இத்தகைய ஓர் ஆபத்து இருந்ததால்தான் இயேசு தன்னுடைய சீடர்களிடத்திலும் மக்களிடத்திலும், ஏமாறதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என்கின்றார்.

ஆகையால், நாம் போலிகளை இனங்கண்டு கொள்ளவேண்டிய பங்குவத்தைப் பெறவேண்டும். பல நேரங்களில் நாம், உண்மை எது, பொய் எது, நன்மை எது, தீமை எது என்று அறிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் நாம் தூய ஆவியாரின் துணையை நாடுவது சிறந்தது.

எனவே, போலிகளை இனங்கண்டு கொண்டு, அவற்றிலிருந்து விலகி, உண்மையின் உறைவிடமான இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 காலம் நெருங்கி வந்துவிட்டது

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பான் நாட்டில் ஹசி (Hachi) என்ற உயர்தர நாய் ஒன்று இருந்தது. அது தன்னுடைய எஜமானன் எங்கு சென்றாலும் அவன்கூடவே செல்லும்.

அந்த எஜமானன் ஒவ்வொருநாளும் வேலைக்குச் செல்வதற்காக தன்னுடைய ஊரில் இருக்கும் இரயில் நிலையம்வரை சென்று, அங்கிருந்து இரயிலேறி அலுவலகத்திற்குச் செல்வான். அப்போதெல்லாம் ஹசி என்ற அந்த நாய் தன்னுடைய எஜமானனோடு இரயில் நிலையம்வரை கூடவே செல்லும். மாலை நேரத்தில் தன்னுடைய எஜமானின் வருகைக்காகக் காத்திருந்து, அவன் வந்தபின் தன்னுடைய வாலை ஆட்டிக்கொண்டே அவனை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வரும். இந்த பந்தம் அவர்களுக்கு இடையே பல நாட்கள் தொடர்ந்தது.

ஒருநாள் ஹசி வழக்கம்போல தன்னுடைய எஜமானனை வேலைக்கு வழியனுப்பிவிட்டு, அவனுடைய வருகைக்காக மாலை நேரம்வரை இரயில் நிலையத்திலே காத்திருந்தது. நேரம் ஆனதே ஒழிய எஜமானன் வேலையிலிருந்து திரும்பி வரவேயில்லை. அந்த எஜமானன் அலுவலத்திற்குச் செல்லும்போது எதிரே வந்த ஒரு வாகனம் அவன்மீது மோத, அவன் அந்த இடத்திலேயே இறந்துபோனான். இந்த உண்மை தெரியாமல் ஹசி என்ற அந்த நாய் அவனுக்காக இரயில் நிலையத்திலே காத்திருந்தது.

ஓராண்டு, ஈராண்டுகள் அல்ல, ஏறக்குறைய பத்தாண்டுகள் தன்னுடைய எஜமானனின் வருகைக்காக காத்துக்கொண்டே இருந்தது. அவன் கடைசி வரைக்கும் வரவேயில்லை. ஒரு பவுணர்மி இரவில் தன்னுடைய எஜமானனுக்காக ஏங்கி, ஏங்கி ஹசி இறந்துபோனது.

ஹசியின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வந்த ஜப்பானிய மக்கள் அந்த நாய் தன்னுடைய எஜமானனுக்காக காத்துக்கொண்டிருந்த அதே இடத்தில் அந்த நாயின் உருவத்தை ஒரு சிலையாக வடித்து, மக்களின் பார்வைக்கு வைத்தனர். அதோடு மட்டுமல்லாமல் அந்த நாயின் உருவத்தை சிறு சிறு சிலைகளாக வடித்து, அதனை அந்நாட்டிலிருந்த ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் அனுப்பி, ஹசி என்ற நாயினைப் போன்று மாணவர்கள் அனைவரும் விசுவாசமுள்ளவர்களாக வாழ நினைவூட்டப்பட்டார்கள்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் ஹசியைப் போன்றுதான் ஆண்டவரின் நாளுக்காக நாம் ஒவ்வொருவரும் காத்துக்கொண்டிருக்கிறோம். நிகழ்வில் வரும் எஜமானன் வேண்டுமானால் திரும்பி வராமல் இருக்கலாம். ஆனால் ஆண்டவர் திரும்பி வருவார் என்பதுதான் இறைவார்த்தை நமக்குத் தரும் நம்பிக்கையாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலின் அழகை வியந்து பாராட்டிக்கொண்டிருந்த ஒருசிலரைப் பார்த்து, "ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்" என்கிறார். அவர்கள் அவரிடம், "இவையெல்லாம் எப்போது நிகழும்?" என்று கேட்கிறபோது இயேசு, "நீங்கள் ஏமாறதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு எச்சரிக்கை தருகின்றார்.

இயேசுவின் காலத்தில் பல போலி இறைவாக்கினர்கள் தாங்கள்தான் மெசியா என்றும், உலக முடிவு அண்மையில் நிகழ இருக்கிறது என்று சொல்லி மக்களை திசை திருப்பப் பார்த்தார்கள். அவர்களை முன்னிட்டுத்தான் ஆண்டவர் இயேசு எச்சரிக்கையாக இருங்கள் என்று அறிவுறுத்துகிறார். இன்றைக்கும்கூட நிறைய போலியான போதகர்கள் உலக முடிவுபற்றி தவறான போதனைகளைக் பரப்பி மக்களைத் திருப்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதுதான் இயேசுவின் அறிவுரையாக இருக்கின்றது.

இயேசு கூறுகிறார், "போர் முழக்கங்களையும், குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது" என்று. ஆம், இன்றைக்கு ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளையும், கலவரங்களையும் கண்டு கலவரமடையாமல், நாம் துணிவோடு இருக்கவேண்டும் என்பதுதான் ஆண்டவர் இயேசுவின் ஆண்டவர் இயேசுவின் ஆறுதலான செய்தியாக இருக்கின்றது.

தொடக்கநூல் 10: 11 ல் ஆண்டவராகிய கடவுள் நோவாவிடம் கூறுவார், "உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப்பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப்பெருக்கு வராது" என்று. ஆண்டவராகிய கடவுள் நம்முடைய அழிவில் மகிழ்ச்சிகொளவதில்லை. அவர் இனிமேல் நம்மை அழிக்கப்போவதில்லை என்பதையே இந்த இறைவார்த்தை நமக்கு உணர்த்துகிறது.

ஆகவே, இயேசுவின் சீடர்களாகிய நாம் ஆண்டவரின் வருகைக்காக நம்மையே நாம் நல்ல முறையில் தயாரிப்போம். நம்மிடம் இருக்கின்ற தீய நாட்டங்களை, பழக்கவழக்கங்களை விட்டொழிப்போம். ஆண்டவருக்கு உகந்த மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!