Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   26  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 34ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 கிறிஸ்துவின் பெயரையும் அவருடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்தனர்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 1-5

யோவான் என்னும் நான் சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர் அதனுடன் இருந்தனர். பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். அது பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போலும் பேரிடி முழக்கம் போலும் யாழை மீட்டுவோர் எழுப்பும் இசை போலும் ஒலித்தது. அந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேரும் அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகப் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட அவர்களைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களைக் கறைப்படுத்திக் கொள்ளாமல் கற்பைக் காத்துக் கொண்டவர்கள்.

ஆட்டுக்குட்டி சென்ற இடம் எங்கும் அதைப் பின்தொடர்ந்தவர்கள்; கடவுளுக்கும் ஆட்டுக் குட்டிக்கும் உரிய முதற்கனியாக மனித குலத்திலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள். அவர்களது வாயினின்று பொய்யே வந்ததில்லை; ஏனெனில் அவர்கள் மாசற்றவர்கள்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 6a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடை யவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள் மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4ab கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 மத் 24: 42a,44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4

அக்காலத்தில் இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார்.

வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.

அவர், "இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்"என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

பொருளாதாரத்தில் வறுமையென்றாலும் ஆன்மீகத்தில் வறுமை கூடாது.

பொருளாதார வறுமை மாற்றிடக் கூடியது. ஆன்ம வறுமை பெரிய இழப்பாகும். எந்தக் காலத்திலும் அதனை ஈடு;க்கட்ட முடியாது. அவரையும் அவரது அரசையும் நாடினோம் என்றால் எல்லாம் சேர்த்துக் கொடுக்கப்படும் என்ற உறுதியினை தந்துள்ளார். பொருளாதாரமும் நிலைப் பெறும், அவரை நாடுவோருக்கு. வறுமையில் இருந்து விடுதலை பெற்று பொருளாதார உயர்வு பெற, அவரே ஞானத்தையும், அறிவையும், உழைப்புக்கான ஊட்டமும், ஆற்றலும், திறமையும் தந்து ஆசீர்வதிப்பார்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தாராளமாய் தருவோம், இறைவனிடமிருந்து ஏராளமாய் ஆசிர் பெறுவோம்!

ரஷ்யாவிலுள்ள ஒரு சிறு நகரம் அது. அந்நகரில் ரோஸி என்றொரு பெண்மணி வசித்து வந்தார். நல்ல வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டுகொண்டிருந்த அவர், ஒரு காலைப் பொழுதில் வெளியே போய்விட்டு வீடு திரும்பினார். வாசலில் இருந்த லெட்டர் பாக்ஸில் ஒரு கடித உறை கிடந்தது. எடுத்துப் பிரித்துப் பார்த்தார். கடித உறையில் ரோஸியின் பெயர் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டாம்ப்போ, போஸ்ட் ஆஃபிஸ் முத்திரையோ, அனுப்பியவர் முகவரியோ இல்லை.

ரோஸி கடிதத்தை எடுத்துப் பிரித்தார். அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது, "பிரியத்துக்குரிய ரோஸி! இன்று மாலையில் உன் வீட்டுப் பக்கம்தான் வருகிறேன். உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எப்போதும் அன்புடன் இயேசு" என்று எழுதப்பட்டிருந்தது. ரோஸிக்கு ஒன்றும் ஓடவில்லை. "ஐயய்யோ! இந்நேரம் பார்த்து இயேசு நம்மைப் பார்க்க வருகிறாரே, அவருக்குக் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே" என்று நினைத்தார். பின்னர் தன் ஹேண்ட் பேக்கைத் திறந்து பார்த்தார். அதில் ஐந்தே ஐந்து டாலர் பணம் இருந்தது. 'இதுவாவது இருக்கிறதே' என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டார்.

கையிலிருக்கும் பணத்தைக்கொண்டு என்ன வாங்கலாம் என்று யோசித்தபடியே மார்கெட்டை நோக்கி விரைந்தார். அங்கு அவர் வைத்திருந்த பணத்தில் ஒரு பிரெட் பாக்கெட், சிறிது பால், கொஞ்சம் இறைச்சி வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார். வரும் வழியில் இயேசு எப்படியிருப்பார், அவரிடம் என்ன பேசலாம் என்றெல்லாம் யோசித்தபடி நடந்த ரோஸியை ஒரு குரல் தடுத்தது. "மேடம்! எங்களுக்கு உதவி செய்ய முடியுமா?". ரோஸி திரும்பிப் பார்த்தார். சாலையோரமாக ஓர் ஆணும் அவர் மனைவியும் நின்றுகொண்டிருந்தார்கள். அழுக்காகிப் போய் கிழிந்திருக்கும் உடை, எண்ணெய் காணாத தலை. பார்க்கவே பரிதாபமாக இருந்தார்கள் அவர்கள்.

"மேடம்! எனக்கு வேலையில்லை. நானும் என் மனைவியும் தெருவுலதான் கிடக்கோம். ரொம்பக் குளிரா இருக்கு, அதைவிட ரொம்பப் பசியா இருக்கு. உங்களால முடிஞ்ச உதவியை எங்களுக்கு செய்ங்களேம்மா". "ஐயா! எனக்கும் உங்களுக்கு உதவணும்னுதான் ஆசையா இருக்கு. ஆனால், நானும் உங்களை மாதிரி ஏழை. என்கிட்ட இப்போ இருக்குறது இந்த ரொட்டியும் கொஞ்சம் இறைச்சியும் பாலும்தான். இன்னிக்கி சாயந்திரம் ஒரு முக்கியமான விருந்தாளி எங்க வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காரு. அவருக்காக வெச்சிருக்கறதை எப்படி உங்களுக்குக் கொடுப்பேன் சொல்லுங்க" என்றார் ரோஸி.

"பரவாயில்லை மேடம். எனக்கு உங்க நிலைமை புரியுது. ரொம்ப தேங்க்ஸ்" என்று சொன்ன அவர், தன் மனைவியை அழைத்துக்கொண்டு பக்கத்திலிருந்த ஒரு குறுகலான தெருவை நோக்கி நடந்தார். அவர் அப்படிச் சொன்னது ரோஸிக்கு இதயத்தில் லேசாக வலியை உண்டாக்கியது. "ஐயா!. கொஞ்சம் நில்லுங்க" என்றார். இருவரும் நின்றார்கள். "இந்தாங்க இந்த சாப்பாட்டை நீங்க ரெண்டுபேரும் சாப்பிடுங்க. வர்ற விருந்தாளிக்கு நான் வேற ஏதாவது குடுத்துக்குறேன்" என்று சொல்லி தன் கையிலிருந்ததை எல்லாம் அவரிடம் கொடுத்தார் ரோஸி.

"ரொம்ப நன்றிங்கம்மா" என்று சொன்னபடி அவர் ரோஸி கொடுத்த உணவை வாங்கிக்கொண்டார். அப்போதுதான் ரோஸி கவனித்தார், அந்தப் பெண் குளிரில் வெகுவாக நடுங்கிக்கொண்டிருந்ததை. உடனே தன் மேல் கோட்டைக் கழற்றி அந்தப் பெண்ணிடம் கொடுத்து, அணிந்துகொள்ளச் சொன்னார். "வீட்ல நான் இன்னொரு கோட்வெச்சிருக்கேன். அதை நான் போட்டுக்குறேன்" என்று சொல்லிச் சிரித்தார்.

பிறகு நிறைந்த மனதுடன் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார் ரோஸி. குளிரில் லேசாக உடல் நடுங்கியது. "இயேசு வந்தால் அவருக்கு என்ன கொடுப்பது, வீட்டில் வேறு என்ன இருக்கிறது, எதை விற்கலாம்?' என்று யோசித்தபடி நடந்தார். வீட்டு வாசலில் இருந்த லெட்டர் பாக்ஸில் இன்னொரு கடிதம் இருந்தது. அதை எடுத்துப் பிரித்துப் படித்தார் ரோஸி. "அன்புள்ள ரோஸி, உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நீ அளித்த அருமையான உணவுக்கும் கோட்டுக்கும் என் நன்றி. - இயேசு" என்று அதில் எழுதியிருந்தது.

தன்னுடைய வறிய நிலையிலும் தன்னிடமிருந்த அனைத்தையும் இயேசுவுக்கு/ ஏழைத் தம்பதிக்கு கொடுக்க முன்வந்த இந்த ரோஸி, நற்செய்தி வாசகத்தில் வருகின்ற ஏழைக் கைம்பெண்ணை நமக்கு நினைத்து படுத்துகின்றார்.

நற்செய்தியில் வருகின்ற ஏழைக் கைம்பெண், எருசலேம் திருகோவிலில் காணிக்கை செலுத்திய ஏனைய செல்வந்தர்களைப் போன்று அள்ளி அள்ளிக காணிக்கை போடவில்லை, மாறாக அனைத்தையும் காணிக்கையாகப் போட்டார். 'எல்லாம் இறைவன் கொடுத்தது', அப்படியிருக்க அனைத்தையும் அவருக்குக் கொடுப்பதுதான் சிறந்ததது என்ற உயர்ந்த சிந்தனையோடு காணிக்கை செலுத்திய ஏழைக் கைம்பெண் நமக்கொரு முன்மாதிரி. இப்படி எல்லாவற்றையும் இறைவனுக்குக் காணிக்கையாகச் செலுத்தியதால், இயேசு அவரைப் பாராட்டுகின்றார்.

"பிறருக்குக் கொடுக்க நம்மிடம் என்ன இருக்கிறதோ, அது மட்டும்தான் நம்மிடம் இருக்கின்றது" என்பார் இசபெல் அலெண்டே என்ற பிரபல எழுத்தாளர். இதுதான் உண்மை.

ஆகவே, ஏழைக் கைம்பெண்ணைப் போன்று கொடுப்பதில் தாராளமாய் இருப்போம், செல்வந்தர்களைப் போன்று கடவுளுக்குக் கொடுப்பதில் கணக்குப் பார்த்துக்கொண்டிராமலும், தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும் என்றில்லாமல் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் ஏராளமாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 
- Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!