|
24
நவம்பர் 2018 |
|
பொதுக்காலம்
33ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மண்ணுலகில் வாழ்வோர்க்குத் தொல்லை
கொடுத்த இரு சாட்சிகள்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம்
11: 4-12
சகோதரர் சகோதரிகளே, மண்ணுலகின் ஆண்டவர் திருமுன் நிற்கும் இரண்டு
ஒலிவ மரங்களும் இரண்டு விளக்குத் தண்டுகளுமே அந்த இரு சாட்சிகள்.
யாராவது அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்பினால் அவர்களது
வாயிலிருந்து தீ கிளம்பி அந்தப் பகைவர்களைச்
சுட்டெரித்துவிடும். அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்புவோர்
இவ்வாறு கொல்லப்படுவது உறுதி.
தாங்கள் இறைவாக்கு உரைக்கும் காலத்தில் மழை பொழியாதவாறு வானத்தை
அடைத்துவிட அவர்களுக்கு அதிகாரம் உண்டு; தாங்கள் விரும்பும்
பொழுதெல்லாம் தண்ணீரை இரத்தமாக மாற்றவும், மண்ணுலகை எல்லா வகை
வாதைகளாலும் தாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. அவர்கள்
சான்று பகர்ந்து முடித்தபின் படுகுழியிலிருந்து வெளியே வரும்
விலங்கு அவர்களோடு போர் தொடுத்து, அவர்களை வென்று
கொன்றுவிடும். சோதோம் எனவும் எகிப்து எனவும் உருவகமாய் அழைக்கப்படும்
அம்மாநகரின் தெருக்களில் அவர்களுடைய பிணங்கள் கிடக்கும். அங்கேதான்
அவர்களின் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டார்.
பல்வேறு மக்களினத்தார், குலத்தினர், மொழியினர், நாட்டினர் மூன்றரை
நாள் அவர்களுடைய பிணங்கள் அங்குக் கிடக்கக் காண்பார்கள்; அவற்றை
அடக்கம் செய்ய விடமாட்டார்கள்.
மண்ணுலகில் வாழ்வோர் அவற்றைக் குறித்து மிகவே மகிழ்ந்து திளைப்பர்;
ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகள் வழங்கிக்கொள்வர்; ஏனெனில் இந்த
இரண்டு இறைவாக்கினரும் மண்ணுலகில் வாழ்வோர்க்குத் தொல்லை
கொடுத்திருந்தனர். அந்த மூன்றரை நாளுக்குப் பின் கடவுளிடமிருந்து
வந்த உயிர்மூச்சு அவற்றுக்குள் நுழைந்ததும், அவர்கள் எழுந்து
நின்றார்கள். அதைப் பார்த்தவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது.
அப்பொழுது விண்ணகத்திலிருந்து எழுந்த ஓர் உரத்த குரல், "இவ்விடத்திற்கு
ஏறி வாருங்கள்" என்று தங்களுக்குச் சொன்னதை அந்த இறைவாக்கினர்கள்
இருவரும் கேட்டார்கள். அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக்
கொண்டிருக்க அவர்கள் மேகத்தின்மீது விண்ணகத்துக்குச் சென்றார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 144: 1. 2. 9. 10
(பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
1 என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப்
பயிற்சி அளிப்பவர் அவரே! போர் புரிய என் விரல்களைப் பழக்குபவரும்
அவரே! பல்லவி
2 என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும்
மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை
எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே! பல்லவி
9 இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு
வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன். பல்லவி
10 அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக்
கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
2 திமொ 1: 10b
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து,
அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக
வாழ்வோரின் கடவுள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
20: 27-40
அக்காலத்தில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை
அணுகி, "போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர்
மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு
வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதிவைத்துள்ளார்.
இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து
மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை
மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக
அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர்
அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக்
கொண்டிருந்தனரே?" என்று கேட்டனர்.
அதற்கு இயேசு அவர்களிடம், "இக்கால வாழ்வில் மக்கள் திருமணம்
செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி
பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.
இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள்.
உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய
பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, "ஆபிரகாமின்
கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று
கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக
வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே"என்றார்.
மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, "போதகரே, நன்றாகச்
சொன்னீர்" என்றனர். அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத்
துணியவில்லை.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
உயிர்ப்பு என்னும்
உன்னதக் கொடை!
அது ஒரு கிராமத்துப் பங்கு. அந்தப் பங்குத்தளத்தில் எப்போது
பார்த்தாலும் ஒரே சண்டைச் சச்சரவும் பிரச்சனையுமாக இருந்தது.
இதற்கு ஒரு முடிவுகட்ட விரும்பிய பங்குத்தந்தை, ஒரு
ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின்போது, "அன்பார்ந்த மக்களே!
நான் உட்பட, இந்தக் கிராமத்தைச் சார்ந்த எல்லாரும் ஒருநாள் இறக்கத்தான்
போகிறோம். அதனால் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையுடன்
வாழ்வோம்" என்று போதித்துக் கொண்டிருந்தார்.
இதைக் கேட்ட, அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவன் சத்தமாகச் சிரிக்கத்
தொடங்கினான். குருவானவருக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவர் அவனிடத்தில்,
"ஏனப்பா இப்படிச் சிரிக்கிறாய்? நான் சொல்வது உனக்குக் கிண்டலாகத்
தெரிகிறதா?" என்று கேட்டார். அதற்கு அவன், "இந்த கிராமத்தைச்
சார்ந்த எல்லாரும் ஒருநாள் இறக்கப் போகிறோம் என்று சொன்னீர்கள்
அல்லவா!... நல்லவேளையாக, எனக்கு இந்த கிராமம் கிடையாது, பக்கத்துக்
கிராமம், ஒருவேளை நானும் இந்த கிராமத்தைச் சார்ந்தவனாக இருந்திருந்தால்,
இறக்க வேண்டியிருக்குமே. அதனால்தான் சிரித்தேன்" என்றான்.
மனிதராகப் பிறந்த எல்லாருக்கும் இறப்பு உண்டு, இதை உணராத அந்த
கிராமத்தானைப் போன்று, இறந்த ஒருவர் உயிர்த்தெழுவார் என்ற அடிப்படைப்
புரிதல்கூட இல்லாமல், சதுசேயர்கள் இயேசுவிடத்தில் கேள்வியைக்
கேட்கின்றார்கள். பரிசேயர்களின் கேள்விக்கு இயேசுவின் பதில் எப்படிப்பட்டதாக
இருந்தது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் பணிவாழ்வில், அவரோடு அடிக்கடி பிரச்சனையில் ஈடுபட்டவர்கள்
பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள். இவர்களில் இரண்டாவதாக வரக்கூடிய
சதுசேயர்களோ பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள், யூத சமூகத்தில்
மிக முக்கிய பொறுப்புகளையும் பதவிகளையும் வகித்து வந்தவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் "பெண்டடூக் எனப்படும் விவிலியத்தில் உள்ள
முதல் ஐந்து நூல்களை மட்டும் ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு
வானத்தூதர்கள் மீதோ, உயிர்ப்பின் மீதோ நம்பிக்கை கிடையாது. இப்படிப்பட்ட
சித்தாந்தங்களோடு இருந்த சதுசேயர்கள்தான், இயேசுவை எப்படியாவது
சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக ஒரு கேள்வியோடு
வருகிறார்கள்.
சதுசேயர்கள் இயேசுவிடம் வைக்கக்கூடிய கேள்வி, எந்தவிதத்திலும்
ஏற்றுக்கொள்ளத் தக்கது கிடையாது. பெண் ஒருவரை மகப்பேறு இல்லை
என்ற ஒரே காரணத்திற்காக எழுவர் மணப்பதையும் அவர்கள் அனைவரும்
மகப்பேறின்றி இறக்கிறார்கள் என்பதையும் உயிர்த்தெழுதலின் போது
அந்தப் பெண்மணி யாருக்கு மனைவியாக இருப்பார் என்பதையும் எப்படி
ஏற்றுக்கொள்வது? அதற்கு எப்படித்தான் பதில் சொல்வது?. ஆனாலும்
இயேசு அவர்களுடைய குறுக்குப் புத்தியை அறிந்து, அவர்களுக்கு
தெளிவான பதிலைச் சொல்லி அவர்களை வாயடைக்கச் செய்கின்றார்.
சதுசேயர்களைப் பொறுத்தளவில், ஐநூல்களில் உயிர்த்தெழுதல் பற்றிய
செய்தியே கிடையாது என்பதாக இருந்தது. ஆனால் ஆண்டவர் இயேசு,
சதுசேயர்கள் நம்பி ஏற்றுக்கொண்ட ஐநூல்களில் ஒன்றான விடுதலைப்
பயணத்திலே "உயிர்த்தெழுதல் பற்றிய செய்தி இருக்கின்றது என்று
எடுத்துச் சொல்லி, கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, அவர்
வாழ்வோரின் கடவுள் (விப 3:6), இதை நீங்கள் அறியாமல்
இருக்கிறீர்களே என்று அவர்களை திக்குமுக்காடச் செய்கின்றார்.
அடுத்ததாக, உயிர்த்தெழுதல் என்ற ஒன்று இருந்தால், அதில்
மண்ணகத்தில் நடப்பது போன்றே பெண் கொடுப்பதும் எடுப்பதுமாக
இருக்கும் என்பதாக இருந்தது சதுசேயர்கள் எண்ணம். ஆனால்
இயேசுவோ, விண்ணகத்தில் அப்படியெல்லாம் இருக்காது. அங்கே
ஒவ்வொருவரும் வானதூதரைப் போன்று இருப்பார்கள் என்று
அவர்களுக்கு தெளிவான பதிலைச் சொல்கின்றார்.
நற்செய்தியில் இயேசு, சதுசேயர்களுக்கு அளித்த விளக்கம், நமக்கு
ஒருசில செய்திகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. அதில்
முதலாவது, அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு கடவுளை
சோதனைக்குட்படுத்தக் கூடாது என்பதாகும். ஐநூல்களில்
உயிர்த்தெழுதல் பற்றிய செய்திகள் இல்லை, ஆகவே, நாங்கள்
உயிர்த்தெழுதலை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சதுசேயர்கள்
முரண்டுபிடித்தார்கள். ஆனால் உயிர்த்தெழுதல் பற்றி செய்தி,
அவர்கள் ஏற்றுக்கொண்ட ஐந்நூல்களிலே இருந்தது. இருந்தும்
அவர்கள் குருடராக, அறியாமையில், அரைகுறையான அறிவோடு
இருந்தார்கள். இப்படி அரைகுறை அறிவோடு இருந்துகொண்டு
இயேசுவிடம் கேள்விகேட்டதை என்னவென்று சொல்வது?
அடுத்ததாக, உயிர்த்தெழுதல் என்ற ஒன்று, உறுதியாக உண்டு என்பதை
நற்செய்தி வாசகம் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. எனவே,
நாம் ஒவ்வொரும் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டு, இறைவனுக்கு
ஏற்ற வாழ்க்கை வாழ்வதே சாலச் சிறந்தது. பவுலடியார் சொல்வார்,
"ஒவ்வொருவரும் அவரவர் முறைவரும்போது உயிர்பெறுவர்" என்று. (1
15:23).
ஆதலால் நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையுடன்
வாழ்வோம், நம்மிடம் இருக்கின்ற பேதமையான எண்ணங்களை அகற்றி,
இறைவனுக்கு உகந்த வாழக்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
இறப்புக்குப் பின் நாம் என்ன
ஆவோம்?
ஒருமுறை ஒரு வழக்குரைஞரும், திருத்தந்தையும் இறந்து
விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டனர். விண்ணகத்தில்
அவர்கள் இருவரையும் விசாரித்த பேதுரு, திருத்தந்தைக்கு குறைவான
வசதிகளுடன்கூடிய சாதாரண ஓர் அறையையும், வழக்குரைஞருக்கு எல்லா
வசதிகளுடன் கூடிய பெரிய ஓர் அறையையும் கொடுத்து அதிலே
அவர்களைத் தங்கச் சொன்னார்.
இதைப் பார்த்ததும் வழக்குரைஞருக்கு ஆணவம் தலைக்கேறியது.
திருத்தந்தையைவிட தான் பெரியவன், என்ற மிதப்பில் அவர்
பேதுருவிடம், "வழக்கமாக திருத்தந்தைக்குத்தான் எல்லா வசதிகளும்
கிடைக்கும், என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு ஒன்றுமே
கிடைக்காது. அப்படியிருக்கும்போது இங்கே எல்லாம் தலைகீழாக
இருக்கிறதே ஏன்?. அப்படியானால் நான் அவர்களைவிடப்
பெரியவன்தானே" என்று ஏளனமாகக் கேள்வியைக் கேட்டார்.
அதற்கு பேதுரு மிகவும் பொறுமையாக, "விண்ணகத்தில்
திருத்தந்தையர்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள். இடம்வேறு
நெருக்கடியாக இருக்கின்றது. அதனால் அவருக்கு சிறிய அறையைக்
கொடுத்திருக்கிறேன். உங்களைப் போன்ற வழக்குரைஞர்கள்
விண்ணகத்திற்குள் நுழைவது அரிது. நீதான் இங்கே முதல்முறையாக
நுழைந்திருக்கிறீர். அதனால்தான் உனக்கு எல்லா வசதிகளுடன் கூடிய
பெரிய அறையைக் கொடுத்திருக்கிறேன்" என்றார். இதைக் கேட்டதும்
வழக்குரைஞரின் ஆணவம் அடங்கியது.
பெரும்பாலான நேரங்களில், கேள்விகேட்கின்ற மனிதர்களுக்கு
பதிலைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை விடவும், எதிர்
தரப்பினரை சிக்கலில் மாட்டிவிடவேண்டும், அவர்களை
இழிவுபடுத்தவேண்டும் என்ற எண்ணமே பிரதானமாக இருக்கிறது. அதற்கு
மேலே சொல்லப்பட்ட நிகழ்வும் விதிவிலக்கல்ல.
நற்செய்தி வாசகத்தில் உயிர்த்தெழுதலை நம்பாத சதுசேயர்கள் சிலர்
ஆண்டவர் இயேசுவை அணுகி வந்து, விண்ணகம் பற்றிய கேள்வியைக்
கேட்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் எல்லாம் விண்ணகத்தைப் பற்றி
அறிந்துகொள்ளவேண்டும் என்பதல்ல, மாறாக இயேசுவை சிக்கலில்
மாட்டிவிடவேண்டும் என்பதே ஆகும். சதுசேயர்கள் கேட்ட கேள்விக்கு
இயேசுவின் சரியான பதில்தான் இன்றைய நற்செய்தி வாசகமாக
இருக்கின்றது.
"சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து
மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம், சகோதரர்களும் அவரை
மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக
அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர்
அவர்களுள் யாருக்கு மனைவியாவார்?" இதுதான் சதுசேயர்கள்
இயேசுவிடம் எழுப்பிய கேள்வி. இந்தக் கேள்வியை சதுசேயர்கள்
கேட்டதற்குக் காரணம் உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டும்
என்பதல்ல, மாறாக இயேசுவை சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்பதே
ஆகும்.
ஏனென்றால் சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் மீதோ, வானதூதர்கள் மீதோ
நம்பிக்கையற்றவர்கள், விவிலியத்தில் உள்ள முதல் ஐந்து
நூல்களைத்தான் இறைத்தூண்டலால் எழுதப்பட்ட நூல்கள் என்று
ஏற்றுக்கொள்வார்கள், மற்ற நூல்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
இத்தகைய பின்புலத்தோடு கேள்வியைக் கேட்கும் சதுசேயர்களுக்கு
அவர்கள் நம்பி ஏற்றுக்கொள்ளும் விவிலியத்தின் முதல் ஐந்து
நூல்களில் ஒன்றான விடுதலைப்பயண நூலிலிருந்தே விளக்கம்
தருகிறார். சதுசேயர்கள் கேட்ட கேள்விக்கு இயேசுவின் பதில்
இப்படியாக இருக்கின்றது.
"இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால்
வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து
உயிர்த்தெழுபோதும்போது திருமணம் செய்துவதில்லை. இனி அவர்கள்
சாகமுடியாது. அவர்கள் வானதூரைப் போன்று இருப்பார்கள்.
உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
இயேசுவின் இத்தகைய பதிலைக் கண்டு சதுசேயர்கள் வாயடைத்துப் போய்
நிற்கின்றார்கள். இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், சிக்கலில்
மாட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த அவர்களுக்கு
இயேசுவின் பதில் மிகப்பெரிய சாட்டையடியாக இறங்குகின்றது.
பெரும்பாலான நேரங்களில் நம்மிடத்திலும் ஒருசிலர் குதர்க்கமான
கேள்வியைக் கேட்டு, நம்மைப் பிரச்சனையில் மாட்டிவிட
நினைக்கலாம். அத்தகைய தருணங்களில் நாம் ஆண்டவர் இயேசுவைப்
போன்று விவேகத்துடன்னும், ஞானத்துடனும் பதிலளிக்கவேண்டும்.
இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் செய்தி ஒன்றே ஒன்றுதான். அது
நம்முடைய மண்ணக வாழ்வு, நம்முடைய இறப்போடு முடிந்துவிடுகிற
ஒன்று அல்ல, மாறாக அது புதியவுரு எடுக்கிறது என்பதை ஆகும்.
மேலும் இறைவன் தரும் விண்ணக வாழ்வை உரித்தாக்கிக்
கொள்ளவேண்டும் என்றால், நாம் வாழ்வும் இந்த மண்ணக வாழ்வை
அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும்.
ஆகவே, இக்கட்டான சூழ்நிலைகளில் இயேசுவைப் போன்று முன்மதியுடன்
நடந்துகொள்வோம். இறைவன் தரும் விண்ணக வாழ்வைப் பெற, இந்த மண்ணக
வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய்
பெறுவோம்.
"சாவே, உன் வெற்றி எங்கே?, சாவே உன் கொடுக்கு எங்கே?"
1 கொரி 15:5.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|