Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     18   நவம்பர்  2018  
                                                           பொதுக்காலம் 33ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உன் இனத்தார் விடுவிக்கப்படுவர்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-3

"அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும்.

அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.

இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர்.

ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா  16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-14,18

சகோதரர் சகோதரிகளே, ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை.

ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார்.

தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். எனவே பாவ மன்னிப்புக் கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமே இல்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 21: 36

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.

பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.

அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"என் இல்லம் இறைவேண்டலின் வீடு"

பெருநகர் ஒன்றில் பிரிவினை சபையைச் சேர்ந்த மதபோதகர் ஒருவர் இருந்தார். அவருக்கு குதிரைகளின்மீதும், குதிரைப் பந்தயத்தின்மீது அதிகமான ஈடுபாடு இருந்தது. தன்னுடைய வீட்டில்கூட ஒரு உயிர்தரக் குதிரையை வாங்கி வைத்திருந்தார். குதிரைகளின்மீது இவருக்கு இருந்த அதிகமான நாட்டத்தைக் கண்ட ஒரு குதிரை வியாபாரி ஒருவர், தன்னிடம் இருந்த குதிரையை விற்கவேண்டும் என நினைத்து, அவரிடம் பேச்சுக் கொடுத்தார்:

"ஐயா உங்களுக்கு குதிரையின்மீது அதிகமான நாட்டம் இருக்கிறது என்பதை நான் அறிவேன். என்னிடம் ஒரு குதிரை இருக்கிறது. அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அரபு நாட்டிலிருந்து பிரத்யோகமாக இறக்குமதி செய்யப்பட்ட குதிரை அது. பழகுவதற்கு மிகவும் சாதுவானது. சிறிய குழந்தைகள்கூட அதில் ஏறிக்கொண்டு சவாரி செய்யலாம். அதற்காக நீங்கள் பெரிதாக எதையும் செலவழிக்கவேண்டாம். பராமரிப்புச் செலவுகூட மிகக்குறைவு.

மேலும் அதைப் பார்த்து நீங்கள் போ என்றால் போகும். நில் என்று சொன்னால் நிற்கும். அவ்வளவு கீழ்படிதலுள்ள குதிரை அது. இப்படிப்பட்ட ஒரு குதிரையை உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள். அதனால் நீங்கள் அந்தக் குதிரையை வாங்கிக்கொள்ளுங்கள்" என்று அந்த குதிரை வியாபாரி மதபோதகரைக் கெஞ்சிக் கேட்டார்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மதபோதகர் வியாபாரி, "இவ்வளவு கீழ்படிதலுக்கு ஒரு குதிரையை என்னுடைய ஆலயத்தில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாமா?, ஏனென்றால் என்னுடைய ஆலயத்திற்கு வரும் இறைமக்கள் யாருமே என்னுடைய சொல்பேச்சுக் கேட்பதில்லை, எனக்குக் கீழ்படிந்து நடப்பதுமில்லை" என்றார்.

இதைக் கேட்டு அந்த குதிரை வியாபாரி பேச்சற்று நின்றார்.

ஆலயமும், அதில் நடக்கும் வழிபாடும் மக்களின் மனதில் மாற்றத்தையும், தூய அன்பையும் கொண்டுவரவேண்டும். அத்தகைய மாற்றமும், அன்பும் நிகழவில்லை என்றால், ஆலயத்தாலும், அதில் நிகழும் வழிபாட்டுக் கொண்டாட்டங்களாலும் ஒரு பயனும் இல்லை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலில் வியாபாரம் செய்துவந்தவர்களை விரட்டி அடிக்கின்றார்; அதன் புனிதத்தன்மையையும், மாண்பையும் நிலைநாட்டுகிறார். இயேசுவின் இந்த தீரமிக்க/வீரமிக்க செயலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையைச் சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாகும்.

தொடக்க காலத்தில் யூத சமூகம் ஒரு நாடோடிச் சமூகமாகவே வாழ்ந்துவந்தது. எனவே அவர்களுக்கென்று கோவில் கிடையாது. அவர்கள் இறைவனை மலைதனிலும், (யோவான் 4:20) இன்ன பிற இடத்திலும் வழிபாட்டு வந்தார்கள். அதன்பிறகு ஆண்டவராகிய கடவுள் மோசேக்கு சீனாய் மலையில் கொடுத்த பத்துக்கட்டளைகளையும், ஆரோனின் கோலையும், மன்னாவையும் உடன்படிக்கைப் பேழையில் வைத்து, அதில் கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து வாழ்ந்துவந்தார்கள். முதல்முறையாக தாவீது அரசன் கடவுளுக்குக் கோவில் கட்ட நினைத்தபோது, கடவுள் அவரிடம், "நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய், எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில் கட்டவேண்டாம்" என்கிறார். (1குறி: 22:8)
எனவே, யூத மக்களுக்கான முதல் ஆலயம் தாவீதின் மகனான சாலமோனின் காலத்தில்தான் கட்டப்படுகிறது. அவர் கடவுளுக்காக கோவிலைக் கட்டி, அதை இவ்வாறு நேர்ந்தளிக்கிறார், "இஸ்ரயேல் மக்களைச் சாராத அன்னியர் ஒருவர் உமது பெயரை முன்னிட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து, மாண்புமிக்க உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றல் மிகுந்த உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு வந்து, இந்தக் கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால், உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்கு செவிசாய்த்து அந்த அன்னியர் கேட்பதை எல்லாம் அருள்வீராக".

ஆதலால், சாலமோன் அரசரால் கட்டப்பட்ட ஆலயம் எல்லா மக்களுக்கும் பொதுவானது என்பதை நம்முடைய மனதில் இருத்திக்கொளகொள்ளவேண்டும். இறைவாக்கினர் எசாயா இக்கருத்தை இன்னும் அழுத்தம் திருத்தமாகக் கூறுவார், "என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு" என்று (எசா 56:7). ஆகவே, எருசலேம் ஆலயம் யூதர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் பொதுவாக இருந்து, அதில் புறவினத்து மக்கள் ஜெபிக்கக்கூடிய பகுதியில் வியாபாரம் நடந்ததால்தால்தான் ஆண்டவர் இயேசு அங்கே வியாபாரம் செய்கின்றவர்களை விரட்டி அடிக்கின்றார். ஆலயம் இறைவேன்டலின் வீடு, அது வியாபாரத் தளமல்ல" என்பதை எண்பிக்கின்றார்.

இறைமக்கள் சமூகமாகிய நாம் இறைவன் தங்கிவாழும் இல்லத்திற்கு எந்தளவுக்கு முக்கியத்துவமும், மதிப்பும் தருகிறோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். "ஆண்டவன் சன்னதி, மனதிற்கு நிம்மதி" என்பார்கள்.

எனவே நாம் ஆலயத்தின் புனிதத்தன்மையை உணர்வோம். ஆர்வமாய் ஆண்டவரை நாடிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இயேசுவின் இரண்டாம் வருகையும் இறுதித் தீர்ப்பும்

முன்பொரு காலத்தில் பரோக்கா என்றொரு யூத இரபி இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர். அதனால் மக்களுக்கு மத்தியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.

ஒருநாள் அவர் கடைத்தெருவிற்குச் சென்றபோது, அங்கே ஓர் ஓரத்தில் இறைவாக்கினர் எலியா இருப்பதைக் கண்டார். அவரைக் கண்டதும் பரோக்காவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. உடனே அவர் இறைவாக்கினர் எலியாவிடம் சென்று அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு பேசத் தொடங்கினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோதே இறைவாக்கினர் எலியாவிடம், "ஐயா! இங்கே இருக்கின்றவர்களில் இறுதித் தீர்ப்பின்போது யாராரெல்லாம் விண்ணகம் செல்ல தகுதியுள்ளவர்கள்?" என்று கேட்டார். அப்போது அவர் ஒரு மனிதரைச் சுட்டிக் காட்டினார். அவரிடம் சென்ற பரோக்கா, "ஐயா! நீங்கள் இப்போது என்ன வேலை செய்துகொண்டிருக்கின்றீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "நான் சிறை அதிகாரியாக பணி செய்துகொண்டிருக்கின்றேன். என்னுடைய பணியே சிறையில் இருக்கின்ற ஆண் கைதிகளையும் பெண் கைதிகளையும் நல்ல முறையில் கவனித்து, அவர்களிடையே எந்தவிதமான அசம்பாவித நிகழ்வும் நடக்காதவாறு கவனித்துக் கொள்வதுதான்" என்றார். "நன்று" என்று சொல்லிவிட்டு அவர் அவரிடமிருந்து இறைவாக்கினர் எலியாவிடம் வந்தார்.

பின்னர் அவர் இறைவாக்கினர் எலியாவிடம், "இந்தக் கூட்டத்தில் இருக்கின்ற வேறு யாராது விண்ணகம் செல்லத் தகுதியுடையவர்களாக இருக்கின்றார்களா?" என்று கேட்டார். அதற்கு அவர், "அதோ ஓரமாக நின்றுகொண்டு, சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்களே, அவர்கள் இருவரும் விண்ணகம் செல்ல தகுதியுள்ளவர்களாக இருக்கின்றார்கள்" என்றார். உடனே பரோக்கா அவர்கள் இருவரிடமும் சென்று, "நண்பர்களே! நீங்கள் இருவரும் என்ன வேலை செய்கின்றீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள் இருவரும், "எங்களுடைய வேலையே மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதுதான். நாங்கள இருவரும் யாராரெல்லாம் சோகமாக இருக்கின்றாகளோ அவர்களிடம் கலகலப்பாகப் பேசி சந்தோசப்படுத்துவோம், எங்கெல்லாம் சண்டைச் சச்சரவுகள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று அமைதியை ஏற்படுத்துவோம்" என்றார்கள். "அருமை, தொடர்ந்து அப்படியே செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு பரோக்கா அவர்கள் இருவரிடமிருந்தும் விடைபெற்று, இறைவாக்கினர் எலியா இறைவாக்கினரிடம் வந்து, "விண்ணகம் செல்வதற்கு யாராருக்கெல்லாம் தகுதி இருக்கின்றது என்பதை இப்போது உணர்ந்துகொண்டேன். தான் இருக்கும் இடத்தில் மற்றவர்களுக்குப் பிரயோஜனமாக வாழக்கூடிய யாவருமே விண்ணகம் தகுதி படைத்தவர்கள்" என்று சொல்லி அவர் இறைவாக்கினர் எலியாவிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

இறுதித் தீர்ப்பின்போது யாராருக்கெல்லாம் விண்ணகம் செல்வதற்குத் தகுதி இருக்கின்றது என்கின்ற உண்மையை மேலே சொல்லப்பட்ட நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துரைக்கின்றது.

பொதுக்காலத்தின் முப்பத்தி மூன்றாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றியும், அதைத் தொடர்ந்து நடக்கூடிய இறுதித் தீர்ப்பையும் பற்றி எடுத்துக் கூறுகின்றது. நாம் அவற்றைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, அந்நாட்களில் -இறுதி நாட்களில்-என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். அப்படிப் பேசும்போது அவர் "அந்நாட்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிகள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்" என்கின்றார் இயேசு. இங்கே இயேசு கூறுவதாக மாற்கு நற்செய்தியாளர் கூறுகின்ற வார்த்தைகள் அவர் தனது நற்செய்தியின் மற்ற பகுதிகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளிலிருந்து வித்தியாசப்படுவதை நாம் அறிந்துகொள்ளலாம். இதனை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ளவேண்டும் என்றால், யூதர்கள் காலத்தை எவ்வாறு கணக்கிட்டார்கள் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.

பொதுவாக யூதர்கள் காலத்தை இரண்டாகப் பிரித்தார்கள். ஒன்று இப்போது இருக்கின்ற நிகழ்காலம். இன்னொன்று ஆண்டவர் வெளிப்படுகின்ற பொற்காலம். நிகழ்காலத்தை அவர்கள் வேதனை நிறைந்ததாகவும் பொற்காலத்தை மகிழ்ச்சி நிறைந்ததாகும் பார்த்தார்கள். ஆனால், இந்த இரண்டு காலங்களுக்கும் இடையே ஆண்டவரின் நாளானது இருக்கும். அந்த நாளில் தீமைகள் அழிக்கப்பட்டு, நன்மையானது நிலைநாட்டப்படும் என்று நம்பினார்கள். இந்த ஆண்டவரின் நாளுக்கு முன்புதான் மேலே நாம் வாசித்த போர்களும், கலகங்களும், இயற்கைப் பேரிடர்களும் நடக்கும் என்று நம்பினார்கள். இதைத்தான் ஆண்டவர் இயேசு மானிட மகனின் இரண்டாம் வருகையைக் குறித்தும் தொடர்ந்து வருகின்ற இறுதித்தீர்ப்பைக் குறித்துப் பேசுகின்றபோது பேசுகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கு வேண்டுமானால் புதிதாக, அச்சம் தரக்கூடியதாக இருக்கலாம். ஆனால், யூதர்களைப் பொறுத்தளவில் அவை மிகவும் பழக்கப்பட்ட வார்த்தைகள் தான்.

இங்கே நாம் தியானித்த வார்த்தைகளும், இதனை அடியொட்டி வரக்கூடிய இன்றைய முதல்வாசகமும் நமக்கு ஒருசில செய்திகளைத் தருகின்றன. அவை என்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

மானிடமகனது இரண்டாம் வருகை நிச்சயம் நிகழும். இதுதான் இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் முதன்மையான செய்தியாக இருக்கின்றது. எப்படி அத்திமரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து தளிர்ப்பது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டதற்கான அறிகுறியாக இருக்கின்றதோ அதுபோன்று உலகில் நிகழ்வும் போர்களும் வன்முறைகளும், குழப்பங்களும், இயற்கைப் பேரிடர்களும் மானிட மகனது வருகைக்கான முன் அறிகுறி இருக்கின்றது. இயேசு மானிட மகன் எப்போது வருவார் எந்தைக் குறித்து திட்டவட்டமாகத் தெரிவிக்காவிட்டாலும்கூட, அவருடைய இரண்டாம் வருகை நிச்சயம் நிகழ்வும் என்று உறுதிபடச் சொல்கின்றார்.

மானிடமகனது வருகையைத் தொடர்ந்து இறுதித் தீர்ப்பானது நடைபெறும். இது இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கும் இரண்டாவது செய்தியாக இருக்கின்றது. நற்செய்தியில் இயேசு, "மானிட மகன் வானதூதரை அனுப்பி, மண்ணுலகில் ஒருகோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசையிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்" என்று கூறுகின்ற வார்த்தைகள் இறுதித் தீர்ப்பினைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன. இறைவனின் அரசில் நுழைவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு அழகாக எடுத்துக் கூறுகின்றது.

முதல் வாசகத்தில், "ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும் பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்" என்று வாசிக்கின்றோம். அப்படியானால் பிறரை நல்வழிக்குக் கொண்டுவருவோர்தான் இறைவனின் அரசில் நுழைவதற்கு தேர்தெடுக்கப்படுகின்றார்கள் என்பது உண்மையாகின்றது. பிறரை நல்வழிப்படுத்துவோர் நிச்சயம் நல்வழியில் நடந்திருப்பார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. ஆகையால், மானிடமகன் அளிக்கின்ற இறுதித் தீர்ப்புக்கு நாம் நம்மையே தகுதியுள்ளவர்களாக மாற்றிக் கொள்ளவேண்டும் என்றால், நாம் நல்வழியில் நடந்து, மற்றவரையும் நல்வழிக்குக் கொண்டு வரவேண்டும்.

எப்போதும் விழிப்பாய் இருக்கவேண்டும். இது இன்றைய இறைவார்த்தை எடுத்துரைக்கும் மூன்றாவது முக்கியமான செய்தியாக இருக்கின்றது. மானிட மகனது வருகையைக் குறித்துப் பேசுகின்றபோது இயேசு, "அந்த நாளையும் வேளையையும் பற்றி தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது" என்பார். அப்படியானால் மானிட மகன் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்காக நாம் விழிப்பாய், ஆயத்தமாய் இருக்கவேண்டும் என்பதுதான் நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

மானிட மகனது வருகைக்கு நாம் ஆயத்தமாக இருக்கின்றோமா என்பது நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. பல நேரங்கில் நாம் போதுமான நேரம் இருக்கின்றபோது அதனைப் பயனில்லாமல் கழித்துவிட்டு, கடைசி நேரத்தில் அவசரப்பட்டு எதையுமே சரியாகச் செய்யாமல் தத்தளிக்கின்றோம். கிறிஸ்தவ வாழ்விற்கு அத்தகைய மெத்தனப் போக்கு கூடவே கூடாது. கிறிஸ்துவின் வழியில் நடக்கும் நாம் எப்போதும் எதற்கும் ஆயத்தமாக இருக்கவேண்டும்.

முன்பொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த ஒரு ஊரில் எண்ணையால் எரியும் கலங்கரை விளக்கு ஒன்று இருந்து. அந்தக் கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன. காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது, விளக்கு அணையாமல் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே. தொடக்கத்தில் எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.

ஒரு கடுங்குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார். "தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக்கூட எண்ணை இல்லை. நீ கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன்" என்று கெஞ்சினார். மனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான். அடுத்த நாள் இரவு மறுபடியும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன். "அண்ணே! நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்" என்று வெகு இளக்கமாகப் பேசினான். காப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை கொடுத்தனுப்பினான். மூன்றாம் நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. "ராசா. வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா! நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்" என்றாள். அவளுக்கும் காப்பாளன் எண்ணை கொடுத்தான்.

வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டுவரும் வண்டி வர இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. காப்பாளன் வழக்கம்போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். அப்போதுதான் பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசிவரை விளக்கைச் செலுத்தப் போதாது என்று புரிந்தது. இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டுவிட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டான். எல்லோரும் கை விரித்து விட்டார்கள். வாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இதனால் இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி விட்டன.

கலங்கரை விளக்குக் காப்பாளன் ஆபத்து உதவுகிறேன் பேர்வழி என நினைத்துக்கொண்டு தன்னுடைய பொறுப்பில் கண்ணும் கருத்துமாய் இல்லாமல், விழிப்பில்லாமல் இருந்தமையால் மிகப் பெரிய அழிவு ஏற்பட காரணமானான். மானிட மகனது வருகையின்போது விழிப்பில்லாமல், ஆயத்தமில்லாமல் இருந்தால் இதுபோன்ற அழிவைத்தான் நாம் சந்திக்க நேரிடும்.

ஆகவே, மானிட மகனது வருகைக்கு நம்மையே தயாரிக்கும் பொருட்டு எப்போதும் விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருப்போம். இறைவன் வரும்வரை அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
தானியேல் 12:1-3 எபிரேயர் 10:11-14,18 மாற்கு 13:24-32

உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள்!

'பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்.
நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்' (சஉ 3:2) என்று சொல்லும் எபிரேயக் கவிஞர் சபை உரையாளர் என்றாலும் சரி,

'பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்' என்று சொல்லும் தமிழ் ஞானி பட்டினத்தார் என்றாலும் சரி,

வாழ்வின் இருதுருவ நிலைகளை மிக அழகாக உணர்ந்தவர்களாகவும், உணர்த்தியவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்த உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நாம் இரண்டு மணி நேரங்கள் பார்க்கும் சினிமா, அல்லது இரண்டு நாள்கள் படிக்கும் நாவல் கூட, 'முடிவு எப்படி இருக்கும்?' என்ற ஆவலை நம்மில் எழுப்பிவிடும்போது, நாம் 70 ஆண்டுகள், 80 ஆண்டுகள் வாழும் வாழ்க்கை, 'என் முடிவு எப்படி இருக்கும்?' என்ற கேள்வியையும், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்துவரும் இப்பிரபஞ்சத்தின் முடிவு எப்படி இருக்கும்? என்ற கேள்வியையும் நம்மில் எழுப்பாமல் இருக்காதா?

உலகம் முடியுமா? முடியாதா? எப்போது முடியும்? எப்படி முடியும்? மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமா? அல்லது அண்ட சராசரத்தின் ஆக்கம், அழிவு போல பூமி தானாகவே அழிந்து விடுமா? கடவுள் வருவாரா? எப்படி வருவார்? எல்லாருக்கும் தீர்ப்பு வழங்குவாரா? நம் இந்தியப் பின்புலத்தில் கேள்விகள் இன்னும் அதிகமாகின்றன: எந்தக் கடவுள் வருவார்? கிறிஸ்தவரல்லாதவருக்கு என்ன நடக்கும்? ஒருவேளை எல்லாக் கடவுளர்களும் சேர்ந்து வருவார்களா?

'சட்டென்று மாறுது வானிலை' என்பதுபோல, 'இதெல்லாம் பார்க்க நாம இருக்க மாட்டோம்' என்ற எண்ணமும் நம் மூளையில் மின்னி மறைகின்றது.

ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் என அழைக்கப்படுகின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா என்னும் மூவரும் உலகின் இறுதி பற்றியும், மானிடமகனின் இரண்டாம் வருகை பற்றியும் பதிவு செய்கின்றனர். யோவான் இறுதி நாட்கள் பற்றியும், செம்மறியின் இரண்டாம் வருகை பற்றியும் திருவெளிப்பாடு என்ற புதிய நூலையே படைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 13:24-32) காணப்படும் பகுதி 'வெளிப்பாட்டு நடை' என்னும் இலக்கியக் கூற்றைப் பயன்படுத்தி எழுதப்பட்டடிருந்தாலும், இப்பகுதியில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் தனி மனித வாழ்வில் நடக்கின்றன என்றும் நாம் உருவகித்துக்கொள்ள முடியும்.

'அந்நாள்களில்' - 'நம் வாழ்வின் இறுதி நாள்களில்'

'வேதனைகளுக்குப் பிறகு' - 'நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பிறகு'

'கதிரவன் இருண்டுவிடும்' - 'நம் கண்கள் மூடிவிடும் அல்லது மங்கிவிடும்'

'நிலா ஒளிகொடாது' - 'நம் உடலில் வெப்பம் இருக்காது'

'விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்' - 'நாம் பெற்ற அனைத்து உறவுகளும் நம்மைவிட்டு அகலும்'

'வான்வெளிக் கோள்கள் அதிரும்' - 'நாம் வாழும் குடும்பத்தில், சமூகத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படும்'

'மானிடமகன் மாட்சியோடு மேகங்கள் மீது வருவார்' - 'நம் உயிர் தன்னைப் படைத்த இறைவனிடம் திரும்பிச் செல்லும்'

இந்த உருவகம் சாத்தியமா என்று நாம் கேட்கலாம்?

சாத்தியம். ஏனெனில், இத்தகைய உருவகத்தைத்தான் நாம் சஉ 12:1-6ல் வாசிக்கின்றோம்.

ஆக, இயேசு குறிப்பிடும் நிகழ்வுகள் எல்லாம் என் வாழ்விலும், உங்கள் வாழ்விலும் நடந்தேறும் நிதர்சனமான நிகழ்வுகள்.

இவ்வறிகுறிகளைச் சொல்லிவிட்டு, 'அத்திமரத்திலிருந்திலிருந்து உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள்' என்கிறார். அந்த உண்மை என்ன?

இலையுதிர்காலத்தில் தன் இலைகளை எல்லாம் இழந்து, பனிக்காலத்தில் வெறும் குச்சிகளாக நின்று பனியைத் தாங்கி, வசந்தகாலத்தில் மெதுவாக தளிர்விட்டு, கோடைகாலத்தில் பச்சைப் பசேலென இருக்கிறது அத்திமரம். ஆனால், இப்பச்சை இலைகள் நிரந்தரமல்ல. மீண்டும் சக்கரம் சுற்றும். இலைகள் உதிரும், மலரும், மலரும், உதிரும். வாழ்க்கையின் ஓட்டத்தை 'ஃப்ரீஸ்' செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது இறந்துவிடும். (இறந்ததை மட்டும்தான் நாம் ஃப்ரீஸ் செய்கிறோம். இல்லையா?)

ஆக, அத்திரமரம் நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?

'மாற்றம் ஒன்றே நிலையானது'

மாற்றத்திற்கு ஒத்துழைக்கும் உயிர்தான் வாழ முடியும். மறுவாழ்விற்குப் பிறக்க முடியும்.

மேலும், என் உடலின், மனதின் மாற்றம் என்னைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஆக, மாற்றம் என்பது ஒரு தனிநபர் அனுபவம்.

இறந்தன உயிர்க்கும், இருப்பன இறக்கும் என்ற இதே செய்தியைத்தான், இதே மாற்றத்தைத்தான் இன்றைய முதல் வாசகத்திலும் (காண். தானி 12:1-3) நாம் வாசிக்கிறோம். பல்த்தசார் என்று அழைக்கப்பட்ட தானியேல், பாரசீக மன்னன் சைரசின் காலத்தில் காட்சி ஒன்று காண்கின்றார். அந்தக் காட்சியில் முடிவின் காலம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது. அந்த முடிவின் காலம் எப்படி இருக்கும் என்று தென்திசை மன்னனுக்கு (பெயரில்லாத மன்னன்!) தானியேல் அறிவிப்பதே இன்றைய முதல் வாசகம். இன்றைய முதல் வாசகம் இறுதிநாளைப் பற்றிச் சொல்லும்போது ஐந்து கூறுகளைக் குறிப்பிடுகிறது: (அ) தலைமைக் காவலர் மிக்கேல் எழும்புவார், (ஆ) துன்ப காலம் வரும், (இ) வாழ்வின் நூலில் பெயர் எழுதப்பட்டவர்கள், (ஈ) நல்லவர்கள் பரிசு பெறுவர், மற்றும் (உ) கெட்டவர்கள் தண்டனை பெறுவர். இன்ப காலம் மறைந்து துன்ப காலமும், அது முடிந்து மீண்டும் இன்ப காலமும் வருவதைச் சொல்கிறது தானியேலின் காட்சி.

'பிறப்பு இறப்பு' 'வளர்ச்சி தளர்ச்சி' 'இன்பம் துன்பம்' எனச் சுற்றிவரும் வாழ்க்கைச் சக்கரத்தை நாம் எப்படி நகர்த்துவது?

இன்றைய இரண்டாம் வாசகமும் (காண். எபி 10:11-14,18), பதிலுரைப் பாடலும் (திபா 16:5) நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றன:

1. 'ஒரே பலியைச் செலுத்துவது'

கடந்த 6 வாரங்களாக நாம் வாசித்துக்கொண்டுவரும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் பகுதி இன்று நிறைவு பெறுகிறது. இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் ஆசிரியர், பழைய ஏற்பாட்டுக் குரு நாள்தோறும் செலுத்தும் பலியையும், இயேசுவின் ஒரே பலியையும் ஒப்பிடுகின்றார். இந்த ஆன்மீகச் செய்தியை நம் வாழ்வுப் பாடமாக எப்படி மாற்றுவது? நம் வாழ்க்கையை இரண்டு நிலைகளில் வாழ நம்மால் முடியும்: (அ) நாள்தோறும் ஒரே மாதிரி வாழ்வது - இவ்வகை வாழ்வில் புதுமை இருக்காது. எல்லாரையும் போல மற்றவர்கள் எதிர்பார்ப்பதை மட்டும் நாம் செய்துவிட்டு ஓய்ந்திருப்போம். (ஆ) ஒரே முறை வாழ்வது - இனிமையாக, முழுமையாக வாழ்வது. இவ்வகை வாழ்வில் புதுமையும், புத்துணர்ச்சியும் இருக்கும். இந்த வாழ்க்கை நம் கையெழுத்தைப் போல நமக்கே உரிய தனிப்பட்ட ஒன்றாக இருக்கும்.

நாள்தோறும் ஒரே மாதிரி வாழ்வது எளிது. ஏனெனில் இத்தகைய வாழ்வு சாவி கொடுத்த பொம்மை போல ஒரே இடத்தில் ஆடிக்கொண்டிருப்பது போல, அல்லது ஒரே இடத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஓய்வுநாற்காலி போல இருக்கும். ஓய்வுநாற்காலி விடிய விடிய ஆடினாலும் ஒரு இன்ச் கூட நகர்வதில்லை. ஆனால், ஒரே முறையில் தள்ளப்படும் நடைவண்டி புதிய இடத்திற்குப் போவது மட்டுமல்லாமல், அது குழந்தை நடை பழகுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. மேலும், நாம் ஒரே முறை செய்யும் செயலில் நம் முழு மனம், சிந்தனை, மற்றும் ஆற்றலைப் பயன்படுத்துகிறோம்.

ஆக, நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி: 'நாள்தோறும் போல வாழ்கிறேனா?' அல்லது 'ஒரே முறை போல வாழ்கிறேனா?'

2. 'நிறைவுள்ளவரா(க்கு)தல்'

செடியில் மலரும் ஒரு பூ அப்படியே வாடிவிட்டால் அது வாடிவிட்டது என்கிறோம். ஆனால், அது பிஞ்சாகி பழுத்துவிட்டால் வெம்பிவிட்டது என்கிறோம். ஆனால், முழுவதும் கனியானால் அதை இரசிக்கிறோம். ஆக, கனி என்பது வேரின் நிறைவு. அதுபோலவே, இறப்பு என்பது பிறப்பின் நிறைவு. இந்த நிறைவு உண்மையிலேயே நிறைவாக இருத்தல் வேண்டும். 'இறப்பு உன்னிடம் வரும்போது உயிரோடு இரு' என்பது ஆப்பிரிக்க பழமொழி. அதாவது, வாழும்போதே இறந்துவிடாதே! அல்லது உன்னை நீயே அழித்துவிடாதே! அல்லது வெறும் நடைபிணம் போல வாழாதே!

நேற்றைய என் நாளை விட நான் இன்று நிறைவுள்ளவனாக இருக்க வேண்டும். அதுதான் வளர்ச்சி. நேற்று நான் எடுத்த முடிவுகள் இன்று நான் எப்படி இருக்கிறேன் என்பதை உறுதி செய்கின்றன. அதுபோல, இன்று நான் எடுக்கும் முடிவுகள் நாளை நான் எப்படி இருப்பேன் என்பதை உறுதி செய்கின்றன. அப்படி என்றால், என் முடிவுகளும், தெரிவுகளும் சரியானதாக இருக்க வேண்டும். நேற்றைய காரணத்தால் இன்றைய காரியம் நடக்கிறது. காரியத்தை நான் கட்டுப்படுத்த காரணத்தைக் கட்டுப்படுத்த வேண்டும. இறப்பு என்னும் காரியத்தை நான் கட்டுப்படுத்த வாழ்க்கை என்ற காரணத்தை நான் கட்டுப்படுத்த வேண்டும். ஆக, ஒவ்வொரு பொழுதும் நான் நிறைவு பெறுகிறேனா? என்று கேட்க வேண்டும். அதே நேரத்தில், நம் குறைவுத்தன்மையை அறிந்து உணர்ந்து, அதை நிறைவின் காரணியாகப் பார்த்தல் நலம்.

3. 'ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து. அவரே என் கிண்ணம். எனக்குரிய பங்கைக் காப்பவர் அவரே.'

நம் வாழ்க்கை இனிமையான அனுபவமாக இருக்க கடவுள், விதி, மறுபிறப்பு என எதையாவது ஒன்றை நம்பியே ஆக வேண்டும். இந்த நம்பிக்கையில் நாம் திரும்பிப் பார்க்கும்போதுதான் வாழ்வின் ஒவ்வொரு புள்ளிகளும் மிக அழகாக இணையும். என் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புள்ளியாக வளர்ந்துகொண்டே வரும். அது கடவுள், விதி, மறுபிறப்பு என்னும் ஒற்றைப் புள்ளியில் இணையும். வெறும் கோலமாவை அள்ளித் தெளிப்பதால் கோலம் வந்துவிடுமா? இல்லை. நிதானமாக, அளந்து, பொருத்தி வைக்கப்படும் புள்ளிகளே கோலத்தை உருவாக்கும்.

என் வாழ்வின் சொத்து என நான் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்றை நினைக்கிறேன். சிறு குழந்தையாக இருந்தபோது நிறைய சிகரெட் அட்டைகள் வைத்திருக்கும் சிறுவன் விளையாட்டில் பணக்காரன் எனக் கருதப்படுவான். ஆனால், வயது வந்து நான் வளர்ந்தவடன் சிகரெட் அட்டைகள் சேகரித்தால் அது விளையாட்டுத்தனமாகத் தெரியும். வளர்ந்த நான் நிறைய ரூபாய் நோட்டுக்களைச் சேகரிக்க ஆரம்பிக்கிறேன். மற்றவர்கள் என்னைப் பணக்காரன் என்று சொல்வார்கள். ஒரு காலத்தில் நானே எண்ணிச் சேகரித்த சிகரெட் அட்டைகளை இன்று நான் ஏன் குப்பையில் போடுகிறேன்? வாழ்வில் சேகரிக்கும் சொத்துக்கள் அனைத்தும் மாறக்கூடியவை. என் உடல் நலம், அழகு, படிப்பு, வேலை, பதவி, சமூக நிலை, உறவு என நான் சேகரிக்கும் அனைத்தும் ஒருநாள் காலாவதியாய்ப் போகும். நான் ஓடி ஓடி நிறைக்கும் கிண்ணம் கடைசியில் வெறுமையாய் இருக்கும். நான் இவ்வளவு நாள் போட்டது இந்த ஓட்டைக் கிண்ணத்திலா? என்று மனம் குற்றவுணர்வு கொள்ளும். ஆனால், ஆண்டவரை உரிமைச் சொத்தாகவும், அவரைத் தன் கிண்ணமாகவும் கொண்டிருப்பவர் பேறுபெற்றோர். அவர் ஏமாற்றமடையார். ஏனெனில் அவரின் பங்கைக் காப்பவர் கடவுள்.

உலகம் முடியுமா? முடியாதா? மானிட மகன் வருவாரா? வரமாட்டாரா? என்ற கவலையும், ஏக்கமும் வேண்டாம். 'இதோ சீக்கிரம் வருகிறார்' என யாராவது தெருவில் முழக்கமிட்டுப் போனால், நீங்கள் பதற வேண்டாம். 'மனம் மாறு. அவரிடம் திரும்பி வா' என எவராவது கத்தினால் பயப்பட வேண்டாம். நிதானமாகவும், பொறுமையாகவும் நம் வாழ்வு முடிவு பெறுவதை எண்ணிப் பார்ப்போம்.

'நன்றாக நல்ல வேலை செய்த நாள் நல்ல தூக்கத்தைத் தருவதுபோல, நன்றாக நல்ல நிலையில் வாழ்ந்த வாழ்க்கை நல்ல இறப்பைத் தரும்' என்பார் டாவின்சி.

வரட்டும் அவர் எப்போது வேண்டுமானாலும்! அவருக்கே தெரியாது அவரின் வருகை!
பின் ஏன் நாம் கவலைப்பட வேண்டும்?

அத்திமரத்திலிருந்து நாம் கற்கும் உண்மை இதுதான்: தளர்வன வளரும், வளர்வன தளரும்!

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
பொதுக்காலம் 33-ம் ஞாயிறு கவிதை
தானி 12: 1-3
எபி10: 11-14, 18
மாற் 13: 24-32

பயம் வேண்டாமே... பண்படுவோமே... மரணம்
யாராலும்
புரிந்துகொள்ள
முடியாத வார்த்தை
ஏற்றுக்கொள்ள
முடியாத இழப்பு
உணர்ந்துகொள்ள
இயலாத வாழ்வின் புதிர்
எப்போது நிகழும்
ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்
பிறப்பும் சரி
இறப்பும் சரி
வருகிறது
மறைகிறது
இது எதார்த்தம்
இரண்டாம் வருகை
ஆண்டவரின் நாள்
இயேசுவின் வருகை
நிதர்சனமான உண்மை
நிச்சயம் நடக்கும்
ஆனால் நம்மை
நிம்மதியற்ற நிலைக்கு
தள்ளும்; அளவிற்கு
போதிக்கின்ற கூட்டமும்
குழப்பத்தை ஏற்படுத்தி
குடும்பம் நடத்துகிற
கூட்டமும்
பயத்தை உருவாக்கி
பணம் சம்பாதிக்கும் கூட்டமும்
மூளைச் சலவை செய்து
நம்மை முடங்கிப் போக
செய்யும் கூட்டமும்
இன்று புற்றீசல்கள்
போன்று வளர்ந்துவிட்டன!
இரட்சிக்கப்பட்டவன்
என்றுச் சொல்லி
எஞ்சியிருப்போரின்
இரத்தத்தை உறிஞ்சும்
அட்டைப்பூச்சிகள்
அதிகமாகிவிட்ட சூழல்
மேலோங்கிவிட்டது...
இப்படிப்பட்ட மனிதர்கள்
நம்மில் இல்லாமல் இல்லை
வருகையை எதிர்பார்த்து
அன்றாட தேவைகளை
வேலைகளை ஒதுக்கிவைப்போருக்கு
எங்கிருந்து மீட்பு வரும்?
இயேசு எங்கேயும்
யாரையும்
எதற்கும்
பயமுறுத்தியதாய்
விவிலியத்தில் சொல்லப்படவில்லை
பயமுறுத்தவுமில்லை
பயத்திலே மக்களை வைத்து
வாழ்வை நகர்த்தியவருமில்லை
அப்படியிருக்க
எங்கிருந்து வருகிறது
இந்தப் பயம் ...
அத்திமரத்தை அடையாளம்காட்டி
உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள்
என்கிறார் இறைமகன் இயேசு!
உதிர்கிறது
துளிர்கிறது
மலர்கிறது
மீண்டும் உதிர்கிறது
இதுவல்லவா வாழ்க்கை!
இறப்பு
என்றாவது ஒருநாள் வரும்
கடவுளின் வருகையும்
நிச்சயம் வரும்
என்றோ வருகிற வருகைக்காய்
பயப்படக்கூடாது
நம் மனதைப் பண்படுத்த
வேண்டும்
நம் உள்ளத்தை
உறுதிப்படுத்த வேண்டும்
என்கிறது இறைவாக்கு வழிபாடு
தானியேல் நூலின் வழியாய்
அச்சத்தை நீக்கி
அரவணைப்பைத் தரும் இறைவன்
கிறித்து ஒருவரே
நம்மைப் பலியானார்
அவரின் வழியாய்
மீட்பை நாம் சுவைத்துவிட்டோம்
என்று எபிரேய மடல் முழுங்குகிறது
நற்செய்தியோ அத்திமரத்திலிருந்து
கற்றுக்கொள்ளுங்கள்
என்ற அழைப்பைத் தருகிறது
அத்திமரம்
உதிர்வதுபோன்று
மனிதரும் உதிர்வர்
மீண்டும் விண்ணில் மலர்வர்
இதற்கான முன்னோட்டமே
இன்றைய நற்செய்தி...
கதிரவன் இருளும்
இது உங்கள் உறவுகளைக் குறிக்கலாம்
நிலா ஒளிகொடாது
இது உங்கள் நட்பு வட்டாரத்தைக் குறிக்கலாம்
விண்மீன் விழும்
இது உங்கள் நல்லெண்ணத்தைக் குறிக்கலாம்
வான்வெளி கோள்கள் அதிரும்
இது உங்களைச் சுற்றி இருப்போரைக் குறிக்கலாம்
இத்தனையும் மறையும்
நீங்களும் மறைவீர்கள்
ஆனால்,
மானிட மகனோ
மாட்சியுடன் வருவார்
மாண்போடு உங்களை அணைப்பார்
கிறித்து வருவது
அவருக்கே தெரியாது
அப்படியிருக்க கூட்டங்களில்
போதிப்பவர்களுக்கு
எப்படித் தெரியும்
நம்புங்கள் அவர் வருகையை
தொடர்ந்து வேண்டுங்கள்
நல்ல வாழ்விற்காய்
பயப்படாதீர்கள்
கலங்காதீர்கள்
பயம் வேண்டாம்
மற்றவர்களின் பயமுறுத்தலைப்
பொருட்படுத்தவும் வேண்டாம்
நல்லவற்றைப்
பாருங்கள்
கேளுங்கள்
எண்ணுங்கள்
செயல்பாடுகள்
அப்போது வானதூதர்
மக்களைக் கூட்டிச் சேர்க்கையில்
நாமும் ஒருவராய் இருப்போம்
ஆண்டவரின் மாட்சியில் பங்கு பெறுவோம்!
ஆமென்
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!