|
16
நவம்பர் 2018 |
|
பொதுக்காலம்
32ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையும்
மகனும் இருக்கிறார்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்
(4-9)
தேர்தெடுக்கப்பட்ட பெருமாட்டியே, தந்தையிடமிருந்து நாம் பெற்ற
கட்டளைப்படி, உம்முடைய பிள்ளைகளுள் சிலர் உண்மைக்கேற்ப நடப்பது
கண்டு நான் பெருமகிழ்ச்சியுற்றேன்.
பெருமாட்டியே, நான் இப்பொழுது உம்மிடம் கேட்டுக்கொள்வது இதுவே:
ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். இதை நான் ஒரு புதிய கட்டளையாக
எழுதவில்லை. இது தொடக்கத்திலிருந்தே நமக்குள்ள கட்டளை. நாம்
அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது. அந்தக் கட்டளை
நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்ததுதான்; அதைக் கடைப்பிடித்து
வாழுங்கள். ஏனெனில் ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர்.
இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள். உங்கள் உழைப்பின்
பயனை இழந்துவிடாமல் முழுக் கைம்மாறு பெற்றுக்கொள்ளக் கவனமாயிருங்கள்.
கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திராமல் வரம்பு மீறிச் செல்வோர்
கடவுளைக் கொண்டிருப்பதில்லை. அவர் போதனையில் நிலைத்திருப் போரிடமே
தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 119:
1,2. 10, 11. 17, 18 (பல்லவி: 1b)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி
நடப்போர் பேறுபெற்றோர்.
2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்;
முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர்.
-பல்லவி
10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை
விட்டு என்னை விலக விடாதேயும்.
11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில்
இருத்தியுள்ளேன்.
-பல்லவி
17 உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக்
கடைப்பிடித்து வாழ்வேன்.
18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என்
கண்களைத் திறந்தருளும்.
-பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் (21: 28)
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில்
உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே
நடக்கும்.
புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் (17: 26-37)
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "நோவாவின் காலத்தில்
நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா
பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும்
உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள்
அனைவரையும் அழித்தது.
அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள்,
குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள்.
லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த
தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும்
நாளிலும் அப்படியே நடக்கும். அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில்
இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க
வேண்டாம்.
அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை
நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை
இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்.
நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர்
படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர்
விட்டுவிடப்படுவார். இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர்.
ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர்
விட்டுவிடப்படுவார்."
அவர்கள் இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, இது எங்கே நிகழும்?"
என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், "பிணம் எங்கே இருக்கிறதோ
அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
"தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை
இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்"
ஈரான் தேசத்தில் கேசப்ரட் என்ற நதியின் மீது, 'டஸ் நகரத்துப்
பாலம்' எழுப்பப்பட்டுள்ளது. இதைக் கட்டியவர் ஒரு கவிஞர். என்னது
கவிஞர் கட்டினாரா என வியப்பாக இருக்கிறதா? ஆனால், அதுதான் உண்மை.
அந்த கவிஞர் பெயர், 'பிர்தவுஸி.' 60 ஆயிரம் பாடல்களைக் கொண்டு,
'ஷாநாமா' என்ற காவியத்தை இயற்றியவர்.
கி.பி.932 லிருந்து 1020 வரை வாழ்ந்தவர் கவிஞர் பிர்தவுஸி. ஈரானின்
ஹோமர் என்று புகழப்படுபவர். இக்கவிஞரை ஆதரித்த மன்னர் சுல்தான்
முகமது கஸின், பிர்தவுஸி பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு
பொற்காசு அளிக்கும்படி தன் கஜானா அதிகாரிக்கு ஆணையிட்டார். இதை
ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, தன்னுடைய ஊருக்கு ஏதாவது செய்யவேண்டும்
என்ற எண்ணத்தில் இரவு பகல் பாராமல், கடினமாக உழைத்து "ஷாநாமா"
என்ற மகத்தான படைப்பை எழுதி முடித்தார் பிர்தவுஸி. இதை எழுதி
முடிக்க அவருக்கு 35 ஆண்டுகளாயிற்று. சுல்தானின் ஆணைப்படி, அவர்
இயற்றிய 60 ஆயிரம் பாடல்களைக் கொண்ட காவியத்துக்கு அன்பளிப்பாக
60 ஆயிரம் வெள்ளிக்காசுகளைச் சுமந்து வந்து நின்றது ஒரு யானை.
ஆனால், வாக்களித்ததோ பொற்காசுகள். தரப்பட்டதோ வெள்ளிக்காசுகள்.
கோபம் கொண்ட பிர்தவுஸி, 60 ஆயிரம் வெள்ளிக்காசுகளை 3 பங்காக்கினார்.
ஒரு பங்கை, அதைக் கொண்டு வந்த யானைப் பாகனுக்கு இனாமாக வழங்கினார்.
இரண்டாவதை தன் ஒரு குளியலுக்கான கூலியாக வழங்கினார். மூன்றாவதை
ஒரு கோப்பை பீர் பானத்துக்கு விலையாகக் கொடுத்தார்.
(20 ஆயிரம் வெள்ளிக்காசுகளின் இன்றைய மதிப்பு என்ன தெரியுமா? 2
மில்லியன் டாலர்கள்! சரித்திரத்திலேயே மிக, மிக, விலையுயர்ந்த
பீர் பானம் பிர்தவுஸி பருகியதாகத் தானிருக்கும்).
பிறகு, தன் தவறை உணர்ந்து மனம் வருந்திய சுல்தான், பொற்காசுகளை
ஒட்டகங்களின் மீது ஏற்றி அனுப்பி வைத்தார். ஆனால், காலங்கடந்த
மனமாற்றமாகி விட்டது அது. சுல்தான் அனுப்பிய ஒட்டக வரிசை மகாகவி
பிர்தவுஸியின் சவ ஊர்வலத்தைத்தான் சந்தித்தது. ஆம், பிர்தவுஸி
இரவு பகல் பாராமல் உடலை வருத்தி எழுதிய
"ஷாநாமா" என்ற அமர காவியத்திற்கான
பரிசிலை அவர் பெறவில்லை. அவருடைய மனைவிதான் அதைப்
பெற்றுக்கொண்டார். அதைப், பெற்றுக்கொண்ட அவரின் மனைவி, நகர அதிகாரிகளிடம்
அதைச் சேர்ப்பித்து அதைக் கொண்டு கேப்ரட் நதியின் மீது ஒரு பாலம்
கட்டும்படி கேட்டுக் கொண்டாள். அவ்வாறு எழுப்பட்டதுதான் டஸ்
நகரத்துப் பாலம் பாலம்.
இன்றைக்கு பிர்தவுஸி வாழ்ந்த டஸ் நகரம் மறைந்து போனாலும் அவர்
பாடிய 'ஷாநாமா' என்ற அமர காவியமும் அதனால் எழுந்த பலமும் இன்றும்,
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும்கூட நிலைத்திருக்கிறது.
தன் ஊர் மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்பதற்காக தன்னுடைய
வாழ்வையே அர்ப்பணித்த பிர்தவுஸி என்றும் நினைவுகூரப்பட
வேண்டியவர்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, மானிட மகனுடைய வருகையைப்
பற்றியும் அவருடைய வருகையின்போது என்னென்னலாம் நடக்கும்
என்பதைக் குறித்துப் பேசுகின்றார். அப்படிப் பேசுகின்றபோது
சொல்கின்ற வார்த்தைகள்தான்
"தன் உயிரைக் காத்துக் கொள்ள
வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக்
காத்துக்கொள்வர்" என்பதாகும். மானிட மகனுடைய வருகை எப்போது
வேண்டுமானாலும் நிகழலாம் (மத் 25:13, லூக் 12:40,46) என்று
சொல்லும் இயேசு, அத்தகைய வருகையின்போது யாராரெல்லாம் ஆயத்தமாக
இருப்பதையும் தன்னுடைய விழுமியங்களின்படி நடப்பதையும்
பிறருக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்வதையும் அவர் காண்பாரோ,
அவர்கள் விண்ணகத்தை தமக்கு உரித்தாக்கிக் கொள்வார்கள்
என்கின்றார்.
மண்ணகத்தில் நாம் வாழுகின்ற வாழ்க்கை, பிறர் நலம்
சார்ந்ததாகவும் கிறிஸ்துவின் விழுமியங்களின் படி நடப்பதாகவும்
இருக்கின்றதா? அல்லது சுயநலச் சேற்றில் சிக்குண்டு
கிடைக்கின்றதா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஐய்யன் திருவள்ளுவர் சொல்வார், "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்
வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்று. ஆம், எவர்
ஒருவர் தன்னுடைய மண்ணக வாழ்வாகவும் பிறர்நலம் சார்ந்ததாகவும்
அமைத்துக்கொள்கின்றாரோ அவருக்கே விண்ணகத்தில் இடம் உண்டு.
ஆகவே, நம்முடைய வாழ்வை இறைவனுக்கு உகந்ததாகவும் பிறர் நலம்
சார்ந்ததாகும் பிறருக்காக நம்மை அர்ப்பணிப்பதாகவும் அமைத்துக்
கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
"தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்
தம் உயிரை இழப்பவரோ அதைத் காத்துக்கொள்வர்" (லூக்கா 17:33)
-- இயேசு தாம் அறிவித்த இறையாட்சியின் பொருட்டு சீடர்கள் தம்
உயிரையும் இழக்கத் தயங்கலாகாது என்று போதித்தார். ஒன்றை நாம்
அடைய விரும்பும்போது இன்னொன்றை இழக்க நேரிடுகிறது. வளரும் பருவத்தில்
ஒரு சிறுகுழந்தை தன் குழந்தைப் பருவத்தைத் தாண்டிச் செல்ல தயாராக
இல்லாமல் இருக்கலாம். ஆனால், முழு மனிதராக வளர வேண்டும் என்றால்
குழந்தைப் பருவ நிலையிலேயே தேங்கிப் போய்விடலாகாது. அடுத்த பருவ
வளர்ச்சியும் அப்படியே. இளமைப் பருவத்தைத் தாண்டி முதிர் பருவத்தை
அடைய வேண்டும் என்றால் முன்னைய பருவத்தை இழக்க வேண்டும். ஆக,
புதிய ஒரு நிலையை அடைய அரும்புவோர் பழைய நிலையைத் தாண்டிச்
செல்ல வேண்டும். இது இயற்கை நியதி.
-- மனிதர் தம் உயிரின்மீது பற்றுக் கொண்டிருப்பது தவறு அல்ல.
கடவுள் படைத்த படைப்புகள் அனைத்துமே கடவுள் தங்களுக்கு அளித்துள்ள
கொடைகளுக்காகக் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். மனித உயிர் என்பது
கடவுள் நமக்கு வழங்குகின்ற அடிப்படையான கொடை. உயிர் இருந்தால்தான்
இவ்வுலகில் நாம் நம்மைக் கவனித்துப் பேணி, நலமான வாழ்வு வாழ
இயலும். ஆகவே தம் உயிரை எப்படியாவது காக்க வேண்டும் என்னும்
விருப்பம் எல்லா மனிதருக்கும் உண்டு.உலக சமயங்களும் இவ்வாறே மனித
வாழ்க்கையின் நிலையாத் தன்மை பற்றிச் சிந்தித்துள்ளன. நம் உயிர்
நமக்குக் கடவுள் தந்த ஒப்புயர்வற்ற, அடிப்படையான கொடை. ஆனால்
ஒரு நாள் நம் உயிர் நம்மைவிட்டுப் பிரிந்துபோகும். இது மனித
வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்று. இருந்தாலும், பிறப்பு ஒரு
மறைபொருள் என்றால் இறப்பு அதைவிடவும் புரியாத புதிராகவே உள்ளது.
ஆனால் இயேசு நம் உயிரின் உண்மையான மதிப்பை நமக்கு உணர்த்துகிறார்.
உலக வாழ்க்கை மனிதருக்கு அறுதியான வாழ்க்கையல்ல, மாறாக, இவ்வுலக
வாழ்க்கையைத் தாண்டி நிலைகொள்கின்ற அழியா வாழ்வு ஒன்று உள்ளது.
இவ்வுண்மையை நாம் உணர்ந்தால் மனித உயிரை எப்படியாவது தக்கவைத்துக்
கொள்ளவேண்டும் என்கிற கவலை நம்மை ஆட்டிப்படைக்க இயலாது. மாறாக,
நாம் கொடையாகப் பெற்றுக்கொண்ட உயிர் என்னும் கருவூலத்தைக் கடவுளுக்கே
காணிக்கையாக்கிட நாம் அழைக்கப்படுகிறோம். இக்காணிக்கையின்
பொருள் என்ன? சிலர் தம் வாழ்க்கையால் கிறிஸ்துவுக்குச் சான்று
பகர்வர்; வேறு சிலர் தம் சாவால் கிறிஸ்துவை அறிவிப்பார்கள். எவ்வாறு
சான்றுபகர்ந்தாலும் சரி, நம் வாழ்க்கையின் முதன்மைகள் முறையாக
இருக்கவேண்டும். கடவுளுக்கு முதலிடம் அளித்தால் நம் உயிர் கடவுளிடமிருந்து
வந்து, கடவுளில் நிலைகொண்டு, கடவுளை நோக்கியே சென்றிட படைக்கப்பட்டது
என நாம் உணர்ந்துகொள்வோம். அப்போது கடவுளுக்காக நம் உயிரை இழப்பது
அதை மீண்டும் கண்டுபிடிப்பதற்குச் சமமாகும்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|