Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   12  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 32ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நான் உனக்குப் பணித்தபடியே மூப்பர்களை ஏற்படுத்தும்.

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் (1: 1-9)

அனைவருக்கும் பொதுவான விசுவாச அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை தீத்துக்கு, கடவுளின் பணியாளனும் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனுமாகிய பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் நம்பிக்கை கொள்ளவும் நிலைவாழ்வை எதிர்நோக்கி இறைப்பற்றுக்கு இசைந்த உண்மை அறிவைப் பெறவும் நான் திருத்தூதனாய் இருக்கிறேன்.

இந் நிலைவாழ்வை, பொய் கூறாத கடவுள், காலங்கள் தொடங்கும் முன்னே வாக்களித்தார். ஏற்ற காலத்தில் நற்செய்தியைப் பறைசாற்றியதன் வாயிலாகத் தம் செய்தியை வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியைப் பறைசாற்றும் பணி நம் மீட்பராம் கடவுள் இட்ட கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்கு செய்து, நகர் தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன். இம்மூப்பர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதவராயும் ஒரு மனைவியைக் கொண்டவராயும் நம்பிக்கை கொண்ட பிள்ளைகளை உடையவராயும் இருக்க வேண்டும்.

தாறுமாறாக வாழ்பவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்களாகவோ கட்டுக்கடங்காதவர்களாகவோ இருக்கக்கூடாது. ஏனெனில் சபைக் கண்காணிப்பாளர்கள் கடவுள் பணியில் பொறுப்பாளர்களாய் இருப்பதால், அவர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதிருக்க வேண்டும். அகந்தை, முன்கோபம், குடிவெறி, வன்முறை, இழிவான ஊதியத்தின் மேல் ஆசை ஆகியவை இவர்களிடம் இருக்கக்கூடாது.

மாறாக, அவர்கள் விருந்தோம்பல், நன்மையில் நாட்டம், கட்டுப்பாடு, நேர்மை, அர்ப்பணம், தன்னடக்கம், ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட உண்மைச் செய்தியைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது அவர்கள் நலந்தரும் போதனையை அறிவுறுத்தவும் எதிர்த்துப் பேசுவோரின் தவற்றை எடுத்துக் காட்டவும் வல்லவர்களாய் இருப்பார்கள்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 6 காண்க)
=================================================================================
 பல்லவி: கடவுளின் முகத்தைத் தேடும் தலைமுறையினர் இவர்களே.

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே.
-பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்.
-பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே.
-பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 பிலி (2: 15-16)

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 நான் மனம் மாறிவிட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (17: 1-6)

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "பாவச் சோதனை வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு! அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதை விட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது. எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.

உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்து கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, 'நான் மனம் மாறிவிட்டேன்' என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்."

திருத்தூதர்கள் ஆண்டவரிடம், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்" என்று கேட்டார்கள்.

அதற்கு ஆண்டவர் கூறியது: "கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, 'நீ வேரோடே பெயர்ந்து போய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்"

கலிபோர்னியா மாகாணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு விமானம் திடிரென ஓர் உயரமான மரத்தில் மோதி நொறுங்கியது.

அந்தப் பகுதி கடுமையான பனி பொழியும் மலை பிரதேசம். அங்கே வெப்ப நிலை 50 டிகிரி செல்சியஸ், அதாவது எபிரோவைவிட ஐம்பது டிகிரி குறைவு, சாதாரணமாக அந்தக் குளிரில் இரண்டு நாட்களுக்கும் மேலாக யாரும் உயிர் வாழ முடியாது. ஆனால், அந்த விபத்தில் தப்பித்த இருவர், நாற்பத்தி எட்டு நாட்கள் உயிர்வாழ்ந்தார்கள்.

நாற்பத்தி எட்டு நாட்கள் கழித்து மீட்புக் குழுவினர் வந்து அவர்களைக் காப்பாற்றினர். அப்போது அந்தக் குழுவில் இருந்த ஒருவர் அவர்களிடம், "இரண்டு நாட்கள் கூட தாங்கமுடியாத இந்த இடத்தில், எப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் உயிர் வாழ்ந்தீர்கள்?" என்று கேட்டபோது, அவர்கள் இருவரும், "நாங்கள் இருவரும் நிச்சயம் காப்பாற்றப்படுவோம் என்று நம்பினோம். அந்த நம்பிக்கையிலேயே இருந்தோம். பல நாட்கள் பனிக்கட்டிகள்தான் உணவாக அமைந்தது. மரக்கட்டைகளைக் கொழுத்தி தீ மூட்டிக் கொண்டோம். இவ்வாறு எங்கள் நம்பிக்கை எங்களைக் காத்தது" என்று கூறினார்கள்.

நம்பிக்கை எத்துணை மகத்துமான ஒன்று. அதை நாம் கொண்டிருக்கின்றபோது, அது நம்முடைய வாழ்விற்கு எத்தகைய ஆற்றலைத் தருகின்றது என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு பல அறிவுரைகளைத் தருகின்றார். பிறருக்கு ஒருபோதும் துன்மாதிரியாகவோ அல்லது இடறலாகவோ இருக்கக்கூடாது என்றும் மன்னித்து வாழவேண்டும் என்றும் போதிக்கின்றார். இயேசு இவ்வாறெல்லாம் போதிப்பதைக் கேட்ட சீடர்கள் பதற்றமடைகின்றார்கள். காரணம் இவற்றையெல்லாம் எப்படிக் கடைப்பிடிப்பது என்பதால்தான். அதனால்தான் அவர்கள் இயேசுவிடம், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்" என்கின்றார்கள். நம்பிக்கை தங்களிடம் மிகுதியாகுகின்ற பட்சத்தில், இயேசு சொல்வதை எல்லாம் தங்களால் கடைபிடிக்க முடியும் என்ற எண்ணத்தில், அவர்கள் அவரிடம் அப்படிச் சொல்கின்றார்கள்.

ஆனால், இயேசுவோ நம்பிக்கையை மிகுதியாக்கவேண்டிய தேவையில்லை, "கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, 'நீ வேரோடே பெயர்ந்து போய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்" என்று கூறுகின்றார். ஆகையால், நம்மிடத்தில் பெரியளவு நம்பிக்கை இருக்கவேண்டும் என்ற தேவையில்லை, கடுகளவு இருந்தாலே போதும். அதனால் நம்மால் ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், வேடிக்கை என்னவெனில், நம்மிடம் கடுகளவு நம்பிக்கை கூட இல்லை. நம்மீதோ, பிறர்மீதோ, கடவுள்மீதோ பலருக்கு நம்பிக்கையே இல்லை. அவநம்பிக்கையோடுதான் தங்களுடைய வாழ்வை அவர்கள் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் ஒருவர் கிண்டலாகச் சொன்னார், "மனிதர்கள் இன்றைக்கு அதிகமாக அவதிப்படுவது நரம்புத் தளர்ச்சியினால் அல்ல, நம்பிக்கைத் தளர்ச்சியினால்" என்று. இதுதான் உண்மை. ஆகவே, இத்தகைய சூழ்நிலையில் நாம் அனைவரும் நம்பிக்கையோடு வாழ்வது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஒரு சமயம் வில்வித்தைப் பயிற்சியில் ஓர் இளைஞனை அவனுடைய தந்தை சேர்த்துவிட்டார். வித்தையில் சிறந்து விளங்க அந்த இளைஞனும் நல்ல ஆர்வம் காட்டினான். அதே நேரத்தில், தன்னால் இயலுமா? என்னும் சந்தேகம் அவனுக்கு இருந்தது. அவனைக் கவனித்த பயிற்சியாளர் அவனைக் கூப்பிட்டுப் பேசினார், "தம்பி! நீ வில்வித்தையில் சிறந்து விளங்க விரும்பினால், முதலில் வில்லை நம்பவேண்டும். பிறகு உன்னை நம்ப வேண்டும். அத்துடன் என்னையும் நம்பவேண்டும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக நான் எடுத்த இந்தக் காரியத்தில் இறைவனுக்கு வெற்றியைத் தருவார் என்று இறைவனையும் நம்பவேண்டும். இப்படி நீ நம்பிக்கையோடு இருந்தால், உன்னால் எதையும் சாதிக்கமுடியும்" என்றார். இதைக் கேட்ட அந்த இளைஞன், அவர் சொன்னதை அப்படியே நம்பி, புதிய உத்வேகத்துடன் பயற்சி எடுத்தான். பின்னாளில் பெரிய சாதனையாளனாக மாறினான்.

ஆம், நம்முடைய வாழ்வில் சிறந்த விளங்க வேண்டுமெனில் நம்ன்மீதும் பிறர்மீதும் எல்லாவற்றுக்கும் மேலாக இறைவன்மீதும் நம்பிக்கை வைத்து வாழவேண்டும். ஏனெனில், நம்பிக்கை என்பது சாதாரண வார்த்தையல்ல, அது பலருடைய வாழக்கையையே புரட்டிப்போட்ட ஓர் ஆற்றல் வாய்ந்த அருமருந்து. அத்தகைய நம்பிக்கையை நாமும் கொண்டு வாழ்ந்தால், நம்முடைய வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.

ஆகவே, நம்பிக்கையோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
"திருத்தூதர்கள் ஆண்டவரிடம், 'எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்' என்று கேட்டார்கள்" (லூக்கா 17:5)

"நம்பிக்கை" என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. ஏதாவது ஒரு பொருள்பற்றிக் கருத்துத் தெரிவித்தல் "நம்பிக்கை" எனக் கொள்ளப்படலாம். நாம் ஒரு கருத்துத் தெரிவிக்கும்போது, வேறு மனிதர் வேறு கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என ஏற்றுக்கொள்கிறோம். நாம் உண்மை என ஏற்பதையும் "நம்பிக்கை" எனலாம். இப்பொருளில் "சமய நம்பிக்கை" பற்றிப் பேசுகிறோம். இதற்கு நேர்மாறாக "மூட நம்பிக்கை" இருக்கிறது. அதாவது நாம் உறுதியாக ஏற்கின்ற ஒரு கருத்துக்கு உண்மையான ஆதாரம் இல்லை என்பது இதன் பொருள். இவை தவிர, நம்பிக்கை என்றால் "எதிர்காலத்தில் நிகழவிருக்கின்ற ஒரு நிகழ்ச்சி குறித்து நாம் தெரிவிக்கின்ற எதிர்பார்ப்பு" என்றும் பொருள்படலாம். நாளை மழை பெய்யும் என நம்புகிறேன் என்று ஒருவர் கூறுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆகவே, சீடர்கள் இயேசுவிடம் "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்" (லூக்கா 17:5) என்று விடுத்த வேண்டுகோளை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

இங்கே "நம்பிக்கை" என வருகின்ற சொல் பழைய விவிலியத் தமிழ் பெயர்ப்பில் "விசுவாசம்" என்றிருந்தது. விசுவாசம் என்பது வடமொழி என்பதால் அதை நல்ல தமிழில் "நம்பிக்கை" என்று கூறுகிறோம். எனவே, கிறிஸ்தவப் பார்வையில் "நம்பிக்கை" என்பது ஆழ்ந்த பொருள் கொண்டது. இதன் முதல் பொருள் "கடவுளை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வது" என்பதாகும். கடவுள் தம்மையே நமக்கு இயேசுவின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதாலும், அந்த வெளிப்பாட்டின் வழியாகக் கடவுள் நம்மோடு உரையாடுகிறார் என்பதாலும், நாம் கடவுளோடு உறவாட அழைக்கப்படுகிறோம். இவ்வாறு கடவுள் நமக்கு விடுக்கின்ற அழைப்புக்கு நாம் "ஆம்" என்று பதிலளிக்கும்போது நாம் கடவுளிடத்தில் நம் "நம்பிக்கை"யை வெளிப்படுத்துகின்றோம். எனவே நம்பிக்கை என்பதற்குப் "பற்றுறுதி" என்னும் பொருள் உண்டு. கடவுளை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது கடவுள் தம் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார் என்றும், அவர் நம்மைக் கைவிடார் என்றும் நாம் உறுதியாக ஏற்கிறோம். இதுவும் நம்பிக்கையின் பொருள்ஆகும். இங்கே நம்பிக்கையோடு "எதிர்நோக்கல்" இணைந்திருப்பதைப் பார்க்கின்றோம். எனவே, கிறிஸ்தவப் பார்வையில் "நம்பிக்கை"யும் "எதிர்நோக்கும்" மிக நெருங்கிய விதத்தில் பிணைந்தவை. அவற்றோடு "அன்பு" என்னும் பண்பையும் நாம் சேர்த்தால் இம்மூன்றும் கடவுளோடு நமக்கு உறவு ஏற்படுத்துகின்ற வழிகளாக மாறுவதை நாம் பார்க்கலாம். இதைத் தூய பவுல் அழகாக எடுத்துரைக்கிறார்: "ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது" (1 கொரிந்தியர் 13:13). எனவே, திருத்தூதர்கள் இயேசுவிடம், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்" என்று எழுப்பிய வேண்டுதல் நமது வேண்டுதலாகவும் மாறவேண்டும். நம் வாழ்க்கையில் "நம்பிக்கை" ஆழ வேரூன்றினால் நாம் கடவுளிடம் கொள்கின்ற பற்று உறுதியாக இருக்கும்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!