Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     04 நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 31ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 2-6

மோசே மக்களை நோக்கிக் கூறியது: நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக!

இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள். இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு!

அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.

இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 8: 1-2abc, 2def-3. 46,50ab (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.

1 என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். 2யbஉ ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். பல்லவி

2னநக என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண், 3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். பல்லவி

46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! 50யb தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 7: 23-28

சகோதரர் சகோதரிகளே, லேவியர் குலத்தைச் சார்ந்த குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை. வேறு பலர் தொடர்ந்து குருக்களாயினர். இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார்.

ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார். இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார்.

இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்.

ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தார்.

திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப் படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34

அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'' என்று கேட்டார்.

அதற்கு இயேசு, " இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக' என்பது முதன்மையான கட்டளை.

உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை'' என்றார்.

அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், "நன்று போதகரே, கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை' என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது'' என்று கூறினார்.

அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை'' என்றார்.

அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 இறையன்பு பிறரன்பு

ஒருநாள் மாலை வேளையில் ஒரு தாத்தாவும் அவருடைய பத்து வயது பேரனும் சாலையோரம் காலார நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் போன பாதையில் குட்டி ஆமையொன்று மெல்லத் தவழ்ந்து போய்க்கொண்டிருந்தது. அதைக் கவனித்த பேரன் அதனைத் தன்னுடைய கையோடு எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனான். இதற்கிடையில் ஆமை தனக்கு ஏதோ ஒரு ஆபத்து வரப்போகிறது என்பதை உணர்ந்து தன்னுடைய தலையை ஓட்டுக்கு உள்ளே இழுத்துக்கொண்டது. வீட்டுக்கு வந்த பேரன் ஆமை தன்னுடைய தலையை உள்ளே இழுத்துக்கொண்டதை அறிந்து, ஒரு குச்சியை எடுத்து அதன்மேலேயே அடித்து, அதன் தலையை வெளியே கொண்டு வர எவ்வளவோ முயன்று பார்த்தான். ஆனால், அவனுடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் போய் முடிந்தன.

தன்னுடைய பேரன் செய்கின்ற எல்லாவற்றையும் ஓர் ஓரமாய் இருந்து கவனித்துக் கொண்டிருந்த அவனுடைய தாத்தா, "பேரான்டி! ஆமை தனது தலையை வெளியே நீட்டச் செய்வதற்கு இப்படியெல்லாம் நீ கையில் குச்சியை வைத்து, அதன்மீது அடித்துக்கொண்டிருந்தால் அது ஒருபோதும் தனது தலையை வெளியே நீட்டாது. நான் சொல்வதுபோல் செய், நீ நினைப்பது நிச்சயம் நடக்கும்" என்றார். பின்னர் பேரன், தாத்தா சொன்னது போன்று தனக்கு முன்பாக ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கொஞ்சம் விறகுக்கட்டைகளை இட்டு, அதற்கு நெருப்பு மூட்டினான். அந்த நெருப்பிலிருந்த வெளிப்பட்ட இதமான சூட்டிற்கு ஆமை தன்னுடைய தலையை வெளியே நீட்டிக்கொண்டு அவனை நோக்கி வந்தது.

இதைப் பார்த்து தாத்தா பேரனிடம் சொன்னார், "தம்பி! நீ இந்த ஆமையின் மீது பலவந்தமாக குச்சியை அடித்தபோது அது வெளியே வரவில்லை. மாறாக, அதற்கு முன்பாக நீ இதமான நெருப்பினை மூட்டியபோது, அது உன்னை நோக்கி வரத்தொடங்கியது". இப்படிச் சொல்லிவிட்டு தாத்தா பேரனிடம் தொடர்ந்து சொன்னார், "யாரையும் அதிகாரத்தினாலோ, அடக்கு முறையினாலோ தன்வயப்படுத்த முடியாது, அன்பினால் மட்டும்தான் ஒருவரை தன் வயப்படுத்த முடியும்".

ஆம், வேறு எதையும் விட அன்பிற்குத்தான் அடுத்தவரை ஆட்கொள்ளும் வல்லமை இருக்கின்றது என்பதை இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம். பொதுக்காலத்தின் முப்பத்தி ஒன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள் முதன்மையான கட்டளையான இறையன்பை, பிறரன்பைக் குறித்து பேசுகின்றன. நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்கின்றார். அவர் இயேசுவிடம் இவ்வாறு கேட்பதன் நோக்கம் இயேசுவைச் சோதிக்கவேண்டும் என்பது கிடையாது. மாறாக, இயேசுவை பொறுத்தளவில் எது முதன்மையான கட்டளை என்பதை அறிந்துகொள்ளவே அவர் இப்படிக் கேட்கின்றார். மேலும், முதன்மையான கட்டளை எது என்பதற்கு யூத இரபிகள் பலரும் பலவிதமாகச் சொல்லி இருந்தார்கள். ஹில்லல் என்பவரோ, "உனக்குத் தீங்கானதை, நீ வெறுப்பதை பிறருக்குச் செய்யாதே" என்பதைத்தான் முதன்மையான கட்டளையாகச் சொல்லி வந்தார். இத்தகைய சூழலில்தான் மக்களால் மதிக்கப்பட்ட இயேசு முதன்மையான கட்டளை என்று எதைச் சொல்கின்றார் என அறிந்துகொள்ள மறைநூல் அறிஞர் அவரிடம் அனைத்திலும் முதன்மையான கட்டளை எது என்று கேட்கின்றார்.

இயேசு அவருக்கு இணைச்சட்ட நூல் 6 ஆம் அதிகாரம் 4,5 வசனங்களையும் லேவியர் புத்தகம் 19 ஆம் அதிகாரம் 18 ஆம் வசனத்தையும் இணைத்து, " நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயா என்பது முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்பது இரண்டாவது கட்டளை இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை" என்கின்றார். அதாவது இறையன்பும் பிறரன்பும்தான் முதன்மையான கட்டளை என்று இயேசு அந்த மறைநூல் அறிஞருக்கு மிக அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றார்.

இயேசு இவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து மறைநூல் அறிஞர் அவரிடம், இறைவனை அன்பு செய்வதும் மனிதர்களை அன்புசெய்வதும் எரிபலிகளைவிட மேலானது என்கின்றார்.

யூதர்கள் கடவுளை அன்பு செய்வதுதான் முதன்மையான கட்டளை என்று நினைத்து வந்தார்கள். அதனாலேயே அவர்கள் பலிகளை ஒப்புக்கொடுப்பது, ஓய்வுநாள் சட்டங்களைக் கடைபிடிப்பது என்று அவற்றில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். ஆனால், அவர்கள் சக மனிதர்களை அன்பு செய்வதற்குத் தவறினார்கள். ஆண்டவர் இயேசுவோ கடவுளை எப்படி அன்பு செய்கின்றோமோ அந்த அளவுக்கு சக மனிதர்களை அன்பு செய்யவேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகின்றார். இவ்வாறு இயேசு சொன்னது மட்டுமல்லாமல், சொன்னத்தை வாழ்வாக்கவும் செய்தார்.

எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் இயேசு இறைவனையும் சக மனிதர்களையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனதோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்தார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. அங்கு நாம் வாசிக்கின்றோம், இவர் தூயவர் மாசற்றவர், கபடற்றவர், வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர், மக்களுடைய பாவங்களுக்காக தம்மையே பலியாகச் செலுத்தியவர் என்று. தூயவர், மாசற்றவர் போன்ற வார்த்தைகள் அவர் கடவுளை முழுமையாய் அன்பு செய்ததற்குச் சான்றாக இருக்கின்றது. மக்களுடைய பாவங்களுக்காக செலுத்தினார் என்ற வார்த்தைகள் அவர் மனிதர்களை முழுமையாய் அன்புசெய்தார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. ஆகவே. நாம் இயேசுவைப் போன்று கடவுளையும் சக மனிதர்களையும் அன்பு செய்யவேண்டும் என்பதுதான் நம்முடைய மனதில் கொள்ளும் செய்தியாக இருக்கின்றது.

மனிதர்களாகிய நாம் பல நேரங்களில் பக்தி முயற்சிகளைச் செய்வதன் வழியாகவும் ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்வதன் வழியாகவும் கடவுள்மீது நமக்கு இருக்கும் அன்பினை வெளிபடுத்துகின்றோம். ஆனால், உடன் வாழுகின்ற சகோதர சகோதரிகளை நாம் அன்பு செய்வதற்குத் தவறிவிடுகின்றோம். கடவுள் மீது நாம் கொள்கின்ற அன்பு நம்மை சக மனிதரிடம் அன்பு கொள்வதற்குத் தூண்டவேண்டும். சக மனிதரிடம் நாம் கொள்கின்ற அன்பு நம்மை கடவுளிடமும் அவருடைய ஆட்சியிலும் கொண்டு சேர்க்கவேண்டும். அப்போதுதான் நம்முடைய அன்பானது முழுமையானதாய் இருக்கும். இல்லையென்றால் அது போலியான அன்பாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. நாம் கடவுளிடம் அன்பு கொண்டிருக்கின்றோமா? அந்த அன்பு சக மனிதர்களிடம் வெளிப்படுகின்றதா? என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

கடவுளை முழுமையாய் அன்பு செய்யவேண்டும். அதே அளவுக்கு சக மனிதர்களை அன்பு செய்யவேண்டும் என்று இதுவரைக்கும் சிந்தித்துப் பார்த்தோம். கடவுளை அன்பு செய்வது, அதே அளவுக்கு சக மனிதர்களை செய்வது என்ற இந்த அன்புக் கட்டளை நாம் கடைப்பிடித்து வாழ்கின்றபோது இறைவன் நமக்கு எத்தகைய ஆசீர்வாதத்தைத் தருவார் என்பதை இன்றைய முதல்வாசகம் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. அங்கு நாம் வாசிக்கின்றோம், "நீங்களும் உங்கள் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் நீங்கள் கடைபிடிப்பீர்களாக! இதனால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்; பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்" என்று வாசிக்கின்றோம். ஆம், கடவுளின் இந்த கட்டளையைக் (இறையன்பு, பிறரன்பு) கடைபிடித்து வாழ்கின்றபோது நாம் நலம் பல பெறுவதோடு நீண்ட நாட்கள் வாழ்வதற்கான ஆசிரைப் பெறுவோம் என்பது உறுதி. அது மட்டுமல்லாமல் நாம் இறையாட்சியை உரித்தாக்கிக் கொள்வோம் என்பது உறுதி.

கடவுளையும் சக மனிதனையும் அன்புசெய்வதால் நாம் எத்தகைய ஆசிரைப் பெறுவோம் என்பதை விளக்க ஒரு கதை.

ஓர் ஊரில் ஒரு பணக்காரப் பெண்மணி இருந்தார். அவருக்கு நீண்ட நாட்களாகக் குழந்தையே இல்லை. எனவே, அவர் பக்கத்து ஊரில் இருந்த அனாதை இல்லத்திற்குச் சென்று, அங்கிருந்த பதினைந்து வயது ஆனி என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்தார். அப்பெண் குழந்தை பெண்மணியிடம் மிகுந்த அன்பு காட்டியது, அது மட்டுமல்லாமல் அக்குழந்தை பக்தியாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தது. இதனால் அந்தப் பணக்காரப் பெண்மணிக்கு ஆனியை மிகவும் பிடித்துவிட்டது, அவளை அவர் தான் பெற்றெடுத்த மகளைப் போன்று வளர்த்து வந்தார்.

அந்த ஆண்டு கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வந்தது. அப்போது அந்த பணக்காரப் பெண்மணி ஆனியிடம் சிறிது பணம் கொடுத்து, "இந்த கிறிஸ்மஸ்க்கு உனக்குப் பிடித்த உடையை எடுத்துக்கொள்" என்றார். ஆனியோ மிகவும் தயங்கியவாறு நின்றார். "என்னமா? ஏன் இப்படி தயங்கி நிற்கின்றாய்?" என்று கேட்டார் அவர். "அது ஒன்றுமில்லையம்மா! எனக்கு இப்போது தேவைக்கு அதிகமாகவே ஆடைகள் இருக்கின்றன. ஆனால், முன்பு நான் இருந்த அனாதை இல்லத்தில் என்னுடைய தோழியான ஜெனி போதிய ஆடையின்றி இருக்கின்றாள். அவளுக்கு நான் நீங்கள் கொடுத்த பணத்திலிருந்து ஆடை வாங்கித் தருட்டுமா?" என்றாள். ஆனியின் வார்த்தைகளில் வெளிப்பட்ட அவளுடைய தோழியின் மீதான அன்பு அவரை மெய்சிலிர்க்க வைத்தது. உடனே அவர் ஆனியிடம், "நான் உனக்குக் கொடுத்த பணத்தை நீயே வைத்துக்கொள், உன்னுடைய தோழி ஜெனிக்கு தனியாக நான் பணம் தருகின்றேன். அதை வைத்து அவளுக்கு உடைகள் வாங்கித் தா" என்றார். இதைக் கேட்டு ஆனி இன்னும் அதிகமாய் மகிழ்ச்சி அடைந்தாள்.

நாம் நம்மோடு வாழக்கூடியவர்களிடம் உணமையான அன்பு வைத்திருக்கும்போது அது நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தவர்களுக்கும் ஆசிரைப் பெற்றுத் தருகின்றது என்னும் உண்மையை இந்தக் கதை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, ஆண்டவர் இயேசுவின் வழியில் நடக்கும் நாம், இறைவனையும் நம்மோடு வாழும் அயலாரையும் முழுமையாய் அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
அன்பின் வழியது உயிர்நிலை

இணைச்சட்ட நூல் 6:2-6
எபிரேயர் 7:23-28
மாற்கு 12:28-34

1971ம் ஆண்டு வெளிவந்த 'ஃபிட்லர் ஆன் தெ ரூஃப்' என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு.

கதாநாயகனும் கதாநாயகியும் தங்களின் திருமணத்தின் 25ம் ஆண்டு (வெள்ளி விழா) விழாவைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருப்பார்கள். விருந்திற்கு நிறைய விருந்தினர்களும், நண்பர்களும் வந்து கொண்டிருப்பார்கள். கதாநாயகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பார். அந்த நேரத்தில் கதாநாயகன் கதாநாயகியிடம், 'டார்லிங், டு யு லவ் மீ?' என்று கேட்பார். 'விளையாடாதீங்க. விளையாட இது நேரமா?' எனக் கேட்டுவிட்டு கதாநாயகி அங்கிருந்து ஓடிவிடுவார். சில நிமிடங்கள் கழித்து அவரை மீண்டும் சந்திக்கும் கதாநாயகன், 'டு யு லவ் மீ?' என்று கேட்பார். அப்போது கதாநாயகி அவரின் கைகளைக் பிடித்துக்கொண்டு, '25 ஆண்டுகள் உனக்கு உணவு சமைத்தேன். உனக்கு துணிகள் துவைத்தேன். உன் இன்ப துன்பங்களில் பங்கேற்றேன். உன்னோடு அழுதேன். உன்னோடு சிரித்தேன். உன்னோடு குழந்தைகள் பெற்றுக்கொண்டேன். உன்னோடு அவர்களை வளர்த்தேன். உன்னோடு வேலை செய்தேன். இது எல்லாம் அன்பென்றால், அந்த அன்பைத்தான் நான் உனக்குச் செய்தேன். அன்பே, ஐ லவ் யூ' என்பார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு முழுவதும் (இரண்டாம் வாசகம் தவிர) 'அன்பு' என்ற ஒற்றைச் சொல்லால் கட்டப்பட்டிருக்கிறது. நாம் அதிகமாகப் பயன்படுத்தியதால் பயனை இழந்த சில சொற்களில் 'அன்பு' என்ற சொல்லும் ஒன்று. அன்பிற்கு நிறைய பரிமாணங்கள் உண்டு. கடவுள் மனிதனிடம் காட்டும் அன்பு கருணை. மனிதன் கடவுளிடம் காட்டும் அன்பு பக்தி. கணவன் மனைவியிடையே உள்ள அன்பு காதல். நண்பர்களிடையே உள்ள அன்பு நட்பு. பெற்றோர் பிள்ளைகளிடையே உள்ள அன்பு பாசம். இருப்பவர் இல்லாதவருக்குக் காட்டும் அன்பு இரக்கம். இல்லாதவர் இருக்கிறவருக்குக் காட்டும் அன்பு நன்றி. மேலிருப்பவர் கீழிருப்பவருக்குக் காட்டும் அன்பு வரவேற்பு. கீழிருப்பவர் மேலிருப்பவருக்குக் காட்டும் அன்பு மரியாதை. ஆக, இன்று நாம் எந்த அன்பைப் பற்றிப் பேசுவது என்பது முதல் கேள்வியாக இருக்கிறது. மேலும், இன்று 'அன்பு' என்ற வார்த்தையின் ஆங்கிலப் பதம் உணர்வையும் தாண்டி விருப்பு வெறுப்புக்களைக் குறிக்கவும் பயன்படுகிறது: 'ஐ லவ் பீட்சா,' 'ஐ லவ் மை பைக்,' 'ஐ லவ் மை மாம்' என பீட்சா, பைக், அம்மா என அனைத்தையும் ஒரே தளத்தில் நிறுத்திவிடுகிறது ஆங்கில 'அன்பு.'

இன்று நாம் பதிலுரைப்பாடலில் வாசிக்கும் திருப்பாடல் 18 மிக முக்கியமான திருப்பாடல். ஏனெனில், இங்கே ஒரு இடத்தில் தான் (18:1), பழைய ஏற்பாட்டில், மனிதர்கள் கடவுளைப் பார்த்து, 'ஐ லவ் யு ஆண்டவரே' என்று சொல்கிறார்கள்:

'என் ஆற்றலாகிய ஆண்டவரே, உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்!'

இந்தப் பாடலின் சூழலை நாம் 2 சாமு 21-22ல் வாசிக்கிறோம். தாவீது எதிரிகளின் கையினின்று, குறிப்பாக சவுலின் கையினின்று, ஆண்டவர் தம்மை விடுவித்தபோது இந்தப் பாடலைப் பாடுகின்றார்.

இந்தப் பாடலில் வரும் சில உருவகங்களைப் புரிந்துகொண்டால் அன்பின் ஆற்றல் நமக்குப் புரியும்:

'ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர்.
என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்.
உம் துணையுடன் நான்
எப்படையையும் நசுக்குவேன்.
என் கடவுளின் துணையால்
எம்மதிலையும் தாண்டுவேன்' (திபா 18:28-29)

மேற்காணும் உருவகங்கள் அன்பின் மூன்று இயல்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன:

அ. அன்பு இருள் இருக்கும் இடத்தில் ஒளி ஏற்றும்
ஆ. அன்பு எதிரியை எதிர்கொள்ளும் துணிவைத் தரும்
இ. அன்பு நாம் உயரே பறக்க இறக்கைகள் அளிக்கும்

இந்த மூன்று இயல்புகளையும் நாம் கருணை, பக்தி, காதல், நட்பு, பாசம், இரக்கம், நன்றி, வரவேற்பு, மரியாதை என்னும் அன்பின் பரிமாணங்களில் பார்க்கலாம்.

அன்பின் திசைகளை வைத்து அன்பை இறையன்பு, பிறரன்பு என்று நாம் பிரிக்கிறோம். மனிதர்கள் தங்களுக்கு மேல் நோக்கி காட்டும் இறையன்பு. மனிதர்கள் தங்களுக்கு நேர்கோட்டில் காட்டும் அன்பு பிறரன்பு. மேலும், இறையன்பு என்று சொல்லும்போது அது இறைவன் செய்யும் அன்பு அல்ல. மாறாக, இறைவனிடம் நாம் காட்டும் அன்பு. அதுபோல, பிறரன்பு என்பது நாம் பிறர் செய்யும் அன்பு அல்ல. மாறாக, பிறரிடம் நாம் கொள்ளும் அன்பு.

பரிசேயர், சதுசேயர் ஆகியோரைத் தொடர்ந்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 12:28-34) மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் கேள்வி கேட்கின்றார்: 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'

கேட்கின்ற அவருக்கே விடையும் தெரியும். ஏனெனில், ஒவ்வொரு யூதரும் இணைச்சட்ட நூல் 6:4,5 மற்றும் லேவியர் நூல் 19:18 ஆகிய இரண்டு கட்டளைகளையும் இரண்டு கண்களாகக் கொண்டிருந்தனர். ஒருவேளை, இந்த இரண்டில் முதன்மையானது என்பது பற்றி அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம். ஒருவேளை இயேசு, 'இறையன்பை' முதன்மையானது எனச் சொன்னால், அவரை 'பிறரன்பு' மற்றும் சமூகநீதிக்கு எதிரானவர் என்று குற்றம் சுமத்தலாம். அல்லது, 'பிறரன்பை' முதன்மையானது எனச் சொன்னால், அவர் இறைவனைப் பழிக்கிறார் என்றும், அவர் இறைமகன் அல்லர் என்றும் குற்றம் சுமத்தலாம். ஆனால், இயேசு மிகத் தெளிவாக முதல்-இரண்டு என கட்டளைகளைக் கொடுத்து, அவற்றை ஒரே தளத்தில் நிறுத்துகின்றார். இயேசுவின் பதிலை கேள்வி கேட்டவரும் ஏற்றுக்கொள்கின்றார். அப்படி ஏற்றுக்கொண்டவரை, 'நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை' எனப் பாராட்டுகிறார் இயேசு.

அ. முதன்மையான கட்டளை

'இஸ்ரயேலே கேள். உன் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே' என்ற பகுதியை மட்டும் இயேசு, 'நம் ஆண்டவராகிய கடவுள்' என மாற்றுகின்றார். இவ்வாறாக, தன்னையும் மானிடரோடு ஒருங்கிணைத்துக்கொள்கின்றார். இத்தகையை ஒருங்கிணைத்தலையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 7:23-28) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் தலைமைக்குரு என்னும் உருவகம் வழியாக முன்வைக்கின்றார்.

'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும்' என நான்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் இயேசு (மாற்கு). ஆனால், இணைச்சட்ட நூலில் (6:4), 'முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும்' என்ற மூன்று வார்த்தைகளாகப் பார்க்கிறோம்.

'இதயம்' என்பது ஒருவரின் சிந்தனையையும், 'உள்ளம்' என்பது ஒருவரின் தெரிவையும், 'மனம்' என்பது ஒருவரின் உயிரையும், 'ஆற்றல்' என்பது ஒருவரின் உடல் வலிமையையும் குறிக்கிறது. இவ்வாறாக, ஒருவரின் முழு ஆளுமை முழுவதும் இறைவனை நோக்கி இருக்க வேண்டும்.

ஆக, இறைவனை அன்பு செய்வது என்பது வெறும் வழிபாட்டு முறைமைகள் அல்லது சட்ட முறைமைகள் பற்றியது அன்று.

ஆ. இரண்டாவது கட்டளை:
'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக.' பழைய ஏற்பாட்டில், 'அடுத்தவர்' என்ற வார்த்தை சக யூதர் அல்லது சக குலத்தவரைக் குறித்தது. ஆனால், இதை நாம் 'எல்லாரும்' என விரித்தும் பொருள் கொள்ளலாம்.

இந்த அன்பு ஒற்றைச் சொல் நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. இறையன்பு - பிறரன்பு

'இறையன்பு' எப்படி இருக்க வேண்டும்?
'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் இருக்க வேண்டும்.'

'பிறரன்பு' எப்படி இருக்க வேண்டும்?
'என்னை அன்பு செய்வதுபோல பிறரை நான் அன்பு செய்ய வேண்டும்.'

ஒருவேளை இந்த முறைமைகளை மாற்றி அமைத்தால் என்ன ஆகும்?

ஒருவேளை, நான் பிறரை 'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும்' அன்பு செய்தால் என்ன ஆகும்? எனக்கு விரக்திதான் மிஞ்சும். ஏனெனில், குறைவான நான் குறைவான மற்றவரை முழுமையாக அன்பு செய்ய முடியாது.

ஒருவேளை, நான் இறைவனை 'என்னை அன்பு செய்வது போல அன்பு செய்தால்' என்ன ஆகும்? என் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ற கடவுளையும் ஆட்டுவிக்கத் தொடங்குவேன்.

ஆக, முறைமைகள் மாறாமல் அன்பு செய்தல் வேண்டும்.

'இறைவன்' என்பவர் யார்? நான் கண்களை மூடி இறைவன் என்று சொல்லும்போது என் உள்ளத்தில் எழும் உருவம் என்ன? அல்லது யார்? இந்த உருவத்தை நோக்கி என்னால் என் முழு இதயத்தை, உள்ளத்தை, மனத்தை, ஆற்றலை திருப்ப முடியுமா?

'பிறர்' என்பவர் யார்? என் நண்பரா? உறவினரா? எனக்குப் பிடிக்காதவரா? அல்லது எல்லாருமா? என்னை அன்பு செய்வதுபோல, என்னால் அடுத்தவரை அன்பு செய்ய முடியுமா? முதலில் என்னை அன்பு செய்வது என்றால் என்ன? என்னை நான் ஏற்றுக்கொள்கிறேனா? என்னையே நான் மதிக்கிறேனா?

2. அறிவுத்திறன்:
மறைநூல் அறிஞர் 'அறிவுத்திறனோடு' பதில் தந்ததைக் கண்டு இயேசு அவரைப் பாராட்டுகின்றார். 'காதலுக்கு கண்ணில்லை' என்பார்கள். அல்லது 'கண்மூடித்தனமான அன்பு' என்று சொல்வார்கள். ஆனால், அன்பில் தான் அறிவுக்கு நிறைய வேலை உண்டு. அறிவுத்திறன் இல்லாத ஒருவரால் அன்பு செய்ய முடியாது. அன்பில் ஒருவர் தன் முழு அறிவுத்திறனையும் பயன்படுத்த வேண்டும். இங்கே அறிவு என்பது வெறும் மூளை சார்ந்த, பிரித்துப் பார்க்கும் அறிவு அல்ல. மாறாக, மனம் சார்ந்த, ஒருங்கிணைக்கும் அறிவு.

3. கேள்:
நம் மேல் இருக்கும் இறைவனும், நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களும் நாம் கேட்கும் குரல்களாக நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். ஆக, இக்குரல்களைக் கேட்டால்தான் இவர்களை அன்பு செய்ய முடியும். 'இஸ்ரயேலே, பார்' என்று சொல்லாமல், 'கேள்' என்று கட்டளையிடுகிறார் இறைவன். நாம் பார்க்கும் கண்கள் தாங்களாகவே மூடிக்கொள்ளும் இயல்புடையவை. ஆனால், காதுகள் அப்படி அல்ல. நாமே மூடினாலே ஒழிய அவைகள் திறந்தே இருக்கும். மற்றவர்களின் குரல் அதில் விழுந்துகொண்டேதான் இருக்கும். இக்குரல்களைக் கேட்கும் ஒருவர்தான் அன்பிற்கு இதயத்தைத் திறக்க முடியும்.

இறுதியாக,
'அன்பின் வழியது உயிர்நிலை' என்கிறார் திருவள்ளுவர் (குறள் 80). 'இறையன்பு' என்ற வேரையும், 'பிறரன்பு' என்ற கிளையையும் முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. உயிர்நிலை இறைவனில் புறப்பட்டு நம் வழியாக ஒருவர் மற்றவரிடம் செல்கிறது. ஆக, இறைவனை நான் என்னில் அனுபவித்து, அதே இறைவனை நான் பிறரில் அனுபவிக்கிறேன். ஆக, இறைவன் மற்ற இறைவனோடு செயலாற்ற என் உடல், உள்ளம், இதயம், மனம் வாய்க்காலாக இருக்கின்றது.

துரமாக இருப்பவர்களை, இருப்பவற்றை அன்பு செய்வது எளிது. 'நான் அமெரிக்கர்களை அன்பு செய்கிறேன்' என்று என்னால் எளிதாகச் சொல்ல முடியும். ஆனால், 'என் அடுத்த அறையில் இருப்பவரை நான் அன்பு செய்கிறேன்' என்று சொல்வது அவ்வளவு எளிதல்ல.

அன்பை ஒரு ரொமான்டிக் அனுபவமாக பார்க்காமல், அதை அன்றாட வாழ்வியல், செயல்முறை எதார்த்தமாகப் பார்த்தால், அடுத்தவருக்கும் எனக்கும் உள்ள உள்ளத்தின் தூரமும் குறையும்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!