|
|
30 மார்ச் 2020 |
|
|
தவக்காலம் 5 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
குற்றம் எதுவும் நான் செய்தறியேன்.
ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம்
(இ) 2: 1-9, 15-17, 19-30, 33-62
அந்நாள்களில்
பாபிலோனில் யோவாக்கிம் என்னும் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர்
சூசன்னாவை மணந்தார். சூசன்னா கில்கியாவின் மகள்; அவர் பேரழகி;
ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர். அவர் பெற்றோர் நேர்மையாளராய் இருந்ததால்,
தங்கள் மகளை மோசே சட்டத்தின் வழியில் பயிற்றுவித்தனர்.
யோவாக்கிம் பெரும் செல்வர். அவரது வீட்டுக்கு அருகிலேயே அவருக்கு
ஒரு தோட்டம் இருந்தது. யூதர்கள் அவரிடம் வருவது வழக்கம்; ஏனெனில்
மற்ற எல்லாரையும்விட அவர் மிகவும் மதிக்கப் பெற்றார்.
அக்காலத்தில் மக்களுள் முதியோர் இருவர் நடுவராய் நியமிக்கப்
பெற்றனர். இவர்களைப் பற்றியே ஆண்டவர், "நடுவர்களாய் இருந்து
மக்களை வழிநடத்தவேண்டிய மூப்பர்கள் வாயிலாகப் பாபிலோனினின்று
ஒழுக்கக்கேடு வந்துற்றது" என்று சொல்லியிருந்தார். இவர்கள்
யோவாக்கிம் வீட்டில் நெடுநேரம் இருப்பது வழக்கம். வழக்குடையோர்
அனைவரும் இவர்களை அணுகுவதுண்டு. நண்பகல் வேளையில் மக்கள் சென்றபின்,
சூசன்னா தம் கணவரின் தோட்டத்திற்குள் சென்று உலாவு வார். அவர்
நாள்தோறும் அங்குச் சென்று உலாவுவதைப் பார்த்து வந்த அந்த
முதியோர் இருவரும் அவரைக் காமுறத் தொடங்கினர். இதனால் அவர்கள்
தங்கள் மனத்தைத் தகாத வழியில் செலவிட்டார்கள். விண்ணக இறைவனை
நினையாதவாறும் நீதித் தீர்ப்புகளைக் கருதாதவாறும் அவர்கள் நெறி
மாறிச் சென்றார்கள்.
அதற்கு ஏற்றதொரு நாளை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். ஒரு
நாள் சூசன்னா வழக்கம்போல் இரண்டு பணிப்பெண்களோடு மட்டும் தோட்டத்தினுள்
நுழைந்து, குளிக்க விரும்பினார்; ஏனெனில், அன்று வெயில் கடுமையாக
இருந்தது. அந்த முதியோர் இருவரைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை.
அவர்களோ ஒளிந்திருந்து சூசன்னாவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
சூசன்னா பணிப் பெண்களிடம், "நான் குளிக்க எண்ணெயும் நறுமணப்
பொருள்களும் கொண்டு வாருங்கள்; பிறகு தோட்டத்தின் வாயில்களை
மூடிவிடுங்கள்" என்று சொன்னார்.
பணிப்பெண்கள் வெளியேறியதும் முதியோர் இருவரும் எழுந்து சூசன்னாவிடம்
ஓடோடிச் சென்றனர். அவரை நோக்கி, "இதோ! தோட்டத்தின் வாயில்கள்
மூடப்பட்டுள்ளன. யாரும் நம்மைப் பார்க்க முடியாது. நாங்கள் உன்மேல்
வேட்கை கொண்டுள்ளோம். எனவே நீ எங்களுக்கு இணங்கி எங்களோடு படு.
இல்லாவிடில், ஓர் இளைஞன் உன்னோடு இருந்தான் என்றும், அதற்காகவே
நீ பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டாய் என்றும் உனக்கு எதிராக
நாங்கள் சான்று கூறுவோம்" என்றார்கள். சூசன்னா பெருமூச்சு
விட்டு, "நான் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். நான் உங்களுக்கு
இணங்கினால், எனக்குக் கிடைப்பது சாவு; இணங்காவிட்டால் நான் உங்களிடமிருந்து
தப்ப முடியாது. ஆனால் ஆண்டவர் முன்னிலையில் பாவம் செய்வதை விட,
அதைச் செய்யாமல் உங்களிடம் மாட்டிக்கொள்வதே மேல்" என்றார்.
பின் சூசன்னா உரத்த குரலில் கத்தினார். உடனே முதியோர் இருவரும்
அவருக்கு எதிராக கூச்சலிட்டனர். அவர்களுள் ஒருவர் ஓடிப்போய்த்
தோட்டத்துக் கதவுகளைத் திறந்தார். தோட்டத்தில் கூச்சல் கேட்டதும்,
சூசன்னாவுக்கு என்ன நிகழ்ந்ததோ என்று அறிய அவர் வீட்டில் இருந்தோர்
ஓரக் கதவு வழியே ஓடிவந்தனர். ஆனால் முதியோர் தங்கள் கட்டுக் கதையைச்
சொன்னபொழுது, பணியாளர் பெரிதும் நாணங்கொண்டனர்; ஏனெனில் சூசன்னாவைப்
பற்றி இது போன்ற எதையும் அவர்கள் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை.
மறுநாள் சூசன்னாவுடைய கணவர் யோவாக்கிம் வீட்டில் மக்கள் திரண்டு
வந்தார்கள். சூசன்னாவைக் கொல்லும் தீய நோக்குடன் அந்த முதியோர்
இருவரும் சேர்ந்து வந்திருந்தனர். அவர்கள் மக்கள்
முன்னிலையில், "கில்கியா மகளும் யோவாக்கிம் மனைவியுமான சூசன்னாவை
இங்கு அழைத்து வருமாறு ஆள் அனுப்புங்கள்" என்று கட்டளையிட்டார்கள்.
உடனே அவரை அழைத்து வர ஆள் அனுப்பினர். சூசன்னா வந்தார். அவரோடு
அவருடைய பெற்றோர், பிள்ளைகள், உறவினர் எல்லாரும் வந்தனர்.
அவருடைய உற்றார் உறவினரும், அவரைப் பார்த்தவர் அனைவருமே அழுதுகொண்டிருந்தார்கள்.
முதியோர் இருவரும் மக்கள் நடுவே எழுந்து நின்று, சூசன்னா தலைமீது
தங்கள் கைகளை வைத்தனர். அவரோ அழுதுகொண்டே விண்ணக இறைவனை
நோக்கினார்; ஏனெனில் அவர் உள்ளம் ஆண்டவரை நம்பியிருந்தது. அப்பொழுது
முதியோர் பின்வருமாறு கூறினர்: "நாங்கள் தோட்டத்தில் தனியாக
உலாவிக் கொண்டிருந்த பொழுது, இவள் இரு பணிப்பெண்களோடு உள்ளே வந்தாள்;
தோட்டத்து வாயில்களை மூடியபின், பணிப் பெண்களை வெளியே அனுப்பி
விட்டாள். பின்னர் அங்கே ஒளிந்துகொண்டிருந்த ஓர் இளைஞன் இவளிடம்
வந்து இவளோடு படுத்தான். நாங்களோ தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்தோம்;
இந்த நெறிகெட்ட செயலைக் கண்டதும் அவர்களிடம் ஓடிச் சென்றோம்.
அவர்கள் சேர்ந்திருந்ததைப் பார்த்தோம். ஆனால் அந்த இளைஞனை எங்களால்
பிடிக்க முடியவில்லை; ஏனெனில் அவன் எங்களை விட வலிமை மிக்கவன்.
எனவே அவன் கதவைத் திறந்து வெளியே ஓடிவிட்டான். நாங்கள் இவளைப்
பிடித்து, அந்த இளைஞன் யார் என்று கேட்டோம். இவளோ எங்களுக்கு
மறுமொழி கூற மறுத்துவிட்டாள். இவற்றுக்கு நாங்களே சாட்சி". அவர்கள்
மக்களுள் மூப்பர்களாகவும் நடுவர்களாகவும் இருந்ததால், மக்கள்
கூட்டம் அவர்கள் சொன்னதை நம்பி சூசன்னாவுக்குச் சாவுத்
தீர்ப்பிட்டது.
அப்பொழுது சூசன்னா உரத்த குரலில் கதறி, "என்றுமுள்ள இறைவா, மறைவானவற்றை
நீர் அறிகிறீர். நிகழுமுன்பே எல்லாம் உமக்குத் தெரியும். இவர்கள்
எனக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியுள்ளனர் என்பதும் உமக்குத்
தெரியும். இவர்கள் என்மீது சாட்டிய குற்றம் எதுவும் நான் செய்தறியேன்.
ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!" என்று சொன்னார். ஆண்டவர்
சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார்.
கொல்லப்படுமாறு அவர் நடத்திச் செல்லப்பட்டபொழுது, தானியேல் என்னும்
பெயருடைய இளைஞரிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டி விட்டார்.
தானியேல் உரத்த குரலில், "இவருடைய இரத்தப் பழியில் எனக்குப்
பங்கில்லை" என்று கத்தினார். மக்கள் அனைவரும் அவர்பால்
திரும்பி, "நீர் என்ன சொல்கிறீர்?" என்று வினவினர். அவரோ அவர்கள்
நடுவே நின்றுகொண்டு பின்வருமாறு சொன்னார்: "இஸ்ரயேல் மக்களே,
வழக்கை ஆராயாமலும், உண்மையை அறிந்துகொள்ளாமலும் இஸ்ரயேல் மகள்
ஒருத்தியைத் தீர்ப்பிடத் துணிந்துவிட்டீர்களே! அந்த அளவுக்கு
நீங்கள் அறிவிலிகளா? நீதி வழங்கும் இடத்திற்குத் திரும்பிப்
போங்கள்; இம்மனிதர்கள் இவருக்கு எதிராகப் பொய்ச் சான்று
சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.
எனவே மக்கள் எல்லாரும் விரைவாகத் திரும்பி வந்தார்கள். மற்ற
மூப்பர்கள் தானியேலிடம், "நீர் வந்து, எங்கள் நடுவே அமர்ந்து,
எங்களுக்கு விரிவாய் விளக்கிக் காட்டும்; ஏனெனில் மூப்பருக்குரிய
சிறப்பை கடவுள் உமக்கு அளித்துள்ளார்" என்று வேண்டிக்கொண்டார்கள்.
அப்பொழுது தானியேல், "இவர்களைத் தனித்தனியே பிரித்துத்
தொலையில் வையுங்கள். நான் இவர்களை வினவுவேன்" என்றார். எனவே
அவர்கள் இருவரையும் தனித்தனியே பிரித்து வைத்தார்கள். அப்பொழுது
தானியேல் அவர்களுள் ஒருவரை அழைத்து, "தீச்செயலில் விளைந்தவனே!
நீ முன்பு செய்த பாவங்கள் இப்பொழுது வெளியாகிவிட்டன.
"மாசற்றவர்களையும் நீதிமான்களையும் சாவுக்கு உள்ளாக்காதே" என்று
ஆண்டவர் சொல்லியிருந்தும் நீ முறைகேடாகத் தீர்ப்புகள் வழங்கி,
மாசற்றவர்களைத் தண்டித்து, குற்றவாளிகளை விடுவித்துள்ளாய். இதோ!
நீ உண்மையிலேயே சூசன்னாவைப் பார்த்திருந்தால், எந்த மரத்தடியில்
அவர்கள் கூடியிருக்கக் கண்டாய், சொல்" என்று கேட்டார். அதற்கு
அவர், "விளா மரத்தடியில்" என்றார். அதற்குத் தானியேல், "நீ
நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில்
கடவுளின் தூதர் ஏற்கெனவே இறைவனிடமிருந்து தீர்ப்பைப்
பெற்றுவிட்டார். அவர் உன்னை இரண்டாக வெட்டிப் பிளப்பார்" என்றார்.
பின் அவரை அனுப்பிவிட்டு மற்றவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு
பணித்தார். அவரை நோக்கி, "நீ யூதாவுக்கல்ல, கானானுக்குப் பிறந்தவன்.
அழகு உன்னை மயக்கிவிட்டது; காமம் உன்னை நெறிதவறச் செய்து விட்டது.
நீங்கள் இருவரும் இஸ்ரயேல் மகளிரை இவ்வாறே நடத்தி வந்திருக்
கிறீர்கள். அவர்களும் அச்சத்தால் உங்களுக்கு இணங்கிவந்திருக்கிறார்கள்.
ஆனால் யூதாவின் மகளாகிய இவரால் உங்கள் தீச்செயலைப் பொறுத்துக்
கொள்ள முடியவில்லை. இதோ! எந்த மரத்தடியில்
சேர்ந்திருக்கும்பொழுது நீ இவர்களைப் பிடித்தாய்? சொல்" என்றார்.
அவரோ, "கருவாலி மரத்தடியில்" என்றார். தானியேல் அவரிடம்,
"நீயும் நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும்.
ஏனெனில் உன்னை இரு கூறாக வெட்டவும், இவ்வாறு உங்கள் இருவரையும்
அழித்தொழிக்கவும் கடவுளின் தூதர் வாளுடன்
காத்துக்கொண்டிருக்கிறார்" என்றார்.
உடனே மக்கள் கூட்டம் முழுவதும் உரத்த குரல் எழுப்பி, தம்மில்
நம்பிக்கை வைப்போருக்கு மீட்பளிக்கும் கடவுளைப் போற்றியது. அவர்கள்
அந்த முதியோர் இருவருக்கும் எதிராக எழுந்தார்கள்; ஏனெனில் அவர்கள்
பொய்ச் சான்று சொன்னதை அவர்கள் வாய்மொழியாகவே தானியேல்
மெய்ப்பித்திருந்தார். அம்முதியோர் பிறருக்குச் செய்ய இருந்த
தீங்கை அவர்களுக்கே மக்கள் செய்தார்கள். மோசே சட்டப்படி அவர்களைக்
கொன்றார்கள். இவ்வாறு மாசற்ற சூசன்னா அன்று காப்பாற்றப்பட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
குற்றம் எதுவும் நான் செய்தறியேன்; ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் (இ) 2: 41c-62
அந்நாள்களில்
இஸ்ரயேல் மக்கள் கூட்டம் சூசன்னாவுக்குச் சாவுத் தீர்ப்பிட்டது.
அப்பொழுது சூசன்னா உரத்த குரலில் கதறி, "என்றுமுள்ள இறைவா, மறைவானவற்றை
நீர் அறிகிறீர். நிகழுமுன்பே எல்லாம் உமக்குத் தெரியும். இவர்கள்
எனக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியுள்ளனர் என்பதும் உமக்குத்
தெரியும். இவர்கள் என்மீது சாட்டிய குற்றம் எதுவும் நான் செய்தறியேன்.
ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!" என்று சொன்னார். ஆண்டவர்
சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார்.
கொல்லப்படுமாறு அவர் நடத்திச் செல்லப்பட்டபொழுது, தானியேல் என்னும்
பெயருடைய இளைஞரிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டி விட்டார்.
தானியேல் உரத்த குரலில், "இவருடைய இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை"
என்று கத்தினார். மக்கள் அனைவரும் அவர்பால் திரும்பி, "நீர் என்ன
சொல்கிறீர்?" என்று வினவினர். அவரோ அவர்கள் நடுவே நின்றுகொண்டு
பின்வருமாறு சொன்னார்: "இஸ்ரயேல் மக்களே, வழக்கை ஆராயாமலும்,
உண்மையை அறிந்துகொள்ளாமலும் இஸ்ரயேல் மகள் ஒருத்தியைத்
தீர்ப்பிடத் துணிந்துவிட்டீர்களே! அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா?
நீதி வழங்கும் இடத்திற்குத் திரும்பிப் போங்கள்; இம்மனிதர்கள்
இவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.
எனவே மக்கள் எல்லாரும் விரைவாகத் திரும்பி வந்தார்கள். மற்ற
மூப்பர்கள் தானியேலிடம், "நீர் வந்து, எங்கள் நடுவே அமர்ந்து,
எங்களுக்கு விரிவாய் விளக்கிக் காட்டும்; ஏனெனில் மூப்பருக்குரிய
சிறப்பை கடவுள் உமக்கு அளித்துள்ளார்" என்று வேண்டிக்கொண்டார்கள்.
அப்பொழுது தானியேல், "இவர்களைத் தனித்தனியே பிரித்துத்
தொலையில் வையுங்கள். நான் இவர்களை வினவுவேன்" என்றார். எனவே
அவர்கள் இருவரையும் தனித்தனியே பிரித்து வைத்தார்கள். அப்பொழுது
தானியேல் அவர்களுள் ஒருவரை அழைத்து, "தீச்செயலில் விளைந்தவனே!
நீ முன்பு செய்த பாவங்கள் இப்பொழுது வெளியாகிவிட்டன.
"மாசற்றவர்களையும் நீதிமான்களையும் சாவுக்கு உள்ளாக்காதே" என்று
ஆண்டவர் சொல்லியிருந்தும் நீ முறைகேடாகத் தீர்ப்புகள் வழங்கி,
மாசற்றவர்களைத் தண்டித்து, குற்றவாளிகளை விடுவித்துள்ளாய். இதோ!
நீ உண்மையிலேயே சூசன்னாவைப் பார்த்திருந்தால், எந்த மரத்தடியில்
அவர்கள் கூடியிருக்கக் கண்டாய், சொல்" என்று கேட்டார். அதற்கு
அவர், "விளா மரத்தடியில்" என்றார். அதற்குத் தானியேல், "நீ நன்றாகப்
பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் கடவுளின்
தூதர் ஏற்கெனவே இறைவனிடமிருந்து தீர்ப்பைப் பெற்றுவிட்டார்.
அவர் உன்னை இரண்டாக வெட்டிப் பிளப்பார்" என்றார்.
பின் அவரை அனுப்பிவிட்டு மற்றவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு
பணித்தார். அவரை நோக்கி, "நீ யூதாவுக்கல்ல, கானானுக்குப் பிறந்தவன்.
அழகு உன்னை மயக்கிவிட்டது; காமம் உன்னை நெறிதவறச் செய்து விட்டது.
நீங்கள் இருவரும் இஸ்ரயேல் மகளிரை இவ்வாறே நடத்தி வந்திருக்கிறீர்கள்.
அவர்களும் அச்சத்தால் உங்களுக்கு இணங்கிவந்திருக்கிறார்கள். ஆனால்
யூதாவின் மகளாகிய இவரால் உங்கள் தீச்செயலைப் பொறுத்துக்கொள்ள
முடியவில்லை. இதோ! எந்த மரத்தடியில் சேர்ந்திருக்கும்பொழுது நீ
இவர்களைப் பிடித்தாய்? சொல்" என்றார். அவரோ, "கருவாலி மரத்தடியில்"
என்றார். தானியேல் அவரிடம், "நீயும் நன்றாகப் பொய் சொல்கிறாய்.
அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் உன்னை இரு கூறாக வெட்டவும்,
இவ்வாறு உங்கள் இருவரையும் அழித்தொழிக்கவும் கடவுளின் தூதர்
வாளுடன் காத்துக்கொண்டிருக்கிறார்" என்றார்.
உடனே மக்கள் கூட்டம் முழுவதும் உரத்த குரல் எழுப்பி, தம்மில்
நம்பிக்கை வைப்போருக்கு மீட்பளிக்கும் கடவுளைப் போற்றியது. அவர்கள்
அந்த முதியோர் இருவருக்கும் எதிராக எழுந்தார்கள்; ஏனெனில் அவர்கள்
பொய்ச் சான்று சொன்னதை அவர்கள் வாய்மொழியாகவே தானியேல்
மெய்ப்பித்திருந்தார். அம்முதியோர் பிறருக்குச் செய்ய இருந்த
தீங்கை அவர்களுக்கே மக்கள் செய்தார்கள். மோசே சட்டப்படி அவர்களைக்
கொன்றார்கள். இவ்வாறு மாசற்ற சூசன்னா அன்று காப்பாற்றப்பட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 4ab)
Mp3
=================================================================================
பல்லவி: இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும், நான்
எதற்கும் அஞ்சிடேன்.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான
நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். - பல்லவி
3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க
நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;
உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி
5
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு
செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது
பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி
6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும்
என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில்
நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(எசே 33: 11)
"தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பமன்று; ஆனால், அத்தீயோர்
தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம்,"
என்கிறார் ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல்
கல் எறியட்டும்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11
அக்காலத்தில்
இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர்
மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம்
வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார். மறைநூல்
அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக்
கூட்டிக்கொண்டுவந்து நடுவில் நிறுத்தி, "போதகரே, இப்பெண் விபசாரத்தில்
கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால்
எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள
கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டனர். அவர்மேல் குற்றம்
சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச்
சோதித்தார்கள்.
இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால்
அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர்
நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல்
கல் எறியட்டும்" என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து
தரையில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும்
முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து
சென்றுவிட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார்.
அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.
இயேசு நிமிர்ந்து பார்த்து, "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி
என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" என்று கேட்டார். அவர்,
"இல்லை, ஐயா" என்றார். இயேசு அவரிடம், "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை.
நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
தானியேல் (இ) 2: 41c-62
"பொய்ச்சான்று சொல்லாதே"
நிகழ்வு
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இளைஞன் ஒருவன்,
அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு, நள்ளிரவில் தன்னுடைய
வீட்டிற்கு நான்கு சக்கர ஊர்தியில் வந்துகொண்டிருந்தான்.
வழியில் பெரியவர் ஒருவர் தன் கையை அசைத்து, போகிற வழியில் ஒரு
குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிட முடியுமா? என்று கேட்க, இளைஞனும்
அவர்மீது பரிதாபப்பட்டு, "இந்த நள்ளிரவில் இவருக்கு நம்மை
விட்டால் வேறு யார் உதவி செய்வார்" என்று எண்ணிக்கொண்டு, அவரை
வண்டியின் பின் இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு, வண்டியை வேகமாக
ஓட்டிச் சென்றான்.
இதற்கிடையில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பெரியவரின்
பார்வையும் அவருடைய செயல்பாடுகளும் இளைஞனுடைய உள்ளத்தில் சந்தேகத்தை
வரவழைத்தன. உடனே அவன் தன்னுடைய "வாலெட்" இருக்கின்றதா என்று அதை
வழக்கமாக வைக்கும் இடத்தைப் பார்த்தான். (அவன் தன்னுடைய
வாலெட்டை முன்னிருக்கைகளுக்கு நடுவில் உள்ள இடத்தில்
வைப்பான்). தற்செயலாக அவன் தன்னுடைய வாலெட் இருக்கின்றதா என்று
பார்த்தபொழுது, அது அந்த இடத்தில் இல்லாததைக் கண்டதும், அவனுக்கு
பெரியவர்மீது கடுமையான கோபம் வந்தது.
"நீங்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள்...? பாவம் என்று
உங்களை வண்டியில் ஏற்றினால், என்னுடைய வாலெட்டை திருடிவிட்டீர்களே...?
ஒழுங்காக அதை என்னிடத்தில் திருப்பித் தந்துவிடுங்கள் இல்லையென்றால்
நடப்பது வேறு" என்று இளைஞன் அந்தப் பெரியவரை மிரட்டினான். அவரோ,
"தம்பி உன்னுடைய வாலெட்டை நான் எடுக்கவில்லை. நான் யாருடைய பணத்திற்கும்
ஆசைப்பட்டது கிடையாது. என்மீது இப்படி அபாண்டமாகப் பழி போடாதே!
என்று கெஞ்சினார். அவனோ அவரை வண்டியிலிருந்து கீழே தள்ளிவிட்டு,
வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு வீட்டுக்குப் போனான்.
வீட்டில் அவன் தன்னுடைய தாயிடம் நடந்ததையெல்லாம் சொல்லி, அந்தப்
பெரியவரைத் திட்டித் தீர்த்தான். அப்பொழுது அவனுடைய தாய் அவனிடம்,
"தம்பி! அவசரப்பட்டு வார்த்தைகளை உதிர்க்காதே! இன்று நீ உன்னுடைய
வாலெட்டை வீட்டிலேயே வைத்துவிட்டுப் போய்விட்டாய்" என்றார். இளைஞனுக்கோ
தூக்கி வாரிப்போட்டது. செய்யாத தவற்றுக்கு அந்தப் பெரியவரைத்
தவறாகப் பேசிவிட்டோமே" என்று வருத்தப்பட்டான்.
தவற்றைத் தன்மீது வைத்துகொண்டு, பெரியவர்மீது அபாண்டமாகப் பழி
சுமத்திய, பொய்ச்சான்று சொன்ன இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன்
போன்றுதான், இன்றைய முதல் வாசகத்தில், இரண்டு முதியவர் ஒரு
குற்றமும் செய்யாத சூசன்னாவிற்கு எதிராகப் பொய்ச்சான்று
சொல்கின்றார்கள். இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச்
சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
முதியோர் இருவர் சூசன்னாவுக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லுதல்
தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
பாபிலோனில் இருந்த யோயாக்கிமின் மனைவியான சூசான்னாவை இரண்டு
முதியவர்கள் தங்களுடைய இச்சைக்குப் பணியும்படி கேட்கின்றார்கள்.
அவரோ அவர்களுடைய இச்சைக்குப் பணிய மறுத்ததால், அவர்கள் அவருக்கு
எதிராக, "இவள் ஓர் இளைஞனோடு இருந்தாள்" என்று பொய்ச்சான்று
சொல்லி, அவருக்குத் தண்டனை தர முடிவு செய்கின்றார்கள்.
இங்கு நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான செய்தி, சூசன்னாவைத் தங்களுடைய
இச்சைக்குப் பணிய வைக்க முயன்ற இரண்டு முதியவர்களும் நடுவர்களாக
இருந்தார்கள். என்பதுதான். நடுவர்கள் நியாயமான, நேர்மையான
தீர்ப்பினை வழங்கவேண்டும். இவர்களோ அநீதியான தீர்ப்பினை வழங்குகின்றார்கள்.
இதனால் என்ன நடக்கின்றது என்று தொடர்ந்து சிந்தித்துப்
பார்ப்போம்.
ஆண்டவர் சூசன்னாவின் கூக்குரலுக்குச் செவிசாய்த்தல்
நடுவர்களாக இருந்த இரண்டு முதியவர்கள் தனக்கெதிராகப்
பொய்ச்சான்று உரைத்ததைத் தொடர்ந்து, சூசன்னா ஆண்டவரை நோக்கிக்
கூக்குரலிடுகின்றார். அப்பொழுது தானியேல் அங்கு வந்து, முதியர்கள்
இருவரையும் தனித்தனியாக விசாரித்து, இருவர் சொன்ன சான்றும்
பொய்ச்சான்று என்று மக்களுக்கு எடுத்துரைத்து, அவர்களுக்குத்
தண்டனையை வழங்குகின்றார். சூசன்னாவுக்கு எதிராகப் பொய்ச்சான்று
சொல்ல முயன்று, இறுதியில் அந்த இரண்டு முதியவர்களும் தண்டிக்கப்பட்டது
நமக்கு ஒரு முக்கியமான செய்திகளைச் சொல்கின்றது. அதில் என்னவெனில்,
யாரெல்லாம் ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து, அவரை நோக்கிக்
கூக்குரல் எழுப்புகின்றார்களோ, அவர்களுடைய கூக்குரலை ஆண்டவர்
கேட்கின்றார் என்பதாகும். ஒரு குற்றமும் செய்யாத சூசன்னா ஆண்டவர்மீது
நம்பிக்கை வைத்து, அவரை நோக்கி கூக்குரல் எழுப்பினார். ஆண்டவரும்
அவருடைய குரலைக் கேட்டார். நாமும் தூய வாழ்வு வாழ்ந்து, ஆண்டவரை
நோக்கி மன்றாடினால், அவர் நம்முடைய மன்றாட்டைக் கேட்பார் என்பது
உறுதி.
சிந்தனை
"இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்
(திபா 34: 6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் நம்முடைய
துன்ப வேளையில் இறைவனை நோக்கிக் கூவியழைப்போம். ஆண்டவரும் நம்முடைய
கூக்குரலுக்குச் செவிசாய்ப்பார். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 8: 1-11
"பாவம் இல்லாதவர் கல் எறியட்டும்"
நிகழ்வு
முன்பொரு காலத்தில் மன்னன் ஒருவன் இருந்தான். அவன் மக்கள்மீது
மிகுந்த அன்பும் கரிசனையும் கொண்டிருந்தான். அவனுக்குப் பிறந்த
நாள் வந்தபொழுது, அவன் மக்களுக்கு விருந்துகொடுக்க
விரும்பினான். ஆதலால் அவன் தன்னுடைய நாட்டிலிருந்த மிகவும் பிரசித்தி
பெற்ற ஒரு சமையல்காரரை அழைத்து, மக்களுக்கு விருந்து தயாரிக்கச்
சொன்னான். சமையல்காரரும் மன்னன்மீது தனிப்பட்ட அன்புகொண்டிருந்ததால்,
மிகச்சிறப்பான முறையில் உணவு தயாரித்தார்.
தயாரிப்பு வேலைகள் முடிந்ததும், விருந்து தொடங்கியது.
விருந்தில் மன்னனே எல்லாருக்கும் உணவு பரிமாறினான். இதைக் கண்டு
மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். இதற்கிடையில் முதலில்
உணவு சாப்பிட்டவர்கள் யாவரும் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து
இறந்துபோனார்கள். அவர்களைச் சோதித்துப் பார்த்த பின்புதான்
தெரிந்தது, அவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டில் நஞ்சு கலந்திருக்கின்றது
என்று.
மன்னன் ஒருவினாடி அதிர்ந்துபோனான். உடனே அவன் சமையல்காரரை அழைத்து,
"நீர் என்ன செய்தீர்...? உணவு உண்ட மக்கள் அனைவரும் இப்படிச்
செத்துக்கொண்டிருக்கின்றார்களே...!" என்று கத்தினான். "மன்னா!
எனக்கு ஒன்றும் தெரியாது! நான் யாருக்கும் எந்தக் கெடுதலும்
செய்யக்கூடிய ஆள் கிடையாது. இது உங்களுக்கே தெரியும்" என்று வருத்தத்தோடு
சொன்னார் அந்த சமையல்காரர். இதைத் தொடர்ந்து உணவு பரிமாறுவது
நிறுத்தப்பட்டது. எல்லாரும் அங்கிருந்து வருத்ததோடு கலைந்துசென்றார்கள்.
தன் அறைக்குள் சென்ற மன்னன், "யார் இந்தப் பாதகச் செயலைச்
செய்திருக்கக்கூடும்...?" என்று சிந்தித்தவாறு இருந்தான். உண்மையில்
நடந்தது இதுதான்: பெரிய கழுகு ஒன்று, விஷப்பாம்பு ஒன்றைத் தன்
அலகில் கொத்தித் தூக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தது. உணவு தயாரிக்கும்
இடத்தின் மேல் வந்தபொழுது விஷப்பாம்பானது தன்னுடைய விஷத்தைக்
கீழே கக்கியது. விஷம் உணவு முழுவதும் கலந்தது. அப்பொழுது இதை
யாரும் கவனிக்கவில்லை. இதனால் விஷம் கலந்த உணவை உட்கொண்டதால்,
பலர் இறந்துபோனார்கள்.
இந்த நிகழ்வை ஆண்டுகள் மெல்ல உருண்டியபொழுது, மக்களும் மறந்துபோனார்கள்.
இந்த வேளையில் பக்கத்து நாட்டிலிருந்து இரண்டு துறவிகள் மன்னனைப்
பார்க்க வந்தார்கள். அவர்கள் அரண்மனைக்குள் நுழைவதற்கு முன்,
அரண்மனை வாசலில் நின்றுகொண்டிருந்த ஒருசிலர், அந்த இரண்டு துறவிகளிடம்,
"நீங்கள் மன்னனைப் பார்க்கப் புதிதாக வருகின்றீர்களா...? கவனமாக
இருங்கள்; இல்லையென்றால் மன்னன் நீங்கள் சாப்பிடும் உணவில் விஷம்
வைத்துக் கொன்றுவிடுவான்" என்றான். இதைக் கேட்ட அந்த இரண்டு துறவிகளும்
அதிர்ந்துபோனார்கள். ஆனாலும் அவர்கள் அவர்களிடத்தில் எதுவும்
பேசாமல், நேராக மன்னனிடத்தில் சென்று, வெளியே இருந்த மனிதர்கள்
சொன்னதை அவனிடத்தில் சொன்னார்கள். சொல்லிவிட்டு அவனிடம், "இந்த
மாதிரி நடந்தது என்னவென்றே தெரியாமல், குறைகூறிக்கொண்டிருப்பவர்களை,
அடுத்தவர்களைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருப்பவர்களை நாட்டினில்
வைத்திருந்தால், அது நாட்டுக்கக்கத்தான் கேடு" என்றார்கள். உடனே
மன்னன் அவர்கள் சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்தவாய், அரண்மனைக்கு
வெளியே இருந்து குறைகூறிக்கொண்டும் தீர்ப்பிட்டுக் கொண்டிருந்தவர்களையும்
இருந்தவர்களை நாடு கடத்தினான்.
ஆம், பலருக்கு அடுத்தவரைத் தீர்ப்பிடுவதும் குறைகூறுவதும்தான்
முழு நேரவேலையே! இப்படி அடுத்தவர்களைத் தீர்ப்பிட்டுக்
கொண்டும் குறைகூறிக்கொண்டிருக்கும் இருக்கும் மனிதர்களுக்கு நற்செய்தியில்
ஆண்டவர் இயேசு ஒரு செய்தி சொல்கின்றார். அது என்ன என்று இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
பாவம் இல்லாதவர் கல் எறியட்டும்
நற்செய்தியில், மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட
பெண்ணை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரை என்ன செய்யலாம் என்று
கேட்கின்றார்கள். மறைநூல் அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும்
விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்ற
எண்ணத்தை விடவும் இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட
வேண்டும் என்கின்ற எண்ணம்தான் பெரிதாக இருந்தது. இதை நன்கு உணர்ந்த
இயேசு அவர்களிடம், உங்களில் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல்
கல் எறியட்டும் என்கின்றார். அவர் சொன்னதைக் கேட்டு முதியவர்
தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அங்கிருந்து செல்கின்றார்கள்.
மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் விபசாரத்தில் பிடிபட்ட
பெண்மீது குற்றம் சுமத்த வந்தார்கள். ஆனால் இயேசு அவர்களைப்
பார்த்து, நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்கின்றார்களா என்பது
போல் கேள்வியைக் கேட்டதும், அங்கிருந்து சென்றுவிடுகின்றார்கள்.
நற்செய்தி இயேசு சொன்ன, உங்களில் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல்
கல் எறியட்டும் என்ற வார்த்தைகள் நம்முடைய ஆழமான சிந்தனைக்குரியவையாக
இருக்கின்றன. மற்றவர்களைக் குறைகூறிக்கொண்டும் தீர்ப்பிட்டுக்
கொண்டும் இருக்கும் நாம் குற்றமற்றவர்களா இருக்கின்றோமா?
சிந்திப்போம்.
இயேசு அந்தப் பெண்ணைத் தீர்ப்பிடவில்லை. மாறாக, இரக்கம்
காட்டினார். நாமும் மற்றவர்களைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல்,
இரக்கம் காட்டுபவர்களாக இருப்போம்.
சிந்தனை
"உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே
விரும்புகிறேன்" (ஒசே 6:6) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் ஒருவர்
மற்றவரைத் தீர்ப்பிட்டுக்கொண்டும் குற்றம் கண்டுபிடித்துக்
கொண்டு இராமல், ஆண்டவரைப் போன்று ஒருவர் மற்றவரிடத்தில்
இரக்கத்தோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|