Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   17 மார்ச் 2020  
    தவக்காலம் 3 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் (இ) 1: 2, 11-19

அந்நாள்களில்

அசரியா நெருப்பின் நடுவில் எழுந்து நின்று உரத்த குரலில் பின்வருமாறு மன்றாடினார்: உமது பெயரை முன்னிட்டு எங்களை என்றும் கைவிட்டு விடாதீர்; உமது உடன்படிக்கையை முறித்து விடாதீர். உம் அன்பர் ஆபிரகாமை முன்னிட்டும், உம் ஊழியர் ஈசாக்கை முன்னிட்டும், உம் தூயவர் இஸ்ரயேலை முன்னிட்டும், உம் இரக்கம் எங்களைவிட்டு நீங்கச் செய்யாதீர். விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் அவர்களின் வழிமரபினரைப் பெருகச் செய்வதாக நீர் அவர்களுக்கு உறுதி அளித்தீர்.

ஆண்டவரே, எங்கள் பாவங்களால் மற்ற மக்களினங்களைவிட நாங்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்டோம்; உலகெங்கும் இன்று தாழ்வடைந்தோம். இப்பொழுது எங்களுக்கு மன்னர் இல்லை, இறைவாக்கினர் இல்லை, தலைவர் இல்லை; எரிபலி இல்லை. எந்தப் பலியும் இல்லை; காணிக்கைப் பொருளோ தூபமோ இல்லை; உம் திருமுன் பலியிட்டு, உம் இரக்கத்தைப் பெற இடமே இல்லை.

ஆயினும், செம்மறிக்கடாக்கள், காளைகளால் அமைந்த எரிபலி போலும் பல்லாயிரம் கொழுத்த ஆட்டுக்குட்டிகளாலான பலிபோலும் நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவோமாக. அவ்வாறே எமது பலி இன்று உம் திருமுன் அமைவதாக; நாங்கள் முழுமையாக உம்மைப் பின்பற்றுவோமாக; ஏனெனில் உம்மில் நம்பிக்கை வைப்போர் வெட்கத்திற்கு ஆட்படமாட்டார். இப்பொழுது நாங்கள் முழு உள்ளத்துடன் உம்மைப் பின்பற்றுகிறோம். உமக்கு அஞ்சி, உம் முகத்தை நாடுகிறோம். எம்மை வெட்கத்துக்கு உள்ளாக்காதீர்; மாறாக, உம் பரிவிற்கு ஏற்பவும், இரக்கப் பெருக்கிற்கு ஏற்பவும் எங்களை நடத்தும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  திபா 25: 4-5ab. 6,7bc. 8-9 (பல்லவி: 6a) Mp3
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்.
4
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5ab
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். - பல்லவி

6
ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7bc
உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். - பல்லவி

8
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9
எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (யோவே 2: 12-13)

"இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்," என்கிறார் ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21-35

அக்காலத்தில்

பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?" எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, "என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்" என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, "நீ பட்ட கடனைத் திருப்பித் தா" எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, "என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையில் அடைத்தான்.

அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றை எல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, "பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?" என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 தானியேல் 1: 2, 11-19

தன்மேல் நம்பிக்கை வைப்போரைக் கைவிடாத இறைவன்


நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பாக "ஸ்டெல்லா" என்ற ஆங்கிலக் கப்பல் கடலில் பயணம் சென்றபொழுது, பாறையின்மீது மோதி உடைந்து போனது. இதைத் தொடர்ந்து கப்பல்தளபதி, கப்பலில் இருந்த ஒரேயொரு "வாழ்க்கைப் படகில்" உள்ளே இருந்த பன்னிரண்டு பெண்களை ஏற்றிவிட்டு, மற்றவர்களை மறுகரைக்கு நீந்திச் செல்லுமாறு சொன்னார்.

இதனால் ஆண்கள் அனைவரும் கடலில் நீந்தத் தொடங்க. பன்னிரண்டு பெண்களும் வாழ்க்கைப் படகில் கரையை நோக்கி மெல்லச் சென்றுகொண்டிருந்தார்கள். திடீரென்று புயற்காற்று அடிக்கவே, வாழ்க்கைப் படகில் சென்றுகொண்டிருந்த அந்தப் பன்னிரண்டு பெண்களும் ஒரு வினாடி தடுமாறிப் போக, அவர்களிடமிருந்த துடுப்பு பறந்துசென்று கடலுக்குள் விழுந்தது. இதனால் அவர்கள் செய்வதறியாது திகைத்தார்கள்.

இதற்கிடையில் அந்தப் பண்ணிரண்டு பெண்களுள் ஒருவரான மார்கரேட் வில்லியம் என்ற பெண் மற்ற பெண்களிடம், "இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் ஒருபோதும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது, "ஆண்டவர் முன் அமைதியுடன் காத்திரு" (திபா 37:7) என்ற திருப்பாடல் வரிகளை நாம் நம்பிக்கையோடு உச்சரித்து இறைவனிடம் மன்றாடுவோம். அவர் நிச்சயம் நம்முடைய வேண்டுதலுக்குச் செவிசாய்த்து, நம்மை இந்த ஆபத்திலிருந்து மீட்பார்" என்று சொல்லி உற்சாகப்படுத்தினார்.

நேரம் சென்றுகொண்டிருந்தது. அதிகாலை வேளையில், மீட்புக் குழுவினர் கப்பல் பாறையின்மீது மீது மோதி உடைந்துபோன செய்தியைக் கேள்விப்பட்டு, அதிலிருந்தவர்களை மீட்பதற்காக கடலில் வேகமாக வந்துகொண்டிருந்தார்கள். அப்பொழுது நடுக்கடலில் பெண்களின் சத்தம் கேட்பதை அறிந்து, அவர்கள் அருகே சென்று, அந்தப் பன்னிரண்டு போரையும் காப்பாற்றினர்.

ஆம், அந்தப் பன்னிரண்டு பெண்களும் நம்பிக்கையோடு ஆண்டவரின் வார்த்தைகளைச் சொல்லி மன்றாடியதால், ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர்மீது நம்பிக்கையோடு இருந்த மூன்று இளைஞர்கள் தீயிலிருந்து காப்பற்றப் படுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

அசரியாவின் மன்றாட்டு

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்த்தில், பபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், பொன்னாலான சிலையை எல்லாரும் வணங்கச் சொன்னபொழுது அனனியாவும் அசரியாவும் மிசாவேலும், இஸ்ரயேலின் இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்கின்றார்கள். இதனால் சினமுருகின்ற அரசன் அவர்களை நெருப்பில் தூக்கிப் போடுகின்றான். நெருப்பில் தூக்கிப்போட்டால் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையிலிருந்து தளர்ந்து, தான் செய்து வைத்திருக்கும் பொன்னாலான சிலையை வணங்குவார்கள் என்று நெபுகத்னேசர் நினைத்தான்; ஆனால், அவன் நினைத்ததற்கும் மாறாக, அவர்கள் தங்களுடைய நம்பிக்கையில் வலுப்பெறுகின்றார்கள். குறிப்பாக மூன்று இளைஞர்களில் ஒருவரான அசரியா இறைவனை நோக்கி எழுப்புகின்ற மன்றாட்டு நம்மை நம்முடைய உள்ளத்தை உருக்குவதாக இருக்கின்றது.

ஆபத்திலிருந்து காப்பற்றிய இறைவன்

இன்றைய முதல் வாசகத்தில் அசரியா இறைவனை நோக்கி எழுப்புகின்ற மன்றாட்டில் இரண்டு முக்கியமான கருத்துகள் இருக்கின்றன. ஒன்று, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிக்காமல், அவரை விட்டு விலகிச் சென்றது. அதற்காக அசரியா இறைவனிடம் மன்னிப்புக் கேட்கின்றார். இரண்டாவது கருத்து, யாரெல்லாம் இறைவன்மீது நம்பிக்கை வைக்கின்றார்களோ அவர்களை இறைவன் கைவிடவோ, வெட்கத்திற்கு ஆளாக்கவோ மாட்டார் என்பதாகும்.

இதில் இடம்பெறுகின்ற இரண்டாவது கருத்தான ஆண்டவர்மீது நம்பிக்கை வைப்போரை ஆண்டவர் வெட்கத்திற்கு ஆளாக்கமாட்டார் என்பது இன்றைய முதல் வாசகத்தோடு மிகவும் நெருங்கிப் போகின்றது. மூன்று இளைஞர்களும் பொன்னாலான சிலையை வழிபடாமல் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தார்கள். இதனால் அவர்களோடு இன்னோர் இளைஞர் தோன்றுகின்றார்; அவர்களைத் தீயிலிருந்து காப்பாற்றுகின்றார். இதைப் பார்த்துவிட்டு நெபுக்கத்னேசர் இஸ்ரயேலின் இறைவனே உண்மையான இறைவன் என்று நம்பித் தொடங்கி, அவர்களைத் தீயிலிருந்து விடுவிகின்றான்.

ஆம், நாம் இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கும்பொழுது, அவர் நம்மை ஒருபோதும் கைநெகிழ மாட்டார் என்பதைத்தான் இந்த நிகழ்வின் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. ஆகையால், நாம் இறைவனிடம் ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழமுயற்சி செய்வோம்.

சிந்தனை

"தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்" (திபா 72: 12) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் இந்த மூன்று இளைஞர்களைப் போன்று நமது திக்கற்ற வேளையில் நம்பிக்கையோடு இறைவனை நோக்கி மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 18: 21-35

நிபந்தனையின்றி மன்னிப்போம்

நிகழ்வு

பல ஆண்டுகளுக்கு முன்பாக துருக்கியர்களுக்கும் அர்மேனியர்களுக்கும் இடையே கடுமையான போர் மூண்டபொழுது, ஒரு துருக்கியப் படைவீரன் அர்மேனியாவில் இருந்த ஓர் அமெரிக்கச் சிறுமியையும் சிறுவனையும் ஓட ஓட விரட்டினான். இருவரும் சகோதரர், சகோதரிகள். அவர்கள் இருவரும் தங்களுடைய உயிரைக் காத்துக்கொள்ள எவ்வளவோ முயன்றார்கள். ஒரு கட்டத்தில் சிறுவனால் ஓட முடியாமல் போகவே, துருக்கியப் படைவீரன் அச்சிறுவனை சிறுமியின் கண்முன்னாலேயே வாளுக்கு இரையாக்கினான்; சிறுமி எப்படியோ அந்தப் படைவீரனிடமிருந்து உயிர் தப்பினாள்.

இதற்குப் பின்பு சிறுமி வளர்ந்து ஒரு மருத்துவமையில் செவிலியராகப் பணிசெய்து வந்தாள். இப்படியிருக்கையில் ஒருநாள் ஒருவன் பலத்த காயங்களோடு அவள் பணிசெய்துவந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டான். அவனை உற்றுக் கவனித்தபொழுதுதான் அவளுக்குத் தெரிந்தது, அவன் வேறுயாருமல்ல, தன்னுடைய தம்பியைத் தன் முன்னாலேயே கொன்றுபோட்டவன் என்று. "உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இவனை இப்படியே விட்டுவிடலாமா?" என்று அவள் ஒருவினாடி யோசித்தாள். பின்னர் அவள் தன்னுடைய மனத்தைச் மாற்றிக்கொண்டு, அவனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டாள். அவள் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக படைவீரன் உயிர்பிழைத்தான்.

அவனுடைய உடல்நலம் தேறியதும், தன்னுடைய உயிரைக் காப்பாற்றியது, முன்பு தன்னால் கொல்லப்பட்ட சிறுவனின் சகோதரிதான் என்ற உண்மை படைவீரனுக்குத் தெரிய வந்தது. உடனே அவன் அவளைப் பார்த்து, "நான்தான் உன்னுடைய சகோதரனைக் கொன்றவன் என்று தெரிந்தபின்பும் உன்னால் எப்படி என்னுடைய உயிரைக் காப்பாற்ற முடிந்தது?" என்றான். அதற்கு அந்த செவிலிப் பெண், "நான் வணங்கக் கடவுள், தீமைத் செய்தவர்களுக்கு நன்மையையும் பகைவர்களை மன்னிக்கவும் சொல்லியிருக்கின்றார். அதனால்தான் நான் உங்களுடைய உயிரைக் காப்பாற்றினேன்" என்றான்.

தன்னுடைய சகோதரனைத் தன் கண்முன்னால் கொன்றவனையும் மன்னித்த அந்த செவிலிப் பெண் மன்னிப்பிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றால் அது மிகையில்லை. நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு நிபந்தனையின்றி மன்னிக்கவேண்டும் என்ற செய்தியை நமக்குக் கற்றுத் தருகின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

தீங்கு செய்தவர்களை எத்தனை முறை மன்னிப்பது?

நற்செய்தியில் பேதுரு இயேசுவிடம், "என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால், நான் எத்தனை முறை அவரை மன்னிக்கவேண்டும்? ஏழு முறை மட்டுமா?" என்று கேட்கின்றார். பேதுரு இயேசுவிடம் கேட்பதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை. யூத இரபிகள், தவறு செய்கின்ற ஒருவரை மூன்றுமுறை மன்னிக்கலாம் என்று சொல்லிவந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில், பேதுரு தான் மிகவும் பெருந்தன்மையாக இருக்கிறேன் என்று இயேசுவிடம் காட்டிக்கொள்ள, ஏழு முறை மட்டுமா? என்று கேட்கின்றார். பேதுரு இயேசுவிடம் இப்படிச் சொன்னதால், இயேசு அவரைப் பாராட்டக்கூடும் என்று நினைத்திருக்கக்கூடும்; ஆனால், இயேசு அவரைப் பாராட்டவில்லை; மாறாக, ஏழுமுறை முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என்று சொல்கின்றார்.

இயேசு பேதுருவைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளின் அர்த்தமென்ன என்பதைத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நிபந்தனையின்றி மன்னிக்கும் கடவுள்

இயேசு பேதுருவிடம், எழுபது தடவை ஏழுமுறை என்று சொன்னதன் மூலம், அவர் சகோதரர், சகோதரிகளை நம்மை நிபந்தனையின்றி மன்னிக்கச் சொல்கின்றார். இதற்காக இயேசு ஓர் உவமையையும் சொல்கின்றார். இயேசு சொல்லும் உவமையில் வரும் அரசர் தன்னிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டிருந்தவருடைய கடனைத் தள்ளுபடி செய்கின்றார். அவரோ தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்தவருடைய கடனைத் தள்ளுபடி செய்யாமல், அவரைச் சிறையில் அடைந்ததால், அரசர் அந்தப் பொல்லாத பணியாளரைக் கடைசியில் சிறையில் தள்ளுகின்றார்.

இந்த உவமையில் வருகின்ற அரசர்தான் கடவுள்... மன்னிக்க மறுத்த பணியாளர்தான் நாமெல்லாம். ஆம், கடவுள் நம்மை நிபந்தனையின்றி மன்னிக்கின்றபொழுது, நாம் நம்முடைய சகோதரர், சகோதரிகள் செய்யக்கூடிய பாவங்களை மன்னியாமல் இருக்கின்றோம். இதனால் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகின்றோம். ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்" (மத் 6: 14) என்று கூறுவார். அப்படியானால், நாம் இறைவனிடமிருந்து மன்னிப்பைப் பெற, நம் சகோதரர் சகோதரிகளை மன்னிப்பது இன்றியமையாததாக இருக்கின்றது. இந்த உண்மையை உணர்ந்திருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

"ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்கவேண்டும்" (கொலோ 3: 13) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் ஆண்டவர் நம்மை மன்னித்தது போல, ஒருவர் மற்றவரை மன்னிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!