|
|
16
மார்ச் 2020 |
|
|
தவக்காலம்
3 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்;
சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-15a
அந்நாள்களில்
சிரியா மன்னனின் படைத் தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும்
நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் மூலமாய் ஆண்டவர்
சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமைமிக்க வீரர்;
ஆனால் தொழுநோயாளி. சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச்
சென்றபொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக்கொண்டு
வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள்.
அவள் தன் தலைவியை நோக்கி, "என் தலைவர் சமாரியாவில் இருக்கும்
இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது
தொழுநோயைக் குணமாக்குவார்" என்றாள். எனவே நாமான் தம் தலைவனிடம்
சென்று, "இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு
கூறுகின்றாள்" என்று அவனுக்குத் தெரிவித்தார். அப்பொழுது
சிரியா மன்னர், "சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசனுக்கு மடல்
தருகிறேன்" என்றார்.
எனவே நாமான் ஏறத்தாழ நானூறு கிலோ வெள்ளியையும், ஆறாயிரம்
பொற்காசுகளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக்கொண்டு பயணமானார்.
அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார். அதில்
"இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன். அவனது
தொழுநோயை நீர் குணமாக்க வேண்டும்" என்று எழுதப் பட்டிருந்தது.
இஸ்ரயேல் அரசன் அம்மடலைப் படித்தவுடன் தன் ஆடைகளைக்
கிழித்துக்கொண்டு, "நானென்ன கடவுளா? உயிரைக் கொடுக்கவும், உயிரை
எடுக்கவும் என்னால் இயலுமா? சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி
அவனுக்குள்ள தொழுநோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே! என்னோடு
போரிட அவன் வாய்ப்புத் தேடுவதைப் பார்த்தீர்களா!" என்று
கூறினான்.
கடவுளின் அடியவரான எலிசா இஸ்ரயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக்
கிழித்துக்கொண்ட செய்தியைக் கேள்வியுற்று அவனிடம் ஆள் அனுப்பி,
"நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம்
வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்"
என்று சொன்னார். அவ்வாறே நாமான் தம் குதிரைகளுடனும் தேருடனும்
எலிசா வீட்டு வாயில்முன் வந்து நின்றார். எலிசா, "நீ போய்
யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்" என்று
ஆள் அனுப்பிச் சொல்லச் சொன்னார். எனவே, நாமான் சினமுற்று
வெளியேறினார். அப்பொழுது அவர், "அவர் என்னிடம் வந்து, என் அருகில்
நின்று, தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து,
தொழுநோய் கண்ட இடத்தின்மேல் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவாரென்று
நான் எண்ணியிருந்தேன். அபானா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரயேலில்
உள்ள ஆறுகள் அனைத்தையும்விட மேலானவை அல்லவா? அவற்றில் மூழ்கி
நான் நலமடைய முடியாதா?" என்று கூறி ஆத்திரமாய்த் திரும்பிச்
செல்லலானார்.
அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி அவரிடம், "எம் தந்தையே!
இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறி இருந்தால்,
நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, "மூழ்கி எழும்; நலமடைவீர்"
என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன?" என்றனர். எனவே
நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க
யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல்
சிறு பிள்ளையின் உடலைப்போல் மாறினது.
பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம்
திரும்பி வந்து, "இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள்
இல்லையென இப்போது உறுதியாக அறிந்துகொண்டேன். இதோ, உம் அடியான்!
எனது அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 42: 1-2; 43: 3-4 (பல்லவி: 2a)
Mp3
=================================================================================
பல்லவி: என் நெஞ்சம் உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது.
1
கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என்
நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. - பல்லவி
2
என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது;
எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?
- பல்லவி
3
உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி,
உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச்
சேர்க்கும். - பல்லவி
4
அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய
இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து
உம்மைப் புகழ்ந்திடுவேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(திபா 130: 5, 7)
ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; அவரது சொற்களுக்காக
ஆவலுடன் காத்திருக்கின்றேன். ஆண்டவரிடமே உள்ளது பேரன்பு;
மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எலியா, எலிசா என்பவர்களைப் போல் இயேசுவும் யூதர்களுக்கென்று மட்டும்
அனுப்பப்படவில்லை.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 24-30
இயேசு நாசரேத்துக்கு வந்திருந்தபோது தொழுகைக்கூடத்தில் மக்களை
நோக்கிக் கூறியது: "நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர்
எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. உண்மையாக
நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக
வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில்
இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள்
எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த
சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.
மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே
தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும்
நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது."
தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்;
அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த
மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர்
அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2 அரசர்கள் 5: 1-15
"இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென அறிந்துகொண்டேன்"
நிகழ்வு
இங்கிலாந்து நாட்டின் போக்குவரத்து மிகுந்த சாலை அது. ஒரு மழைநாளில்
அந்தச் சாலையைக் கடக்க பள்ளிச் சிறுமி ஒருத்தி நீண்டநேரமாக முயன்றுகொண்டிருந்தாள்.
எவ்வளவோ முயன்றும் அவளால் சாலையைக் கடக்க முடியவில்லை. ஒருசிலர்
அந்தச் சாலையை அவசர அவசரமாகக் கடந்துசென்றார்கள். அவர்களோடு
சேர்ந்துகூட அவள் சாலையைக் கடந்துபோகவில்லை. அப்படியே அங்கு
நின்றுகொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில் பெரியவர் ஒருவர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும்,
அவளுக்குள் அவர்மீது ஒருவிதமான நம்பிக்கை பிறந்தது. உடனே அவள்
பெரியவரிடம் சென்று, "நான் இந்தச் சாலையைக் கடந்துபோக நீங்கள்
எனக்கு உதவி புரிவீர்களா...?" என்று கேட்டாள். "கட்டாயம்! நீ
இந்தச் சாலையைக் கடக்க நான் உனக்கு செய்கின்றேன்" என்று
சொல்லிவிட்டு, அவர் அந்தச் சிறுமியின் கையை இறுகப்
பிடித்துக்கொண்டு சாலையைக் கடக்க உதவி செய்தார். அந்தப் பெரியவர்
வேறு யாருமல்ல, ஷப்டஸ்பரி நகரின் தலைவர் ஆவார்.
இது குறித்து அவர் பின்னாளில் மக்களிடத்தில் பேசும்பொழுது,
"எனக்கு இந்த நகரின் தலைவர் என்று சொல்வதைவிடவும், சிறுமி ஒருத்தி
என்மீது நம்பிக்கை கொண்டு, சாலையைக் கடக்க உதவி கேட்டார் என்று
சொல்வதுதான் பெருமையாக இருக்கின்றது" என்றார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற பள்ளிச் சிறுமி, ஷப்டஸ்பரி நகரின்
தலைவர்மீது நம்பிக்கை வைத்து, அவரிடம் சரணாகதி அடைந்தார். அதனால்
அவர் அந்தச் சிறுமி சாலையைக் கடக்க உதவி புரிந்தார். இன்றைய முதல்
வாசகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிரியா நாட்டுப் படைத்தலைவனாகிய
நாமான் இஸ்ரயேலின் கடவுளின்மீது நம்பிக்கைக் கொண்டு, சரணடைந்ததால்
நலம்பெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நாமான்
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
சிரியா நாட்டுப் படைத்தலைவனாகிய நாமான் தொழுநோயிலிருந்து நலம்பெறுவதைக்
குறித்து வாசிக்கின்றோம். நாமான் தன்னுடைய தலைவனாகிய சிரியா
நாட்டு அரசரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தான். காரணம் அவன் அரசருக்குப்
போரில் பல வெற்றிகளைக் குவித்துத் தந்தான். இப்படியிருக்கையில்
அவன் தொழுநோயால் பீடிக்கப்படுகின்றான். இதையறியும் நாமானின்
வீட்டில் பணிந்துபுரிந்து வந்த இஸ்ரயேலைச் சார்ந்த சிறுமி ஒருத்தி,
அவனிடம் தங்களுடைய நாட்டில் இறைவாக்கினர் ஒருவர் இருக்கின்றார்...
அவரிடம் சென்றால் தொழுநோய் நீங்கும் என்று சொல்ல, நாமானும் தன்னுடைய
நாட்டு அரசரிடமிருந்து மடல் வாங்கி, சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர்
எலிசாவிடம் செல்கின்றான்.
பரிசுப்பொருள்கள் அல்ல, ஆண்டவர்மீது கொண்ட பற்றே நாமனுக்கு
நலமளித்தது
நாமானின் எண்ணமெல்லாம், இறைவாக்கினர் எலிசாவிடம் பரிசுப்பொருள்களைக்
கொடுத்துவிட்டால் போதும்... அவர் ஆண்டவரின் திருப்பெயரைச்
சொல்லி, தனது உடலில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட இடங்களில் கையை
அசைத்து நலப்படுத்திவிடுவார் என்பதாகத்தான் இருந்தது; ஆனால்,
இறைவாக்கினர் எலிசாவோ நாமானை, யோர்தான் ஆற்றில் ஏழுமுறை மூழ்கி
எழச் சொல்கின்றார். இதைக் கேட்டு நாமான் பொறுமை இழக்கின்றான்.
காரணம் யோர்தான் ஆற்றைவிட அபானா, பர்பார் ஆகிய இரண்டு ஆறுகளும்
தூய்மையானவை. அதனால்தான் அவன் பொறுமை இழக்கின்றான். பின்னர்
அவன் தன் பணியாளரின் வார்த்தைகளுக்கு இணங்கி யோர்தான் ஆற்றில்
ஏழுமுறை எழுகினான். அதனால் அவனுடைய உடல் சிறுபிள்ளையின் உடல்
போன்று மாறுகின்றது.
இதற்குப் பின்பு அவன் இறைவாக்கினர் எலிசாவிடம் திரும்பி வந்து,
"இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்பொழுது
உறுதியாக அறிந்துகொண்டேன்" என்று கூறுகின்றான். ஆம்,
நாமானுக்கு அவன் தன் கையோடு கொண்டு வந்த பரிசுப் பொருள்கள் அல்ல,
இறைவாக்கினர் எலிசாவின் வாயிலிருந்து வந்த ஆண்டவரின்
வார்த்தையில் நம்பிக்கை கொண்டதால்தான் நலம் கிடைத்து. நாமான்
ஒரு பிற இனத்தவன். ஆனால், அவன் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு
நலம்பெற்றான். நாமும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்டால்,
நலம் பெறுவோம் என்பது உறுதி.
சிந்தனை
"உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது" (லூக் 17: 19) என்று இயேசு
தன்னிடம் திரும்பி வந்த (சமாரியரான) தொழுநோயாளரைப் பார்த்துச்
சொல்வார். ஆம், ஆண்டவரிடம் நாம் கொள்ளும் நம்பிக்கைதான் நமக்கு
நலமளிக்கும். ஆகையால், நாம் சிரியா நாட்டுப் படைத்தலைவனாகிய
நாமானைப் போன்று, ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 4: 24-30
எல்லா உயிர்களும் தன்னுயிரென பேசி மகிழ்ந்த இயேசு
நிகழ்வு
ஓர் ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவருக்கு எல்லா மக்களிடத்திலும்
நன்மதிப்பும் நற்பெயரும் இருந்தன. அதே ஊரில் தீயவன் ஒருவன் இருந்தான்.
அவனுக்குத் துறவியைக் கொஞ்சம்கூட பிடிக்கவே இல்லை. அதனால் அவன்
துறவியின் பெயருக்குக் கலங்கம் உண்டாக்க நினைத்தான். இதற்காக
அவன் தக்க தருணத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தான்.
ஒருநாள் துறவி ஒரு கிராமத்துச் சாலை வழியாகச்
சென்றுகொண்டிருந்தார். தீயவன் அவரைப் பின்தொடர்ந்துகொண்டே
சென்றான். வழியில் துறவிக்குத் தாகம் எடுக்கவே, அவர்
அருகிலிருந்த ஒரு குடிசைக்குச் சென்று தண்ணீர் கேட்டார்.
அந்தக் குடிசையோ ஒரு தாழ்த்தப்பட்டவருடைய குடிசை. இதைப்
பார்த்த தீயவன், "துறவியின் பெயருக்குக் கலங்கம் ஏற்படுத்த
இந்த ஒரு செயல் போதும்... துறவி தாழ்த்தப்பட்டவருடைய வீட்டில்
தண்ணீர் குடித்தார் என்று சொல்லி அவருடைய பெயருக்குக் கலங்கம்
ஏற்படுத்திவிடலாம்" என்று மனத்திற்குள் நினைத்துக்கொண்டான்.
துறவி தாழ்த்தப்பட்டவருடைய வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு,
தொடர்ந்து நடந்து சென்றார். தீயவன் அவரைப் பின்தொடர்ந்துகொண்டே
சென்றான். நண்பகல் வேளையானதும், துறவிக்குப் பசிக்கத்
தொடங்கிவிட்டது. அதனால் அவர் அருகில் இருந்த ஒரு கொல்லன்
பட்டறைக்குள் சென்று, "சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா?"
என்று அங்கிருந்த மனிதரிடம் கேட்டார். "ஒரு துறவி என்னுடைய
வீட்டிற்கு வந்து உணவு கேட்கின்றார்; இது எவ்வளவு மேலான செயல்"
என்று வியந்துபோன அந்த மனிதர், துறவிக்குத் தன்னுடைய
வீட்டிலிருந்த உணவை எடுத்துக் கொடுத்தார்.
இதைப் பார்த்துவிட்டு அந்தத் தீயவன், "துறவிக்கு எல்லாரும்
ஒன்றுதான் போல... இப்படிப்பட்டவருடைய நற்பெயருக்கு ஒருபோதும்
கலங்கம் ஏற்படுத்த முடியாது" என்று தீயவன் தன்னுடைய மனத்தில்
நினைத்தவனாய், தோல்வி முகத்தோடு திரும்பிச் சென்றான்.
இந்த நிகழ்வில் வருகின்ற துறவி எல்லாரையும் ஒன்றாய்ப்
பார்த்தார்; ஒன்றுபோல் அன்பு செய்தார். நற்செய்தியில் ஆண்டவர்
இயேசு எல்லா மக்களுக்கும் பணிசெய்யப் போவதாக அறிவிக்கின்றார்.
அது மக்கள் நடுவில் எப்படிப்பட்ட சலனத்தை ஏற்படுத்துகின்றது
என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பிற இனத்து மக்கள் நடுவில் பணிசெய்த இறைவாக்கினர்கள்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, நாசரேத்தில் உள்ள
தொழுகைக்கூடத்திற்கு வந்து, எசாயாவின் சுருளேட்டை வாசித்து
முடித்தபின்பு, இரண்டு இறைவாக்கினர்களை எடுத்துக்காட்டுகளாகக்
கூறுகின்றார். ஒருவர் சீதோனைச் சார்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த
கைம்பெண்ணிடம் அனுப்பப்பட்ட இறைவாக்கினர் எலியா (1அர 17:
8-16). இன்னொருவர் சிரியாவைச் சார்ந்த நாமனை நலப்படுத்திய
இறைவாக்கினர் எலிசா (2 அர 5). இயேசு சொன்ன இந்த இரண்டு
இறைவாக்கினர்களுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கின்றது. அது என்ன
ஒற்றுமை எனில், இரண்டுபேருமே பிற இனத்து மக்கள் நடுவில்
பணிசெய்ததுதான். யூதர்கள் பிற இனத்து மக்களை நாயினும் கீழாக
நினைத்தார்கள். இப்படியிருக்கையில் இயேசு அந்த இரண்டு
இறைவாக்கினர்களையும் அவர்களிடம் சொன்னது, தொழுகைக்கூடத்தில்
இருந்தவர்கள் நடுவில் சலசலப்பை ஏற்படுத்துகின்றது.
எல்லாருக்கும் பணிசெய்யப் போவதாய் அறிவித்த இயேசு
ஏற்கெனவே பிற இனத்து மக்கள்மீது வெறுப்போடு இருந்தவர்களிடம்,
பிற இனத்து மக்கள் நடுவில் பணிசெய்த இரண்டு இறைவாக்கினர்களைச்
சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களைப் போன்று தானும் பிற இனத்து
மக்கள் பணிசெய்யப் போவதாக இயேசு அறிவித்ததால்,
தொழுகைக்கூடத்தில் இருந்தவர்கள் அவரை பிடித்து, மலை
உச்சியிலிருந்து தள்ளிவிடப் பார்க்கின்றார்கள்.
இயேசுவைப் பொருத்தவரையில் எல்லாரும் கடவுளின் சாயலைத்
தாங்கியர்கள்; எல்லாரும் கடவுளின் அன்பு மக்கள். ஆதலால்,
அவர்கள் எல்லாருக்கும் கடவுளின் அன்பைக் காட்டுவதுதான்
தன்னுடைய நோக்கம் என்பதை உணர்ந்து செயல்பட்டார். நம்மையும்
அவ்வாறு இருக்க அழைக்கின்றார். ஆதலால், நாம் இயேசு எல்லாரையும்
தன்னுடைய உயிரென நினைத்து அன்பு செய்து, அவர்களுக்குப்
பணிசெய்தது போன்று, நாமும் நம்மோடு வாழ்கின்ர்ட எல்லாரையும்
நம்முடைய உயிரென நினைத்து அன்புசெய்து, அவர்களுக்குப்
பணிசெய்து, இயேசுவின் உண்மையான சீடர்களாவோம்.
சிந்தனை
"மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை
கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள்" (யாக் 2: 1)
என்பார் புனித யாக்கோபு. ஆகையால் இயேசுவின் வழியில் நடக்கின்ற
நாம், எல்லாரையும் அன்புசெய்து, எல்லாருக்கும் பணிவிடை செய்யக்
கற்றுக்கொள்வோம். நம்மிடத்தில் இருக்கின்ற பிரிவினையை,
பிளவுகளை வேரறுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|