Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                  31   மார்ச் 2018  
                                              தவக்காலம் நான்காம் ஞாயிறு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடினர்.

யோசுவா நூலிலிருந்து வாசகம் 5: 9a,10-12

அந்நாள்களில் ஆண்டவர் யோசுவாவிடம், "இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்" என்றார்.

இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர். நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது. இஸ்ரயேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 34: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 8a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 கிறிஸ்துவின் வாயிலாக, கடவுள் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 17-21

சகோதரர் சகோதரிகளே, ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே.

அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.

எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.

நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 15: 18

நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்' என்று அவரிடம் சொல்வேன்.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர்.

பரிசேயரும், மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே"என்று முணுமுணுத்தனர்.

அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: "ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.

அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.

சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.

அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக் கொண்டார்.

உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.

தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார்.

தந்தை தம் பணியாளரை நோக்கி, 'முதல் தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார்.

அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல்லாம் என்ன?' என்று வினவினார்.

அதற்கு ஊழியர் அவரிடம், 'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார்.

அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார்.

உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.

அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார்.

அதற்குத் தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
(யோசுவா 5: 9, 10-12; 2கொரிந்தியர் 5: 17-21; லூக்கா 15: 1-3, 11-32)

பேரன்புகொண்ட ஆண்டவரிடம் திரும்பி வருவோம்

நிகழ்வு

ஓர் அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்புப் படித்துவந்த அன்பு என்ற மாணவனுக்கு அறிவியலில் அதிக ஆர்வம் இருந்தது. எந்தளவுக்கு என்றால், ஆசிரியர்களே வியக்கும் அளவுக்கு அவன் அறிவாற்றல் கொண்டிருந்தான். ஆனால், கணக்குப் பாடம் மட்டும் அவனுக்கு பெரிய தகராறாக இருந்தது. அதனால் அவன் கணக்குப்பாட வகுப்பு வந்தாலே வகுப்பைவிட்டு வெளியே கிளம்பிவிடுவான். இது பல நாட்களாகத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

ஒருநாள் அவனோடு படித்து வந்த அவனுடைய வகுப்புத் தோழர்கள், அவனைத் தனியாகக் கூப்பிட்டு, "டேய் அன்பு! நீ நினைப்பதுபோல் கணக்குப் பாடம் ஒன்றும் அவ்வளவு கடினமில்லை... அதைவிடவும் கணக்கு ஆசிரியர் எல்லார்மீதும் மிகவும் பிரியமாக இருந்து, கணக்குப் பாடத்தைக் கற்றுத்தருகிறார்... அதனால் தயவுசெய்து நீ அவருடைய வகுப்புக்கு வா" என்றார்கள். அவனோ அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என நினைத்துக்கொண்டு மேலும் ஓரிரு வாரங்கள் கணக்குப்பாட வகுப்பிற்குப் போகாமல் இருந்தான். ஒருநாள் அவன் தன்னுடைய வகுப்புத் தோழர்கள் சொன்னது உன்மைதானா? என சோதித்தறிய விரும்பி, கணக்குப் பாட வகுப்பில் கலந்துகொண்டான்.

அன்றைக்குக் கணக்கு ஆசிரியர் எல்லார்மீதும் மிகவும் பிரியமாக இருந்தார். அது மட்டுமல்லாமல், அவர் கற்றுத்தந்த பாடமும் அவனுக்கு எளிதாகப் புரிந்தது. அப்போதுதான் அவன் தன்னுடைய நண்பர்கள் சொன்னது உண்மையென உணர்ந்தான். உடனே ஆசிரியரிடம் சென்று, தான் செய்த தவற்றை எடுத்துச் சொல்லி வருந்தினான். அதற்கு பிறகு கணக்கு ஆசிரியர் அன்புவின்மீது தனிக்கவனம் செலுத்தி, அவனுக்கு கணக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார். அவனும் பொறுப்பை உணர்ந்து படித்து, அந்தாண்டு மாநிலத்திலே முதலாவனாய் ஜெயித்தான்.

எப்படி அன்பு தன்னுடைய தவற்றை உணர்ந்து, கணக்கு ஆசிரியரிடம் வந்து, பாடம் கற்று மாநிலத்திலேயே முதல் மாணவனை ஜெயித்தானோ அதுபோன்று நாம் நம்முடைய பலவீனங்களை உணர்ந்து, திருந்தி, ஆண்டவரிடம் சரணடைந்தால் அவரது பேரன்புக்கு உரியவர்களாவோம் என்பது உறுதி. தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று, நாம் படிக்கக் கேட்ட நற்செய்தி வாசகம், பேரன்பு கொண்ட ஆண்டவரிடம் திரும்பி வருவோம் என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

ஊதாரி மகனும் பேரன்பு கொண்ட ஆண்டவரும்

நற்செய்தி வாசகத்தில் இயேசு, ஊதாரி மைந்தன் உவமையை எடுத்துச் சொல்கின்றார். இதனை ஊதாரி மைந்தன் உவமை என்று சொல்வதைவிடவும், பேரன்புகொண்ட தந்தையின் உவமை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இவ்வுவமை முழுவதும் தந்தைக் கடவுளின் பேரன்பு வியாபித்திருக்கின்றது. நற்செய்திக்குள் ஒரு நற்செய்தி என அழைக்கப்படும் லூக்கா நற்செய்தி 15 ஆம் அதிகாரத்தில் இடம்பெறும் இந்த ஊதாரி மைந்தன் உவமை பிரிந்து போதல், தவற்றை உணர்ந்து திரும்பி வருதல், மகிழ்ச்சி உண்டாகுதல் என்று மூன்று நிலைகளாக வருக்கின்றது. இம்மூன்று நிலைகளிலும் தந்தைக் கடவுளின் அன்பு எப்படியெல்லாம் வெளிப்படுகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

தந்தையை விட்டுப் பிரிந்து செல்லும் மகன்

தந்தையின் அன்பைப் புரிந்துகொள்ளாத அவருடைய இளைய மகன் அவரிடம் வந்து, சொத்தில் தனக்குரிய பங்கைப் பிரித்துத் தருமாறு கேட்கின்றான். யூத வழக்கப்படி தந்தை உயிரோடு இருக்கும்போது சொத்தைப் பிரித்துத் தருவது முறைகிடையாது. ஆனால், இந்தத் தந்தையோ சொத்தைப் பிரித்துத் தருகின்றார். அதுவும் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கை மூத்தவனுக்கும் ஒரு பங்கை இளையவனுக்கும் கொடுக்கவேண்டிய வழக்கம் இருந்தபோதும் (இச 21:17) சொத்தில் பாதியை இளைய மகனுக்குப் பிரித்துத் தருகின்றார். இவ்வாறு தந்தை, மகன் தன்னை இறந்தவர் போன்று கருதினாலும் அவனோடு அவருக்கிருந்த உறவை முறித்துக்கொண்டு போனாலும் அவன் நன்றாக இருக்கவேண்டும் என்பதறாக சொத்தில் பாதியைப் பிரித்துத் தருகின்றார். அதன்மூலம் தான் பேரன்புகொண்ட தந்தை நிரூபித்துக் காட்டுகின்றார்.

தந்தையை விட்டுப் பிரிந்த இளைய மகன் தொலைதூரத்திற்குச் சென்று, தன் நண்பர்களுடன் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்து பணத்தை எல்லாம் தொலைக்கிறான். இங்கு தொலைதூரம் என்பது தந்தையின் இதயத்திற்கும் அவனுடைய இதயத்திற்கும் உள்ள இடைவெளியாகும்.

தன்னுடைய தவற்றை உணர்ந்து, திருந்தி வரும் மகன்

தன்னுடைய கையில் இருந்த பணமும் தன்னோடு இருந்த நண்பர்களும் (!) போன பின்பு, பிழைப்பதற்கே வழியில்லாத நிலைக்கு வந்த மகன் தன்னுடைய தவற்றை உணர்கின்றான். பின்னர் 'தன் தந்தையின் கூலியாட்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, தான் இங்கு பட்டினி கிடப்பதா? உடனே தந்தையுடன் சென்று மன்னிப்புக் கேட்டு, அவருடைய கூலியாட்களுள் ஒருவனாகச் சேர்த்துக்கொள்ளச் சொல்வேன்' என்று உறுதியேற்று தந்தையை நோக்கிச் செல்கின்றான்.

இங்கு இளைய மகன் தன்னுடயை குற்றத்திற்காக மனம் வருந்தியதோடு மட்டுமல்லாமல், தந்தையோடு ஒப்புரவாக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கின்றான். அதன்மூலம் அவன் உண்மையான மனமாற்றத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றான் (திப 11:18, 20:21).

மகன் திரும்பி திருந்தி வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த தந்தை

தன் தவற்றை உணர்ந்து, திருந்திய இளையமகன், தந்தையிடம் சென்று மன்னிப்புக் கேட்கவேண்டும், ஒரு கூலியாளாகவாவது தன்னை ஏற்றுக்கொள்ளும் என்று கேட்கவேண்டும் என்ற எண்ணத்தோடு செல்கின்றான். ஆனால், அவன் தொலைவில் வரும்போதே அவனைக் கண்ட தந்தை ஓடிவந்து, அவன்மீது பரிவுகொண்டு, அவனைக் கட்டித் தழுவி முத்தமிடுகின்றார். அது மட்டுமல்லாமல் அவன் என்னென்னவெல்லாம் சொல்லவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தானோ அவற்றைச் சொல்வதற்குள், தந்தை தன் பணியாளர்களை அழைத்து, முதல்தரமான ஆடையை உடுத்தச் சொல்லி கைக்கு மோதிரமும் காலுக்கு மிதியடியும் அணிவிக்கச் சொல்கின்றார். மோதிரம் என்பது தந்தை அவனைத் தன்னுடைய மகனாக ஏற்றுக்கொண்டார் என்பதைக் குறிக்கின்றது (தொநூ 41:42). இதைத் தொடர்ந்து தந்தை தன் மகன் தன்னிடம் திரும்பி வந்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் பெரிய விருந்தொன்று படைக்கின்றார்.

இயேசு இந்த உவமைமூலம், கடவுளின் பேரன்பினையும் பாவிகளாகிய நாம் மனந்திரும்பி அவரிடம் வருகின்றபோது, அவர் அடைகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்ற உண்மையையும் எடுத்துச் சொல்கின்றார். ஆகையால், இளைய மகனைப் போன்று தந்தைக் கடவுளின் பேரன்பை உணர்ந்தவர்களாய் அவரிடம் திரும்பி வருவோம்.

சிந்தனை

'மனமாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்' என்பார் இயேசு (லூக் 15:7) ஆகையால், பாவிகளாகிய நம்முடைய மனமாற்றத்தினால் விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 அளவற்ற அன்புகொண்ட ஆண்டவரோடு ஒப்புரவாகுவோம்.

ஒரு கோடீஸ்வரத் தந்தை இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன். தன்னுடைய மகன் எது கேட்டாலும் அதை உடனுக்குடன் வாங்கித் தருவார், ஒருபோதும் எதையும் அவர் இல்லை என்று சொல்லியதில்லை. அந்தளவுக்கு தந்தை அவனுக்கு செல்லம் கொடுத்து வளர்த்தார்.

ஒருநாள் அவர் தன்னுடைய மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரிடம் சென்று, "என்னுடைய மகன் எப்படிப் படிக்கிறான்?" என்று கேட்ட, ஆசிரியரோ, "உங்கள் மகன் குறைந்த மதிப்பெண்களே எடுக்கிறான்; பணம் இருக்கிற திமிரில் யாரையும் மதிப்பதில்லை. ஊதாரித்தனமாக இருக்கிறான்" என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். இதைக்கேட்ட தந்தை மனம் ஒடிந்துபோனார். தன்னுடைய மகனை எப்படியாவது நல்வழிப்படுத்தவேண்டும் என்று நினைத்தார்.

மகனுக்குப் பிறந்தநாள் வந்தது. அன்று அவன் தந்தையிடம் வந்து, விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசாக தரவேண்டும் என்று கேட்டுவிட்டு தன் நண்பர்களோடு ஊர் சுற்றப் போய்விட்டான். இரவு நீண்டநேரம் கழித்துத்தான் அவன் வீட்டுக்கு வந்தான். அந்நேரம் வரைக்கும் தந்தை அவனுக்காகக் காத்திருந்தார். அவர் அவனிடம் பரிசுப் பொருளைக் கொடுத்துவிட்டு, "அன்பு மகனே! இதில் நீ கேட்ட பரிசுப் பொருளும், கூடவே ஒரு புத்தகமும் இருக்கிறது. இந்தப் புத்தகம்தான் என் வாழ்வில் மிகப்பெரிய உந்து சந்தியாக இருந்தது. நீயும் ஊதாரித்தனமாக இல்லாமல் கடமை உணர்வோடு வேலை பார்க்க இது உனக்கு உதவியாக இருக்கும்" என்றார். இதைக்கேட்ட மகனால் தந்தையின் பேச்சை பொறுக்க முடியவில்லை. தந்தை தன்னைக் குத்திக்காட்டி பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டு, அவர் கொடுத்த பரிசுப்பொருளை தூர வீசி எறிந்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறினான்.

வருடங்கள் பல உருண்டோடின. ஆனால் தந்தையோடு மட்டும் அவன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன்னுடைய வைராக்கியத்தோடு கூடிய கடின உழைப்பால் அவன் மிகப்பெரிய தொழிலதிபராக மாறி, தன்னுடைய நிறுவனத்தில் பொறுப்புடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒருநாள் அவனுக்கு தந்தை இறந்த செய்தி வந்தது. அவனும் இறுதியாக தன்னுடைய தந்தையைப் பார்க்கச் சென்றான். அங்கே தந்தையின் உடல் இருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பொட்டலம் இருந்தது. அது முன்பொருநாள் அவனுடைய தந்தை அவனுக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தது. அந்தப் பொட்டலத்தை அவன் பிரித்துப் பார்த்தான். அதில் அவன் கேட்ட விலை உயர்ந்த பைக்கின் சாவி இருந்தது. அப்போதுதான் அவன் உணர்ந்தான். தந்தை தன்னை எந்தளவுக்கு அன்பு செய்திருக்கிறார் என்று. காலம் முழுவதும் இப்படித் தந்தையின் உண்மையான அன்பை உணராமல் இருந்துவிட்டோமே என்று மனம் வருந்தி அழுதான்.

தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள் வாசகங்கள் "அளவுகடந்த அன்புகொண்டிருக்கும் கடவுளோடு ஒப்புரவாகுங்கள்" என்ற சிந்தனையை வழங்குகிறது. இரக்கமும், அன்பும் கொண்ட ஆண்டவரோடு ஒப்புரவாகவேண்டும் என்பதுதான் இன்றைய நாள் வாசகங்களின் சாராம்சமாக இருக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் புகழ்பெற்ற உவமைகளில் ஒன்றான ஊதாரி மைந்தன் உவமையை வாசிக்கின்றோம். இவ்வுவமையை 'ஊதாரிமைந்தன் உவமை' என்று சொல்வதைவிடவும், 'ஊதாரித்தந்தை உவமை' என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இவ்வுவமை தந்தையின் தந்தை கடவுளின் அளவு கடந்த இரக்கத்தையும், அன்பையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. இப்போது தந்தை தன் இளைய மகன் மீது அதாவது ஊதாரி மகன்மீது எந்தளவுக்கு இரக்கம் கொண்டிருந்தார் என்பதை சித்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக இளையமகன் தந்தையிடம் வந்து, சொத்தில் தனக்குள்ள பங்கை பிரித்துத்தருமாறு கேட்கும்போது அவர் அவனுக்கு (அவர்களுக்கு) சொத்தை பகிந்தளிக்கிறார் என்று வாசிக்கின்றோம். பொதுவாக ஒரு யூதத் தந்தையானார் சொத்தை அப்படி பகிர்ந்தளிக்க முடியாது. ஏனென்றால் இணைச்சட்ட நூல் 21:17 ல் சொல்லப்படுகிறது 'தலைச்சன் பிள்ளைக்கு சொத்தில் இரண்டு பங்குதரவேண்டும்' என்று. அப்படியானால் உவமையில் வரும் தந்தையானார் சொத்தில் மூத்தவனுக்கு இரண்டு பங்கும், இளையமகனுக்கு ஒருபங்கும் தந்திருக்கவேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் சொத்தை அவர்களுக்குப் சமமாகப் பகிர்ந்தளித்தார் என்றால் இது தன்னைவிட்டுப் பிரிந்துபோகும் இளையமகன் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இப்படிச் செய்கிறார். இது ஒருவிதத்தில் தந்தையின் இரக்கத்தையே காட்டுகிறது.

இரண்டாவதாக ஊதாரித்தனமாக வாழ்ந்த இளையமகன் தன்னுடைய தவறை உணர்ந்து தந்தையிடம் திரும்பிவரும்போது, அவன் தொலையில் வரும்போதே தந்தை பார்த்துவிட்டு ஓடோடிச்சென்று அவனைக் கட்டித்தழுவி முத்தமிடுகிறார். அப்படியானால் தந்தை தன்னுடைய மகன் எப்போது தன்னிடம் திரும்பி வருவான் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்ததைக் காட்டுகிறது.

இந்த இடத்தில் நாம் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஓவியரான ரேம்பரன்ட் (Rembrandt) என்பவர் வரைந்த 'ஊதாரி மைந்தன் ஓவியத்தை' இணைத்துப் பார்த்து சிந்திப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் Oil Painting என்ற வகையில் உருவாகி இருக்கும் அந்த ஓவியத்தில் தவறான வாழ்வு வாழ்ந்து, மனந்திரும்பி வரும் இளைய மகன் தன்னுடைய தந்தையின் பாதத்தில் விழுந்து மன்னிப்புக் கேட்கின்றான். அப்போது தந்தையானார் அவனை இருகரத்தால் மார்ப்போடு அணைத்துகொள்கிறார். அந்த இருகைகளில் வலக்கையானது தாயின் கைபோன்று இருக்கிறது. அதாவது மனம்மாறி வரும் பிள்ளையை கடவுள் ஒருதாயைப் போன்று தேற்றி அரவணைக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.

மூன்றாவதாக உவமையில் இளையமகன் தந்தையிடம் வந்து, தன்னுடைய தவறை அறிக்கையிட்ட உடன், தந்தையானவர் தன்னுடைய பணியாளர்களிடம், "முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனை உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றை அடியுங்கள். நாம் விருந்துண்டு மகிழ்வோம்" என்கிறார். இங்கே கையில் மோதிரம் அணிவது என்பது இளையமகனை தந்தையானவர் தன்னுடைய மகனாக ஏற்றுக்கொள்வதற்குச் சமமாக இருக்கிறது.

ஆக ஊதாரித்தனமாக வாழ்க்கை வாழ்ந்த இளையமகன் தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும்போது, அவனை அவனுடைய தந்தை மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டதுபோல, தந்தைக் கடவுளும் நாம் செய்யும் தவறுகளை மனதார மன்னித்து ஏற்றுக்கொள்வார் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.

விவிலியம் முழுமைக்கும் இந்த உண்மையைத்தான் நாம் தொடர்ந்து வாசிக்கின்றோம், திருப்பாடல் 103: 8 ஆம் வசனம் சொல்கிறது, "ஆண்டவர் இரக்கமும், அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும், பேரன்பும் உள்ளவர்" என்று. எனவே அத்தகைய இரக்கமுள்ள கடவுளிடம் நாம் நமது பாவ வாழ்விலிருந்து மனமாறி, அவரோடு ஒப்புரவாகுவோம்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவார், "கடவுளோடு ஒப்புரவாகுங்கள்" என்று. ஆம், இந்த தவக்காலத்தில் நாம் அனைவருமே கடவுளோடு ஒப்புரவாக வேண்டும் என்றும்தான் இறைவார்த்தையானது நமக்கு அழைப்புத் தருகிறது. ஏனென்றால் இன்றைக்கு மனிதர்கள் உலக செல்வத்திற்குப் பின்னால், உலக காரியத்திற்குப் பின்னால் அலைவதைப் பார்க்கமுடிகிறது. கடவுளை மறந்து, மனம்போன போக்கில் வாழும் மக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் நாம் கடவுளோடு ஒப்புரவாகுவது சாலச்சிறந்த ஒன்றாகும்.

மக்கள்மீது உண்மையான அன்பும், பாசமும், ஈகைக்குணம் கொண்ட அரசன் ஒருவன் இருந்தான். அவன் தன்னுடைய நாட்டில் ஓர் அருங்காட்சியம் வைத்திருந்தான். அதில் ஏராளமான அரியவகைப் பொருட்கள் இருந்தன. அந்த அருங்காட்சியத்திலிருந்து மக்களுக்குத் தேவையான எந்தப் பொருளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வேறு செய்திருந்தான். இதனால் மக்கள்கூட்டம் அங்கே அலைமோதியது. எல்லாரும் அருங்காட்சியத்திலிருந்த அரியவகைப் பொருட்களை எடுப்பதிலே தீவிரம் கட்டினார்கள்.

அந்நேரத்தில் சிறுவன் ஒருவன் அங்கே வந்தான். வந்தவன் அங்கே இருந்த படைவீரர்களிடம் சென்று, "இவ்வளவு பொருட்களையும் மக்களுக்கு தாராளமாகத் தரும் நல்ல உள்ளம் படைத்த அரசரைப் பார்க்கவேண்டும்" என்றான். உடனே அந்த சிறுவன் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அரசர் முன்பாக நிறுத்தப்பட்டான்.

சிறுவனைப் பார்த்த அரசர், "தம்பி உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், "எனக்கு ஒன்றும் வேண்டாம், எல்லாப் பொருட்களையும் மக்களுக்குத் தாராளமாகத் தரும் நல்ல உள்ளம்கொண்ட உங்களைப் பார்த்ததே போதும்" என்றான். இதைக் கேட்ட அரசர் உள்ளம் மகிழ்ந்து அவனிடம், "பொருள் வேண்டும் என்று அலையும் மக்களுக்கு மத்தியில் அரசரைப் பார்த்தாலே போதும் என்று நினைத்த உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்று சொல்லி அவனுக்கு அதிகமாக பொன்னும், பொருளும் கொடுத்து வழியனுப்பினார்.

பணம், பணம் என்று அலையும் மக்கள், அத்தகைய வாழ்க்கையை விடுத்து இறைவன் மட்டும்போதும் என்று அவரோடு நல்லுறவு கொண்டு, ஒப்புரவாக வாழ்ந்தார்கள் என்றால் கடவுள் எல்லா ஆசிரையும், அருளையும் தருவார் என்பதை இந்த கதையானது நமக்கு எடுத்துரைக்கிறது.

ஆகவே தவக்காலத்தில் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அளவுகடந்த அன்பை உணர்ந்து வாழ்வோம். அவர் நம்மீது இரக்கமும், அருளும் கொண்டவர் என்பதை நமது வாழ்வில் அனுபவித்து, அதனை பிற மக்களுக்கும் எடுத்துப்போம். அதோடு மட்டுமல்லாமல் இறைவனோடு நல்லுறவு கொள்வோம். அப்போது இன்றைய முதல் வாசகத்தில் கேட்பதுபோல இறைவன் நம்மீது இருக்கும் பழிச்சொல்லை நீக்கி, நமக்கு அமைதியையும், இறையருளையும் தருவார்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
அவர் இனியவர்


 யோசுவா 5:9,10-12
2 கொரிந்தியர் 5:17-21
 லூக்கா 15:1-3,11-32

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை நாம் 'கௌதேத்தே தொமெனிக்கே' ('மகிழ்ச்சி ஞாயிறு') என்றழைப்பது போல, தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றையும் 'தொமேனிக்கா லெயத்தாரே' ('மகிழ்ச்சி அல்லது அக்களிப்பு ஞாயிறு') என்று அழைக்கின்றோம். இன்றைய நாள் திருப்பலியின் வருகைப் பல்லவி மிக அழகாக இதை முன்வைக்கிறது: 'எருசலேமின்மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள். அவளுக்காக புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள் ... நீங்கள் நிறைவடைவீர்கள் ... நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்' (காண். எசா 66:10-11). எருசலேமை இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்போடு நாம் உருவகப்படுத்தினோம் என்றால், அவரோடு அவருடைய பாடுகளுக்காக அழும் நாம், அவருடைய உயிர்ப்பில் அக்களிப்போம் என்பதே நிதர்சனமான உண்மை. ஆக, தவக்காலத்தின் இலக்கு துன்பம் அல்லது பாவம் அல்ல. மாறாக, மகிழ்ச்சி அல்லது வெற்றியே. ஆக, இந்த ஞாயிறு அந்த மகிழ்ச்சியின், வெற்றியின் முன்சுவையாக நமக்குத் தரப்படுகிறது.

ஆஸ்கர் ஒயில்ட் மிக அழகான ஒரு வரிக்குச் சொந்தக்காரர்: 'இறுதியில் இல்லாமே இனிமையாக இருக்கும். அது இனிமையாக இல்லை என்றால் அது இறுதி அல்ல.' ஆக, இயேசுவின் பாடுகளும், இறப்பும் இறுதி அல்ல. ஏனெனில், அவை இனிமை அல்ல. உயிர்ப்பே இறுதி. ஏனெனில், உயிர்ப்பே இனிமை. இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு, 'அவர் (ஆண்டவர்) இனியவர்' என்பதைச் சுட்டிக்காட்டி, அவரின் இனிமையை நாமும் சுவைக்கவும், அதே இனிமையை நாமும் வாழவும் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் மையம் இன்றைய பதிலுரைப்பாடலில் இருக்கின்றது: 'ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்' (திபா 34:8). தாவீது அபிமெலக்கின்முன் பித்துப்பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத் துரத்திவிட, அவனிடமிருந்து தப்பி வெளியேறுகின்றார். இந்த நேரத்தில், தன் உயிர் காக்கப்பட்ட இந்த நேரத்தில், கடவுளின் கருணையைப் புகழந்து பாடுகின்றார் தாவீது (காண். 1 சாமு 21:13-15). நம் மனங்கள் சோர்வுறும் நேரத்தில் எல்லாம் இப்பாடலைப் படித்தால் மனம் புத்துயிர்பெறும் என்பது என் தனிப்பட்ட அனுபவம்.

'இனிமை' - இது ஒரு வித்தியாசமான சுவை. சுவை என்பது ஒருவகை நேரடி வேதியல் உணர்வு என வரையறுக்கிறது விக்கிபீடியா. மேற்கத்தியர் சுவை நான்கு என்பர்: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு. தமிழர் முறைப்படி சுவை ஆறு: இனிப்பு ('கனி'), கார்ப்பு ('மிளகாய்'), கசப்பு ('பாகற்காய்'), புளிப்பு ('புளியங்காய்'), உவர்ப்பு ('உப்பு'), துவர்ப்பு ('பாக்கு'). இந்த அறுசுவைகளும் மனித உடலுக்குத் தேவை என்கிறது சித்த மருத்துவம். இந்த அறுசுவைகளில் இனிப்புக்கு மட்டும் ஒரு தனித்தன்மை உண்டு. அது என்னவென்றால், 'இனிப்பு' மட்டும்தான் நாம் ஒருமுறை சுவைத்தாலும், மீண்டும் சுவைக்கத் தூண்டும் சுவை. மற்ற ஐந்து சுவைகளும் பொதுவாக ஒருமுறை மட்டுமே சுவைக்கக்கூடியவை. மேலும், 'இனிப்பு' சுவைதான் நம் உள்ளத்திற்கு நேர்முகமான உணர்வுகளையும், நம் உடலின் புன்னகைத் தசைநார்களையும் உயிர்க்கவல்லது. ஆகையால்தான், வெற்றி, மகிழ்ச்சி, உடற்பயிற்சி சோர்வு போன்ற நேரங்களில் இனிப்பு சுவை தரப்படுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் - அதாவது, அடிக்கடி நாம் தேடுவதாலும், அது நமக்குப் புத்துயிர் அளிப்பதாலும் - தாவீது ஆண்டவரை, 'இனியவர்' ('இனிப்பானவர்') என்று அழைக்கின்றார். ஆக, ஆண்டவரின் இனிமையை ஒருமுறை சுவைத்தால் போதும். அவரிடமே நாம் திரும்பத் திரும்பச் செல்வோம். ஆண்டவர் தாவீதை அச்சத்தினின்று விடுவிக்கிறார், அவமானத்திலிருந்து விடுவிக்கிறார், மற்றும் நெருக்கடியினின்று விடுவிக்கிறார்.

ஆண்டவரின் இனிமையை அல்லது ஆண்டவரை இனியவராக இன்றைய மற்ற வாசகங்களும் நமக்கு முன்வைக்கின்றன.

இன்றைய முதல் வாசகம் (காண். யோசு 5:9,10-12) இஸ்ரயேல் மக்கள் யோசுவாவின் தலைமையில் யோர்தான் ஆற்றைக் கடந்து பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழைந்த பின் நடந்த முதல் நிகழ்வுகளைச் சொல்கிறது. இரண்டு நிகழ்வுகள் நடக்கின்றன: முதலில், பாலைநிலத்தில் பிறந்த ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. இவர்கள் இந்தச் சடங்கால் ஆண்டவருக்கு அர்ப்பணமானவர்கள் ஆகின்றார்கள். இவர்களின் பெற்றோர் பாலைநிலத்தில் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராக முணுமுணுத்ததால் கடவுளால் கொல்லப்படுகின்றனர். இந்தச் சடங்கு முடிந்ததுதும், ஆண்டவர் யோசுவாவிடம், 'இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்' என்கிறார். அது என்ன பழிச்சொல்? இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டவுடன் அவர்களைப் பின்தொடர்ந்து வருகின்ற எகிப்தியர், 'இஸ்ரயேல் மக்கள் மூடர்கள். ஏனெனில், தாங்கள் அறியாத ஒரு கடவுளைப் பின்பற்றிச் சென்று பாலைவனத்தில் நாடோடிகளாகத் திரிகிறார்கள். அவர்கள் கடவுளும் பொய். அவர்களுடைய கடவுளின் வாக்குறுதியும் பொய்' என பழித்துரைக்கின்றனர். ஆனால், இன்று, யோர்தானைக் கடந்து கானானில் மக்கள் குடியேறியவுடன் அவர்களின் பழிச்சொல் பொய்யாகிறது. கடவுள் தன் வாக்குறுதியை நிறைவேற்றி தன்னை உண்மையான கடவுள் என்று இஸ்ரயேல் மக்களுக்கும் எகிப்தியருக்கும் உணர்த்துகின்றார். இரண்டாவதாக, கில்காலில் இஸ்ரயேல் மக்கள் தங்கள் முதல் பாஸ்காவைக் கொண்டாடுகின்றனர். வாக்களிக்கப்பட்ட நாட்டில் கொண்டாடப்படும் முதல் பாஸ்காவும் இதுவே. இங்கே இவர்கள் நிலத்தின் விளைச்சலை உண்ண ஆரம்பிக்கின்றனர். உண்ட மறுநாளிலிருந்து மன்னா பொழிவது நின்றுவிடுகிறது. இது அவர்களுடைய வாழ்வில் ஒரு புதிய தொடக்கம். இதுவரை யாவே இறைவனோடு இருந்த தொப்புள் கொடி அறுந்து, இன்று இவர்கள் தாங்களாகவே தங்களின் சொந்தக் கால்களில் நிற்கத் தொடங்குகின்றனர். இவ்வாறாக, இறைவன் இவர்களைக் 'குழந்தைகள்' நிலையிலிருந்து 'பெரியவர்கள்' என்ற நிலைக்கு உயர்த்துகின்றார்.

ஆக, இறைவனின் இனிமை இங்கே இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, அவர் பழிச்சொல் நீக்குகின்றார். இரண்டு, அவர்களுக்கு புதிய தொடக்கத்தைத் தருகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 கொரி 5:17-21) பவுலடியார் தான் பெற்றிருக்கின்ற ஒப்புரவுத் திருப்பணி பற்றி கொரிந்து நகர மக்களுக்கு எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. இவ்வாறாக, தன் திருத்தூதுப்பணியின் ஒரு முக்கிய அங்கமாக ஒப்புரவுப் பணியை முன்வைக்கின்றார். பாவம் இயல்பாகவே என்னைக் கடவுளிடமிருந்தும் ஒருவர் மற்றவரிடமிருந்தும் பிரித்துவிடுகிறது. கடவுளுக்கும் நமக்கும் பாவத்தால் எழுப்பப்பட்ட சுவரை உடைத்து, இருவரையும் இணைக்கும் பாலமாக கிறிஸ்து விளங்குகின்றார். ஆக, 'கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தது அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே' என்று சொல்லும் பவுலடியார், இந்த ஒப்புரவு முழுக்க முழுக்க கடவுளின் முன்னெடுப்பாக இருக்கிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். ஏனெனில், 'நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்கிறார்.' அதாவது, கிறிஸ்து பாவநிலையை ஏற்றாரெனில், பாவத்தின் விளைவான இறப்பை ஏற்றார். ஆனால், அந்த இறப்பிலிருந்து அவர் உயிர்த்ததால் நம்மையும் அவரோடு இணைந்து புதுப்படைப்பாக்குகிறார்.

ஆக, இறைவனின் இனிமை இங்கேயும் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, கிறிஸ்து வழியாக இவ்வுலகைத் தம்மோடு ஒப்புரவாக்கி அதற்கு புத்துயிர் தருகின்றார். இரண்டு, இந்தப் பணி மற்றவர்களுக்கு அறிவிக்கப்படுமாறு திருத்தூதர்களிடம் இந்த ஒப்புரவுச் செய்தியை ஒப்படைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 15:1-3,11-32) நமக்கு மிகவும் அறிமுகமான ஓர் உவமை. 'ஒரு தந்தையும் இரண்டு மகன்களும்' எனப்படும் இந்த எடுத்துக்காட்டை இயேசு, பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞரின் முணுமுணுப்பிற்கு எதிர்சான்றாக வைக்கின்றார். ஆனால், பல நேரங்களில் இந்த எடுத்துக்காட்டை நாம் ஒப்புரவு வழிபாட்டிற்கு எடுத்து, இளைய மகனைப் போல மனம் திரும்ப வேண்டும் என்று சொல்லி இதன் பொருளை நீர்த்துப்போகச் செய்துவிடுகிறோம். இங்கே, கவனமையம் அல்லது கவனக்குவிப்பு இளைய மகனோ அல்லது மூத்த மகனோ அல்ல. மாறாக, தந்தையே. இக்கதையில் வரும் தந்தை தொடக்கமுதல் இறுதிவரை இனியவராக, கனிவுடையவராக, இரக்கம் உடையவராக இருக்கிறார். இயேசு தன் சமகாலத்தில் இரண்டு வகை மக்களோடு உறவாடுகிறார்: ஒன்று, வரிதண்டுபவர்கள், பாவிகள். இவர்கள் யூத சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். இரண்டு, யூதச் சட்டம் மற்றும் முறைமைகளுக்கு பிரமாணிக்கமாய் நடந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும். இந்த இரண்டாம் குழுவினர், இயேசு முதல் குழுவினரோடு உறவாடுவதைக் கண்டு இடறல்பட்டனர். இந்த இரண்டு குழுக்களும் இரண்டு மகன்களையும் குறிக்க, உவமையில் வரும் தந்தை இயேசுவின் அல்லது கடவுளின் உருவகமாகிறார்.

இக்கதை நமக்குத் தெரியும். சுருக்கமாகச் சொன்னால், தூரத்திற்குச் செல்கின்ற இளைய மகன் இல்லம் திரும்புகிறான். வீட்டிற்குள்ளேயே இருக்கின்ற மூத்த மகன் இல்லம் திரும்ப மறுக்கிறான். இவ்விரண்டு கதைமாந்தர்களுக்காகவும் வீதிக்கு வருகின்றார் தந்தை: முதல் மகனை அரவணைத்துக் கொள்ளவும், இரண்டாம் மகனை அழைத்துச் செல்லவும். இக்கதையில் அப்பாதான் கதாநாயகன். ஏனெனில், இரண்டு மகன்கள் வீட்டிற்கு வரும் நேரத்தில் தந்தை அங்கு இருந்தார். இளையமகன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட நாளிலிருந்து தந்தை இவனுக்காக ஊருக்கு வெளியில் நிற்கின்றார். எல்லாவற்றையும் இழந்து அவன் வரும்போது ஊரார் கேலிபேசிவிடக்கூடாது என்ற அக்கறையில் அங்கேயே நிற்கிறார் தந்தை. இளையமகனைத் தந்தை எதிர்கொண்டது ஏதோ ஒரு விபத்தால் - சான்ஸ் - அல்ல. மாறாக, விருப்பத்தால் - சாய்ஸ். தானே, தெரிந்து, நின்று, தழுவி, அரவணைத்து, அள்ளிக்கொள்கின்றார் தந்தை. இதுதான் இந்தப் பெயரில்லாத் தந்தையின் இனிமை. இந்த இனிமை இரக்கத்தோடு காத்திருக்கிறது. தன் மகன் ஏற்படுத்தி பொருள்செலவைப் பெரிதாகப் பார்க்கவில்லை. தன் மகனைத் தீர்ப்பிடவில்லை. தன் பெயரைக் கெடுத்தாலும் அதை பொருட்படுத்தவில்லை. சேறு, சகதி, அழுக்கு என வந்த மகனிடம், 'நீ போய் முதலில் குளித்து வா!' என்று சொல்லவில்லை. அவன் தனக்குரியது என எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனாலும், அவனுக்குரிய முதல்தர ஆடை, கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடியைத் தயாராக வைத்திருக்கிறது இந்த இனிமை. தன் மூத்த மகன் இல்லம் நுழைய மறுத்தாலும் அவனைக் கடிந்துகொள்ளாமல் அவனுக்கு விளக்கம் தருகிறது அவனுடைய பார்வையை அகலப்படுத்துகிறது இந்த இனிமை.

ஆக, இறைவனின் இனிமை இங்கேயும் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: இளைய மகனுக்கு இரக்கமாக, கனிவாக, தழுவலாக, கரிசனையாக வெளிப்படுகிறது. மூத்த மகனுக்கு, விளக்கம் சொல்லிப் புரிய வைத்து, அவனுடைய கண்ணோட்டத்தை மாற்றுகிறது.

இவ்வாறாக, இன்றைய முதல், இரண்டு, மற்றும் மூன்றாம் வாசகங்கள், திருப்பாடலோடு இணைந்து 'இறைவனின் இனிமையை' அல்லது 'அவர் இனியவர்' என்பதை நமக்குக் காட்டுகின்றன. 'அவர் இனியவர்' என்றால் 'அந்த இனிமையை' நாம் அனுபவிக்கிறோம் என்றால், அவரைப் போல, 'நாம் இனியவர்' ஆவது எப்படி?

1. பழிச்சொல் நீக்கும் இனிமை :
இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையும்போது அவர்கள் வெளிப்புறத்தில் அவர்களுக்கு உணவு, பாதுகாப்பு, உடைகள், வீடு என எல்லாம் இருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் ஒரு நெருடல் இருக்கிறது. அதுதான் எகிப்தியரின் பழிச்சொல். அந்தப் பழிச்சொல் அவர்கள் எந்த நன்மையையும் சுவைத்து அனுபவிக்க, அவர்களின் மகிழ்ச்சியை எதிர்கொள்ள அவர்களுக்குத் தடையாக இருக்கின்றது. இறைவன் இந்தப் பழிச்சொல்லைத் துடைக்கின்றார். 'நீங்கள் முட்டாள்கள், ஏமாளிகள், உங்கள் கடவுள் பொய்யர், நீங்கள் அழிந்துபோவீர்கள்!' என்ற பழிச்சொல்லைத் துடைக்கின்றார். இன்று நாம் அறிந்துகொள்ள வேண்டியதும் இதுதான். இறைவன் நம்மேல் உள்ள பழிச்சொல் அனைத்தையம் துடைக்க வல்லவர். 'இதோ என் அன்பார்ந்த மகன்-மகள்' என்று அவர் உங்களையும் என்னையும் அழைக்கும் அந்த நொடியே அனைத்துப் பழிச்சொல்லையும் துடைத்துவிடுகிறார். ஊரார் நம்மை 'விலைமாதுகளுடன் உறவு கொண்டவன்,' 'பன்றி மேய்த்தவன்,' 'பன்றியின் உணவை உண்டவன்,' 'தந்தை சொல் கேளாதவன்' என்று சொன்னாலும், சொந்த அண்ணனே, 'உம் மகன்' என்று மூன்றாம் நபராகப் பார்த்தாலும் இறைவன் பழிச்சொல்லை நீக்குகிறார். 'நான் உன் வீட்டு வேலைக்காரன்' என்று சொன்ன வாயெடுத்தவனை அதற்கு மேல் பேசவிடாமல் மகனுக்குரிய நிலையில் வைத்துக்கொள்கிறார். ஆக, இறைவன் என் பழிச்சொல்லை நீக்குகிறார் என்றால், நான் அவருடைய இனிமையை உணர்கிறேன் என்றால் என் நாவில் இத்தகைய சொற்கள் ஒருபோதும் வரக்கூடாது. இன்னா சொற்கள் விடுத்து இனிய சொற்கள் பேசும்போது நாமும் இனியவரே.

2. பழையன கழிக்கும் இனிமை :
கிறிஸ்துவோடு உலகை ஒப்புரவாக்கும் இறைவன் பழையன அழித்தையும் அழிக்கின்றார். முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களின் மன்னாவை நிறுத்துவதன் வழியாக மக்களின் பழைய சார்புநிலையை அழிக்கின்றார். நற்செய்தி வாசகத்தில், தந்தை இரண்டு மகன்களின் பழைய இயல்பையும் அழிக்கின்றார். இளைய மகன் கடந்த நாள்களில் என்ன செய்தான் என்றோ, எவ்வளவு கையிருப்பு கொண்டுவந்துள்ளான் என்றோ, அடுத்த என்ன ப்ளான் என்றோ கேட்கவில்லை. மூத்த மகன் வைத்திருந்த முற்சார்பு எண்ணத்தையும் அழிக்கிறார். ஆக, பழையது நமக்கு உற்சாகம் தந்தால் நலம். ஆனால், நம்மைக் கட்டிவைத்து நகர முடியாமல் செய்தால் அது கழிக்கப்பட வேண்டும். பழையதை மறந்து இன்றில் இப்பொழுதில் வாழும்போது இறைவனின் இனிமையை அனுபவிக்கவும் அதை மற்றவருக்கு வழங்கவும் முடியும். ஏனெனில், இறைவனுக்கு இன்று மட்டுமே உண்மை.

3. தழுவிக்கொள்ளும் இனிமை :
இன்றைய நற்செய்தியில் வரும் தந்தையின் கணிதமும் லாஜிக்கும் வித்தியாசமாக இருக்கிறது. அவர் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் பார்த்து வருத்தப்படாமல், நிகழ்வின் மொத்தத்தைப் பார்க்கிறார். 'நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும்' - இதுதான் இவருடைய மிஷன் ஸ்டேட்மண்டாக இருக்கிறது. அவன் போனான், அழித்தான், திரும்பினான். அதனால் என்ன? நடந்ததைப் பற்றி என்ன செய்ய முடியும்? அடுத்து என்ன செய்வது? 'மகிழ்நது கொண்டாடு' என்று இளைய மற்றும் மூத்த மகனை ஒருசேரத் தழுவிக்கொள்கிறார். இது யாரால் முடியும் என்றால், இறுதியை மனத்தில் வைத்துச் சிந்திப்பவரால் மட்டும்தான். 'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர். இறுதியில் எல்லாம் இனிமையாகும். ஆக, நிகழ்வுகளை இந்த இறுதியோடு இணைத்துப் பார்த்தால் இறைவனின் இனிமை நமக்குச் சொந்தமாகும்.

இறுதியாக, மகிழ்ச்சியின் ஞாயிற்றைக் கொண்டாடும் நாம், இறைவனின் இனிமையை அனுபவித்து மகிழ்வுறும் நாம், அதே இனிமையை மற்றவருக்கும் வழங்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். காலையில் கூட்டைவிட்டுப் புறப்படும் பறவை மாலை கூட்டிற்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையால்தான் சுற்றித் திரிகிறது. சுற்றித் திரிதல் தவறல்ல. கூடு திரும்பாமல் இருப்பதுதான் தவறு. இஸ்ரயேல் மக்கள் கானான் நாடு என்னும் கூடு திரும்பினர். கொரிந்து நகர மக்கள் ஒப்புரவு என்னும் கூடு திரும்பினர். இரு மகன்களும் தந்தையின் இல்லம் என்னும் கூடு திரும்பினர். இவர்கள் கூடு திரும்பக் காரணம் இவர்கள் அங்கே இனிமையைக் கண்டவர். இனிமையைக் காணும் இடம் நோக்கி நம் இதயம் சாயும் என்பது நம் மரபியல் ஊட்டம். அந்த இனிமை இறைவனிடம் என்றால் பயணம் இனிதாகும். ஏனெனில், அவர் இனியவர் - உங்களையும் என்னையும் போல!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
திருப்பலி முன்னுரை



கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இன்றைய தவக்காலம் நான்காம் ஞாயிறு வழிபாடு இறைவனின் வழிநடத்துதலின்படி வீட்டுக்குள் நுழையுமாறு அழைப்பு விடுக்கின்றது. பாவம் செய்தோம் என்பதை உணர்ந்து, வருந்தி, அவற்றை அறிக்கையிட்டு மனமாற்றம் அடையும் போது இறைவன் அனைத்து நலன்களால் முடிசூட்டுவார் என்பதை உணர்ந்து கொள்ள இவ்வழிபாடு நம்மை அழைக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில், அடிமைகளாய் எகிப்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களை பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்து வந்து, இதுவரை நாடோடிகளாய் வாழ்ந்து, வானிலிருந்து வந்த மன்னாவை உண்டு வந்த மக்களுக்கு நிலத்தைத் தந்து, அதில் விவசாயம் என்னும் தொழிலை தந்து ஆசீர்வதிக்கின்றார் இறைவன். தங்களின் கைகளால் விளைவித்த தானியத்தை உண்ண ஆரம்பித்ததும் இறைவன் மன்னாவை நிறுத்தினார் எனப் பார்க்கின்றோம்.

இரந்து கேட்பவனுக்கு சோறு போட்டு

சோம்பேறி ஆக்குவதை விட

நெல்மணியைக் கொடுத்து உழைப்பைக்

கற்றுத் தருவதே சிறந்தது.

கடும் உழைப்பையும் உழவுத் தொழிலையும் வெறுக்காதே என்கின்றது விவிலியம். இறைவன் கற்றுத் தந்த வேளாண்மை இன்று நாகரிகம் என்னும் பெயரால் நசுக்கப்படுகிறது. விவசாயி கழுத்து நெரிக்கப்படுகின்றதே! சிந்திப்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், "அப்பா கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்" என்று மனம் திரும்பும் இளைய மகனை ஆடை அணிகலன்களால் அலங்கரிப்பதைப் பார்க்கின்றோம். இறைவன் தண்டிப்பவர் அல்ல; மன்னிப்பவர். பாவமே எனினும் அதிலிருந்து மனம் திரும்பும் போது மன்னிப்பும் அதைத் தொடர்ந்து மகத்துவமான வாழ்வும் வந்தடையும். எனவே உலக காரியங்கள் நம்மை இறைவனிடம் இருந்து தொலைதூரம் ஆக்கியிருந்தால், நவநாகரிக வாழ்வில் நாம் காணாமல் போயிருந்தால் இன்றே வீடு திரும்புவோம். இத்தவக்காலத்தில் உழைப்பின் மேன்மையும், உலக காரியங்களில் காட்டவேண்டிய முனைப்பைவிட கடவுளிடம் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டிய அவசியத்தினையும் உணர்ந்து கொள்ள இத்திருப்பலியில் வரம் வேண்டி ஜெபிப்போம்.



மன்றாட்டுகள்


ஒப்புரவால் எம்மை உம்மோடு இணைப்பவரே!


ஒப்புரவை அருளும் எம் திரு அவை உம்மோடு நிலைத்திருந்து, தங்களின் இயல்பை புதுப்பித்து, மக்கள் மனங்களில் நல்வித்து விதைக்கும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


நிலத்தின் விளைச்சலை இஸ்ரயேல் மக்கள் உண்ண அருள்புரிந்தவரே!


நாங்கள் உழைப்பிற்கேற்ற விளைச்சலைப் பெறவும், வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நாட்டை ஆள்வோர் திட்டங்களை செயல்படுத்தவும், இயற்கையின் மேன்மையை உணர்ந்து, இயற்கையை வளப்படுத்த தேவையான ஞானம் அருள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


தந்தையே கடவுளுக்கும் உமக்கும் எதிராகப் பாவம் செய்தேன் என வருந்திய இளைய மகனைப் போல இவ்வுலக மாய கவர்ச்சிக்குள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் இளைய சமுதாயம், தங்கள் வழிகளை சரிப்படுத்தி படைப்பின் மேன்மையை உணர்ந்து இறைவனுக்குரிய பாதையில் நடக்கும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.


பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


நற்செய்தியில் கண்ட மூத்த மகன் போல் சட்டம், ஒழுங்கு, மரபு என்பவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மட்டும் கண்ணோக்காமல் அன்பு, இரக்கம், மன்னிப்பு ஆகியவற்றை நினைவில் கொண்டு உம் இல்லம் திரும்ப மனமாற்றம் தர வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.


பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


கருணையின் மழையே எம் இறைவா!


கோடை கொந்தளிக்கும் இவ்வேளையில் எங்களுக்கு போதிய மழையை நீ தரவும், குடும்ப அமைதி, சந்தோஷம் நிறைந்திருக்கவும், மக்களின் உள்ளத்தின் வேண்டுதல்கள் இறைவனால் நிறைவேற்றப்படவும் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.



நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தவக்காலம் நான்காம் ஞாயிறு - திருப்பலி முன்னுரை



மூன்றாம் ஆண்டு



தவக்காலம் நான்காம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.



இறைவனிடம், "வாழ்க்கை என்றால் என்னவென்று வாழ்ந்துபார் என- பணித்தான்: பிறப்பென்றால் என்னவென்று கேட்டேன், பிறந்துபார் என பணித்தான்: மனையாள் சுகம் என்னவென்று கேட்டேன், மணந்துபார் என பணித்தான், இறப்பென்றால் என்னவென்று கேட்டேன், இறந்துபார் என பணித்தான், எதையும் அனுபவித்தே தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இறைவா நீ இருப்பது எதற்காக? என கேட்டேன், " அந்த அனுபவமே நான்தானடா" என்றான் இறைவன், எனக் கவிஞர்; ஒருவர் மிக அழகாக கூறியுள்ளார்.ஆம், இன்றைய நற்செய்தியில் இளைய மகன் தன் சொத்துக்களைக் கேட்டதுமே தந்தை எந்த மறுப்புமின்றி, அறிவுரையுமின்றி அவனுக்குக் கொடுக்கின்றார் என்றால், அவன் எல்லாம் அனுபவித்த பின்பே வாழ்க்கையை உணர்ந்து கொள்வான் என்ற ஆழமான நம்பிக்கையாக இருக்கலாம். அவனும், அனுபவத்தின வாயிலாக வாழ்வின் எதார்த்தங்களை, உறவுகளை, பெற்றோரின் மனநிலையை, உணரந்து கொண்டான். ஒரு சொல்லால் உலகை உருவாக்கிய இறைவனுக்கு தன் மக்களையும் தன் மகனின்றி மீட்க முடியும், இருந்தபோதும் தன் மகனை இவ்வுலகில் மனிதனாக பிறக்கச் செய்து, மனித வாழ்வை வாழ வைத்து, அவரின் வாழ்க்கையை நமக்கு அனுபவ பாடமாகக் கற்றுத் தந்திருக்கின்றார்.



இளையமகன் வாழ்வில் பல அனுபவங்களைப் பெறுகின்றான். அதன் வழியாக, இறுதியில் தன் தவறுகளை உணர்கின்றான். தவறுவது மனித இயல்பு. ஆனால், செய்த தவறுகளை ஏற்றுக் கொள்ளத் துணிவு வேண்டும். அத்தகைய துணிவுடன் இளைய மகன் தந்தையிடம் செல்கின்றான். தந்தை மன்னித்து ஏற்பாரா அல்லது தன்னை மன்னியாது விட்டுவிடுவாரா என்றெல்லாம் அவன் மனம் எண்ணவில்லை. தவறுகளை ஏற்றுக் கொண்டு, அதை அறிக்கையிட தயாராக இருக்கின்றான். தந்தையும் அவனை மன்னித்து ஏற்கின்றார். தாவீதும் தன் பாவத்தை உணர்ந்தவராக, இறைவனிடம் அறிக்கையிட்டு, இறை மன்னிப்பைப் பெறுகின்றார். நாமும் நம் பாவங்களை உணர்ந்தவர்களாக, அதை ஏற்றுக் கொண்டு, ஒப்புரவு அருட்சாதனத்தில் அறிக்கையிட்டு, இறை மன்னிப்பைப் பெற்று, மீண்டும் அந்தப் பாவத்தில் வீழ்ந்திடாது, இறைவன் காட்டிய வழியில், நம் வாழ்வின் பயணத்தைத் தொடர்ந்திட, இறையன்பில் ஒன்றித்திட அருள் வேண்டி, இத்தெய்வீகத் திருப்பலியில் இணைவோம்.



முதல் வாசக முன்னுரை: (யோசுவா 5: 9, 10-12)



அழைக்கப்பட்டவர்களே, இன்றைய முதல் வாசகம், கானான் நாட்டில் இஸ்ரயேலர் கொண்டாடிய முதல் பாஸ்கா விழாவைப் பற்றி எடுத்துரைக்கிறது. எகிப்தியருக்கு எதிராக இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஆண்டவரின் மீட்புச் செயல் நிறைவு பெறுவதை இங்கு காண்கிறோம். ஆண்டவரின் பராமரிப்பில் நாற்பது ஆண்டுகளாக மன்னாவை உண்டு வாழ்ந்தவர்கள், தங்கள் சொந்த உழைப்பின் பலனை மீண்டும் ருசி பார்க்கிறார்கள். நாமும் கடவுளின் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்டு, மகிழ்ச்சி நிறைந்த புது வாழ்வை பெற்றுக் கொள்ளும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிசாய்ப்போம்.



இரண்டாம் வாசக முன்னுரை: (2 கொரிந்தியர் 5: 7-21)



அழைக்கப்பட்டவர்களே, இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழியாக நாம் புதிய படைப்பாக மாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை எடுத்துரைக்கிறார். தந்தையாம் கடவுள் நமது குற்றங்களைப் பொருட்படுத்தாமல், ஆண்டவரான இயேசுவின் வழியாக நம்மை அவரோடு ஒப்புரவாக்கினார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். நம்மை புனிதர்களாக மாற்றவே, இறைமகன் இயேசு பாவநிலை ஏற்றார் என்பதை உணர்ந்து வாழ நாம் அழைக்கப்படுகிறோம். நமது மனமாற்றத்தின் வழியாக நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிசாய்ப்போம்.



மன்றாட்டுக்கள்:



" இடைவிடாது செபியுங்கள்" என்ற ஆண்டவரே,

" செபமே ஜெயம் தரும்" என்பதை உம் வாழ்வின் வழியாக உணர்ந்திருந்த போதும், இவ்வுலகக் காரியங்களில் எங்கள் நேரத்தைத் தொலைத்துவிட்டு, உம்மோடு உறவாட, உரையாட, உடனிருக்க இயலாத மாந்தர்களாக வாழ்வதற்காக எங்களை மன்னியும். இனியும் இத்தவற்றினைச் செய்யாது, உமக்கே முதலிடம் கொடுத்து, உம்மை மகிமைப்படுத்திட, உம் அன்பை சுவைத்திட, செபிக்கின்ற மாந்தர்களாக வாழ்ந்திட, வரமருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.



" என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்" என்ற ஆண்டவரே,

" நன்றி " என்ற உன்னதமான வார்த்தையை, உம்மிடமிருந்து நாங்கள் நலன்களைப் பெறும்போதும், எங்கள் வேண்டுதல்கள் உம்மால் கிடைக்கப்;; பெறும்போதும் மட்டுமே பயன்படுத்தக் கூடிய சுயநல வார்த்தையாக உச்சரிக்க மட்டுமே பயன்படுத்துகின்றோம். துன்பங்கள், பிரச்சனைகள், நெருக்கடி நேரங்களில் அதை மறந்தவர்களாக, உம்மை விட்டு விலகிவிடுகின்றோம். இத்தகைய மனநிலையகற்றி, நாங்களும் யோபுவைப் போல, என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுகின்ற நல்மாந்தர்களாக வாழ்ந்திட ஆற்றல் தந்தருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.



" பெருமை பாராட்டுவோர் ஆண்டவரிலே பெருமை பாராட்டட்டும்" என்ற ஆண்டவரே,

மனிதர் தரும் பெருமையை, புகழை, மதிப்பை எதிர்பார்த்து, ஊதியத்தை மட்டுமே கண்முன் வைத்து, பொறுப்பை தட்டிக் கழிக்கின்றவர்களாக எங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பணிகளை செய்கின்றோம். அத்தகைய தவறான மனநிலையை அகற்றி, பொறுப்பை உளமார உணர்ந்தவர்களாக, கொடுக்கப்பட்ட பணிகளை உண்மையுடனும், நேர்மையுடனும் செய்கின்றவர்களாக, உழைத்து உமக்கு உகந்தவர்களாக வாழ்ந்திடும் நன்மனதைப் பெற்றுக் கொள்ள வரம் வேண்டி, எங்கள் ஆண்வராகிய கிறிஸ்து வழியாக, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.



" உங்களால் முடிந்தவரை எல்லோராடும் அமைதியுடன் வாழுங்கள்"

எங்கள் உறவுகள் ஒவ்வொருவரோடும், அருகில் வாழும் மாந்தரோடும் பிரச்சனைகளோடும், சண்டை சச்சரவுகளோடும், ஒருவரை ஒருவர் மன்னிக்கின்ற மனமின்றி, பகைமை பாராட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அத்தகைய தவறான மனநிலையை மாற்றி, உம் அன்பின் கட்டளையை உணர்ந்தவர்களாக, அதை எங்கள் வாழ்வில் செயல்படுத்தி, அனைவருடனும் நல்லுறவுடன் வாழும் மனதினைத் தந்தருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.



" உங்கள் பேச்சு எப்பொழுதும் சுவையுடைதாயும், இனியதாயும் இருப்பதாக" என்ற ஆண்டவரே,

எங்கள வாயினின்று வரக்கூடிய வார்;த்;தைகள் பிறர் மனதைக் காயப்படுத்தக் கூடியதாக. அவர்கள் வாழ்வையே அழிக்கின்ற ஆயதமாக மாறி விடுகின்றது. அத்தகைய மனநிலையை மாற்றும் தெய்வமே. எங்கள் பேச்சு பிறருக்கு ஊக்கமூட்டுவதாக, ஆறதலாக, மகிழ்வைத் தரக்கூடியதாக, ஏற்றம் தரக்கூடியதாக அமைந்திட வரமருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!