|
|
29 ஜூலை 2019 |
|
|
பொதுக்காலம்
17ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம் புனித
மார்த்தா நினைவு
=================================================================================
இன்றைய நற்செய்தி வாசகம் இந்த நினைவுக்கு உரியது. புனிதையர் -
பொது (பக்கம் 642).
நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு
இணைந்திருப்பார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்
4: 7-16
அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில்
அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும்
கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள்.
அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய்
இருக்கிறார்.
நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு
அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.
நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர்
நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார்
என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.
அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால்,
நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு
கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது
அன்பு நம்மிடம் நிறைவு பெறும்.
அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம்
எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்து
கொள்கிறோம்.
தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே
கண்டறிந்தோம்; சான்றும் பகர்கின்றோம்.
இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்;
அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார்.
கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம்.
கடவுள் அன்பாய் இருக்கிறார்.
அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும்
அவரோடு இணைந்திருக்கிறார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
34: 1-2. 3-4. 5-6. 7-8. 9-10 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும்
என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப்
பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி
3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க
மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார். பல்லவி
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள்
முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்;
ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும்
அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி
7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று
காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப்
பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி
9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு
எக்குறையும் இராது. 10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி
இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும்
குறையாது. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 8: 12b காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர்
வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு
வரவிருந்தவர் என நம்புகிறேன்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
11: 19-27
அக்காலத்தில் சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு
ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார்
என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்;
மரியா வீட்டில் இருந்துவிட்டார்.
மார்த்தா இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால்
என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம்
கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத்
தெரியும்" என்றார்.
இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார்.
மார்த்தா அவரிடம், "இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும்
உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்" என்றார்.
இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை
கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம்
நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாக மாட்டார். இதை நீ நம்புகிறாயா?"
என்று கேட்டார்.
மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்!
நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
அல்லது
மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக்
கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42
அக்காலத்தில் இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர்
அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.
அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார்.
மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக்
கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம்
வந்து, "ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத்
தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி
புரியும்படி அவளிடம் சொல்லும்" என்றார்.
ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப்
பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே.
மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது
அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
தூய
மார்த்தா விழா
இன்று திருச்சபையானது தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடுகின்றது.
இந்த நல்ல நாளில் இவரது வாழ்வும், பணியும் நமக்கு என்ன
செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
மார்த்தா பெத்தானியாவை சேர்ந்தவர். மரியா, மற்றும் லாசர் இவருடைய
சகோதர, சகோதரி ஆவர். இவர்கள் மூவரும் ஆண்டவர் இயேசுவால் அதிகமாக
அன்பு செய்யப்பட்டவர்கள் (யோவான் 11:5). மேலும் மார்த்தா எப்போதுமே
விருந்தோம்பலுக்கும், உபசரிப்புக்கும் பெயர் போனவராக இருக்கின்றார்.
ஆண்டவர் இயேசு மார்த்தா, மரியாவின் வீட்டிற்கு சென்றபோதெல்லாம்
மார்த்தாதான் இயேசுவை உபசரிக்கிறார் (லூக் 10:40, யோவான்
12:2).
தொடக்க நூல் 18 ஆம் அதிகாரத்தில் வரும் ஒரு நிகழ்ச்சி. விசுவாசத்தின்
தந்தை என அழைக்கப்படும் ஆபிரகாம் மம்ரே என்ற இடத்தில்
நின்றுகொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர்கள் மூவர் அங்கே நிற்பதைக்
காண்கிறார். உடனே ஆபிரகாம் அவர்கள் மூவரையும் தன்னுடைய கூடாரத்திற்குள்
அழைத்து, அவர்களுக்கு விருந்து படைக்கிறார். ஆபிரகாம் அளித்த
விருந்தினை உண்டு, மகிழ்ச்சி அடைந்த அம்மூவரும் ஆபிரகாம், சாரா
தம்பதியினருக்கு குழந்தை வரம் தருகிறார்கள் (தொநூ 18:14).
இங்கே ஆபிரகாம் கடவுளின் வரத்தைப் பெற அவர் அளித்த
விருந்துதான் காரணமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகது.
மார்த்தாவும் தன்னுடைய இல்லத்தைத் தேடிவந்த ஆண்டவர் இயேசுவுக்கு
சிறப்பான விதத்தில் விருந்தளித்து, விருந்தோம்பலுக்கு மிகச் சிறந்த
எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
ஒருகாலத்தில் விருந்தினர்களை கடவுளாகப் பார்க்கும் வழக்கம்
போய் இன்றைக்கு விருந்தினர்களைக் கண்டால் தெறித்து ஓடும்
நிலையே இருக்கிறது. விருந்தோம்பல் பண்பு நம்மிடமிருந்து அடியோடு
மறைந்து போய்விட்டது. இந்த வேளையில் மார்த்தா நமக்கு
விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
கலைவாணர் என்.எஸ்.கே விருந்தோம்பலுக்கு சிறந்த முன்மாதிரியாய்
இருப்பார் என்று சொல்வார்கள். அவர் தன்னுடைய வீட்டிற்கு யார்
பசியோடு வந்தாலும், அவர்களை உள்வீட்டிற்குள் அழைத்து, அவர்களுக்கு
விருந்துகொடுப்பார். அத்தகைய தயாள குணம் நிறைந்தவராக இருப்பார்.
ஒருநாள் இரவு அவர் ஒரு நிகழ்ச்சியை முடிந்துவிட்டு தன்னுடைய
வீட்டிற்கு காரிலே பயணம் செய்துகொண்டிருந்தபோது முப்பதுக்கும்
மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய தோள்மீது மண்வெட்டியைப்
போட்டுக்கொண்டு, சாலையோரமாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள். இதைப்
பார்த்த உடனே தன்னுடைய காரை நிறுத்திய அவர் அவர்களிடம்,
"எதற்காக இந்த இரவில் இப்படி நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள்?"
என்று காரணத்தைக் கேட்டார். அதற்கு அவர்களோ "எங்களை வேலைக்கு
அழைத்த முதலாளி வேலை இல்லையென்று திருப்பி அனுப்பிவிட்டார்.
அதனால்தான் கையில் பணமில்லாமல், உணவுல்லாமல் இப்படி நீண்டதூரம்
நடந்து வருகிறோம்" என்றார்கள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கலைவாணர் தன்னுடைய வாகன ஒட்டியையும்,
உடன்வந்த இன்னொரு நபரையும் அழைத்து, பக்கத்தில் ஏதாவது கடைகள்
இருந்தால், உணவு வாங்கிக்கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார். அவர்களும்
சிறுது நேரத்தில் உணவு வாங்கிக்கொண்டு வந்தார்கள். கலைவாணர் அந்த
உணவுப் பொட்டலங்களை விவசாயிகளிடம் கொடுத்து, உண்ணக்
கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல், தன்னிடம் இருந்த பணத்தையும்
அவர்களுக்கு சரியாகப் பகிர்ந்து கொடுத்து, அவர்களைப் பத்திரமாக
வீட்டிற்குப் போகுமாறு கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு பசியாய் இருந்த விவசாயிகளுக்கு உணவளித்து, கலைவாணர்
விருந்தோம்பலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.
தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும் நாமும் விருந்தோம்பலுக்கு
எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும்.
அடுத்ததாக மார்த்தாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
அவளிடம் விளங்கிய நம்பிக்கைதான். இறந்த இலாசரைப் பார்க்க வந்த
இயேசுவிடம் மார்த்தா, "ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தால் என்னுடைய
சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம்
கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்று எனக்குத்
தெரியும்" என்று சொல்கிறார். அதற்கு இயேசு, "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்"
என்கிறார்... உடனே மார்த்தா, "நீரே மெசியா!, நீரே இறைமகன்!
நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்று சொல்லி தன்னுடைய
நம்பிக்கை அறிக்கையை வெளியிடுகிறார்.
இவ்வார்த்தைகளை நாம் கூர்ந்து நோக்கும்போது அவர் எந்தளவுக்கு
கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்று நமக்கு
புரியும். ஆகவே, மார்த்தா எப்படி இயேசுவிடம் நம்பிக்கையோடு
கேட்டு, கேட்டதைப் பெற்றுக்கொண்டாரோ அது போன்று நாமும் இறைவனிடம்
நம்பிக்கையோடு கேட்டால், எல்லா வரமும் கைகூடும் என்பது உண்மை.
நிறைவாக மார்த்தா நற்செய்தி அறிவிப்புக்கும் சிறந்த
முன்மாதிரியாய் விளங்கினார். இவரைக் குறித்துச் சொல்லப்படும்
ஒரு தொன்மம் (legend). இயேசு லாசரை உயிர்ப்பித்த செய்தியைக்
கேள்விப்பட்ட யூதர்கள் இலாசரையும், அவருடைய சகோதரிகள்
இருவரையும் அழித்தொழிக்க வேண்டும் என்று திட்டம்
தீட்டினார்கள். எனவே அவர்கள் மூவரையும் ஒரு சிறு படகில் ஏற்றி,
அதில் துடுப்பு எதுவும் இல்லாமல் அனுப்பி வைத்தனர். அந்த
படகானது கிழக்கு பிரான்சை அடைந்தது. அங்கே லாசர் மற்றும்
மார்த்தா, மரியா நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.
இவ்வாறு மார்த்தா நற்செய்தி அறிவிப்புப் பணியிலும் சிறந்து
விளங்கினார். ஆகவே, தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும்
நாமும் அவரைப் போன்று விருந்தோம்பலில், கடவுள் மீது கொண்ட
நம்பிக்கையில், நற்செய்தி அறிவிப்புப் பணியில் சிறந்து
விளங்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
நிகழ்வு
கலாத்தியா என்ற பகுதியில் லேவியத்தான் என்ற உயிரினம் இருந்தது.
அதன் பாதி உடல் விலங்கு போலவும், மீதி உடல் மீனைப் போன்றும்
இருந்தது. ஒரு குதிரையையும் விடவும் அது பெரியதாக இருந்தது.
இவ்வுயிரினம் அவ்வழியாகப் போவோர் வருவோர் எல்லாரையும் பிடித்து
சாப்பிட்டு வந்தது. கடல்வழியாகப் போவோரையும் அது அவ்வாறே
துன்புறுத்தி வந்தது. இதனால் மக்கள் பெரிதும் இன்னலுக்கு
உள்ளானார்கள். எனவே அவர்கள் மார்த்தாவிடம் வந்து, தங்களை
அந்தக் கொடிய மிருகத்திடமிருந்து காப்பாற்றுமாறு கெஞ்சிக்
கேட்டார்கள். மார்த்தாவும் அவ்வுயிரினம் வாழ்ந்து வந்த
டரஸ்கான் (Tarascon) பகுதிக்குச் சென்று, சிலுவையின் துணையுடன்
அதனைக் கொன்று வீழ்த்தினார். அதனால் மக்கள் பெருமகிழ்ச்சி
பேரானந்தம் அடைந்தார்கள்.
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் விழாக்கொண்டாடும் மார்த்தா பெத்தானியாவைச்
சேர்ந்தவர். இவரோடு உடன் பிறந்தவர்கள்தான் இயேசு அதிகமாக அன்பு
செய்த லாசர் (யோவா 11:5), மற்றும் மரியா. மார்த்தா எப்போதுமே
கடின உழைப்பாளியாக, உதவும் நல்ல உள்ளத்தினராக விளங்கினார்
என்பதை விவிலியம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. விவிலியத்தில்
இவர் சில பகுதிகளில் இடம்பெற்றாலும், அவற்றையெல்லாம்
வைத்துக்கொண்டு பார்க்கும்போது மார்த்தா எப்படிப்பட்டவர்
என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
விவிலியத்தில் மார்த்தா இடம்பெறும் முதல் பகுதி லூக்கா
நற்செய்தி 10: 38-42. இங்கே அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்த
இயேசுவுக்கு பணிவிடை செய்யவேண்டும், அவரை நன்றாக உபசரிக்க
வேண்டும் என்பதற்காக பரபரப்பாக இருக்கின்றார்.
அதுமட்டுமல்லாமல் தனக்கு உதவி செய்ய வராத தன்னுடைய சகோதரியான
மரியாவின் மீது குறைபட்டுக் கொள்கிறார். இதைக் கண்ணுற்ற இயேசு
மார்த்தாவிடம், "மார்த்தா, மார்த்தா!, நீ பலவற்றைப் பற்றிக்
கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால், தேவையானது ஒன்றே, மரியாவோ
நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து
எடுக்கப்படாது" என்கிறார் (லூக் 10:41- 42). இங்கே மார்த்தா
வீட்டில் மூத்தவள் என்பதாலும், தன்னுடைய வீட்டிற்கு
வந்திருக்கும் இயேசுவுக்கு சிறப்பானதொரு
விருந்துகொடுக்கவேண்டும் என்ற ரீதியில் பரபரப்பாக அலைகின்றார்.
மார்த்தா இடம்பெறும் இரண்டாவது பகுதி யோவான் நற்செய்தி 11: 21
-27 ஆகும். இப்பகுதி மார்த்தா ஆண்டவர் இயேசுவிடத்தில் எத்தகைய
நம்பிக்கைக் கொண்டிருந்தார் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றது.
லாசர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வருகின்ற
இயேசுவிடம் மார்த்தா, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால்
என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம்
கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத்
தெரியும்" என்கிறார். இயேசுவிடம் உண்மையான நம்பிக்கை
வைத்திருப்பவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் கேட்கமுடியும்
என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும். மார்த்தா கேட்டதற்கு
இயேசு, "உயிர்த்தெழுதலும் வாழும் நானே. என்னிடம் நம்பிக்கை
கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" என்று சொல்லி மிகப்பெரிய மறை
உண்மையை வெளிப்படுத்துகிறார். அப்போதுதான் மார்த்தா, "நீரே
மெசியா! நீரே இறைமகன்!, நீரே உலகிற்கு வரவிருந்தவர்" என்று
தன்னுடைய நம்பிக்கை அறிக்கையை வெளிப்படுக்கிறார். ஏறக்குறைய
இயேசுவோடு மூன்று ஆண்டுகள் இருந்து, அவரைப் பற்றி அறிந்துகொண்ட
பேதுருவின் அறிக்கையை (மத் 16:16) ஒத்ததாக இருக்கின்றது
மார்த்தாவின் அறிக்கை.
மார்த்தா இடம்பெறும் மூன்றாவது பகுதி யோவான் நற்செய்தி 12:2
ஆகும். இப்பகுதியில் மார்த்தா தன்னுடைய சகோதரன் இலாசரை
உயிர்பித்த இயேசுவுக்கும் அவரோடு இருந்த அவருடைய
சீடர்களுக்கும் விருந்து படைக்கின்றார். இயேசு இங்கே மார்த்தா
தருகின்ற விருந்தை அன்போடு ஏற்றுக்கொள்கிறார், அவரைப் பற்றி
எதுவும் சொல்லவில்லை. மார்த்தா எப்போதும் தன்னுடைய வீட்டை
நாடிவோரை வல்லவராக, நல்லவராக விளங்கினார் என்பதைத்தான்
இப்பகுதியானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
விவிலியம் மட்டுமல்லாது திருச்சபையின் மரபுகளும் மார்த்தாவைப்
பற்றி ஒருசில செய்திகளை நமக்குச் சொல்கின்றன. ஆண்டவர்
இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு, சினம்கொண்ட யூதர்கள்
லாசர், மார்த்தா மற்றும் அவருடைய சகோதரி மரியா ஆகிய மூவரையும்
ஒரு படகில் கட்டி வைத்து, அதில் துடுப்பு எதுவும் வைக்காமல்,
கடலில் அனுப்பி விட்டனர். ஆனால் அவர்கள் மூவரும் இறைவனுடைய
அருளால் உயிர்தப்பி, பிரான்சு நாட்டில் உள்ள மர்செல்லஸ் என்ற
இடத்தில் தரையிறங்கினார். அங்கே லாசர் ஆயராகவும், அவருடைய
சகோதரி மரியா ஒரு குகைக்குச் சென்று தனியாக இறைவனிடம் வேண்டி
தன்னுடைய வாழ்நாளைக் கழித்ததாகும், மார்த்தா ட்ரஸ்கான் என்ற
இடத்தில் பெண்களுக்கான் ஒரு துறவற சபையை நிறுவி, அங்கேயே
தன்னுடைய இறுதி நாட்களைச் செலவிட்டதாகும் அறிந்துகொள்கிறோம்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில்
அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
இறைவனுக்கு மட்டுமே முதலிடம்
மார்த்தா தன்னுடைய இல்லத்திற்கு வந்த இயேசுவுக்கு சிறப்பாக
விருந்து உபசரிக்கவேண்டும் என்பதற்காக பரபரப்பாக அலைகின்றார்.
அதனால் அவர் இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருடைய வாழ்வுதரும்
வார்த்தைகளைக் கேட்க மறந்துவிடுகின்றார். இன்றைக்கு நாமும்
கூட, மார்த்தாவைப் போன்று இறைவனுக்கு முக்கியத்துவம் தராமல்,
உலக காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து வாழ்ந்ந்து
கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு நம்மிடம் சொல்கிறார்,
"தேவையானது ஒன்றே, அதுதான் அனைத்திற்கும் மேலாக அவரது
ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுவது" (மத் 6:33).
நாம் இறைவனுக்கு நம்முடைய வாழ்க்கையில் முக்கியத்துவம் தந்து
வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருத்தந்தை
மூன்றாம் யூஜின் திருத்தந்தையாக இருந்தபோது, அவருக்கு ஆன்ம
குருவாக இருந்தவர் பெர்னார்டு என்பவர். ஒருசமயம் திருத்தந்தை
மூன்றாம் யூஜின் தன்னுடைய ஆன்ம குருவிடம், "திருச்சபையின்
அன்றாட அலுவல்களுக்கு இடையே எனக்கு இறைவனிடம் ஜெபிப்பதற்கு
நேரமே இல்லை" என்று அங்கலாய்த்துக் கொண்டார். அதற்கு அவர்,
"உமது ஞான வாழ்வுக்கு முதலிடம் கொடுத்து, ஜெபத்தில் முழுமையாக
கருத்தூன்றி நிற்காவிடில், திருச்சபையில் உம் அலுவல்கள்
எல்லாம் நீர் எதிர்பார்ப்பதைவிட மிக விரைவில் உம்மை
நரகத்திற்கே இட்டுச் செல்லும். இது எச்சரிக்கை" என்றார்.
திருத்தந்தை அவர்களைப் போன்றுதான் நாமும் பல நேரங்களில்
என்னுடைய அலுவல்களுக்கு மத்தியில் எனக்கு ஜெபிப்பதற்கு நேரமே
இல்லை என சாக்குப்போக்குச் சொல்கிறோம். ஆனால் இறைவனோடு
இணைந்திராத வாழக்கை அடித்தளமில்லாத வீட்டிற்குச் சமம் என நாம்
புரிந்துகொண்ட வாழவேண்டும்.
இறைவனிடத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்தல்
மார்த்தா ஆண்டவர் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு
வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் இயேசுவை
மெசியா, இறைமகன், உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் என்ற
நம்பிக்கை அறிக்கை செய்கிறார், அதுமட்டுமல்லாமல் அவர்
இயேசுவிடம், "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன்
இறந்திருக்கமாட்டான்" என்று சொல்லி, இயேசுவிடம் கொண்ட
நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். மார்த்தாவைப் போன்று நாம்
(இறைவனிடம்) அசைக்க நம்பிக்கையோடு வாழ்கிறோமா? என சிந்தித்துப்
பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார்,
"நம்புகிறவருக்கு எல்லாம் கூடும்" என்று (மாற் 9:23), ஆகவே,
நாம் நம்பிக்கையோடு இருக்கும்போது எல்லாம் நலமாகும் என்பதே
உண்மை.
ஒருசமயம் இளைஞன் ஒருவன் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள்
தீர்வதற்கு ஆலோசனை வேண்டி, பக்கத்து ஊரில் இருந்த மகானைச்
சந்திக்கச் சென்றான். ஆனால் அவன் அங்கு சென்றபோது, அந்த
மகானைச் சந்திப்பதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் இருப்பதைக்
கண்டு மலைத்துப் போய் நின்றான். 'இத்தனை மக்களுக்கு மத்தியில்
நான் எப்படி இந்த மகானைச் சந்திப்பது என்று ஏமாற்றத்தோடு
நின்றான்.
அப்போது அந்த இளைஞனுக்கு பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர்,
"தம்பி! இன்று என்னால் இந்த மகானைச் சந்திக்க முடியும்,
அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நீ
நம்பு. அது நடக்கும்" என்றார். பெரியவரின் வார்த்தைகளைக்
கேட்டு அந்த இளைஞன் மகானை எப்படியாவது இன்றைக்கு சந்தித்துவிட
முடியும் என நம்பத் தொடங்கினான். அவன் நம்பிய சில
மணித்துளிகளிலேயே மகான் அந்த இளைஞன் தன்னிடம் வருமாறு
அழைத்தார். அவனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. "இத்தனை
ஜனத்திரளுக்கு மத்தியில் அவர் எப்படி என்னை அழைத்தார்?" என்று
வியப்பு மேலிட பெரியவரிடம் கேட்டான். அதற்கு அவர், "நீ அவரைச்
சந்திக்க முடியாது என நினைத்தாய், அது போன்றே நடந்தது. பிறகு
நீ அவரைச் சந்தித்துவிட முடியும் என நம்பத் தொடங்கினாய். நீ
நம்பியது போலவே நடந்தேறியது" என்றார். ஆம். நம்புகிறவருக்கு
எல்லாம் நிகழும். ஆகவே, நாமும் தூய மார்த்தாவைப் போன்று
நம்பிக்கையோடு வாழ்வோம்.
விருந்தோம்பலில் சிறந்து விளங்குதல்
மார்த்தா எப்போதும் விருந்து உபசரிப்பில் சிறந்து விளங்கினாள்.
இயேசு தன்னுடைய வீட்டிற்கு வருகிறபோதெல்லாம் அவர் அவருக்கு
சிறப்பாக உணவு வழங்கவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய்
இருந்தார். அதனால்தான் என்னவோ இன்றைக்கு நாம் அவருடைய விழாவைக்
கொண்டாடுகின்றோம். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் தன்னுடைய
கூடாரத்திற்கு வந்த மூன்று வானதூதர்களுக்கு சிறப்பான ஒரு
விருந்து படைத்தார். அதனால் மகிழ்ந்த வானதூதர்கள் மூவரும்
ஆபிரகாம் தம்பதியினருக்கு அவர்களுடைய முதிர்ந்த வயதில்
குழந்தைப் பேற்றைத் தந்தார்கள். நாமும் விருந்தோம்பும் பண்பில்
சிறந்து விளங்கும்போது இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது
உறுதி.
ஆகவே, தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில்,
நாமும் அவரைப் போன்று இறைவன்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு
வாழ்வோம், விருந்தோம்பலில் சிறந்து விளங்குவோம். அதன்வழியாக
இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|