|
|
24 ஜூன் 2019 |
|
|
பாஸ்கா காலம்
11ம் வாரம் - 1ம் ஆண்டு
|
| |
புனித திருமுழுக்கு
யோவானின் பிறப்பு
திருநாள்
திருப்பலி |
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6
தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே,
கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்;
என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக்
கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள் போன்று ஆக்கினார்; தம்
கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு
ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக் கொண்டார்.
அவர் என்னிடம்,
'நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான்
மாட்சியுறுவேன்' என்றார். நானோ,
'வீணாக நான் உழைத்தேன்;
வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும்
எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம்
இருக்கின்றது' என்றேன்.
யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று
திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்.
ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என்
ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது:
யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத்
திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ?
உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு
ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 139: 1-3. 13-14. 15 (பல்லவி: 14a)
=================================================================================
பல்லவி: வியத்தகு முறையில் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி
நவில்கின்றேன்.
1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான்
அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை
எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3 நான் நடப்பதையும்
படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத்
தெரிந்தவையே. பல்லவி
13 ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என்
தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! 14 அஞ்சத்தகு, வியத்தகு
முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்;
உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும்.
பல்லவி
15 என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும்
பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர்.
பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
இயேசுவின் வருகைக்கு முன்பே யோவான் போதித்து வந்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 22-26
அந்நாள்களில் பவுல் கூறியது: கடவுள் சவுலை நீக்கிவிட்டுத்
தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக்
குறித்து 'ஈசாயின்
மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம்
அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார்.
தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே
இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.
அவருடைய வருகைக்கு
முன்பே யோவான், 'மனம்மாறி திருமுழுக்குப்
பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார்.
யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில்,
`நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்
பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத்
தகுதியில்லை' என்று கூறினார்.
சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு
அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 1: 76
அல்லேலூயா, அல்லேலூயா! குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர்
எனப்படுவாய்; ஏனெனில் ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர்
முன்னே செல்வாய். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இக்குழந்தையின் பெயர் யோவான்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66, 80
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப்
பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம்
காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும்
அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.
எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்;
செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.
ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு
யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார்.
அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே"
என்று சொல்லி, "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம்
என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.
அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின்
பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.
அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப்
போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப் பற்றிக்
கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.
கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில்
இருத்தி, "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்று
சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப்
பெற்றிருந்தது. குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து மன வலிமை
பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம்
வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.
குழந்ழைதகள் ஆண்டவருடைய கைவன்மையை பெற்றிருக்குமா? இந்த குழந்தை
மட்டும் ஆண்டவருடைய கைவன்மையை பெற்றிருந்ததா?
எல்லா குழந்தைகளும் ஆண்டவருடைய குழந்தைகள் தான் என்றாலும் சில
குழந்தைகள் ஆண்டவருடைய சிறப்பான கைவன்மையை பெற்றிருக்கிறது என்பதிலே
மாற்றுக் கருத்து இல்லை.
இந்த குழந்தை சிறப்பு பெற்றது. மெசியாவை அறிவிக்க வந்ந இறுதி
இறைவாக்கினர்.
அவரை சுட்டிக் காட்டும் பாக்கியம் பெற்றது.
சம காலத்தில் வாழும் பாக்கியம் பெற்றது.
இறையாட்சிக்காக இரத்தம் சிந்தி சாட்சியம் பகர வாய்ப்பு பெற்றது.
ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றதாலே இத்தகைய வாய்ப்பபுக்கள்.
பிறப்பிலே அவர் முன் கூறிக்கப்பட்டதாலே இத்தகைய சிறப்பு.
நாமும் பிறப்பதற்கு முன்பாகவே முன் கூறிக்கப்பட்டதாலேஈ பிறந்த
பின்னர் அவரை அறியும் பாக்கியம் பெற்றோம்.
அவரையே உணவாக பெறும் பாக்கியம் பெற்றோம்.
நம்மோடு கூடவே வாழும் அவருக்கு சாட்சியாக இரத்தம்
சிந்தாவிட்டாலும் பாவத்திற்கான போராட்டத்தில் தீவிரமாக உள்ளோமா?
சுய ஆய்வு காலத்தின் கட்டாயம். எபி 12: 04
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
இன்று திருச்சபையானது திருமுழுக்கு யோவானின் பிறப்புவிழாவைக்
கொண்டாடி மகிழ்கின்றது. ஆண்டவர் இயேசு, அன்னை மரியாள், ஆகியோருக்கு
அடுத்து திருமுழுக்கு யோவானின் பிறப்புவிழாவைத்தான் திருச்சபையானது
சிறப்பாக நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றது. இதை
வைத்துப்பார்க்கும் திருச்சபை வரலாற்றில் திருமுழுக்கு யோவான்
எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை நாம்
புரிந்துகொள்ளலாம்.
இறுதி இறைவாக்கினர், ஆண்டவர் இயேசுவின் முன்னோடி, ஆண்டவருக்காக
மக்களைத் தயாரித்தவர் என பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரராக
இருந்தாலும் பெண்களுள் பிறந்தவர்களுள் பெரியவர் (மத் 11:11)
என்ற சிறப்புப் பெயரால் அவரை அழைப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
திருமுழுக்கு யோவானின் வாழ்வைக் குறித்து நாம் சிந்தித்துப்
பார்க்கும்போது அவருடைய வாழ்வே வியப்புகளாலும், அதிசயங்களாலும்
நிறைந்திருக்கின்ற ஒன்று என்பதை நம்மால் மறுக்கமுடியாது. இவர்
எலிசபெத்து, செக்கரியா என்ற வயதான பெற்றோருக்கு மகனாகப் பிறக்கின்றார்.
இவரது வாழ்வும்கூட மற்ற மனிதர்களைப் போன்று அல்லாமல், வித்தியாசமாகவே
இருக்கின்றது. வெட்டுக்கிளியையும், காட்டுத் தேனையும் உணவாக உட்கொள்கிறார்;
ஒட்டக மயிராடையை ஆடையாக உடுத்துகிறார். அப்படியிருந்தும் அவர்
ஆற்றிய பணிதான் நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.
திருமுழுக்கு யோவான் இறைவாக்கினர் எலியாவின் உளப்பாங்கையும்,
ஆண்டவருடைய கைவன்மையையும் பெற்றிருந்தார். அதனால்தான் அவரால்
மெசியாவின் வருகையைப் பற்றி மக்களுக்கு துணிவுடன் நற்செய்தி அறிவிக்க
முடிந்தது. அதோடு மட்டுமல்லாமல், மக்கள் தங்களுடைய பாவ
வாழ்விலிருந்து விலகி, புது வாழ்வு வாழவும் அழைக்க முடிந்தது.
இதன் உச்சம்தான் தன்னுடைய சகோதரனின் மனைவியோடு வாழ்ந்த ஏரோதை
எச்சரிக்க முடிந்தது, அதற்கு ஈடாக தன்னுடைய உயிரையும் விலையாகத்
தரமுடிந்தது.
திருமுழுக்கு யோவானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய மிக
முக்கியமான பாடம் அவர் மிகப்பெரிய இறைவாக்கினராக இருந்தாலும்,
"நான் மெசியா அல்ல, மெசியாவைக் குறித்து சான்று பகரவே வந்தேன்;
அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவன் என்று சொல்லி
தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதுதான்.
இவரது விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் தாழ்ச்சியுள்ளவர்களாக
வாழ முயல்வதே மிகச் சிறந்த சாட்சிய வாழ்வாக இருக்கும் என்பதில்
எந்தவித ஐயமுள்ளமில்லை.
ஒருமுறை உலகப் பணக்காரர்கள் எல்லாம் ஒன்றுகூடிய ஒரு கூட்டத்தில்
திடிரென்று ஜெபம் பற்றிய பேச்சு எழுந்தது. அப்போது ஒரு பணக்காரர்
எழுந்து, "நான் மற்ற மனிதர்கள், பணக்காரார்கள் போன்று அல்ல, என்னுடைய
சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவன். அதனால் நான் எதற்காகவும்
இறைவனிடம் ஜெபதில்லை, ஜெபம் எனக்குத் தேவையுமில்லை" என்று ஆணவத்தோடு
பேசினார்.
அதற்கு அந்த பணக்காரருக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு பணக்காரார்
இவ்வாறு பதிலளித்தார், "நான் எதற்காகவும் இறைவனிடம் ஜெபித்ததில்லை
நீ என்று ஆணவத்தில் பேசாதே, பணம் இன்று போகும், நாளை வரும். ஆனால்
இறைவனின் பராமரிப்பு நமக்கு எப்போதும் உண்டு. ஆகவே உன்னுடைய உள்ளத்தில்
இருக்கும் ஆணவம் விலகி, தாழ்ச்சி பெருக வேண்டுமாய் ஜெபி. கடவுள்
உனக்கு எல்லாவிதமான ஆசிரையும் தருவார்" என்றார்.
என்னிடம் பணம், பொருள் செல்வம் எல்லாம் இருக்கிறது. அதனால்
நான் எதற்கு இறைவனிடம் ஜெபிக்கவேண்டும் என்று நினைக்கிறோம். இப்படிப்பட்ட
ஒரு எண்ணம் நமக்கு அழிவைத்தான் தரும். மாறாக தாழ்ச்சியோடு நாம்
வாழும்போது இறைவனின் அருள் நமக்கு நிரம்பக் கிடக்கும்.
நீதிமொழிகள் புத்தகம் 14:34 ல் வாசிக்கின்றோம் "மேன்மையடைய
தாழ்மையே வழி" என்று. ஆகவே, திருமுழுக்கு யோவானைப் போன்று
தாழ்ச்சி என்ற புண்ணியத்தில் வளர்வோம். தாயின் கருவில்
முன்குறித்து வைக்கப்பட்டு, இறைவனுடைய நெஞ்சத்திற்கு நெருக்கமாக
இருக்கும் நாம் எல்லா மக்களுக்கும் ஒளியாவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
நிகழ்வு
ஹெப்ரோன் என்ற மலைநாட்டில் வாழ்ந்த எலிசபெத்து செக்கரியா தம்பதியினருக்கு
அவர்களுடைய முதிர்ந்த வயதில் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு
விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. அந்நாளில் அக்கம்
பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் அங்கு வந்திருந்தனர்.
அவர்கள் குழந்தையின் தந்தையினுடைய பெயரான செக்கரியா என்பதையே
அதற்குச் சூட்ட இருந்தனர். ஆனால் குழந்தையின் தாயோ, குழந்தைக்கு
யோவான் என பெயரிடச் சொன்னார். இதை கேட்ட மக்கள் குழப்பம் அடைந்தார்கள்.
வழக்கமாக தந்தையின் பெயரைத்தானே மகனுக்குச் சூட்டுவது வழக்கம்.
ஆனால் இவர் உறவினர்களிடத்தில் இல்லாத வேறொரு பெயரைச் சூட்டச்
சொல்கிறாரே என நினைத்து, குழந்தையின் தந்தையாகிய செக்கரியாவிடம்,
"குழந்தைக்கு என்ன பெயரிடலாம்?" என்று சைகை காட்டிக் கேட்டார்கள்.
அதற்கு அவர் ஒரு எழுது பலகையைக் கேட்டு வாங்கி, அதில் யோவான்
என்று எழுதினார். இதைக் கண்ட மக்கள்கூட்டம் வியந்துபோய் நின்றது.
அப்போது வானதூதர் கபிரியேல் முன்னறிவித்தது போன்று செக்கரியாவின்
நாவு கட்டவிழ்ந்தது.
வரலாற்றுப் பின்னணி
திருச்சபை புனிதர் ஒருவரின் இறப்பை விண்ணகப் பிறப்பைத்தான்
விழாவாகக் கொண்டாடும். ஆனால் திருமுழுக்கு யோவானின் இறப்பு
விழாவைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், பிறப்பு விழாவைக்
கொண்டாடுகிறது என்றால் அவர் திருச்சபையில் எவ்வளவு முக்கியத்துவம்
வாய்ந்தவர் என நாம் புரிந்துகொள்ளவேண்டும். திருச்சபை இறப்பு
விழாவோடு பிறப்பு விழாவையும் கொண்டாடுகின்ற மற்ற இருவர் இயேசுவும்
(டிசம்பர் 25), அன்னை மரியும் (செப்டம்பர் 08) அவர்.
ஆண்டவர் இயேசு சொல்வது போன்று திருமுழுக்கு யோவான் சாதாரண மனிதர்
அல்ல, அவர் மனிதராகப் பிறந்தவர்களுள் பெரியவர் (மத் 11:11), மற்ற
இறைவாக்கினர்கள் தாயின் கருவில் இருக்கும்பொழுது தேர்ந்து கொள்ளப்பட்டவர்களாக
இருக்கலாம், ஆனால் திருமுழுக்கு யோவானோ தாயின் கருவில் இருக்கும்போது
தூய ஆவியினால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்பட்டவர். (லூக் 1: 41),
மற்ற இறைவாக்கினர்கள் மெசியாவைக் குறித்து முன்னறிவித்தார்கள்.
ஆனால் திருமுழுக்கு யோவானோ ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக மக்களைத்
தயாரித்தார், அவர் வந்தபோது சுட்டிக்காட்டினார், அவருக்குத்
திருமுழுக்குக் கொடுத்தார். அதனாலேயே திருமுழுக்கு யோவான் மற்ற
எல்லா இறைவாக்கினர்களையும் விட உயர்ந்தவராக இருக்கின்றார்.
திருமுழுக்கு யோவானின் பெற்றோர்களான செக்கரியாவும் எலிசபெத்தும்
நீண்ட நாட்களாகியும் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தார்கள். இருந்தாலும்
அவர்கள் கடவுளுடைய பார்வையில் நேர்மையுள்ளவர்களாக இருந்தார்கள்
(லூக் 1:6), அதனால்தான் கடவுள் அவர்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களுக்கு
குழந்தைப் பேற்றினைத் தருகின்றார்.
ஆரோனின் வழிவந்தவரனான செக்கரியா எருசலேம் திருக்கோவிலில் தூபம்
காட்டுகின்ற முறை வந்தபோது உள்ளே செல்கிறார். அப்போது ஆண்டவரின்
தூதர் அவருக்குக் காட்சி கொடுத்து, "செக்கரியா, அஞ்சாதீர், உமது
மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப்
பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்" என்கிறார்.
இவ்வார்த்தைகளைக் கேட்டு செக்கரியா, "இது நடைபெறும் என எனக்கு
எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது
முதிர்ந்தவர் ஆயிற்றே" என்கிறார். உடனே வானதூதர் அவரிடம்,
"நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும்
இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். உரிய
காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை.
ஆதலால், அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்" என்று
ஆணையிட்டுவிட்டுச் செல்கிறார். விவிலியத்தில் வயது முதிர்ந்த
தம்பதியினருக்கு இறைவன் குழந்தைப் பேற்றை அளித்திருகிறார் என்பதைத்
தெரிந்தபின்னும்கூட செக்கரியா வானதூதரின் வார்த்தைகளை நம்பாததனால்தான்
அவர் வானதூதரின் சினத்திற்கு உள்ளாகின்றார். யோவானின் பிறப்புக்குப்
பிறகு அவர்மீது விழுந்த சாபம் விலகுகின்றது, அவருடைய நா கட்டவிழ்கிறது.
செக்கரியாவிற்கு நா கட்டவிழ்ந்த பிறகு அவர், கடவுள் ஆற்றிவரும்
இரக்கச் செயல்களுக்காக அவருக்கு நன்றி செலுத்துகின்றார். அதே
நேரத்தில் தன் மகன் மெசியாவிற்கு முன்னோடியாக இருந்து ஆற்ற இருக்கும்
பணிகளைக் குறித்து எடுத்துரைக்கின்றார். யோவான் வளர்ந்த பிறகு
தன்னுடைய தந்தை முன்னறிவித்தது போன்று ஆண்டவருக்காக மக்களைத்
தயார்செய்து, அவரை மக்களுக்குச் சுட்டிக்காட்டி, அறநெறிக்குப்
புறம்பாக வாழ்ந்த ஏரோதின் தவற்றைச் சுட்டிக்காட்டி, அவராலேயே
கொல்லப்பட்டு இறந்தார். திருமுழுக்கு யோவான் விவிலியத்தில் வந்த
கடைசி இறைவாக்கினராக இருந்தாலும் அவர் மனிதர்களாய் பிறந்தவர்களுள்
உயர்ந்தவராக விளங்குகின்றார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இந்த
நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என
சிந்தித்து பார்ப்போம்.
1. தாழ்ச்சி
திருமுழுக்கு யோவான் தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு
என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் ஆண்டவருக்காக மக்களைத் தயார்செய்த
போது மக்கள் அனைவரும் அவருடைய குரலைக் கேட்பதற்காக கூட்டம்
கூட்டமாக வருகிறார்கள். அப்போது அவர் நான்தான் மெசியா என்று
சொல்லி, மக்களிடமிருந்து பேரையும் புகழையும் சம்பாதித்திருக்காலம்.
ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை, மாறாக அவர், "எனக்குப் பின்
ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமைமிக்கவர். அவருடைய மிதியடிகளைத்
தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை" (மத் 3:11) என்று
சொல்லி தன்னைத் தாழ்த்திக்கொள்கிறார். அதனால்தான் என்னவோ அவர்
எல்லாரையும் விட மேலானவராக உயர்த்தப்படுகின்றார்.
திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் நமக்கு அவரிடத்தில்
இருந்த தாழ்ச்சியும் எளிமையும் இருக்கின்றதா என சிந்தித்துப்
பார்க்கவேண்டும். இன்றைக்கு நாம் ஒரு சாதாரண பொறுப்பில், பதவியில்
இருந்துகொண்டு நாம்தான் பெரியவர்கள் என்று காட்ட விளைகிறோம்.
ஆனால் திருமுழுக்கு யோவானோ மிகப்பெரிய இறைவாக்கினராக இருந்தபோதும்
தாழ்ச்சியோடு இருந்தார். அதுதான் நாம் அவரிடமிருது கற்கவேண்டிய
முதன்மையாக பாடமாக இருக்கின்றது.
முன்பொரு காலத்தில் தனஞ்ஜெயன் என்ற மன்னன் ஒருவன் இருந்தான்.
அவன் அடிக்கடி தன்னுடைய நாட்டில் இருந்த கவிஞர்களை அரண்மனைக்கு
அழைத்து, அவர்களுக்கு இடையே போட்டி நடத்துவான். அந்தப்
போட்டியில் யார் வெற்றிபெறுகிறாரோ அவருக்கு அரச மரியாதை
கொடுத்து அனுப்புவான். அதன்படி ஒருமுறை நடந்த கவி பாடும்
போட்டியில் பைரவா என்ற இளைஞன் வெற்றிபெற்றான். அவனுக்கு அரசன்
இராஜமரியாதை கொடுத்து, அவனை யானையின்மீது ஏற்றிவைத்து
வீட்டுக்கு அனுப்பி வைத்தான். இது அவனுடைய உள்ளத்தில் கவிதையில்
தன்னை மிஞ்ச யாருமில்லை என்ற கர்வத்தை ஏற்படுத்தியது. அதனால்
அவன் கர்வத்தோடு யானையின்மீது பவனி வந்து, வீட்டை அடைந்தான்.
வீட்டில் அவனை வரவேற்க இருந்த அவனுடைய பெற்றோர்களை அவன்
பேருக்கு வணங்கினானே ஒழிய, கர்வத்தோடு இருந்தான். இதைப்
பார்த்த அவனுடைய பெற்றோர்கள் தன்னுடைய மகன் இப்படி
மாறிவிட்டானே என சோகத்திற்கு உள்ளானார்கள். அப்போது அவன் தன்னுடைய
பெற்றோர்களிடம், "மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய இந்த நேரத்தில்,
எதற்காக இப்படி சோகத்தோடு இருக்கிறீர்கள்?" என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், "மகனே உன்னுடைய முகத்தில் ஒருவிதமான கர்வ உணர்வு
தெரிந்தது. அதுதான் எங்களுடைய சோகத்திற்கு காரணம். மேலும் நீ
போட்டியில் வெற்றி பெற நாங்கள் இருவரும் எத்தனை நாட்கள் உண்ணாமல்
உறங்காமல் உனக்காகப் பாடுபட்டோம், உனக்காக ஜெபித்தோம். அவற்றையெல்லாம்
நீ மறந்துவிட்டு, ஏதோ உன்னுடைய முயற்சியினால்தான் போட்டியில்
வெற்றிபெற்றதாக நினைத்து, கர்வத்தோடு இருக்கின்றாயே, அதுதான்
எங்களுடைய சோகத்திற்குக் காரணம்" என்றார்கள். இதைக் கேட்ட அவன்,
தன்னுடைய தவறை உணர்ந்து வெட்கித் தலைகுனிந்து நின்றான்.
பதவியும் பெயரும் உயர உயர தாழ்ச்சியும் நம்மிடத்தில் பெருகவேண்டும்,
கர்வம் அல்ல, அதைதான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
ஆகவே நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று தாழ்ச்சியுள்ளவர்களாக
வாழ முயற்சிப்போம்.
2. உண்மையைத் துணிவோடு எடுத்துரைத்தல்
திருமுழுக்கு யோவான் கடவுளின் வார்த்தையை - உண்மையை - மிகத்
துணிவோடு எடுத்துரைத்தார். அதற்காக அவர் யாருக்கும் பயப்படவில்லை.
தன்னிடம் திருமுழுக்குப் பெறவந்த யூதர்களிடம் விரியன் பாம்புக்
குட்டிகளே என்கிறார். தன்னுடைய சகோதரனுடைய மனைவியோடு முறைதவறி
வாழ்ந்த ஏரோதை கண்டிக்கிறார். இப்படியாக அவர் உண்மையின் உரைகல்லாக
விளங்குகின்றார். இறுதியிலே தான் கொண்ட கொள்கைக்காக, இலட்சியத்திற்காக
உயிர்துறக்கிறார். திருமுழுக்கு யோவானிடம் இருந்த துணிச்சலும்
உண்மையை உரக்கச் சொல்லும் மனதிடமும் நம்மிடம் இருக்கின்றதா? என
சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் எதற்கு வம்பு என்று
வாய் பொத்தி, கூனிக் குறுகி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கிறிஸ்தவர்களாகிய
நாம் இயேசுவை போன்று, திருமுழுக்கு யோவானைப் போன்று உண்மைக்கு
சான்று பகரகூடியவர்களாக இருக்கவேண்டும்.
தென் கொரியாவில் வாழ்ந்த புகழ் பெற்ற கவிஞர் கிம்சிட்டா (Kim
Chi Tta) என்பவர். இவர் அரசாங்கம் அங்கே இருந்த ஏழை எளிய மக்களைக்
கொடியவிதமாய் நடத்திய விதத்தைக் கண்டு, அரசாங்கத்திற்கு எதிராகக்
குரல் கொடுத்தார். அதற்கு அரசாங்கம் அவருக்கு எட்டு ஆண்டுகள்
சிறைதண்டனை விதித்தது. அதற்கு அவர், "நான் இறந்த பிறகும்
மேலும் எட்டு ஆண்டுகள் எனக்கு சிறைத்தண்டனை விதித்துக்கொள்ளுங்கள்.
ஆனால் நான் யாருக்கும் பயப்படமாட்டேன்" என்று சொன்னார். எவ்வளவு
துணிச்சலான வார்த்தைகள்.
ஆகவே, திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இந்த
நாளில் அவரிடம் இருந்த சாட்சிய வாழ்வையும், தாழ்ச்சியையும் எளிமையையும்
நமதாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|