Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     25  பெப்ரவரி 2018  
                                                 தவக்காலம் 2ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9-13, 15-18

அந்நாள்களில் கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் "இதோ! அடியேன்" என்றார். அவர், "உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்" என்றார்.

ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார்.

அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று "ஆபிரகாம்! ஆபிரகாம்" என்று கூப்பிட, அவர் "இதோ! அடியேன்" என்றார். அவர், "பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்" என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார்.
இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார்.

ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, "ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய்.

ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப்போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன்.
உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக்கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 116: 10,15. 16-17. 18-19 (பல்லவி: 9)
=================================================================================
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

10 "மிகவும் துன்புறுகிறேன்!" என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். 15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. பல்லவி

16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். 17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். பல்லவி

18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; 19 உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
  கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல், அவரை நமக்காக ஒப்புவித்தார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-34

சகோதரர் சகோதரிகளே, கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்?
அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்." அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் அன்பார்ந்த மைந்தர் இவரே.

தூயமாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-10

அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.
அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

பேதுரு இயேசுவைப் பார்த்து, "ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட, அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தபோது அவர், "மானிடமகன் இறந்து உயிர்த்தெழும்வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, `இறந்து உயிர்த்தெழுதல்" என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நீயாக மாறுவதே நிரந்தர மாற்றம்.

உருமாற்றம். இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை படைப்புகளும் உருமாற்றம் அடைகின்றன. விதை தளிராகி, செடியாகி, மரமாகிறது. உயிரினம் கருவாக உருவாகி, உயிராக வடிவம் பெறுகிறது. ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைவருக்கும் உருமாற்றம் நிகழ்கிறது.

ஆனால் அந்த உருமாற்றங்கள் எல்லாம் நம் உடனிருப்போருக்கு எந்தவிதமான தூண்டுதலையும் பாதிப்பையும் தருவதில்லை. ஆனால் இயேசுவின் உருமாற்றம் எவ்வாறு நமக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை வெளிபடுத்தவே இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

அகில உலகத்தையும் படைத்த கடவுளின் மகனான இயேசு நம்மைப் போல் ஒரு சாதாரண மனிதராகவே வாழ்ந்தார். தெய்வ இயல்பு முழுவதும் இருந்தும் மனித இயல்பிலேயே தனது வாழ்க்கையை வாழ்ந்தார். இன்றைய விவிலிய நிகழ்வை ஒரு காட்சியாக அதுவும் அரண்மனை, ராஜாங்க காட்சியாக கற்பனை செய்து பார்ப்போம்.
முற்காலத்தில் இளவரசர்கள் மன்னராக முடி சூடுவதற்கு முன்பு மாறுவேடத்திலோ, அல்லது சாதாரண மனிதர் வேடத்திலோ மக்களுடன் தங்கி அவர்களது இன்னல் இடையூறுகளைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க முற்படுவர். அப்போது தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களையே உடன் அழைத்துச் செல்வர். சில சமயங்களில் மக்களில் சிலரையே தங்களது நண்பர்களாக தேர்ந்தெடுத்து உடன் அழைத்துச் செல்வர். இறுதியில் மக்களின் துயர் களைந்து, தங்களின் வேடம் களைவர். பின் மணிமுடி சூடி மன்னராவர்.

இயேசுவின் உருமாற்றமும் அப்படி ஒரு காட்சியாகத் தான் தோன்றுகிறது.
மாமன்னர் - இறைவன்.
இளவரசர் - அவர் தம் மகன் இயேசு.
ராஜ மந்திரிகள் - மோயீசன், எலியா.
நண்பர்கள் - சீடர்கள் மூவர்.
மன்னராக இயேசு தனது இறைவல்லமையினுள் நுழைகிறார். மோயீசன் எலியா என்னும் இரு பெரிய வல்லுநர்களோடு தனது பயணத்திட்டத்தைப் பற்றி உரையாடுகிறார். அவரது பேச்சிலும் உடையிலும் ராஜ வனப்பு ( இறை) மிளிர்கிறது. மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களான சீடர்களுக்கு இயேசுவின் இறையரசு பற்றியும் வல்லமை பற்றியும் அதிகம் தெரியாத நேரம். திடிரென்று அவரது ராஜ வனப்பையும் மந்திரிகளுடனான அவரது உரையாடலையும் கண்டு வாயடைத்துப் போய் நிற்கின்றனர். இப்படியே இருந்து விடலாமே இவர்! எதற்கு இப்படி காட்டிலும் மேட்டிலும் கால்நடையாக நடந்து துன்பப்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

நாம் இங்கேயே இருப்பது எத்துணை நலம் என்றும், மூன்று கூடாரங்கள் அமைத்து விடலாம் என்பது வரை அவர்கள் சிந்தனை போகிறது.அப்போதும் கூட அந்த எளியவர்கள் தங்களைப் பற்றி சிறிதும் எண்ணவில்லை.

இவரே என் அன்பார்ந்த மகன் இவருக்கு செவிசாயுங்கள் என்ற அரசனின் குரலுக்கு அடிபணியும் சேவகர்களாய் சீடர்கள்.

வழக்கம் போல் இதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று கூறும் இயேசு. (இந்த முறை ஒரு கால வரையறை வைக்கிறார். அதாவது மானிடமகன் இறந்து உயிர்த்தெழும் வரை என்று).

உயிர்த்தெழுதலா?அப்படி என்றால் என்ன ? என்று தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கும் அப்பாவி சீடர்கள் என காட்சி முழுவதும் ஒரு ராஜாங்க நிகழ்வாகத் தோன்றுகிறது.

எங்கு? மலை; தனிமையான இடத்தில் தன்னை இறைவன் முன்னிறுத்தி செபிக்கிறார். மலையில் பெரும்பாலும் தூய காற்றும் சுகாதாரமும் கிடைக்கும். தூய்மை இருக்கும் இடத்தில் மகிழ்வும் தெளிவும் இருக்கும். இத்தகைய் மகிழ்வையும் தெளிவையும் தேடி இயேசு செல்கிறார். அதை கண்டடைகிறார். தனது சீடர்களுக்கும் அதை வெளிப்படுத்துகிறார்.

எதற்காக ? தனது நோக்கத்தைக் கூர்மைப்படுத்தவும், தனது இறை வல்லமையைப் பிறருக்கு வெளிப்படுத்தவும், தந்தை தன் மீது வைத்திருக்கும் அன்பை பிறர் அறியச் செய்யவும் உருமாறுகிறார்.

யாருடன்? மோசே, எலியா. மோசே இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து கானான் நாட்டிற்கு வழிநடத்தியவர். எலியா ஆண்டவரின் வாக்கை சிதறிக்கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு சென்று அறிவித்தவர். இரண்டு பேருமே இஸ்ரயேல் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள். கடவுளின் அன்பை வல்லமையை மக்களுக்கு வெளிப்படுத்தியவர்கள். இவர்களோடு இயேசு உரையாடுகிறார்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இங்கு இவருக்கு ஒரு படி மேலே போய் உடையிலேயே தெரிகிறது.ஆடை பளீரென்று வெண்ணிறமாக மாறும் அளவுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியடைகின்றார் இயேசு.

இன்றைய இயேசுவின் உருமாற்றம் நமக்கு தரும் செய்தி இதுதான்.
மகிழ்வும் தெளிவையும் உனக்குள் தேடு.
இறையடியார்களின் துணை நாடு,
கடவுளின் அன்பு மகனா/ளாக மாறு.
நீ நீயாக மாறு
அதுவே நிரந்தரமாற்றம் என்பதை நமக்கு உணர்த்தவே இயேசு உருமாறுகிறார். மனிதரான இயேசு இறை மனிதராக மாறுகிறார். நாமும் மாறுவோம். உடலளவில் அல்ல உள்ளத்தளவில்.

காகிதம் கசக்கி எறியப்படும் போது குப்பையாகிறது
காசாக மாறும்போது, தான் அதன் மதிப்பு உயர்கிறது.
மூங்கில் உடைபடும்போது மரத்துண்டாகிறது,
குழலாக ஊதப்படும்பொழுது அதன் இன்னிசை இனிமை தருகிறது.
எதுவும் அப்படியே இருந்தால் எந்த பயனுமில்லை.
உருமாறிய இயேசுவுக்கு தந்தையின் அன்பும் ஆசீரும்கிடைத்தது. நாமும் நம் உருவை மாற்ற முயல்வோம். எதிர்காலப் பயணத்திட்டத்தை இறை உதவியுடன் திட்டமிடுவோம். இறைவாக்கினர்களின் பாதையில் இறையாசீர் பெறுவோம் உருமாறுவோம் உருமாற்றுவோம். எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர் நம்மோடும் நம் குடும்பத்தோடும் என்றும் இருப்பதாக ஆமென்.

மறையுரை வழங்குபவர் சகோதரி மெரினா
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நிகழட்டும் உருமாற்றம் நம்மில்...
தவக்காலத்தின் 2ம் ஞாயிறு
(தொடக்க நூல் 22:1-2, 9-13, 15-18
உரோ 8:31b-34
மாற்கு 9:2-10)
ஏழ்மை
எளிமை
ஏழைகள்
எளிய மக்கள்
இவ்வார்த்தைகளெல்லாம்
நம்மில் சிலருக்கு
அசிங்கமாய் இருக்கும்
சிலருக்கு கேவலமாய் தோன்றும்
சிலரை முகம் சுழிக்க வைக்கும்
சிலரை வெட்கப்பட செய்யும்
சிலரை ஒதுங்கி நிற்கச் சொல்லும்
இன்னும் சிலருக்கு
இதைப் பற்றி எனக்கு என்ன
என்று கூச்சப்படாமல்
அடுத்தவர் காதுபட பேச தோணும்!
இது எதார்த்தம்...
பெரிய வீடு
சொகுசான கார்
கையில் ஐ-போன்
பையில் கிரேடிட் கார்ட்
முகத்தில் பூச்சும்
உதட்டில் சாயமும்
தாறுமாறாய் ஒட்டிக்கொண்ட
கொடூர தோற்றம்
வெட்டாத முடி
கிழிந்த ஆடை
பாதியிலே பார்வைக்கு வரும்
தொக்கி நிற்கும் தாடி
இதுதான் இன்று
மக்கள் விரும்பும் பணக்காரப் பார்வை!
எளிமையானவற்றை நாடவும்
ஒழுங்கானவற்றைத் தேடவும்
இன்றைய உலகம் யோசிக்கிறது
பயங்கரமாய் சிந்திக்கிறது!
மனிதர்களின் நல்வாழ்விற்காய்
உதித்த இறைவனை
ஓரங்கட்டிவிட்டு
ஓய்யரமாய் வாழ்வை நடத்தும்
மக்களினங்களின்
மூர்க்கதனமான எண்ணத்தை
மூட்டைக் கட்டிவிட்டு
இறைவழியில் முன்னேறிச் செல்ல
இனிமையாய் அழைக்கிறது
இன்றைய திருவழிபாட்டுக் கொண்டாட்டம்!
அருளின் காலமாம்
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு இது.
எண்ணங்களிலும்
சிந்தனையிலும்
செயல்களிலும்
உருமாற்றம் கண்டு
இறைவனை உள்ளத்தில் வழிபட
உகந்த வாழ்வை அமைத்திட
பாதை காட்டுகிறது
இன்றைய வாசகங்கள்!
வெற்றுச் சடங்குகளாய் இல்லாமல்
வெறுமனே இறைவனைத் தொழாமல்
இயேசுவில் கண்ட
உருமாற்றம் நம்மில் ஏற்பட
வழியமைத்து தருகின்றது
இந்த ஞாயிறு வழிபாடு!
எலியாவும்
மோசேவும்
இயேசுவும் பேசுகையில்
பேதுரு சொல்கிறார்
மூன்று கூடாரங்களை அமைக்கலாமா?
இது எளிமையாய் போவதற்கான
இடமல்ல
பலவாறு துன்புற்று போவதற்கான
பாதையென்று
சொல்லாமல் சொல்கிறார்
இறைமகன் இயேசு கிறித்து!
இங்கே இருப்பது நல்லது
இது பேதுருவின் விருப்பம் மட்டுமல்ல
நம்மைப் பிரதிபலிக்கிறார்
என்பதே உண்மை!
இன்று ஆடம்பரத்தைத் தேடி
அதிலே மனதைத் தொலைத்துவிட்டு
இங்கே இருப்பது நல்லது
என்று நாம் சொல்வதில்லையா?
திரையரங்குகளில் நேரத்தைச்
செலவழித்துவிட்டு
இங்கே இருப்பது நல்லது என்று
நாம் நினைப்பதில்லையா?
மகிழ்ச்சியாக ஊரைச் சுற்றிவிட்டு
இப்படியாய் இருப்பதே மகிழ்ச்சியென்று
நாம் எண்ணுவதில்லையா?
அவசியமானவைகளைத் தேடாமல்
அவசியமானவற்றையே தேடி
அலையும் கூட்டத்தில் இருந்துக்கொண்டு
இப்படியாய் இருப்பது நல்லது
என்று நாம் யோசிப்பதில்லையா?
கடவுளைத் தவிர
மற்றவைகளை
மற்றவர்களைத் தேடிச் சென்று
இவர்களுடன் இருப்பது
இவைகளுடன் இருப்பது நல்லது
என்று நாம் முடிவு எடுப்பதில்லையா?
எளிமையாக
சம்பாதிக்க
பணம் சேர்க்க
புகழ் சேர்க்க
சொத்து சேர்க்க
சுகங்களை அனுபவிக்க
சுரண்டல்கள் நிகழ்த்த
பயிற்சிப் பெறும் நமக்கு
இயேசு சொல்லும் செய்தி
எளிமையானவற்றில் அல்ல மனமாற்றம்
பேதுரு எளிதாய்
மலைக்கு வந்துவிட்டார்
இயேசுவின் உருமாற்றத்தைப் பார்த்து
மலைத்துப் போய்விட்டார்...
இங்கே இருப்பது நல்லது
என்று இருப்பிடத்தைத் தேட
ஆரம்பித்துவிட்டார்...
அவர் போன்றுதான் நாமும்
எளிதாய் வருவனவற்றில்
எல்லை மீறவும்
எளிதாய் சேர்வனவற்றில்
எல்லை நிர்ணயிப்பதும்
எளிதாய் பார்ப்பதில்
பாசாங்கை விதைப்பதும்
வாடிக்கையாய் வைத்துக்கொண்டு
பிறர் வருத்தப்படுவதைக்கூட
கவனிக்காமல்
வாழ்வைப் பேணும்
பெயரளவு கிறித்தவர்களாய் வாழாமல்
ஆபிரகாமைப் போன்று
கடவுளின் அன்புக்குரியவராய்
ஆசிகளின் இருப்பிடமாய்
வாழ்ந்திட அழைக்கிறது
இந்த உருமாற்ற நிகழ்வு!
உள்ளத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு
வெளியில் உழறுவதை
நிறுத்திக்கொள்ள கொடுக்கப்பட்ட
இத்தவக்காலத்தில்
உடையில் அல்ல உள்ளத்தில்
வெளியில் அல்ல உட்புறத்தில்
வார்த்தையில் அல்ல செயலில்
மற்றவரில் அல்ல நம்மில்
மாற்றத்தை
விதையாக விதைப்போம்
அப்போது
இயேசுவில் நிகழ்ந்த உருமாற்றம்
நம்மிலும் நிகழும்!
அத்தகைய மாற்றம்
அவனியில் நற்கனியைக் கொடுக்கும்!
இத்தகைய அருள்வாழ்வு
நிறைவாய் கிடைக்க
அருள்வேண்டி தொடர்ந்து பயணிப்போம்
அருளின் காலம்
அருள்வாழ்வின் தொடக்கமாய்
அர்த்தமுள்ள வாழ்வின் வழியாய்
அமையட்டும்!
ஆண்டவரின் அருள் மழையென பொழிட்டும்!
- ஆமென்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

I. தொடக்கநூல் 22:1-2, 9-13, 15-18

II. உரோமையர் 8:31-34

III. மாற்கு 9:2-10

சுற்றுமுற்றும் பார்த்தார்கள்!

இன்றைய முதல் வாசகத்தில் மோரியா நிலப் பகுதியின் மலையில் நடக்கும் ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும் நிகழ்வும், நற்செய்தி வாசகத்தில் எருசலேமிற்கு அருகில் உள்ள ஒரு மலையில் நெருங்கிய அன்புச் சீடர்கள் முன்னிலையில் நடக்கும் இயேசுவின் உருமாற்ற நிகழ்வும் நமக்கு வாசகப் பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இன்றைய நம் சிந்தனைக்கு இரண்டு பேரை எடுத்துக்கொள்வோம்: (அ) ஆபிரகாம், (ஆ) சீடர்கள்: பேதுரு, யாக்கோபு, யோவான். முதலாம் நபர் தனிநபராகவும், இரண்டாம் நபர் ஒரு குழுவாகவும் இருக்கின்றார். இவர்களுக்கு குறிப்பிட்ட இந்த நாளில் நடந்தேறிய நிகழ்வின்போதும், நிகழ்விற்குப் பின்னும் உள்ள கடவுள் அனுபவம் நம் சிந்தனையின் மையப்பொருளாக இருக்கட்டும்.

"கடவுள் அனுபவம்"

"அந்த அனுபவம்தான் நான்" என்று கடவுள் சொல்வதாக வாழ்வின் அனைத்து அனுபவங்களிலும் கடவுள் இருப்பதாக பதிவு செய்கின்றார் கவிப்பேரரசு கண்ணதாசன்.

இத்தவக்காலத்தில் நாம் தொடங்கியுள்ள தவமுயற்சிகளின் இறுதி இலக்காக இருப்பது கடவுள் அனுபவமே. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் கடவுள் அனுபவம் பெற ஏங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆலயத்திற்குச் செல்வதும், செபிப்பதும், நோன்பு இருப்பதும், பிறரன்புச் செயல்கள் செய்வதும், நம் வேலையை இன்னும் அதிக பொறுப்புடன் செய்வதும் என எண்ணற்ற நிலைகளில் கடவுள் அனுபவம் பெற்றுக்கொண்டிருக்கின்றோம். இவைகள்வழியாக கடவுள் அனுபவம் கிடைக்குமா? அல்லது இவைகள் வழியாக மட்டுமே கடவுள் அனுபவம் கிடைக்குமா? என்றும் ஏங்கிக்கொண்டிருக்கின்றோம்.

கடவுள் அனுபவம் என்பது கடவுளின் வெளிப்பாடு வழியாகவும் கிடைக்கலாம் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன. இந்த வெளிப்பாடு எங்கே நிகழ்கின்றன:

1. "ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார்"

"கடவுள் ஆபிரகாமை சோதித்தார்" என்று இன்றைய முதல் வாசகம் தொடங்குகின்றது. கடவுள் மனதரைச் சோதிக்கும் நிகழ்வுகள் எல்லாமே கடவுளின் வெளிப்பாட்டு நிகழ்வுகளாகவே அமைகின்றன. அப்படித்தான் இங்கும் நடக்கின்றது. "உன் மகனை, நீ அன்புகூறும் ஒரே மகன் ஈசாக்கை அழைத்துக்கொண்டு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின்மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண்டும்!" என்று கடவுள் ஆபிரகாமிடம் சொல்கின்றார்.

"நீ அன்பு கூறும் ஒரே மகன்" என்ற சொல்லாடலில்தான் கடவுளின் சோதனை அடங்கியுள்ளது: "உனக்கு எது பெரிது? நீ என்மேல் வைக்கும் அன்பா? அல்லது ஈசாக்கின்மேல் வைக்கும் அன்பா?" தான் கடவுள்மேல் வைத்துள்ள அன்பே என்று கடவுளைக் கட்டிக்கொள்கின்றார் ஆபிரகாம். அவர் எடுக்கும் அந்த முடிவே அவரின் தொடர் செயலாக மாறுகின்றது. குழந்தைகளை எரிபலியாகக் கொடுக்கும் சமய வழக்கம் கீழைத்தேய மற்றும் மெசபதோமிய நாடுகளில் நிலவியுள்ளது என்பதற்கு தொல்லியல் சான்றுகள் நிறைய உள்ளன. ஆக, இந்த நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆபிரகாம் மலைக்கு தன் மகனை அழைத்துச் செல்கின்றார். தன் மகனையே விறகுகளைச் சுமக்க வைக்கின்றார். கட்டைகளின் மேல் கிடத்துகின்றார். வெட்டுவதற்கு கையை நீட்டி கத்தியை எடுக்கின்றார். "எரிபலியாகத்தானே கேட்டார் கடவுள். அப்புறம் ஏன் ஆபிரகாம் வாளை எடுத்து வெட்டினார்?" என்ற கேள்வி உங்களுக்கும், எனக்கும் எழலாம். வெட்டியபின்தான் பலியை எரிப்பது என்பது எரிபலியின் ஒரு கூறு (காண். 1 அரசர்கள் 18:33, 38). கையை உயர்த்தும்போதுதான் அந்த அதிசயம் நடக்கிறது: "பையன்மேல் கையை வைக்காதே. அவனுக்கு எதுவும் செய்யாதே. உன் ஒரே மகனையும் நீ பலியிட தயங்கவில்லை என்பதிலிருந்து கடவுளுக்கு நீ அஞ்சுபவன் என இப்போது நான் அறிந்துகொண்டேன்" என்று கடவுள் பலியைத் தடுக்கின்றார். அதிசயம் இதுவல்ல. இதற்குப் பின் வருவதுதான்: "ஆபிரகாம் கண்களை உயர்த்திப் பார்த்தார். முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் காண்கின்றார். தன் மகனுக்குப் பதிலாக அதை பலியிடுகின்றார்."

கொம்பு மாட்டிக்கொண்டு கிடந்த இந்த ஆடு - இதை ஆபிரகாம் கண்டுகொள்வதுதான் கடவுள் அனுபவம். "கண்களை உயர்த்திப்பார்க்கும் ஆபிரகாம்" அதைக் கண்டுகொள்கின்றார். அப்படி என்றால் இவ்வளவு நேரம் இவர் அதைப் பார்க்கவில்லையா? இல்லை.

கொம்பு மாட்டிக்கொண்டு கிடக்கும் ஆடு கத்திக்கொண்டே இருக்கும். மலையின்மேல் ஆபிரகாம் மற்றும் ஈசாக்கைத் தவிர வேறு யாருமில்லை. அங்கு நிலவிய மௌனத்தில் கண்டிப்பாக ஆபிரகாமின் காதில் ஆட்டுக்குட்டியின் கதறல் குரல் விழுந்திருக்கும். ஆனால், அந்தக் குரல் அவருடைய சோகத்தை ஊடுருவ முடியவில்லை. நாமும் ரொம்ப சோகமாக அமர்ந்திருக்கும்போது அருகில் கிடக்கும் செல்ஃபோன் அழைப்பு சத்தம்கூட நம் காதுகளில் விழுவதில்லை. இல்லையா?

ஆபிரகாமின் சோகம் கடவுளின் வார்த்தையைக் கேட்டவுடன் மறைகிறது. நம் வாழ்வில் இயல்பாக எழும் ஓர் உணர்வு சோகம். இந்த சோகம் நாம் எதையாவது இழந்தால் அல்லது இழந்துவிடுவோமோ என்ற பயந்தால் வந்து நம்மைத் தொற்றிக்கொள்கிறது. தன் மகன் தன்னைவிட்டுப் பிரியப்போகிற சோகத்தில் குனிந்துகொண்டே நடந்த ஆபிரகாமின் கண்களுக்கு ஆடு தெரியவில்லை. சோகம் மறைந்தவுடன் மலையில் இருக்கும் அனைத்தும் தெரிகிறது. ஆக, ஆபிரகாம் மலையின் இந்தப் பக்கத்தில் தன் மகனை ஏற்றிக்கொண்டு வரும்போது, கடவுள் மலைக்கு அந்தப் பக்கத்தில் ஓர் ஆட்டை ஏற்றிக்கொண்டுவருகின்றார். இதுதான் வாழ்வின் ஆன்மீகம். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் பாருங்களேன். நாம் பாதியைத்தான் செய்கிறோம். மற்ற பாதியை கடவுள் செய்கிறார்.

நான் அரிசி வாங்க கடைக்குச் செல்கிறேன். கடவுள் யார் வழியாகவோ அந்த அரிசியை விளையச் செய்து அங்கே கொண்டுவந்திருக்கின்றார்.

நான் பேருந்தில் ஏறச் செல்கிறேன். கடவுள் யார் வழியாகவோ அந்தப் பேருந்தை இயக்கி அந்த இடத்திற்குக் கொண்டுவருகின்றார்.

நான் தேவை என்று தேடுகிறேன். "இதுவா என்று பார்!" என்று கடவுள் யார் வழியாகவோ என் தேவையை நிறைவு செய்கின்றார்.

ஆனால், நான் அரிசி வாங்க வேண்டும், பேருந்தில் ஏற வேண்டும், தேவை நிறைய இருக்கிறது என்று மலையின் இந்தப் பக்கத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கின்றேன். ஆனால், மலைக்கு அந்தப் பக்கம் நடக்கும் நிகழ்வுகளைக் கண்களை உயர்த்திப்பார்க்க மறந்துவிடுகின்றேன்.

ஆக, கடவுள் அனுபவம் என்பது கண்களை உயர்த்திப் பார்த்து கொம்பு மாட்டியிருக்கும் ஆட்டை அடையாளம் கண்டுகொள்வது.

கடவுள் அனுபவம் பெற்ற ஆபிரகாம் உடனடியாக அந்த ஆட்டைப் பலியிடுகின்றார்.

இதுதான் கடவுள் அனுபவத்தின் இரண்டாம் நிலை.

"மகனும் கிடைத்தான். வந்ததற்கு ஒரு ஆடும் கிடைத்தது" என்று ஆபிரகாம் ஆட்டையும், மகனையும் கூட்டிக்கொண்டு கீழே இறங்கவில்லை. வாழ்வின் அடுத்த முடிவை எடுக்கின்றார். "ஆடா?" "மகனா?" என்று கேட்டு, மேலானதைப் பெற கீழானதை இழக்க வேண்டும் என்று தான் கண்ட ஆட்டைப் பலியிடத் துணிகின்றார் ஆபிரகாம்.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் கடவுள் அனுபவம் என்பது "கண்களை உயர்த்திப் பார்ப்பதிலும்," "தான் கண்ட முக்கியமில்லாத ஒன்றை, தான் கருதும் முக்கியமான ஒன்றிற்காக தியாகம் செய்வதும்" ஆகும்.

2. "அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள்"

உருமாற்ற நிகழ்வில் வரும் சீடர்கள் என்னுள் எப்போதும் ஒரு பாவ அல்லது பரிதாப உணர்வையே தூண்டுகின்றனர். திடீர்னு உங்களையும் எங்களையும் ஒருத்தரு மலைக்குக் கூட்டிப்போய் திடீரென அவர் ஒரு பெரிய அமெரிக்க அதிபர் போல மாறி, அவருக்கு அருகில் பழைய அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர்கள் நின்றிருந்தால் எப்படி இருக்கும்?

"யார்ரா இவரு?" "இவரா அமெரிக்க அதிபர்?" "அமெரிக்க அதிபரை நாம ஏன் பார்க்கணும்?" இப்படி நிறைய கேள்விகள் நம்முள் எழும்.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வை ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் பதிவு செய்ய, இதை நேரில் கண்ட யோவான் பதிவு செய்யாமல் விடுவது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

இயேசுவின் உருமாற்றம் மூன்று அடையாளங்களில் நடந்தேறுகிறது: (அ) யாரும் வெளுக்க முடியாத வெள்ளை வெளேரென ஒளி வீசும் ஆடைகள், (ஆ) எலியா மற்றும் மோசேயின் உரையாடல், (இ) மேகத்தினின்று குரல். இந்த மூன்றும் இயேசுவின் உருமாற்றத்தை அல்லது வெளிப்பாட்டை அடையாளப்படுத்துகின்றன. இந்த அடையாளங்களை சீடர்கள்தாம் விரைவில் புரிந்துகொள்ள வேண்டும். "ஒளி வீசும் ஆடை" சீயோன் மலையை நிரப்பும் யாவே இறைவனின் பிரசன்னம் என்றும், எலியா மற்றும் மோசே அனைத்து இறைவாக்கு மற்றும் சட்டங்களின் திலகம் என்றும், அவற்றை நிறைவு செய்ய வந்திருப்பவர் இயேசு என்றும், தந்தையின் குரல் இயேசுவின் அப்பா அனுபவத்தின் முன்னோடி என்றும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அவர்களின் புரிதல்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன: (அ) சீமோன் பேதுரு முந்திக்கொண்டு, "நாம் இங்கேயே இருப்பது நல்லது" என்கிறார். (ஆ) "இறந்து உயிர்த்தெழுதல்" என்றால் என்ன? என்று பேசிக்கொள்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில் சீடர்களின் கடவுள் அனுபவம் வெளிச்சத்திலும், புதிய நபர்களின் வருகையிலும், தந்தையின் குரலிலும் இல்லை. பின் எதில் இருக்கிறது?

"அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தபோது தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை"

இதுதான் அவர்களுக்குக் கிடைத்த கடவுளின் வெளிப்பாடு.

வெளிச்சமும், புது நபர்களும், தந்தையும் மறைத்து இயேசு தனியாக நிற்பவராக வெளிப்படுத்தப்படுகின்றார். ஆபிரகாம் எப்படி கொம்பு மாட்டிக்கொண்டிருந்த ஆட்டைக் கண்டாரோ அப்படியே அவர்கள் இயேசுவையும் கண்டுகொள்கின்றனர். அவர்கள் கண்முன் இருந்தவை மறைந்துபோகின்றன. மற்றவைகள் மறைந்துபோன பின் தோன்றும் "ப்ளைன்" இயேசுதான் அவர்களின் அனுபவம்.

இங்கே சீடர்களின் எண்ணம், ஏக்கம் அனைத்தும் ஒன்றாக இருக்கிறது: "இயேசுவோடு நாம் தங்க வேண்டும். அல்லது இயேசு நம்மோடு தங்க வேண்டும்." "இங்கே கூடாரம் அமைப்போம்" என்று பேதுரு சொல்லும்போது தான் பெற்ற கடவுள் அனுபவத்தை அவர் அப்படியே உறைபனியாக்க நினைக்கின்றார். ஆனால், இயேசு அவரின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.

"இங்கேயே இருப்பது நல்லது. மூன்று கூடாரங்கள் அமைப்போம்" என்று சொன்னவர்தான் மூன்றுமுறை இயேசுவை மறுதலிக்கின்றார். சில நேரங்களில் கடவுள் அனுபவத்தை நாம் அதிகமான வெளிச்சத்திலும், அந்த வெளிச்சம் நடத்தும் அற்புதங்களிலும் காண நினைக்கின்றோம். ஆனால் இது எல்லாவற்றையும் விட தனிமையில்தான் இறைவன் தெரிகின்றார். முதல் வாசகத்தில் சோகத்தில் தன் கடவுள் அனுபவத்தை இழந்த ஆபிரகாம் போல, நற்செய்தி வாசகத்தில் தனிமையில் இறைவனனின் அனுபவம் பெறுகின்றனர்.

இந்த இரண்டும் நமக்கு உந்துசக்தியும், ஊக்கமும் தருகின்றன. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் அடிகளாரும், "கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக யார் வாதாட முடியும்?" என்று கேட்கின்றார்.

இவ்வாறாக, கடவுள் அனுபவம் நம்மை அவரோடு மட்டுமல்லாமல் ஒருவர் மற்றவரோடும் ஒன்றிணைக்கச் செய்கிறது.

இன்று நாம் நம் கடவுளை எப்படி தேடுவோம்?

அ. ஆபிரகாம் போல கண்கள் உயர்த்தி

ஆ. சீடர்கள்போல சுற்றுமுற்றும்

"மேலே உயர்த்துவதும்," "சுற்றுமுற்றும் பார்ப்பதும்" சிலுவையின் இரண்டு மரத்தண்டுகள் போல இருக்கின்றன. மேல் நோக்கி இருக்கும் மரத்துண்டு நாம் அவரை நோக்கி உயர்த்துவதையும் (இறையன்பு), சுற்றுமற்றும் பார்ப்பது ஒருவர் மற்றவரை நோக்கி கரம் நீட்டுவதையும் (பிறரன்பு) குறைக்கிறது.

மேலே பார்க்க நமக்குத் தடையாக இருப்பது சோகம்.

சுற்றுமுற்றும் பார்க்க நமக்குத் தடையாக இருப்பது அச்சம் மற்றும் அவசரத்தனம்.

இவ்விரண்டும் களைதலே தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தின் நம் செயல்களாக இருக்கட்டும்!

இயேசுவின் உருமாற்றம் நிகழ்ந்த அதே நிகழ்வில் சீடர்கள் உளமாற்றம் அடைகின்றனர். ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும் நிகழ்வில் அவர் தன்னையே கடவுளுக்கு உகந்த பலிப்பொருளாக மாற்றுகின்றார். ஆக, கடவுள் அனுபவம் நாம் பெறும் உளமாற்றத்திலும், நாம் பலிப்பொருளாக மாறுவதிலும் இன்னும் சிறப்படைகிறது.

இயேசுவின் ஆடை கறுப்பாக மாறினாலும், சிவப்பாக மாறினாலும், அல்லது மோசேக்குப் பதிலாக யோசுவாவும், எலியாவுக்குப் பதிலாக எலிசாவும் வந்தாலும், கடவுளின் குரல் ஆண்பிள்ளைக் குரலாகவோ, பெண்பிள்ளைக் குரலாகவோ மாறினாலும் இயேசுவின் உருமாற்றம் நிகழும்.

இயேசுவின் உருமாற்றம் இயேசுவுக்கு அல்ல. மாறாக, சீடர்களுக்கு.

ஆபிரகாமின் பலி கடவுளுக்கு அல்ல. மாறாக, ஆபிரகாமுக்கு.

நம் உருவத்தை மாற்றிக்கொள்வதில் காட்டும் அக்கறையை நம் உள்ளத்தை நோக்கி சற்றே திருப்புவோம். அங்கே ஓர் ஆடு கொம்பு மாட்டி நிற்கும். அங்கே ஒரு இயேசு தனியே நின்றுகொண்டிருப்பார்.

___

Fr. Yesu Karunanidhi
Archdiocese of Madurai
+91 948 948 21 21
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!