Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      23  பெப்ரவரி 2018  
                                                     தவக்காலம் 1ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்?

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் (18: 21-28)

ஆண்டவர் கூறுவது: தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார்.

அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்பட மாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர். உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத்தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானது எதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும் செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர்.

ஆயினும், "தலைவரின் வழி செம்மையானதாக இல்லை" என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகள் அன்றோ நேர்மையற்றவை! நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் தம் உயிரை அவர்கள் காத்துக்கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா 130: 1-2. 3-4. 5-6யஉ. 7-8 (பல்லவி: 3)
=================================================================================
பல்லவி: நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;
2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.
-பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?
4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.
-பல்லவி

5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
6யஉ விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
-பல்லவி

7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!
-பல்லவி.


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(எசே 18: 31)

அல்லேலூயா, அல்லேலூயா! எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும் புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்.அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 நீங்கள் போய் முதலில் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (5: 20-26)

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்:

"கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ "முட்டாளே" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; "அறிவிலியே" என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச்செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசு, "மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியை விட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையnனில், நீங்கள் விண்ணரசில் புக முடியாது 
என உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றார்" (மத்தேயு 5:20)

-- இயேசுவின் மலைப்பொழிவு பல போதனைகளை உள்ளடக்கியது. குறிப்பாக, இயேசு தம் சீடர்களுக்கும் மக்களுக்கும் ஒரு "புதிய வாழ்க்கை முறை"யை அறிவிக்கின்றார். அதாவது பழைய நெறிக்குப் பதிலாக ஒரு புதிய நெறி நமக்கு வழங்கப்படுகிறது. முற்காலத்தில் கடவுளின் கட்டளைகளுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கத்தை இயேசு ஏற்றாலும் அந்த விளக்கத்தை விடவும் அதிக வேரோட்டமான விதத்தில் அவர் திருச்சட்டத்திற்கு விளக்கம் தருகின்றார். இது குறிப்பாக, "கொலை", "விபசாரம்", "மண முறிவு", "பொய்யாணை". "பழிக்குப் பழி", "பிறர் மட்டில் அன்பு" ஆகிய ஆறு பொருள்கள் பற்றிய கட்டளைகளுக்கு இயேசு தருகின்ற புதிய விளக்கத்தை உள்ளடக்கும். கொலை என்பது பிற மனிதரோடு நமக்குள்ள உறவு முற்றிலும் முறிந்துவிட்ட நிலையில் நிகழ்கின்ற குற்றம். கடவுள் மோசே வழியாக வழங்கிய சட்டம் "கொலை செய்யாதே" என்று கூறுகிறது (காண்க: விப 20:13; இச 5:18). ஆனால் பிறர்மட்டில் சினம் கொள்வதே தவறு என இயேசு போதிக்கிறார். கோபம் எழுகின்ற வேளைகளில் நல்லுறவை மீண்டும் ஏற்படுத்த நாம் முயல வேண்டும். இதை இயேசு மூன்று எடுத்துக்காட்டுகள் வழியாக விளக்குகின்றார். பிறரை நாம் "அறிவிலியே" என அழைப்பது தவறு; கடவுளுக்குக் காணிக்கை செலுத்திவிட்டால் முறிந்த உறவு சரியாகிவிடும் என்று எண்ணாமல், முறிந்த உறவை முதலில் சரிப்படுத்திவிட்டு, அதன் பின் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதே முறை; நீதி மன்றம் செல்கின்ற அளவுக்கு நாம் உறவுகளை முறித்துவிடலாகாது. இந்த மூன்று எடுத்துக்காட்டுகள் வழியாக நாம் உண்மையான அன்பைக் கடைப்பிடிக்கின்ற முறையை இயேசு விளக்குகிறார்.

-- எனவே, "கொலை செய்யாதே" என்னும் கட்டளையின் பொருள் பிறருடைய உயிரைப் பறிப்பது தவறு என்பதை மட்டும் குறிப்பதன்று. மாறாக, பிறரோடு நாம் கொள்ள வேண்டிய நல்லுறவுக்குத் தீங்கு விளைவிக்கின்ற சொல், செயல் அனைத்தையும் நாம் விலக்க வேண்டம். இவ்வாறு செய்தால் "நம் நெறி மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியை விடச் சிறந்ததாய் இருக்கும்" (காண்க: மத் 5:20). அப்போது நாம் கடவுளின் ஆட்சியில் பங்கேற்கத் தகுதி பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
கோபம் நமக்கு நாமே வருவித்துக்கொள்ளும் சாபம்

ஜென் கதை ஒன்று

நோபுஷிகே என்ற படைவீரன் ஒருவன் ஒருநாள் ஒரு குருவைச் சந்தித்து, "சொர்க்கம், நரகம் அப்படியென்றால் என்ன? என்றான். அதற்கு குரு, "நீ யார்?" என்றார். அதற்கு அவன், "சாமுராய்" என்றான். உடனே குரு, "உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் போல் இருக்கிறது, நீ சாமுராயா? என்று கேலி செய்தார். அவனுக்கு சரியான கோவம், தன்னுடைய இடையில் இருந்த வாளை எடுத்து குருவை வெட்ட ஓங்கினான். அதைப் பார்த்த குரு, "இப்போது நரகத்தின் வாயில்கள் திறக்கின்றன" என்றார். வந்தவன் தன்னுடைய தவற்றை உணர்ந்து குருவின் காலில் விழுந்தான். இதை பார்த்த குரு அவனிடம், "இப்போது சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கின்றன" என்றார். படைவீரன் மன ஒளி பெற்று வீடு திரும்பினான்.

நமது கோபம் நம்மை நரகத்திற்கு இட்டுச் செல்லும் சக்தி கொண்டது என்பதை மேலே சொன்ன கதை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "சினம் கொள்ளாதே, சினம் கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவர்" என்கிறார். நம்மால் கோபம் கொள்ளாமல் இருக்க முடியுமா?. இயேசு கிறிஸ்து கூட சினம் கொண்டாரே? பின் எப்படி நம்மால் சினம் கொள்ளாமல் இருப்பது என்று கேட்கலாம். இயேசுவின் சினம் அறச் சினம். அவர் தீமையைக் கண்டு கோபம் கொண்டார். ஆனால் நமது சினம் எப்படிப் பட்டதாக இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் நமது கோபம் இயலாமையினாலே வருவதாக இருக்கின்றது. அது நம்மைத் தீமையில் ஆழ்த்திவிடும்.

சினம் நம்மை அழித்துவிடும் என்பதை தேனீக்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். தேனீக்கள் பிறரைக் கொட்டிய உடன் இறந்து விடும். அதே போலத்தான் நமது சினம் நமக்கு அழிவைத் தரும். நாம் ஒவ்வொரு முறையும் சினம் கொள்ளும்போது ஒரு சிறிய மரணம் நிகழ்வதாகச் சொல்வார்கள். எனவே நாம் சினத்தை விட்டுவிடுவோம். சினத்தை விட, நாம் சினம் கொள்ளும் நபர் செய்த நம்மைகளை நினைத்துப் பார்த்தாலே போதும். நமது சினம் காணாமலே போய்விடும்.

எனவே நாம் சினத்தைத் தவிர்ப்போம். அன்பு செய்யக் கற்றுக்கொள்வோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!