|
16 பெப்ரவரி 2018 |
|
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ
நாம் விரும்பும் நோன்பு!
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்
58: 1-9a
இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: பேரொலி எழுப்பிக் கூப்பிடு,
நிறுத்திவிடாதே; எக்காளம் முழங்குவதுபோல் உன் குரலை உயர்த்து;
என் மக்களுக்கு அவர்களின் வன்செயல்களையும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு
அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு.
அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும் மக்களினம்போலும், தங்கள்
கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போர் போலும் நாள்தோறும் என்னைத்
தேடுகின்றார்கள்; என் நெறிமுறைகள் பற்றிய அறிவை நாடுகின்றார்கள்;
நேர்மையான நீதித்தீர்ப்புகளை என்னிடம் வேண்டுகின்றார்கள்; கடவுளை
அணுகிவர விழைகின்றார்கள்.
நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்?
நாங்கள் எங்களைத் தாழ்த்திக்கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது
ஏன்? என்கின்றார்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள்
ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்; உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள்.
இதோ, வழக்காடவும், வீண் சண்டையிடவும், கொடும் கையால் தாக்கவுமே
நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்! இன்றுபோல் நீங்கள் உண்ணா
நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது. ஒருவன்
தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணா நோன்பின் நாளாகத்
தெரிந்துகொள்வது? ஒருவன் நாணலைப்போல் தன் தலையைத் தாழ்த்திச்
சாக்கு உடையையும் சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற
நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள்
என்றும் அழைக்கின்றீர்கள்?
கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும்
ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும்
உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு
உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள்
இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு
உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும்
அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல்
எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை
உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று
காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்;
நீ கூக்குரல் இடுவாய்; அவர் `இதோ! நான்' என மறுமொழி தருவார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 51: 1-2. 3-4a. 16-17 (பல்லவி: 17b)
=================================================================================
பல்லவி: நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை.
1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற
இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என்
தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம்
அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி
3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும்
என் மனக்கண்முன் நிற்கின்றது.
4a உமக்கு எதிராக நான் பாவம்
செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். பல்லவி
16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி
செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற
பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றம் உணர்ந்த
உளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
ஆமோ 5: 14
நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின்
கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது
அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15
அக்காலத்தில் யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, "நாங்களும் பரிசேயரும்
அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?''
என்றனர்.
அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை
மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை
விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு
இருப்பார்கள்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
நோன்பு இருப்பது என்பது இன்றைக்கு ஒரு கலாச்சாரமாக மாறி வருகின்றது.
மருத்துவர்கள் சொல்லி பலவற்றை தவிர்ப்பது உண்டு.
தன்னை அழகுபடுத்;திக் கொள்ள, ஜவுளிக்கடை கண்காட்சி பொம்மையைப்
போல தங்களை மாற்றிக் கொள்ள இன்று பல பேர் நோன்பிருப்பது உண்டு.
போராட்டங்கள், சலுகை, சம்பள உயர்வு என பல காரணங்களுக்காக உண்ணநோன்பிருப்பது
உண்டு.
இதிலே மதரீதியாக கூட இன்றைக்கு காவியுடை உடுத்தி, விரதமிருந்து,
நடை நடைந்து திருத்தலங்களுக்கு செல்லுவது என்பது நடைமுறையாகி
வரும் போது, விரும்பியதை பெற்றுக் கொள்ள நேர்ச்சை என்ற பெயரில்
கூட நோன்பிருந்து வருவது வழக்கமாகி உள்ள காலத்தில் இந்த
நோன்பின் காலம் அர்த்தம் இழந்து போகின்றதோ என கேட்க தோன்றுகின்றது.
பாடுகளின் காலத்தில் நோன்பிருப்பது என்பது நம்முடைய பாவங்களை
எண்ணி நம்மை அடக்கியாளவும், பாவத்திற்கு பரிகாரம் செய்து கொள்வதற்கும்,
இதனால் வரும் பொருளாதாரத்தை மற்றவர்களோடு பரிமாறிக் கொள்வதற்கும்
என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
இறைவன் விரும்பும் நோன்பு!
ஆப்ரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டு
ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக செத்துக்கொண்டிருந்த தருணம்.
எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவைச்
சார்ந்த இசிஸ் ஜான்சன் (Isis Johnson) என்ற சிறுமி தன்னுடைய
தாயிடத்தில், "அம்மா! பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற இம்மக்களுக்கு
நமது வீட்டில் தேவைக்கு மிகுதியாக இருக்கின்ற உணவினை அனுப்பி
வைத்து உதவலாமே" என்றாள். அதற்கு அவளுடையே தாய், "பஞ்சத்தால்
பாதிக்கப்பட்டிருக்கின்ற அம்மக்களுக்கு நம்முடைய வீட்டில்
தேவைக்கு மிகுதியாக இருக்கின்ற உணவினைக் கொடுத்து உதவலாம்தான்,
ஆனால், அந்நாட்டு மக்கள் எங்கேயோ இருக்கின்றார்கள். அவ்வளவு தூரத்தில்
இருக்கின்ற மக்களுக்கு நமது வீட்டில் இருக்கின்ற உணவினை அனுப்பி
வைத்தால் அது போகிற வழியிலே கெட்டுப் போய்விடுமல்லவா?" என்றார்.
இசிஸ் ஜான்சன் என்ற அந்தச் சிறுமி விடவில்லை. "எங்கோ இருக்கின்ற
மக்களுக்கு உணவை அனுப்பி வைத்தால்தான் கெட்டுப்போகும். நம்முடைய
பகுதியில் ஏராளமான மக்கள் உணவின்றிப் பட்டினி கிடப்பார்கள் அல்லவா?
அவர்களுக்கு நாம் ஏன் உணவு கொடுத்து உதவக்கூடாது?" என்றாள். "ஓ
தாராளமாக அவர்களுக்கு உதவலாமே" என்றார் அவருடைய தாய். மறுகணமே
இசிஸ் தன்னுடைய வீட்டில் மிகுதியாக இருந்த உணவினை எடுத்து அக்கம்
பக்கத்திலிருந்த ஏழைகளுக்கு உண்ணக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல்,
உதவக்கூடிய நல்ல மனதோடு இருந்த மக்களைச் சந்தித்து அவர்களிடம்
மிகுதியாக இருந்த உணவினை வாங்கி ஏழை எளிய மக்களுக்குக்
கொடுத்து, அவர்களுடைய பசியைப் போக்கி வந்தார். பின்னாளில் ஏழை
எளிய மக்களுக்கு உணவும் போதிய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி
செய்யும் வகையில் தன்னுடைய பெயரில் இசிஸ் ஜான்சன் அறக்கட்டளையை
(Isis Johnson Foundation) நிறுவி, அதன்மூலம் அம்க்களுக்கு இன்றும்
உதவிகளைச் செய்து வருகின்றார்.
இசிஸ் ஜான்சன் வயதில் சிறியவராக இருந்தாலும், உணவின்றி தவிக்கும்
மக்களுக்கு உதவவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு இன்றைக்கும் செயல்படுகின்றாரே,
அதுதான் நமது சிந்தனைக்கும் பாராட்டுக்கும் உரியதாக இருக்கின்றது.
"ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின்
நாளாகத் தேர்ந்துகொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத்
தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு
ஏற்ற நோன்பு? (அப்படியில்லை) கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின்
பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும்...
பசித்தோருக்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும் தங்க இடமில்லா
வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும் .... அன்றோ நான்
விரும்பும் நோன்பு" என்று இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய
கடவுள் கூறுவார். மேலே குறிப்பிடப்பட்ட இசிஸ் ஜான்சனின்
வாழ்க்கைக் குறிப்பை வாசித்துப் பார்க்கும்போது ஏழைகளுக்கு உணவும்
போதிய அடிப்படை வசதிகளையும் கொடுத்து வரும் அவர், இறைவன்
விரும்புகின்ற உண்மையான நோன்பினை மேற்கொண்டு வருகின்றார் என
நாம் தெளிவாகச் சொல்லலாம்.
யூதர்கள் சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்காருவதையும், தங்களை
ஒடுக்கிக் கொள்வதையும் நோன்பென நினைத்து வந்தார்கள். ஆனால், ஆண்டவராகிய
கடவுளோ வெளிப்புற அடையாளங்கள் அல்ல, ஒருவர் மற்றவருக்குச்
செய்யும் இரக்கச் செயல்களே உண்மையான நோன்பு என்று எடுத்துரைக்கின்றார்
நற்செய்தி வாசகத்தில் யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து,
"நாங்களும் பரிசேயர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன்
நோன்பிருப்பதில்லை?" என்று கேட்கின்றார்கள். இயேசு அவர்களிடம்,
"மணமகன் மணவீட்டாரோடு இருக்கும்போது அவர்கள் நோன்பிருக்க
முடியுமா? அவர் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்.
அப்போது அவர்கள் நோன்பிருப்பார்கள்" என்று தெளிவான பதிலைச்
சொல்கின்றார். யோவானின் சீடர்களும் பரிசேயர்களும் வாரம் இருமுறை
நோன்பிருந்து வந்தார்கள். இப்படி அவர்கள் மேற்கொண்ட நோன்பு,
பெரும்பாலும் மக்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டன.
ஆண்டவர் இயேசு இத்தகைய வெளிவேடத்தை கடுமையாக எதிர்த்து வந்தார்.
அதோடு இன்றைய நற்செய்தியில், எப்போது நோன்பிருக்கவேண்டும், எத்தகைய
மனநிலையோடு நோன்பிருக்கவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச்
சொல்கின்றார். ஆகவே, உண்மையான நோன்பு என்பது வெளி அடையாளங்களில்
அல்ல, ஒருவர் மற்றவருக்குச் செய்யும் இரக்கச் செயல்களிலேயே அடங்கி
இருக்கின்றது என்பதை இறைவார்த்தை நமக்குத் தெளிவாக எடுத்துச்
சொல்கின்றது.
எனவே, நோன்பின் அர்த்தத்தை உணர்ந்து, அதனை மேற்கொள்வோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
எது உண்மையான நோன்பு
பக்தன் ஒருவன் கடுந்தவம் (நோன்பு) புரிந்துவந்தான். ஒரு நாளில்
அவன் கடவுளிடத்தில் முறையிடத் தொடங்கினான்.
"கடவுளே! நான் என்னுடைய மதம் போதிக்கின்ற எல்லாக்
கோட்பாடுகளையும் தவறாமல் கடைப்பிடித்து வருகிறேன்; கடுந்தவம்
புரிந்து, நேரம் தவறாமல் ஜெபித்து வருகிறேன். அப்படி
இருக்கும்போது என்னை ஆசிர்வதிக்காமல் என்னுடயை பக்கத்து
வீட்டுக்காரனை ஆசிர்வதித்திருக்கிறீர்கள்?, இது உங்களுக்கே
நியாயமா?. அவன் ஒரு குடிகாரான், ஒழுங்கம் கெட்டவன். ஒருபோதும்
ஜெபிப்பதில்லை. அவனைப் போய் ஆசிர்வதித்திருகிறீர்களே?"
என்றான்.
உடனே கடவுள் அவனுக்கு முன்பாகத் தோன்றி, "அவனை நான்
ஆசிர்வதிப்பதற்குக் காரணம், அவன் உன்னைப் போன்று வளவளவென்று
பேசி என்னைப் போரடிக்கமாட்டான், அதனால்தான்" என்றார்.
ஜெபம் என்று சொன்னால் வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போகவேண்டும்
என்று நினைப்பவர்களுக்கு இக்கதை ஒரு சாட்டையடி.
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் கடவுளிடம், "நாங்கள்
உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்?,
நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக்
கவனியாதது ஏன்? என்று முறையிடுகிறார்கள். அதற்கு கடவுள், "
ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின்
நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத்
தாழ்த்திச் சாக்கு உடையையும், சாம்பலையையும் அணிந்து கொள்வதா
எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும்,
ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்?.
கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை
அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும்,
எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும்
நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும்,
தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும்,
உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும்,
உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ
நான் விரும்பும் நோன்பு!" என்கிறார்.
ஆக உண்மையான நோன்பு/ ஜெபம் என்பது வறியவர்களின் தேவைகளைப்
பூர்த்திசெய்து, அவர்களை மனித மாண்போடு நடத்துவதுதானே ஒழிய
ஜெபத்தை தவறாது சொல்லிக்கொண்டிருப்பது அல்ல.
நற்செய்தி வாசகத்தில்கூட நோன்பு பற்றிய கேள்வி எழுகிறபோது,
அதாவது யோவானின் சீடர்கள் இயேசுவிடம், "நாங்களும்,
பரிசேயர்களும் நோன்பு இருக்கிறபோது உம்முடைய சீடர்கள் மட்டும்
ஏன் நோன்பிருப்பதில்லை?" என்று கேட்கிறபோது இயேசு, "மணமகன்
மனவீட்டாரோடு இருக்கும்போது நோன்பிருக்க முடியுமா?, மணமகன்
மனவீட்டாரைப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்கள்
நோன்பிருப்பார்கள்" என்கிறார்.இங்கே இயேசு கிறிஸ்து
நோன்பிருக்க ஒரு காலம் உண்டு என்று சொல்லி அவர்களுக்கு பதிலடி
தருகிறார்.
பொதுவாக பெரியவர்கள் சொல்லக்கூடிய கருத்து, "மதத்தைப்
பின்பற்றுவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதில் மற்றவர்கள்
மூக்கை நுழைக்கக்கூடாது" என்று. யோவானின் சீடர்கள் தவறாது
நோன்பிருந்ததில் எந்தவிதத் தவறும் இல்லை. அதற்காக இயேசுவின்
சீடர்களும் நோன்பிருக்கவேண்டும் என்று வற்புறுத்தியதுதான்
மிகப்பெரிய தவறு.
ஆகவே இந்தத் தவக்காலத்தில் நோன்பு/ ஜெபம் என்பதை வெறுமனே
கடமைக்காகச் செய்யாமல் பொருள் உணர்ந்து செய்வோம். குறிப்பாக
வறியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம். அப்போது எசாயா
இறைவாக்கினர் சொல்வது போல "உன் ஒளி விடியல் போல் எழும்;
விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்;
உன் நேர்மை உனக்கு முன் செல்லும்;ஆண்டவரின் மாட்சி உனக்குப்
பின்சென்று காக்கும்".
Palayamkottai, Fr. Maria Antonyraj.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
|
|