|
15 பெப்ரவரி 2018 |
|
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன்
வைக்கிறேன்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20
மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும்,
சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்.
அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய
ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில்
நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி.
அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும்
நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.
ஆனால் உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து,
வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால், இன்று
நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்து
போவாய். நீ உரிமையாக்கிக்கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும்
பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது. உன்மேல் இன்று நான்
விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும்,
ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும்
வாழும்பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள்.
உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச்
செவிகொடு; அவரையே பற்றிக்கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே
உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும்
உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய
நாட்டில் நீ குடியேறுவாய்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா: 1: 1-2. 3. 4,6
=================================================================================
பல்லவி: ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.
1 நற்பேறு பெற்றவர்
யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி
3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில்
கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்;
தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி
4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச்
செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில்
கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 17
மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, என்கிறார்
ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும்
எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
தூயலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 9: 22-25
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி, "மானிடமகன் பலவாறு துன்பப்படவும்
மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித்
தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும்
வேண்டும்'' என்று சொன்னார்.
பின்பு அவர் அனைவரையும் நோக்கிக் கூறியது: "என்னைப் பின்பற்ற
விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும்
தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.
ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார்.
என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக்
காத்துக்கொள்வார்.
ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில்
அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
கிறிஸ்துவே உமக்கு புகழ்
சிந்தனை
உயிரை தந்தவர் அவரே.
அவரின் பொருட்டு, அவரின் இறையாட்சியின் பொருட்டும் உயிரை இழப்பவருக்கு
மீண்டும் கொடுப்பேன் என வாக்களிக்கின்றார்.
வாழ்வை இழக்கவும், வரையரை வேண்டும்.
நல்ல கொள்கைக்காக, நல்ல வாழ்வை இழக்க முற்படும் போது, அதனை
காத்துக் கொள்வோம் என்ற உத்திரவாதத்தையே தருகின்றார்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும்...
ஒரு ஜென் துறவியிடம் அந்நாட்டு மன்னர், "எனக்கு ஞானியாக ஆசை,
உபதேசம் செய்யுங்கள்" என்று வேண்டினார். அதற்கு அந்த ஜென் துறவி,
உனக்கு வைராக்கியம் வரவில்லை, அது வந்ததும் வா" என்று சொல்லி
அனுப்பி வைத்தார். உடனே அரசன் காட்டிற்குச் சென்று குடிசை ஒன்றை
அமைத்து, அங்கு தவம் செய்து வந்தான்.
சில நாட்கள் கழித்து அங்கு வந்த துறவி அவனிடம்,
"எல்லாவற்றையும் துறந்துவிட்டாயா?" என்று கேட்டார். அவர் இவ்வாறு
கேட்ட மறுகணமே அரசன் தான் தங்கியிருந்த ஆசிரமத்தையும் அங்கு தன்னோடு
பொருட்கள் அனைத்தையும் தீயில் இட்டுப் பொசுக்கினான். இதைப்
பார்த்த துறவி அவனிடம், "இவையெல்லாம் உன் உடைமைகள் அல்ல, இவை
அனைத்தும் இயற்கைக்குச் சொந்தமானவை" என்றார். "அப்படியா, என்
உடம்பைத் துறக்கிறேன்" என்று தீயில் விழப்போனான் அரசன்.
"உடம்பு பஞ்ச பூதங்களுக்குச் சொந்தம். அதுகூட உனக்குச் சொந்தமானது
அல்ல" என்றார் துறவி. "அப்படியானால் எதுதான் எனக்குச் சொந்தம்"
என்று சற்று எரிச்சலாகக் கேட்டான் அரசன். "உன் அகங்காரம்தான்
உனக்குச் சொந்தம். ஆதலால், துறக்கவேண்டியது அதுதான். அது இருப்பதால்தான்
உலகம் உன்னிடம் இருப்பதாக நினைக்கிறாய்" துறவி.
ஆம், தான் என்ற அகங்காரத்தைத் துறக்காத யாரும் துறவியாக மாறமுடியாது
என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துச் சொல்கிறது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தனது சாவை அறிக்கையிடுகின்றார்.
அவ்வாறு அவர் அறிக்கையிட்ட பின்பு, தன்னைப் பின்பற்றி வரக்கூடிய
சீடர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துச்
சொல்கின்றார். இயேசு தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்களுக்கு இருக்கவேண்டிய
தகுதிகளுள் முதன்மையாகச் சொல்வது
"தன்னலம் துறப்பது" ஆகும்.
எதற்காக இயேசு தன்னலத்தைத் துறக்கச் சொல்கிறார் என்று நாம்
சிந்தித்துப் பார்க்கும்போது, இயேசுவின் பணி எல்லா மக்களுக்கும்
சொந்தமானது, அது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ, குலத்திற்கோ சொந்தமானதல்ல,
அதனால்தான் அவர் தன்னலத்தைத் துறக்கவேண்டும் என்று
சொல்கின்றார்.
தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்களுக்கு இருக்கவேண்டிய இரண்டாவது
தகுதியாக இயேசு சொல்வது நாள்தோறும் சிலுவையைத் தூக்கிக்கொண்டு தன்னைப் பின்தொடர்வதாகும். சிலுவை என்பது அவமானத்தின் அடையாளம்.
அத்தகைய சிலுவையை, தன்னைப் பின்பற்றி நடக்கக்கூடியவர்கள் சுமக்கவேண்டும்
என்பதுதான் இயேசுவின் வேண்டுகோளாக இருக்கின்றது. சிலுவை என்பதை
இயேசுவைப் பின்பற்றி நடப்பதால் வருகின்ற இடர்பாடுகள், சவால்கள்,
அவமானங்கள், அச்சுத்தல்கள், இன்ன பிறவாகவும் சொல்லலாம். எனக்குத்
துன்பமே வேண்டாம், பிரச்சனைகளே வரக்கூடாது என நினைப்பவர்
யாரும் இயேசுவின் சீடராக மாறுவதற்கு தகுதியற்றவறாகிப்
போகிறார்.
இயேசுவின் சீடராக மாறுவதற்கான மூன்றாவது தகுதி, இயேசுவைப் பின்பற்றிச்
சொல்வதாகும். பின்பற்றுதல் என்பதை, இயேசுவின் வழியில் நடந்து
அவரைப் போன்று ஆகுதல் என்றும் புரிந்துகொள்ளலாம். தூய பவுல் கலாத்தியருக்கு
எழுதிய மடல் 2:20 ல் கூறுவது போல, "வாழ்வது நானல்ல, என்னில்
கிறிஸ்துவே வாழ்கின்றார்" என்ற நிலையை அடையவேண்டும். அப்போதுதான்
இயேசுவின் சீடர் நான் என்று சொல்லிக்கொள்வதில் முழு அர்த்தமிருக்கும்.
நிறைவாக இயேசுவைப் பின்பற்ற விரும்புவோர் தன்னுடைய உயிரை
இயேசுவுக்காகவும் அவருடைய நற்செய்தியின் விழுமியங்களுக்காக
தருவதற்கு முன்வரவேண்டும். அப்போதுதான் சீடத்துவத்தின்
முழுமையை அடையவேண்டும். நான் என்னுடைய உயிரை இயேசுவுக்காக
தரமாட்டேன் என்று சொல்பவர் யாரும் இயேசுவின் சீடராக இருக்க
தகுதியற்றவராக மாறிப்போய்விடுகின்றார். எத்தனையோ புனிதர்களும்
மறைசாட்சிகளும் ஆண்டவர் இயேசுவுக்காகத் தங்களுடைய இன்னுயிரைத்
தியாகம் செய்து தாங்கள் இயேசுவின் உண்மையான சீடர்கள்,
சீடத்திகள் என்று இந்த உலகிற்கு நிரூபித்துக் காட்டினார்கள்.
அவர்கள் இந்த மண்ணைவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், அவர்கள்
இன்றைக்கும் நினைவுகூரப் படுகின்றார்கள் என்பதுதான் இறைவன்
அவர்களுக்குத் தரும் வெகுமதியாக இருக்கின்றது. அதைத்தான்
நற்செய்தியில் இயேசு, "தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும்
எவரும் அதை இழந்து விடுவார். என் பொருட்டும் நற்செய்தியின்
உயிரை இழப்பவரோ, அதைக் காத்துக்கொள்வார் என்கிறார். ஒன்றை
இழக்காமல் இன்றொன்றைப் பெற முடியாது என்ற தத்துவத்தைதான் இயேசு
இப்படி அழகுபடச் சொல்கின்றார்.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் இறைத் திருவுளத்திற்கு
முக்கியத்துவம் கொடுப்போம், வாழ்வில் வரும் சிலுவைகளைத்
துணிவோடு தாங்கிக் கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
- Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
|
|