|
08 பெப்ரவரி 2018 |
|
ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என் உடன்படிக்கையை நீ மீறினதால், உன் அரசைக் கூறு
கூறாக்குவோம். தாவீதின் பொருட்டு ஒரு கோத்திரத்தை உன் மகனுக்கு
அளிப்போம்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 4-13
அந்நாள்களில் சாலமோன் முதுமை அடைந்தபோது, அவருடைய மனைவியர் அவர்
இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர்.
அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப்போல் கடவுளாகிய
ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை.
சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையும் அம்மோனியரின் அருவருப்பான
மில்கோமையும் வழிபடலானார். இவ்வாறு சாலமோன், ஆண்டவர்
பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை
முழுமையாகப் பின்பற்றியது போன்று அவர் செய்யவில்லை.
சாலமோன் எருசலேமுக்கு எதிரில் இருந்த மலையில் மோவாபியரின் அருவருப்பான
கெமோசுக்கும் அம்மோனியரின் அருவருப்பான மோலேக்குக்கும் தொழுகை
மேடுகளைக் கட்டினார்.
இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுவதற்காக,
வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லாருக்கும் சாலமோன் இவ்வாறு
செய்து கொடுத்தார். ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றார்.
ஏனெனில் தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச் சென்றது. வேற்றுத் தெய்வங்களைப்
பின்பற்ற வேண்டாம் என்று ஆண்டவர் அவருக்குக் கட்டளையிட்டிருந்தும்,
அக்கட்டளையை அவர் கடைப்பிடிக்கவில்லை.
ஆகையால் ஆண்டவர் சாலமோனை நோக்கி, நான் உன்னோடு செய்த உடன்படிக்கையையும்,
நான் உனக்கு விதித்த நியமங்களையும் மீறி, நீ இவ்வாறு நடந்துகொண்டதால்
உன் அரசை உன்னிடமிருந்து பறித்து அதை உன் பணியாளனுக்குக்
கொடுக்கப்போவது உறுதி.
ஆயினும் உன் தந்தை தாவீதின் பொருட்டு, உன் காலத்தில் நான் இதைச்
செய்யமாட்டேன். உன் மகன் கையினின்று அதைப் பறித்து விடுவேன்.
ஆயினும் அரசு முழுவதையும் பறித்துவிடாமல், என் அடியான்
தாவீதின் பொருட்டும் நான் தேர்ந்து கொண்ட எருசலேமின்
பொருட்டும் ஒரு குலத்தை உன் மகனிடம் விட்டுவைப்பேன் என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா: 106: 3-4. 35-36. 37, 40 (பல்லவி:
4a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உம் மக்கள்மீது இரக்கம் காட்டி என்னை
நினைவுகூரும்!
3 நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர்
பேறுபெற்றோர்! 4 ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம்
காட்டும்போது என்னை நினைவுகூரும்! அவர்களை நீர்
விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்! பல்லவி
35 வேற்றினத்தாரோடு கலந்து உறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர்;
36 அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக்
கண்ணிகளாயின. பல்லவி
37 அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர்;
40 எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கெதிராகப் பற்றியெரிந்தது;
தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யாக் 1: 21
அல்லேலூயா, அல்லேலூயா! உங்களிடம் மிகுந்துள்ள தீமையை அகற்றி,
உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை
நாய்க்குட்டிகள் தின்னுமே!
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
7: 24-30
அக்காலத்தில் இயேசு புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார்.
அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும்
தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.
உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து,
அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.
அவர் ஒரு கிரேக்கப் பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர்.
அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.
இயேசு அவரைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும்.
பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது
முறையல்ல'' என்றார்.
அதற்கு அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும்
நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத்
தின்னுமே'' என்று பதிலளித்தார்.
அப்பொழுது இயேசு அவரிடம், "நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்;
பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று'' என்றார்.
அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும்
பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
தாயின் நம்பிக்கை எப்படியென்பதை ஊருக்குச் சொல்ல, தன்னை கூட்டத்தில்
சேர்க்கவில்லை என்பதைக் கூட பொருட்படுத்தாது, அந்த தாய் அவர்
சொன்ன உதாரணத்தைக் கொண்டு மிக எளிமையாக அந்த நாய் மேசையில் இருந்து
விழும் சிறு துண்டுகளை எடுத்துக் கொள்ளுகிறதே என ரொம்ப எளிமையாக
தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்த முன்வந்த தாயை
போற்றுகிறார். கேட்டது கிடைக்கிறது.
நம்பிக்கை இன்றைக்கு நம்முடைய படிப்பு, அதிகாரம், பணம், கௌரவம்
இவற்றிக்கு ஏற்ப எளிய தன்மையை இழந்து போகின்றதோ என கேட்டு
பார்ப்பது நல்லது.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
விடாமுயற்சியுடன் கூடிய வேண்டுதல், வேந்தனின் அருளை நிச்சயம்
பெற்றுத்தரும்!
ஆற்றங்கரையோரமாய் அமர்ந்து போதித்துக்கொண்டிருந்த அந்தத் துறவியிடம்
இளைஞன் ஒருவன் வந்தான். அவன் அவரிடம், "அவ்வப்போது நீங்கள் படுதோல்விகளை
பரிதாபமாகச் சந்தித்தாலும், விடாமுயற்சியோடு உழைத்துக்கொண்டிருக்கின்றீர்களே,
அது எப்படி?" என்று கேட்டார்.
அதற்கு துறவி அவனிடம், "முயற்சி என்பது விதைபோல, அதைத் தொடர்ந்து
விதைத்துக்கொண்டே இருந்தால், ஒருநாள் வளர்ந்து பெரிய மரமாகும்.
அப்படி வளராவிட்டால், அது மண்ணுக்கு உரமாகும். இந்த உண்மையை
நான் உணர்ந்துகொண்டதால்தான் தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும்
விடாமுயற்சியோடு உழைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார். ஆம்.
விடாமுயற்சியோடு ஒரு செயலைச் செய்கின்றபோது, அதற்கான பலனை உடனடியாக
நாம் பெறாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் பலனைப் பெற்றே
தீருவோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சிரிய பெனிசிய இனத்தைச்
சார்ந்த ஒரு பெண்மணியின் மகளிடமிருந்து பேயை ஓட்டுகின்றார். இந்நிகழ்வு
இறைவனிடத்தில் நாம் விடாமுயற்சியோடு வேண்டுகின்றபோது, நம்
வேண்டுதல் நிச்சயம் கேட்கப்படும் என்னும் செய்தியை மிகத்
தெளிவாக நமக்கு எடுத்துரைக்கின்றது. அது எப்படி என்று இப்போது
சிந்தித்துப் பார்ப்போம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தீர் பகுதிக்குப்
போவதாக வாசிக்கின்றோம். தீர் பகுதியானது புறவினத்தார்
வாழ்கின்ற பகுதியாகும். இயேசு எதற்காக இங்கு செல்கின்றார் என்று
நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, அவர் சிறிது காலம் தனிமையில்
நாட்களைச் செலவு செய்யவேண்டும் என்பதற்காக செல்கின்றார் என்னும்
உண்மை தெரிய வருகின்றது. இப்படித் தனிமையில் நாட்களைச் செலவு
செய்யச் சென்ற இடத்தில் சிரிய பெனிசிய இனத்தைச் சார்ந்த பெண்மணி
ஒருத்தி, அவரிடம், தன் மகளிடமிருந்து பேயை ஓட்டவேண்டும் என்று
வேண்டுகோளை வைக்கின்றார்.
இயேசு அவரிடம், "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய
உணவை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்கிறார்.
இயேசுவின் இவ்வார்த்தைகளை முதன்முறையாகக் கேட்கின்றபோது நமக்கு
அதிர்ச்சியாக இருக்கலாம். அது எப்படி புறவினத்தாரை
நாய்க்குட்டி எனச் சொல்லலாம் என்று கேள்வி கேட்கலாம். விவிலிய
அறிஞர்கள் இதற்கு விளக்கம் கொடுக்கின்றபோது
"நாய்க்குட்டி" என்ற
வார்த்தையை அப்படியே எடுத்து சிந்தித்துக் கொண்டிருக்காமல், இயேசு
அதனை எந்தத் தொனியில் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்
என்று சொல்வார்கள். ஏனென்றால், சில நேரங்களில் நாம் நமக்கு
நெருக்கமானவர்களை "போடா பன்னி, எரும,
நாய்" என்றெல்லாம்
திட்டுவோம். இவ்வார்த்தைகள் அடிப்படையில் கடினமானதாக இருந்தாலும்
நாம் பயன்படுத்துகின்ற தொனியில் கடினத் தன்மை இராது, மாறாக அன்புதான்
இருக்கும். இயேசு புறவினத்தாரை நாய்க்குட்டி என்று சொல்வதை அப்படித்தான்
எடுத்துக்கொள்ளவேண்டும். அவருடைய தொனியில் கடினத் தன்மை இருந்திருக்காது
என்றுதான் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இன்னும் ஒருசிலர், இயேசு, "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து,
நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்று சொல்வதை அவர்
அந்தப் பெண்மணியின் நம்பிக்கையைச் சோதிப்பதற்காகவே அப்படிச்
சொல்லியிருக்கலாம் என்று விளக்கம் தருவார்கள். இது ஒருபுறம் இருந்தாலும்
"முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும்" என்னும் வார்த்தையை எடுத்துச்
சிந்தித்துப் பார்க்கும்போது, யூதர்களுக்குக் கடவுளின் ஆசிர்
கிடைத்ததற்கு அப்புறம் புறவினத்தாருக்கு நிச்சயம் கிடைக்கும்
என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
இயேசு இவ்வாறு சொன்னதைக் கேட்டு அந்தப் பெண்மணி மனம் உடைந்துபோகவில்லை,
மாறாக, "ஆம், ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள்
சிறுபிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைக் தின்னுமே" என்று
தாழ்ச்சியோடும் அதே நேரத்தில் மன உறுதியோடும் நம்பிக்கையோடும்
பதில் சொல்கின்றார். அந்தப் பெண்மணி சொல்கின்ற பதிலில் நிறைய
அர்த்தங்கள் இருக்கின்றன. முதலாவதாக அவர் இயேசுவை இறைமகன் என்ற
ஏற்றுக்கொள்கின்றார். "ஐயா" என்ற வார்த்தை அதைத்தான் நமக்கு எடுத்துரைகின்றது.
அடுத்ததாக, அவர் இயேசு தன்னை நாய்க்குட்டி என்று சொல்லிவிட்டதற்காக
மனம் தளர்ந்துபோய்விடவில்லை, மாறாக விடாமுயற்சியோடு தன்னுடைய
வேண்டுதலை அவரிடத்தில் எடுத்துரைக்கின்றார். இதனால் இறைவனிடமிருந்து
தன் மகளுக்கான ஆசிர்வாதத்தைப் பெறுகின்றார். இவ்வாறு அவர்
விடாமுயற்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
இறைவனிடத்தில் நாம் வேண்டுகின்றபோது எத்தகைய மனநிலையோடு நாம்
வேண்டுகிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஒருமுறையோ
அல்லது இருமுறையோ இறைவனிடத்தில் நாம் வேண்டிவிட்டு, அதற்கான பதில்
நமக்குக் கிடைக்காதபோது மனம் தளர்ந்து போகின்றோமா? அல்லது மனம்
தளர்ந்து போகாமல், விடாமுயற்சியோடு வேண்டுகின்றோமா? என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும். சிரிய பெனிசியப் பெண்மணி விடாமுயற்சியோடு
இருந்தார். அதனால் அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. நாமும் அப்படி
இருக்கும்போது இறைவனிடமிருந்து ஆசிர் பெறுவதற்கு உறுதி.
ஆகவே, விடாமுயற்சியோடு இறைவனிடம் வேண்டுவோம், அதன்வழியாக
இறையாசிர் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
|
|