|
02 பெப்ரவரி 2018 |
|
ஆண்டவரைக் கோவிலில்
காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழா
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்.
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4
கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன்.
அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள்
தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள்
ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்"
என்கிறார் படைகளின் ஆண்டவர்.
ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர்
தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின்
நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும்
இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர்
போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப்
பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார்.
அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள்.
அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல்
யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு
உகந்தனவாய் இருக்கும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா: 24: 7. 8. 9. 10 (பல்லவி: 10b)
=================================================================================
பல்லவி: படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்.
7 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே,
உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
பல்லவி
8 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர்
இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். பல்லவி
9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே,
உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
பல்லவி
10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே
மாட்சிமிகு மன்னர். பல்லவி
=================================================================================
இரண்டாம் வாசகம்
=================================================================================
எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆனார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18
சகோதரர் சகோதரிகளே, ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப் போல்
கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல்
ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார்.
வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டு இருந்தவர்களை
விடுவித்தார். ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை.
மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு.
ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக்
குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும்
தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டியதாயிற்று. இவ்வாறு தாமே
சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு
உதவி செய்ய அவர் வல்லவர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 2: 32
அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப்
பெருமை. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
2: 22-40
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது,
குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக்
கொண்டு சென்றார்கள். ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு
அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.
அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு
புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர்
நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட
ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.
"ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று
தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால்
அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.
திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச்
செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்த போது,
சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, "ஆண்டவரே,
உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச்
செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு
செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற
இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப்
பெருமை" என்றார்.
குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும்
வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய
மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின்
வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும்
அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள்
வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்"
என்றார்.
ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர்
ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள்
கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து
நான்கு.
அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும்
பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து
கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும்
அக்குழந்தையைப் பற்றிப் பேசினார்.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த
பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத்
திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால்
நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
அல்லது
குறுகிய வாசகம்
உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-32
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது,
குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக்
கொண்டு சென்றார்கள். ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு
அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.
அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு
புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர்
நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட
ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.
"ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று
தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால்
அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச்
செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப்
பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்த போது, சிமியோன் குழந்தையைக்
கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, "ஆண்டவரே, உமது சொற்படி உம்
அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில்
மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப்
பெருமை" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருப்பாடல் 24: 7, 8, 9, 10
"படைகளின் ஆண்டவர் இவர்"
படைகளின் ஆண்டவர் என்கிற வார்த்தை, பழைய ஏற்பாட்டு நூலில் ஏறக்குறைய
261 முறை வருகிறது. 1சாமுவேல் 1: 3 ல், முதன்முறையாக இந்த
வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. விண்ணகத்தில் இருக்கிற படைகளுக்கு
தலைவராக ஆண்டவர் இருக்கிறார் என்பதுதான் இதனுடைய பொருளாகும்.
இஸ்ரயேல் மக்களின் படைகளுக்கும் கடவுள் தான் தலைவர் என்பதையும்
மறைமுகமாகக் குறிக்கக்கூடிய சொற்களாகவும் இவற்றைப் பார்க்கலாம்.
தாவீது அரசர், படைகளின் ஆண்டவர் என்று சொல்கிறபோது, இந்த விண்ணகத்திற்கு
மட்டுமல்லாது, மண்ணகத்திற்கும், இங்கிருக்கிற படைகளுக்கும் ஆண்டவர்
தான் தலைவராக இருக்கிற என்கிற பொருளில், இங்கே எழுதுகிறார். ஆக,
கடவுள் தான் அனைத்திற்கும் அதிபதி என்பதை, இந்த வார்த்தைகள்
நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
படைகளின் தலைவராக இருக்கிறவர் தன்னுடை சேனையை வழிநடத்தி, அடிமைத்தனத்திலிருந்து
விடுதலை கொடுக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்க வேண்டும். விண்ணகத்திற்கும்,
மண்ணகத்திற்கும் அதிபதியாக இருக்கக்கூடிய கடவுள் தன்னுடைய மகனை
இந்த உலகத்திற்கு அனுப்புகிறார். பாவத்திலிருந்து விடுதலை
பெற்றுக் கொடுப்பதற்காக தன் மகனை அனுப்புகிறார். ஏனென்றால், பாவத்திலிருந்து
தன்னைத்தானே விடுவித்துக் கொள்வதற்கான ஆற்றல், மனிதகுலத்திற்கு
இல்லை. எனவே தான், கடவுள் அந்த முயற்சியை எடுக்கிறார். அதனைத்தான்
சிமியோனின் வார்த்தைகளும், அன்னாவின் வார்த்தைகளும் நமக்கு எடுத்துரைக்கின்றன.
நம்மைப் பாதுகாப்பதற்காக கடவுள் தன்னுடைய ஒரே மகனையே பலியாகக்
கொடுத்திருக்கிறார். அந்த நிகழ்வை நாம் திருப்பலியில் ஒவ்வொருநாளும்
புதுப்பித்து, நம்மையே புனிதப்படுத்த அழைக்கப்படுகின்றோம். கடவுள்
நம்மை விடுதலை வாழ்விற்கு வழிநடத்துவார் என்கிற நம்பிக்கை உணர்வை,
நாம் நமது வாழ்வில் எப்போதும் கொண்டிருப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
---------------------------------------------------
ஆண்டவரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்
இந்த திருவிழாவின் தொடக்கத்தில் இது கன்னிமரியாவின் தூய்மைச்
சடங்கு விழா என்று அழைக்கப்பட்டது. குழந்தை பிறந்த பிறகு ஒரு
பெண் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்ததால், இவ்வாறு
அழைக்கப்பட்டது. இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த
நற்செய்தி பகுதியை அடிப்படையாகக் கொண்ட இவ்விழா, கிறிஸ்து பிறப்பு
விழாவிற்கு அடுத்த 40 நாட்களில் கொண்டாடப்பட்டது.
தொடக்கத்தில் இந்த திருவிழாவானது கி.பி400 ம் ஆண்டிலே, எருசலேமில்
கொண்டாடப்பட்டதாக நாம் அறிகிறோம். அதன்பிறகு, ஐந்தாம்
நூற்றாண்டில், இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக, மற்றொரு
வரலாறு கூறுகிறது. பின்பு ஒளி பவனியும் இத்தோடு இணைக்கப்பட்டது.
இது புறவினத்து மக்களின் பாவப் பரிகார சடங்கிற்கு பதிலாகச்
சேர்க்கப்பட்டு, கிறிஸ்தவர்கள் ஒளியேற்றப்பட்ட மெழுகுதிரிகளோடு
பவனியாக ஊரைச்சுற்றி வந்தார்கள். இது இயேசு வரும்போது உலகில்
உள்ள இருள் மறைந்துபோகிறது என்பதை உணர்த்துகிறது. இயேசு இதற்கு
புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறார். ஏனென்றால், இயேசு கோவிலில்
காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுகிறபோது, சிமியோன் இயேசுவை புறவினத்தார்க்கு
வெளிப்பாடு அருளும் ஒளி என்று கூறுகிறார்.
இந்த ஒளியின் திருவிழாவில் நமது கிறிஸ்தவ வாழ்வு, மற்ற மக்களுக்கு
ஒளியாக இருப்பதற்கு அழைப்புவிடுக்கிறது. வன்முறைகளாலும்,
வெறுப்பாலும் காயப்பட்டு கிடக்கிற மனிதகுலத்திற்கு, கிறிஸ்தவர்கள்
பொறுமையாலும், அன்பாலும், இரக்கத்தாலும் மற்றவர்களின்
வாழ்க்கையில் ஒளியேற்றி, இயேசுவுக்கு சாட்சியாக மாறுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------
உறுதியான விசுவாசம்
இன்றைய நற்செய்தியில் சிமியோன் மற்றும் அன்னாவைப்பற்றி
வாசிக்கிறோம். அன்னா ஒரு விதவைப்பெண் என்று சொல்லப்பட்டிருககிறது.
அதாவது அன்னாவின் வாழ்க்கை ஒரு துன்பமயமான வாழ்க்கை. கணவன் இல்லாத
கைம்பெண்படும்பாடு, இந்த சமுதாயத்தில் சொல்லி மாளாது.
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பம் இரண்டுவிதமான உணர்வுகளுக்கு
நம்மை அழைத்துச்செல்லும். 1. கடவுள் மட்டில் வெறுப்பு 2.
வாழ்க்கையைப்பற்றிய பக்குவம். அன்னா இதில் இரண்டாவது வகை. அவள்
கடவுள் மட்டில் நம்பிக்கை நிறைந்தவராக இருக்கிறார். வாழ்வில்
துன்பம் வந்தாலும், கடவுளின் அன்பு அவளுக்கு மிகப்பெரிய பலம்.
அன்னாவிற்கு 84 வயது ஆகிவிட்டது. அவள் வயதானாலும், அவளுடைய நம்பிக்கை
குறையவில்லை. நாம் கடவுளிடத்தில் ஏதாவது கேட்டு அதற்காகக்
காத்திருந்தால், நாளாக, நாளாக நமது நம்பிக்கை குறைய ஆரம்பித்துவிடும்.
ஆனால், அன்னாவின் விசுவாசம் எத்தனை ஆண்டுகளானாலும்
காத்திருக்கும் உறுதியான விசுவாசம். நம்பிக்கை சிறிதும் இழக்காத
விசுவாசம். அவளது நம்பிக்கை சிறிதும் தளர்ச்சி அடையவில்லை என்பதற்கு,
அவள் ஆலயத்தில் இருப்பது சிறந்த உதாரணம். இத்தனை ஆண்டுகளானாலும்,
ஆலயத்திற்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறாள். நம்பிக்கையோடு
காத்திருக்கிறாள்.
நமது விசுவாச வாழ்விற்கு அன்னாவின் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு.
வாழ்வில் துன்பம் வருகிறபோதும், நினைத்தது, கேட்டது நடக்காதபோதும்,
சோர்ந்து போகத்தேவையில்லை. உறுதியாக, அன்னாவின் விசுவாசத்தோடு
வாழ வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------
ஏழைகளாய் வாழ்வோம்
ஒரு யூதக்குடும்பத்தில் ஆண்குழந்தை பிறக்கின்றபோது, ஒருசில சடங்குகளை
நிறைவேற்ற வேண்டியிருந்தது. முதலில், குழந்தை பிறந்த எட்டாம்
நாள் அதற்கு விருத்தசேதன சடங்குகளை நிறைவேற்ற வேண்டும்(லேவியர்12:
3). இரண்டாவது, தலைப்பேறு ஆண்குழந்தைகள் அனைத்தும் ஆண்டவருக்குரியது.
விடுதலைப்பயணம் 13: 2 ல் பார்க்கிறோம்: "தலைப்பேறு அனைத்தையும்
எனக்கு அர்ப்பணம் செய்: இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும்
கருப்பையைத்திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை". இதற்கான
காரணம்: எகிப்தில் பார்வோன் மன்னனின் கடின உள்ளத்தின் பொருட்டு
அனைத்து ஆண் தலைப்பேறுகளும் இறந்துபோயினர். ஆனால், ஆண்டவர் இஸ்ரயேல்
மக்களின் ஆண் மகன்களைக் காப்பாற்றினார். எனவே, எல்லாத்தலைப்பேறுகளையும்
இறைவன் தனக்கெனத் தேர்ந்துகொண்டார். அவர்கள் கடவுளுக்கு உரியவர்களாயினர்.
அவர்களை மீட்பதற்கும் சடங்குகளை வகுத்திருந்தனர். எண்ணிக்கை
18: 15 - 16 "மனிதராயினும் விலங்காயினும் முதலில் கருப்பை திறக்கும்
அனைத்திலும் அவர்கள் ஆண்டவருக்குப்படைக்கின்ற ஒவ்வொன்றும் உன்னுடையது.
ஆயினும் மனிதரில் தலைப்பேறானவனை நீ மீட்டுக்கொள்வாய். அவற்றின்
மீட்புத்தொகை ஐந்து வெள்ளிக்காசுகள்"(ஒரு மாதக்கூலிக்கு சமம்).
மூன்றாவது, தூய்மைச்சடங்;கு. லேவியர் 12 ல் பார்க்கிறோம்: ஆண்
குழந்தையைப்பெற்றெடுத்த பெண்ணைத் தூய்மைப்படுத்துகின்ற சடங்கு
அங்கே தரப்பட்டுள்ளது. 40 நாட்களுக்குள்ளாக தூய தலத்திற்கு வரக்கூடாது.
தூய்மையடையும் காலக்கெடுவிற்குப்பின்னர் ஓராண்டு நிறைவுற்ற
செம்மறி ஆடு ஒன்றையோ, முடியாதவர்கள் இரண்டு காட்டுப்புறாக்களையோ
கொண்டு வந்து பலியாக செலுத்த வேண்டும்.
இங்கே நற்செய்தியில் காணப்படுகிற பகுதியில் இயேசுவுக்கு விருத்தசேதனம்
செய்தாகி விட்டது. மற்ற இரண்டு சடங்குகளையும் நிறைவேற்றுவதற்காக,
அதாவது, தலைப்பேறு ஆண் குழந்தையான இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணம்
செய்து மீட்கும் சடங்கையும், மரியாளுக்கு தூய்மைச்சடங்கை
நிறைவேற்றவும் அவர்கள் எருசலேம் ஆலயத்திற்கு வந்திருந்தார்கள்.
இயேசுவின் பெற்றோர் காணிக்கையாகக்கொடுத்தது இரு புறாக்கள் என்று
நற்செய்தி சொல்கிறது. அதாவது, ஏழைகளின் காணிக்கை இந்த புறாக்கள்.
கடவுள் தன்னை ஏழைகளோடும், எளியவர்களோடும் ஐக்கியப்படுத்திக்கொண்டார்
என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நிகழ்ச்சி.
ஏழைகள் என்பவர்கள் வெறுமனே பணமோ, பொருளோ இல்லாதவர்கள் என்ற அர்த்தமல்ல:
மாறாக, யாரெல்லாம் கடவுள் மீது தங்களின் முழுமையான நம்பிக்கையை
வைக்கிறார்களோ, அவர்கள் தான் விவிலியத்தில் ஏழைகள் என்று
குறிப்பிடப்டுகிறவர்கள். திருக்குடும்பம் கடவுள் மீது தங்களின்
முழுமையான நம்பிக்கையை வைத்திருந்தது. நாமும் இறைவன் மீது
முழுமையான நம்பிக்கை வைத்து ஏழைகளாய் வாழ்வோம். நிறைவான வாழ்வு
வாழ்வோம்.
- அருட்பணி. தாமஸ் ரோஜர்.
-------------------------------------------------------
நாம் ஆண்டவருக்கே உரியவர்கள் !
"மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது,
குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக்
கொண்டு சென்றார்கள்"; என்னும் இறைமொழியின் நிறைவே இன்றைய விழா.
ஒவ்வொரு ஆண் தலைக் குழந்தையும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட
வேண்டும் என்பது திருச்சட்டம். விடுதலைப் பயண நூலின் 13ஆம் அதிகாரத்தில்
இவ்வாறு வாசிக்கிறோம்: "ஆண்டவர் மோசேயை நோக்கி உரைத்தது: தலைப்பேறு
அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய். இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும்,
கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை
என்றார்" (விப 13: 1-2). அதற்கான காரணத்தை எண்ணிக்கை நூலில்
நாம் பார்க்கிறோம்: "எகிப்து நாட்டில் தலைப் பேறனைத்தையும்
நான் சாகடித்த நாளில் இஸ்ரயேலின் தலைப்பேறனைத்தையும் மனிதரையும்
விலங்கையும் எனக்கெனப் புனிதப்படுத்தினேன். அவர்கள் எனக்கே உரியவர்கள்"
(எண் 3: 13). ஆம், இதன் காரணமாகவே அனைத்துத் தலைப்பேறுகளும் இறைவனுக்கு
ஒப்புக்கொடுக்கப்பட்டனர். இயேசுவும் கூட!
அந்த நிகழ்வை நினைவுகூரும் இன்று நாமும் ஆண்டவருக்கே உரியவர்கள்
என்பதை மனதில் இருத்துவோம். இறைத் தந்தையின் விருப்பப்படி, இறைமகன்
இயேசு நமக்காகச் சாகடிக்கப்பட்டார்.நாம் வாழ்வு பெறவேண்டும் என்பதற்காக.
எனவே, அவரது சாவால் நாம் புனிதமாக்கப்பட்டிருக்கிறோம். எனவே,
நாமும் ஆண்டவருக்கு உரியவர்களே. இன்றைய நாளில் நம்மை இறைவனுக்கு
மறு அர்ப்பணம் செய்து, அதன்படி வாழ்வோமாக!
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம்.
உமது திருமகனின் இறப்பால் எங்களை உமக்குரியவர்களாக மாற்றினீரே,
உமக்கு நன்றி. நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள் என்னும் உணர்வுடன்
ஒவ்வொரு நாளும் வாழும் வரத்தைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே
நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
--பணி. குமார்ராஜா
------------------------------------------------------
இணையதள உறவுகளே
இன்று இயேசுவை எருசலேம் கோயிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கிறார்கள்.
சிறந்;த பெற்றோர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும். எதிலும்
முதலானவற்றை ஆண்டவனுக்குக் கொடுக்க வேண்டும். முதலானது என்று
சொல்லும்போது, எண்ணிக்கையை விட மிகச் சிறந்ததை கடவுளுக்குக்
கொடுக்க வேண்டும். சிறப்பானதை கடவுளுக்குக் கொடுக்கும்போது, அது
இறைவனுக்கு ஏற்ற காணிக்கையாக மாறுகிறது. கடவுள் அதை ஏற்று, ஆபேலின்
சார்பில் பேசியதுபோல உங்கள் சார்பில் பேசுவார். உங்கள்
சார்பில் செயல்படுவார். கடவுள் உங்கள் சார்பில் இருக்கும்போது
உங்களுக்கு என்ன குறை,
நம்மிடையே சில நல்ல பழக்கங்கள் உண்டு. தற்சமயம் குறைந்து வருகிறது.
முதல் தரமானதை கோயிலுக்குக் கொடுப்பார்கள். முதல் சம்பளத்தை
முழுமையாக கோயில் நேர்ச்சையாகக் கொடுப்பார்கள். அவர்களுக்கு எதுவும்
குறைந்து போனதும் இல்லை. கடவுளுக்குக் கொடுக்கிறவர்கள், இன்னும்
அதிகமாக கொடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்களிடம்
கேட்டால் சொல்வார்கள், "கடவுளுக்கு கொடுத்து குறைந்து ஒன்றும்
போகவில்லை" என்று.
ஒரு வருடத்தில் அல்லது மாதத்தில் கடவுளுக்கு அல்லது கோயிலுக்கு
கொடுத்ததை கணக்கிட்டுப் பாருங்கள். மற்ற எல்லாவற்றையும் விட அதுதான்
மிகக் குறைவாக இருக்கும். நம் அன்னை மரியாபோல் முதலானவற்றை ஆண்டவருக்குக்
கொடுப்போம். அவர் நம்மை எல்லாவற்றிலும் முதன்மையாக்குவார் . ஆசீர்.
-ஜோசப் லீயோன்
-------------------------
உங்கள் குழந்தைகள் !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
ஆண்டவர் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவை
இன்று கொண்டாடுகிறோம். "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு
அர்ப்பணிக்கப்படும்" என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, இயேசு
காணிக்கையாக கொடுக்கப்பட்டார். இந்த விழாவின்போது, பெற்றோர் தங்கள்
குழந்தைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் இறைவன் தந்த கொடை என்பதால், அனைத்துக் குழந்தைகளும்
ஆண்டவருக்குச் சொந்தமானவர்களே. எனவே, அவர்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க
வேண்டும். வழிபாட்டு முறையில் மட்டுமல்ல, வாழ்விலும் அவர்களை
இறைவனின் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். பெற்றோர் தங்கள்
பிள்ளைகள் எதிர்காலத்தில் தங்களைப் பராமரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது
நியாயம்தான். இருப்பினும், சமூகத்தின்மீது அக்கறையுள்ள
பெற்றோர், தங்கள் பிள்ளைகள் தங்களுக்காக வாழாமல், இந்த சமூகத்துக்காக
உழைப்பவர்களாக, இறைபணி ஆற்றுபவர்களாக வரவேண்டும் என்றே எண்ண
வேண்டும். அன்னை மரியா அப்படித்தான் சிந்தித்தார். எண்ணற்ற
புனிதர்கள், மறைசாட்சியரின் பெற்றோரும் அவ்வாறே நினைத்தனர்.
நாமும் அவ்வாறே எண்ணி நம் குழந்தைகளை ஆண்டவருக்கு, இந்த உலகிற்கு
அர்ப்பணிப்போம்.
மன்றாடுவோம்: கொடைகளின் தந்தையே, ஆண்டவரே, உம்மைப்
போற்றுகிறோம். எங்கள் குழந்தைகள் என்னும் உமது கொடைக்காக நன்றி
கூறுகிறோம். இந்தக் குழந்தைகள் உமக்கும், இந்த சமூகத்துக்கும்
சொந்தமானவர்கள் என்ற உணர்வில் நாங்கள் ஆழப்பட அருள்தாரும். உமக்கே
புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
--: அருள்தந்தை குமார்ராஜா
--------------------
"சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றி,
'ஆண்டவரே...மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள
உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன' என்றார்" (லூக்கா 2:28,31)
சிந்தனை
-- இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்ச்சி லூக்கா நற்செய்தியில்
மட்டுமே உள்ளது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டதையும்
இயேசு என்னும் பெயர் சூட்டப்பட்டதையும் குறிப்பிட்ட பிறகு
(லூக் 2:21) லூக்கா இயேசுவின் அர்ப்பணம் பற்றிப் பேசுகிறார்.
திருச்சட்ட மரபினை யோசேப்பும் மரியாவும் கடைப்பிடித்தார்கள்.
எனவே, ஆண்மகவு பிறந்ததும் அதைக் கடவுளுக்கு அர்ப்பணிக்க எருசலேம்
கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே இறைப்பற்றுக் கொண்டு
நேர்மையாக வாழ்ந்துவந்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் பெயர்
சிமியோன். கோவிலில் வயது முதிர்ந்த அன்னா என்னும் இறைவாக்கினரும்
இருந்தார். இந்த இருவரையும் யூத சமய மரபின் உருவகங்களாக நாம்
காணலாம். அதாவது, இஸ்ரயேலர் கடவுளின் வாக்குறுதி ஒருநாள்
நிறைவேறும் என்றும், மெசியா மக்களிடையே வருவார் என்றும் எதிர்பார்த்துக்
காத்திருந்தார்கள். சிமியோனும் அன்னாவும் அந்த மரபின் வழி வந்தவர்கள்.
மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்தவர்கள். அவர்கள் இயேசு குழந்தையைக்
கண்டதும் அவரே மெசியா என்பதை அறிந்துகொள்கிறார்கள். சிமியோன்
குழந்தையைக் கையில் ஏந்துகிறார்; கடவுளைப் போற்றுகிறார்; தம்
குரலை எழுப்பி, இயேசு "பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும்
ஒளி" (லூக் 2:32) என அறிக்கையிடுகிறார்.
-- இயேசுவின் வருகை சிமியோனின் வாழ்விலும் அன்னாவின்
வாழ்விலும் நிறைவு கொணர்ந்தது. கடவுள் தம் மக்களைத் தேடி வருகிறார்
என்பதை சிமியோனும் அன்னாவும் உணர்ந்திருந்தார்கள். இயேசுவின்
வழியாகக் கடவுளின் திட்டம் நிறைவேறுகிறது என்பதையும் அவர்கள்
அறிந்தார்கள். கடவுளின் வருகையை எதிர்பார்த்துக்
காத்திருப்போர் ஒரு நாளும் ஏமாற்றமடையார் என்பதை இங்கே
காண்கிறோம். நம் வாழ்வில் கடவுள் புகுந்திட நாம் திறந்த உள்ளம்
கொண்டவர்களாக இருக்க வேண்டும். இருளை அகற்றும் ஒளியாக வருகின்ற
இயேசு கிறிஸ்து நம் இதயத்தையும் வாழ்வையும் ஒளிர்விப்பார் என
நாம் உறுதியாக நம்ப வேண்டும். அப்போது நம் வாழ்வில் நிலவுகின்ற
இருள் மறைந்துவிடும்; நாமும் கிறிஸ்துவின் ஒளியால் நிரப்பப்படுவோம்.
ஒளிபடைத்த கண்களோடு நாம் கடவுளின் திருவுளத்தைக் கண்டு, அதை நம்
வாழ்வில் செயல்படுத்த முன்வருவோம்.
மன்றாட்டு
இறைவா, எங்கள் அக இருளை அகற்றும் ஒளியாக வருகின்ற உம்மை மனமுவந்து
நாங்கள் ஏற்றிட அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
''இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி"
(லூக்கா 2:32)
அன்பார்ந்த இணைதள நண்பர்களே!
-- இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்க அவருடைய பெற்றோர் கொண்டு
செல்கின்றனர். அவ்வேளையில் சிமியோன் என்னும் இறையடியார் கடவுளைப்
போற்றிப் புகழ்ந்து பாடிய பாடலை லூக்கா தருகிறார் (லூக்
2:28-32). இப்பாடல் கடவுளின் வல்லமை மிக்க செயல்களைப் போற்றுவதோடு
அவரிடமிருந்து வருகின்ற "ஒளி" பற்றியும் பறைசாற்றுகிறது. கடவுளை
ஒளியாகப் பாhக்கின்ற முறை விவிலியத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது.
இயேசு இவ்வுலகில் ஒளியாக வந்தார் என யோவான் விவரிக்கிறார்
(யோவா 1:9-10). ஒளி இருளை அகற்றுகிறது; நமக்கு வெளிச்சம் தருகிறது.
வெறும் பொருண்மையளவிலான ஒளிக்கு இந்த சக்தி உண்டு என்றால் கடவுள்
உள்ளொளியாக வரும்போது நம் அக இருள் அகல்வதை நாம் உள்ளத்தில்
உணரலாம்.
-- இருள் நம்மைவிட்டு அகலும்போது நம் பார்வை தெளிவுபெறும். நம்
வாழ்விலும் நம்மைச் சூழ்ந்திருப்போர் வாழ்விலும் கடவுளின் செயல்
துலங்குவதை நாம் காண்போம். அப்போது நம் குறுகிய பார்வை
விரிவுபெறும். கடவுளின் பார்வை நமதாக மாறும். அனைத்துமே ஒரு
புதிய ஒளியில் தோன்றும்போது நமது பழைய கண்ணோட்டங்களும் மதிப்பீடுகளும்
மறைந்துபோய் புதியதொரு நிலைக்கு நாம் ஏறிச் செல்ல முடியும்.
பிற இனத்தைச் சார்ந்த நாம் இனி கடவுளின் குடும்ப உறுப்பினராக
மாறிவிட்டதால் நம்மில் அவருடைய ஒளி பளிச்சிட்டு விளங்கிட நம்மையே
அவரிடம் கையளிப்பது தேவை. அங்கே கடவுள் என்னும் வெளிப்பாடு
தோன்றும். அது நம்மை உள்ளத்தையும் வாழ்வையும் ஒளிர்விக்கும்.
இவ்வாறு ஒளிபெற்ற நாம் ஒருவர் ஒருவருக்கு ஒளியாகிட அழைக்கப்படுகிறோம்.
கிறிஸ்து என்னும் ஒளியில் ஒளிர்கின்ற மனிதர் இருளை அகற்றும் கருவிகளாக
மாறுவர். மெழுகுதிரி ஏற்றப்பட்டு, பிற திரிகளையும் ஏற்றுகின்ற
திறம் பெறுவதுபோல நம் வாழ்வு அமைய வேண்டும். அப்போது
கிறிஸ்துவின் ஒளி எங்கும் பரவும்; மனிதரும் கடவுளின்
வெளிப்பாட்டினைத் தம் உள்ளத்திலும் இல்லத்திலும் சமூக
வாழ்விலும் அனுபவித்து அறிவர்.
மன்றாட்டு
இறைவா, உம் ஒளியில் நாங்கள் வழிநடக்க அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
------------------------------
"வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணம் .. .."
அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
கிறிஸ்துவின் பிரசன்னம் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாயிருக்கும்
என்றால் அது முற்றிலும் உண்மை. எங்கெங்கு இயேசு இருக்கிறாறோ,
அங்கெல்லாம் எழுச்சியும் வீழ்ச்சியும் கட்டாயம் இருக்கும்.
சிமியோன் இறைவாக்கினர் சொன்னது முற்றிலும் உண்மை.
மண்ணகத்தின் அரசர்கள், ஆட்சிகள் ஆட்டம் கண்டன. வீழ்ந்தன. யூதமும்
அதன் சட்டமும் வீழ்ச்சி கண்டது. கிறிஸ்தவமும் அதன் ஆவியின் செயல்பாடுகளும்
எழுச்சிபெற்றன. அநீதி, ஆணவம், அதிகார வர்க்கம், ஆளும் வர்க்கம்
வீழ்ச்சியடைந்தது. நீதியின்படி வாழ்வோர், தாழ்ச்சியுடையோர், நலிந்தோர்
எழுச்சி பெற்றனர். பாவிகள், பெண்கள், ஒதுக்கப்பட்டோர் தலை
நிமிர்ந்து வாழத்தொடங்கினர்.
இன்றும் இயேசுவும் அவரது திருச்சபையும் அவரைப் பின்தொடரும்
கிறிஸ்தவனும் இவ்வாறே பலருடைய எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக
இருக்கிறார்கள்; இருக்க வேண்டும். இத்தகைய நிலைப்பாடும் செயல்பாடும்
கொண்டால் மட்டுமே சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்க
முடியும். இந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற இலட்ச்சியம்
முளையிலேயே இயேசுவில் இருந்ததை சிமியோன் உணர்ந்து
முன்னுரைக்கிறார்.
புதிய சமுதாயம் உருவாக்க எழுச்சி தேவை. வீழ்ச்சியைத் தவிர்க்க
முடியாது. இவை நடைபெறும்போது பாராட்டுவோம்; ஒத்துழைப்பு
கொடுப்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.
:-- ஜோசப் லியோன்
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
ஆண்டவரைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழா (பிப்ரவரி
02) நிகழ்வு கி.பி. 526 ஆம் ஆண்டு கான்ஸ்டான்டிநோபுள் நகரை மிகப்பெரிய
கொள்ளை நோய் தாக்கவே, சிறியவர் முதல் பெரியவர் வரை மக்களில்
நிறையப்பேர் இறந்து போனார்கள். இதைப் பார்த்த யாவரும் செய்வதரியாமல்
திகைத்தார்கள். அப்போது திருத்தந்தை முதலாம் ஜஸ்டின், இந்த
கொள்ளை நோயை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி, மக்கள் அனைவரையும்
ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்பதுதான் எனத் தீர்மானித்து,
அவ்வாறு ஜெபித்தார். இதனால் விரைவிலேயே கொள்ளைநோய் நீங்கியது.
அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
உடனே திருத்தந்தை அவர்கள், ஆண்டவர் மக்களை சிறப்பான விதத்தில்
கொள்ளைநோயியிலிருந்து காப்பாற்றியதால், அனைவரையும் ஆண்டவர் இயேசுவை
கோயிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடப் பணித்தார்.
அப்படித் தோன்றியதுதான் இவ்விழா. வரலாற்றுப் பின்புலம் இன்று
நாம் ஆண்டவர் இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த
விழாவைக் கொண்டாடுகின்றோம். இதற்கான வரலாற்றுப் பின்புலத்தை ஆராய்ந்து
பார்க்கின்றபோது, அது விடுதலைப் பயண நூலிலே காணக்கிடக்கிறது.
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்து என்னும் அடிமைத்தன
வீட்டிலிருந்து விடுப்பதற்காக பத்துவிதமான வாதைகளை அனுப்பினார்.
அவற்றில் ஒன்றுதான் ஆண் தலைப்பேறுகளைக் கொல்லுதல். ஆண்டவரின்
தூதர் எகிப்து நாட்டினரின் வீடுகளைக் கடந்துசெல்கிறபோது இரத்தம்
தெளிக்கப்படாத வீடுகளில் இருந்த ஆண் தலைப்பேறுகளைக்
கொன்றுபோடுகிறார். அதேநேரத்தில் ஏற்கனவே இரத்தம் தெளிக்கப்பட்டு
இருந்த இஸ்ரயேலரின் வீடுகளில் இருந்த ஆண் தலைப்பேறுகளை அவர்
கொல்லாமல் கடந்துசெல்கிறார். இதன் பொருட்டுதான் ஆண் தலைப்பேறு
அனைத்தும் ஆண்டவருக்குச் சொந்தம் என்ற ஒரு நிலை உருவாகிறது.
இதனை விடுதலைப் பயண நூல் 13:2 ல் நாம் வாசிக்கின்றோம்,
"தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்; இஸ்ரயேல் மக்களிடையே
மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும்
எனக்குரியவை".
இயேசு தலைப்பேறு என்பதனால் மரியாவும் யோசேப்பும் அவரைக்
கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து ஆண்டவரின் கட்டளையை,
மோசேயின் சட்டத்தை நிறைவேற்றுக்கிறார்கள். மோசேயின் சட்டப்படி,
குழந்தையை காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் நாளில் செம்மறி ஒன்றை
எரிபலியாகவும், புறாக்குஞ்சு அல்லது காட்டுப்புறா ஒன்றை பாவம்போக்கும்
பலியாகவும் குருவிடம் ஒப்படைக்கவேண்டும். ஆனால் மரியாவும்
ஜோசேப்பும் ஆட்டுக்குட்டியை கொண்டுவர வசதி இல்லாததால் இரு மாடப்புறாக்களைக்
கொடுத்து மோசேயின் சட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். இயேசு இறைமகன்.
அப்படியிருந்தாலும் அவருடைய பெற்றோர்கள் மோசே இட்ட கட்டளையை
நிறைவேற்றி, எல்லாருக்கும் முன்மாதிரியாய் விளங்குகிறார்கள்.
இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புகொடுக்கும்போது அங்கே
சிமியோனும் அன்னாவும் வந்து அவரைக் கண்டுகொள்கிறார்கள்.
இவ்விழா ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தந்தை முதலாம் ஜஸ்டின்
என்பவரால் திருச்சபையில் சேர்க்கப்பட்டது என்பதை மேலே
பார்த்தோம். ஆனால் எட்டாம் நூற்றாண்டில்தான் இவ்விழா இன்னும்
விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த
திருத்தந்தை முதலாம் செர்கியுஸ் என்பவர்தான் குருக்களும் இறைமக்களும்
கையில் மெழுகுதிரிகளை ஏந்தி, பவனியாகச் செல்லவேண்டும் என்ற
நிலையை உருவாக்கினார். அதனால்தான் இவ்விழா மெழுகுதிரி திருநாள்
என்றும் அழைக்கப்படுகின்றது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
ஆண்டவரைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக்
கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன
என்று சிந்தித்துப் பார்ப்போம்.
நம்மை முழுமையாய் ஆண்டவருக்கு அர்பணித்தல்
இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பிறகு, அவர்
தன்னையே முழுமையாய் ஆண்டவர் பணிக்காய் அர்ப்பணிக்கின்றார். அதனால்
அவர் மரியாவும் யோசேப்பும் காணாமல்போன தன்னை மூன்று நாட்களுக்குப்
பிறகு கோவிலில் கண்டுபிடிக்கும்போது, "நீங்கள் ஏன் என்னைத்
தேடினீர்கள்? நான் என்னுடைய தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும்
என்பது உங்களுக்குத் தெரியாதா? என்கிறார் (லூக் 2:49). அதைப்
போன்று "என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர்
கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு என்கிறார் (யோவா
4:34). இவ்வாறு அவர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிறகு இறைவனின்
விருப்பமே தன்னுடைய விருப்பம் என உணர்ந்து செயல்படுகிறார்.
திருமுழுக்கின்போது முற்றிலுமாக கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட
நாம், கடவுளுக்காக நம்மையே நாம் அர்ப்பணிக்கிறோமா? அல்லது கடவுளின்
திருவுளத்தை ஏற்று நடக்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஒருமுறை மாவீரன் நெப்போலியன் படையில் இருந்த படைவீரன் ஒருவன்
மார்பில் குண்டடிபட்டுக் கிடந்தான். அப்போது அவனுக்கு சிகிச்சை
அளித்த மருத்துவர்கள் அவனுக்கு மயக்கமருந்து கொடுக்காமலே
சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார்கள். அவன் வலிகள் அனைத்தையும்
பொறுத்துக்கொண்டு நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது
மருத்துவர் ஒருவர் அவனுக்கு நெஞ்சுக்கு நேராக கத்தியை இறக்கி,
மார்பில் பாய்ந்த தோட்டாவை எடுக்க முற்பட்டபோது, அவன் அந்த மருத்துவரைப்
பார்த்துச் சொன்னான், "தயவுசெய்து கத்தியை மெதுவாக இறக்குங்கள்,
ஏனெனில் என்னுடைய நெஞ்சில் மாவீரன் நெப்போலியன் இருக்கிறான்.
நீங்கள் வேகமாக கத்தியை இறக்க அது, அவனுக்கு வலிக்கப்போகிறது".
அவன் நெப்போலியனுக்கு எவ்வளவு உண்மையுள்ளவனாக, தன்னையே அவனுக்காக
அர்ப்பணித்தவனாக இருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகளை உச்சரித்திருப்பான்
என நாம் சிந்தித்துப் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு சாதாரண படைவீரனே
தன்னுடைய தலைவனுக்கு இவ்வளவு பிரமாணிக்கமாக இருக்கும்போது, ஆண்டவர்
இயேசுவால் விலைகொடுத்து மீட்கப்பட்ட நாம் எந்தளவுக்கு அர்ப்பண
உணர்வோடு இருக்கவேண்டும் என நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
பவுலடியார் சொல்வார், "வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே
வாழ்கிறார்" என்று (கலா 2:20). ஆம், ஆண்டவர் இயேசுவை
காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடும் நமது மனநிலையும்
இதுவாகத்தான் இருக்கவேண்டும். நாம் ஆண்டவருக்காக நம்மையே முழுவதும்
அர்ப்பணிப்போம். அவராகவே வாழ்வோம்.
எல்லா மக்களுக்கும் ஒளியாய் இருத்தல்
கோவிலில் இயேசு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும்போது அங்கே இருந்த
சிமியோன், குழந்தையைக் கையில் ஏந்தி, ஆண்டவரே, உமது சொற்படி உம்
அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில்
மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன" என்கிறார். இப்படிச் சொல்லிவிட்டு,
"இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி" என்பார்.
ஆம், இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல பிற இனத்தாருக்கும் ஒளியாகின்றார்.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும் அந்த உன்னதமான ஒளியைப் பெற்றுக்கொண்டு
நாமும் இந்த உலகிற்கு ஒளியாகவேண்டும். நாம் எப்படி ஒளியாவது என்பது
நமது அடுத்த கேள்வியாக இருக்கின்றது. இக்கேள்விக்கான பதிலை
நாம் எசாயா புத்தகம் 58 ஆம் அதிகாரத்தில் கண்டுகொள்ளலாம்.
"பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை
நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட
உன் நிலை நண்பகல் போல் ஆகும்" ஆகவே, நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய
நற்செயல்களின் வழியாக ஆண்டவர் இயேசுவைப் போன்று இந்த உலகிற்கும்
எல்லா மக்களுக்கும் ஒளியாவோம்.
துன்பங்களை ஏற்றுக்கொள்ளல்
இவ்விழா நமக்கு உணத்தும் மிக முக்கியமான செய்தி, துன்பங்களை ஏற்றுக்கொள்ளுதல்
என்பதாகும். இயேசு இறைப்பணிக்காக தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்துக்
கொண்ட பிறகு அவர் பல்வேறு துன்பங்களை, அவமானங்களை ஏன் சிலுவைச்
சாவையே சந்தித்தார். அன்னை மரியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. நற்செய்தியில்
சிமியோன் அன்னை மரியாவைப் பார்த்து, "இதோ இக்குழந்தை இஸ்ரயேல்
மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்;
எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு, பலருடைய மறைவான
எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளதையும் ஒரு வாள் ஊடுருவிப்
பாயும்" என்கிறார் (லூக் 2: 35). உள்ளத்தை வாள் ஊடுருவிப்பாயும்
என்பது அன்னை மரியாள் இறைப்பணிக்காக எதிர்க்கொள்ள இருக்கும் பிரச்சனைகளை,
சவால்களை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. இதைதான் திருத்தந்தை
ஆறாம் பவுல், "ஆண்டவர் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட
போது சிமியோன் உரைத்த இறைவாக்கு, கல்வாரி மலையில் நிறைவேறுகிறது"
என்கிறார். ஆம், அன்னை மரியாள் இறைப்பணிக்காக தன்னையே
முழுமையாக அர்ப்பணித்த பிறகு அவர் சந்தித்த சவால்கள் ஏராளம்.
ஆகையால், இறைப்பணி செய்ய நாம் நம்மையே அர்ப்பணித்திருக்கிறோம்
என்றால் இன்னல்களையும் இடர்களையும் சவால்களையும் ஆண்டவர் இயேசுவை
போன்று, அன்னை மரியாவைப் போன்று எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்
என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவே, ஆண்டவர் இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட
விழாவைக் கொண்டாடும் நாம், இயேசுவைப் போன்று இறைப்பணிக்காக நம்மை
முழுமையாய் அர்ப்பணிப்போம், எதிர்வரும் துன்பங்களை சவால்களை எதிர்கொள்வோம்.
எல்லா மக்களுக்கும் ஒளியாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக
ஒப்புக்கொடுத்தல்
புத்தரிடம் சீடராகச் சேர்ந்து ஆசி பெறுவதற்காக தேவதத்தர்
வந்தார். அவரிடம் புத்தர், "நான் உன்னை என்னுடைய சீடராக
ஏற்றுக்கொண்டு உனக்கு ஆசிவழங்கவேண்டும் என்றால், நீ நாளை
அதிகாலை 4 மணிக்குத் தனியாக வரவேண்டும்" என்றார்.
அதன்படி தேவதத்தர் மறுநாள் அதிகாலை 4 மணிக்குத் தனியாக புத்தர்
இருந்த குடிசைக்கு வந்தார். அவரைக் கூர்ந்து நோக்கிய புத்தர்,
"நான் உன்னைத் தனியாகத்தானே வரச் சொன்னேன். எதற்காக இப்படி
இரண்டு மூன்று ஆட்களை உன்னோடு கூட்டிவந்திருக்கிறாய்?" என்று
கேட்டார். அதற்கு அவர், எங்கே தனக்குப் பின்னால் யாராது
இருக்கிறார்களா? என்று திரும்பிப் பார்த்தார். அதற்கு புத்தர்,
"நான் வெளியே உள்ள ஆட்களைச் சொல்லவில்லை, உனக்கு உள்ளே
இருக்கும் ஆட்களைப் பற்றிச் சொல்கிறேன்" என்றார்.
தேவதத்தர் தனக்குள் கவனித்தார், அப்போதுதான் அவருக்குத் உண்மை
தெரிந்தது தனக்குள் தன்னுடைய மனைவி, பிள்ளைகள், தான் சேர்த்து
வைத்திருக்கும் சொத்து, புகழ் எல்லாம் இருக்கிறது என்று. உடனே
அவர் புத்தரிடம், "எனக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுங்கள்.
அதற்குள் நான் என்னையே தகுதிப்படுத்திக் கொண்டு, மீண்டுமாக
வந்து உங்களுடைய சீடராகச் சேர்கிறேன்" என்று சொல்லிவிட்டு
அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
ஓராண்டு காலம் முடிந்த பிறகு அவர் மீண்டுமாக புத்தரிடம்
வந்தார். இப்போது அவரைப் பார்த்த புத்தர், அவர் மிகவும்
பக்குவமடைந்து தனி ஆளாக வந்திருப்பதை அறிந்து, அவரைத் தன்னுடைய
சீடராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு ஆசி வழங்கினார்.
துறவு வாழ்வுக்கு/ பொது வாழ்வுக்கு தங்களையே அர்ப்பணிப்போர்
எல்லாவற்றையும் துறந்துவிட்டு, தங்களையே அர்பணிக்கவேண்டும்
என்பதை இந்த நிகழ்வானது நமக்கு உணர்த்துகின்றது.
இன்று திருஅவையானது ஆண்டவராகிய இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக
ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடுகின்றது. தூய பவுல்
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் அதிகாரம் 5:15 ல்
கூறுவதுபோல "வாழ்வோர் இனி தங்களுக்காக வாழாமல், தங்களுக்காக
இறந்து, உயிர்த்த கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்று
இவ்விழாவானது நமக்கு அழைப்புத் தருகின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மலாக்கி கூறுவார், "இதோ!
நீங்கள் தேடுகின்ற தலைவர் திடிரென்று தம் கோவிலுக்கு வருவார்;
நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ
வருகிறார்" என்று. அதன்படி நற்செய்தி வாசகத்தில் தூய்மைச்
சடங்கை நிறைவேற்றுவதற்காக குழந்தை இயேசுவை அதனுடைய பெற்றோர்கள்
எருசலேம் ஆலயத்திற்கு கொண்டுவருகிறார்கள்.
"தலைப்பேறு அனைத்தும் எனக்கு அர்ப்பணம் செய்" (விப 13:2) என்ற
ஆண்டவரின் வாக்கிற்கிணங்க இஸ்ரேயல் மக்கள் தங்களுடைய தலைப்பேறை
ஆண்டவருக்கு காணிக்கையாகச் செலுத்திவந்தார்கள். அதன்படியே
இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கோவிலில் காணிக்கையாகச்
செலுத்துகிறார்கள். இதன்மூலம் இயேசு இறைவனுக்குக்
கையளிக்கப்பட்டவர் ஆகிறார்.
இறைவனுக்கு கையளிக்கப்படல் என்று சொல்கிறபோது நமது வாழ்க்கையை
இறைவனுக்காக முற்றிலுமாகக் கையளித்து, அவரது விருப்பத்தின்படி
வாழ்வதாகும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனுக்காகத் தன்னையே
முற்றிலுமாகக் கையளித்து, அவரது விருப்பத்தின்படி வாழ்ந்தார்
என்பதை நற்செய்தியில் பல இடங்களில் வாசிக்கின்றோம். குறிப்பாக
கெத்சமனித் தோட்டத்தில் ஆண்டவர் இயேசு சிலுவைப் பாடுகளை
ஏற்பதற்கு முன்பாக, "தந்தையே! உமக்கு விருப்பமானால் இந்தத்
கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்படி
அல்ல; உம் விருப்பப்படி நிகழட்டும்" (லூக் 22:42) என்கிறார்.
ஆக, இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்
அவர் தந்தையின் திருவுளத்தை ஏற்று நடந்தார் என்பதை நாம் மிக
எளிதாகப் புரிந்துகொள்ளலாம். திருமுழுக்கின் வழியாக கடவுளுக்கு
அர்பணிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இறைத் திருவுளத்தின்படி
வாழவேண்டும் என்பதுதான் நமக்குத் தரப்படும் அழைப்பாக
இருக்கிறது.
இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், "ஊனும்
இரத்தமும்கொண்ட பிள்ளைகளைப் போல கிறிஸ்துவும் அதே இயல்பில்
பங்குகொண்டார்; இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த
அலகையைச் சாவின் வழியாக அழித்துவிட்டார்" என்று. ஆம், இயேசு
கிறிஸ்து தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி சாவின்மீது
வெற்றிகொண்டார் என்றால், அவரது சீடர்களாக இருக்கும் நாமும்
தந்தையின் திருவுளத்தின்படி நடந்து சாவின் சக்திகளான
வேற்றுமை, வறுமை, பஞ்சம், பசி, பட்டினி போன்றவற்றைக்
களையவேண்டும்.
"சமூக நலன் என்ற அக்கினியில் சுயநல ஆசைகளைச் சுட்டேரிப்பதே தூய
துறவு" என்பார் விவேகானந்தர். கடவுளுக்கு தங்களை முழுமையாக
அர்பணிப்போரும் தன்னால ஆசைகளைத் துறந்து, தன் விருப்பத்தை
நிறைவேற்றுவதை விடுத்து, இறைவிருப்பதை நிறைவேற்றவேண்டும்.
ஆதலால் ஆண்டவர் இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த
விழாவைக் கொண்டாடும் நாமும் இயேசுவைப் போன்று இறைத்திருவுளம்
நிறைவேற்றுவோம். இறையருளை நிறைவாய் பெறுவோம். Fr. Maria
Antony, Palayamkottai. 2016.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
அறிமுகமான கடவுளை அறிவிப்பதே நமது பணி.
முதியவர்களாக இருந்த போதிலும் காத்திருந்து தங்களது கடமையை
செய்வதைப் பார்க்கின்றோம்.
திருமுழுக்கு பெற்ற நாம் எல்லாரும் அறிவிக்க கடமைப்
பெற்றிருக்கின்றோம். நம்முடைய கடமையை செய்து வருகின்றோமா?
அறிவிப்பு என்பது நன்கு அறிமுகமானால் மட்டுமே சாத்தியமானது.
இரு பெரியவர்களும் தங்களது வாழ்விலே கோவிலேயே தங்கி தங்களது
நாட்களை கழித்து வந்தனர். மெசியாவுக்காக காத்திருந்தனர். நிறைய
அறிந்திருந்ததால் அவர்கள் அறிவித்தார்கள்.
நாமும் அறிந்து தெரிந்து தெரிந்து கொள்வோம். அறிவிப்போம்.
இயேசுவை காணிக்கையாக அர்ப்பணித்தல்
எருசலேம் ஆலயத்தில் குழந்தை இயேசுவைப் பெற்றோர்கள் ஆண்டவருக்கு
அர்ப்பணிக்கிறார்கள். இந்த அர்ப்பணத்தினால் தான் அவர் பிற
இனத்தாருக்கு மீட்பு அருளும் ஒளியாகவும் பிறந்த இனத்திற்கு
பெருமையும் சேர்க்க முடிந்தது. இவருடைய அர்ப்பணமான செயல்கள்
பலருக்கு எழுச்சியைக் கொடுக்கும் என்று
முன்னறிவிக்கப்படுகிறது. அதனால்தான் இயேசு தம்மையே அனைவருடைய
மீட்புக்காகக் கையளிக்கிறார். சிலுவைச் சாவை
ஏற்றுக்கொள்கிறார். அனைவருடைய பாவங்களுக்குப் பலியாக வேறு
எவற்றையும் பலி கொடுக்காமல் தம்மையே மாசற்றப் பலிப்பொருளாக
ஒப்புக் கொடுக்கிறார்.
குருக்கள் காணிக்கையாக கடவுளுக்கு பல பலிகளைச் செலுத்தி
வந்தனர். ஆனால் கடவுளுக்கு ஏற்புடைய பலி அவருக்கு உகந்த
உள்ளமே. எனவே நாமும் பல பொருட்களைப் பலியாக ஒப்புக்கொடுப்பதைக்
காட்டிலும் நம்மையே பலியாக ஒப்புக்கொடுப்பதே மேலானது.
இறைவனுக்கும் ஏற்புடையதாகும்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா
மறையுரைச் சிந்தனை - ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைக்கும் சீடர்களாவோம்
கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு பெரிய கப்பலில் பயணம்
செய்துகொண்டிருந்த குருவானவர், அங்கிருந்த பயணிகளுக்குப்
போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய போதனையை அங்கிருந்தவர்கள்
மிக ஆர்வமாய்க் கேட்டார்கள். குருவானவரின் போதனை முடிந்ததும்,
அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த பயணி ஒருவர் அவரிடத்தில்
வந்து, "தந்தையே உங்களுடைய போதனையை மிக அருமையாக இருந்தது" என்றார்.
அதற்கு குருவானவர் அவரிடத்தில், "எதை வைத்து அப்படிச்
சொல்லுகிறீர்?" என்று கேட்டார். அதற்கு அந்த பயணி, "நீங்கள்
கடவுளுடைய வார்த்தையை உங்களுடைய உள்ளத்திலிருந்து எடுத்துரைத்தீர்கள்.
அதனால்தான் அப்படிச் சொன்னேன்" என்றார்.
இயேசுவின் நற்செய்திப் பணியைச் செய்கின்ற யாவரும் தங்களுடைய
வார்த்தைகளை அல்ல, கடவுளுடைய வார்த்தையை எடுத்துரைக்கவேண்டும்,
அதுதான் மனிதருடைய உள்ளத்தை ஊடுருவிப்பாயும் என்பதை இந்த நிகழ்வு
நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்புகிறார்.
அப்போது அவர் கூறுகின்ற அறிவுரைதான் இன்றைய நற்செய்தி வாசகமாக
அமைந்திருக்கிறது. இயேசு சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்புகிறபோது
கூறுகின்ற முதன்மையான அறிவுரை, "பயணத்திற்கு கைத்தடி தவிர உணவு,
பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள்
எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்;
அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்" என்பதுதான். இயேசு எதற்கு
இப்படிச் சொல்லவேண்டும் என சிந்திக்கலாம். ஆனால் அதற்கு
விவிலிய அறிஞர்கள் கூறுகின்ற கருத்து, எருசலேம் திருக்கோவிலில்
நுழைகின்ற யாரும் தன்னிடம் இருக்கும் எதையும் உள்ளே எடுத்துக்கொண்டு
போகக்கூடாது, வெறுமனேதான் செல்லவேண்டும். இயேசு நற்செய்தி அறிவிப்புப்
பணியை ஆலயத்திற்கு பிரவேசிக்கின்ற திருப்பணியாகக் கருதியதால்
என்னவோ, அவர் கையில் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என
சொல்லியதாக அவர்கள் கூறுவார்கள்.
விவிலிய அறிஞர்கள் கூறுகின்ற இன்னொரு விளக்கம் நற்செய்தியைப்
பணியாளர்களை, அவர்கள் எந்த ஊரில் பணிசெய்கிறார்களோ அவர்கள் பராமரித்துக்கொள்ளவேண்டும்.
அது அவர்களுடைய தலையாயக் கடமையாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்
கையில் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என இயேசு கூறியதாகச்
சொல்வார்கள்.
அடுத்ததாக இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடம் என்ன செய்தியை
மக்களுக்குப் போதிக்கச் சொன்னார் என சிந்தித்துப் பார்ப்பது மிகப்
பொருத்தமானதாகும். அவர் அவர்களிடத்தில் போதிக்கச் சொன்ன முக்கியமான
செய்தி மனமாற்றம்தான். சீடர்கள் ஆண்டவர் இயேசு தங்களுக்குச்
சொன்னதுபோன்று மனமாற்றச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள்,
அவர்களை இறைவன் பக்கம் திரும்பினார்கள்.
இந்த இடத்தில் நற்செய்திப் பணி செய்யும் ஒவ்வொருவரும்
சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்று இருக்கின்றது. அதுதான் தங்களுடைய
செய்தியை அல்ல, ஆண்டவருடைய செய்தியைப் போதிக்கவேண்டும் என்பதாகும்.
சீடர்கள் யாவரும் ஆண்டவர் இயேசு தங்களுக்குச் சொன்ன மனமாற்றச்
செய்தியை மக்களுக்குப் போதித்து, அவர்கள் மனமாறச் செய்தார்கள்.
அதைப் போன்று இறைவாக்குப் பணிசெய்யும் ஒவ்வொருவரும் தங்களுடைய
செய்தியை அல்ல, இறைவனுடைய செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்கவேண்டும்.
அதுதான் ஆண்டவர் இயேசு தன்னுடைய பணியாளர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும்
எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கின்றது.
நற்செய்திப் பணியாளர்கள் ஆண்டவருடைய சேதியை அறிவித்து, மக்களை
மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று சிந்தித்த
நாம், ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர்களுக்கு
குருக்களுக்கு - எத்தகைய மதிப்பளிக்கவேண்டும் என்பதையும்
நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசு தன்னுடைய சீடர்களை
கையில் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்று சொன்னார்.
எதற்காக என்றால் அவர்கள் பணியாற்றுகின்ற இடத்தில் இருக்கும் மக்கள்தான்
அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில். எனவே, இறைவார்த்தையைக்
கேட்கின்ற மக்கள், அதனை அவர்களுக்கு அறிவிக்க பணியாளர்களை உரிய
முறையில் கவனித்துக் கொள்கிறார்களா?, அவர்களுக்குத் தகுந்த மதிப்பளிக்கிறார்களா?
என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில் கூறுவார்,
"நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து
புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது
ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாயக்காமலோ போனால் அங்கிருந்து
வெளியேறும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.
இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்" என்று. இயேசுவின் இவ்வார்த்தைகள்,
இறைவார்த்தையை இறைவாக்கை எடுத்துச் சொல்லும் பணியாளர்களை
ஏற்றுக்கொள்ளாத மக்களுக்குக் கிடைக்கும் தண்டனையாக இருக்கின்றது.
ஆகவே, இறைவாக்கை எடுத்துச் சொல்லும் நற்செய்திப் பணியாளர்கள்
இறைவாக்கை மட்டும் எடுத்துரைப்பவர்களாக இருக்கவும், இறைவார்த்தையைக்
கேட்கும் மக்கள், அதன்படி நடக்கவும், அந்த இறைவாக்கை எடுத்துச்
சொல்லும் நற்செய்தி பணியாளர்களுக்கு உரிய மதிப்புத் தரவும்
ஜெபிப்போம், இவ்வாறு இறைவனுக்கு உகந்த மக்களாய் வாழ்வோம், அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
6
=================================================================================
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா
ஒவ்வொரு குழந்தையும்
இன்றைய தினம் ஆண்டவர் எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட
விழாவைக் கொண்டாடுகின்றோம்.
குழந்தையைக் கைகளில் ஏந்தியிருக்கிறீர்களா? அதற்கு ஒரு தனித்
திறமை வேண்டும். கழுத்து நிற்காத குழந்தையைக் கைகளில் தூக்க மிகவும்
கவனமாக இருக்க வேண்டும். இந்தத் தலைப்பு என்னில் எழுப்பிய சிந்தனைகள்
தாம் இன்றைய பகிர்வு.
இன்றைய நாளின் மையம் குழந்தையா? முதியவரா? இரண்டு பேரும் தாம்.
ஒரு முதியவர் ஒரு குழந்தையைக் கையில் ஏந்துகின்றார். ஒரு அஸ்தமனம்
ஒரு உதயத்தைத் தாங்குகிறது. வாழ்வின் முடிவும் வாழ்வின் தொடக்கமும்
ஒன்றையொன்று சந்திக்கிறது.
எருசலேம் கோவிலுக்குள் தினமும் எத்தனையோ குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள்.
அவர்களில் இவர்தான் 'நான் எதிர்பார்த்த குழந்தை!' என எப்படி
முதியவர் சிமியோனால் கண்டுபிடிக்க முடிந்தது? நிலக்கரி சுரங்கத்தில்
வேலை பார்க்கும் தன் தந்தைக்காக சிறுவன் ஒருவன் வாசலில்
காத்திருந்தான். மாலை மங்கும் நேரம். பணியாளர்கள் வரிசையாக
வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். சுரங்கத்தில் வேலை பார்த்ததால்
எல்லார் முகமும் கறுப்பாக இருக்கின்றது. சிறுவன் நின்று
கொண்டிருப்பதைப் பார்த்த வாயில் காப்போன் கேட்கின்றார்: 'தம்பி,
ஏறக்குறைய 700 பேர் இந்தச் சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள்.
எல்லாரும் வேலை முடிந்து வரும்போது கரி பிடித்துத்தான் வருவார்கள்.
எல்லாரும் ஹெல்மெட்டும் அணிந்திருப்பார்கள். இவர்களில் உன் அப்பாவை
எப்படிக் கண்டுபிடிப்பாய்?' சிறுவன் சொல்கிறான்: 'என்னால் அவரைக்
கண்டுபிடிப்பது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம். ஆனால் அவர்
என்னை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். ஆகையால் தான் நான் இங்கே
நிற்கிறேன்.'
சிமியோனுக்கும் இயேசுவுக்கும் உள்ள நெருக்கம் இதுதான். அவரால்
கண்டுபிடிக்க முடிந்தது. குழந்தையை ஏந்தியவுடன் அவர் சொல்லும்
சொற்களுக்கு மிகுந்த வாழ்வியல் அர்த்தம் உண்டு:
'ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன்
போகச் செய்கிறீர்.
ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது
மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன'.
தன் வாழ்க்கை முடிவுற்றது. இனி தான் அமைதியாகச் செல்லலாம் என்று
மொழிகின்றார் முதியவர். வாழ்வில் நமக்கு மிகவும் கஷ்டமாக இருப்பது
'விடைபெறுவது'. எதற்காக மரணம் அல்லது பிரிவு பயத்தைத் தருகின்றது?
'பிடிமானம்'. நாம் 'இதுதான் எல்லாம்' என எதையாவது பிடித்துக்
கொள்கின்றோம். அதை விட மனம் வரவில்லை. அது கண்டிப்பாக நம்மிடமிருந்து
எடுக்கப்படும் என்று தெரியும். இருந்தாலும் நாம் அதை எளிதாக
விடுவதில்லை. இது வாழ்வில் மட்டுமல்ல. அனைத்துப் பணிநிலைகளிலும்
இருக்கலாம். குறி;ப்பாக, அரசியலில் தலைமைத்துவத்தில் இருப்பவர்களும்,
மற்ற நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும், ஏன்
குடும்பத்தில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களும் ஒரு கட்டத்தில்
அதை விட்டுத்தாங்கள் செல்ல வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை.
'என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று பிடித்துக் கொண்டேயிருப்பது
அவர்கள் மேல் மற்றவர்களுக்கு வெறுப்பையே கொண்டு வருகின்றது.
'முகமலர்ச்சியுடன் விடைபெற' இன்று நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார்
சிமியோன். சிமியோனின் மனநிலை நமக்கு இருந்தால் இறப்பைக் கண்டும்,
பிரிவைக் கண்டும் பயப்படவே தேவையில்லை.
என் குடும்பத்தில், என் பணியில், என் படிப்பில், என் பயணத்தில்,
என் நண்பரில் நான் மீட்பைக் கண்டுகொண்டேன். என்னால் அமைதியாகப்
போகமுடியும் என்று நம்மால் சொல்ல முடிந்தால் நாமும் சிமியோன்களே.
பல நேரங்களில் இவர்களில் நாம் மீட்பiயும் மகிழ்வையும் காண்பதில்லை.
ஆகையால் தான் நம்மால் மகிழ்ச்சியோடு விடைபெற முடிவதில்லை. நம்
வாழ்வின் உதயம் எந்த அளவிற்கு எதார்த்தமானதோ அந்த அளவிற்கு அஸ்தமனமும்
எதார்த்தமானது. அஸ்தமனம் கூட அழகுதான் என்பதற்கு அடையாளம்
சிமியோன்.
நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே ஒரு குழந்தை. ஒவ்வொரு பொழுதும்
ஒரு உதயம். ஒவ்வொரு பொழுதும் ஒரு அஸ்தமனம். திறக்கின்ற கதவுகள்
எல்லாம் அடைக்கப்பட வேண்டும். நாம் சந்திக்கும் உறவுகள் எல்லாம்
பிரிய வேண்டும். சில நேரங்களில் பிரியம் வளர பிரிந்துதான் இருக்க
வேண்டும். சந்திப்பிற்கும், பிரிவிற்கும் இடையே ஏன் கண்ணீர் வடிக்க
வேண்டும்?
இன்று, வாழ்வின் நாள் என்றும் கொண்டாடப்படுகிறது. அதாவது கருத்தடைச்
சாதனங்கள், கருக்கலைப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் நாள். நம் விருப்பு வெறுப்புக்கேற்ப குழந்தைகளைப்
பெற்றுக்கொள்ள நினைப்பது நம் வியாபார உலகின் தாக்கத்தையே
காட்டுகின்றது. உயிர்களில் மனிதர்கள் மட்டும்தான் கருத்தடைச்
சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். கருக்கலைப்பு செய்கின்றனர்.
ஏதோ ஒரு சூழலில் கருக்கலைப்பு செய்துவிட்டு அதற்காக வாழ்நாள்
முழுவதும் அழுதுகொண்டிருப்பவர்களின் கண்ணீரை நான் நிறைய முறை
பார்த்திருக்கிறேன்.
குழந்தைகளைப் பற்றிய எண்ணம் நமக்கு இரண்டு நிலைகளில் இருக்கிறது:
ஒன்று, குழந்தை பெற்றுக்கொள்ளவோ, வேண்டாம் என்று சொல்லவோ எனக்கு
அதிகாரம் இருக்கிறது என்ற தன்னல உணர்வு. என் நலன், என் மகிழ்ச்சி,
என் வரவு, என் சௌகரியம்தான் முக்கியம் என நினைக்கும் முதல் வகையினர்
குழந்தை பிறப்பையே விரும்புவதில்லை. அவர்களின் பெற்றோர்கள் அப்படி
நினைத்திருந்தால் இவர்கள் பிறந்திருப்பார்களோ? அருட்பணி
நிலையில் மேற்கொள்ளும் கன்னிமை அல்லது கற்பு என்ற
வார்த்தைப்பாடும் ஒரு வகையான 'செயற்கை கருத்தடை' என்றே பல நேரங்களில்
நான் நினைத்திருக்கிறேன். என்னதான் 'எல்லாரும் என் குழந்தைகள்'
என்றும் 'எல்லாரையும் அன்பு செய்வதற்காக நான் கற்பு
காக்கிறேன்' என்று சொன்னாலும் தனிமையில் இருக்கும் போது 'இயற்கையின்
வடிகாலுக்குக் குறுக்கே அணை கட்டுவது போலவும், அது பல நேரங்களில்
அறவியல் பிறழ்வுகளாக வெளிப்படுகிறது' என்பதும் தான் கன்னத்தில்
அறையும் உண்மை. 'கற்பும்' 'கன்னிமையும்' ஒரு ஸொபிஸ்டிகேடட் சுயநலம்.
இரண்டாவது வகையினர், இதற்கு எதிர்ப்பதம். குழந்தைகள் பிறந்துவிட்டார்கள்.
அவர்கள் என் சொற்படிதான் கேட்க வேண்டும். நான் டாக்டர் ஆக முடியவில்லை.
ஆகையால் என் குழந்தை டாக்டராக வேண்டும். நாம் வாழ்வில் அடைய
முடியாத இலக்குகளையெல்லாம் நம் குழந்தைகள் மேல் திணிக்கிறோம்.
குழந்தைகளை நாம் கொண்டாடுவதில்லை. அவர்கள் கஷ்டத்தில் நாம் இன்பம்
காண்கிறோம். 'நான் செய்வதெல்லாம் என் குழந்தைகளுக்காக!' என்று
சொல்வதே ஒரு பெரிய சுயநலம்தான். அவர்களுக்காக நான் செய்கிறேன்
என்றால் எனக்காக அவர்கள் செய்வார்கள் என்ற எண்ணமும், செய்ய
வேண்டும் என்ற எண்ணமும் அங்கே ஒளிந்துதான் இருக்கின்றது. 'இப்படித்தான்
ஒருவர் இருக்க வேண்டும் என்று ஒரு பெட்டி செய்து' நாம் அதற்குள்
அந்தக் குழந்தையைத் திணிக்க நினைக்கின்றோம். அதில் பல நேரங்களில்
குழந்தை மூச்சுத் திணறி விடுகின்றது. உடனே நாம் சொல்வது, 'இன்றைக்குக்
கஷ்டப்பட்டால் தான் நாளைக்கு நீ நல்லா இருக்க முடியும்'. இப்படியே
ஒவ்வொரு நாளும் கஷ்டப்படுகிறோமே நாம் என்று நல்லா இருக்கப்
போகிறோம். எதற்காக நாளைய மகிழ்ச்சிக்காக இன்றைய நாளை விலை பேச
வேண்டும். இன்றே நல்லா இருந்துவிட்டுப் போகலாமே. இந்த இரண்டு
நிலையும் ஆபத்துதான்.
மணிகண்டன் என்ற எழுத்தாளர் ஒரு நிகழ்வை தன் வலைப்பக்கத்தில எழுதுகிறார்:
'என் வீட்டிற்கு அருகில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் என்
வீட்டிற்கு வரும்போதெல்லாம் சுவற்றில் ஏதாவது கிறுக்கிக்
கொண்டேயிருப்பான். எனக்குக் கோபம் வரும். ஒருநாள் அவனை அடித்தும்
விட்டேன். இரண்டு வாரங்கள் கழித்து நான் வேலை முடித்து வரும்
ஒரு மாலை நேரம் அந்தச் சிறுவனின் வீட்டிற்கு வெளியே ஒரே கூட்டம்.
என்னவென்று விசாரித்தேன். பள்ளி சென்ற சிறுவனைக் காணவில்லையாம்.
வீட்டில் ஒரே அழுகைச் சத்தம். காவல்துறையினர் விசாரித்துக்
கொண்டிருந்தனர். அந்தச் சிறுவன் கிடைத்துவிடுவான். கிடைத்தவுடன்
அவன் கைகள் நிறைய பென்சில்கள் கொடுத்து என் வீடு முழுவதும்
கிறுக்கச் சொல்வேன்.'
குழந்தைகளைப் பற்றி கலீல் கிப்ரான் அழகாகக் கூறுவார்:
'உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்லர்.
அவர்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள்.
உங்கள் வழியாக வந்தாலும் அவர்கள் உங்களிடமிருந்து வருவதில்லை.
உங்களோடு இருந்தாலும் அவர்கள் உங்களுடையவர்கள் அல்லர்.
உங்கள் அன்பை அவர்களுக்குக் கொடுங்கள். உங்கள் சிந்தனைகளை அல்ல.
ஏனெனில் அவர்களுக்கென்று சிந்தனைகள் உண்டு.
அவர்களின் உடலை நீங்கள் வீட்டில் அடைக்கலாம். அவர்களின் ஆன்மாக்களை
அல்ல.
அவர்களின் ஆன்மாக்கள் என்றும் எதிர்காலத்தில் பறக்கும்.
அது அவர்களுக்கு உரியது. அவர்களின் கனவுகளைப் பின்பற்ற உங்களால்
முடியாது.
நீங்கள் இறந்தகாலத்தவர்கள்.
அவர்களை உங்கள் காலத்திற்கு இழுக்காதீர்கள்.
முடிந்தால் நீங்கள் அவர்கள் காலத்திற்குச் செல்லுங்கள்.
உங்களைப் போல அவர்களை மாற்றி விடாதீர்கள்.
நீங்கள் வெறும் வில்தான். அவர்கள் அம்புகள். நீங்கள் ஒரே இடத்தில்
இருப்பீர்கள்.
அவர்கள் முன்னேறிச் செல்வார்கள்.
எய்தவர்கள் நீங்கள் அல்லர் இறைவன்.
அவருக்குத் தெரியும் அம்பு எங்கு செல்ல வேண்டுமென்று.'
ஒவ்வொரு குழந்தையும் வளராத முதியவர். ஒவ்வொரு முதியவரும் வளர்ந்த
குழந்தை. இரண்டு பேரையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்வோம். எப்போதும்
கைகளில் ஏந்திக் கொள்வோம்.
'நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன!'
Fr. Yesu Karunanidhi, Madurai.
|
|